திரும்பவும் திரும்பவும் பிறப்பேன்

திரும்பவும் திரும்பவும் பிறப்பேன்

தொ. மு. சி. ரகுநாதன் நூற்றாண்டு நிறைவு சிறப்புக் கட்டுரை: அக்ரி பரத்வாஜ் ‘வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என்ற ஒற்றை வரியில் தன்னை வெளிப்படுத்திய மகாகவி பாரதியின் பெருமையை, தர்மாவேசத்துடன் உலகிற்கு உணர்த்திய முற்போக்கு இலக்கியப் படைப்பாளி, சமரசங்களுக்குட்படாத போராளி, தொ.மு.சி என்ற தொண்டைமான் முத்தையா சிதம்பரம் ரகுநாதன். தன் பெயருக்கு முன்னே தலைப்பெழுத்துப் போடுவதையே கைவிட்டு, ரகுநாதன் என்றே தனது பெயரை எங்கும் பயன்படுத்தியவர். தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில், அறிவுச் செருக்கும் கறார்த்தன்மையும் மிக்க பெருமித வாழ்விற்குச் சொந்தக்காரர். பேராசிரியர் நா. வானமாமலைக்கு முன்பாகவே எதார்த்த வாதத்தையும் முற்போக்குச் சிந்தனையையும் புதுமைப்பித்தன், பாலதண்டாயுதம் ஆகியோரின் தொடர்பால் தமிழில் வளர்த்த படைப்பிலக்கியவாதி. அது மட்டுமின்றி தத்துவம், வரலாறு, தமிழர் பண்பாடு ஆகியவற்றில் அழுத்தமான பார்வை கொண்ட கருத்துப் போராளி. இலக்கிய ஆளுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ரகுநாதன். ‘எழுத்தாளன் ஒரு தனி மனிதன். ஆனால் சமூகம் சார்ந்த மனிதன். இந்த இரண்டும் முரண்படாமல் பார்த்துக்கொண்டு, தன் தனித்துவத்தைக் காப்பாற்றியாக வேண்டும்’ என்ற ரகுநாதன், பாரதியை வழிகாட்டியாகக் கொண்டு தனது இலக்கியப் பயணத்தை நடத்தியவர். இடதுசாரிச் சிந்தனை கொண்ட இவரது பேராசிரியர் கே. எஸ். சோணாசலம், நெல்லை இந்துக் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியராக இருந்தவர். தினமணி ஆண்டு மலரில் சோசலிசம் என்றால் என்ன? என்ற கட்டுரை எழுதியவர். இவர்தான் ரகுநாதனுக்கு மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை அறிமுகப்படுத்தியவர். பேராசிரியர்கள் அ. சீனிவாச ராகவன், மு. அருணாசலக் கவுண்டர் ஆகியோர், இவருக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்தவர்கள். இண்டர்மீடியட் – பட்டப் படிப்புக்கு முந்தைய இரண்டாண்டு கல்லூரிப் படிப்பில் தோற்றுப்போன ரகுநாதன், இரணியவாதம் பற்றிப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தனது சிறை அனுபவத்தின் பின்னணியில் அவர் எழுதிய கதைதான் கூண்டுக்கிளி. 1944 – 46இல் தினமணியின் துணை ஆசிரியராகவும் 1946 – 1947இல் முல்லை இதழின் ஆசிரியராகவும் 1948 – 1952இல் சக்தி இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். 1954 – 1956இல் நெல்லையில் சாந்தி என்ற இலக்கிய இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் இருந்தார். 1967முதல் 1988 வரை சோவியத் நாடு, சோவியத் பலகணி ஆகியவற்றில் பணி புரிந்தார். பின் நெல்லை திரும்பிய காலகட்டத்தில், இலக்கிய வரலாறுகள், இலக்கியக் கோட்பாடுகள் என ஏராளமாகப் படித்தார். படித்தவற்றில் பலவற்றைத் தீவிர மறுவாசிப்பிற்கு உட்படுத்தினார். திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.