வாழ்க்கை ஒரு வட்டம்

வாழ்க்கை ஒரு வட்டம்

கடந்த 15 மாதங்களில் என்னுடைய பயன்பாட்டுக்கென அதிகபட்சமாக 400 – 500 ரூபாய்க்கு மட்டும் பெட்ரோல் போட்டு ஈருருளி ஓட்டியது போக, மீதி அத்தனை தூரங்களையும் மிதிவண்டியிலேயே பயணிப்பதன் அனுபவக் குறிப்புகள்: அலுவலகம் சென்று வருவது, இடையில் தேநீர் பருக, மதிய உணவுக்குச் செல்வது, அஞ்சல்/தூது அஞ்சல் அனுப்பச் செல்வது என, ஒரு நாளைக்கு சராசரியாக 20 கிலோமீட்டர் தூரம் மிதிவண்டியிலேயே சென்று வருகிறேன். வெளியூர் பயணங்கள், நகர எல்லைக்குள் பிறருடன் செல்வது, குடும்பத்தினருடன் ஆங்காங்கே சென்று வருவது, பெட்டிகள், மூட்டைகளை எடுத்துச் செல்வது போன்றவற்றிற்கு மட்டுமே மகிழுந்து. மற்ற நாட்களில் அதைத் தொடுவதே இல்லை. சில நாட்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டு வேலைகள் இருந்து, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டிய அழுத்தம் இல்லாத நாட்களில், நகர எல்லைக்குள் 40 கிலோமீட்டர் கூட மிதிவண்டியில் பயணிப்பதுண்டு. எப்போதாவது கொஞ்சம் சோம்பலாக இருக்கும் நாட்களில் நகருக்குள் சென்றுவர, ஒரு வேலையை முடிக்க நேரம் குறைவாக இருக்கும்போது, கட்டுச்சிப்ப அலுவலகங்கள் சென்றுவர, மகிழுந்து பராமரிப்புக்கு விட்டிருக்கும்போது என அரிதிலும் அரிதாக மட்டுமே ஈருருளியை எடுப்பதுண்டு. 2009-இல் வாங்கிய BSA SLR Photon Freedom மிதிவண்டிதான். சன்னமான சுமைதாங்கி உண்டு. கியர் கிடையாது. Ralco, Bedrock, Hartex போன்றவற்றில் டயர் போட்டாலும் நைலான் டயர் விரைவில் தேய்ந்து விடுவதோடு எதிர்பாராத நேரத்தில் ஓட்டையாகி விடுவதால் இரப்பர் டயரே சிறந்தது என்று தோன்றுகிறது. கடந்த ஒரு வருடத்தில் கோயமுத்தூர் நகர எல்லைக்குள், தோராயமாக 2500 – 3000 கிலோமீட்டர் மிதிவண்டியில் ஓட்டியிருந்தாலும், பயணத்தொலைவு, கலோரிகளை அளப்பதற்குச் செயலி எதுவும் பயன்படுத்தவில்லை; திறன்மிகு கைக்கடிகாரமும் (ஸ்மார்ட் வாட்ச்) பயன்படுத்துவதில்லை. எப்போதுமே ஒரு லிட்டர் தண்ணீர் புட்டியை சுமைதாங்கியில் வைத்திருப்பதுண்டு. நிதானமாக அளவான வேகத்தில் செல்வதால் கபால கவசம் அணிவதில்லை. எப்போதாவது வெயிலுக்குத் தொப்பி அணிவதுண்டு. இதுவரைக்கும் மற்ற வண்டிகள் இடித்து விழுந்தது, சறுக்கியது, நாய்கள் துரத்தியது என்று எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. பாதாசாரி, மிதிவண்டி, ஈருருளி, மகிழுந்து என எதுவாக இருந்தாலும் மற்றவர்கள் நம் மீது மோதக்கூடிய எதிர்பாராத விபத்தைத் தடுக்க வேண்டுமெனில் Be visible என்ற அடிப்படையை மறக்கக்கூடாது. ஒரு விநாடி யாரோ ஒரு ஓட்டுநர் கவனிக்கத் தவறுவதாலேயே விபத்து ஏற்படுகிறது. சைக்கிளை பைக் என்று விளிக்கும் நவயுக மிதிவண்டி வெறியர்கள், ஈருருளி ஓட்டுபவர்கள், மகிழுந்து ஓட்டுநர்கள் என எல்லோருமே மிகவும் அலட்சியமாக இருப்பது வாகனத்தின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் எதிரொளிப்பான் (Retro Refelective Strip/Sticker) விசயத்தில்தான். இரவு நேரங்களில் be visible என்பது மிக முக்கியம். பாதாசாரி, மிதிவண்டி, ஈருருளி ஓட்டி வரும் ஒரு நபரை நான்கு சக்கர வாகனங்களில் உள்ள A piller ஓரிரு நொடிகள் மறைத்து blindspot-ஐ ஓட்டுநருக்கு உண்டாக்கக் கூடியது. கணிசமான ஓட்டுநர்கள் அலைபேசியில் பேசுவது, உடனிருப்பவர்களுடன் தீவிரமான உரையாடலில் ஈடுபடுவது என வருகிறார்கள். குடிகார நாய்கள் வண்டி ஓட்டி வருவதும் நம் ஊரில் இயல்பானதாகிவிட்டது. இத்தகைய ஆபத்தான ஓட்டுநர்கள் தூரத்தில் உள்ள சின்னச்சின்ன அசைவுகளை எல்லாம் கவனித்து