நீலகண்ட பிரம்மச்சாரி – 12

நீலகண்ட பிரம்மச்சாரி – 12

காட்சி 12 காலம் : ஓம்கார் ஆசிரமத்தில் சங்கர கிருஷ்ணன் வந்த மூன்றாம் நாள்பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன். ஓம்கார் சுவாமிகள் : தம்பி, நேற்று மாலை மலை ஏறிப்போய் வந்தீர்கள் போல.. எப்படி இருந்தது..? சங்கர கிருஷ்ணன்: அருமையான அனுபவமாக இருந்தது சுவாமி. நீங்கள் கொஞ்சகாலம் முன்பு வரை மலை மேலேதான் இருந்தீர்களாமே..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம். கீழே என்னை அவதாரம் போல மக்கள் நினைக்க ஆரம்பித்துப் பல இடங்களில் இருந்தெல்லாம் கூட்டமாக வந்தார்கள். இங்கே வந்து சில ஆண்டுகளில் இந்த ஆசிரமத்திற்குப் பல காரணங்களாக பக்தர்கள் கூட்டம் கூடிக்கொண்டே போனது. நான் தொந்தரவுக்கு உள்ளானேன். தனிமையை விரும்பிய நான் கூட்டத்தின் போதைக்குள் சிக்கிவிட்டதாக உணர்ந்தேன். ஆகவே மலை மேலே போய் இருந்துகொண்டேன். அந்தக் காலத்தில்தான் காந்தியடிகள் வந்திருந்தார். முதலில் அவரது பிரதம சீடர் குமரப்பா மலை ஏறி வந்து என்னைப் பார்த்தார். அவர் சொல்லி, காந்திஜி என்னைப் பார்க்க விரும்பினார். அவர் என்னைப் பார்க்க மேலேறி வருவது சரியாக இருக்காது என்று கருதி நான் கீழிறங்கி வந்து பார்த்தேன். சங்கர கிருஷ்ணன்: ஆஹா.. இங்கே காந்தியடிகள் வந்திருக்கிறாரா..? நேற்று பாரதியின் இறுதிச் சடங்கை செய்ய உங்களை அழைத்தார்கள் என்று சொன்னீர்கள். இன்று காந்தியடிகள் இங்கே வந்திருக்கிறார் என்கிறீர்கள். ஒரு பக்கம் வாஞ்சிநாதன் கதை போய்க்கொண்டிருக்கிறது. நான் எதை முதலில் கேட்கட்டும் சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (சிரித்துக் கொண்டே) எதைக் கேட்டால் என்ன..? பேச்சின் போக்கில் போவோம்.. தானாக எல்லாம் வரும். சங்கர கிருஷ்ணன்: ஆசிரமத்தில் உங்களிடம் சிலர் வைத்தியத்துக்கு வருவதைப் பார்க்க முடிந்தது.. அது எப்படி சுவாமி..? வைத்தியம் தெரியுமா..? ஓம்கார் சுவாமிகள் : ஆசிரமம் மேலே போனதற்கு அதுவும் ஒரு காரணம். எனக்கு சித்த வைத்தியத்தில் ஏதோ கொஞ்சம் தெரியும். இங்கே இருக்கும் குடிகளுக்கும் வருகிற பக்தர்களுக்கு அவசரக் காலத்திலும் மருத்துவ யோசனைகள் சொல்லி வந்திருக்கிறேன். (சிரிக்கிறார்) அவை அதிசயமாகப் பலிக்கத் தொடங்கின தம்பி. மக்கள் ரொம்பவும் நம்பிவிட்டார்கள். (மீண்டும் சிரிக்கிறார்) சாமியாரின் மருத்துவம் வேறு பலனைத் தருவதற்கு முன்பு ஆசிரமத்தை மேலே கொண்டுபோவதுதான் சரியென்று போனேன். என்னைக் கேட்காமல் யாரும் வரக்கூடாது என்று திட்டம் சொல்லி இருந்தேன். நல்ல மக்கள்..! என் பேச்சை மீறவில்லை.அவர்களும் எனக்கு உத்தரவு போடுவார்கள்; நானும் சிலவற்றைக் கேட்டுக்கொள்வேன். அப்படி ஒரு உத்தரவு, ‘சாமியாருக்கு வயதாகி விட்டது.. மேலே தங்கக்கூடாது. கீழே தங்கள் பார்வையில் இருக்க வேண்டும்’ என்று. சங்கர கிருஷ்ணன்: நல்லது சுவாமிஜி, பாண்டிச்சேரியில் நடந்த மீதிக் கதையைச் சொல்லுங்கள். ஓம்கார் சுவாமிகள் : மீதிக்கதை வேகம் நிறைந்தது. வாஞ்சிநாதனை தர்ம இல்லம் தயார்படுத்தியது. தினமும் காலை வேளையில் வ.வே.சு. அய்யரின் போதனைகள்; மாலையில் கிளர்ச்சியூட்டும் உடற்பயிற்சிகள்; சிலம்ப வித்தைகள். அதன் மூலம் வீர சாகச உணர்வுகளால் மனத்தில் போதையூட்டுவது; பாரத இராமாயண யுத்தக் கதைகள் மூலமாக வன்முறையை மிகச் சாதாரணமானதாக இரத்தத்தில் ஏற்றுவது; தனிநபர்க் கொலைகளை வீரம் என்று நம்பச் செய்வது.. இப்படி நெஞ்சில் வேண்டிய உரம் ஏறின பிறகு வாஞ்சிநாதன் சில இயக்கப் பிரசாரப் பிரசுரங்களோடு செங்கோட்டை வந்து சேர்ந்தார். அவர் தனது இறுதியான வேலையைச் செய்வதற்கான பிரயத்தனங்களைச் செய்தார். மீண்டும் அவர்கள் ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டிலும் புனலூரிலும் கூடியதாகத் தெரிகிறது. சங்கர