ஜனநாயகம் என்ற பெயரில் வெளிவந்த அதிதீவிர இடதுசாரி இதழில் ஜீவா கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ‘சத்தியத்தின் இன்னுருவாய் சாத்துவீகப் போராளியாய்பத்தியங்கள் பல நோற்று பாரதத்தின் நோய் நொடியைக்கத்தியின்றி ரத்தமின்றி களைந்தெறியப் பாடுபட்டசத்தியவான் போய் மறைந்தான் சண்டாளன் கொன்றுவிட்டான்’ என்ற கவிதையை காந்திஜியின் மறைவையொட்டி எழுதினார். பாரதி மீது அளவற்ற பாசம் கொண்ட ரகுநாதன், கலை இலக்கியப் பெருமன்ற மேடைகளிலும் எட்டையபுரம் பாரதி விழா மேடைகளிலும் பாரதியின் பெருமைகளை முழங்கினார். பாரதி பற்றிய அவரது கவிதை முழக்கங்கள், கேட்போரைக் கிறங்க வைக்கக் கூடியவை. ‘சாதி பேதமெனும் சழக்கறுத்து மானிடமாம்நீதி ஒன்றே தர்மம் என நிலைநாட்டும் சமுதாயம்மானிடர்கள் எல்லோரும் வளவாழ்க்கைதனைப் பெற்றசமுதாயம்,இதைத்தான் நம் கவிஞன் இத்தரையில்ஒப்பில்லா சமுதாயம் என்றுரைத்தான்’ என, பாரதி தன் கவிதைகளில் உயிராக நிலைநிறுத்திய ஒப்பில்லாச் சமுதாயம் என்ற கருத்திற்கு விளக்கம் தருகிறார். இலக்கிய உலகில் நாவலாசிரியர் என அங்கீகரிக்கப்பட்டவர் ரகுநாதன். புதுமைப்பித்தன் கவிதைகள், புதுமைப்பித்தன் கதைகள், காந்திமதி கலித்துறை அந்தாதி ஆகிய நூல்களை இவரே பதிப்பித்தார். அவரது முதல் நாவலான புயல், 1945இல் எழுதப்பட்டது. 1949இல்முதலிரவு, 1950இல் கன்னிகா ஆகிய நாவல்களை எழுதினார். 1953இல் பஞ்சும் பசியும் எனும் நாவலை எழுதினார். கன்னி முயற்சியான ‘புயல்’ நாவலை, தனது 22ஆம் வயதில் தினமணியில் இருந்தபோது ரகுநாதன் எழுதினார். இந்நாவல் ஒரு காதல் கதைதான். ஆனால், புதுமையான கதை. ஒரு பெண்ணின் மன ஓட்டங்களின் வழியாக நாவல் வளர்கிறது. இந்நாவல் இளம்பெண் ஒருத்தியின் மென்மையான மனோ உணர்ச்சிகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் கவிநயத்தோடு சித்தரிக்கிறது. கருத்துச் செறிவு மிக்க, படிக்கப் படிக்க இன்பம் தரும் படைப்பு ‘கன்னிகா’ என்ற இவரது மூன்றாம் நாவல். கள்ளம் கபடமற்ற கமலா என்னும் பெண்ணின் கனவுமயமான காவியக் காதல் உணர்வு, படிப்படியாக இறங்கி ரத்தமும் சதையுமான மண் வகைப்பட்ட காதலுக்குத் திரும்புவதே நாவலாக விரிந்து நிற்கிறது. சிறுகதையாக எழுத நினைத்து, திருப்தி இல்லாத காரணத்தால் நாவலாக எழுதப்பட்டதுதான் இந்நாவல். பெண்களின் பருவ காலத்தை, ஐந்தைந்து ஆண்டுகளாக வகுத்துக்கொண்டு இந்நாவலை எழுதியுள்ளார் ரகுநாதன். இவரது இரண்டாவது நாவலான ‘முதலிரவு’ மராட்டிய எழுத்தாளரான காண்டேகரின் தாக்கத்தால் எழுதப்பட்டது. காண்டேகரின் ‘கருகிய மொட்டு’க்குப் பதிலாக ரகுநாதன் எழுதினார். மனித வாழ்க்கையின் வலுப்பிடியாக விளங்கும் மிகப் பெரிய சக்திகள் பசி, காமம். இவற்றில் காமமும் பசியைப்போல முக்கியமானது என்ற தெளிவுறுத்தலும் மக்கள் காமக் கலையறிவைத் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவும் இந்நாவலைக் காணமுடியும். இவரது நான்காவது நாவல்தான் ‘பஞ்சும் பசியும்’. முன்னால் வந்த பாதையின் திருப்புமுனையாகவும் இனி செல்லும் பாதைக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறது இந்த நாவல். திசை மாறிப்போய்ப் பள்ளத்தில் விழவிருந்த தமிழ் நாவலைப் புதிய பாதைக்கு இட்டுச் சென்றது. 