முகப்பு விளக்கின் dim, bright-ஐ மாற்றி மாற்றி அடித்துப் பார்த்தெல்லாம் வண்டி ஓட்டுவதில்லை. குத்து மதிப்பாக பிரேக்கையும், ஆக்சிலரேட்டரையும் மிதித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்காக நாம் அன்றாடம் reflective jacket போட்டும் வாகனம் ஓட்ட முடியாது. தினமும் இரவு வீடு திரும்புவபவர்களுக்கு மிதிவண்டியுடன் வரும் எதிரொளிப்பான் போதாது. நாமே சிவப்பு நிற 3M எதிரொளிப்பான் ஸ்டிக்கரை முன்னும் பின்னும் ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டியதுதான் (முறைப்படி பார்த்தால் முன்புறம் வெள்ளை நிற எதிரொளிப்பான் மட்டுமே இருக்க வேண்டும். இருந்தாலும் சிவப்பு அல்லது மஞ்சள் பட்டையை ஒட்டுவதில் தவறில்லை). இரு சக்கரங்களுக்கும் முழுமையான Mud guard இல்லாத மிதிவண்டிகளை அன்றாடம் வேலைக்குச் செல்பவர்கள் பயன்படுத்தவே முடியாது. சாலைகளில் திடீரென சாக்கடை ஓடும், மழை பெய்த பின் மணிக்கணக்கில் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும், வண்டியில் அடிபட்ட நாய் அல்லது பூனையின் உடல் சாலை முழுவதும் ஒட்டியிருக்கும். கண்ட இடத்தில் எச்சில் துப்பி வைத்திருப்பார்கள்; சில இடங்களில் வாந்தி எடுத்து வைத்திருப்பார்கள். எவ்வளவு பார்த்துப் பார்த்து ஓட்டினாலும் சில இடங்களில் ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலையில் காலை இரண்டையும் தூக்கிக்கொண்டு நேராக விட வேண்டியதுதான். அப்போதுதான் இரும்பு mud guard-இன் அருமை புரியும். காற்றில் ஆடிக்கொண்டே வரும் பிளாஸ்டிக் mud guard இருக்கும் மிதிவண்டிகளில் அவ்வப்போது எதிரொளிப்பானை mud guard மறைத்து விடுகிறது. இதை அறியாமல், ஆபத்தை உணராமல் பலர் இரவு நேரங்களில் செல்கின்றனர். சக்கரத்தின் கம்பியில் மாட்டியிருக்கும் ஆரஞ்சு வண்ண எதிரொளிப்பான் வில்லைகள் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டவை. அதன் முக்கியத்துவம் தெரியாத பலர் அவற்றைத் துடைப்பதே இல்லை; உடைந்துவிட்டால் புதியது மாட்டுவதும் இல்லை. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அவற்றை கழட்டிவிட்டு புதியது மாட்டுவது அவசியம். சுமைதாங்கியும், இரும்பு mud guard-உம் இல்லாத நவயுக மிதிவண்டிகளை அன்றாடப் பயன்பாட்டுக்கு வைத்திருப்பது சவாலான செயல். நமக்குப் பயன்பட வேண்டிய பொருளே நமக்கு சுமையாக மாறிவிடக்கூடாது என்பது என் கருத்து. Gear உடைய, suspension வைத்த மிதிவண்டிகளின் இயல்பான பயன்பாடு பற்றித் தெரியவில்லை. கோயமுத்தூர் போன்ற சமதளமான நகரத்தில் அவற்றால் என்ன பயன் என்று நானறியேன். பஞ்சாங்கத்தைப் பார்த்து செவ்வாய் கிரகத்துக்கு இராக்கெட் விடுவதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். Gym-க்கு car-இல் வந்து நின்றுகொண்டிருக்கும் cycle-ஐ ஓட்டி கலோரிகளை எண்ணுவதை ஜீரணிக்கவே முடிவதில்லை. பல இடங்களுக்கும் நான் மிதிவண்டியிலேயே செல்வதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சிலர் மிதிவண்டிக்கு மாறினார்கள். ஆனால் ஓரிரு மாதங்களில் அதைக் கைவிட்டுவிட்டு பழையபடி ஈருருளிக்குத் திரும்பிவிட்டனர். தனிப்பட்ட விருப்பம், தன்னூக்கம், ஈடுபாடு என்பதைத் தாண்டி அதற்கான முக்கிய காரணம் அவர்களது மிதிவண்டி டயர். அன்றாடப் பயன்பாட்டுக்கான மிதிவண்டியில் டயர் சன்னமாக இருக்க வேண்டும். நம் மக்கள் பெரிய button கொண்ட MTB அல்லது மிக சன்னமான track டயர் உள்ள ஒன்றை எந்தவிதமான யோசனையும் இல்லாமல் வாங்குகின்றனர். காதணிபாடி மாட்டி பாட்டுக் கேட்டுக்கொண்டே ஒருநாளும் சாலைகளில் சென்றதில்லை. அவ்வாறு