திருப்பூர் எனும் திருப்புமுனை – 17

திருப்பூர் எனும் திருப்புமுனை – 17

தொழில் முனைவோராக எங்கு பெரிய அளவில் தவறுகிறோம்? திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் நிலவும் பல்வேறு சவால் நிலைகளைப் பல அத்தியங்களாகப் பார்த்து வந்தோம். போட்டி உற்பத்தி நாடாக விளங்கும் வங்கதேசச் சவால் குறித்துக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். வங்கதேசம், வியட்நாம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எவ்வாறு இந்தியாவைக் காட்டிலும் தொடர்ந்து ஜவுளித்துறையில் முன்னேறுகின்றனர், நாம் எங்கே பின்தங்கியுள்ளோம் என்பதை விரிவாகப் பார்ப்போம். வங்கதேசம், வியட்நாம் மற்றும் இலங்கையில் பஞ்சு விளைச்சல் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் அவர்களின் பருத்தி ஆடை ஏற்றுமதிக்கும் அவர்களின் பஞ்சு உற்பத்திக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. ஏற்கனவே சில அத்தியாயங்களில் இது குறித்துக் குறிப்பிட்டுள்ளேன். வியட்நாமைப் பொறுத்தமட்டில் இங்குள்ள 90% நிறுவனங்கள், சீனா, கொரியா, இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து  துணிகளை இறக்குமதி செய்து ஆடைகளைத் தயார் செய்து ஏற்றுமதி செய்கின்றனர். குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரும் நிறுவனங்கள் என, 5000க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனங்கள் அந்த நாடு முழுவதிலும் வியாபித்துள்ளன. இதில் 20% நிறுவனங்கள் நேரடி அந்நிய முதலீடு வகையைச் சார்ந்தவை. சீனா, கொரியா, இந்தியா மற்றும் ஜப்பானியர்கள் இந்தத் துறையில் இங்கு பெருமளவு முதலீடு செய்துள்ளனர். இது தவிர, அரசின் பொதுத்துறை என்ற அளவில், 50 பெரிய நிறுவனங்கள் வினா டெக்ஸ் என்ற பெயரின் கீழ் இயங்குகின்றன. வியட்நாமின் மொத்த ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்நிறுவனங்களின் பங்களிப்பு 12%. கடந்த சில வருடங்களாகத் தனியார்த் துறை முதலீடுகள் அதிகரிக்கப்பட்டதால், இன்றளவில் அரசு, 26% பங்குகளை இந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அதிகபட்சம் 300  தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்தின் முதலீட்டின் அடிப்படையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப்படுகின்றன. இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் ஆர்டர்களைப் பெற்ற தேதியிலிருந்து 90 நாட்களில் தயார் செய்து அனுப்புகின்றனர். நிரந்தரமான வழக்கத்தில் உள்ள ஆர்டர்கள் 45 நாட்களில் தயாரித்து அனுப்பப்படுகிறது. நிர்ண்யக்கப்பட்ட உற்பத்தித் திறன் இலக்கை, ஒவ்வொரு தொழில் நிறுவனமும் 90% எட்டுவது மிகவும் வியந்து கவனித்த ஒரு விஷயமாகும். MMR எனச் சொல்லக்கூடிய மனித ஆற்றலுக்கு ஏற்ற இயந்திர ஆற்றல் விகிதம், 1:1.25 என்ற அளவில் உள்ளதும் மிகச் சிறப்பான ஒன்றாகும். தொழிற்பேட்டைகளுக்கு அரசு செய்து கொடுத்துள்ள உள்கட்டமைப்பு வசதிகள் சர்வதேசத் தரத்தில் உள்ளன.  வங்கதேசத்தைப் பொறுத்தமட்டில், கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. இங்குள்ள பெரிய தொழிற்சாலைகள் நூலை வாங்கி, அதை ஆடையாக ஏற்றுமதிக்கு அனுப்பும் அத்தனைப் படிநிலை உற்பத்திகளையும் ஒரே வளாகத்தினுள் செய்கின்றன. அதுமட்டுமல்லாமல் சீனா, தைவான், கொரியா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து துணியாக இறக்குமதி செய்து ஆடைகளாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றனர். இங்கு ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இயந்திரத் திறனில் 80% அளவு ஆடைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கும் மனித ஆற்றலுக்கு ஏற்ற இயந்திர ஆற்றல் விகிதம் 1:1.25  என்ற அளவில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.   