யோகக் கலை ஆரோக்கியமா? ஆன்மீகமா?

யோகக் கலை ஆரோக்கியமா? ஆன்மீகமா?

இன்று சர்வதேச யோகா தினம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, மதங்கள் ஏதுமற்ற பண்டைய இந்தியாவில் தோன்றிய யோகக் கலை, உடல் ஆரோக்கியத்திற்கான கருவியாகப் பயன்பட்டு வந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட அந்தக் கலையை, பின்னாட்களில் வேத மதத்தினர் தங்களதாக்கிக்கொண்டதால், பிற மதத்தினர் அக்கலையை மதச்சார்பு கொண்டதாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் இறை மறுப்பாளர்களும்கூட தங்கள் உடல்நலம் பேண யோகப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி யோகப் பயிற்சிகள் செய்யும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்தச் சூழ்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபையால் அறிவிக்கப்பட்டு, 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய பிரதமரின் முன்னெடுப்பு இதில் உள்ளது என்பதாலேயே முற்போக்காளர்களாகக் காட்டிக்கொள்வோரின் ஏளனத்திற்கு யோகக் கலை ஆளாகியுள்ளது. இதற்கிடையே யோகக்கலை தமிழர்களின் சொத்து என்று வாதிடுவோரும் உண்டு. யோகக் கலை மதச் சார்பு கொண்டதா, குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமே  அது சொந்தமானதா, பிற மதத்தினர் யோகப் பயிற்சிகள் செய்ய மத ரீதியான தடைகள் உண்டா, யோகக் கலையின் பின்னணி என்ன போன்ற பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சென்னை புழல் அருகிலுள்ள விநாயகபுரத்தில் யோகப் பயிற்சி மையம் நடத்திவரும் யோக ரத்னா சி. முத்துசாமி. அரியலூர் மாவட்டம் இலந்தங்குழி கிராமத்தில் பிறந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காகச் சென்னைக்கு வந்த இவர், கடந்த 18 ஆண்டுகளாக சென்னையின் புறநகர்ப் பகுதியான விநாயகபுரம் VMK நகரில் M. P. யோகா மையம் என்ற யோகப் பயிற்சி மையத்தை நிறுவி யோகக்கலை பயிற்றுவித்து வருகிறார். யோகக் கலையில் முதுநிலை அறிவியல் பட்டமும் யோகா சிகிச்சை முறையில் முதுநிலைப் பட்டயமும் பெற்றுள்ளார். இவர் மட்டுமல்லாது இவரது இணையர் பொற்கொடி, மகன்கள் அருண் ராஜா, அசோக் ராஜா ஆகியோரும் யோகக் கலையை முறையாகப் பயின்று மக்களுக்கும் பயிற்றுவித்து வருகின்றனர். இனி, யோகக் கலை குறித்த நம் கேள்விகளும் யோக ரத்னா முத்துசாமி அவர்களின் பதில்களும்: யோகக் கலை எப்போது தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? யோகக் கலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பழமையான கலையாகும். பதஞ்சலி முனிவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த யோகக் கலை, தமிழகத்தில் சிறந்து விளங்கிய 18 சித்தர்களில் ஒருவரான திருமூலர் எழுதிய திருமூலம் என்ற நூல் வழியாக நாம் அறியக் கிடைக்கிறது. அஷ்டாங்க யோகம் ஆரோக்கிய வாழ்விற்குச் சிறந்ததாக பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் உள்ளது. அதையே நாங்கள் எங்கள் பயிற்சி மையத்தில் பின்பற்றி வருகிறோம். யோகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு உண்டா? யோகா மதம் சார்ந்ததா? உடலினை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்தக் கலை. முந்தைய