யோகக் கலை ஆரோக்கியமா? ஆன்மீகமா?
இன்று சர்வதேச யோகா தினம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, மதங்கள் ஏதுமற்ற பண்டைய இந்தியாவில் தோன்றிய யோகக் கலை, உடல் ஆரோக்கியத்திற்கான கருவியாகப் பயன்பட்டு வந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட அந்தக் கலையை, பின்னாட்களில் வேத மதத்தினர் தங்களதாக்கிக்கொண்டதால், பிற மதத்தினர் அக்கலையை மதச்சார்பு கொண்டதாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் இறை மறுப்பாளர்களும்கூட தங்கள் உடல்நலம் பேண யோகப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி யோகப் பயிற்சிகள் செய்யும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்தச் சூழ்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபையால் அறிவிக்கப்பட்டு, 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய பிரதமரின் முன்னெடுப்பு இதில் உள்ளது என்பதாலேயே முற்போக்காளர்களாகக் காட்டிக்கொள்வோரின் ஏளனத்திற்கு யோகக் கலை ஆளாகியுள்ளது. இதற்கிடையே யோகக்கலை தமிழர்களின் சொத்து என்று வாதிடுவோரும் உண்டு. யோகக் கலை மதச் சார்பு கொண்டதா, குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமே அது சொந்தமானதா, பிற மதத்தினர் யோகப் பயிற்சிகள் செய்ய மத ரீதியான தடைகள் உண்டா, யோகக் கலையின் பின்னணி என்ன போன்ற பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சென்னை புழல் அருகிலுள்ள விநாயகபுரத்தில் யோகப் பயிற்சி மையம் நடத்திவரும் யோக ரத்னா சி. முத்துசாமி. அரியலூர் மாவட்டம் இலந்தங்குழி கிராமத்தில் பிறந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காகச் சென்னைக்கு வந்த இவர், கடந்த 18 ஆண்டுகளாக சென்னையின் புறநகர்ப் பகுதியான விநாயகபுரம் VMK நகரில் M. P. யோகா மையம் என்ற யோகப் பயிற்சி மையத்தை நிறுவி யோகக்கலை பயிற்றுவித்து வருகிறார். யோகக் கலையில் முதுநிலை அறிவியல் பட்டமும் யோகா சிகிச்சை முறையில் முதுநிலைப் பட்டயமும் பெற்றுள்ளார். இவர் மட்டுமல்லாது இவரது இணையர் பொற்கொடி, மகன்கள் அருண் ராஜா, அசோக் ராஜா ஆகியோரும் யோகக் கலையை முறையாகப் பயின்று மக்களுக்கும் பயிற்றுவித்து வருகின்றனர். இனி, யோகக் கலை குறித்த நம் கேள்விகளும் யோக ரத்னா முத்துசாமி அவர்களின் பதில்களும்: யோகக் கலை எப்போது தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? யோகக் கலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பழமையான கலையாகும். பதஞ்சலி முனிவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த யோகக் கலை, தமிழகத்தில் சிறந்து விளங்கிய 18 சித்தர்களில் ஒருவரான திருமூலர் எழுதிய திருமூலம் என்ற நூல் வழியாக நாம் அறியக் கிடைக்கிறது. அஷ்டாங்க யோகம் ஆரோக்கிய வாழ்விற்குச் சிறந்ததாக பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் உள்ளது. அதையே நாங்கள் எங்கள் பயிற்சி மையத்தில் பின்பற்றி வருகிறோம். யோகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு உண்டா? யோகா மதம் சார்ந்ததா? உடலினை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்தக் கலை. முந்தைய காலங்களில் ஆன்மிகம் மற்றும் மதச்சார்புகள் இந்தக் கலையோடு இணைந்திருந்தது. நாங்கள் கற்றுக்கொண்ட காலத்திலும்கூட அது இருந்தது. ஆனால் தற்காலத்தில் அவை பெரும்பாலும் களையப்பட்டுவிட்டன. பல்கலைக்கழகங்களிலேயே யோகக் கலைக்கான படிப்புகள் வந்துவிட்டன. எங்கள் பயிற்சி மையத்தில் அத்தகைய சார்பு நிலைகள் எதுவும் கிடையாது. எந்தப் பாகுபாடுமின்றி மக்கள் அனைவரும் நலமுடன் வாழவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். யோகா கற்றுக்கொள்ள உணவுக் கட்டுப்பாடுகள் ஏதும் உண்டா? குறிப்பாக புலால் உணவுக்குத் தடை உள்ளதா? எந்தவிதமான உணவுக்கும் தடை இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிரதமும் நஞ்சு. எனவே எந்த உணவாக இருந்தாலும் அளவோடும் சரியான நேரத்துக்கும் எடுத்துக்கொள்ளும்படி மட்டுமே நாங்கள் வலியுறுத்துகிறோம். சூரிய நமஸ்காரம் போன்றவை வழிபாட்டு முறைகள்தானே? அதிகாலைப் பயிற்சி உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் என்பதால், பண்டைக் காலத்தில் சூரியன் உதிக்கும் நேரத்தை வைத்துப் பயிற்சியை உருவாக்கி இருக்கலாம். பிற்காலத்தில் சூரிய நமஸ்காரம் செய்யும்போது மந்திரங்களையும் சிலர் சேர்த்துக்கொண்டார்கள். ஆனால் எங்கள் பயிற்சி மையத்தில் மந்திரம் சொல்லித் தருவதுமில்லை. அது அவசியமும் இல்லை. 12 நிலைகளையும் எண்களில் குறிப்பிட்டு அந்தந்த நிலைக்கான பயன்களைச் சொல்லியே கற்றுத் தருகிறோம். நீங்கள் யோகா மையம் தொடங்க குறிப்பிட்ட காரணம் ஏதாவது உண்டா? ஆம். நான் லாரி ட்ராஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்துவந்தேன். மூட்டு வலி காரணமாக வண்டி மேலே ஏற முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். பல்வேறு சிகிச்சைகள் செய்தும் எதுவும் நிரந்தரத் தீர்வாக அமையவில்லை. வேலை போய்விடும் என்ற நிலையில் என் உடல்நிலை இருந்தது. அந்த நேரத்தில்தான் எனது ஆசான் முனைவர் ஆசன ஆண்டியப்பன் அவர்களின் விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்தேன். யோகாவில் மூட்டு வலி நிரந்தரமாக குணமாகும் என்று இருந்தது. தொடக்கத்தில் யோகப் பயிற்சிக்குப் போகும்போது படி ஏற முடியாமல் சிரமப்பட்ட நான், இரண்டே மாதத்தில் வலி குறைந்து உற்சாகமாக ஆகிவிட்டேன். அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. எனக்குக் கிடைத்த நிம்மதி எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் என்று எனக்குள் எழுந்த சிந்தனையின் விளைவுதான் இந்த மையம். எத்தனை ஆண்டுகளாக யோகா செய்கிறீர்கள்? இந்த மையத்தை எப்போது தொடங்கினீர்கள்? 2000-ஆவது ஆண்டில் யோகா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் யோகக்கலையில் டிப்ளமோ முடித்தேன். அதைத் தொடர்ந்து நானும் என் மனைவியும் பட்டப் படிப்பை முடித்து 2005இல் மையம் தொடங்கினோம். எங்கள் மகன்களும் எங்களோடு இணைந்துகொண்டார்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இதில் ஆர்வம் வந்தது எப்படி? நான் மூட்டு வலியில் கஷ்டப்பட்டதையும் யோகா கற்றுக்கொண்டு அதைத் தொடர்ந்து பின்பற்றும்போது நான் சரியாகி ஆரோக்கியமாக இருப்பதையும் பார்த்து, அவர்களும் ஆர்வத்தோடு இணைந்து கற்றுக்கொண்டார்கள். எந்த ஒரு நடைமுறையைத் தொடங்கினாலும் ஏதாவது ஒரு தடங்கல் வரும். உங்களுக்கு ஏதேனும் தடங்கல் வந்ததா? எங்களுக்கு அதைப்போல எந்தத் தடையும் வரவில்லை. மக்கள் ஆர்வத்தோடுதான் வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் அழைத்து வருகிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. உங்கள் பயிற்சி அனுபவத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஏதாவது? நிறைய உள்ளது. 2007இல் ஒரு ஆசிரியை மெனோபாஸ் பிரச்சனையால் அதிகமான உதிரப்போக்கின் காரணமாக வகுப்பில் நின்று பாடம் எடுக்க முடியாத நிலையில் பயிற்சிக்கு வந்தார். முறையாகப் பயிற்சி செய்யத் தொடங்கிய நான்கு ஐந்து மாதங்களில் பிரச்சினை நீங்கியது. ‘நீங்கதான் என் தெய்வம்’ என்று அவர் நெகிழ்ச்சியாகச் சொன்னபோதுதான் நான் யோகா பயிற்றுவித்ததின் முழுமையை நானே உணர்ந்தேன். அடுத்து, தைராய்டு பிரச்சினை காரணமாக உடல் பருமனால் அவதிப்பட்ட ஒரு இளம்பெண் பயிற்சியில் சேர்ந்தார். தொடர் பயிற்சிக்குப் பிறகு தைராய்டு பிரச்சினை நீங்கி திருமணமும் முடிந்தது. சாதாரண பிரசவத்தில் குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையிலிருந்து அவர் அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதும் மறக்க