இலங்கையிலும் இந்தியா, தைவான், கொரியா, சீனா, தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து துணிகளை இறக்குமதி செய்து ஆயத்த ஆடை உற்பத்தி நடைபெறுகிறது. இங்கும் தொழிற்சாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இயந்திரத் திறனில் 80% அளவு ஆடைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கும் மனித ஆற்றலுக்கு ஏற்ற இயந்திர ஆற்றல் விகிதம் 1:1.25  என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது இந்தியச் சூழலைப் பார்ப்போம். குறிப்பாக, திருப்பூர் சூழல். இன்றும் 80% ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் நூலை வாங்கி ஒவ்வொரு உற்பத்திப் படிநிலைகளில் உள்ள துணை நிறுவனங்களிடம் கொடுத்து, துணியாக மாற்றி, ஆடை உற்பத்தியை மேற்கொள்கின்றனர். சுயம்புவாக உருவான தொழில் என்கிற நிலையில், இது சரியான முறை என்றாலும் காலத்திற்கேற்ற தகவமைப்பு மட்டுமே நம்மை வளரச் செய்யும் என்பதைச் சிந்திக்காமல் விட்டதன் விளைவு, இன்றைய பின்னடைவுக்கு ஒரு பெரும் காரணம் என்பதாகவே பார்க்கிறேன். திருப்பூரின் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இயந்திரத் திறனில் 40% அளவு மட்டுமே ஆடைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கு மனித ஆற்றலுக்கு ஏற்ற இயந்திர ஆற்றல் விகிதம் 2 என்கிற அளவில் உள்ளது. மேலே குறிப்பிட்ட மற்ற 3 நாடுகளின் தரவுகளோடு இதைப் பொருத்திப் பார்த்தால், பல்வேறு நிதர்சனங்களைப் புரிந்துகொள்ள முடியும். உதாரணத்திற்கு, 10000 சதுர அடி பரப்பு கொண்ட ஒரு தொழிற்சாலையில், அடிப்படை செலவுகளான வாடகை, பராமரிப்பு, நிர்வாக ஊழியர்கள், மின் கட்டணம் உள்ளிட்ட நிலையான செலவுகள் ஒன்றாகவே இருக்கும். ஆனால் அன்றாட உற்பத்தி என்பது திருப்பூர் ஆலைகளில் 40% என்கிற விகிதத்தில் எடுத்துக்கொண்டால், அடிப்படைச் செலவுகளை உற்பத்தி செய்த ஆடைகளுக்கு ஏற்பப் பிரித்தால், பெரும் தொகை வேறுபாட்டினைக் காணலாம். இது நமக்கான போட்டியை நாமே உருவாக்கிக்கொள்ளும் நிலையே. இந்த விடயங்களில் நாம் மிக அவசியமாகவும் போர்க்கால அடிப்படையிலும் செயலாற்ற வேண்டிய தேவை உள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள் நூலை வாங்கித் துணிகளாக மாற்றுவதைக் காட்டிலும், துணியாக வாங்கும் முறைக்கு மாற வேண்டும். அதே நேரத்தில், படிநிலை உற்பத்தி நிறுவனங்கள் கூட்டாக இணைந்து துணி தயாரிக்கும் நிறுவனங்களாக மாற வேண்டும். அப்படி மாறும்பட்சத்தில் நிலையான உற்பத்தி, அதற்குரிய ஆர்டர்கள், செலவீனங்கள் குறைப்பு, துணிகளில் ஏற்படும் எடை மற்றும் தரக் குறைபாடுகள் பெருமளவில் குறையும். இது ஒரு புதிய மாற்றத்திற்கு மட்டுமல்ல, உற்பத்தியை அதிகரிப்பதுடன், தரம் மற்றும் கால அளவுகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இதன் வாயிலாக, உற்பத்தி நிறுவனங்கள் தடையின்றி இயங்கி, குறித்த நேரத்தில் ஆடைகளை ஏற்றுமதி செய்யும்பட்சத்தில், ஆர்டர்கள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, லாப விகிதங்களும் அதிகரிக்கும் என்பதே என்னளவிலான