1953ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த நாவல், பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. அம்பாசமுத்திரம் நகரின் நெசவாளர்கள் ஊர்வலமாக உரிமைக் குரலை ஒலித்துக்கொண்டு வருவதை, நதியின் பிரவாகத்திற்கு ஒப்பிட்டுக் காட்டும் இந்த ஒப்புமை கம்யூனிஸ்டுகள் விக்கிரமசிங்கபுரத்தில் நடத்திய தொழிலாளர் போராட்டத்தை உள்ளபடி விவரிக்கிறது. சமுதாய இயக்க விதிகளையும் எதிர்காலச் சமுதாய வளர்ச்சியையும் நன்கு விளங்கிக்கொண்டு அவ்வுணர்வுடன் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை உண்மையுடன் சித்தரிப்பவனே எதார்த்தவாதி. இத்தகைய சிறப்புமிக்க எதார்த்த இலக்கிய நெறியை, பஞ்சும் பசியும் நாவலில் விதந்து கூறும் வகையில் படைத்துள்ளார் ரகுநாதன். அயல்நாட்டு மொழி ஒன்றில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், முதல் பதிப்பிலேயே 50,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. செக்கோஸ்லோவாகியா அகாடமியில் திராவிடவியல் பிரிவின் தலைவராக இருந்த டாக்டர் கபில் ஸ்வலெபில் என்பவரால் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நாவலில் வரும் பாத்திரங்கள் யாவும் நம் மத்தியில் நடமாடிய, நடமாடும் பாத்திரங்களாக உள்ளன. சோவியத் நாவலான மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்‘ நாவலை இவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய மொழிபெயர்ப்புகள் சமூக வாழ்வை மையமாகக் கொண்ட ரஷ்ய இலக்கியங்கள் ஆகும். மாயாகாவிஸ்கியின், மார்க்ஸ் ஏங்கல்ஸ் எழுதிய ‘மதத்தைப் பற்றிய கட்டுரைகள்’ என, முக்கியமான உலகப் படைப்புகள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பைப் பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்: ‘ஓர் இலக்கிய கலா சிருஷ்டியின் மொழிபெயர்ப்பும் ஒரு கலா சிருஷ்டியாகத்தான் இருக்க வேண்டும். ஒரு நூலை மொழிபெயர்க்கும்போது, முதலில் அதனை உயிருள்ள மொழிநடையில் – மொழிபெயர்க்கப்படும் மொழிக்கு முரணாகாத முறையில் – மொழிபெயர்க்க முயல வேண்டும். அவனது வார்த்தைப் பிரயோகங்களும் நடை அமைதியும் மூல நூலில் உள்ள பொருளை நேர்மை உணர்ச்சியுடன் உணர்த்துவதாக இருக்க வேண்டும்.’ 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில் நிமிர்ந்து நிற்கும் பெருஞ்சிகரமான ரகுநாதன், கவிதைத் தொகுதிகள், சிறுகதைத் தொகுதிகள், நாடகங்கள், திறனாய்வு, ஒப்பிலக்கிய ஆய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரை, தமிழ் இலக்கிய வரலாறு என எண்ணற்ற நூல்களைப் படைத்துள்ளார். பாரதியை ஆதர்சமாகக் கருதிய இவர், ‘பாரதியும் ஷெல்லியும்‘, ‘கங்கையும் காவிரியும்‘ ஆகிய ஒப்பிலக்க ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்துள்ளார். ‘பாரதியும் ஷெல்லியும்’ என்ற நூல், பாரதியையும் பாரதியின் இதயத்தைப் பறித்து எண்ணத்தைப் பெரிதும் பக்குவப்படுத்திய ஒரே