மூன்றாம் விதி

மூன்றாம் விதி

சிறுகதை பாதி பூச்சு வேலை இன்னும் பாக்கி இருக்கு. ஷோகேஸ் வேலை, அடுப்படில கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு. இருந்தாலும் வேற வழி இல்லாம வீடு கிரகபிரவேசம் நடத்தி, அதில இருந்து வசூலாகுற பணத்துலதான் பாக்கி வைச்ச கொத்தனார் கூலியைக் குடுக்கணுமுனு முடிவு பண்ணீட்டேன். பேங்குல வாங்குன வீட்டுக் கடனுக்கு மேல பிரசனல் லோன், நகைக் கடன் எல்லாம் வாங்கியும் வீட்டை முழுசா கட்டி முடிக்க முடியல. இதுல சில சவரன் நகை ஏலம் போயிருச்சு. கொஞ்சத்த வித்துப்புட்டேன். மொபைல்ல நம்பர் இருக்குற அத்தனை பேருட்டையும் முடிஞ்சளவு கறந்துட்டேன். ஒரு ஹால், ஒரு ரூம் இருக்கிற மாதிரி ஒன்னேமுக்கா செண்ட்டுல அரைகுறையா இந்த வீடு கட்டவே எனக்கு நாலு வருசம் ஆச்சு. அதுக்குள்ள பேங்குக்கு இ.எம்.ஐ வேற கட்ட வேண்டியதாயிருச்சு. இப்படி, இந்த வீட்ட இப்ப கட்டித்தான் ஆகணுமான்னு நினைக்காத நாளே இல்ல. “வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணத்தைப் பண்ணிப் பார்”ன்னு பெரியவுக சும்மாவா சொன்னாங்க?! பாதி உசுரும் பாதி உடம்பும் மொத்தமா போயும் முழுசா முடிக்க முடியல. கல்யாணத்தப் பண்ணி பொஞ்சாதியக் கூட்டிக்கிட்டு வந்த உடனேயே, நம்மல திருத்தி வழிநடத்த ஆரம்பிச்சுடறாளுக. என்னமோ நாமலாம் தறிகெட்டுத் திரியுற மாதிரியும் இவளுக வந்துதான் நமக்கு வாழ்க்கைய கத்துக் குடுக்குற மாதிரியும் நம்மல முழுசா வேற ஆளாவே மாதிப்புடுறாளுக. எப்படியாவது சொந்தமா ஒரு வீட்ட கட்டிப்புடணுமுன்னு மண்டைக்குள்ள இறங்கி வெதச்சுப்புட்டா மகராசி. ஆனா நம்ம முடிவெடுத்தா மட்டும் எதுவும் நடந்துடுமா என்ன? புள்ளைய இரண்டுக்கு மொட்டை போட்டு, குலதெய்வம் கோயில்ல கயறு கட்டி, வர்றவன் போறவன் சொல்லுற வேண்டுதலை எல்லாம் அவனவன் சொல்லுற மாதிரியே அப்படியே செஞ்ச பொறவுதான் பேங்கு லோன் சாங்சனே ஆச்சு. அதுவும் அந்த அழகர் கோயில் மலை மேல இருக்குற ஆறுபடை வீடுகள்ல ஒன்னான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலுக்குப் போயி, அங்க பக்கத்துல ஏழு கல்லை எடுத்து அடுக்கி வைச்ச பிறகுதான் கிரீன் லைட்டே எரிஞ்சுது, இந்த ஆபரேசன் ஓன் ஹவுஸ் திட்டத்துல. பத்தாயிரம் ரூபா வாடகை கொடுத்து, ரெண்டு பெட்ரூம் இருக்குற வீட்டுல எல்லா வசதியோட, ஊருக்குள்ளேயே பஸ் ஸ்டாண்டு, ஆஸ்பத்திரி, புள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம், எல்லாமே பக்கத்துலேயே இருக்குற மாதிரி ஒரு இடத்துல சௌக்கியமா இருந்துக்கிட்டு இருந்த நாங்க, இப்ப ஊருக்கு வெளியே ரிங் ரோட்டோரம், எந்த வசதியும் இல்லாத, என்ன வேணுமின்னாலும் ஒரு பத்து பதினஞ்சு கிலோமீட்டர் தூரம் போய் வரவேண்டி இருக்கிற இந்த இடத்துல வீட்ட கட்டி, அதுல நம்ம பேர எழுதி சொந்த வீடுனு மார் தட்டிக்கணுமாம். இதுல இந்த இ.