ஆடைக் கட்டுப்பாட்டால் அவதியுறும் ஆசிரியைகள்

ஆடைக் கட்டுப்பாட்டால் அவதியுறும் ஆசிரியைகள்

கட்டுரையாளர்: உமா மகேஸ்வரி   ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை ஆடையை வைத்தும் ஒடுக்கப்படும் நிலைக்கு ஆளாகும் நிலையில்தான் இந்த 2023இலும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வந்த செய்தியொன்று பல தளங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமான செய்தி. ஆம், கோவை மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், புடவைக்குப் பதிலாக சுடிதாரில் பள்ளிக்குச் சென்றிருக்கிறார்.  தலைமையாசிரியரும் கல்வி அலுவலரும் அதற்கு அனுமதி மறுத்திருக்கின்றனர். இவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பல ஆசிரியைகள் இந்த உடைப் பிரச்சனையால் அவதியுற்று வரும் நிலையை ஆங்காங்கே காண முடிகிறது.  வளர்ந்த மாணவர்கள் மத்தியில் சங்கடமாக உணரும் பெண் ஆசிரியர்கள் கோவையில் சுடிதார் அணிந்து வந்த அந்த ஆசிரியர் அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார். புடவை அணிந்துகொண்டு வந்து வகுப்பில் பாடம் நடத்தும்போது  கிண்டல் கேலிப் பேச்சுகளை அவரது உடையை வைத்து மாணவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.  அவர் தனது சேலையைச் சரிப்படுத்திய பிறகே மீண்டும் கற்பித்தலைத் தொடர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும்  இது தொடர, வசதியான உடையாகக் கருதி, பள்ளிக்கு சுடிதாரில் வந்திருக்கிறார். ஆனால் பள்ளித் தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் அது குறித்து சர்ச்சையைக் கிளப்பியதால் தொடர்ந்து சுடிதாரில் செல்ல முடியவில்லை. மீண்டும் புடவையை அணிந்து வந்த ஆசிரியர் மாணவர் தரும் சங்கடங்களைச் சந்திக்க நேரிட, அது அவருக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. சமீப காலங்களில்  பள்ளி மாணவர்களிடையே பல விரும்பத்தகாத நடத்தைகள் வெளிப்படுவதை அவ்வப்போது செய்திகளில் பார்க்கலாம். அவரவர் வீடுகளில், வசிப்பிடங்களில், சமூகத்தில் சற்று உற்று நோக்கினாலே குழந்தைகளிடம் உருவாகியுள்ள நடத்தை மாற்றத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். மேல்நிலை வகுப்புகளுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களது பணி, கூடுதல் சவால் நிறைந்ததாக இருக்கிறது. அதிலும் ஆசிரியைகள் பல இடங்களில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. ஏனெனில் இந்தச் சமூகத்தில் தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றை,  வயதுக்கு ஏற்புடையதாக இல்லாத பலவற்றை உற்றுநோக்கும் குழந்தைகள், தங்கள் வாழ்க்கையில் அவற்றைச் செயல்படுத்த முனைகின்றனர். குறிப்பாக, பள்ளிகள் – வகுப்பறைகள்தான் அதற்கான தளங்களாக அவர்களுக்குத் தோன்றுகிறது. அவர்களது வீடுகளில் சரியான வழிகாட்டுதல் இல்லை; பள்ளிகளிலும் உரையாடல் என்பதே இல்லை. திரைப்படங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால், தங்களை ஹீரோக்களாகவும் ஆன்ட்டி ஹீரோக்களாகவும் எண்ணிக்கொள்ளும் மனோநிலை மாணவர்களிடம் தோன்றுகிறது. அதன் ஒருபகுதியாகவே பள்ளிகளில்  பெண் ஆசிரியர்களது உடலை வைத்துக் கேலி செய்யும் சூழல் உருவாகிறது. அதேபோல் வீடுகளில் பெண்கள் நடத்தப்படும் விதம், மரியாதையற்ற தன்மை இதையெல்லாம்  மாணவர்கள் பார்த்து வளர்கின்றனர். இவற்றின் வெளிப்பாடே பள்ளிகளில் நடக்கும் இப்படியான சில விரும்பத்தகாத விளைவுகள். வீடும் பள்ளியும் மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்தத் தவறியதன் விளைவுதான் இது. ஆகவே வளர்ந்த மாணவர்கள் மத்தியில் உடை விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்பதாலேயே பல ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வர விரும்புகின்றனர். அரசாணை 67 கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வெளியிட்ட அரசாணை (GO No.67) அரசு ஊழியர்கள் அணியக்கூடிய உடை குறித்து மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்குத்  தனித்தனியாக  என்ன மாதிரியான உடைகளை அணியவேண்டும் என்று அந்த அரசாணை தெளிவுபடுத்தியுள்ளது.