அவதானிப்பு. இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். மேலே கொடுக்கப்பட்டுள்ள வியட்நாமின் தரவுகள், 4 ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, மத்திய அரசின் தொழிலாளர் துறை, வர்த்தக துறை மற்றும் ஜவுளித்துறை உயர் அதிகாரிகளுடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு அங்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிறுவனங்களைப் பார்வையிட்ட பின், அங்குள்ள அரசு அதிகாரிகள், நிறுவன மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் உரையாடியதில் சேகரித்த தரவுகளே. மேற்படித் தரவுகள் மூலம், திருப்பூரின் ஆயத்த ஆடைத் தொழில் முனைவோராக நாம் எங்கு பெரிய அளவில் தவறுகிறோம் என்பதைக் குறித்து விவரித்துள்ளேன். அடுத்த பகுதியிலும் நாம் மேலும் எங்கு தவறுகிறோம் எனப் பார்ப்போம். வெள்ளியன்று சந்திப்போம்.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 16

திருப்பூர் எனும் திருப்புமுனை – 16

வங்கதேசச் சவால் திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் தோற்றம், வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை குறித்து, தொடர்ந்து 15 அத்தியாயங்களாகப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் வங்கதேச வடிவில் எழுந்துள்ள நெருக்கடியைக் காண்போம். 30 வருடங்களுக்கு முன் தையல் உற்பத்தி நிலையைத் தவிர்த்து, பெரும் உற்பத்தி அமைப்புகள் மிக மிகக் குறைவு. ஆனால் நாளது தேதியில் பஞ்சு இறக்குமதி செய்து ஆடைகளாக ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இந்தத் துறை அசாதாரணமாக வளர்ந்துள்ளது; தொடர்ந்து வளர்ந்தும் வருகிறது. வளர்ச்சி குன்றிய தேசம் என்கிற அடிப்படையில் உலகளவில், 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவைப் பெருமளவு நம்பியே வங்கதேசத்தின் ஆயத்த ஆடை உற்பத்தியும் ஏற்றுமதியும் நிகழ்ந்தது. வளர்ந்த பொருளாதார வல்லரசுகளிடம் பெற்ற மற்றும் பெறும் சலுகைகள், தொடர் முயற்சி, மற்றும் அரசின் பரிபூரண ஆதரவுடன் நாளது தேதியில் உலகளவில் அந்த நாடு 3ஆம் இடத்தில உள்ளது. இந்தியா 5ஆம் இடத்தில் உள்ளது. அந்த வளர்ச்சி ஏன் தற்சமயம் இந்திய உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக திருப்பூருக்கு ஏன் அச்சறுத்தலாக உள்ளது என்பதைக் காண்போம். 2011ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, நட்பு நாடு, எல்லைப் பாதுகாப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடு, நமக்கும் அவர்களுக்குமான வர்த்தகச் சமநிலை உள்ளிட்ட காரணங்களுக்காக 61 பொருட்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்கி வரியில்லா வர்த்தகச் சலுகையை அறிவித்தார். அதில் ஜவுளியும் ஒன்று. இங்குள்ள உற்பத்தியாளர்கள் இதன் பாதிப்பை உணர்ந்து அரசிடம் முறையிட, 2013ஆம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் கவுண்ட்டர் வெய்லிங் டூட்டி, அதாவது எந்தவொரு நாட்டின் உற்பத்தி, இறக்குமதியால் பாதிப்பிற்கு உள்ளாகிறதோ அவர்கள் இறக்குமதிக்கான வரியை விதிக்கலாம் என்ற வகையில் வங்கதேசத்திலிருந்து இறக்குமதியாகும் துணி மற்றும் ஆடைகளுக்கு 12 .6 % கவுண்ட்டர் வெய்லிங் டூட்டி விதிக்கப்பட்டது, இதன் காரணமாக இங்குள்ள உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரமும் முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் பாதுகாக்கபட்டன. 2017ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக 12 .6 % கவுண்டர் வெய்லிங் டூட்டி விலக்கப்பட்டு செலுத்திய வரிகளைத் திரும்பப் பெறும் முறை பின்பற்றிய காரணத்தால் எவ்வித வரியும் இன்றி ஆயத்த ஆடைகளும் துணிகளும் வங்கதேசத்திலிருந்து பெருமளவு இந்தியாவிற்குள் இறக்குமதியாகத் தொடங்கியது. குரல் எழுப்பும் இடங்களிலெல்லாம் அரசிற்கு ஆதரவு நிலைப்பாடு உடையவர்கள் இருப்பதாலும்,அதையும் கடந்து குரல் எழுப்பத் துணிந்தவர்களின் குரல் எட்டாமல் போனதன் காரணமாகவும் நாளது தேதியில் 8000 கோடி ரூபாய் அளவிற்கான ஜவுளி இங்கே இறக்குமதியாகிறது. பல்வேறு சில்லறை வர்த்தக அங்காடிகளுக்குச் சென்று பார்த்தால் வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏரளமான ஆடைகளைக் காணலாம். வங்கதேசத்திலிருந்து தைக்கப்படாத துணிகளும் தொடர்ந்து இங்கு வரத் தொடங்கியுள்ளன. உள்ளூர் உற்பத்தியாளர்களைக் காட்டிலும் கிலோவிற்கு 40 ரூபாய் வரை விலை குறைவாக துணி விற்பனை செய்யப்படுகிறது. அரசுத் தரப்பில் இதுகுறித்து முறையிட்டால், பிற பொருட்கள் அங்கே நாம் ஏற்றுமதி செய்கிறோம்; அது பாதிப்பிற்கு உள்ளாகும் என்கிற பதிலே கிடைக்கிறது. இது ஏற்புடையதல்ல. 2013 முதல் 2017 வரை வேறு பொருட்கள் எதுவும் ஏற்றுமதி செய்யப்படவில்லையா என்கிற கேள்வியும் ஒரு பிள்ளையைக் காப்பாற்ற இன்னொரு பிள்ளையைப் பலி கொடுக்கும் செயலுக்கு ஒப்பானது. அதுமட்டுமல்ல. என்றுமே ஒரு பொருளின் மதிப்பைக் கூட்டும்போது வேலை வாய்ப்பு, பொருளாதாரச் சுழற்சி மற்றும் வரி வருவாய் அதிகமாக இருக்கும் என்பதே அடிப்படை. அந்த வகையில் நாம் சிந்திக்க வேண்டும். இங்கிருந்து செல்லும் பருத்தி, பஞ்சு, நூல் வாயிலாக உற்பத்தி செய்யும் ஆடைகளே இறக்குமதி செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. சீனா, தைவான், கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளிலும் அதிகளவு ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறது. மறைமுகமாக சீனப் பொருட்களின் நுழைவு வாயிலாக வங்கதேசம் உள்ளது. திருப்பூரில் வர்த்தகம் மேற்கொள்ளும் உள்நாட்டு பிராண்டுகள், ஏறத்தாழ பாதியளவு உற்பத்தியை வங்கதேசத்திற்கு மாற்றிவிட்டனர். வரும் காலங்களில் இது இன்னும் உயரும் என்ற அச்சமும் உள்ளது.   ஏற்கனவே பல அத்தியங்களில் உற்பத்தி நிலைகள், அதில் உள்ள முதலீடுகள், வேலை வாய்ப்புகள் குறித்தெல்லாம் எழுதியுள்ளேன். உதாரணத்திற்கு, பூஜ்ய நிலை சுத்திகரிப்பு செய்யும் திருப்பூரின் சாய ஆலைகள் வங்கதேசத்தில் அப்படியான எந்த முற்றுப்பெற்ற அமைப்பும் இல்லாமல் செயல்படும் ஆலைகளுடன் போட்டி போடுகின்ற நிலையும் ஐரோப்பிய ஏற்றுமதியில் நேரடியாக 10 % விலை குறைத்தே போட்டிபோட வேண்டிய நிலை, மறைமுகமான நெருக்கடிகள் உள்ளிட்டவற்றால் இங்குள்ள நிறுவனங்கள் திணறுகின்றன. உடனடியாக இதற்கான தீர்வு எட்டப்பட வேண்டும். குறைந்தபட்சம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சு மற்றும் நூலினால் தயாரான ஆடைகளை மட்டுமே வரி இல்லாமல் இறக்குமதி செய்யவும் மற்ற நாட்டுத் துணிகளின் ஆடைகளுக்குக் கடுமையான வரியையும் விதிக்கவேண்ண்டும். பஞ்ஜலா மற்றும் நூல் ஏற்றுமதி அளவிற்கான இறக்குமதியைக் கண்காணித்து அந்த அளவே ஆடைகள் இறக்குமதியாக அனுமதிக்க வேண்டும். செய்வதெல்லாம் சரி என்கிற பிம்பமும் கட்டமைப்பும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயலே தவிர வேறொன்றும் இல்லை என்பதே நிதர்சனம். மீண்டும் திங்களன்று புதிய தரவுகளோடு சந்திப்போம்.