கிருஷ்ணன்: (சிரித்துவிடுகிறார்) ஓம்கார் சுவாமிகள் : ஏன் சிரிப்பு தம்பி..? சங்கர கிருஷ்ணன்: மன்னிக்க வேண்டும் சுவாமி, நீங்கள் தயார் செய்த நண்பர்களை, ‘அவர்கள்’ என்று குறிப்பிட்டுவிட்டீர்களே..? ஓம்கார் சுவாமிகள் : அது அப்படித்தானே ஆயிற்று தம்பி.. என் கட்டுப்பாட்டில் அவர்கள் இல்லையே.. சங்கர கிருஷ்ணன்: சரி சுவாமிஜி, ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டில் நடந்ததைச் சொல்லுங்கள். ஓம்கார் சுவாமிகள் : அவை எல்லாமே நான் இல்லாத நிகழ்வுகள்.. கேட்டவற்றிலிருந்தே சொல்கிறேன்.. ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டில் நடந்த கூட்டத்தில்தான் வாஞ்சிநாதன் இந்த செயலைச் செய்யப்போகிறார் என்று மற்றவர்களுக்கு தெரியவந்தது.கலெக்டர் ஆஷைக் கொன்றுவிட்டுத் தன் உயிரையும் மாய்த்துக்கொள்ளப் போகிறார் என்பதும் அவர்களுக்குத் தெரியவந்தது. கற்பனை செய்து பார்த்தால் வாஞ்சிநாதன் திட்டங்களை அவர்கள் எதிர்பார்த்திராததால் அதிர்ச்சிதான் அடைந்திருப்பார்கள். (மேடையில் ஒளி மங்கி மாடசாமி வீடாக ஒளி விரிகிறது) காலம் : 1911ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஒருநாள் பகல் வேளை.இடம் : மாடசாமி வீடு, ஓட்டப்பிடாரம்.பாத்திரங்கள் : வாஞ்சிநாதன், மாடசாமி, சங்கரகிருஷ்ணய்யர், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை மற்றும் சிலர். வாஞ்சிநாதன் : (தான் கொண்டுவந்த பிரசுரங்களை எல்லோரிடமும் கொடுக்கிறார். கொடுத்துவிட்டு) ‘ஆரியர்களுக்கு ஒரு ஆப்த வாக்கியம்’ (என்ற பிரசுரத் தலைப்பை வாசித்துவிட்டு) எல்லோரும் இந்தப் பிரசுரத்தைப் படிக்க வேண்டும். நமது நாட்டின் கீழ்மைகளுக்கெல்லாம் காரணங்களைத் தெரியப்படுத்தியிருக்கிறோம். பரங்கியரின் அக்கிரமங்களையும் நமது நாட்டுச் செல்வங்களைக் கொள்ளை கொண்டு போவதையும் பஞ்சத்திலும் நோயிலும் நமது ஜனங்கள் மடிந்துகொண்டிருப்பதையும் வெள்ளையர்கள் உல்லாசமாகத் திரிந்துகொண்டு தேசபக்தர்களை ஒடுக்கி வைப்பதையும் மக்களுக்குப் புரியும் விதமாகக் குறித்திருக்கிறோம். மாடசாமி : இந்தப் பிரசுரங்களை என்ன செய்ய வேண்டும்..? வாஞ்சிநாதன் : மக்களிடம் விநியோகம் செய்ய வேண்டும். நமது இயக்கத்திற்கு மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும். சங்கரகிருஷ்ணய்யர் : அது சரி, நமது அடுத்த திட்டம் என்ன..? நீலகண்டரைப் பார்த்தீர்களா.? வாஞ்சிநாதன் : நீலகண்டர் பாண்டிச்சேரியில் இல்லை; எங்கிருக்கிறார் என்றும் தெரியாது. வ.வே.சு. அய்யர்தான் பாண்டிச்சேரியில் இப்போது இயக்கத்தை நடத்துகிறார். புதிய பரங்கி அரசன் ஐந்தாம் ஜார்ஜ் என்பவன் முடிசூடப் போகிறானாம். நமது நாட்டிலும் வந்து அந்த வைபவத்தைச் செய்யப் போகிறானாம். அவன் இந்தியாவில் காலை வைக்கும் நாளில், பரங்கியர் எதிர்ப்பைக் காட்டுவதற்கு நாடெங்கிலும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றனவாம். நமது கடமையாக நமது ஜில்லாவில் நாம் கலெக்டர் ஆஷைக் கொல்ல வேண்டும். அந்த வேலையை எனக்குத் தந்திருக்கிறார்கள். நீங்கள் எல்லாரும் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.