யாழ்

யாழ்

பீரியட் படம் எடுப்பதில் உள்ள சவால், வரலாறு தெரியாதவர் களுக்கும், வரலாற்றை உணர்த் துமாறு எடுக்க வேண்டியிருப்பது தான்! ஆஸ்திரேலியாவில் சினிமா பயின்று, தமிழகம் வந்து, ஈழப் பின்னணியில், கதை திரைக்கதை வசனம் எழுதி, எம் எஸ் ஆனந்த் இயக்கி, தயாரித்து, நேரடியாக யூட்யூபில் வெளியாகியுள்ள படம் தான், யாழ் ! காதல், நேசம், பாசம், அன்பு ஆகிய உணர்வுகளின் அடிப்படையில் இயங்கும் பல்வேறு மாந்தர்கள், அவர்களின் நியாயமான விருப்பங்களின்படி வாழ இயலாத நிலையை, அவர்களது வாழ்வின் நிச்சயமின்மையை, ஈழத்தில் நிகழ்ந்த ஆகக் கொடுமையான இனவழிப்பு நிகழ்வுக்கு ஓராண்டிற்கு முந்தைய காலக்கட்டத்தின்  பின்னணியில், இந்தப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களின் வலியை, முழுவதுமாக இல்லையென்றாலும், ஓரளவு அழுத்தமாக யாழ் திரைப்படம் புலப்படுத்தவே செய்துள்ளது. எல்லாளன் காலம் (திமு130)துவங்கி, பல்லா யிரம் ஆண்டுகளாக,  பண்பாடுகளை, சைவசித்த வேதாந்தங் களை, யாழ் இசை மூலமாக ஈழத் தமிழர்களான பாணர் கள், அந்தக் காலத்தில் உலகம் எங்கும் பரப்பி வந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு யாழ்ப்பாணம் என்கிற பெயர் வந்தது. ஆனால், காலப்போக்கில் யாழும், பாணர்களும் மறைந்து போனார்கள். இருப்பினும், அவர்களின் வாரிசுகள், இன்றும் உலகமெங்கும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மீண்டும் யாழை மலரச் செய்யும் முயற்சியில் ஒரு சிலர்… என்று ஆதி வரலாற்றைச் சொல்லி கதை துவங்குகிறது ! சுதன் (வினோத் கிஷன்) நிலா (லீமா பாபு) காதல், அம்மாவை  பிரிந்த சிறுமி அமுதினி (ரக்சனா), யாழினி (மிஷா கோஷல்) சசி (சசிகுமார் சுப்ரமணி) வாழ்க்கைப் போராட்டம், சிங்கள காவல்துறை அதிகாரி (டேனியல் பாலாஜி) மனப்போராட்டம், கைக்குழந்தையுடன் சந்தேகத்தின் பேரில் அவனிடம் சிக்கித் தவிக்கும் செல்வி (நீலிமா அசிம்) என அனை வருமே தத்தம் பாத்திரத்தை குறைவில்லாமல் செய்துள்ளனர். தாயும் சிறுமியும் பிரியக் காரணமான நிகழ்வு, அத்துணை வலுவுள்ளதாக அமையப் பெறவில்லை. அதே சமயம், அருகில் விழுந்த குண்டுச் சத்தத்தால், காதில் குருதி வடிய, செவித்திறன் அற்றுப் போன சிறுமியின் சோகம், மனதைப் பிசைய செய்து விடுகிறது! பாடல் காட்சிகளில், பாடல்களின் வரிகளா கட்டும், பின்னணி குரல்களாகட்டும், படமாக்கிய விதமாகட்டும், பங்குகொண்ட கலைஞர்களின் முகபாவங்களாகட்டும்,  அனைத்துமே அருமை!  என்.எஸ்.அருணகிரியின் இசையும்,எல்.வி.கே. தாஸ் படத்தொகுப்பும் பாராட்டுக் குரியவை! ஆதி கருப்பையா ஒளிப்பதிவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இதைத் தாண்டி, இனரீதியான அடக்கு முறைகளை சந்திக்க வேண்டி வந்த நிலை யையும், நியாயமான கோரிக்கைகள் செவி சாய்க்காத நிலையில், ஜனநாயக ரீதியான போராட்டங்கள் பொய்த்த பின், ஆயுதமேந்திய நிலைக்கு ஈழ இளைய தலைமுறை தள்ளப்பட்ட வரலாற்றையும், கதைமாந்தர்கள்  வழியே சற்று புலப்படுத்தி இருந்தால், ஒரு முழுமை பெற்ற ஈழப் பின்னணியைக் கொண்ட வரலாற்றுச் சித்திரமாக பரிமளித்திருந்திருக்கும் ! இது தவறிய நிலையில், கண்ணிவெடிகள் புதைப்பை ஒரு பொருளாக்கி, அதைச் செய்தது சிங்கள ராணுவமா, விடுதலைப்புலிகளா என்பதில் தெளிவில்லாத, காரணம் புரிபடாத  தோற்றத்தை ஏற்படுத்தியதை தவிர்த்திருக்கலாம்! இந்த கொரோனா நோயின் கொடுமையையும், ஊரடங்கு காரணமாக இயல்பான வாழ்க்கை யற்று, வீட்டினுள்ளே உள்ளடங்கி இருக்கும் வேதனையையும், உணர்ந்துள்ள நம்மால், ஈழத்தமிழர்களின் முடங்கிப்போன வேதனை யான வாழ்க்கையை ஓரளவுக்கேனும் உணர்ந்து கொள்ள, யாழ் படத்தை அவசியம் பாருங்கள்!