செய்வது நமது உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடியது என்பதோடு இசையை அவமதிக்கும் செயல். வெளியூர் செல்லும்பொழுது மிதிவண்டியை பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள bike stand-களில் நிறுத்தி விட்டுச் சென்றுவிடுவதால் இப்போதெல்லாம் வீட்டிலிருந்து சென்று வரும் taxi செலவும் இல்லை. நாளொன்றுக்கு 20 ரூபாய் நிறுத்தக்கட்டணம் மட்டுமே. வெயில் நேரத்தில் செல்வது பழகிவிட்டால் ஒன்றுமே தெரியாது. வியர்வை வந்தாலும் அலுவலகம் சென்றவுடன் பத்து நிமிடங்களில் இயல்பாகி விடுகிறது. சட்டை அழுக்காவதும் இல்லை. மழை நின்ற அடுத்த சில நாட்கள் சாலைகளில் உள்ள சேறு, சகதி காய்ந்து புழுதியாக பறக்கும். அதுவும் முகக் கவசம் அணிவதால் பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் தலை முடி முழுவதும் புழுதியாக இருக்கும். அப்படியே சீவினால் சீப்பு நிறம் மாறுவது தெரியும்! Traffic jam என்ற பிரச்சினை ஒருபோதும் மிதிவண்டிக்காரர்களுக்குக் கிடையாது. ஈருருளிகளே செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து மொத்தமாக நின்றுவிட்டாலும் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு நடந்து சென்று பத்து மகிழுந்துகளைத் தாண்டிய பிறகு இறக்கி வைத்து எப்போதும் போல ஓட்டிச் செல்லலாம். இதைவிட இன்னும் குறைவான நுகர்வுடைய minimalist வாழ்க்கை முறைக்குச் செல்ல மூன்று கிலோமீட்டருக்குக் குறைவான தூரத்தை நடந்து மட்டுமே செல்வது என்ற இலக்கை 2023-க்கு செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறேன். ஆர். எஸ். பிரபு

அற்புத விளக்கே கிடைத்தாலும்…

அற்புத விளக்கே கிடைத்தாலும்…

நடக்கலாம் வாங்க – பகுதி 4 சுவாரஸ்யங்களுடன்தான் நடக்கிறீர்களா?  நீங்கள் செய்யும் நடைப்பயிற்சி அலுக்கும்படி இருக்குமேயானால் உங்களால் அதைத் தொடர்ந்து செய்யமுடியாது. எந்த வேலையையும் ஆர்வம் இல்லாமல் செய்தீர்கள் என்றால் அதில் ஒன்ற முடியாது. நீங்கள் ஒரு வேலையில் ஒன்ற வேண்டும் என்றால் அதில் பல புதுமைகள் புகுத்தப்படவேண்டும். அதன் மூலம் நீங்களே சுவாரஸ்யங்களை ஏற்படுத்துவீர்கள். சுவாரஸ்யங்கள் இருக்குமேயானால் அங்கு ஆர்வம் ஏற்படும். உங்களது ஆரவம் உங்கள் நடைப்பயிற்சியில் இருக்க வேண்டுமேயானால், நீங்கள் மேற்கொள்ளும்  நடைப்பயிற்சியில் சுவாரஸ்யங்களைப் புகுத்துங்கள். சுவாரஸ்யங்களை எப்படியெல்லாம் புகுத்தலாம் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். சுவாரஸ்யங்களுக்கு  நீங்களே சில கேள்விகளைக் கேட்கலாம். உதாரணத்திற்கு,  * நடப்பதற்காக ஒதுக்கும் நேரத்தில் நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா? * வாக்கிங் நேரத்திற்கு என்று உங்களது தனிமையையோ அல்லது உடன் நடப்பதற்கென்று சில நடக்கும் நண்பர்களையோ வைத்திருக்கிறீர்களா? * நீங்கள் நடப்பதன் காரணத்தை அறிந்திருக்கிறீர்களா? * அப்படி அறிந்திருந்தால் அந்தக் காரணத்தை நோக்கி நீங்கள் எவ்வளவு நகர்ந்திருக்கிறீர்கள் என்று கவனிக்கிறீர்களா? *உங்களுடைய நடையின் வேகம், நடக்கும் தூரம் இவற்றைக் கணித்து வாரத்திற்கு ஒரு முறை உங்களுடைய உச்சபட்ச வேகம் எது, அதிகபட்ச தூரம் எது  என்று கணக்கிட்டிருக்கிறீர்களா? * நீங்கள் நடக்கும் வேகம், தூரம் இவற்றிற்கும் உங்கள் உடல் நலத்திற்கும் நேரடித்தொடர்பு உள்ளதா என்று கவனித்திருக்கிறீர்களா? அதாவது, உங்கள் உடல் நலனுக்குத் தேவையான அளவு கலோரிகள் சரியான முறையில் எரிக்கப்படுகிறதா? அல்லது அது உங்களது comfort zone க்கு வெளியே