பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு

பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு

கல்விக் கட்டுரை : சு. உமா மகேஸ்வரி பள்ளிக்கல்வியின் சூழல் நாளுக்கு நாள் பல வழிகளில் ஆபத்து நிறைந்ததாக மாறி வருகிறது. இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்தே அதிகம் பேசப்படும் ஒன்றாக, போதைப்பொருள் பிரச்சனை இருந்துவருகிறது. அது குறித்து செங்கல்பட்டு மாவட்டப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் விவரங்கள் கீழ்வருமாறு. மாவட்ட ஆட்சியரது வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில், சட்ட விரோத போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்தல் குறித்தான, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள் வழங்குதல். மாணவர்களிடையே COOL LIP என்ற போதை தரக்கூடிய மிட்டாய் பயன்பாடு உள்ளதா என்பதை ஆசிரியர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். பள்ளி அருகில் உள்ள கடைகளில் COOL LIP  விற்கப்படுகிறது எனத் தகவல் தெரிந்தால், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்திடல் வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கும் தகவல் அளித்திட வேண்டும். RBSK (Rashtriya Bal Swasthya Karyakram) என்ற மருத்துவக் குழு, பள்ளிகளில் மருத்துவ‌ முகாம் நடத்தும்போது, மாணவர்களின் பற்களைப் பரிசோதனை செய்து, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் கறைகள் உள்ளதா எனக் கண்டறிந்து, அம்மாணவர்களுக்கு த் தனியே உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அம்மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதைக் கண்டறிந்து, மந்தன முறையில் காவல் நிலையத்தில் புகார் தரப்படவேண்டும். அவ்வாறு மந்தன முறையில் காவல்துறையில் தரப்பட்ட புகாரின் நகல், முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். பிரதி வாரம் திங்கட்கிழமை காலை வழிபாட்டுக் கூட்டத்தில், அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள், உளவியல் ஆலோசகர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மூலமாக, போதை விழிப்புணர்வு சார்ந்த கருத்துருக்களை எடுத்துரைக்கும் வகையில் மாணவர்களிடையே உரையாற்ற வேண்டும். போதை விழிப்புணர்வு சார்ந்த போட்டிகள் நடத்தப்பட வேண்டும். காவல்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து, பாரத சாரணர் சாரணியர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை இணைத்து, போதை விழிப்புணர்வுப் பேரணி பள்ளியளவில் நடத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கை வழிகாட்டுதலைத் தருகிறது. சென்னை சுற்றுவட்டாரத்தில் கண்ணகி நகர், வடசென்னை, பல்லாவரம், குரோம்பேட்டை, ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள பள்ளிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்கள் இந்த COOL LIP பழக்கத்தைக் கைக்கொண்டுள்ளதாகக் கூறினர். இதனால் மாணவர்கள் சமுதாயம் செல்லும் மோசமான பாதை குறித்தும் தங்கள் சி.ஆர்.