எம்.ஐ. மட்டும் பதினஞ்சாயிரம் மாசம் அஞ்சாம் தேதி வந்தா கட்டணும். வாழ மரத்துல இருந்து சாப்பாடு வரைக்கும் வெறும் அட்வான்ஸ் மட்டுமே குடுத்து கிரகப்பிரவேசத்துக்கான வேலைய ஆரம்பிச்சிட்டேன். என் ராசிக்கு ஒம்போது ராசியும் எதிர்த் திசையில இருக்கறதால சிறப்புப் பரிகாரம் பண்ணணுமுன்னு நாலு பக்கத்துக்கு பூசை சாமான் வாங்க லிஸ்ட் வேற தந்தான் அந்த புரோகிதரு. நெருப்புல கொட்டி எரிக்கிறதுக்கு வாங்குன நெய் மட்டுமே ஐநூறு ரூவா. எனக்கு வந்த ஆத்திரத்துல அந்த புரோகிதரையே தூக்கி அந்தத் தீயில போடணுமுன்னு தோனுச்சு. அதுக்கு, எம்பொஞ்சாதி நான் கட்டுன தாலிய எடுத்து அவ கண்ணுல ஒத்திக்கிட்டா. எதிர்பார்த்த மாதிரி ஐநூறு பேத்துக்கு மேல கூட்டம் வந்துருச்சு மதியத்துக்குள்ளேயே. தலைக்கு கொறஞ்சது இருநூறு ரூவா மொய் செஞ்சாலும் இன்னைக்கு ஆகுற செலவுக்கு ஈடாகிருமுன்னு நிம்மதி வந்துருச்சு. கிரகப்பிரவேசத்துக்காக வீட்டு வாசல்ல பந்தல் போட இடஞ்சலா இருந்த அந்த மரத்துக் கிளைகளை வெட்டிப்போட்ட கொப்பு ஒன்னுல காக்கா கூடு ஒன்னு இருந்திருக்கு. வெட்டுனவன் அதைப் பாக்காம வெட்டிட்டான். வாசல்ல இருந்த அந்த மரத்துல ரெட்டைக் கிளை இருந்தா பக்கத்து வீட்டுக்கும் நமக்கும் சண்டை வருமுன்னு அவன் சொன்ன காரணம் ஏத்துகிற மாதிரி இருந்ததால, ஒரு கொப்பை வெட்ட அனுமதிச்சேன். இப்ப அந்தக் காக்கா பாவமுன்னு மனசு வலிக்க அதைப் பாத்தா, அது ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடாம அடுத்த கொப்புல புதுக் கூடு ஒன்ன கட்டி முடிச்சு குடியேறிடுச்சு ஒரே நாள்ல. காக்காவுக்குலாம் எப்படித்தான் அதுக்குள்ள எல்லா லோனும் கிடைக்குதோ! இந்த லோன் வாங்குற கஷ்டத்தைவிடப் பெரிய கஷ்டம் ஒன்னு இருக்குன்னா, அது அந்த கவர்மெண்டு ஆபீஸ்ல அப்ருவல் வாங்குறதுதான். யாராருக்கு எவ்வளவு கொடுக்கணுமுன்னு ஒருத்தன் சொல்லுவான். அவன் யாருன்னு அந்த ஆபீசுல கண்டுபிடிக்கவே நான் நாலு பேத்துக்கு கத்தை கத்தையா செலவழிச்சது போக, டீ வாங்கிக் குடுக்கவே தனியா ஒரு லோன் போட வேண்டியிருந்துச்சு. அங்க இருக்கிறவன் கால்ல விழுந்து கெஞ்சி, காசையும் கொடுத்தாதான் காரியம் கொஞ்சமாவது நடக்கும். ஒவ்வொரு முறை இந்த இடம் ஒருத்தருட்ட இருந்து அடுத்தவனுக்குக் கைமாறும் போதும், இடத்தோட மதிப்புல பத்துல இருந்து இருவது சதவீதம் கவர்மெண்ட்க்கு வரி கட்டிதான் நம்ம பேருக்குக் கிரயம் பண்ணமுடியும். அப்படி இருந்தாலும் அதுல நம்ம இஷ்டப்படி ஒரு வீட்டக் கட்ட நம்மால முடியாதாம். அதைவிட ஒரு கொடுமை என்னன்னா, தண்ணிக்குன்னு போர் ஒன்னு போட்டேன். அதுக்கு கரண்டு கனெக்சன் வாங்கப் போனா, அம்பது மீட்டர் தூரத்துல வாய்கால் ஒன்னு இருக்குன்னு சொல்லி, பி.