தேரி
நூல் விமர்சனம் தேரி எனக்கு நெருங்கிய பூமி. பிறந்து வளர்ந்த பூமி. அந்த மண்ணின் மணத்துடன் ஒரு நாவல். அம்மன்புரம் சுனையும் முந்திரிக் காடுகளும் என் மனக்கண்ணில் இப்பவும் தோன்றுகின்றன. திருச்செந்தூர், திருவைகுண்டம் தாலுகாக்களின் மணற்பரப்பின் பொதுப் பெயர் தேரி.கடற்கரை மணலும் தேரி. சற்று உள்ளே வநதால் தாமிரபரணிக் கரைச் சரிவின் செம்மாந்த மணலும் தேரி. மணப்பாடு தாண்டியவுடன் கடலோரச் சாலையில் விரிந்து சிவந்திருக்கும் மணற்பரப்பும் தேரி. நெய்தலாயினும் மருதமாயினும் இரண்டுக்கும் இடையிலான இந்தத் தேரியானாலும் வளர்ச்சி என்ற சூத்திரத்தின் முன்பு திணைகளின் மனிதர்கள் திகைத்து நிற்கிறார்கள். தான் நேசித்து உழைத்த தேரி நிலம், விமான நிலையத்திற்கு போகப்போகிற அதிர்ச்சியில் உறைந்துபோகிற எளிய மனிதன் மீது, ஒரு நேர்மறையான நம்பிக்கையை ஏற்றுகிற நாவலின் முடிவு நேர்த்தி. ஏற்ற இறக்கம் நிறைந்த செல்லக்குட்டியின் வாழ்க்கைப் பயிர், இந்தத் தேரியின் இன்னொரு நுனியைப் பிடித்துக்கொண்டு வளர்ந்துவிட முடியும் என்கிறார் ராஜேஷ் வைர பாண்டியன். கூட்டாம்புளி, சாயர்புரம், ஏரல், குரங்கணி, தென்திருப்பேரை, குரும்பூர், கானம், நாசரேத் என்று விரிந்து பரந்த இந்தச் செம்மண் தேரியின் மனிதர்கள், சீர்திருத்தக் கிறித்தவத்தின் உதவியால் கல்வியில் மலர்ந்த வரலாறு உண்டு. அநேகமாக சாதிவெறியை, மிக விரைவில் தங்கள் கல்வியினாலும் வணிகத்தில் இறங்கியதாலும் கடந்து வந்த மனிதர்கள் இவர்களாகவே இருப்பார்கள். ஆனாலும் எத்தனைக் கல்வி அவர்களிடம் சேர்ந்திருந்தாலும் சாதிப் பெருமையும் தீண்டாமைக் கீழ்மையும் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை என்பதை இந்தத் ‘தேரி’ நாவல் சுட்டிக் காட்டுகிறது. இரண்டு தலைமுறைக் கதைகள், இருபது வருட இடைவெளியில் சொல்லப்படுகின்றன. தலைமுறை தாண்டியும் சாதிப் பெருமையும் தீண்டாமையும் அகன்றபாடில்லை. இந்த நாவலின் காலம் 90களில் முடிவதாகக் கூறலாம். அதற்குப் பிறகு 30 வருடங்கள் ஓடியபிறகும் தேரிக்காட்டில் சாதிவெறி இருக்கக்கூடும். முந்திரிக் காட்டு மறைவில் ஏதேனும் காதல் கதைகள் தோன்றி, தேரி மண்ணில் சாதி வெறியினால் புதைந்து போய்க்கொண்டிருக்கக் கூடும் என்பதே நாவலின் செய்தி. ஆனால் சாதிவெறி, குடும்ப மரபின் வழியாக வருகிறதெனச் சொல்ல முயல்வதை ஏற்றுக்கொள்வதற்கில்லை. நிலஉடமையின் எச்சங்களான சாதியையும் மதத்தையும் 90களில் வேகமாக வளர்ந்து வந்த முதலாளியம் தனது பாதுகாவலாகப் பேணியதையும் இன்றைய தாராளமய உலகிலும் அதை வசதியாக, தனது நலன்களை வளர்த்துக் கொள்வதற்கான ஆயுதமாக வைத்துக்கொண்டிருக்கிறது அல்லவா? செல்லக்குட்டி சலவைத் தொழிலாளி. பட்டம் பெற்றிருந்தாலும் குலத்தொழிலைத் தொடருகிறான். மேல்தட்டுப் பெண் தங்கராணியுடன் அவனுக்குக் காதல். காதல் அவர்களுக்கு கனியவில்லை; காரணம் சாதி இழிவுதான். ஆனால் இன்னொன்றும் இருக்கிறது. தங்கராணியின் தாயார் செவ்வந்தியின் காதலின் விளைச்சலில் அந்தக் காரணம் இருந்தது. ஆனால் அந்தக் காதலும் சாதியால் தோற்றதுதானே? வெக்கை பாய்ந்த செம்மண் தேரியைக் களமாகக் கொண்டு, சுவையாக நகரும் இரண்டு காதல் கதைகளை வெகு இயல்பாகவும் வேகமாகவும் சொல்லியிருக்கிறார் ராஜேஷ் வைர பாண்டியன். இரண்டு கதைகளும் இணைகிற புள்ளியில் இன்னுமொரு