சி பயிற்சி அரங்குகளில் வேதனையுடன் பகிர்ந்துகொண்டனர். செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட சென்னைப் பகுதி மாணவர்களிடம் மட்டுமே இந்தப் பழக்கம் உள்ளதா? தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் இந்தப் பழக்கம் எவ்வாறு இருக்கிறது என  ஆசிரியர்கள் சிலரிடம் பேசும்போது, கள நிலவரம் என்னவென்று புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில், இந்தச் சுற்றறிக்கைகள் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் என, அனைத்து மாவட்டங்களிலும் கடந்த மூன்று மாதங்களாகச் சுற்றி வருகின்றன. தஞ்சாவூரைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி அவர்கள் இது குறித்துப் பேசும்போது, “வழிபாட்டுக் கூட்டத்தில உறுதிமொழி எடுக்கச் சொல்லியிருக்கோம். வாசல்ல tobacco free zone என்று ஒட்டியிருக்கோம். தலைமையாசிரியர்கிட்ட பக்கத்துல எந்தக் கடையிலும் போதைப்பொருள் விற்பனையில்லைன்னு சான்று வாங்கியிருக்கோம். மாணவர்களிடம் இருந்தால், அதைப்பெற்று அன்பாகக் கண்டிச்சிருக்கோம் என்கிற அளவில் அரசும் கல்வித்துறையும் தங்கள் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கின்றன. உண்மையில் இந்தப் பழக்கம் வெளிவட்டாரப் பெரியவர்கள்,  பெற்றோர், முன்னாள் மாணவர்கள் போன்றோரிடமிருந்து மாணவர்கள் பழக்கத்திற்கு வருகிறது. பெற்றோரே பலர் அப்படி வரும்போது, யாரிடம் போய்ச் சொல்வது? விற்பவர்களுக்கும் உபயோகிப்போருக்கும் கடுமையான தண்டனைக்கு வழிவகை செய்யாமல், பள்ளியையோ மாணவர்களையோ குறை சொல்வது அர்த்தமற்றது” என்கிறார். “அரசு இதன் விற்பனையைத் தடைசெய்ய வேண்டும். பள்ளி மாணவர்களிடையே வயது வித்தியாசம் இன்றி, இப்பழக்கம் பரவி வருகிறது. பல மாணவர்களை இப்பழக்கத்திற்கு  அடிமையாக்கி வைத்திருக்கிறது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஷாலினி. “இதற்காகவே எங்கள் பள்ளியில் கேமரா வைக்க வேண்டும் என நான் வற்புறுத்தி, சில ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி நன்கொடையாளர்கள் மூலம் கேமரா வைத்தோம். தற்போது ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் பள்ளிக்கு வெளியே என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. பெண் பிள்ளைகள் இதற்குப் பணம் கொடுத்து உதவுகிறார்கள்” என்கிறார் திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பணியாற்றும் பகுதி நேர  ஆசிரியர் கௌதமன். “எங்கள் பள்ளி அருகில் கடைகளில் விற்பனை இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகத் (PTA) தலைவரை வைத்து வார்னிங் கொடுத்துள்ளோம். மீறினால் அவரு இவங்களை வேற மாதிரி கவனிப்பார்னு பயம். நம்ம பையனுகளே ஏஜன்சி எடுத்து நடத்துறாங்க. காட்டில்தான் அவனுகளுக்கு ஓப்பன் டாய்லெட். மண்ணில் புதைத்து வியாபாரம் செய்வாங்க. நாங்களும் சஸ்பெண்ட் பண்ணிட்டு இருக்கோம்” என்கிறார் தாராபுரத்தில் அரசுப்  பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஜெய கீதா. “அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை கமிஷன் போகிறது. சென்ற ஆட்சியில் குட்கா கமிஷன் ஊழலில் சுகாதாரத்துறை அமைச்சரே ரெய்டில் சிக்கினார். வட இந்தியக் கூலித் தொழிலாளர்கள் மூலமே இதுபோன்ற பழக்கங்கள் தமிழகத்தில் நுழைந்தது. இப்பழக்கத்தால் வாய்ப் புற்றுநோய் ஏற்படும்” என்கிறார் சீர்காழி ஆசிரியர் கண்ணன். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமப் பகுதி ஒன்றின் அரசு  மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர், “முறத்தில் அள்ளி அள்ளிக் கழிப்பறைகளில் கொட்டினேன், COOL LIP பாக்கெட் கவர்களை” என்று கூறி வேதனையாகப் பகிர்ந்துகொண்டார். கூடுவாஞ்சேரி அருகே சில பள்ளிகளில் மாணவர்களிடம் பேசும்போது, சின்ன பசங்ககூட கூலிப் பயன்படுத்துகின்றனர் எனத் தெரிந்துகொள்ள முடிகிறது.  திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஆசிரியர், “பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், ஒருநாள் முழுவதும் தங்கள் பள்ளிகளில் நடக்கும் கூலிப் பிரச்சனை குறித்துதான் பேசி வருந்துகின்றனர். மொரட்டுப்பாளையம், வாவி பாளையம், முதலிபாளையம், ஊத்துக்குளி உள்ளிட்ட அனைத்துப் பள்ளி மாணவர்களும் இந்த போதைப் பொருள் பயன்பாட்டால் சீரழிவதைக் காணச் சகிக்கவில்லை” என்கிறார். கரூர் பகுதி ஆசிரியர் சாதாரணன் என்பவர், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகர மயமான தனது பள்ளியில், இந்த கூலிப் பழக்கக் குழந்தைகளைக் கண்டறிந்து, அதைக் களையப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து எடுத்த நடவடிக்கைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு, தனது முகநூலில் விரிவாக எழுதியிருந்தார். இப்படி ஏராளமான கதைகள் அன்றாடம் நடந்துகொண்டு இருக்கின்றன பள்ளிகளில். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள்தான்  அங்கொன்றும் இங்கொன்றுமாக புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களைக் கைக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் வந்தபிறகு, பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் மதுக்கடைகளுக்குச் சீருடையில் செல்வதாகவும் சில பள்ளிகளில் பள்ளிக்குள்ளேயே மது அருந்திவிட்டு வந்து மாணவர்கள் பிரச்சினை செய்வதாகவும் செய்திகளைப் பார்த்திருக்கலாம். ஆனால் கொரோனா காலத்தின் கொடையால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இலைமறை காய்மறையாக இருந்த இந்த போதைப்பொருள் கலாச்சாரம், தற்போது பள்ளிகளில் வெளிப்படையாகவே வேரூன்றி, மாணவர் சமுதாயத்தை நாசம் செய்து வருகின்றது. இப்படியான பழக்கம் கண்டறியப்பட்ட எத்தனையோ மாணவர்கள், மருத்துவச் சிகிச்சைக்கும் செல்கின்றனர். அப்படியான ஒரு சூழலில் ஒரு மருத்துவர் பகிர்ந்துகொண்ட செய்தி நம்மைத் திகைக்க வைக்கிறது. “இந்த ‘கூலிப் ‘ போதை மருந்துப் பொடியில் கண்ணாடித் துண்டுகள் மிகப் பொடியாக அரைத்துக் கலக்கப்படுகின்றன” என்கிறார் அவர். அதை மாணவர்கள் வாயில் வைத்து அடைத்துக்கொள்ளும்போது, வாயின் உட்புறம் இருக்கும் மிக மெல்லிசான தசைப் பகுதியை அறுத்துச் செல்லும் கண்ணாடித் துண்டுகள், இரத்தத்தில் உடனடியாக போதை மருந்து கலப்பதற்காகவும் அந்த போதை உணர்வை வீரியப்படுத்துவதற்காகவும்  அப்படி காலக்கப்படுகிறது” என்று சொல்வதை எப்படி நம்மால் சந்தேகிக்க முடியும்? இந்தப் பழக்கம் ஏழை – பணக்காரன், ஆண் குழந்தைகள் – பெண் குழந்தைகள், அரசுப்பள்ளி – தனியார் பள்ளி என்று எந்த வேறுபாடுகளும் இல்லாமல், அனைத்துத் தரப்பு மாணவர்களையும் அடிமைப்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளும் இதைப் பயன்படுத்துவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனனர். எண்ணிக்கையில் குறையலாம். ஆனால், இப்போது மது குடிக்கும் பழக்கம் எப்படிப் பெண் குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லையோ, அதுபோலவே இதுவும்.  