‌ அனைத்துத் தரப்பினரும் கண்ணியமான உடையையே அணிந்து வரவேண்டும் என்று அந்த அரசாணை கூறுகிறது. பெண்களுக்கான உடைகளாக, சல்வார் கமீஸ், சுடிதார், புடவை என அனைத்தும் அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  இந்த அரசாணையில் அரசு ஊழியர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளவை ஆசிரியர்களுக்கும் பொருந்துகிறது. ஏனெனில் அவர்களும் அரசு ஊழியர்களே. பள்ளிக்கல்வி இயக்குனர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்த அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது. பள்ளியில் பெண் ஆசிரியர்களின் நிலை உடல்நிலையில் பிரச்சனைகள் வந்து புடவை அணிய முடியாமல் இன்னலுறும் ஆசிரியர்களும் கல்வித்துறையில்  சுடிதார் அணிய அனுமதி  கேட்டுள்ளனர். ஆனால் துறையில் அனுமதி கிடைக்காததால் வேதனையுடன் புடவையையும் சுமக்கின்றனர். அந்தவகையில்   நம்முடன் பேசிய கூகல் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஜான் பௌலா, “எனக்கு வலது கையில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் ஜாக்கெட் அணிய முடியாது. புடவை அணிவதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. கடந்த கல்வி ஆண்டில் பள்ளியில் தலைமையாசிரியரிடம் அனுமதி  கேட்டால், சுடிதார் அணிந்து வரக்கூடாது என்கிறார். துறையில் வட்டாரக் கல்வி அலுவலருக்கு, மாவட்டக் கல்வி அலுவலருக்கு என, அனைவரிடமும் எனது மருத்துவச் சான்று மற்றும் பரிசோதனைச் சான்றுகளை இணைத்து விண்ணப்பித்து அனுமதிக்காகக் காத்திருந்து மிகுந்த போராட்டத்திற்கிடையே அனுமதி பெற்றேன். ‌மீண்டும் இந்தக் கல்வி ஆண்டில் இதே அனுமதிப் பிரச்சனை. இதற்கெல்லாம் முடிவே கிடையாதா என்று நினைத்து வருந்தினேன். இந்த அரசாணையைப்பற்றி அறிந்துகொண்ட பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறார். “மார்பில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவ விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேரும் காலம் வந்தபின்னும் இறுக்கமான உள்ளாடை  மற்றும் ஜாக்கெட் அணிய முடியாத காரணத்தால், முழுமையாகக் குணமாகும்வரை சுடிதார் அணிந்து செல்ல மருத்துவர் பரிந்துரைத்தார். ஆனால் பள்ளிக்குச் சென்றபோது உடன் பணிபுரியும் ஆசிரியைகளால் பட்ட இன்னல்களைச் சொல்லி மாளாது. உடன் பணிபுரியும் ஆண் ஆசிரியர், அலுவலகம் சென்று உயரதிகாரியிடம் பேசி அனுமதி வாங்கினார். ஏறத்தாழ ஒரு மாதம் சுரிதாரில் சென்றேன். இன்று இந்த G.O. பார்த்த பிறகு அனைத்தும் ஞாபகம் வருகிறது. இப்படி ஒரு ஆணை இருக்கிறது என்பதையே இன்றுதான் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி” என்கிறார் விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் தேன்மொழி. கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் சசிகலா, இந்தக் கல்வி ஆண்டில் முதலில் இருந்தே பள்ளிக்கு சல்வார் கமீஸ் உடை அணிந்து சென்றுகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் தலைமையாசிரியர் கேள்விக்கு உட்படுத்தினாலும் இந்த அரசாணையைக் கூறி ஆசிரியர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசாணைப்படி தாங்கள் விரும்பிய உடையை அணிந்து வரலாம் என்று மாவட்டக் கல்வி அலுவலர் அனுமதித்துள்ளார் என்கிறார். இப்படி, தற்போது இந்த அரசாணையைப் பார்த்தபிறகு பலரும் தாங்கள் சந்தித்த இந்தச் சுடிதார் பிரச்சனைகள் குறித்து மனம் திறக்கின்றனர். அரசாணைக்குப் பிறகும் தடைகள் ஆசிரியைகள் புடவை, சல்வார் கமீஸ் அல்லது சுடிதார்  துப்பட்டாவுடன் அணிந்து வரலாம் என்று அரசாணை கூறிய பிறகு, தமிழ்நாட்டில் ஆங்காங்கே சிலர் அணிந்து செல்லத் தொடங்கினர். ஆனால் சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் சேலையைத் தவிர வேறு உடை அணியக்கூடாது எனச் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதும் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வெலக்கல்நத்தம் என்ற பள்ளியில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் இந்த அரசாணைக்குப் பிறகு