தமிழ்த் தொண்டர் வ.உ.சி.

தமிழ்த் தொண்டர் வ.உ.சி.

விடுதலைப் போரின் முன்னத்தி ஏராக விளங்கி, தியாகம் என்ற சொல்லுக்குப் பூரண விளக்கமாக வாழ்ந்திருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாள் இன்று. அவரது அரசியல் பற்றி நாம் நிறையவே தெரிந்து வைத்திருக்கிறோம். அவரது தமிழ்த் தொண்டு பற்றிய தகவல்களை அவரது பிறந்தநாள் செய்தியாக சுவடு வழியாகத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். விடுதலைப் போராட்ட வீரராகத் திகழ்ந்த வ. உ. சி.க்கு தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் ஆழ்ந்த புலமையும் பற்றும் இருந்தது. 1918இல் மணக்குடவர் எழுதிய அறத்துப்பாலுக்குரிய உரையை ஓலைச்சுவடியிலிருந்து முதன்முதலாக அச்சேற்றிய பெருமை இவரையே சாரும். இந்தப் பதிப்பு வெளிவர வ. உ. சி. க்குப் பெரிதும் உதவியாக இருந்தவர்கள் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள். பரிமேலழகர் தவறாக உரை எழுதிய சில குறள்களுக்கு, இப்பதிப்பில் புதிய விளக்கங்களைத் தந்துள்ளார். ‘புதல்வரைப் பெறுதல்’ என்ற தலைப்பை ‘மக்கட் பேறு’ என்று மாற்றியவர் வ. உ.சி. கல்வி அறிவு இருபாலருக்கும் பொதுவானது என்ற விளக்கத்தையும் தந்தவரும் அவரே. “திருக்குறள் ஆசிரியரைக் குறை கூறினால்கூடச் சிலருக்குக் கோபம் வருவதில்லை. ஆனால் அதன் உரையாசிரியர்களைக் குறை கூறினால் கோபம் வந்துவிடுகிறது. எதிலும் நன்மையும் தீமையும் உண்டு. எதில் தீமை இருந்தாலும் களைய வேண்டியதுதான்” என்று காரைக்குடியில் ஆற்றிய சொற்பொழிவில் திருக்குறள் குறித்தும் பரிமேலழகர் குறித்தும் கூறியுள்ளார் வ.உ.சி. திருக்குறளை அடுத்து, வ.உ.சி.யைக் கவர்ந்த நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் மூன்றாவது பகுதியான பொருள் அதிகாரத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டைத் தொல்காப்பியப் பதிப்பில், ‘பொருளதிகாரத்தை நான் படித்தபோது, அதில் வேறு எம்மொழி இலக்கணத்திலும் இல்லாத நிலப் பாகுபாடு, செடிகள், மலர்கள், மக்களது ஒழுக்கங்கள், பழக்கவழக்கங்கள் முதலியன கூறப்பட்டிருப்பதைக் கண்டேன்’ என்கிறார். தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவரான இளம்பூரணர்மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, இளம்பூரணர் உரையுடன் தொல்காப்பியத்தின் சில இயல்களைத் தாமே பதிப்பித்து வெளியிட்டார். சில இயல்களைத் தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை துணையுடன் வெளியிட்டார். 1935இல் சிவஞானபோதம் நூலுக்கு உரை எழுதி வெளியிட்டார். செய்யுள் இயற்றும் ஆற்றல் கொண்ட வ.உ.சி. திருக்குறள் கருத்துகளை மெய்யறம் என்ற நூலில் செய்யுள் வடிவில் எழுதினார். தமது சுய சரிதையையும் செய்யுள் வடிவிலேயே எழுதியிருக்கிறார். வ.உ.சி. எழுதிய நூல்கள் எனது பாடல் திரட்டுமெய்யறம்மெய்யறிவுசுய சரிதைஎனது அரசியல் பெரும் சொல்வ.உ.சி. கண்ட பாரதி மேலும் தனது வாழ்நாளில் இருமுறை (1917 – 1930) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னிலை விருத்தி உரையை வெளியிட்டார். திருநெல்வேலியைச் சேர்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர், இன்னிலை என்று சொல்லி ஒரு ஏட்டை வ. உ. சி. யிடம் கொடுத்து, அதற்காகப் பணமும் பெற்றிருக்கிறார். அந்த நூலை வ. உ. சி. வெளியிட்ட பிறகு மயிலை சீனி வேங்கடசாமி போன்ற தமிழறிஞர்கள் அந்த நூல் போலியானது என்று குறிப்பிட்டனர். இதனால் வ. உ. சி. மிகவும் மனம் வெதும்பினார். சொர்ணம் பிள்ளை இதேபோல வ. வே. சு. அய்யர் உள்ளிட்ட பலரையும் ஏமாற்றியிருக்கிறார். ‘அகமே புறம்’, ‘மனம் போல் வாழ்வு’, ‘வலிமைக்கு மார்க்கம்’, ‘சாந்திக்கு மார்க்கம்’ என தனது மனம் கவர்ந்த எழுத்தாளரான ஜேம்ஸ் ஆலனின் நூல்களை அவர் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஒருவகையில் வ.உ.சி.யின் வாழ்க்கைக்கு ஜேம்ஸ் ஆலன் பெரிதும் உதவியிருக்கிறார் என்றே கூறலாம். வ.உ.சி. போற்றுதும்!