காலங்களில் ஆன்மிகம் மற்றும் மதச்சார்புகள் இந்தக் கலையோடு இணைந்திருந்தது. நாங்கள் கற்றுக்கொண்ட காலத்திலும்கூட அது இருந்தது. ஆனால் தற்காலத்தில் அவை பெரும்பாலும் களையப்பட்டுவிட்டன. பல்கலைக்கழகங்களிலேயே யோகக் கலைக்கான படிப்புகள் வந்துவிட்டன. எங்கள் பயிற்சி மையத்தில் அத்தகைய சார்பு நிலைகள் எதுவும் கிடையாது. எந்தப் பாகுபாடுமின்றி மக்கள் அனைவரும் நலமுடன் வாழவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். யோகா கற்றுக்கொள்ள உணவுக் கட்டுப்பாடுகள் ஏதும் உண்டா? குறிப்பாக புலால் உணவுக்குத் தடை உள்ளதா? எந்தவிதமான உணவுக்கும் தடை இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிரதமும் நஞ்சு. எனவே எந்த உணவாக இருந்தாலும் அளவோடும் சரியான நேரத்துக்கும் எடுத்துக்கொள்ளும்படி மட்டுமே நாங்கள் வலியுறுத்துகிறோம். சூரிய நமஸ்காரம் போன்றவை வழிபாட்டு முறைகள்தானே? அதிகாலைப் பயிற்சி உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் என்பதால், பண்டைக் காலத்தில் சூரியன் உதிக்கும் நேரத்தை வைத்துப் பயிற்சியை உருவாக்கி இருக்கலாம். பிற்காலத்தில் சூரிய நமஸ்காரம் செய்யும்போது மந்திரங்களையும் சிலர் சேர்த்துக்கொண்டார்கள். ஆனால் எங்கள் பயிற்சி மையத்தில் மந்திரம் சொல்லித் தருவதுமில்லை. அது அவசியமும் இல்லை. 12 நிலைகளையும் எண்களில் குறிப்பிட்டு அந்தந்த நிலைக்கான பயன்களைச் சொல்லியே கற்றுத் தருகிறோம். நீங்கள் யோகா மையம் தொடங்க குறிப்பிட்ட காரணம் ஏதாவது உண்டா? ஆம். நான் லாரி ட்ராஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்துவந்தேன். மூட்டு வலி காரணமாக வண்டி மேலே ஏற முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். பல்வேறு சிகிச்சைகள் செய்தும் எதுவும் நிரந்தரத் தீர்வாக அமையவில்லை. வேலை போய்விடும் என்ற நிலையில் என் உடல்நிலை இருந்தது. அந்த நேரத்தில்தான் எனது ஆசான் முனைவர் ஆசன ஆண்டியப்பன் அவர்களின் விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்தேன். யோகாவில் மூட்டு வலி நிரந்தரமாக குணமாகும் என்று இருந்தது. தொடக்கத்தில் யோகப் பயிற்சிக்குப் போகும்போது படி ஏற முடியாமல் சிரமப்பட்ட நான், இரண்டே மாதத்தில் வலி குறைந்து உற்சாகமாக ஆகிவிட்டேன். அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. எனக்குக் கிடைத்த நிம்மதி எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் என்று எனக்குள் எழுந்த சிந்தனையின் விளைவுதான் இந்த மையம். எத்தனை ஆண்டுகளாக யோகா செய்கிறீர்கள்? இந்த மையத்தை எப்போது தொடங்கினீர்கள்? 2000-ஆவது ஆண்டில் யோகா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் யோகக்கலையில் டிப்ளமோ முடித்தேன். அதைத் தொடர்ந்து நானும் என் மனைவியும் பட்டப் படிப்பை முடித்து 2005இல் மையம் தொடங்கினோம். எங்கள் மகன்களும் எங்களோடு இணைந்துகொண்டார்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இதில் ஆர்வம் வந்தது எப்படி? நான் மூட்டு வலியில் கஷ்டப்பட்டதையும் யோகா கற்றுக்கொண்டு அதைத் தொடர்ந்து பின்பற்றும்போது