சுடிதார் அணிந்து பள்ளி சென்றிருக்கிறார். ஆனால்  அப்பள்ளியின் தலைமையாசிரியர் அங்குள்ள மூத்த பெண் ஆசிரியரின் வழியாக இவரிடம் இந்த உடையை அணியக் கூடாது என வற்புறுத்தக் கூறியுள்ள்ர். ஆனால் அதன் பிறகும் இவர் தொடர்ந்து சுடிதார் உடையையே அணிந்து செல்வதால், ‘வழக்குத் தொடர்ந்த ஆசிரியருக்கு மட்டுமே இந்தத் தீர்ப்பு பொருந்தும், மற்ற ஆசிரியர்களுக்குப் பொருந்தாது. எனவே உயர் அலுவலர் வழிகாட்டல்படி (Dress Code) உடை அணிந்து வரவேண்டும்’ என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சுற்றுகிறது. அதன்பிறகும் ‘முதன்மைக் கல்வி அலுவலருக்குக் கடிதம் கொடுத்து அனுமதி வாங்குங்கள். பிறகு உங்கள் விருப்பப்படி உடை அணியலாம்’ என்று தொடர்ந்து பள்ளியில் அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம். பெண் ஆசிரியர்களே இந்த மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் பல இடங்களில் நடக்கிறது.  சமூகத்தின் பார்வை – உடை என்பது கலாச்சாரம்  காலம்காலமாக நமது தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் உடையை அவர்கள் தீர்மானிப்பதில்லை. அவர்கள் வாழும் வீடும் குடும்பத்தாரும்  சமூகமும்தான் முடிவு செய்கின்றன. ஒருகாலத்தில்  பெண்கள் பருவம் அடைந்த உடனேயே பாவாடை தாவணி  அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. பதிமூன்று, பதினான்கு வயதுள்ள பெண் குழந்தைகள் பூப்படைந்த பிறகு, தாங்கள் விரும்பவில்லை என்றாலும்  தாவணியைத் தவிர வேறு உடை அணிய வீட்டில் அனுமதி கிடையாது. வீட்டிலேயே இல்லாதபோது, ஒரு பெண் பள்ளிக்கோ அல்லது வெளியிடங்களுக்கோ தான் விரும்பும் உடையை அணிவது சாத்தியமற்ற செயல். ஆனால் சமீபகாலமாக இதில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சேலை அணிந்தவர்கள் சுடிதார், சல்வார் கமீஸ், பேண்ட் சட்டை  மற்றும் பல  நவீன ஆடைகளை அணிய ஆரம்பித்துள்ளனர். பெண் குழந்தைகள் மட்டுமல்ல , வளர்ந்த பெண்களும்கூட எல்லாவிதமான உடைகளையும் அணிய ஆரம்பித்துள்ளனர்.  இன்று பெண்கள் பணிபுரியாத துறைகளே இல்லை எனலாம். அந்தவகையில் பணிக்குச் செல்லும் பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான உடையை அணிய ஆரம்பித்துள்ளனர். பல துறைகளிலும் உடை அணிவது என்பது ஒரு பிரச்சினையாக இல்லை.‌  மத்திய மாநில அரசு அலுவலகளில் பணிபுரியும் பெண்கள், கீழ்நிலையில் இருந்து உயர்பதவிகள்  வரை இந்த அரசு ஆணை 67 வருவதற்கு முன்பிருந்தே புடவை, சுடிதார், சல்வார் என அணிந்து செல்வதைப் பார்க்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியில் இருக்கும் பெண்களும் சல்வார் கமீஸ், சுடிதார் ஆகியவற்றை அணிகின்றனர். பள்ளிக்கல்வித் துறையிலேயேகூட, பல மட்டங்களில் பணிபுரியும் பெண்களும் சுடிதார் அணிந்து பணிக்குச் செல்கின்றனர். இவை மட்டுமல்லாது, கல்வித்துறை அலுவலகங்களில் மாற்றுப் பணியில் ஈடுபட்டு வரும் பெண் ஆசிரியர்களும் தாங்கள் விரும்பும் உடையை அணிந்து செல்கின்றனர். ஆனால் அதே ஆசிரியர்கள், பள்ளிக்குள் பாடம் கற்பிக்கக் கூடியவர்களாக இருந்தால் சேலை மட்டுமே அணியக் கட்டாயப்படுத்துவதன் நோக்கம் என்னவென்று நாம் யோசிக்க வேண்டும். பாரம்பரியம் என்றும் பண்பாடு என்றும் ஆசிரியர்கள் எல்லாரும் கலாச்சாரக் காவலர்களாகவே இருக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கும் சமூகத்தின் போக்கு கவலைப்பட வைக்கிறது. பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் சிந்தனையில், சிறுவயது முதலே ஆசிரியை என்றால் சேலைதான் அணிய வேண்டும் பதிய வைக்கக்கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஆண் ஆசிரியர்கள் நமது கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிறார்களா? பாரம்பரிய உடையைத்தான் பள்ளிக்கு அணிந்து வருகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். பள்ளி மாணவிகள் உடை மாற்றம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, தாவணி உடையை மாற்றி சுடிதார் உடையைப் பரிந்துரை செய்து 2011ஆம் ஆண்டு சட்டமன்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து