டபுல்யூ.டி ஆப்பீசுல நோ அப்சக்சன் சர்டிபிக்கேட்டு ஒன்னு கேட்டான். இதுல காமெடி என்னன்னா, அவன் வைச்சுருக்கிற மேப்ல இருக்கிற வாய்கால் நிஜத்தில எங்க இருக்குன்னு அந்த ஏரியாவுல இருக்கிற யாருக்குமே தெரியல. வேலூர்ல இருக்குற வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் போய், பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசி வாங்குன பின்னாடிதான் இந்த தோசம் தீர்ந்து, அந்த அப்ரூவல் கிடைச்சுது எனக்கு. ஏழாவது பந்தி சாப்பாடு போய்கிட்டு இருக்கும்போது பாயாசம் தீர்ந்து போச்சுன்னும் அதுக்கு பதிலா சாப்பிட வர்ர எல்லாருக்கும் ஐஸ்கிரீம் கொடுக்கணுமுன்னும் அவ வந்து மூக்க உறிஞ்ச, இல்ல இல்ல, என் ரெத்தத்த உறிஞ்ச ஆரம்பிச்சுட்டா. பக்கத்தில கடை எதுவும் இல்லாததால மாப்ளைய கூப்ட்டு வண்டியக் கொடுத்து ஐஸ்கிரீம் வாங்கிவர அனுப்ப, அந்த நேரத்துல கவர்மெண்டு வண்டி ரெண்டு வந்து நின்னுச்சு. அதில இருந்து இறங்குன ஆபீசர்களை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. கிரகப்பிரவேசப் பத்திரிக்கையும் கொடுக்கல. வந்தவங்கள்ல நாலு பேர் அளக்கிற டேப் ஒன்ன எடுத்து, ரோட்டுல இருந்து என் வீடு வரைக்கும் அளந்து பார்த்துட்டு, பின்னாடி இருக்கிற அடுப்படி வரைக்கும் இடிக்கணும், ரிங்ரோடு அகலப்படுத்துறதுக்கு ஆடர் வந்துருச்சு, அடுத்த மாசம் வேலை ஆரம்பிக்கப் போகுது, ஆபீஸ்க்கு வந்து என்னைப் பாருங்கன்னு சொன்னாங்க. மூக்க உறிஞ்சுகிட்டு பக்கத்துல நின்னவ, மூச்சப் பிடிச்சுக்கிட்டு அப்படியே சரிஞ்சுட்டா. எனக்கு ரெண்டு மணி நேரம் என்ன நடந்துச்சுனே தெரியாது. முழிச்சுப் பாக்கும்போது ஏதோ எழவு வீட்டுல இருக்குற மாதிரி ஒப்பாரிச் சத்தம் கேட்டுக்கிட்டு இருந்துச்சு. நாலு வருசத்துக்கு முன்னாடி இந்த வீட்டுக்கு அப்ரூவல் கொடுக்கும்போது இந்தமாதிரி பிராஜெக்ட்லாம் இல்லையாம். இப்ப கவர்மெண்ட்டே மாறிருச்சு, சிட்டியும் பெருசாயிருச்சுன்னு ஏதேதோ சொல்ல, எத்தன சாமிக்கு என்னென்ன பரிகாரமெல்லாம் செஞ்சு ஒழுங்கா நியாயமா ஒழச்சுக் கட்டுன வீட்டுல முழுசா ஒருநாள்கூட இன்னும் குடிபோகல. அதுக்குள்ள இந்த மாதிரி நடக்குதுன்னு அத்தனை சாமி மேலயும் கொலவெறி வந்துருச்சு. ஓன் ஹவுஸ்க்கு கிரீன் சிக்னல் போட்டு ஆரம்பிச்சு வச்ச, அந்த அழகர்கோயில் மலை மேல ஒய்யாரமா