ஆங்கிலக் கவிஞரான ஷெல்லியையும் ஒப்பீடு செய்கிறது. புரட்சி இலக்கியப் பாரம்பரியத்தில் தனக்கு மூத்தோனும் முதல்வனுமாக இருந்த ஷெல்லியிடம் பாரதி கொண்ட ஈடுபாட்டை ஒப்பு நோக்கி எழுதிய, தமிழில் அதுவரை இல்லாத ஓர் ஒப்பிலக்கிய நூல் இதுதான் என்று அறுதியிட்டுக் கூறலாம். தமிழறிந்தவர்கள் போதுமான அளவு ஷெல்லியை அறிந்துகொள்ள இந்நூல் உதவுமென்பதையும் அறுதியிட்டுக் கூறலாம். நாடும் மொழியும் அரசியலும் இலக்கியமும் பின்னிப் பிணைந்திருந்த பாரதியை, வங்கத்தில் தோன்றி வங்க மொழியில் சிறந்த கவிதை படைத்த ரவீந்திரநாத் தாகூருடன் ஒப்பு நோக்கி, ஒற்றுமை – வேற்றுமை கண்டு, நுணுக்கமாக ஆராயும் ஒப்பிலக்கிய நூல்தான் ‘கங்கையும் காவிரியும்’. பெர்சி பைசி ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிஞர் இளம் வயதிலேயே மாண்டுபோன, உலக முற்போக்குக் கவிஞர்களின் மானசீக வழிகாட்டி. பாரதியும் 40 வயதுக்கு முன்னரே மறைந்து போனார். பாரதியின் மறைவுக்குப் பிறகு 21 ஆண்டுகள் ரவீந்திரநாத் தாகூர் வாழ்ந்திருந்தார். இவர்களைப் பற்றிய சிறந்த ஒப்பாய்வு நூல்களைத் தந்தவர் ரகுநாதன். பாரதி பற்றிய குறிப்புகள் பலவற்றிலும் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, திரையிட்டு மூடப்பட்ட பாரதியின் இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வின் ஓர் அம்சத்தைஆய்வு செய்த நூல்தான் ‘பாரதி: காலமும் கருத்தும்‘ நூல். இந்நூல்1983இல் இலக்கியச் சிந்தனை பரிசைப் பெற்றது. 1984இல் சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுத் தந்தது. தமிழ்நாட்டில் ஓர் இடதுசாரி இலக்கியவாதிக்கு முதன்முதலாக இவ்விருதைப் பெற்றுத்தந்தது ‘பாரதி:காலமும்கருத்தும்’ என்ற நூலே. இந்நூல் பற்றிரகுநாதன் கூறும்போது, “எனது இலக்கிய வாழ்வை மேற்கொண்ட காலம் தொட்டு, சென்ற 40 ஆண்டு காலமாகவே நான் பாரதியைப் பயின்று வந்திருக்கிறேன்; பயின்று வருகிறேன். எனது இலக்கிய நோக்குக்கும் போக்குக்கும் ஏற்ப, சரித்திர வளர்ச்சியின் ஒளியில் அவனை நான் பலவாறும் இனம் கண்டு வந்தபோது, இந்த நூலை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்தது” என்கிறார். ஏற்கனவே திரட்டி வைத்திருந்த தகவல்களுடன் புதிய தகவல்களையும் சேர்த்து இந்த நூலை இரவு பகலாக எழுதி, 1982இல் பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிட்டார். 30 ஆண்டு காலக் கடும் உழைப்பின் அரிய விளைவு இந்நூல். பாரதி பற்றிய பழைய பத்தாம் பசலித்தனப் பார்வையை நொறுக்கியது இந்நூல். 20ஆம் நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகள் ஆயுதமேந்திய இளைஞர்கள் போராட்டம் பெருமளவு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதிவாகவே இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். ஆயுதமேந்திய போராட்டத்தில் பாரதிக்கும் பங்குண்டு என்பதை எத்தனை பேர் அறிவார்கள்? பாரதியை விடுதலைப் போர்த் தளபதிகளில் ஒருவராக இந்நூல் இனம் கண்டது. 1984இல் ‘இளங்கோவடிகள் யார்?’ என்னும் நூலை தமிழ் ஆய்வு

தாயே தாதியோ? இதுவே நீதியோ?