திரு தாய் அவளே…

திரு தாய் அவளே…

இலக்கியங்களில் எத்தனையோ தமிழ்ச் சமூகங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஆனால் மனித சமூகங்களின் ஆண் பெண் எனும் இரு பிரிவுகளிலும் சேராமல் வாழ்ந்து வருகின்ற திருநங்கைகளுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் “திரு தாய் அவளே…” எனும் குறும்படம் அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. போராட்டமே வாழ்க்கையெனப் பயணிக்கும் திருநங்கைகளுக்கு எதிரான கௌரவக் கொலைகளும், பாலியல் வன்முறைகளும் நிகழ்ந்து வந்தாலும் சமகால வாழ்வியலில் இவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும், உணர்வுகளின் அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் சிறப்பாகப் பேசுகிறது இந்தக் குறும்படம். தற்போதைய சூழலில் தங்களுக்கென ஒரு அங்கீகாரம் வேண்டும் எனக் கடுமையாகப் போராடி வரும் இவர்களின் வாழ்விலும் தற்போதைய சூழலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. பல்வேறு ஊர்கள், சின்னஞ்சிறு அறைகள்;  வாடைகைக்குக்கூட எளிதில் கிட்டாத வீடுகள், தன் மனதுக்குப் பிடித்த குடும்பம் அமையுமா? என்ற ஏக்கம் என எப்போதும் மன அழுத்தத்துடனே வாழும் வாழ்வு அவர்களுடையது. மக்கள் மத்தியில் நிலவி வந்த தவறான கண்ணோட்டத்தை உடைத்தெறிந்து, தங்களாலும் இந்தச் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று இவர்கள் சமீப காலமாக நிரூபித்து வருகிறார்கள். வனங்களில் சுற்றித் திரியும் பறவைகள் கூட இளைப்பாறும் வேளையில், மனிதராகப் பிறப்பெடுத்த திருநங்கைகளின் எண்ண ஓட்டங்களுக்கு ஓய்வே இல்லை என்றே கூறலாம். அதன் காரணமாக,  தற்போதைய சமூகத்தின் செவிலியர், அழகுக் கலை நிபுணர், காவல்துறை ஆய்வாளர் என பல தடைகளை தாண்டி தங்களுக்கென்று தனி அடையாளத்தைப் பதித்து வரும் இவர்கள் நிலவொளியில் உருவான கிறுக்கல்கள் என்றால் மிகையாகாது. பொது இடங்களில் திருநங்கைகள் இழிவாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. இக் குறும்படத்தின் முதல் காட்சியில் குழந்தை ஒன்று காணமல் போய்விட, அதன் பெற்றோர் மற்றும் நண்பர்கள் தெருத்தெருவாக தேடி வருகின்றனர். ஓரிடத்தில் அந்தக் குழந்தையைக் காணும் படத்தின் நாயகி ஜீவா சுப்ரமணியம், அந்தப் பெண் குழந்தையுடன் விளையாடுவது போன்று கதை துவங்குகிறது. அங்கும் இங்குமாகக் குழந்தையைத் தேடும் பெற்றோர், தங்கள் குழந்தை திருநங்கையுடன் விளையாடுவதைக் காண்கிறார்கள். அதனைக் கண்ட குழந்தையின் தாய் “உங்களுக்கெல்லாம் கைதட்டிக் காசு