இருக்கிறதா? *நீங்கள் நடக்க ஆரம்பிக்கும் நேரம் மற்றும் நடையை முடிக்கும் நேரம் இவற்றுடன் உங்களது வேகத்தை ஒப்பிட்டு எத்தனை அடிகள் நடந்திருப்பீர்கள் என்று கணிக்க முடிகிறதா? * ஒவ்வொருநாளும் நடைப்பயிற்சி முடிவில் உங்கள் உடலில் ஏற்படும் புத்துணர்வுகளையோ அல்லது அயற்சிகளையோ பிரித்தறிய முடிகிறதா? * நீங்கள் புதிதாக நடக்க ஆரம்பித்த நேரத்தில் இருந்த தூர – நேர விகிதத்திற்கும் ,நடக்க ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இருக்கும் தூர நேர விகிதத்திற்கும் வேறுபாடு உள்ளதா?  * நீங்கள் நடந்த தூரத்தையும் வேகத்தையும் உங்களுடன் நடப்பவர்களுடனோ, நடைப்பயிற்சி செய்யும் மற்றவர்களுடனோ கலந்துரையாடி அவர்களது தூரத்தையும் வேகத்தையும் ஒப்பிட்டு அறிந்திருக்கிறீர்களா?  * உங்கள் உடல் எடையை எவ்வளவு குறைக்கவேண்டும் என்ற இலக்கோடு, நீங்கள் நடக்கும் வேகம் ஒத்துப்போகிறதா? இது போன்ற கேள்விகள் மட்டுமல்லாது, உங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகளும் உங்களுக்குள் எழலாம்.  நான் நடக்கும் வாக்கர்ஸ் க்ளப்பில் நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளான ஒரு பெண் வந்துகொண்டிருந்தார். அவரால் ஒரு அடியை எடுத்து வைக்கவே அவரது கணவரோ அல்லது அவரது மகனோ உடன் இருக்க வேண்டும். ஒரு கிலோமீட்டர் சுற்றி வர அவருக்கு ஒரு மணி நேரம்கூட ஆகும். ஆனால், அவர் தளராமல் தினம் நடந்தார். ஒரு மாதத்தில் தனியாக நடந்தார். அடுத்த மாதத்தில் அவரது வேகம் கூடியது. ஒரு வருடத்தில் அவர் தனியாக இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார். அவரது உடல்நிலையால் எவ்வளவு முடியும் என்று அவரோ அவரது மருத்துவரோ கணித்து அதை நோக்கி நகர்கிறார். ‘நடந்தாக வேண்டும்’ என்ற கட்டாயம் வரும்பொழுது அவர் அதைச் செய்கிறார்.  இங்கு யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், இலக்கு உங்களைக் கட்டாயப்படுத்த வேண்டும்.  இத்தனைக் கேள்விகள் கேட்கவேண்டுமா? இப்படித்தான் சுவாரஸ்யங்கள் பிறக்குமா என்று யோசிப்பீர்கள்தானே? எனக்குத் தெரிந்த ஓர் உறவினர் சங்கரன் கோவிலில் உண்டு. வயிறு பெரிதாகிக்கொண்டே போனது. “எடை கூடுது மாப்ள. வயிறு எனக்கு முன்னாடி போய்க்கிட்டு இருக்கு. என்ன பண்ணலாம்?” என்று கேட்டார். அவரது மன நிலைக்கு, நேரடியாக டயட் என்றால் தெறித்துவிடுவார் என்பதால் மெதுவாக “வாக்கிங் போறீங்களா?” என்றேன்.  “எப்பவாவது போவேன்” என்றார். “தினமும் போங்க” என்றேன்.  அதற்குச் சொன்னார், “மாப்ள, சங்கரன் கோயில்ல தண்ணி எப்ப விடுறான்னே தெரியாது. சமயத்துல பத்து நாளைக்கு ஒருவாட்டிதான் தண்ணி விடுவான். அப்ப ஆபிஸ்க்கு லீவு போட்டுலாம் தண்ணி எடுப்பாய்ங்க. வீட்ல தண்ணி வரப்ப லீவு போடலாட்டி டைவர்ஸ் வரக்கூட போயிரும் தம்பி. அப்ப எப்டி வாக்கிங் போறது?” என்றார்.  உங்களுக்கு உங்கள் comfort zone க்கு உள்ளேயே இருக்க வேண்டும். ஆனால் உடல்நிலையும் நன்றாக இருக்க வேண்டும். ஊதவும் கூடாது. சிக்ஸ் பேக் வச்ச  சல்மான் கான் மாதிரி இருக்க வேண்டும் போன்ற மந்திரத்தில் மாங்காய் விழ வைக்கும் ஆசைகள் எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அற்புத விளக்கே கிடைத்தாலும் நீங்கள் அதைத் தேய்க்க வேண்டும்.  அது சரி, இத்தனை சுவாரஸ்யங்களைச் சொன்னால், ‘எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?’ என்று புதிதாய் நடக்க இருப்பவர்கள் யோசிக்க மாட்டார்களா? யோசித்தபடியே நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை படங்கள்: இணையத்திலிருந்து

WHERE ARE WE?