தாயே தாதியோ? இதுவே நீதியோ?

கவிதை பெண்ணாய்ப் பிறத்தலே பெருமைமண்ணில் உரைப்பார் உண்மைஉண்மை நிலையோ காண்கில்உதிரம் உறையும் நெஞ்சில் பிறந்த போதினில் கள்ளிப்பால்அருந்தத் தருவார் அன்னையரேபருவம் மலரும் பாவையரைப்பருந்தாய் கொத்தியே சிதைப்பார் விரும்பா உறவாய் விளைந்திடும்கருவையும் சுமப்பார் கனிவுடனேவிதைத்தே எங்கோஓடி மறைந்தான்விதையேற்றே விரும்பி வளர்த்தாள் அப்பனில்லாப் பிள்ளை அழாதவாறேகையுழைத்துக் கனிந்து வளர்த்தாள்தன்மடி மெத்தையாக்கித் தாலாட்டியேதானுறங்காது கனவுகள் வளர்த்தாள் கல்வியில் சிறக்கக் கட்டெறும்பானாள்வாழ்வில் உயர்த்தத் தேய்பிறையானாள்தாயவள் தேய சேயவன் சிறந்தான்சீர்மிகு பட்டம் சிறந்திட உயர்ந்தான் தெய்வம் தானென்றறியாத் தாயவள்தெய்வம் தொழுதே நன்றி உரைத்தாள்முடிந்தது துயரென்று முகமலர்ந்தாள்சிறந்தது வாழ்வென அகமகிழ்ந்தாள் விதியவள் வாழ்வில் வேறு விளைத்ததுமகனவன் மனத்தில் சேறு விளைந்ததுமணந்தான் மாளிகை வாசம் வந்ததுகுணந்தான் கெட்டிட நாசம் புகுந்தது உச்சிமுகர்ந்து அள்ளி அணைத்த தாய்எட்டி உதைக்கத் துள்ளி விழுந்தனளேநான்பெத்த ராசா – ஈனமாய்க் குரலில்துடித்தாள் உதிரம் உதிர்த்தாள் மனத்தில் இதுதான் நான்பெத்த ராசாவா? ஊறியபாலெல்லாம் உதவாது போனதுவோமனத்தில் எண்ணங்கள் பலவிதமாயினும்நான்பெத்த ராசா நல்லா வாழட்டும் தாயுள்ளம் வாழ்த்தியது வலிகளில்இருக்கஇடம் தேடியது வீதிகளில்கையுழைத்துக் கஞ்சிவார்த்த கட்டுடல்நைந்ததுணியாகித் தள்ளாடும் ஊசலானது நொந்துடல் வெம்பி மனமதில் குறுகிதள்ளாடி வந்தாள் தன்மகன் வாசல்அழுகின்ற குழந்தைக்குத் தாதி தேவைஅணுகுங்கள் உள்ளே சம்பளம் ஆயிரம் கண்டாள் ஓர் அறிவிப்பு அட்டைதனைகுமுறினாள் காலத்தின் கோலத்தால்அழுகை மீறிட அடிமனத்தில் ஆயிரம்நினைவுகள் தாலாட்டத் தாதியோ நான்பெத்த ராசா நீயழப் பார்த்ததிலைபேரன் அழநான் பார்த்திருப்பேனோகையிலெடுத்து வளர்த்த மகன்முன்னேகையெடுத்து வணங்கித் தொழுதனளே எதற்காக மீண்டுவந்தாய் என்முன்னேதந்தையோ தாயோ எனக்கிலை போதாரையாய் வழிந்திடும் விழிகளில்தாயவள் இழைத்தாள் கெஞ்சலை நிந்தாய் இறந்தனள் நீ உதைத்தபோதேநின்முன் நிற்பவள் நின்சேய் தாதியேஅனுபவம் நிறைய உண்டு பிள்ளை வளர்ப்பினில்ஆசையாய் நான் வளர்த்த ராசா உலகிலுண்டு தாலாட்டுப் பாடிடுவேன் தளிர்ப்பிஞ்சைத் தாங்கிடுவேன்நீராட்டித் துடைத்திடுவேன் நெஞ்சினில் தாங்கிடுவேன்உறங்கிடக் கதை சொல்வேன் உறங்காது பார்த்திருப்பேன்நிலவினை நான்காட்டி நிலாச்சோறு ஊட்டிடுவேன் மார்பினில் உதைத்தாலும் மகிழ்வோடு ஏற்றிடுவேன்நான்பெத்த ராசாவாய்ப் பிள்ளைமுகம் பார்த்திருப்பேன்பாசத்திற்கு விலையில்லை பணம்காசு வேண்டாமய்யாதாயவள் இறந்துவிட்டாள் தாதியிவள் மண்டியிட்டாள்!