(வாஞ்சிநாதன் நிறுத்துகிறார். எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள். பல கணங்கள் கனமாக நகர்கின்றன) சங்கரகிருஷ்ணய்யர் : அபாயமான திட்டம். இது நீலகண்டருக்குத் தெரியாது என்பது தெரிகிறது; நீ தயார் நிலையில் வந்திருப்பதும் தெரிகிறது. இன்றைய தேதியில், இந்த ஜில்லாவின் பெரிய மனிதர்கள், கனவான்கள், தனவான்கள் எல்லாரையும் கலெக்டர் ஆஷ் பயத்தாலும் நயத்தாலும் தன் வசப்படுத்தி இருக்கிறான். கொஞ்சகாலம் முன்பு பெரிய கூட்டத்தின் நடுவில் மாலையும் கழுத்துமாக அவன் வீற்றிருக்கிற படத்தைப் பார்த்தேன். நீ செய்யப்போகிற காரியத்திற்குப் பிறகு நமக்கு எந்த ஆதரவும் கிடைக்காது. நாம் தலைமறைவாகவே வாழ வேண்டியிருக்கும். வாஞ்சிநாதன் : இது தெரிந்ததுதானே.. நாம் எல்லாரும் இரத்தத்தில் சங்கல்பம் செய்திருப்பது மறந்துவிட்டதா..? காரியத்திற்குத் தயாராகும்போது தயக்கமோ பயமோ நமக்குள் வரலாமா..? சிதம்பரம் பிள்ளை சிறையில் துன்பப்பட்டதைக் கேட்டு நமக்கு எத்தனை கோபம் வந்தது..? அதுவெல்லாம் ஆறிப்போனதா..? சொல்லுங்கள்.. மாடசாமி : சகோதரா, நான் துணிந்துவிட்டேன். உன் மகத்தான தியாகத்தை ஆசீர்வதிக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்றாலும் செய்கிறேன். மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : சரி, நானும் சம்மதிக்கிறேன். சங்கர கிருஷ்ணய்யர் : நானும் துணிகிறேன். மற்றவர்கள் : நாங்களும் சம்மதிக்கிறோம்.. (மீண்டும் எல்லோரும் சேர்ந்து இந்த இரகசியத்தைக் காப்பதாக உறுதிமொழி எடுக்கிறார்கள்) வாஞ்சிநாதன் : இன்னும் சில வேலைகள் பாண்டிச்சேரியில் பாக்கி இருக்கின்றன. முக்கியமானது, துப்பாக்கியும் அதற்கான பயிற்சியும். அதற்காக நான் மீண்டும் எனது விடுப்பை நீட்டித்துக்கொண்டு பாண்டிச்சேரி போகிறேன். நான் திரும்பியதும் நம் செயலைத் திட்டமிட்டு நிறைவேற்றுவோம். பாரதமாதாவுக்கு நம்மை அர்ப்பணிப்போம். அன்னை நம்மை ஆசீர்வதிப்பாள். (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

காட்சி 11 காலம் : 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வாஞ்சிநாதன் புதுவை வந்த அடுத்தநாள்இடம் : உடற்பயிற்சிக் களம், பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம்.பாத்திரங்கள் : நாகசாமி, வாஞ்சிநாதன், வ.வே.சு.அய்யர், கண்ணுப்பிள்ளை மற்றும் சில இளைஞர்கள்.(உடற்பயிற்சிக் களத்தில் சிலம்பப் பயிற்சி நடந்துகொண்டிருக்கிறது.. வ.வே.சு.அய்யர் கவனித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் வட்டமாகச் சுற்றிநின்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நாகசாமியும் வாஞ்சிநாதனும் வருகிறார்கள்)வ.வே.சு.அய்யர் : வாருங்கள். சிலம்பப் பயிற்சி முடியட்டும். அமர்ந்து பாருங்கள்..(அமர்ந்து கொள்கிறார்கள். மோதல் பயிற்சி உச்சத்தில் வருகிறது. ஒருவரின் சிலம்பம் கையிலிருந்து நழுவிவிடுகிறது. போட்டி முடிகிறது. எல்லாரும் கை தட்டுகிறார்கள்)வ.வே.சு.அய்யர் : (கம்பை நழுவவிட்டவரைப் பார்த்து) கண்ணுப்பிள்ளை, நன்றாகத்தான் மோதினாய்.. இதுவரை உன்னைக் கவனித்து வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நல்ல தேர்ச்சி தெரிகிறது. ஒரு சிறு கவனப் பிசகு. ராகவனுக்குப் போதும்; உன்னை வீழ்த்திவிட்டான். (வென்றவனைப் பார்த்து) ராகவா, லாகவமும் நேரக்கணிப்பும் கவனத்தில் நன்றாக வைத்துக்கொள்கிறாய்.. நல்லது. இன்று புதிய சகோதரர் நம்மிடம் வந்திருக்கிறார். திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்தவர். பெயர் வாஞ்சிநாதன்.அனைவரும் : வணக்கம் (வாஞ்சிநாதனைப் பார்த்து கும்பிடுகிறார்கள்)வாஞ்சிநாதன் : (நெகிழ்ந்து போய்) வணக்கம். (கும்பிடுகிறார்)வ.வே.சு.அய்யர் : அனைவரும் தர்ம இல்லத்திற்கு வந்து சேருங்கள். அங்கே நமது கூட்டம் நடக்கவிருக்கிறது.(மேடையில் இருள் பரவி, ஒளி வரும்போது தர்ம இல்லத்தில் சபை கூடியிருக்கிறது)வ.வே.சு.அய்யர் : நாகசாமி, நீங்கள் இன்று சபைக்கு அக்கிராசனம் செய்து சபையை நடத்துங்கள்.