WHERE ARE WE?

நடக்கலாம் வாங்க – பகுதி 3 உடல் எடையைக் குறைக்க விரும்பி நடக்கிறீர்கள் என்றால் முதல் பத்து நாட்களில் நீங்கள் கவனிக்க வேண்டியவை எவை என்பதை முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். கட்டுரைக்குள் செல்லும் முன்பாக அவற்றை மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.    * உங்கள் நடக்கும் தூரம் எவ்வளவு?   * நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு எவ்வளவு?   * நடக்கும் நேரத்தில் உங்கள் உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?   *  நடக்கும் தூரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் காலடிகள் (ஸ்டெப்ஸ்) எவ்வளவு? இத்தனைக் கெடுபிடிகளுடன் அல்லது கணக்குகளுடன் நடக்க வேண்டுமா என்றால் ஆம், அப்படித்தான். எல்லாமே அப்படித்தான்.  ஒரு தங்க நகை வாங்கச் செல்கிறீர்கள். மில்லிகிராம் கூட அங்கு காசுதான். கடைக்காரர் பணம் வாங்கிவிட்டு, நகையைக் கையில் தரும்பொழுது மூன்று மில்லி கிராம் குறைந்திருக்கிறது என்று சொன்னால் ஒத்துக்கொள்வோமா?  மாட்டோம் அல்லவா? அதைப்போல எல்லாமே ஒரு கணக்குத்தான்.  உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முதலில், தான் தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதைக் கணக்கில் வைத்துக்கொள்ளவேண்டும். தாங்கள் நடக்கும் தூரத்தைக் கணக்கில் வைத்தால்தான் ‘சரியான அளவில் நடக்கிறோமா’ என்று தெரியும்.  உதாரணத்திற்கு நீங்கள் தினமும் நடைப்பயிற்சி என்ற பெயரில் நடப்பது, உங்கள் வீட்டிலிருந்து  தெரு முனை வரை என்று எடுத்துகொள்வோம். அதன் தொலைவு 100 மீ என்றால், போக வர 200 மீட்டர். இதைத்தான் வழக்கமாகச் செய்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம். இதை எப்படி அதிகப்படுத்தலாம் என்று யோசிக்கவேண்டும். ஒரு தெருவினுள் நுழைந்து அடுத்த தெருவின் வழியாக வந்து பார்த்து தூரத்தை அதிகப்படுத்தலாம்.  அடுத்ததாக நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு. அதாவது, நீங்கள் வீட்டிலிருந்து தெருமுனை வரைதான் நடைப்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் திரும்பவும் வீடு திரும்பும் வரையான நேர அளவு கண்காணிக்கப்படவேண்டும். ஏனென்றால் நீங்கள் ஊர்ந்து செல்கிறீர்கள் என்றால் முந்தைய பகுதியில் சொன்னது போல் அதற்குப் பெயர் ‘உல்லாச உலா’. உதாரணத்திற்கு 200 மீ சென்று திரும்ப பத்து நிமிடங்கள் ஆகிறதென்றால் அது மோசமான நடை. உங்கள் இலக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனில், உங்கள் உடலில் இருக்கும் கலோரிகள் எரிக்கப்படவேண்டும். அதற்கேற்றபடி நடக்க வேண்டும். உங்களது வேகம் துரிதப்படுத்தப்படவேண்டும்.  இதில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொன்று, நம் உடலில் ஏற்படும் மாற்றம். சிலருக்கு நடக்கையில் மூச்சு வாங்கலாம். சிலருக்கு நீரிழப்பு ஏற்பட்டு தாகம் ஏற்படலாம். சிலருக்கு முழங்கால் வலி வரலாம். ஒருவேளை நடக்க முடியாத அளவிற்கு உடல் தொந்தரவு செய்யும் என்றால் அன்றைய பயிற்சியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துவிட்டு தக்க ஆலோசனைகளுடன் மறு நாள் நடக்கலாமே தவிர, எதற்காகவும் பயிற்சியை நிறுத்தக்கூடாது.  ஆதலால், நம் உடல் நமக்குத் தரும் சமிக்ஞைகளைப் புரிந்துகொள்வதற்காக, அவற்றைக் கவனிக்கவேண்டும்.  உடல் நமக்குத் தரும் சமிக்ஞைகளை எப்படிப் புரிந்துகொள்வது என்று கேட்டு யாரும் கம்பெனியின் கேட்டை ஆட்டவேண்டாம். அது வேறு டிபார்ட்மெண்ட்.  