நீலகண்ட பிரம்மச்சாரி – 5

நீலகண்ட பிரம்மச்சாரி – 5

காட்சி 5 களமும் காலமும் : அதே களம், அதே காலம் பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள் மற்றும் சங்கர கிருஷ்ணன் (பூஜை முடித்து வந்த ஓம்கார் சுவாமிகள் தம் இடத்தில் அமர்ந்துகொள்கிறார். கூடவே வந்த சங்கர கிருஷ்ணன், தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே பாயில் அமர்கிறார்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. இங்கே மாலை ஆறு மணிக்கெல்லாம் நல்லா இருண்டு விடுகிறதே?! ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, மழைக்காலத்தில் இன்னும் சீக்கிரமாகவே இருண்டுவிடும். சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. வ.உ.சி.யைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி.. பிள்ளைவாள் திருநெல்வேலியில் கைதாகும் வரை நான் அவருடன் பட்டும் படாமலும்தான் இருந்தேன். பிள்ளைவாளுடன் நான் இருந்த சொற்பக் காலம் மிக வேகமாக ஓடியது. என் பாதை வேறு, பிள்ளையின் பாதை வேறு என்பதை நான் அவரோடு சேர்ந்த கொஞ்சநாளிலேயே தெரிந்துகொண்டேன். சங்கர கிருஷ்ணன் : எப்படி சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : அதைத் தெரிந்துகொள்ள காலத்தில் கொஞ்சம் பின்னால் போக வேண்டும். பாரதி சொன்னாரல்லவா? பாலர் பற்றி.. பாலரை நேரில் சந்தித்தேன். அப்புறம் அவரது செயலாளராக இருந்த குஞ்சு பானர்ஜி என்பவரைச் சந்தித்திருந்தேன். அவர்கள் மூலம் வங்கத்திலும் மராட்டியத்திலும் பஞ்சாபிலும் ரகசிய வேலைகளைச் செய்துவந்த, தீவிர தேசபக்த பலாத்கார இயக்கங்களை அறிந்துகொண்டேன். அவர்கள் என்னைத் தமிழ்நாட்டில் இந்த பலாத்கார இயக்கத்திற்குத் தகுந்த ஆட்களைத் தேர்வு செய்யப் பணித்தார்கள். நான் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டேன். இந்த விஷயம் பாரதிக்கும் சிதம்பரம் பிள்ளைக்கும் தெரியாது. என் ஆள் சேர்க்கும் பணிக்குப் பிள்ளைவாளோடு போவது பயனளிக்கும் என்றுதான் போனேன். ஆனால் சிதம்பரம் பிள்ளையின் தேசப் பணி வேறு; என் பாதை வேறாக இருந்தது. சங்கர கிருஷ்ணன் : வ. உ. சி.க்கோ பாரதிக்கோ அல்லது திலகருக்கோ பலாத்கார வேலைகளில் நம்பிக்கை கிடையாதா..? ஓம்கார் சுவாமிகள் : இருந்தது என்றுதான் நம்புகிறேன். ஆனால் அதற்குக் காலம் கனியவில்லை என்று அவர்கள் நினைத்தார்கள்.‘நேரடி பலாத்கார வேலைகளைவிட, தேசபக்தியைப் பரப்புவதே உமது பணியாக இருக்கட்டும்‘ என்று, சகோதரி நிவேதிதா தமக்குக் கட்டளை இட்டதாக, பாரதியார் என்னிடம் ஒருமுறை சொன்னார்.அதுபோக, பாரதியும் பிள்ளைவாளும் தமிழ்க் கலையிலும் இலக்கியத்திலும் பழக்கம் உடையவர்கள். பலாத்கார இரகசிய நடவடிக்கைகள், தமிழ் அரசியல் நெறிக்குப் பொருந்தி வரவில்லை என்று அவர்கள் நம்பினார்கள்.