நான் சரியாகி ஆரோக்கியமாக இருப்பதையும் பார்த்து, அவர்களும் ஆர்வத்தோடு இணைந்து கற்றுக்கொண்டார்கள். எந்த ஒரு நடைமுறையைத் தொடங்கினாலும் ஏதாவது ஒரு தடங்கல் வரும். உங்களுக்கு ஏதேனும் தடங்கல் வந்ததா? எங்களுக்கு அதைப்போல எந்தத் தடையும் வரவில்லை. மக்கள் ஆர்வத்தோடுதான் வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் அழைத்து வருகிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. உங்கள் பயிற்சி அனுபவத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஏதாவது? நிறைய உள்ளது. 2007இல் ஒரு ஆசிரியை மெனோபாஸ் பிரச்சனையால் அதிகமான உதிரப்போக்கின் காரணமாக வகுப்பில் நின்று பாடம் எடுக்க முடியாத நிலையில் பயிற்சிக்கு வந்தார். முறையாகப் பயிற்சி செய்யத் தொடங்கிய நான்கு ஐந்து மாதங்களில் பிரச்சினை நீங்கியது. ‘நீங்கதான் என் தெய்வம்’ என்று அவர் நெகிழ்ச்சியாகச் சொன்னபோதுதான் நான் யோகா பயிற்றுவித்ததின் முழுமையை நானே உணர்ந்தேன். அடுத்து, தைராய்டு பிரச்சினை காரணமாக உடல் பருமனால் அவதிப்பட்ட ஒரு இளம்பெண் பயிற்சியில் சேர்ந்தார். தொடர் பயிற்சிக்குப் பிறகு தைராய்டு பிரச்சினை நீங்கி திருமணமும் முடிந்தது. சாதாரண பிரசவத்தில் குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையிலிருந்து அவர் அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதும் மறக்க முடியாதது. உங்களின் இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் ஆரோக்கியத்தைத் தேடி ஆண்கள் அதிகம் வருகிறார்களா அல்லது பெண்கள் அதிகம் வருகிறார்களா? தொடர்ச்சியான வருகையில் யார் அதிகம்? இங்கே பெண்கள்தான் அதிகளவில் வருகிறார்கள். தொடர்ந்து வருவதும் அவர்கள்தான். வெளியிடங்களில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளீர்களா? ஆரம்பத்தில் அப்படிக் கலந்துகொண்டோம். ஆனால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. எங்கள் நிறைவு பிறர் எங்களால் நன்மை அடையும்போதுதான் என்று புரிந்துகொண்டு போட்டிகளில் கலந்துகொள்வதை நிறுத்திக்கொண்டோம். அதேபோல எங்களின் இரண்டு மகன்களும் கல்வி பயின்ற பள்ளிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற தூண்டுதல் எங்களுக்கு உருவானது. எனவே நாங்கள் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு ஓராண்டுக்கு இலவசமாக யோகா பயிற்சி வழங்கியுள்ளோம். யோகா முறைகளில் ஏதேனும் புதுமைகள் புகுத்தியிருக்கிறீர்களா? அல்லது பாரம்பரிய முறையிலேயே தொடர்கிறீர்களா? பயிற்சிகளில் நாங்கள் ஆராய்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். முன்பு இருந்ததோடு சேர்த்து அவரவர் உடல்நிலைக்குத் தகுந்த பயிற்சிகள் வழங்குகிறோம். எங்களுடைய அனுபவங்களோடு வேறு பல யோகா சார்ந்த தரவுகளின் உதவியுடன் யோகா எனும் அற்புத சக்தி என்ற புத்தகத்தைக் கடந்த ஆண்டில் வெளியிட்டுள்ளோம். யோகா செய்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் உண்டாகுமா? பயிற்சியைப் பாதியில் நிறுத்திவிட்டால் பக்கவிளைவுகள் ஏதேனும் வருமா? அதைப்போல எந்தவிதமான பக்கவிளைவுகளும் யோகாவில் கிடையாது. தொடர்ந்து யோகா செய்ய