உக்கார்ந்து இருக்குற பழமுதிர்ச்சோலை முருகன நேருக்கு நேர் பார்த்து, நறுக்குன்னு நாலு வார்த்தை கேக்கணுமுன்னு பொஞ்சாதி புள்ளைகள கூட்டிகிட்டு வந்து சேர்ந்தேன். அங்கே ரோடுலாம் புதுசா, அகலமா, வண்டிங்க வசதியா போய் வர்ற மாதிரி போட்டிருந்தாங்க. நாங்க வேண்டுதலுக்காக அடுக்கி வைச்ச அந்த ஏழு கல்லு எங்கன்னு தேடினோம். எல்லாரும் வேண்டுதலுக்கு கல்லு அடுக்கி வைக்கிற இடத்தை எல்லாம் எடுத்துதான் இங்கயும் ரோட்ட அகலமா போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுது. நிரந்தரமா குடி இருக்கறவங்களவிட அப்பப்ப வந்து போறவங்களோட வசதிதான் கவுருமெண்ட்டுக்கு முக்கியம்னு அப்பத்தான் எங்களுக்குப் புரிஞ்சுச்சு.

மார்க்ஸின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும்

மார்க்ஸின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும்

கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அபத்தமான பதில்கள் அளிக்கப்பட்டுவிட்டன. எனக்குத் தெரியாதெனினும் உயிரின் கீற்றினைப் போல் நான் இறுகப் பற்றியுள்ளேன். என் சகோதரியின் கணவரும், கவிதை எழுதுவதைவிட செத்துப்போவதையே விரும்புவார். இது ஏற்கனவே இருக்கும் ஒரு கவிதை போல எனக்குத் தோன்றுகிறது. எனது சொந்தக்காரர்கள் கவிதை எழுதுவதில்லை. கவிதை எழுதாமல் இருக்கும் அபத்தத்தைப் போக்கத்தான் நான் கவிதை எழுதும் அபத்ததத்தைச் செய்கிறேன் – விஸ்லாவா சிம்போர்ஸ்கா கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்கா, 1923ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் நாள் மேற்கு போலந்தில் கார்னிக் எனும் நகரத்தில் பிறந்தார். இவரது இளமைக்காலக் கல்வி ஜெர்மானிய ஆதிக்கத்தின் கீழ் அமைந்தது. 1953ஆம் ஆண்டிலிருந்து 1981 வரை போலந்தின் புகழ்பெற்ற இலக்கிய சஞ்சிகையான லிட்டராஸி ஜஸியில் பணியாற்றினார். வர்க்க ஏற்றதாழ்வுகளும் தனியுடமையும் அரசு அதிகாரமும் தோன்றாத வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் பிளவுபடாமல் இருந்தான். தனகுள்ளும் பிளவு இல்லை. இவையெல்லாம் தோன்றியபின், அவை ஒழிந்தால் மட்டுமே மீண்டும் இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னோடும் ஒன்றிய நிலையில் நிறைவான வாழ்வைப் பெறுவான். இதைக் கம்யூனிச சமுதாயம் என கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டார். நகரமோ கிராமமோ, மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. இயந்திரங்கள் எல்லா உழைப்புகளையும் எடுத்துக்கொண்ட பிறகு, உடல்நலத்திற்காக மனிதன் காலையில் தோட்ட வேலை