(கொஞ்சம் நிறுத்திக்கொள்கிறார்) சங்கர கிருஷ்ணன் : சிதம்பரம் பிள்ளையிடம் எவ்வளவு நாள் இருந்தீர்கள்? ஓம்கார் சுவாமிகள் : மிகக் கொஞ்சமாத்தான். சென்னையிலும் தூத்துக்குடியிலுமாக ஒரு மூனு மாசமிருக்கலாம். ஆனா அவரு கூட இருந்ததனால, பின்னால திருநெல்வேலி ஜில்லாவுல எனக்கு நெறைய தொடர்பு கெடச்சுது. அவர் வக்கீலாக இருந்தார். நிறைய பேருக்கு உதவி செய்துவந்தார். சுதேசிப் பிரசாரம், பஞ்சாலைத் தொழிலாளர் கூட்டங்கள், சுதேசி பண்டகசாலைன்னு நிறைய பணிகளைச் செஞ்சு வந்தார். சுதேசிக் கப்பல் விட்டது பெரிய வேலை. இப்படியொரு யோசனை சிதம்பரம் பிள்ளைக்கு எப்படி வந்திருக்கும் என்பது அந்தக் காலத்தில் எல்லாருக்கும் ஆச்சர்யமாய் இருந்தது தம்பி. அதை எப்படி வெள்ளைக்காரன் பொறுத்துக்கொள்வான்? அதுதான் அவரு மேல வெள்ளைக்கார அதிகாரிகளுக்குப் பகையைக் கொண்டுவந்தது. அப்புறம் அவரு நடத்துன மில் போராட்டம், வெள்ளைக்காரனுக்குப் புயலும் வெள்ளமும் சேர்ந்து தாக்குனது போல ஆச்சுது. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்காரங்களும் கோரல் மில் டைரக்டர்களும் உடன் பிறந்தவங்க மாதிரிதான். சிதம்பரம் பிள்ளை ரெண்டு பக்கமும் வந்தாரு. வணிகம், அரசியல்-ன்னு இரண்டு பக்கமும் கூர்மையான கத்தியோட சிதம்பரம் பிள்ளையை வெள்ளை நிர்வாகம் பார்த்தது தம்பி. தொழிலாளிங்கன்னு ஒரு சக்தியை முதன்முதலா இந்தத் தமிழ்நாடு அப்போதுதான் கண்டது தம்பி. படிச்சவங்களே இருந்த அரசியல்ல, படிக்காத ஜனங்கல்லாம் அணி அணியா வந்ததைப் பார்த்து வெள்ளை அதிகாரம், வெலவெலத்துப் போனது. மில் தொழிலாளிகள் கூலியும் கேட்டார்கள். வந்தேமாதரமும் முழங்கினார்கள். இது 1908இல் மிகப்பெரிய அதிசயம் தம்பி. (மீண்டும் சிறிய சிந்தனைக்குப் பிறகு தொடர்கிறார்) ஆனா, பிள்ளை வேலைகள்ள இருந்த சூட்சும அரசியல் அப்போ எனக்குப் புரியல; பின்னாலதான் புரிஞ்சுது. அந்த அரசியலின் எதிர்வினை ரொம்ப நாள் மறையவே இல்லை. சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையின் எதிர்விளைவு, மூன்றாண்டுகள் கழித்து மணியாச்சியில் வெடித்தது. ஆகவே, என் வாழ்க்கையில் நான் நேரடியாக ஈடுபடாத ஆஷ் கொலையில் சிதம்பரம் பிள்ளையின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் பின்னணி இருந்தது. 1908இல் பிள்ளை செய்த வேலைகளுக்கும் எங்களோட பலாத்கார வழிமுறைகளுக்கும் இடைவெளி நெறைய. அதனால நான் சிதம்பரம் பிள்ளைக்கு வேலை செஞ்ச கையோடே, தனியா ரகசிய இயக்கத்திற்கும் திருநெல்வேலி ஜில்லா முழுசும் அலைஞ்சு ஆள் சேர்த்து வந்தேன். சிதம்பரம் பிள்ளையோட சுதேசி இயக்கத்துல வேலை செஞ்சவங்கள்ள இருந்து சில பேரை எங்க இயக்கத்திற்கும் சேர்த்துகிட்டேன். சங்கர கிருஷ்ணன் : வ.உ.சி. கைதானவுடன் நடந்த எழுச்சிகளில் உங்கள் நடவடிக்கைகள் ஏதுமில்லையே! அப்போது நீங்கள் திருநெல்வேலியில இல்லையா சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : ‘ சொல்றேன். 1908 புது வருஷம் பிறந்தபோது, சூரத் காங்கிரஸ் முடிஞ்சு சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடி வந்தப்போ, அவருகூட நானும் வந்தேன். அப்போது, தூத்துக்குடி சுதேசி இயக்கச் சூட்டில் பொங்கிக்கொண்டிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து பத்மநாப அய்யங்கார் வந்திருந்து, தூத்துக்குடியில் பிரசங்கங்கள் செய்தார். தூத்துக்குடி எங்கிலும் பெரிய கிளர்ச்சி நிலை சூழ்ந்திருந்தது. அப்போ… (மேடையில் ஒளி மங்கி இருளாகித் திரை விழுகிறது)