சரித்திரப் பயணத்தில் சந்திரயான் 3

இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் அனைவரும் இன்றைய மாலைப் பொழுதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடந்த ஜூலை 14 அன்று நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம், நிலவில் தரையிறங்கவுள்ளதைக் காணவே இத்தனை ஆவல் நிலவுகிறது. கற்பனையில் நிலவைப் பாடிக்கொண்டிருந்த காலத்தை மாற்றியது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்றால் அது மிகையில்லை. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஏற்கனவே சந்திரயான் 1 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தாலும் சந்திரயான் 2, தன்னுடைய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் 40 நாள் பயணம் இன்று நிறைவடைகிறது. சந்திரயான் 1 நிலவின் வட துருவத்தில் தரையிறங்கியது. ஆனால் சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இதனால், நிலவின் தென் பகுதிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறவுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம், சந்திரயான் 3க்கு முன்னதாகவே நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் அது நிலவில் மோதி நொறுங்கியது. எனவே, சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கப் போகும் அந்த இறுதி நிமிடங்களை உலகமே உற்றுநோக்குகிறது. சந்திரயான் 3 விண்கலத்தின் 40 நாள் பயணம் 10 கட்டங்களாக நிகழ்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் சிறிது சிறிதாக முன்னேறி நிலவை நெருங்கியுள்ள சந்திரயான் மூன்றின் பயணத்தின் படிநிலைகளைக் காண்போம். பெரும் சவால்களைக் கடந்து, எட்டாவது கட்டப் பயணத்தை இன்று நிறைவு செய்யவுள்ள சந்திரயான் 3 விண்கலம், தனது பயணத்தின் 9 மற்றும் 10ஆம் கட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்து, இந்தியாவின் அறிவியல் வலிமையை உலகிற்கு உணர்த்தும் நாளாக இந்த நாள் அமையட்டும். சந்திரயான் 3 திட்டத்தில் பங்காற்றிய அறிவியலாளர்கள் உள்ளிட்ட இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் நமது வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.