வயது வித்தியாசம் இல்லாமல் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதை உபயோகிப்பதை, ஒவ்வொரு பள்ளியையும் கண்காணித்தால் தெரிந்துகொள்ள முடியும். தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவர்கள்  ஓரளவு பெற்றோர்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதால் கண்டறிய முடிவதாகவும் பெரும்பாலும் மீட்டுவிடுவதாகவும் சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும், பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள் என்றே கூறுமளவிற்கு வீடுகளில் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் எதார்த்தம். ஏனெனில், இந்தச் சமுதாயத்தில் அன்றாடங்காய்ச்சிகளாகவே வாழும், பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் கடைக்கோடி மக்களின் குழந்தைகளுக்கான அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்தான் இந்த வியாபாரிகளின் வலையில் சிக்கித் தவிப்பவர்கள். அரசாங்கம் நினைத்தால் இந்த போதைப் பொருள்கள் தயாரிப்பு, விநியோகம் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் பள்ளி ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும் என்று சுற்றறிக்கைகள் விடுவது எந்த வகையிலும் பொறுப்பேற்காத தன்மையைக் காட்டுகிறது. பாம்பின் கால் பாம்பறியும். ஆமாம், காவல்துறைக்குத் தெரியாமல் எந்தக் கடைகளுக்கு இந்த போதைப் பொருள்கள் வந்துவிடும் சொல்லுங்கள். அரசியல்வாதிகளுக்குத் தெரியாமல் இதுபோன்ற கேடுகள் சமூகத்தில் நடக்க வாய்ப்பு உண்டா? அதோடு, எந்த ஆசிரியர் இயக்கங்களும் சங்கங்களும் இது குறித்து அரசையோ கல்வித் துறையையோ ஏன் கேள்வி கேட்க மறுக்கிறார்கள்? அல்லது ஏன் இதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கொள்ளவில்லை? என்ற கேள்வியையும் முன்வைக்கிறோம். இத்தனை விபரீதமான பழக்கத்தை ஒழிக்க, பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கச் சொல்கிறது அரசு. விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தக் கூறுகிறது.  ஆனால், தலைமை ஆசிரியர் பாடம் நடத்தும் ஆசிரியர்களது வகுப்பறையைக் கவனித்து எமிஸ் ஆப்பில் போட வேண்டும். அதில் இதுபோன்ற மாணவர்கள் வகுப்பறைகளில் ‌இருக்கின்றனரா என்று ஏதாவது கேள்வியை வடிவமைத்திருக்கிறதா கல்வித்துறை என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன். தேசிய கல்விக் கொள்கை, இப்படியான மாணவர்களுக்கோ பள்ளிகளைப் பீடித்திருக்கும் இந்த விபரீதப் போக்கிற்கோ என்ன தீர்வை வைத்துள்ளது? இந்த அரசு எடுக்கும் கல்வி சார்ந்த திட்டங்களில் இந்தப் பிரச்சனைக்கு என்ன திட்டம் வைத்துள்ளது? பள்ளி மேலாண்மைக் குழுக்களில் இவையெல்லாம் மனம் திறந்து பேசப்படுகிறதா? கிராமங்களில்கூட வேரூன்றி வளர்ந்துள்ள இந்தப் பழக்கங்களைக் களைய, கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் போடப்படுகிறதா? மாணவர்கள் எதிர்காலம் நாசமாகி வருவதைத் தடுக்க, கல்வி அமைச்சர்

நூற்று நாற்பது

நூற்று நாற்பது

சிறுகதை வாசு அந்த இரும்பு ஜன்னலில் கை நிறைய சில்லறையுடன் கூடிய பணத்தை நீட்டினான். அது ஒரு டாஸ்மாக் கடை. உள்ளே இருந்த பணியாள், வாசு கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு அதனைப்  பார்த்தான். சில கசங்கிய  நோட்டுகளும் குறிப்பாக அதிகமான அளவில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் காசுகளும் இருந்தன. அந்தப் பணியாள் வாசுவை நிமிர்ந்து  பார்த்தான். அவன் பார்வை ஒரு சொரி நாயைப் பார்ப்பதுபோல் இருந்தது.  **** வாசுவுக்கு  நேரம் ஆக ஆகக் கைகள் மெலிதாக நடுங்க ஆரம்பித்தன. பன்னிரெண்டு  மணிக்குக் கடையைத் திறந்துவிடுவார்கள். அதற்குள் காசு ரெடி பண்ண வேண்டும். அங்கே இங்கே என்று தேடி எடுத்ததில் நூற்றிப் பத்து ரூபாய் கிடைத்துவிட்டது.  