முடியாதவர்களுக்கு ஏதேனும் எளிய வழிமுறைகள் உண்டா? தொடர்ந்து மூச்சுப் பயிற்சி மட்டுமாவது மூன்று வேளையும் செய்து வந்தாலே ஓரளவு ஆரோக்கியமாக இருக்கலாம். உங்களுடைய பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து சுருக்கமாக.. எங்களுக்குப் பணம் நோக்கமில்லை. வசதியற்ற சிலருக்கு நாங்கள் கட்டணம் இல்லாமலும் கற்றுத் தந்திருக்கிறோம். பல அரசுப் பள்ளிகளிலும் கட்டனமில்லா வகுப்புகள் எடுத்திருக்கிறோம். ‘ஒரு தெருவில் குறைந்தது நான்கு யோகா பயிற்சி மையங்கள் வரவேண்டும். அப்போதுதான் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்’ என்று எங்கள் ஆசான் சொல்வார். அதேபோல ஒருநாள் கூட விடுமுறை விடக்கூடாது என்றும் சொல்வார். அதை இன்றுவரை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். எங்கள் மூச்சு நிற்கும்போதுதான் இங்கே வகுப்புகள் நிற்கும். உடல் ஆரோக்கியத்துடன் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுதற்கும் வளரும் பிள்ளைகளிடம் வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டுவரும் முயற்சியிலும் இங்கே வரும் மாணவர்களுக்கு அவர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது புத்தகங்கள் பரிசளிக்கிறோம். இளம் பேச்சாளர்களுக்கான மேடையாக திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கதின் 31ஆவது கிளையைத் தொடங்கியுள்ளோம். அதன் மூலம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை அவர்களுக்கே அறிமுகம் செய்கிறோம். உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள்? வலிகளைச் சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்காமல் வாழும் வழிகளைச் சொல்லி நெறிப்படுத்துவது, எண்ணிக்கையைப் பார்க்காமல் எண்ணங்களால் மேம்பட்டவர்களோடு இணைந்து பயணிப்பது, தேகநலன் காத்தலில் உள்ளடங்கியதே சமூகநலன் என்பதை உணர்த்திக்கொண்டே இருப்பது ஆகியவற்றோடு ஆரோக்கியமாக இருப்பவனே உலகின் மிகப்பெரிய பணக்காரன் என்பதை உர(ரை)க்கச் சொல்வதும்.

கம்பெனி டைரக்டரா? டிரில் மாஸ்டரா?

கம்பெனி டைரக்டரா? டிரில் மாஸ்டரா?

நடக்கலாம் வாங்க – பகுதி 5 ஒருவர் நடக்க ஆரம்பிக்கும்பொழுது நிறைய சுவாரஸ்யங்களை அடுக்கிக்கொண்டே போனால், அவர்களது கண்களுக்கு நாம் மை டியர் மார்த்தாண்டன் ஐடியா மணி, கவுண்டமணி போல் தெரிவோம். இங்கு சில பிரச்சினைகள் உள்ளன. அது போல் சில புரிதல்களும் தேவைப்படுகின்றன.  ஒரு பிரச்சினை குறித்து ஒரு அனுபவசாலியிடம் போய்க் கேட்கும்பொழுது, அவர் தன் அனுபவத்தின் வாயிலாகப் பாடம் நடத்துவார். அது பிரச்சினையோடு இருப்பவனுக்கு எட்டாத தூரம் ஆகிவிடும். அவரிடம் கேட்டதன் நோக்கம் என்ன? பிரச்சினை தீரவேண்டும் என்பதுதான். அப்படியென்றால் பிரச்சினை இருப்பவரின் பார்வையில் இருந்து பார்க்கவேண்டும்.  புதிதாக நடக்க இருப்பவர்களுக்கு எங்கெல்லாம் அலுப்பு ஏற்படலாம்? அதை எப்படிக் களையலாம்? என்று விவாதிப்பதே சுவாரஸ்யங்களை ஏற்படுத்த முதல் படி. காலையில் எழுவது சிலருக்கு முடியாத காரியமாக இருக்கலாம்.  