நாகசாமி : சகோதரர்களே, இந்த பாரத பூமியின் புதல்வர்களாகிய நம்மைக் கீழ்மைப்படுத்துவதற்கான காரியங்களை வெள்ளை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதன் உச்சக்கட்டமாக மிலேச்ச அரசன் ஐந்தாம் ஜார்ஜ் முடி சூட்டிக்கொள்கிற வைபவத்தை இந்தியாவிலும் தர்பார் நடத்திக் கொண்டாடப்போவதாகச் செய்தி வந்திருக்கிறது. இந்த தேசத்தின் பெரியவர்கள் வெஞ்சிறையில் வாடிக்கொண்டிருக்கும்போது அந்தப் பரங்கிப் பஞ்சமன் முடிசூட்டிக்கொள்வதைக் கொண்டாடுவார்களாம்.. நாம் பார்த்துக்கொண்டிருக்க வேணுமாம். பொழுதெல்லாம் எங்கள் செல்வங்கொள்ளை கொண்டு போகவோ? – நாங்கள் சாகவோ?அழுதுகொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் அல்லமோ? – உயிர் வெல்லமோ?நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ? – பன்றிச் சேய்களோ? என்று சுப்பிரமணிய பாரதியார் பாடிய பாட்டை நீங்கள் அறிவீர்கள். அதை நினைவில் கொள்ளுங்கள். ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை செக்கடியில் நொந்துகொண்டிருக்கிறார். நாம் இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாம் ஏன் கைகட்டிக்கொண்டு சும்மா இருக்கிறோம் என்று பிரான்ஸ் தேசத்தில் இருக்கும் பெரியவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் மேற்கொண்டு அய்யர் பேசுவார். வ.வே.சு.அய்யர் : ஸ்ரீமான் பிள்ளை சிறையில் வாடுவதைப்பற்றி கல்லும் கரையும்வண்ணம் பாரதியார் பாடிவைத்தார். மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி – இருகண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? என்று பாரதியார் பாடியிருப்பதை நினைவுகொள்ளுங்கள்.பிரான்ஸ் நாட்டில் இருக்கிற நமது தலைவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். ஜார்ஜ் முடிசூட்டு விழா நாளில் நாம் நம் எதிர்ப்பைக் காட்டும் விதமாக, அவன் இந்த நாட்டில் கால் வைக்கும் வேளையில் நாடெங்கிலும் உள்ள பரங்கி அதிகாரிகள் கொல்லப்படுவார்கள். அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் நடைபெற ஆரம்பித்துவிட்டன.பரங்கியரைக் கொல்வது பாவம் அன்று. இது போன்று ஒரு திட்டத்தை இங்கிலாந்தில் நானும் சாவர்க்கரும் வெற்றியாக்கினோம். சாவர்க்கர் இப்போது பம்பாய் தாணா சிறையில் இருக்கிறார். அவர் சொல்லியிருப்பதை நினைவுபடுத்துகிறேன். ‘தனிநபர் படுகொலை அந்நிய அதிகாரிகளையும் நிர்வாகத்தையும் நிலைகுலையச் செய்யவும் மக்களை எழுச்சிகொள்ளவும் செய்யும். புரட்சியின் தொடக்கமாகத் தனிநபர் கொலைகள் இருக்கும்’ – என்று சாவர்க்கர் கூறியிருக்கிறார். நம் தமிழ்நாட்டிலும் நமது இயக்கத்தில் நாம் 3000 உறுப்பினர்கள் இருக்கிறோம். நமது இலக்கு, திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்தான். தூத்துக்கடி சுதேசிக் கப்பல் கம்பெனி மூடிப்போவதற்குக் காரணமாக இருந்த இன வெறியன். நமது சங்கத்தின் உறுப்பினரும் மகத்தான தேசத் தொண்டருமாகிய ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையின் துயரங்களுக்கும் இவனே காரணகர்த்தா.இவனைக் கொல்ல வேண்டும். கொன்றுவிட்டு, தன்னையும் மாய்த்துக்கொண்டு இயக்கத்தின் இரகசியத்தைக் காக்கும் தியாகமும் துணிச்சலும் கொண்டவரே இந்தப் பணியைச் செய்ய வல்லவர். நம்மில் அதைச் செய்யப்போகிற வீரர் யார்..? உடனே சொல்ல வேண்டியதில்லை. யோசித்துச் சொல்லுங்கள். இந்தத் தியாக வேள்வியில் தம்மையும் ஆகுதியாக்கி பாரத மாதாவின் பாதங்களில் வெற்றிக் காணிக்கை செய்யும் பாக்கியம் பெறப் போகிறவர் யார்..?(வாஞ்சிநாதன் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முயல, வ.வே.சு. அய்யர் கையமர்த்தி) யாரும் இப்போது எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நன்றாக யோசித்து மனத்தையும் சிந்தையையும் ஒருமுகப்படுத்தி அடுத்த கூட்டத்தில் தர்ம இல்லத்தில் கூடி முடிவு செய்யலாம். இப்போது இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.