மனைவி வழக்கமாகப் பணம் வைத்திருக்கும் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தும் ஒரு ரூபாய்கூடக் கிடைக்கவில்லை. ‘எப்படிக் கிடைக்கும்? அவள் வைக்கிற எல்லாவற்றையும் லவட்டிக் கொண்டால்..’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். இனி அவளிடம்தான் தஞ்சமடைய வேண்டும். எங்கேனும் நமக்குத் தெரியாத இடத்தில் வைத்திருப்பாள்.  மெதுவாக “உஷா… உஷா…” என்று அழைத்துப் பார்த்தான். அவள் உள் அறையில் இருப்பது தெரிந்தது. பதில் ஏதும் கிடைக்காததால் மெதுவாக எட்டிப் பார்த்தான். இளம் காலையில் குளித்து, தன் அழகிய கேசத்தை மெதுவாக மேலே சுற்றும் பேனில் அலையவிட்டு, நெற்றியில் மெரூன் கலர் பொட்டினை வைத்து, சொல்லச் சொல்லக் கேட்காது இழைத்த மஞ்சளைப் பூசிய முகத்துடன் அவள் கட்டிலில் படுத்திருந்தாள்.  ‘இவள் தேவதைக் குலம். அதுதான் இவ்வளவு அழகாக இருக்கிறாள்’ என்று நினைத்துக்கொண்டான். மெதுவாக உள்ளே நுழைந்து அவள் அருகில் சென்று, அவளது இதழின் மேல் மெதுவாகக் கை வைத்து, “இந்த சப்பட்ட  வாய் ரொம்ப அழகுடி உனக்கு…” என்று கூறினான்.  “ஆமா… இந்த டயலாகை இன்னும் எத்தனை வருசத்துக்கு சொல்லுவிங்க.. ரொம்ப போர்” என்ற உஷாவைப் பார்த்து, “சரி… இன்னைக்கு புதுக் கவிதையில்  உன்னைப் புகழட்டுமா?” என்று வாசு கேட்டான்.  தன் கணவன் ஒரு கவிஞன் என்ற பெருமை மிக அதிகம் உஷாவுக்கு. ஆனால் வீட்டின் நிலைமையைப் புரிந்துகொள்ளவே இயலாத கவிஞனை  எப்படிப் பாராட்டுவது என்றுதான் திகைப்பாள்.  “கவிதை வேண்டாம். அதான் நீங்க எழுதிக் குவிச்சு வச்சிருக்கிங்களே.. சின்னதா ஒரு முத்தம் கொடுத்துட்டு விலகுங்க” “முத்தம் அப்புறம். முதல்ல கவிதைதான்” “சரி, ஆரம்பிங்க..” “அதுக்கு முன்னாடி..” “என்ன அதுக்கு முன்னாடி?” “இல்ல.. கவிதை பிடிக்கலைன்னு நீ முத்தம் கொடுக்காம விட்டுட்டா?” “எப்போ உங்க கவிதை எனக்குப் பிடிக்காம போயிருக்கு?” “சரி சரி, ஒத்துக்கறேன். இப்போது முதல்ல முத்தமா, இல்ல கவிதையா?” “ம்ம்.. சரி, கவிதையவே சொல்லுங்க” “சரி, கொஞ்சம் இடம் விடு. நானும் பக்கத்தில படுத்துக்கறேன்” உஷா மெதுவாக நகர்ந்து அவனுக்கு அந்தப் பெரிய கட்டிலில் சிறிது இடம் கொடுத்தாள். வாசு அவளை உரசியபடியே படுத்துக்கொண்டான். அவளது வலதுபுறம் முழுதும் அவன் மேல் மெதுக்மெதுக்கென்று உரசியது.  “போ.. நான் கவிதைய மறந்துடுவேன் போல இருக்கு” “ஏன்? என்ன ஆச்சு?” “நீ இப்படி மெதுக் மெதுக்ன்னு இருந்தா..” உஷா சிரித்தாள்.  “போதும்.. கவிதைய சொல்லுங்க..” “மான் கொஞ்சிப் புலி நாணும் குற்றாலக் குறிஞ்சி இவள்” “ஆ..” என்றாள் உஷா.  “ஒரு வரிதானா?” “இல்ல, இன்னும் இருக்கு.. சொல்லட்டுமா?” “வேணாம். இந்த ஒரு வரியே போதும். இந்த வரியில என் இனத்தைச் சொல்லி, வாழும் இடத்தின் சமத்துவ அன்பைச் சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இருங்க, நானே உங்களுக்கு முத்தம் தரேன்” “இல்ல, இப்போ வேணாம். நான் முழுக் கவிதையையும் சொல்லிட்டு, முழுசா ராத்திரிக்கு வாங்கிக்கறேன். இப்போதைக்கு.. “ “சொல்லுங்க. இப்போது என்ன?” “ஒரு முப்பது ரூபா வேணும்” “அதானே.. எனக்குத் தெரியும். மணி பன்னெண்டுதானே ஆகுது?” காசு வைக்கும் இடம் எல்லாம் அவள் தேடி எடுத்ததில் இருபது ரூபாய் மட்டுமே கிடைத்தது.  “நான் நூறு ரூபாய் கிட்ட வச்சிருந்தேனே… நீங்க எடுத்திங்களா?” “இல்லையே.. நான் எடுக்கல..” வாசு பொய் சொன்னான். “அதுபத்தி எனக்குக் கவலை இல்ல. குடிகாரங்க எப்பவும் குடிக்கிறதுக்கு முன்னாடி பொய் பேசுவாங்க. குடிச்ச பின்னாடி உண்மைக்கு மாறிடுவாங்க..” “இந்தாங்க.. இருபது ரூபாதான் இருக்கு”  என்று கொடுத்தாள்.  