இவற்றையெல்லாம் கவனித்து ஒருவாரம் நடக்கிறீர்கள் என்றால், அடுத்து நீங்கள் உங்களது ஸ்மார்ட் ஃபோன் மூலம் நீங்கள் நடக்கும் அடிகளைக் கணக்கிட வேண்டும். அதன் மூலம் ஒரு இலக்கு வைத்துக்கொண்டு அதனை அடைய முயற்சி செய்யவேண்டும்.  நடக்க ஆரம்பிக்கும் புதிதில் 5000 அடிகள் என்று இலக்கு வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுதுமோ அல்லது ஒரு குறிப்பிட்ட நடைப்பயிற்சியின் நேரத்திலோ அதை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள் தூரத்தை உத்தேசமாகக் கணக்கில் வைத்துக்கொள்ளலாம். (இந்த விசயத்தில் என்னைச் சொல்லவேண்டும். ஒவ்வொரு அடியையும் எண்ணியிருக்கிறேன். நடப்பதில் தீவிரவாதம் வகை) ஒரு வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் நடக்கும் தூரத்தை, நேரத்தை, அடிகளை மறு பரிசீலனை செய்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, நீங்கள் உங்களது தெருமுனை வரைதான் செல்கிறீர்கள் என்றால், 200 மீட்டர் தூரத்தை அடுத்த தெருவின் வழியாகச் சென்று திரும்புவதன் மூலம் 200 மீட்டரை 400 மீட்டராக உயர்த்தலாம். பத்து நிமிடத்தில் 200 மீட்டர் என்பதை பத்து நிமிடத்தில் 300 மீட்டராகவோ அல்லது 400 மீட்டராகவோ மாற்றலாம். நடக்கும் அடிகளை இன்னும் உயர்த்துவதன் மூலம் உங்களது உடல் உழைப்பு அதிகரித்து அதிகமான கலோரிகள் எரிக்கப்பெறும். இதன் மூலமாக உடல் எடை குறையவோ இலகுவாக மாறவோ செய்யலாம். உங்களது நடைப்பயிற்சியை இப்படி கவனிப்பதன் மூலம் உங்கள் உடல் எடை பற்றியும் கவனம் கொள்கிறீர்கள்.  இதில் அனைவருக்கும் வரும் ஒரு சந்தேகம், எந்த நிலையில் நான் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் அல்லது எந்த நிலையில் என் தூரத்தை அதிகப்படுத்தவேண்டும் என்பது. நீங்கள் செய்யும் நடைப்பயிற்சி அலுக்கும்படி இருக்குமேயானால் உங்களால் அதைத் தொடர்ந்து செய்யமுடியாது. எந்த வேலையையும் ஆர்வம் இல்லாமல் செய்தீர்கள் என்றால் உங்களால் அதில் ஒன்ற முடியாது.  நீங்கள் ஒரு வேலையில் ஒன்ற வேண்டும் என்றால் அதில் பல புதுமைகள் புகுத்தப்படவேண்டும். அதன் மூலம் நீங்களே சுவாரஸ்யங்களை ஏற்படுத்துவீர்கள். சுவாரஸ்யங்கள் இருக்குமேயானால் அங்கு ஆர்வம் ஏற்படும். உங்களது ஆரவம் உங்கள் நடைப்பயிற்சியில் இருக்க வேண்டுமேயானால், நீங்கள் மேற்கொள்ளும்  நடைப்பயிற்சியில் சுவாரஸ்யங்களைப் புகுத்துங்கள்.  சொல்வது எல்லாம் சரி, அதை எப்படிச் செய்வது என்று சிலர் யோசிக்கலாம். சிலருக்கு அந்த யோசனையே இல்லாமல் செய்ததையே செய்துகொண்டிருப்பார்கள். செக்கில் மாடுகளைக் கட்டி ஆட்டுவார்கள். மாட்டை அங்கு நிறுத்திவிட்டால் போதும் அது சுற்றிக்கொண்டே இருக்கும். எண்ணெய் வருகிறதா இல்லையா என்ற கவலை மாட்டிற்கு இருக்காது. அதைத்தான் ‘செக்கு மாடு கணக்கா’ என்பார்கள். ஒரே விசயத்தை எந்தப் பலனையும் ஆராய்ந்து பார்க்காமல் செய்துகொண்டிருந்தால் நேர விரயம்தான் ஆகுமே தவிர பலன் கிடைக்காது. அவ்வப்போது நாம் என்ன நிலையில் இருக்கிறோம் [ WHERE ARE WE ]என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டும்.  அதை நீங்கள் நடந்து காட்டுவதிலும் சரி, வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதிலும் சரி. யோசியுங்கள் WHERE ARE WE? இப்போதைக்குத் தொடர்ந்து நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து 

முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள்

முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள்

நடக்கலாம் வாங்க : பகுதி 2 ஒருவர் உடல் எடையைக் குறைக்க கண்டிப்பாக நடக்கவேண்டுமா? அல்லது நடந்தால் உடல் எடை குறையுமா? என்று நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு. உடல் எடை குறைப்பு என்பது மிகவும் கடினமான காரியம் அல்ல. அதே நேரத்தில், நாம் நினைக்கும் அளவிற்கு மிக மிக எளிதானதும் அல்ல. கமலஹாசன் ட்வீட் போல் இருக்கிறது என்று யாரும் எண்ண வேண்டாம்.  இரண்டு நாட்கள் கூட போதும் ஒரு கிலோ எடை கூட. ஆனால் ஏறும் எடையைக் குறைக்க கண்டிப்பாக மெனக்கெடவேண்டும். இந்தச் சொற்றொடரை நம்மில் பலரும் சொல்லியிருப்போம் அல்லது யாராவது சொல்லிக் கேட்டிருப்போம். அது உண்மையும் கூட.  உடல் எடைக் குறைப்பிற்கு நடைப்பயிற்சி உதவி செய்யுமா என்றால் உதவி செய்யும். ஆனால் உடல் எடை குறைப்பிற்கு நீ என்ன செய்கிறாய் என்று யாரேனும் கேட்டால் வெறுமனே நடக்கிறேன் என்று நீங்கள் முடிவு எடுத்திருந்தால் உடல் எடை குறையாது. மறுபடியும் கமலஹாசனின் ட்வீட்டை ஞாபகப்படுத்த விரும்பவில்லை. நேராக விசயத்திற்கு வருவோம். நடைப்பயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்று. ஆனால் அதற்கான சில முக்கிய முயற்சிகள் உண்டு.  உதாரணத்திற்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதிக்குள் நுழைய பெரிய வரிசை காத்திருக்கும். சன்னதிக்குள் இருந்து நீளும் அந்த வரிசை இட வசதிக்காக சன்னதியைச் சுற்றிச் சுற்றியே இரண்டு மூன்று வரிசைகள் செல்லும். வரிசை மெதுவாக நகரும்படி மேலாண்மை செய்வார்கள். இந்த இடத்தில் திருப்பதி கோயிலை நான் மேற்கோள் காட்டவில்லை. ஏனெனில், அங்கு சில சமயம் ரஜினி படத்திற்குத் திறந்துவிட்டது போல் எல்லோரும் ஓடுவதைக் கண்டிருக்கிறேன். மீனாட்சியம்மன் கோயிலில் அப்படி அல்ல. ஊர்ந்து ஊர்ந்து செல்வார்கள். அதைப்போலவே சிலர் வாக்கிங் வருவார்கள். அதற்குப் பெயர் நடைப்பயிற்சி அல்ல, ‘உல்லாச உலா’.  எந்த வேலையும் இல்லாத போது உங்கள் வீட்டின் சமையலறையிலிருந்து படுக்கை அறைக்குச் செல்லும் தொனியில் செல்வது எல்லாம் நடைப்பயிற்சியில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. வேகமாக நடப்பது என்பது வேறு, நடப்பது என்பது வேறு. ஊர்வது என்பது வேறு. எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதற்கேற்ற பலன்தான் கிடைக்கும்.  அப்படி நடப்பவர்கள், ஊரும் வேகத்தில்  ஒரு இருபது நிமிடம் நடப்பார்கள். இப்படி ஒரு வாரம் நடந்துவிட்டு, உடல் எடையைச் சோதிப்பார்கள். “ஒரு வாரம் நடந்திருக்கேன். எடை குறையவில்லை. நடந்தா எடை குறையாது போல” என நடப்பதை நிறுத்திவிடும் ஆட்களும் உண்டு.  எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். உடல் எடை கூடிவிட்டதென நடக்க ஆரம்பித்தார். முதல் நாளே என்னைப் பார்த்து அதைச் சொன்னார். அவரது நடையின் வேகத்தைக் கணித்து அவரிடம் நான் எதுவும் சொல்லவில்லை. சரியாக 2 கிமீ நடப்பார். முடிந்ததும் அமர்ந்துவிடுவார். நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். நடந்த நேரத்தை விட அரட்டையின் நேரம் கூடுதலாக இருக்கும். சரியாக ஐந்து நாட்கள் கழித்து உடல் எடையைச் சோதித்திருக்கிறார். அன்றைய தினம் அவரது விதி என்னுடன் நடக்க விதித்திருந்தது. உடல் எடை குறையவில்லை. “நடந்தாலும் என் உடம்பு குறையாதாம்” என்றார். “ஏன்?” என்றேன். “என் உடம்பில் கொழுப்பு எல்லாம் கெட்டியாய் மாறிவிட்டதாம். அது இனி குறையாதாம். நடப்பது வீணாம்” என்றார். “உங்களுக்கு இதை யார் சொன்னா?” என்று கேட்டேன். இவருடைய நண்பர், இவரை விட எடை கூடுதலான ஒருவர். அவர் இவருடன் நடக்க துணைக்கு இவர் அழைத்து வந்தவர். இவர் 2 கி மீ நடப்பவர். அவர் ஒரு கி.