(உறுதிமொழியை நாகசாமி சொல்ல, அனைவரும் உறுதி ஏற்கிறார்கள்)(வாஞ்சிநாதனைப் பார்த்து) தம்பி, நீர் சில நாட்கள் நாகசாமி இல்லத்தில் தங்கியிருங்கள். கண்ணுப்பிள்ளை, நீ வாஞ்சியுடன் தங்கிக்கொண்டு அவருக்குத் துணையாக இருக்க வேண்டும். நான் தினமும் காலையில் வருவேன். மாலையில் இந்த உடற்பயிற்சிக் கழகத்தில் சந்திக்கலாம். கூட்டம் முடிந்தது. வாஞ்சிநாதன் : ஐயா, என் விடுப்பு முடிவதற்குள் நான் செல்ல வேண்டும். நான் எத்தனை நாட்கள் இங்கே இருக்க நேரும்? நீலகண்டர் எப்போது வருவார்..? ஏதேனும் தெரியுமா? வ.வே.சு. அய்யர் : நீர் எத்தனை நாள் விடுப்பில் இருக்கிறீர்? வாஞ்சி நாதன் : ஒரு மாதம் ஐயா.. வ.வே.சு. அய்யர் : ஒரு வாரம் இருந்து பாருங்கள். அடுத்த கிழமைக்குள் நீலகண்டர் வரவில்லையெனில் நீர் செல்லலாம். (மேடையில் ஒளி மங்கி இருளாகிறது. மீண்டும் ஒளி பரவும்போது ஓம்கார் அறையில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, ஒரு சந்தேகம். பல சமயங்களில் கேட்க நினைத்தேன். இப்போது அதைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்கலாமா..? ஓம்கார் சுவாமிகள் : கேளுங்கள் தம்பி.. சங்கர கிருஷ்ணன் : நாகசாமி பேசும்போது இங்கிலாந்து அரசனைப் ‘பஞ்சமன்‘ என்று குறிப்பிட்டார் அல்லவா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம்.. சங்கர கிருஷ்ணன் : பஞ்சமன் என்றால் நான்கு வருணத்திற்கும் கீழாக ஒடுக்கி வைக்கப்பட்டவர்கள் என்றுதானே பொருள்..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி. சங்கர கிருஷ்ணன் : அப்படியானால் இந்தப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களிடம் சாதி பேதம் இருக்கத்தானே செய்தது..? சாதியின் பெயரால் சக மனிதனை இழிவாகப் பார்க்கும் பார்வையை இவர்கள் விட்டுவிடவில்லையே..? ஓம்கார் சுவாமிகள் : கேள்விகள் முடிந்தனவா தம்பி..? சங்கர கிருஷ்ணன் : இன்னும் இருக்கின்றன சுவாமிஜி. ‘இந்தப் புரட்சியாளர்கள் அனைவரும் மேல்தட்டு சாதியினராகிய பிராமணர்கள் மற்றும் பிள்ளைமார் என்ற வேளாளர்களாக இருக்கிறார்களே’ என்ற உறுத்தல் எனக்கு இருந்து வந்தது.இப்போது புதுச்சேரிக்காரரான நாகசாமி ஐயர், இங்கிலாந்து அரசனைச் சாதியில் கீழானவன் என்ற பொருளில் அழைக்கிறார் என்பதால் இவர்களிடம் சனாதனம் ஒட்டிக்கொண்டிருந்தது என்பது தெரிகிறது. சாதி இழிவைப் பிறர்மீது சுமத்திக்கொண்டு இவர்கள் புரட்சி பேசியது எப்படி..? ஓம்கார் சுவாமிகள் : நீண்ட கேள்விகள்.. இன்னும் ஒரு கேள்வியும் இருக்க வேண்டும். நானும் பிராமணன் என்பதால், நான் வருணாஸ்ரமத்தை நம்புகிறேனா என்ற கேள்வியும் உங்களிடம் இருக்க வேண்டுமே! வாஞ்சிநாதன் தன்னைச் சுட்டுக்கொண்டபோது, அவர் சட்டைப்பையில் இருந்த கடிதத்திலும் ‘ஜார்ஜ் பஞ்சமன்‘ என்ற சொல் இருந்தது. ‘அழியாத சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தச் செயலைச் செய்ததாக’ வாஞ்சிநாதன் குறிப்பிட்டிருந்தார். எங்கள் காலத்தில் இந்தத் தமிழ்நாட்டில் கல்வி வசதியைப் பெற்றிருந்தவர்கள் பிராமணர்களும் வசதியான செல்வந்தர்களாக இருந்த வேளாள சாதியினரும்தான். தாங்கள் பெற்ற கல்வியினால் தாங்கள் அடிமைகளாக இருக்கிறோம் என்பதை முதன்முதலில் உணர்ந்தவர்கள் அவர்களாகவே இருந்தார்கள். மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் இடத்திலும் அவர்களே இருந்தார்கள். அதே நேரத்தில், மதம் மாறிய பிற சாதியினருக்கு கிறித்தவம் கல்வி கொடுத்தது. கல்வி பெற்றதின் நன்றியுணர்ச்சி அவர்களை ஆங்கில அரசுக்கு விசுவாசிகளாகவே மாற்றி வைத்திருந்தது. இந்த முரண்பாடு சனாதனிகளை அவர்களிடம் நெருங்கவிடவில்லை. ‘சனாதானம் என்பது மாறாதது.. அது படைப்பில் தீர்மானம் ஆகிறது’ என்பது இந்து மதம் சார்ந்த நம்பிக்கை. ‘எல்லாம் மாறக்கூடியதே.. பிறப்பின் காரணமாக மேல் கீழ் என்று சட்டம் வைத்துக்கொள்வது மனித இனத்தின் நாகரிகம் அல்ல’ என்ற புரிதல் எங்கள் காலத்தில் வந்துவிடவில்லை. இந்து சனாதனிகள் அரசியல் விடுதலையைப் பேசினார்களே தவிர, சாதி சமயச் சடங்குகளை விட்டுவிடவில்லை. கீதை, பாரதம், இராமாயண மேற்கோள்களில் இருந்தே அவர்களின் வியாக்கியானங்கள் இருந்தன. திலகர், பாலர், சாவர்க்கர், வ.