கால் பாட்டில் விலை நூற்று முப்பது ரூபாய்தான். ஆனால் கடைக்காரனிடம் பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்தால்தான் சரக்கு தருவான். நூற்று முப்பது  ரூபாய்க்குப் பத்து ரூபாய் லஞ்சம். பால் விலையை மூன்று ரூபாய் குறைக்க முடிந்த அரசால் இந்த லஞ்சத்தை கட்டுப்படுத்த இயலாது போய்விட்டது போலும்.  வாசு எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டான். அவன் கைகள் மெதுவாக நடுங்கியபடி இருந்தன.   “சே..” கைகளை உதறியபடி சாலையில் நடக்க ஆரம்பித்தான். தெரிந்தவர் யாரேனும் வந்தால் பத்து ரூபாய் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அப்படி யாரும் அகப்படவில்லை.  கடை அப்போதுதான் திறக்கப்பட்டிருந்தது. அதன் இரும்புக் கதவினைப் பிடித்தபடி பத்து பேருக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்தனர்.  ‌வாங்கி வைத்துக்கொண்டிருந்தவர்களில் சிலர், கூட்டணி அமைத்து கால் பாட்டிலுக்கு பாகப்பிரிவினை நடத்திக்கொண்டிருந்தனர்.  ‌அந்த இடத்தில் தரையெங்கும் தண்ணீர்  நிரம்பியிருந்தது. ‌உள்ளே சென்று குடிக்கும் ‘பார்’ வசதி முடக்கப்பட்டிருந்தது. அதனால் பாட்டில் வாங்கியவர்கள் அந்தக் குறுகலான கடையின் முன்னேயே குடித்துக்கொண்டிருந்தனர்.  ‌வாசு சுற்றிலும் பார்த்தான், ‘யாராவது பத்து ரூபாய் கொடுக்கும் நண்பர்கள் இருந்தால் நலமாயிற்றே’ என்று. அப்படி யாரும் ‌இல்லை. ‘சரி.. இருப்பதைக் கொடுப்போம்’ என்று எண்ணிக்கொண்டே கையிலிருந்த பணத்தைக் கொடுத்தான். மூன்று பேர் அவனை நசுக்கிக்கொண்டிருந்தனர். அவர்களும் இவனைப்போலவே கை நடுக்கக்காரர்களாக இருக்கக்கூடும். *** ‌”யோவ்..” இந்த வார்த்தை வாசுவின்  ‌காதில் விழுந்து திடுக்கிட வைத்து. எதிரிலிருந்த டாஸ்மாக் பணியாளரைப்  பார்த்தான்.  “எவ்வளவு குடுத்துருக்கிற?” ‌”நூத்து முப்பது ரூவா” ‌”தெனந்தான குடிக்கிற? நுத்து நாப்பதுன்னு உனக்குத் தெரியாதா?” ‌”தெரியும். ஆனா இவ்வளவுதான் இருக்கு.. குடுய்யா.. கை நடுங்குது” ‌”ஏன்யா கடை தொறந்ததும் வந்து உசுர எடுக்கிற?” ‌”சாவு கிராக்கிங்க.. அதோ இன்னும் மூனு நிக்குது”  ‌இது உள்ளே இருந்த வேறொரு பணியாளர்.  ‌வாசுவுக்குக் கோபம் தலைக்கேறியது.  ‌”கால் பாட்டில் எவ்வளவு?” ‌”நூத்து நாப்பது ரூபாதான்.. இந்தா உன் காசு” என்று தூக்கி அவன் எதிரிலிருந்த மேசை மேல் வீசினான். ‌சில்லறையும் நோட்டுமாக வாசுவின் காசு அந்த மேசையின் மேல் சிதறியது.  ‌இரண்டு நாணயங்கள் வெளியில் இவன் இருக்கும் இடத்தில் விழுந்தன. வாசு உடனே அந்தக் காசினைப்  பொறுக்கக் குனிந்தான். ‌அதே நேரத்தில் பாட்டில் வாங்க வந்த இன்னொவன் அவனைக் காலால் முட்ட, வாசுவின் தலை அந்த இரும்பு கேட்டில் ‘நங்’கென்று  மோதியது.  கீழே விழுந்த காசினைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு நிமிர்ந்தவன் மேசை மேல் இருந்த காசை நடுங்கும் கரங்களால் சிரமப்பட்டு எடுத்தான். ‌மொத்தமாக எடுத்ததும் மீண்டும் பணியாளனைக் கேட்டான்.  “குடுப்பியா, குடுக்க மாட்டியா?”  ‌”யோவ். வழிய விடுயா” ‌பணியாளர்கள் மூவரும் ஒன்றாகக் கத்தினர். ‌வாசு அவர்களை உற்றுப் பார்த்தான். ‌அந்த இரும்பு கேட்டினை விடுத்து, சிறிது பின்பக்கம் நகர்ந்தான். ‌தன் வலதுகையில் வைத்திருந்த காசினைப் பிரித்துப் பார்த்தான்.  ‌நடுங்கும் கையை உயர்த்தி அந்தப் பணியாளர்களை நோக்கிக் காசை வீசினான்.  “இதையும் வச்சிக்கங்கடா.. உங்க பெண்டாட்டி தாலியில தங்கம் கோக்க” ‌பணியாளர்கள் அவனைக் கோபத்துடன் உற்றுப் பார்த்தனர்.  ‌”யோவ். இங்கதான மறுபடி வருவ.. இரு” என்றான் ஒருவன்.  ‌வாசு ஏதோ வித்தியாசம் உணர்ந்தவனாய்த் தன் கைகளைப் பார்த்தான். அந்தக் கைகள் இப்போது நடுங்காது  இயல்பாய் இருந்தன. *** ‌மறுநாள் காலை உஷாவிடம் தாஜா செய்து நூற்று நாற்பது ரூபாய் பெற்றுக்கொண்டு, வேறு ஒரு டாஸ்மாக் கடையின் முன் , ‘எப்போது திறப்பார்கள்’ என்று கை நடுங்க நின்றுகொண்டிருந்தான். ‌