செய்வான். பிற்பகலில் மீன் பிடித்தலிலும் மாலையில் இசையிலும் நடனத்திலும் ஈடுபடுவான் என்று ஒரு அழகிய சித்தரிப்பை மார்க்ஸ் தந்தார். போலந்தை உள்ளடக்கிய ஐரோப்பியச் சூழலிலும் ரஷ்யாவை உள்ளடக்கிய ஆசியச் சூழலிலும் கம்யூனிசக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் யதார்த்த நிலைமை மார்க்ஸ் கூறிய தீர்க்கதரிசனமாக இல்லை என்பதே சிம்போர்ஸ்க்காவின் கவிதையின் வெளிப்பாடு. சிம்போர்ஸ்க்கா எப்போதுமே மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். போர் முடிந்துவிட்டது; இனி சம்பவங்கள் நடக்காது. அமைதியான சூழலில் பிணங்களை எடுத்துச் செல்லும் தள்ளுவண்டி செல்ல, பாதையைச் சீர்படுத்துங்கள் என்ற கவிதை கனமான ஒன்று. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உறவினர் ஒருவரை, குடும்பத்தில் ஒருவர் போய்ப் பார்க்க வேண்டும். அதற்கு சீட்டு குலுக்கிப்போட்டு யார் போக வேண்டும் என்று முடிவு செய்யவதைப் போல ஒரு கவிதை ஆரம்பமாகிறது. ஆரம்பமும் முடிவும் அதிரவைக்கும் இவரது கவிதைகளில், வியட்நாம் என்ற கவிதையில் வரும் இறுதி வார்த்தையைப் பாருங்கள். பெண்ணே உனது பெயரென்ன?எனக்குத் தெரியாதுஉனக்கு எத்தனை வயது? நீ எந்த ஊர்க்காரி?எனக்குத் தெரியாதுஅக்குழியினை நீ எங்கு தோண்டினாய்?எனக்குத் தெரியாதுஎத்தனை நாட்களாக நீ இங்கு ஒளிந்திருக்கிறாய்?எனக்குத் தெரியாதுஎன் விரலை நீ ஏன் கடித்தாய்?எனக்குத் தெரியாது.உனக்குத் தெரியாதா, நாங்கள் உனக்குத் தீங்கிழைக்கமாட்டோமென்று?எனக்குத் தெரியாதுஇது போர், நீ ஒரு பக்கத்தைச் சார்ந்தாக வேண்டும். நீ யார் பக்கம்?எனக்குத் தெரியாதுஉனது கிராமம் இன்னும் உள்ளதா?எனக்குத் தெரியாதுஇவர்கள் உனது குழந்தைகளா?ஆம்..! கவிதையின் இறுதி வார்த்தையில்தான் எல்லாமே உள்ளது. அதிகம் படித்த அப்பாவிடமிருந்து என்பதைவிட, அதிகம் படிக்காத அம்மாவிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்கிறோம். விஸ்வரூபம் என்ற தமிழ் திரைப்படத்தில்கூட போர்ச் சூழலில், ‘ஒரு அணு விதைத்த பூமியிலே’ பாடலில் “நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா” என்ற வரி வரும்.தமிழ் இலக்கிய எழுத்தாளர் லா.ச.ரா. ‘நான் இசையின் குறிப்பைப்போல எழுதுகிறேன். இசையைப் போலப் பேச முயற்ல்கிறேன்’ என்று சொல்வார்.‘சிம்போர்ஸ்க்காவின் கவிதைகள் பீத்தோவெனின் சங்கீதத்தில் உள்ள வெம்மையை கொண்டிருக்கின்றன’ என்கிறது நோபல் கமிட்டி. மேலும் ‘மிகச் சரியான, கறாரான, வஞ்சப் புகழ்ச்சி நடையில் வரலாற்று ரீதியானதும் உடலியல் ரீதியானதுமான உள்ளடக்கத்துடன் மனித யதார்த்தின் முறிந்த பகுதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர்’ என்று சொல்லி நோபல் பரிசை அறிவித்தது.