தற்கொலை முயற்சிக்குப்பின் தலைசிறந்த இலக்கியங்கள்

தற்கொலை முயற்சிக்குப்பின் தலைசிறந்த இலக்கியங்கள்

உலக இலக்கியங்களிடையே மிகுந்த தனித்தன்மையும் பெரும் சிறப்பும் பெற்று விளங்குகின்றன இரஷ்ய, சோவியத் இலக்கியங்கள். ரஷ்ய கலை இலக்கியத் துறையில் மாக்ஸிம் கார்க்கியின் பங்கு மகத்தானது. தனது வாழ்நாளை, கலை இலக்கிய வாழ்வாக வாழ்ந்து காட்டியவர் மாக்ஸிம் கார்க்கி. மேலை நாடுகளில் அன்றைய காலகட்டத்தில் நிலவி நின்ற பழைய இலக்கியக் கோட்பாடுகளிலும் சரி, புதிய இலக்கியக் கோட்பாடுகளிலும் சரி; கார்க்கி முழு அறிவு படைத்தவராக இருந்தார். கார்க்கி தன் பயிற்சியால் தயாரான கலைஞர். இசை, சிற்பம், ஓவியம் முதலிய பல்வேறு கலைகளிலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார். அவர் தனது சுயசரிதத்தில் குறிப்பிடுவதுபோல, வாழ்க்கையே அவருக்குப் பெரும் கல்லூரியாகத் திகழ்ந்தது. ரஷ்ய நாட்டு மக்கள் துன்பங்களின்றி, எல்லா உரிமைகளுடனும் வாழப் பங்காற்றிய எழுத்தாளர்களில் மாக்ஸிம் கார்க்கியும் ஒருவர். அவர் உலகப் படைப்பாளர்களில் முன்னணியில் இருந்தவர். மனிதனே கார்க்கியின் இலக்கியப் படைப்புகளின் தலைவன். மனிதன் மாண்புற வேண்டும் என்பதற்காகவே எழுதுகோலை ஏந்தியவர். லியோ டால்ஸ்டாய், விளாடிமர் கோரோலெங்கோ போன்ற ஆகச் சிறந்த எழுத்தாளர்களை ஆழ அலசிக் கற்றவர். இரஷ்ய இலக்கியத்தின் பால் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. ஐரோப்பிய இலக்கியத்தின் வரலாற்றில் ரஷ்ய இலக்கியத்தின் கம்பீரத்தையும்பேராற்றலையும் உலகம் ஒப்புக்கொண்டு வியப்படைகிறது. அந்த இரஷ்ய இலக்கியத்தில் அவர் நிலைகொண்டு இறவாப் புகழ் அடையும் முன்பு, பலவிதமான வேலைகளில் இருந்திருக்கிறார். நீஜ்னி நோவ்கோரத் (Ni Zhni Novgorod) என்ற ஊரில் மாக்சிம் செவ்வோட்டிவிச் பெஷ்கோவ்வின் மகனாக 1868, மார்ச் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். 1872இல் கார்க்கியின் தந்தையும், 1878இல் தாயும் மரணமடைந்தனர். தாயார் மறைவுக்குப்பிறகு செருப்புக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். பின் பிளான் வரைகிறவரிடம் வேலை. அதன்பின் ரொட்டிக் கிடங்கில் சிற்றாள் வேலை. 1880இல் கப்பல் ஒன்றில் சமையலறை சிற்றாளாக வேலை பார்க்கும்போதுதான் படிக்கக் கற்றுக்கொண்டார். நூலக குமாஸ்தாவாக, பறவைகளைப் பிடித்து வாழ்க்கை நடத்துபவனாக என்று பலப்பல வேலைகளைப் பார்த்த கார்க்கி, வேலையின்றி உணவுக்கு வழியின்றி, காஸானுக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே கூத்தாடிகளுடன் சேர்ந்து கூத்தாடிப் பிழைத்தார். தெருக்களில் குவாஸ் விற்றுப் பிழைத்தார். 1887 டிசம்பர் 12இல் தற்கொலைக்குக்கூட முயன்றிருக்கிறார். 