வே.சு.அய்யர் எல்லாருமே சனாதனத்தை முழுமையாக விட்டுவிடவில்லை. ஒரு சிலவற்றை விட்டிருப்பார்கள்.. ஆகவே நாகசாமி பேசிய சொற்களில் சனாதனம் தொனித்ததில் வியப்பு இல்லை. பாரதியார் மற்றும் சிதம்பரம் பிள்ளை போன்றவர்கள் மட்டுமே சாதி மறுப்பைப் பேசியும் செயலில் காட்டியும் வந்தார்கள். அதற்காக அவர்கள் தங்கள் சாதிக்காரர்களால் ஒதுக்கியும் வைக்கப்பட்டார்கள். பாரதி, தன் மகள் கல்யாணத்தில் கலகம் செய்து விடுவாரோ என்று வைதிகம் பயந்தது. நான் பாரதியைப்போல சாதிச் சடங்குகளுக்கு எதிரானவனாகவே இருந்தேன். பாரதி சிதைக்குத் தீ மூட்டும் பாக்கியத்தை எனக்குத் தருவதற்கு முன்வந்தார்கள். சாதிச் சடங்குகள் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லாதபடியினால் நான் அதைச் செய்ய மறுத்துவிட்டேன். சுதேசி இயக்கத்தை எல்லா சாதியினரும் நம்பினார்கள். அந்தத் தலைவர்களை, அவர்களின் செயல்பாடுகளை ஒரு கட்டம் வரை ஆதரிக்கவும் செய்தார்கள். காந்தியடிகளும் கம்யூனிஸ்ட்களும் தேச அரசியலில் வரும்வரை, சாதி என்ற தீமையைப் போக்க வேண்டும் என்பதில் தேசிய விடுதலை இயக்கத்தில் இருந்தவர்கள் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நாளடைவில் எங்களில் பலர் சனாதனத்தை உதறினோம். அதை நிரூபிக்க எங்களுக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அந்தத் தலைமைப் பாத்திரம் காந்தி யுகத்திற்குப் போய்விட்டது. ஆனால் உடல், பொருள், ஆவி அத்தனையும் தேச விடுதலைக்கு அர்ப்பணித்ததில் எங்களின் பாத்திரத்தில் எந்தக் கறையும் களங்கமும் சொல்ல முடியாது. இந்த விளக்கத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று தெரியவில்லை. சங்கர கிருஷ்ணன் : உங்கள் நீண்ட விளக்கத்தைச் சுருக்கினால், திலகர் வழியில் வந்த பலாத்காரப் புரட்சியாளர்கள் அனைவரும் சனாதனிகளே என்ற விடைதான் வருகிறது சுவாமிஜி. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 7

நீலகண்ட பிரம்மச்சாரி – 7

காட்சி 7 இடம் : ஓம்கார் ஆசிரமம்காலம் : மறுநாள் காலை 10 மணிபாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமிகள் : நேற்று ராவுல நல்லா தூங்கினீங்களா..? சங்கர கிருஷ்ணன் : நல்லா தூங்கினேன் சுவாமிஜி. காலை வேளையில் இந்த மலைச் சாரல் மிக ரம்மியமாக இருக்கிறது. அதிலும் தெளிந்த கண்ணாடி போன்ற நதியின் பிரவாகத்தில் என்னை மறந்து போனேன். ஓம்கார் சுவாமிகள் : இந்த நதியை இங்கே ‘தட்சிணப் பிநாகினி’ என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் தென்பெண்ணை ஆறாக ஓடுகிறாள். இந்த நதி வனத்திற்குள் ஒரு சுனையில் பிறந்து வருகிறது. இந்த ஆசிரமத்தைத் தொடங்கிய சில நாட்களில் அந்தச் சுனையைக் கண்டுபிடித்து, இந்தப் பகுதி மலைக் குடிகளின் உதவியோடு அந்தப் பாதையைச் சீர் செய்தேன். சங்கர கிருஷ்ணன் : ஆஹா..! இது தென்பெண்ணை நதியா..!நல்லது சுவாமிஜி. நேற்று வ.உ.