இலக்கியத்திற்கான நோபல் பரிசு கடந்த இருபது ஆண்டுகளாக உலகின் மிகக் கொந்தளிப்பான அரசியல் சூழலில் வாழ்ந்த எழுத்தாளர்களுக்கு வழங்கபட்டது. 1996ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, “கவிதை என்பது ஒரு சிறப்புப் படிப்பு. வழக்கமான பாடங்கள், அடிக்குறிப்புகள் இணைக்கப்பட்ட தத்துவார்த்தக் கட்டுரைகள், தேர்வுகள், இறுதியாக, சம்பிரதாயப்படி பட்டயப் பட்டங்கள் தேவைப்படும் ஒரு தொழிலாகும். ஒரு கவிஞராக மாறுவதற்கு, மிக நேர்த்தியான கவிதைகளைக் கொண்ட பக்கங்களை மறைப்பது போதாது என்பதை இது குறிக்கும். அதன் முக்கிய அம்சம், அதிகாரப்பூர்வ முத்திரையைத் தாங்கிய சில காகிதச் சீட்டு. தற்காலக் கவிஞர்கள் தங்களைப்பற்றி சந்தேகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கொஞ்சம் வெட்கப்படுவதைப்போல, தயக்கத்துடன்தான் தங்களைக் கவிஞர்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் எங்களின் ஆரவாரமான காலங்களில் உங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வது மிகவும் எளிதானது. அவை கவர்ச்சிகரமான முறையில் தொகுக்கப்பட்டிருந்தால், சொந்தத் தகுதிகள் ஆழமாக மறைக்கப்பட்டிருப்பதால், அவற்றை அடையாளம் கண்டுகொள்வதற்கு பதிலாக, அவர்கள் அவற்றை ஒருபோதும் நம்புவதில்லை. நான் எழுதுகிற அனைத்தும் தெளிவானதாகவும் புரியக்கூடியதாகவும் இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். ஏதேனும் ஒரு வாசகனுக்கு எனது கவிதைகள் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்கமெனத் தோன்றினாலும், நான் மிகுந்த சஞ்சலமடைகிறேன். இது எனக்கு மிகவும் சங்கடமான காலம். நான் இயல்பில் மிகவும் தனிமை விரும்பி; ஒதுங்கி வாழ விரும்பும் மனுஷி. இந்தப் பரிசின் மூலம், எனக்குக் கொஞ்சம் அசௌகரியமாக இருப்பதாக நான் உணர்கிறேன்” என்று உரையாற்றினார். மிக உயரிய ஒரு பரிசு, தனிமனிதனுக்கு எவ்வளவு சங்கடம் தருவதாக இருக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். போலந்து மக்களின் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் அவரது கவிதைகளில் முக்கியத்துவம் பெற்றன. முதல் வாசிப்பில் உடனடிப் பற்றுதலும் ஆழமான வாசிப்பில் கடலின் சூட்சமும் கொண்ட கவிதைகள் அவை. (கவிதை மற்றும் சில குறிப்புகள், யமுனா ராஜேந்திரன், ஆர். பாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து தமிழில் மொழிபெயர்த்த ஹிட்லரின் முதல் புகைப்படம் என்ற சிம்போர்ஸ்காவின் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன).