முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள்

முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள்

நடக்கலாம் வாங்க : பகுதி 2 ஒருவர் உடல் எடையைக் குறைக்க கண்டிப்பாக நடக்கவேண்டுமா? அல்லது நடந்தால் உடல் எடை குறையுமா? என்று நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு. உடல் எடை குறைப்பு என்பது மிகவும் கடினமான காரியம் அல்ல. அதே நேரத்தில், நாம் நினைக்கும் அளவிற்கு மிக மிக எளிதானதும் அல்ல. கமலஹாசன் ட்வீட் போல் இருக்கிறது என்று யாரும் எண்ண வேண்டாம்.  இரண்டு நாட்கள் கூட போதும் ஒரு கிலோ எடை கூட. ஆனால் ஏறும் எடையைக் குறைக்க கண்டிப்பாக மெனக்கெடவேண்டும். இந்தச் சொற்றொடரை நம்மில் பலரும் சொல்லியிருப்போம் அல்லது யாராவது சொல்லிக் கேட்டிருப்போம். அது உண்மையும் கூட.  உடல் எடைக் குறைப்பிற்கு நடைப்பயிற்சி உதவி செய்யுமா என்றால் உதவி செய்யும். ஆனால் உடல் எடை குறைப்பிற்கு நீ என்ன செய்கிறாய் என்று யாரேனும் கேட்டால் வெறுமனே நடக்கிறேன் என்று நீங்கள் முடிவு எடுத்திருந்தால் உடல் எடை குறையாது. மறுபடியும் கமலஹாசனின் ட்வீட்டை ஞாபகப்படுத்த விரும்பவில்லை. நேராக விசயத்திற்கு வருவோம். நடைப்பயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்று. ஆனால் அதற்கான சில முக்கிய முயற்சிகள் உண்டு.  உதாரணத்திற்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதிக்குள் நுழைய பெரிய வரிசை காத்திருக்கும். சன்னதிக்குள் இருந்து நீளும் அந்த வரிசை இட வசதிக்காக சன்னதியைச் சுற்றிச் சுற்றியே இரண்டு மூன்று வரிசைகள் செல்லும். வரிசை மெதுவாக நகரும்படி மேலாண்மை செய்வார்கள். இந்த இடத்தில் திருப்பதி கோயிலை நான் மேற்கோள் காட்டவில்லை. ஏனெனில், அங்கு சில சமயம் ரஜினி படத்திற்குத் திறந்துவிட்டது போல் எல்லோரும் ஓடுவதைக் கண்டிருக்கிறேன். மீனாட்சியம்மன் கோயிலில் அப்படி அல்ல. ஊர்ந்து ஊர்ந்து செல்வார்கள். அதைப்போலவே சிலர் வாக்கிங் வருவார்கள். அதற்குப் பெயர் நடைப்பயிற்சி அல்ல, ‘உல்லாச உலா’.  எந்த வேலையும் இல்லாத போது உங்கள் வீட்டின் சமையலறையிலிருந்து படுக்கை அறைக்குச் செல்லும் தொனியில் செல்வது எல்லாம் நடைப்பயிற்சியில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. வேகமாக நடப்பது என்பது வேறு, நடப்பது என்பது வேறு. ஊர்வது என்பது வேறு. எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதற்கேற்ற பலன்தான் கிடைக்கும்.  அப்படி நடப்பவர்கள், ஊரும் வேகத்தில்  ஒரு இருபது நிமிடம் நடப்பார்கள். இப்படி ஒரு வாரம் நடந்துவிட்டு, உடல் எடையைச் சோதிப்பார்கள். “ஒரு வாரம் நடந்திருக்கேன். எடை குறையவில்லை. நடந்தா எடை குறையாது போல” என நடப்பதை நிறுத்திவிடும் ஆட்களும் உண்டு.  எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். உடல் எடை கூடிவிட்டதென நடக்க ஆரம்பித்தார். முதல் நாளே என்னைப் பார்த்து அதைச் சொன்னார். அவரது நடையின் வேகத்தைக் கணித்து அவரிடம் நான் எதுவும் சொல்லவில்லை. சரியாக 2 கிமீ நடப்பார். முடிந்ததும் அமர்ந்துவிடுவார். நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். நடந்த நேரத்தை விட அரட்டையின் நேரம் கூடுதலாக இருக்கும். சரியாக ஐந்து நாட்கள் கழித்து உடல் எடையைச் சோதித்திருக்கிறார். அன்றைய தினம் அவரது விதி என்னுடன் நடக்க விதித்திருந்தது. உடல் எடை குறையவில்லை. “நடந்தாலும் என் உடம்பு குறையாதாம்” என்றார். “ஏன்?” என்றேன். “என் உடம்பில் கொழுப்பு எல்லாம் கெட்டியாய் மாறிவிட்டதாம். அது இனி குறையாதாம். நடப்பது வீணாம்” என்றார். “உங்களுக்கு இதை யார் சொன்னா?” என்று கேட்டேன். இவருடைய நண்பர், இவரை விட எடை கூடுதலான ஒருவர். அவர் இவருடன் நடக்க துணைக்கு இவர் அழைத்து வந்தவர். இவர் 2 கி மீ நடப்பவர். அவர் ஒரு கி.மீ மட்டுமே நடப்பவர். இவர் நடந்து முடிக்கும் வரை காத்திருந்து இவருடன் வீடு திரும்புபவர். இது தான் சேதி. நடக்க விருப்பம் இல்லாத ஒருவர் நடப்பவருடன் இருந்தால் இது தான் கதி. இதில் ட்விஸ்ட்டே, ‘உடம்பில் கொழுப்பு எல்லாம் கட்டியாகி விட்டது. இனி கரையாது. நடக்குறது வேஸ்ட்டு” என அள்ளிப்போட்டதுதான்.  அந்த ஐந்து நாட்களில் ஒரு நாள் கூட வியர்த்தது இல்லை என்று என்னுடன் 1.7 கிமீ நடந்து முடித்ததும் கூறியவருக்கு உடல் முழுக்க வியர்வை. நீங்க வந்தது உலா இல்லண்ணே. நடக்கனும்னா இப்படி நடங்க, இல்லாட்டி கொழுப்பு குறையாது என்றேன்.  உண்மையில், நீங்கள் நடக்க வேண்டும் அதன் மூலம் நல்ல உடல் நிலையைப் பெறவேண்டும் என்று தீர்மானித்தீர்கள் என்றால் முதலில் நீங்கள் தூக்கி எறியவேண்டியது உங்கள் பழைய டீ ஷர்ட், ஷூ, பிஞ்ச செருப்பு இவையெல்லாம் இல்லை. உங்களை நடக்க விடாமல் தடுக்கும் எதிர்மறை எண்ணங்களையும் நண்பர்களையும்தான்.  உடல் வியர்க்கும் அளவிற்கு நடக்க வேண்டும், உடலுக்கு உடல் வியர்க்கும் அளவு மாறுபடும். அறிவியல் ரீதியாகச் சொல்லவேண்டுமானால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராகும் வண்ணம், உங்கள் உடல் தசைகள் அனைத்தும் செயல்படும் விதம் நீங்கள் நடக்கலாம். வேகமாக, வேகமாக என்று நினைத்தபடி நடக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேகம் வேண்டும். சிலரது உடல் நிலையை மனதில் வைத்து அதற்கேற்றபடி உங்கள் வேகத்தை டிசைன் செய்துகொள்ளலாம்.  உடல் எடையைக் குறைக்க விரும்பி நடக்கிறீர்கள் என்றால் முதல் பத்து நாட்களில் நீங்கள் கவனிக்க வேண்டியவை.    * உங்கள் நடக்கும் தூரம் எவ்வளவு?   * உங்கள் நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு எவ்வளவு?   * உங்கள் நடக்கும் அளவில் உங்கள் உடல் அளவில் ஏற்படும் மாற்றம் என்னென்ன?   * உங்கள் நடக்கும் தூரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் காலடிகள் (ஸ்டெப்ஸ்) எவ்வளவு? இது தவிர அவரவர் தங்களது குடும்ப மருத்துவர்களிடம் ஓர் ஆலோசனை, முடிந்தால் இரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு போன்ற சோதனைகள் செய்து பார்த்தீர்கள் என்றால் அதற்கேற்றபடி வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டுமா என்றால் தேவையில்லைதான். ஆனால், ஆரோக்கியம் என்று கருத்தில் கொண்டால் அதையும் செய்து பார்ப்பதுதான் நல்லது.  இதை எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். புதிதாய் நடக்க ஆரம்பித்தவர்களுக்கு உடல் அசதியும், சோம்பேறித்தனமும், நடக்க விரும்பாத நண்பர்களின் ஏளனமும், தூக்கச் சுகமும் உங்களை நடக்க விடாமல் தடுக்க முற்படும். அவர்கள் எல்லாம் மேற்சொன்ன விசயங்களில் கவனம் செலுத்தும்பொழுது உங்களை அறியாமலேயே உங்கள் நடையில் நீங்கள் கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள்.  சரி, இதை எல்லாம் கணக்கு செய்துதான் நடக்க வேண்டுமா என்று ஏளனம் செய்வீர்கள்தானே? என்னையும் பார்த்து ஏளனம் செய்திருக்கிறார்கள்.  ஒரு விசயம் தான். முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள். நடக்க வந்தால் நடந்து காட்டுங்கள்.  வாங்க நடக்கலாம்.  கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து 

நடக்கலாம் வாங்க

நடக்கலாம் வாங்க

ஏன் நடக்க வேண்டும்? க்ளப் ஹவுஸ் செயலியின் ‘உணவும் உள்ளமும்’ ஹவுசில் கொரோனா தொற்று சமயத்தில் நோய்த்தொற்று சம்பந்தமாக சில சாமான்யர்கள் மருத்துவர்களிடம் நேரடியாக சந்தேகங்களைக் கேட்டனர். பிறகு தடுப்பூசி பற்றி கேட்டனர். நாளடைவில் உடல்நிலை சம்பந்தமாகவும் ஆரோக்கியமாகவும் பேச குழு உறுப்பினர்கள் சேர்ந்தனர். இதில் பலர் ‘நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது’ என்றும், சிலர் ‘நடைப்பயிற்சியை முறையாகத் தொடர முடியவில்லை’ என்றும் சிலர் ‘நடப்பதற்கு முன் என்ன செய்யவேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார்கள். இவற்றை எல்லாம் முன்வைத்து, எப்பொழுது எனக்கு வாக்கிங் போகும் பழக்கம் வந்தது என்பதை ஞாபகப்படுத்தவே ஐந்து ஆறு வருடங்களுக்கு முன் யோசிக்க வேண்டியதாயிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நடைப்பயிற்சி என்பது ஒரு கட்டத்தில் போதையாயிருந்தது. நடப்பது என்பது போதையாகவே தொடரவும் செய்கிறது. “உனக்கு மோசமான மன நிலை இருந்தால் ஒரு முறை நடந்து செல். இன்னும் மோசமான மனநிலை தொடர்கிறதா மறுபடியும் நடந்து கொண்டே இரு” என்பது ஹிப்போக்ரேட்ஸ் சொன்ன ஞாபகம். நான் வாக்கிங் செல்ல ஆரம்பித்த நான் எதிர்கொண்ட சவால்கள் என்று சில இருந்தன. அவை பொத்தாம் பொதுவாய் பலருக்கும் இருந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் நடைப்பயிற்சியைத் தொடரும்பொழுது ஏற்படும் அல்லது உணரும் உணர்வுகளையும் பல இடங்களில் எழுதியிருக்கிறேன். அவற்றை ஒரு சேர மறுபடியும் எழுதிப்பார்க்க ஆசை. பொதுவாய் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் தங்களுக்கு நேரும் தடைகள் எனப் பட்டியலிடுபவை: என்னால் தினமும் எழ முடியவில்லை. என்னால் தினமும் நடக்க முடியவில்லை. அலுவலகத்திற்குக் கிளம்பவேண்டிய நேரம். அதனால் வாக்கிங் செல்ல நேரம் இல்லை. ஒரு நாள் நடந்தபின் அடுத்த நாள் கால் வலி. எழவே முடியவில்லை. எவ்வளவு தூரம் நடந்தாலும் உடல் எடை குறையவில்லை. பிறகு எதற்கு நடக்கவேண்டும்? அலுவலகத்தில் ஒரு இருக்கைக்கும் இன்னொரு இருக்கைக்கும் நடந்தே போகிறேன். (பிறகு ஹெலிகாப்டரிலா போவாங்க என்ற மைண்ட் வாய்சை கவுண்டமணி குரலில் படிக்கவும்) அலுவலகத்தில் ஃபோன் வந்தால் நடந்துகொண்டே பேசுவேன். இது தவிர எதற்காகத் தனியாக நடக்கவேண்டும்? என்ற எண்ணம். உலகில் நடப்பவர்கள் எல்லாம் சுகர் வந்தவர்கள் அல்லது ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் என்ற பார்வை. காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள். அவர்களுக்கு வேலை இல்லை. வேலை செய்வதற்கு ஆட்கள் இருப்பார்கள், இப்படியான கண்ணோட்டம். எனக்கு சுகர் இன்னும் வரவில்லை. நன்றாக இருக்கிறேன். எனக்கு டாக்டரிடம் போவதற்கு எந்த அவசியமும் இல்லை என்ற மனநிலை. என்னை வாக்கிங் போகச்சொல்லி எந்த மருத்துவரும் சொல்லவில்லை. பிறகு எதற்காகப் போகவேண்டும்? என்ற கேள்வி. ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் இருக்க இத்தனைக் காரணங்கள் இருக்கலாம். இதை விடக் கூடுதலாகவும் இருக்கலாம். ஜனவரி ஒன்றாம் தேதி பார்த்தால் புது வருட சபதம் எடுத்து நடக்க வருபவர்கள் வருவார்கள். மூன்றே நாளில் பாதி பேர் காணாமல் போவார்கள். மீதிக் கூட்டமும் பொங்கல் விடுமுறையில் காணாமல் போவார்கள். எங்கள் வாக்கர்ஸ் க்ளப்பில் ஜனவரி 1ம் தேதி இந்தச் சபத க்ரூப்களைத் தனியாக அடையாளம் காணுவோம். முதல் நாளே ஐந்து கி.மீ. பத்து கி.மீ. என நடந்து உடல் எடையைக் குறைத்துவிடுவோம் என்ற வெறியுடன் நடப்பார்கள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் பூமியை நிறுத்தி பிறகு எதிர்திசையில் சுற்றிவிடும் வெறி இருக்கும் அவர்களிடம். ஆனால் அவர்கள் தலை கீழாக நின்றாலும் வெறுமனே நடப்பதன் மூலமாக மட்டும் உடல் எடையைக் குறைக்கமுடியாது என்பது அவர்களுக்கு தாமதமாகத்தான் புரியும். இந்த யோசனைகள் எல்லாவற்றையும் தாண்டி, ‘ஏன் ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்? நடப்பதனால் ஆய பயன் என்ன?’ என்று பலர் கூகுளாண்டவரைத் துழாவி பார்த்திருப்பார்கள். அது போக, க்ளப் ஹவுஸ் போன்ற சமூக வலைதளங்களில் வெல்னெஸ் கோச், டாக்டர்கள் என எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்தும் நல்ல அறிவியல் பூர்வமான விசயங்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். எனக்கும் உங்களுக்கும் தெரிந்ததுதான் மறுபடியும் மீள் பார்வையாக இங்கே. *நடப்பதனால் உங்களுக்கு உடல் எடை குறைய சில வாய்ப்புகள் உண்டு. ஆனால் முறையான பயிற்சியில் நீங்கள் உங்கள் எடை கூடுவதைத் தவிர்க்க நடக்கலாம். *தூக்கமின்மைக்குச் சில மருத்துவர்கள் நடக்கப் பரிந்துரை செய்கிறார்கள். உடனே ‘நடந்தால் தூக்கம் வருமா?’ என்று நீங்கள் வாங்கும் மிக்ஸி க்ரைண்டருக்கு கேரண்டி, வாரண்டி கார்ட் கேட்பது போலக் கேட்கக்கூடாது. உடல் தசைகள் முறையான இரத்தம் ஓட்டம் பெறும்பொழுது, மூளையும் முறையான இரத்த ஓட்டம் பெற்று தசைகள் சுருங்கி விரிந்து உங்களது உடல் ஓர் இறுக்கமற்ற சூழலை உணரும். அது பல வகைகளில் உங்களுக்கு உதவலாம். இரவு படுத்தால் அயர்ச்சியின் காரணமாகச் சிலர் உடனே உறங்கிவிடுவார்கள். அப்படியான அயர்ச்சியை நீங்கள் நடந்தே பெற்றுக்கொள்ளலாம். *காலையில் நடப்பது, சுத்தமான காற்றை சுவாசிப்பது போன்ற காரணங்கள் தவிர்த்து, PRE OCCUPIED மன நிலையில் இருப்பவர்கள், தொடர் வேலை அழுத்தங்கள் இருப்பவர்கள், காலை எழுந்தால் ஏகப்பட்ட வேலைகள், எந்த வேலையை முதலில் செய்வது? என்று குழம்புவோர் இப்படியானவர்கள் அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு இருக்கும் அழுத்தச் சூழலிலிருந்து விடுபட வாய்ப்பு இருக்கிறது. தங்களின் வேலைகளை அதனதன் முக்கியத்துவம் கருதி நிரல்படுத்தி (PRIORITY) எதை முதலில் முடிக்கலாம் என்ற முடிவு எட்டுவது எளிதாக இருக்கலாம். நிதானமான முடிவுகளை எட்டுவதற்கு மூளை பழக்கப்படலாம். எனக்குத் தெரிந்த சில தொழில் முனைவர்கள் பல முக்கியமான முடிவுகளை எடுக்க யோசிப்பதற்காகவே காலையில் வாக்கிங் வருகிறார்கள். *உடல் தசைகளுக்கு முறையான இரத்தம் ஓட்டம் செல்லும்பொழுது அன்றைய நாள் முழுதும் புத்துணர்வோடு உடல் இயங்கவும் வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து அதிகாலை எழுவது பழக்கம் ஆவதால் மூளையும் புத்துணர்வு பெறுவதை காலப்போக்கில் உணரலாம். நண்பர்களில் சிலர் ஏன் நடக்கவில்லை என்பதற்கான காரணங்களும், நடப்பதனால் ஏற்படும் பயன்களில் சிலவற்றையும் பார்த்தோம். ‘ஒருவர் உடல் எடையைக் குறைக்க கண்டிப்பாக நடக்கவேண்டுமா? அல்லது நடந்தால் உடல் எடை குறையுமா?’ என்பது போன்ற கேள்விகளை என் நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு. ஒரு கட்டுரையாக எழுத எத்தனித்த இந்த விசயம், சற்றே நீளலாம். இந்தகே கட்டுரையைப் படித்தவர்கள், தங்களது நடைப்பயிற்சி பற்றிய அனுபவங்களையோ யோசனைகளையோ சொன்னால் கம்பெனி அப்படி அப்படியே ஏற்றுக்கொள்ளும் என்று நடை பணிந்து சொல்லிக்கொள்கிறேன். தொடர்ந்து ‘நடைக் குறிப்புகளோடு’ நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை படங்கள்: இணையத்திலிருந்து