சி. வீட்டில் நடந்த சம்பவங்களைச் சொன்னபோது, காந்திஜி பத்திப் பேச்சு வந்ததே.. அவரு அப்பவே பிரபலமா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமா, அப்ப அவரு தென் ஆப்பிரிக்காவில் சத்தியாக்கிரகச் சோதனைகளைச் செய்து வந்தார். அவர் இந்தியாவுக்குள்ள கொஞ்சம் முன்னால வந்திருந்தா, என் சரித்திரம் இப்படி இருந்திருக்குமா..? (சிரிக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : காந்தியடிகளைச் சந்தித்திருந்தால் உங்கள் மனம் மாறியிருக்குமுன்னு சொல்றீங்களா..? ஓம்கார் சுவாமிகள் : அப்படிச் சொல்ல வரவில்லை. அவரால் நாட்டின் அரசியல் போக்கு மாறிப்போனதைச் சொன்னேன். அதனால் என் போன்றவர்களின் அரசியல் வழிகளில் மாற்றம் வந்திருக்கலாம் என்று சொன்னேன். தேசத்தின் சரித்திரத்தை, மக்கள் என்ற மகாசமுத்திரத்தின் சக்தியை முன்னிறுத்தி மாற்றிய போக்கு அல்லவா அது..! பின்னாளில் அவரைச் சந்தித்தபோதும் எனக்கு இது தோன்றியது. சங்கர கிருஷ்ணன் : ஆஹா.. அதையும் கேட்க வேண்டும். பிறகு கேட்கிறேன்.சுவாமிஜி, பரோடா மகராஜான்னு மாடசாமிக்கிட்டே சொன்னீங்களே.. அவரு யாரு..? ஓம்கார் சுவாமிகள் : சொல்றேன்.. அதை லண்டன்ல இருந்த இந்தியா விடுதியில் இருந்து சொல்லணும். சிதம்பரம் பிள்ளை கேட்டாருல்ல.. ‘உனக்கு தேசபக்திப் பாடம் யாரு போதிச்சது’ன்னு.. அந்த மகானுபவர்களின் நண்பர்கள் எல்லாம் அங்கேதான் இருந்தாங்க. அவங்க ஆரம்பிச்ச இயக்கத்திற்குப் பெயர் ‘அபிநவ் பாரத் சமிதி‘. சியாம்ஜி கிருஷ்ண வர்மான்னு ஒரு தேசபக்தக் கனவான் இருந்தாரு. இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவில் ஆங்கில அரசில் கொஞ்சநாள் வேலை பார்த்தார். அபாயகரமான மனிதர் என்ற பிரசித்தியுடன் ஆங்கில அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் மீண்டும் லண்டன் வந்து, இந்தியாவிலிருந்து அங்கே படிக்கப் போனவங்களுக்கு நிதி உதவி செய்றதுக்கு ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செஞ்சு, அதைக் கவனித்து வந்தார். இந்த உதவியில் படித்தவர்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வேலை செய்யக் கூடாதுன்னும் தேச விடுதலைக்கு உழைக்கணும் என்ற நிபந்தனையுடன் அதைச் செஞ்சார். அப்படி திலகர் சிபாரிசுல படிக்க வந்தவருதான் விநாயக தாமோதர் சாவர்க்கர். திலகர் இவரை அனுப்பிய உண்மையான நோக்கம், பலாத்காரப் புரட்சிக்குத் திட்டமிடுவது குறித்தும் வெளிநாட்டில் இருந்துகொண்டு புரட்சியை நடத்த ஆட்களைத் தேர்ந்து, வழிநடத்தி, தயார் செய்வதற்கும்தான். சாவர்க்கர் அந்த வேலையில் வெகு கெட்டிக்காரர். வ.வே.சு. அய்யரும் லண்டனில் படிக்க வந்தார். இவங்கல்லாம் இந்தியா ஹவுஸ்ல இருந்து அந்த இயக்கத்த நடத்திக்கிட்டு இருந்தாங்க. பாரிஸ் நகரத்திலேயும் அந்த இயக்கம் செயல்பட்டு வந்தது. சியாம்ஜி கிருஷ்ண வர்மா பேரில் இங்கிலாந்து உளவுத்துறைக்கு ஐயம் தோன்ற, அவர் பாரிஸ் சென்றுவிட்டார். சாவர்க்கரும் அய்யரும் விடுதியைக் கவனித்து வந்தார்கள். இந்தியாவுல இவங்க இயக்கத்திற்கு லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பாலர்-ன்னு செல்வாக்கு இருந்தது. 1857 போல சிப்பாய்ப் புரட்சி ஒன்னு நடத்தணுமின்னு அவங்க எண்ணம். அதுல சில இந்து ராஜாக்களும் இருந்தாங்க. அவங்கள்ள ஒருத்தருதான் பரோடா மகராஜா ஸாயாஜிராவ். சங்கர கிருஷ்ணன் : லால் பால் பால் அப்படின்னு சொல்வாங்களே.. அது இவங்க மூனு பேரைத்தானே சுவாமிஜி..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, அரவிந்தரும் உண்டு. அப்போ லண்டன்ல ஒரு கொலை நடந்தது.. 1909ஆம் வருசம் மதன்லால் திங்கரான்னு ஒரு சுதேசி இளைஞன், கர்சான் வைலி என்ற வெள்ளைக்கார அதிகாரி ஒருத்தன சுட்டுக் கொலை பண்ணினான். கொலையில் இந்தியா ஹவுஸ் ஆட்களுக்குத் தொடர்பு இருந்ததுன்னு மோப்பம் பிடிச்சு சாவர்க்கரை பிடிச்சுக்கிட்டு போச்சு பிரிட்டிஷ் அரசு. அவரை அந்தமான்ல கொண்டு போட்டாங்க. வ.வே.சு. அய்யர் பலே கில்லாடி. தப்பிச்சுப் போயிட்டாரு. 1910ஆம் வருசம் பாண்டிச்சேரிக்கு வந்து என் தலையெழுத்தை அவருதான் எழுதினாரு. சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, சாவர்க்கர்ன்னு சொன்னீங்களே.. காந்தி அடிகள் கொலைச் சதியில் சேர்க்கப்பட்டிருந்தாரே அந்த சாவர்க்கரா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமா அவருதான்.. (சிரிக்கிறார்) காலம் எப்படில்லாம் மாறிடுச்சு பாருங்க.. நான் சாமியாராகி இருக்கேன்.. அரவிந்தர் வேதாந்தியாப் போய் ஆசிரமம் நடத்துனாரு.. வ.