எதிர்பாராத திருப்பத்தை வைத்து நாவலை சுவாரசியமாக்கியிருக்கிறார் நாவலாசிரியர். பாத்திரங்கள், அவற்றின் இயல்பு மாறாமல் படைக்கப் பட்டுள்ளன. மொழி நடை எளிய நெல்லை கிராமப் பகுதியின் வட்டார வழக்கில் மிளிர்கிறது. சாதிப் பெருமை பேசுகிற ஊரிலும் அதற்கெதிரான நல்லிணக்கம் பேசுவதற்கு ஒரு சிவப்புச் சட்டை அண்ணாச்சி வருகிற அழகு ரசிக்க வைக்கிறது. கதையாக்கம் மிக வழமையான முறைதான் என்றாலும் சொல்லியிருக்கும் முறை சுவையாக அமைந்திருக்கிறது. தேரிக் காட்டின் அத்தனை வாழ்வியலும் பொருந்துவதாக பாத்திரப் படைப்பையும் கதை நகர்வையும் அமைத்திருக்கிறார் நாவலாசிரியர். பணம் படைத்த முதலாளிகளின் பேராசையில், செழுமையான தேரி மணல் லாரிகளில் அள்ளப்பட்டுக் கொள்ளை போவதும் தேரி நிலத்தின் சுவையான நீராதாரம் உறிஞ்சப்பட்டு நகரங்களுக்குக் கடத்தப்படுவதும் சட்டமும் காவலும் பண முதலைகளின் பக்கமே சாய்வதும் நாவலின் கதையோடு உறுத்தாமல் சொல்லப்படும் நேர்த்தியை வாசகன் ரசிக்க முடியும். மண்ணில் கொள்ளையிட்டதை வாழையில் போட்டும் தோட்டத்தின் விளைச்சலை உப்பளத்தில் போட்டும் முதலாளியம் உபரியில் கொழிப்பதைப் போகிற போக்கில் சொல்கிற ஆசிரியர், தேரிக்காட்டு மனிதர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளாக இவை பார்க்கப்படுவதை முத்தாய்ப்பாகச் சொல்லி விடுகிறார். எளியவர்கள் வர்க்கமாகத் திரண்டுவிடாமல் பார்த்துக்கொள்கிற சாதுர்யத்தை, வளர்ந்து வரும் நாடுகளில் ‘வளர்ச்சி, வேலைவாய்ப்பு’ என்ற இரண்டு வேப்பிலை அடிப்புகளால் முதலாளியம் பாதுகாத்துக்கொள்கிறது அல்லவா? கலையும் பொருளியல் நோக்குகளும் கலவையாக நாவலின் கதையாடலில் ஊடுபாய்ந்திருப்பதை அனுமானிக்க முடிகிறது. செவ்வந்தி பாத்திரம் வித்தியாசமான படைப்பு. காதலில் தோற்றவள், தன் தோழியின் கொலைக்காகப் பழி வாங்கும் வன்மமும் தன் சொந்த மகளின் காதலில் குறுக்கே வரும் உறவுச் சிக்கலுக்கு தன் மகளைப் பலியாக்கும் பரிதாபமும் வியக்கவைக்கிறது. தங்கராணியின் பாத்திரம் பரிதாபம் நிறைந்தது. ஒருவகையாக அவள் பாதுகாப்பான கரங்களில் சேர்வதில் வாசகன் நிம்மதி அடைகிறான். சித்திரப்பூ, சாதி ஆணவத்திலும் ஆண்மைத் திமிரிலும் கசங்கிய மலர். செவ்வந்தி போல அவள் அரிவாள் தூக்க முடியவில்லையே. அவளுக்கு எந்த நியாயமும் கிடைக்காமல் போவதின் சமூக யதார்த்தத்தை நாவலின் பிற பாத்திரங்களில் யாருமே கேள்விக்குள்ளாக்காமல் போவது நாவலில் சிறிய குறைபாடு. வெட்சி, சற்றே காவியத் தன்மை பூசப்பட்ட பாத்திரம். அவளின் சுயநலமற்ற அன்பு செல்லக் குட்டியை மட்டுமல்ல; நம்மையும் வசப்படுத்துகிறது. இந்தத் தேரிக் காட்டின் இன்னோரு அழகு அசரியா, பாதாளமுனி மற்றும் செல்லக்குட்டியின் நட்பு. வாலிபமும் முதிர்ச்சியும் சேர்ந்த கலவையாக, படிக்கும் வாசகனை சொந்த வாலிப நினைவுகளுக்கு இட்டுச் செல்கிற வாசிப்பு அனுபவத்தைக் கடத்துகிறது. சுமார் 300 பக்கங்கள் கொண்ட நாவலை விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கும் ராஜேஷ் வைர பாண்டியனுக்குப் பாராட்டுகள். இனி தூத்துக்குடி விமானநிலையச் சாலையைக் கடந்து செல்கையில் செல்லக்குட்டி நினைவுக்கு வருவான். நூல் பெயர் : தேரிஆசிரியர் : ராஜேஷ் வைர பாண்டியன்வகைமை : நாவல்வெளியீடு : உதிரிகள் பதிப்பகம்பக்கங்கள் : 291விலை : 440 ரூபாய்கள்