வாங்கத்தான் தெரியும், குழந்தையைப்  பெத்து வளர்த்திருந்தால்தானே ஒரு தாயின் வலி தெரியும்” என்று கோபமாகப் பேச, அந்தப் பெண்ணிடம் இருந்து  வெளிப்படும் பாலின வெறுப்பு வார்த்தைகளால் கலங்கிப் போகிறார் நாயகி. தனக்குச் சம்பந்தமில்லாத ஒரு குழந்தைக்காக வசவுகள் வாங்கியது எண்ணி மனம் நொந்து அந்த இடத்தை விட்டு நகர்கிறாள் ஜீவா. அன்று இரவு முழுவதும் உறக்கமின்றி தவிக்கும் அவள் மறுநாள் டாக்டரிடம் சென்று தனக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக உள்ளதாகக் கூறுகிறார். டாக்டர் மட்டுமல்ல, பார்க்கும் நமக்கும் இது அதிர்ச்சியையும் இது சாத்தியமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. திருநங்கைகளின் வாழ்வியலில் நமது சமூகம் இதுவரை சந்திக்காத மறுபக்கங்களை மையப்படுத்துகிறது இதன் தொடர்ச்சி. தாய்மை எனும் தகுதியைப் பெறத் துடிக்கும் ஒரு திருநங்கையின் உணர்வை மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளது இந்தக் குறும்படம். தனக்கு தானே சீமந்தம் செய்து கொள்ளும் காட்சியில் ஜீவாவின் நடிப்பு நமது கண்களைக் குளமாக்குகிறது. தாய்மை என்பது பெண்களுக்கான தனித்துவ மான அடையாளம் என்பதை இந்தக் குறும்படம் மூலமாக உணர்த்தியுள்ளார் இதன் இயக்குநர் பிரவீன் குமார். வாடகைத் தாயாக பரிணாமம் பெறும் ஜீவாவின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை. சிவகாசியைச் சேர்ந்த ஜீவா சுப்பிரமணியன் திருநங்கைகள் எதிர் கொள்ளும் கேலி கிண்டல்களை எதிர்கொண்டு வளர்ந்தவர். முன்னதாக கவண், தர்மதுரை, அயிரா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். படத்தின் இசை பல இடங்களில் படத்திற்கு ஒவ்வாத சூழலை உண்டாக்கினாலும், நாயகியின் நளினம் இந்தக் குறையை நிவர்த்தி செய்து விடுகிறது. ஒளிப்பதிவு அருமை என்று தான் கூற வேண்டும். வெளியிடப்பட்டதில் இருந்து சுமார் 31 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ள இந்தக் குறும்படம், தேசிய அளவில் 23 விருதுகளை வென்றுள்ளது. ஒட்டுமொத்த சமூகத்தாலும் ஒரு காலத்தில் ஓரங்கட்டி வைக்கப்பட்ட திருநங்கைகள் இன்று தங்களது தனியாத‌ உணர்வுகள் வரிசையில் முதலிடத்தில் உள்ள தாய்மை உணர்வை அடையமுடியும் என்பதை இந்த வாடகைத்தாய் முறையை வெளிப்படுத்துவதன்மூலம் சமூகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முயலும் “திரு தாய் அவளே”  குறும்படம், எதிர்காலக் குறும்பட இயக்குனர்களுக்கு ஒரு ஆவணக் காப்பகம் என்று தான் கூற வேண்டும்.