முடியாதது. உங்களின் இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் ஆரோக்கியத்தைத் தேடி ஆண்கள் அதிகம் வருகிறார்களா அல்லது பெண்கள் அதிகம் வருகிறார்களா? தொடர்ச்சியான வருகையில் யார் அதிகம்? இங்கே பெண்கள்தான் அதிகளவில் வருகிறார்கள். தொடர்ந்து வருவதும் அவர்கள்தான். வெளியிடங்களில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளீர்களா? ஆரம்பத்தில் அப்படிக் கலந்துகொண்டோம். ஆனால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. எங்கள் நிறைவு பிறர் எங்களால் நன்மை அடையும்போதுதான் என்று புரிந்துகொண்டு போட்டிகளில் கலந்துகொள்வதை நிறுத்திக்கொண்டோம். அதேபோல எங்களின் இரண்டு மகன்களும் கல்வி பயின்ற பள்ளிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற தூண்டுதல் எங்களுக்கு உருவானது. எனவே நாங்கள் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு ஓராண்டுக்கு இலவசமாக யோகா பயிற்சி வழங்கியுள்ளோம். யோகா முறைகளில் ஏதேனும் புதுமைகள் புகுத்தியிருக்கிறீர்களா? அல்லது பாரம்பரிய முறையிலேயே தொடர்கிறீர்களா? பயிற்சிகளில் நாங்கள் ஆராய்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். முன்பு இருந்ததோடு சேர்த்து அவரவர் உடல்நிலைக்குத் தகுந்த பயிற்சிகள் வழங்குகிறோம். எங்களுடைய அனுபவங்களோடு வேறு பல யோகா சார்ந்த தரவுகளின் உதவியுடன் யோகா எனும் அற்புத சக்தி என்ற புத்தகத்தைக் கடந்த ஆண்டில் வெளியிட்டுள்ளோம். யோகா செய்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் உண்டாகுமா? பயிற்சியைப் பாதியில் நிறுத்திவிட்டால் பக்கவிளைவுகள் ஏதேனும் வருமா? அதைப்போல எந்தவிதமான பக்கவிளைவுகளும் யோகாவில் கிடையாது. தொடர்ந்து யோகா செய்ய முடியாதவர்களுக்கு ஏதேனும் எளிய வழிமுறைகள் உண்டா? தொடர்ந்து மூச்சுப் பயிற்சி மட்டுமாவது மூன்று வேளையும் செய்து வந்தாலே ஓரளவு ஆரோக்கியமாக இருக்கலாம். உங்களுடைய பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து சுருக்கமாக.. எங்களுக்குப் பணம் நோக்கமில்லை. வசதியற்ற சிலருக்கு நாங்கள் கட்டணம் இல்லாமலும் கற்றுத் தந்திருக்கிறோம். பல அரசுப் பள்ளிகளிலும் கட்டனமில்லா வகுப்புகள் எடுத்திருக்கிறோம். ‘ஒரு தெருவில் குறைந்தது நான்கு யோகா பயிற்சி மையங்கள் வரவேண்டும். அப்போதுதான் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்’ என்று எங்கள் ஆசான் சொல்வார். அதேபோல ஒருநாள் கூட விடுமுறை விடக்கூடாது என்றும் சொல்வார். அதை இன்றுவரை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். எங்கள் மூச்சு நிற்கும்போதுதான் இங்கே வகுப்புகள் நிற்கும். உடல் ஆரோக்கியத்துடன் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுதற்கும் வளரும் பிள்ளைகளிடம் வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டுவரும் முயற்சியிலும் இங்கே வரும் மாணவர்களுக்கு அவர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது புத்தகங்கள் பரிசளிக்கிறோம். இளம் பேச்சாளர்களுக்கான மேடையாக திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கதின் 31ஆவது கிளையைத் தொடங்கியுள்ளோம். அதன் மூலம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை அவர்களுக்கே அறிமுகம் செய்கிறோம். உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள்? வலிகளைச் சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்காமல் வாழும் வழிகளைச் சொல்லி நெறிப்படுத்துவது, எண்ணிக்கையைப் பார்க்காமல் எண்ணங்களால் மேம்பட்டவர்களோடு இணைந்து பயணிப்பது, தேகநலன் காத்தலில் உள்ளடங்கியதே சமூகநலன் என்பதை உணர்த்திக்கொண்டே இருப்பது ஆகியவற்றோடு ஆரோக்கியமாக இருப்பவனே உலகின் மிகப்பெரிய பணக்காரன் என்பதை உர(ரை)க்கச் சொல்வதும்.