மீ மட்டுமே நடப்பவர். இவர் நடந்து முடிக்கும் வரை காத்திருந்து இவருடன் வீடு திரும்புபவர். இது தான் சேதி. நடக்க விருப்பம் இல்லாத ஒருவர் நடப்பவருடன் இருந்தால் இது தான் கதி. இதில் ட்விஸ்ட்டே, ‘உடம்பில் கொழுப்பு எல்லாம் கட்டியாகி விட்டது. இனி கரையாது. நடக்குறது வேஸ்ட்டு” என அள்ளிப்போட்டதுதான்.  அந்த ஐந்து நாட்களில் ஒரு நாள் கூட வியர்த்தது இல்லை என்று என்னுடன் 1.7 கிமீ நடந்து முடித்ததும் கூறியவருக்கு உடல் முழுக்க வியர்வை. நீங்க வந்தது உலா இல்லண்ணே. நடக்கனும்னா இப்படி நடங்க, இல்லாட்டி கொழுப்பு குறையாது என்றேன்.  உண்மையில், நீங்கள் நடக்க வேண்டும் அதன் மூலம் நல்ல உடல் நிலையைப் பெறவேண்டும் என்று தீர்மானித்தீர்கள் என்றால் முதலில் நீங்கள் தூக்கி எறியவேண்டியது உங்கள் பழைய டீ ஷர்ட், ஷூ, பிஞ்ச செருப்பு இவையெல்லாம் இல்லை. உங்களை நடக்க விடாமல் தடுக்கும் எதிர்மறை எண்ணங்களையும் நண்பர்களையும்தான்.  உடல் வியர்க்கும் அளவிற்கு நடக்க வேண்டும், உடலுக்கு உடல் வியர்க்கும் அளவு மாறுபடும். அறிவியல் ரீதியாகச் சொல்லவேண்டுமானால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராகும் வண்ணம், உங்கள் உடல் தசைகள் அனைத்தும் செயல்படும் விதம் நீங்கள் நடக்கலாம். வேகமாக, வேகமாக என்று நினைத்தபடி நடக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேகம் வேண்டும். சிலரது உடல் நிலையை மனதில் வைத்து அதற்கேற்றபடி உங்கள் வேகத்தை டிசைன் செய்துகொள்ளலாம்.  உடல் எடையைக் குறைக்க விரும்பி நடக்கிறீர்கள் என்றால் முதல் பத்து நாட்களில் நீங்கள் கவனிக்க வேண்டியவை.    * உங்கள் நடக்கும் தூரம் எவ்வளவு?   * உங்கள் நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு எவ்வளவு?   * உங்கள் நடக்கும் அளவில் உங்கள் உடல் அளவில் ஏற்படும் மாற்றம் என்னென்ன?   * உங்கள் நடக்கும் தூரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் காலடிகள் (ஸ்டெப்ஸ்) எவ்வளவு? இது தவிர அவரவர் தங்களது குடும்ப மருத்துவர்களிடம் ஓர் ஆலோசனை, முடிந்தால் இரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு போன்ற சோதனைகள் செய்து பார்த்தீர்கள் என்றால் அதற்கேற்றபடி வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டுமா என்றால் தேவையில்லைதான். ஆனால், ஆரோக்கியம் என்று கருத்தில் கொண்டால் அதையும் செய்து பார்ப்பதுதான் நல்லது.  இதை எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். புதிதாய் நடக்க ஆரம்பித்தவர்களுக்கு உடல் அசதியும், சோம்பேறித்தனமும், நடக்க விரும்பாத நண்பர்களின் ஏளனமும், தூக்கச் சுகமும் உங்களை நடக்க விடாமல் தடுக்க முற்படும். அவர்கள் எல்லாம் மேற்சொன்ன விசயங்களில் கவனம் செலுத்தும்பொழுது உங்களை அறியாமலேயே உங்கள் நடையில் நீங்கள் கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள்.  சரி, இதை எல்லாம் கணக்கு செய்துதான் நடக்க வேண்டுமா என்று ஏளனம் செய்வீர்கள்தானே? என்னையும் பார்த்து ஏளனம் செய்திருக்கிறார்கள்.  ஒரு விசயம் தான். முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள். நடக்க வந்தால் நடந்து காட்டுங்கள்.  வாங்க நடக்கலாம்.  கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து