வே.சு. அய்யர் காந்திஜி தயவால பிரிட்டிஷ் அரசின் பொதுமன்னிப்ப வாங்கிட்டு ஆசிரமம் நடத்துனாரு. சாவர்க்கர் அந்தமான் சிறைக்கொடுமை தாங்காம மன்னிப்புக் கடிதங்கள் போட்டு வெளியே வந்தாரு. கடைசியிலே காந்திஜி கொலைச் சதியில் சேர்க்கப்பட்டு நிரூபணம் ஆகாம விடுதலையானாரு. சங்கர கிருஷ்ணன் : நீங்க மட்டும்தான் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கிட்ட எந்த விதத்திலேயும் சரணடையாம, ரொம்ப காலம் ஜெயில்ல இருந்தவரு.. இல்லையா சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (சிரிக்கிறார்) அதுதான் தம்பி வேடிக்கை. இரண்டு தடவை நான் ஜெயிலுக்குப் போனபோதும் வெறும் சதிக் குற்றம்தான். ஆஷ் கொலையை நான் திட்டமிடாமலே முதல் குற்றவாளி. ஏழரை வருடம் சிறை. இரண்டாம் தடவை கம்யூனிஸ்ட் பிரச்சார நோட்டீஸ் கொடுத்தேன்.. இன்னொரு எட்டு வருசம் சிறை. இது பெரிய குற்றமில்லியா? இந்தியாவுக்கு வெளியே ரங்கூன்ல கொண்டு போட்டான்..(சிரிக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : நேற்று தூத்துக்குடிச் சம்பவங்களைச் சொல்லிக்கிட்டு இருந்தீங்க.. ஓம்கார் சுவாமிகள் : சொல்றேன்.. 1908 பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி தூத்துக்குடிக்கு ஒரு பெரிய புயல் வந்தது. அதோட பேரு சுப்பிரமணிய சிவா. அப்போ தூத்துக்குடி தேசபக்த வெறி பிடிச்சுக் கிடந்தது. பிப்ரவரி 27ஆம் தேதி கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பண்ணினாங்க. நான் திருநெல்வேலி வந்து கூட்டங்களில் பேசிக்கிட்டிருந்தேன். மார்ச் மூனாம் தேதி வேலை நிறுத்தம் ஜெயிச்சது. 50 சதமானம் சம்பளம் ஒசத்துனாங்க. வார விடுமுறையும் கொடுத்தாங்க. சம்பளம் இல்லாம விடுப்பு எடுத்துக்கிடலாம். நெனச்சுப் பாரு தம்பி, 66 வருசத்திற்கு முன்னே இத நடத்துனாரு பிள்ளைவாள்.. சங்கர கிருஷ்ணன் : உண்மையில் இது பெரிய சாதனைதான் சுவாமிஜி.. ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, ஏகாதிபத்தியத்தின் முதுகில் விழுந்த அடி இது. அப்புறம் பாலர் விடுதலையைத் தூத்துக்குடியில் கொண்டாடத் திட்டம் போட்டார் பிள்ளைவாள். இது பெரிய மக்கள் எழுச்சி ஆகிவிடும் என்று திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச் பயந்தான். தூத்துக்குடியில் சப் கலெக்டரா இருந்த ஆஷ் அதிகார ஆணவம் கொண்ட இன வெறியன். கூடவே சிதம்பரம் பிள்ளை நடத்திய தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க நினைத்தும் முடியாத தோல்வியில் குரோதம் கொண்டு இருந்தான். கலெக்டர் விஞ்ச், பாலர் விடுதலைக் கொண்டாட்டத்திற்குத் தடை போட்டான். வ.உ.சி.யும் சிவாவும் அய்யங்காரும் தடையை மீறி பாலர் விழாவை நெல்லையில் கொண்டாடினார்கள். மூனு பேரையும் கைது பண்ணினாங்க. திருநெல்வேலியிலேயும் தூத்துக்குடியிலேயும் பெரிய எழுச்சி நடந்தது. விஞ்ச்சும் ஆஷூம் இந்த ரெண்டு ஊரையும் ரணகளமாக்கி, பேயாட்டம் ஆடினாங்க.என் இயக்கத்தை நடத்த வேண்டியிருந்ததால நான் கடையநல்லூருக்குப் போய் இருந்துகிட்டேன். பிறகு சென்னைக்கு வந்து, இந்தியா பத்திரிகையில் வேலை பார்த்தேன். பாரதியார் பாண்டிச்சேரி போனப்போ, இரண்டு வாரம் நான்தான் இந்தியாவைக் கொண்டு வந்தேன். அப்புறம் இந்தியா பாண்டிச்சேரியிலிருந்து வந்தது. அவ்வளவுதான்.. ஒரு இரண்டரை வருசம் பேயா அலைஞ்சு ஆள் புடிச்சேன். 1910ஆம் வருசம் வந்தது; சித்திரையா வைகாசியா.. சரியா ஞாபகமில்லை. அப்போ.. (மேடையில் ஒளி மங்கித் திரை விழுகிறது) நாளை தொடரும்.