1888இல் புரட்சிக்காரர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். பின் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டார். காஸ்பியன் கடலில் மீன் பிடித்துக்கொண்டு சுற்றித் திரிந்து வயிறு வளர்த்தார். 1888 – 89 ஆண்டுகளில் ரயில்வே தொழிலாளியாக வேலை பார்த்தார். அவர் வேலை பார்த்த எந்த இடத்திலும் மனிதத் தன்மையற்றவர்களையே சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வாழத் துணிந்தார். சிறையில் அடைக்கப்பட்ட கார்க்கி சிறையில் இருந்து வெளிவந்தவுடன் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மைல் தொலைவு நடந்தே பயணம் செய்தார். பின்னர் எழுத்துலகில் நுழைந்தார். மனிதன் புராதன காலம் தொட்டுத் தன்னுடைய உழைப்பால் உருவாக்கி, வாழையடி வாழையாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொடுத்துவந்த கலைச்செல்வத்தைக் கரைத்துக் குடித்தார். ‘நான் எப்படி எழுத்தாளன் ஆனேன்?’ என்ற கட்டுரையில், ‘உலகில் சகல எண்ணங்களையும் பொருட்களையும் ஆக்குவதும் அமைப்பதும் மனிதனே. பல அற்புதங்களைச் செய்பவனும் மனிதனே. இயற்கை சக்திகள் அனைத்தையும் அடக்கி ஆளுகிற எஜமானனும் அவனே. உலகிலுள்ள அழகிய பொருட்கள் யாவும் மனிதனாலும் மனிதனுடைய திறமையான அவனுடைய உழைப்பினாலும் உண்டாக்கப்பட்டவையே.உழைப்புத் திறனை உபயோகப்படுத்தும் முறைகளில் இருந்தே சகலவிதமான எண்ணங்களும் உதித்தன. கண்கூடாகத் தெரியும் நிதர்சனத் தோற்றங்களுக்குப் பிறகு எண்ணங்கள் உதிக்கின்றன. நான் மனிதனை வணங்குகிறேன். ஏனெனில் மனிதனுடைய பகுத்தறிவாலும் சிந்தனையாலும் படைக்கப்பட்டவற்றைத் தவிர வேறு எதையும் இவ்வுலகில் நான் பார்க்கவில்லை. அந்தப் பார்வையில் நான் எழுதலானேன்’ என்கிறார். மாக்ஸிம் கார்க்கி ஒரு புரட்சிக்காரர். ‘வாழ்க்கை முழுவதையும் மாற்றி அமைப்பதற்காக, திரண்டு வரும் பொது ஜனசக்தியின் வெள்ளப் பெருக்கில் எழுத்தாளர்கள் இரண்டறக் கலக்கவேண்டும். எழுத்தாளன் கடந்துபோன காலத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் இவ்வாறு தெரிந்துகொள்வதினாலேயே அவன் தன்னுடைய காலத்தைப் பற்றியும் அக்காலத்தில் செய்யவேண்டிய புரட்சிகரமான கடமைகளைப் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்’ என்று அவர் கூறுகிறார். பிரெஞ்சு எழுத்தாளர் லூயி ஆர்கன், ‘புராதன ரஷ்ய இலக்கிய உலகின் பழைய பாட்டுக்களையும் கவிதைகளையும் அவற்றைப் பாடி மகிழ்ந்த மக்களையும் சரித்திரத்தின் கம்பீரமான முன்னேற்றத்தில் கார்க்கி தன்னுடன் சேர்த்து வெற்றிநடை போட்டு அழைத்துச் சென்றார்’ என்று கார்க்கியைப்பற்றி மதிப்பீடு செய்கிறார். அவரே, கார்க்கியின் மறைவைப்பற்றிக் குறிப்பிடும்போது, ‘கார்க்கி நறுமலர்களின் நடுவே, சோகக் கண்ணீர் சிந்திய