உழைப்பாளி படத்தில் ரஜினி, “எனக்கு என் ட்ரஸ் வேணும்” என்று கடைக்காரரை பாடாய்ப் படுத்துவார். அதுபோல், காலையில் வேகமாக எழும்பினால்தான் நடப்பேன். இல்லாவிட்டால் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா” என்று கன்னம் தெறிக்க பக்கோடா சாப்பிடும் மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். நடப்பது என்று முடிவாகிவிட்டால் காலை, மாலை, மதியம், இரவு என்று எந்த நேரத்திலும் நடக்கலாம்.  எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் இருக்கிறார். இரவு நோயாளிகளைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப்போக இரவு 12 ஆகிறதாம். காலை எழ எட்டு ஆகிறதாம். ஒன்பது மணிக்கு மறுபடியும் நோயாளிகளைப் பார்க்க வருகிறார். கையில் ஸ்மார்ட் வாட்ச்சை அவரது மருமகள் கட்டிவிட்டிருக்கிறார். ஸ்டெப்ஸ் கவனிக்க ஆரம்பித்த பிறகு, அவர் சொல்கிறார், ” பழனிக்குமார், நடக்குறதுக்குனு எனக்கு தனி டைம் இல்ல. ஸோ, நோயாளிகளைப் பார்க்குற நேரத்துல நான் உட்காருறதே இல்ல. தூரமா நோயாளிகளை உட்காரவச்சுட்டு நானே போய்ப் பாக்குறேன். எனக்கு அது வசதியா இருக்கு. மதியம் 2 மணிக்குள்ள 2000 ஸ்டெப்ஸை முடிச்சிடறேன்” என்றார்.  எனக்குத் தெரிந்த ஒரு பிசினஸ் மேன் இருக்கிறார். காலை ஏழு மணிக்கெல்லாம் கல்லாவில் உட்கார்ந்துவிடுவார். மதியம் மூன்று மணிக்கு, கடையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து வருகிறார். வண்டி இல்லாமல் இல்லை, நடப்பதற்காக. 15000 ஸ்டெப்ஸ் எட்டவில்லை என்று இரவு பதினோரு மணிக்கு தோழர் கிருத்திகா தரன் இலக்கை எட்டும் நோக்கில்  நடந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார். “மனசு இருந்தால் மார்க்கபந்து” என்று சொல்லிச் சென்றிருக்கிறார் தோழர் க்ரேஸி மோகனார்.  * கூட நடப்பவர் வேகமாக/ மெதுவாக நடக்கிறார். இது ஒரு தனிப் பிரச்சினை. குழுவாய் சேர்ந்து நடக்க ஆரம்பிப்பார்கள். அது ஒருவகையில் புது வகையான ஊக்கத்தைத் தரலாம். ஆனால், சமயத்தில் அதுவே கூட்டத்தில் ஒருவருக்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். ‘நம்மால் வேகமாக நடக்க முடியவில்லை, நம்மால் இவர்களது வேகம் தடைபடுகிறதே, நம்மால் அவர்களுக்கு இவ்வளவு சுமை வேண்டுமா?’ என்று விக்கிரமன் படத்து ஹீரோ போல் ஏகப்பட்ட சென்டிமெண்ட் மூளைகளை வைத்துக்கொண்டு இருப்பதால் இப்படிலாம் யோசிப்பார்கள். நடைப் பயிற்சியில் ஒத்த சிந்தனையோடு நடக்கக்கூட ஆள் கிடைப்பார்கள், ஒத்த வேகத்தில் நடக்கும் ஆள் கிடைக்கமாட்டார்கள்.  எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. வெளிநாட்டுக்காரன் சேர்ந்தே இருந்தா உருப்புடுவான். ஆனா பாரு டூர் ங்குற பேர்ல தனித்தனியா சுத்துவான். இந்தியாக்காரன் தனியா இருந்தாத்தான் உருப்புடுவான். ஆனா பாரு, உச்சா போகக் கூட ஆள் கூப்ட்டு திரியுறான்” என்பார்கள். அது தான் உண்மை. நடக்க ஆசைப்படுபவர்கள் உடன் நடந்து வருபவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாவிட்டால் உங்கள் பயிற்சியை நிறுத்த முயலாதீர்கள். அவரவர்களின் வேகம், அவர்வர்களின் உடல் நிலையைப் பொறுத்தது. நீங்கள் உங்கள் உடல்நிலைக்கேற்றபடி வேகத்தை நிகழ்த்தலாம்.  * நடப்பதற்குத் தோதான இடம் இல்லை சின்னக் குழந்தைகளை முதல் நாள் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச்செல்லும் சில காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவர்களில் தர தரவென்று குழந்தைகளை இழுத்துச்செல்லும் பெற்றோர்களும் உண்டு. அப்படி மனதை நீங்கள் தயார்படுத்தி இழுத்துச்சென்றால் ஒழிய, இப்படி யோசிப்பவர்களால் நடக்க இயலாது.  ஒரு விசயம் தானாய் நடக்காது. நடத்தித்தான் ஆக வேண்டும் என்று எங்கள் துறையில் சொல்வார்கள். அதைத்தான் நடப்பதற்கும் சொல்கிறேன்.  இவை எல்லாம் பொதுப்புத்தியில் உள்ளுக்குள் இருக்கும் தடைகளாகச் சொல்கிறேன். இவற்றிலிருந்து வெளியே வந்தால்தான் நடப்பதில் சுவாரஸ்யங்களைக் கூட்டமுடியும். ‘முதலில் படுக்கையிலிருந்து வெளியே வா நண்பா, பிறகு நடக்க பாதை பிறக்கும்’ என்பது தான் ஸ்கெட்ச்சே. இப்பொழுது ஒரு வகையில் நடக்க சாலைக்கு வந்துவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இனி சுவாரஸ்யங்களை நீங்களே ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.  என்னுடைய அனுபவத்திலிருந்து அதைத் தொடர்கிறேன்.  11 வருடங்களுக்கு முன் என் கம்பெனியின் இயக்குனரிடம் முக்கியமான விசயங்கள் பேச அனுமதி கேட்டால், வேலை நேரத்தில் தொந்தரவு வேண்டாம் என்று காலையில் அவர் நடைப்பயிற்சி நேரத்தில் அழைப்பார். அவர் நடப்பார்.பல ஆண்டுகளாக வாக்கிங் செல்பவரின் வேகத்திற்கு என்னால் நடக்க முடியாது. கிட்டத்தட்ட அவருடன் நான் ஓடியிருக்கிறேன்.   “என்னங்க, நடக்க முடியலையா உங்க வயசுக்கு?” என்பார். ‘என்னடா, இந்த மனுஷன் இப்படி நடக்குறாரு!’ என்று வியந்திருக்கிறேன் . நான் ஆலோசனை செய்யப்போகும் விசயத்தைவிட அவருடன் ஓடுவதே எனக்குப் பெரும் சாதனையாய் இருந்தது. காலையில் மீட்டிங் என்ற பெயரில் டிஷ்கஷனா? இல்லை உடற்பயிற்சி ஆசிரியரின் ட்ரில்லா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் நான் நடைப் பயிற்சி செய்ய ஆசைப்பட்டபோது அதே இடத்தில் நடக்கச்செல்ல மனதில் ஒரு சங்கடம். ‘என் கூட நடக்க வா’ என்று அவர் அழைத்துவிட்டால், எப்படி அவர் வேகத்திற்கு ஈடுகொடுப்பது? என்று. அதற்காக சுவாரஸ்யமான ஒன்றைச் செய்தேன்.  சுவாரஸ்யங்களுக்காகக் காத்திருங்கள். இவை என் நடைக்குறிப்புகள். கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து

நடக்கலாம் வாங்க

நடக்கலாம் வாங்க

ஏன் நடக்க வேண்டும்? க்ளப் ஹவுஸ் செயலியின் ‘உணவும் உள்ளமும்’ ஹவுசில் கொரோனா தொற்று சமயத்தில் நோய்த்தொற்று சம்பந்தமாக சில சாமான்யர்கள் மருத்துவர்களிடம் நேரடியாக சந்தேகங்களைக் கேட்டனர். பிறகு தடுப்பூசி பற்றி கேட்டனர். நாளடைவில் உடல்நிலை சம்பந்தமாகவும் ஆரோக்கியமாகவும் பேச குழு உறுப்பினர்கள் சேர்ந்தனர். இதில் பலர் ‘நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது’ என்றும், சிலர் ‘நடைப்பயிற்சியை முறையாகத் தொடர முடியவில்லை’ என்றும் சிலர் ‘நடப்பதற்கு முன் என்ன செய்யவேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார்கள். இவற்றை எல்லாம் முன்வைத்து, எப்பொழுது எனக்கு வாக்கிங் போகும் பழக்கம் வந்தது என்பதை ஞாபகப்படுத்தவே ஐந்து ஆறு வருடங்களுக்கு முன் யோசிக்க