அத்தியாகிரகம்

அத்தியாகிரகம்

கவிதை ஆடையற்ற மேனியோடுநடக்கும் நங்கையைகிட்டப் பார்வையில் கண்டதும் நகையோடு நடக்கும் சுதந்திரத்ததைதூரப் பார்வையில் கண்டகிழவனின் கண்ணாடிகீழே விழுந்து சிதறியது அதன் நூற்றாயிரம் துகள்களும்கோரப் பார்வையோடு வெறித்தபடி நடக்கும்கால் நரம்புகளை ஊடுருவி கண் நரம்புகளைச் சிதைக்கும்அத்தியாகிரகத்திற்குஅழைப்பு விடுத்திருக்கின்றன மெளனச் சாணத்தால்கிழவனின் கண்ணாடிச் சில்லுகளைஒருபோதும் ஒற்றி எடுத்திட முடியாது நாடே போற்றிய எழுபத்தைந்துநைந்து போனது வீதியெங்கும் மூவர்ணம்பறக்க-விட்டோம்வீடெங்கும் ஏற்றி வைத்துச்சிறக்க வைத்தோம் அதையின்றுஉயர் வர்ணம் யாரென்றகர்ணத்தில் உடைத்துவிட்டார்கள் கிழவனின் கண்ணாடிச் சில்லுகளின் மீதுமெளனத்தை அடைகாக்க அனுமதித்தால் ஆபரணங்களைப் போலஆடைகளுக்கும்வட்டி கட்ட நேரிடும்