பச்சைச் செடிகளின் நடுவே தூங்கிக்கொண்டிருந்தார். அவர் மிகப்பெரிய பெருமைமிக்க மனிதர். தன்னுடன் எவ்வளவோ ரகசியங்களை அவர் எடுத்துச் சென்றுவிட்டார். அந்த ரகசியங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அவரோடு, அந்த ரகசியங்களைப் பற்றிய அறிகுறிகள் எல்லாம் மறைந்துவிட்டன. அவை நற்குணங்களைப் பற்றிய ரகசியங்கள், மக்களைப் பற்றி மேலும் மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலை வெளியிடும் முடிவற்ற ரகசியங்கள், பொறுமையைப் பற்றிய ரகசியங்கள், கள்ளம் கபடமற்ற தூய இதயங்கள் லட்சோபலட்சக் கணக்கில் மனம் அறியாமல் துடித்து வெளியிடும் அரிய ஓசைகளை செவி கொடுத்துக் கேட்பது பற்றிய ரகசியங்கள். மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, தான் கற்றுக்கொண்டதை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கும் மனிதராகவே அவர் எப்போதும் வாழ்ந்தார்’ என்று கூறுகிறார். அவரது மகத்தான படைப்பான ‘தாய்’ நாவல் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புடையது. தமிழில் செய்த முயற்சிகளில் தொ.மு.சி.ரகுநாதனின் மொழிபெயர்ப்பைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். 1936 ஜூன் பதினெட்டாம் தேதி மாக்சிம் கார்க்கி மாஸ்கோவில் மரணமடைந்தார். அந்த மகா மனிதனின் இறுதி யாத்திரையை சோவியத் அரசு நடத்தி வைத்தது. அவருக்காக எண் திசையிலும் சோகக் குரல் எழுந்தது. ‘ரஷ்யப் புரட்சியில் முன்னின்று பங்குகொண்டவர் மாக்சிம் கார்க்கி என்றும் புரட்சியின் புயல் பறவையாகத் திகழ்ந்தார்’ என்றும் மகாத்மா காந்தியால் பாராட்டப்பட்ட மாக்சிம் கார்க்கியை நினைவு கூர்வோம்.

பண்டிகைக்காரி

பண்டிகைக்காரி

சின்னதாய்ச் சிங்காரித்துச்சின்னக்கண்ணில் மையிட்டுபுருவமிரண்டின் மத்தியிலேவண்ணக் குப்பிப் பொட்டுமிட்டேன்!உச்சி வகிடின் நடுவினிலேநெற்றிச்சுட்டி ஆடவிட்டேன்! மணிக்கட்டு அது நோகாது `சிறு வளையல்கள் பூட்டிவிட்டேன்,வீடெங்கும் நீ இசை நிரப்பகால்சலங்கைக் கட்டிவிட்டேன்! வண்ணமணி மேகலையும்தொங்கும் மணிஆரமும்அதன் இடங்கள் சேர்த்துவிட்டேன்!கூண்டுகிளிப் பொருத்தியகாதணியும் தொங்கவிட்டேன்! முல்லைப்பூக் கரங்களுக்குமருதாணி நிலாக்கள் வைத்தேன்!மல்லிப்பூ வாசனை நுகர்ந்துஅம்மா… இது வேண்டுமென்றாய்!அழகாய்ச் சரமொன்று கட்டிபின்னலிலே சூட்டிவிட்டேன்! அத்தனையும் முடித்துபாவாடை நுனிபிடித்து,பாட்டொன்றுப் பாடிபாங்காய் உன் தலைசாய்த்துகேட்டாய்…!“அம்மா, நல்லா இருக்குல்ல…”இதோ வந்துவிட்டது மகளேநம்வீட்டில் பண்டிகை நாள்! ஊரெங்கும் பொங்கலோநாடெங்கும் தீபாவளியோநீதானே என் பண்டிகைநீதானே என் திருவிழா அம்மா நான் உன்னை அலங்கரித்துகவியொன்றும் பாடிவைத்தேன்மகளே நீ என் தமிழ்ச்சாமி!