டாஸ்மாக்கில் விற்பது பஞ்சாமிர்தமா?

டாஸ்மாக்கில் விற்பது பஞ்சாமிர்தமா?

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை மாணவர்கள் எடுக்க வேண்டுமென்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது. எல்லாம் சரி, தமிழக அரசின் பார்வையில் போதைப்பொருள் என்பது குட்கா, கஞ்சா, ஹெராயின், அபின் போன்றவையாகத்தான் இருக்கிறது. அரசால் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள், போதைப்பொருட்களின் கணக்கில் வராதது, வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.  மதுபானங்கள்தான் தற்போது மிக மிக எளிதாகக் கிடைக்கக்கூடியதாக, அரசின் அனுமதியுடன் வாங்கிப் பயன்படுத்தக்கூடிய போதைப்பொருட்களாக இருக்கின்றன. அதேபோல, தினசரிச் செய்தித்தாள்களைத் திறந்து, கொலை, கொள்ளை, வன்புணர்வு, தற்கொலை எனப் பத்து செய்திகளை வாசித்தோமானால், அவற்றில் ஏழெட்டு சம்பவங்களுக்கு அடிப்படையாகவோ, பின்புலமாகவோ மதுப்பழக்கம் இருக்கும். மது போதையில் வன்புணர்வு, மதுப் பழக்கத்தால் கணவன் மனைவி இடையே தகராறு, மதுப் பழக்கத்தால் கடனாளியாகித் தற்கொலை, மதுபானம் வாங்கப் பணம் தராததால் மனைவி அடித்துக் கொலை, இப்படியான செய்திகள் மிகச் சாதாரணமாகிவிட்டன. இவையொன்றும் அரசின் பார்வைக்குப் போகாத ரகசியச் செய்திகள் அல்ல. ஆனால், இவற்றையெல்லாம் இத்தனைக் காலமாக அரசாங்கங்கள் கண்டுங்காணாமல்தான் கடந்து வருகின்றன. மதுபான விற்பனையாலும், மதுப் பழக்கத்துக்குப் பலர் அடிமையாவதாலும் அரசுக்கும் அரசியலுக்கும் கிடைக்கும் பல்வேறு நன்மைகளே அதற்குக் காரணம். குடி நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை, குடிநோயால் கணவன் உயிரிழந்ததால் இளம் விதவையான பெண்களின் எண்ணிக்கை, மது போதையால் நடக்கும் கொலை, கொள்ளை, வன்புணர்வு, விவாகரத்துகள் என அனைத்துப் புள்ளி விவரங்களையும் சேகரித்தால், தீவிர மதுப்பழக்கத்தால் ஏற்பட்டுள்ள சமூகத்தீமையின் வீரியம் பளிச்சென அனைவருக்கும் புரியும். அவ்வளவு ஏன், ஒவ்வொருவரும் அவரவர் குடும்பம், உறவினர்கள் மட்டத்தில் தீவிர மதுப்பழக்கத்தில் சிக்கியவர்கள் குறித்துக் கணக்கெடுத்தாலே இதன் தீவிரத்தன்மை புரியும். இவற்றைத் தடுத்து நிறுத்த அரசு என்ன செய்ய வேண்டும்? முதலில், குடிப்பழக்கம் ஒரு சமூகக்கேடு என்பதை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாக்காச்சி போர்டில் எழுதிவைப்பதல்ல இது. தீவிர மதுப்பழக்கத்தால் ஏற்பட்டுள்ள சமூகக்கேடுகள் குறித்த புள்ளி விவரங்களைச் சேகரிக்க வேண்டும். குடிப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மிகத் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்க வேண்டும். குடிப்பழக்கத்தால் ஒருவர் மீதான மரியாதை எந்த அளவுக்கு இழிவு நிலைக்குச் செல்கிறது, குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பம் எப்படிச் சீரழிகிறது என்பது குறித்த பிரச்சாரங்கள் திண்ணைப் பிரச்சாரம் போல முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சாரங்கள், நேரடியாக மக்கள் மத்தியிலும், அனைத்து ஊடகங்களின் வழியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், சமூக அக்கறையுடனும் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதால் விளையும் தீமைகள் குறித்து ஒவ்வொரு வீட்டிலும் பேசப்படும். தீவிர மதுப்பழக்கம் தவறென்ற சிந்தனை பரவத் தொடங்கும். இதுதான் மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சரியான முன்னெடுப்பாக இருக்கும். பொதுவாக, மதுபானக்கடைகளை ஒழித்துவிட்டால், மதுப்பழக்கத்தை ஒழித்துவிடலாம் என்ற சிந்தனை பலருக்கும் உண்டு. ஆனால், அது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதற்குப் பல்லாண்டுகளாக மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் தொடரும் கள்ளச்சாராயச் சாவுகளும், அங்கே விற்பனையாகும் போலி மது பானங்களும், சாராயம் குறித்த புள்ளிவிவரங்களுமே சாட்சி. அதேவேளை, மதுபானக்கடைகளை முற்றாக மூடுவதற்குப் பதிலாக, எண்ணிக்கையை இஷ்டத்துக்கு அதிகரிப்பதை நிறுத்த வேண்டும். இப்போது, சிறு கிராமத்திலும்கூட இரண்டு மூன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தனியார் மதுபானக்கடைகளும் ரெக்கரியேஷன் கிளப் என்ற பெயரில் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, ஊருக்கு வெளியே மதுபானக் கடைகளைக் கொண்டுசெல்ல வேண்டும். அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் அருகிலுள்ள மதுபானக் கடைகளை ஒழிக்க வேண்டும். நம்மூரில் ஒரு விசித்திரம் என்னவென்றால், குடியிருப்புகளுக்கு அருகிலிருக்க வேண்டிய கல்விக்கூடங்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமாகத் தொலைவில் இருக்கின்றன. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்க வேண்டிய மதுபானக்கடைகள் குடியிருப்புப்பகுதியில் இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும். இறுதியாக, மது பானங்கள், போதைப்பொருட்கள் பயன்பாடென்பது, தமிழ்நாடு என்றில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சவாலான பிரச்சனையாக தற்போது உள்ளது. குஜராத்திலுள்ள அதானி துறைமுகத்தில் கடந்த ஆண்டில், இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது. அடுத்தடுத்து, அதே துறைமுகத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பிலும், 350 கோடி ரூபாய் மதிப்பிலுமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல், குஜராத்திலுள்ள மற்ற துறைமுகங்களிலும் போதைப் பொருட்கள் பிடிபட்டன. அதாவது, மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத் மாநிலம்தான், போதைப்பொருட்களின் சர்வதேசச் சந்தையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது, போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையும் அங்குதான் அதிக அளவில் நடக்கிறது. குஜராத் மட்டுமல்லாது, இந்தியா முழுக்கவே போதைப்பொருட்கள் சப்ளை அதிதீவிரமாக நடக்கிறது. பெருமுதலாளிகளின் உலகமாக மாறிவரும் இன்றைய சூழலில், போதைப்பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதோடு, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வைத் தீவிரமாக முன்னெடுப்பதும்தான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கக்கூடும். அந்த விழிப்புணர்வு வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். நம் எதிர்காலம் நம் கைகளில். வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்