வேண்டியதாயிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நடைப்பயிற்சி என்பது ஒரு கட்டத்தில் போதையாயிருந்தது. நடப்பது என்பது போதையாகவே தொடரவும் செய்கிறது. “உனக்கு மோசமான மன நிலை இருந்தால் ஒரு முறை நடந்து செல். இன்னும் மோசமான மனநிலை தொடர்கிறதா மறுபடியும் நடந்து கொண்டே இரு” என்பது ஹிப்போக்ரேட்ஸ் சொன்ன ஞாபகம். நான் வாக்கிங் செல்ல ஆரம்பித்த நான் எதிர்கொண்ட சவால்கள் என்று சில இருந்தன. அவை பொத்தாம் பொதுவாய் பலருக்கும் இருந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் நடைப்பயிற்சியைத் தொடரும்பொழுது ஏற்படும் அல்லது உணரும் உணர்வுகளையும் பல இடங்களில் எழுதியிருக்கிறேன். அவற்றை ஒரு சேர மறுபடியும் எழுதிப்பார்க்க ஆசை. பொதுவாய் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் தங்களுக்கு நேரும் தடைகள் எனப் பட்டியலிடுபவை: என்னால் தினமும் எழ முடியவில்லை. என்னால் தினமும் நடக்க முடியவில்லை. அலுவலகத்திற்குக் கிளம்பவேண்டிய நேரம். அதனால் வாக்கிங் செல்ல நேரம் இல்லை. ஒரு நாள் நடந்தபின் அடுத்த நாள் கால் வலி. எழவே முடியவில்லை. எவ்வளவு தூரம் நடந்தாலும் உடல் எடை குறையவில்லை. பிறகு எதற்கு நடக்கவேண்டும்? அலுவலகத்தில் ஒரு இருக்கைக்கும் இன்னொரு இருக்கைக்கும் நடந்தே போகிறேன். (பிறகு ஹெலிகாப்டரிலா போவாங்க என்ற மைண்ட் வாய்சை கவுண்டமணி குரலில் படிக்கவும்) அலுவலகத்தில் ஃபோன் வந்தால் நடந்துகொண்டே பேசுவேன். இது தவிர எதற்காகத் தனியாக நடக்கவேண்டும்? என்ற எண்ணம். உலகில் நடப்பவர்கள் எல்லாம் சுகர் வந்தவர்கள் அல்லது ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் என்ற பார்வை. காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள். அவர்களுக்கு வேலை இல்லை. வேலை செய்வதற்கு ஆட்கள் இருப்பார்கள், இப்படியான கண்ணோட்டம். எனக்கு சுகர் இன்னும் வரவில்லை. நன்றாக இருக்கிறேன். எனக்கு டாக்டரிடம் போவதற்கு எந்த அவசியமும் இல்லை என்ற மனநிலை. என்னை வாக்கிங் போகச்சொல்லி எந்த மருத்துவரும் சொல்லவில்லை. பிறகு எதற்காகப் போகவேண்டும்? என்ற கேள்வி. ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் இருக்க இத்தனைக் காரணங்கள் இருக்கலாம். இதை விடக் கூடுதலாகவும் இருக்கலாம். ஜனவரி ஒன்றாம் தேதி பார்த்தால் புது வருட சபதம் எடுத்து நடக்க வருபவர்கள் வருவார்கள். மூன்றே நாளில் பாதி பேர் காணாமல் போவார்கள். மீதிக் கூட்டமும் பொங்கல் விடுமுறையில் காணாமல் போவார்கள். எங்கள் வாக்கர்ஸ் க்ளப்பில் ஜனவரி 1ம் தேதி இந்தச் சபத க்ரூப்களைத் தனியாக அடையாளம் காணுவோம். முதல் நாளே ஐந்து கி.மீ. பத்து கி.மீ. என நடந்து உடல் எடையைக் குறைத்துவிடுவோம் என்ற வெறியுடன் நடப்பார்கள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் பூமியை நிறுத்தி பிறகு எதிர்திசையில் சுற்றிவிடும் வெறி இருக்கும் அவர்களிடம். ஆனால் அவர்கள் தலை கீழாக நின்றாலும் வெறுமனே நடப்பதன் மூலமாக மட்டும் உடல் எடையைக் குறைக்கமுடியாது என்பது அவர்களுக்கு தாமதமாகத்தான் புரியும். இந்த யோசனைகள் எல்லாவற்றையும் தாண்டி, ‘ஏன் ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்? நடப்பதனால் ஆய பயன் என்ன?’ என்று பலர் கூகுளாண்டவரைத் துழாவி பார்த்திருப்பார்கள். அது போக, க்ளப் ஹவுஸ் போன்ற சமூக வலைதளங்களில் வெல்னெஸ் கோச், டாக்டர்கள் என எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்தும் நல்ல அறிவியல் பூர்வமான விசயங்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். எனக்கும் உங்களுக்கும் தெரிந்ததுதான் மறுபடியும் மீள் பார்வையாக இங்கே. *நடப்பதனால் உங்களுக்கு உடல் எடை குறைய சில வாய்ப்புகள் உண்டு. ஆனால் முறையான பயிற்சியில் நீங்கள் உங்கள் எடை கூடுவதைத் தவிர்க்க நடக்கலாம். *தூக்கமின்மைக்குச் சில மருத்துவர்கள் நடக்கப் பரிந்துரை செய்கிறார்கள். உடனே ‘நடந்தால் தூக்கம் வருமா?’ என்று நீங்கள் வாங்கும் மிக்ஸி க்ரைண்டருக்கு கேரண்டி, வாரண்டி கார்ட் கேட்பது போலக் கேட்கக்கூடாது. உடல் தசைகள் முறையான இரத்தம் ஓட்டம் பெறும்பொழுது, மூளையும் முறையான இரத்த ஓட்டம் பெற்று தசைகள் சுருங்கி விரிந்து உங்களது உடல் ஓர் இறுக்கமற்ற சூழலை உணரும். அது பல வகைகளில் உங்களுக்கு உதவலாம். இரவு படுத்தால் அயர்ச்சியின் காரணமாகச் சிலர் உடனே உறங்கிவிடுவார்கள். அப்படியான அயர்ச்சியை நீங்கள் நடந்தே பெற்றுக்கொள்ளலாம். *காலையில் நடப்பது, சுத்தமான காற்றை சுவாசிப்பது போன்ற காரணங்கள் தவிர்த்து, PRE OCCUPIED மன நிலையில் இருப்பவர்கள், தொடர் வேலை அழுத்தங்கள் இருப்பவர்கள், காலை எழுந்தால் ஏகப்பட்ட வேலைகள், எந்த வேலையை முதலில் செய்வது? என்று குழம்புவோர் இப்படியானவர்கள் அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு இருக்கும் அழுத்தச் சூழலிலிருந்து விடுபட வாய்ப்பு இருக்கிறது. தங்களின் வேலைகளை அதனதன் முக்கியத்துவம் கருதி நிரல்படுத்தி (PRIORITY) எதை முதலில் முடிக்கலாம் என்ற முடிவு எட்டுவது எளிதாக இருக்கலாம். நிதானமான முடிவுகளை எட்டுவதற்கு மூளை பழக்கப்படலாம். எனக்குத் தெரிந்த சில தொழில் முனைவர்கள் பல முக்கியமான முடிவுகளை எடுக்க யோசிப்பதற்காகவே காலையில் வாக்கிங் வருகிறார்கள். *உடல் தசைகளுக்கு முறையான இரத்தம் ஓட்டம் செல்லும்பொழுது அன்றைய நாள் முழுதும் புத்துணர்வோடு உடல் இயங்கவும் வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து அதிகாலை எழுவது பழக்கம் ஆவதால் மூளையும் புத்துணர்வு பெறுவதை காலப்போக்கில் உணரலாம். நண்பர்களில் சிலர் ஏன் நடக்கவில்லை என்பதற்கான காரணங்களும், நடப்பதனால் ஏற்படும் பயன்களில் சிலவற்றையும் பார்த்தோம். ‘ஒருவர் உடல் எடையைக் குறைக்க கண்டிப்பாக நடக்கவேண்டுமா? அல்லது நடந்தால் உடல் எடை குறையுமா?’ என்பது போன்ற கேள்விகளை என் நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு. ஒரு கட்டுரையாக எழுத எத்தனித்த இந்த விசயம், சற்றே நீளலாம். இந்தகே கட்டுரையைப் படித்தவர்கள், தங்களது நடைப்பயிற்சி பற்றிய அனுபவங்களையோ யோசனைகளையோ சொன்னால் கம்பெனி அப்படி அப்படியே ஏற்றுக்கொள்ளும் என்று நடை பணிந்து சொல்லிக்கொள்கிறேன். தொடர்ந்து ‘நடைக் குறிப்புகளோடு’ நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை படங்கள்: இணையத்திலிருந்து