நங்கூரம்

நங்கூரம்

கவிதை நீண்ட நெடியஓட்டத்திற்குப் பிறகுநிதானமாய் மெல்லதிரும்பிப்பார்க்கிறேன் எத்தனை தூரம்நதியில் விழுந்த இலையாககாலம் என்னைஇழுத்துக்கொண்டு வந்திருக்கிறது! காலத்துக்கேற்றகதாபாத்திரங்களின்ஒப்பனை கலையாமல் உள்வைத்துத் தைத்தஉணர்வுகளின்சுயம் கசியாமல் விழி பூக்கும் கண்ணீரின்வேர்களின்வலி விழுங்கி உதட்டுப் புன்னகையில்கூடுதலாய்க் கொஞ்சம்ஒளி கூட்டி என் குணம் தெரியாமல்பூச்சாண்டி காட்டிய வாழ்விற்கும்நேசம் போதித்து எஞ்சி நிற்கும்காலப் பெருவெளியில்நங்கூரமாகும் என்னை நினைத்தால்எனக்கே சற்றுபொறாமையாகத்தான் இருக்கிறது

திராவிட மாடல் – கவிதைகள்

திராவிட மாடல் – கவிதைகள்

சமத்துவம் நான் உனக்காக மாறிவிடநிறைய இருக்கின்றன நீயும் எனக்காக மாறிக்கொள்ளகொஞ்சம் இருக்கிறது ஆனால்நமக்காக மாறிக்கொள்வதில் மட்டும்கவனம் கொள்வோம் மற்றவை மாறிடினும்மாறாவிடினும் என்ன? நீ பாதி நான் பாதி என்பதில்உனக்கு நம்பிக்கை உண்டா? நீயும் முழுமைநானும் முழுமைஎன்பதே சரிஅதற்கு மாறிக் கொள்வோம் ============================ சுயமரியாதை என்னிடத்திலான உன்எதிர்பார்ப்புகளெவையும்நமுத்துப் போகாதவரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு உன் அன்றாடத் தேவைகளெதுவும்எள்ளளவும் அயர்ச்சியுறாத வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு என் சுயத்தை முற்றிலுமாய் ஒழித்துஉன் சுயத்துக்காய் நான் ஒடுங்கியிருக்கும் வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு உன் நினைவின் பின்னோடேஎன் நடை நழுவாதிருக்கும் வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு அடுப்பங்கறை தாண்டிஎன் சிந்தைகளுக்குச்சிறகு முளைக்காதவரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு கிள்ளியெடுக்கும் பூவில்வழியும் வலி யாரறிவார்?! முனை மழுங்கிப்போன என்சுயமரியாதையைப் புதைத்த இடத்தில்முளைத்து நிற்கும் சுயபச்சாதாபத்தைவேரோடு பொசுக்கிவிட்டால்உனதன்போடு பின்னிக்கொள்வதில்எந்தத் தடையும் இருக்கப்போவதில்லைஎனக்கும்

காவியக் கலை

காவியக் கலை

கவிஞர் பொன்மணிதாசன் கவிதை புன்னகை யொளியில் பூத்தநல் என்னை சிலிர்ப்பாக்கும் – அவள்கண்ணடி காணும் கவிதை மொழியோகண்களை விரிவாக்கும்! விரிகுடை போலிரு விற்புரு இரண்டுவிழியிடம் கடன்கேட்கும் – நான்சொரிகிற பார்வை சூட்சம மறிந்துசூடும் நாணமதுவாக்கும்! கரைய மறந்த கார்முகில் குழலதுகாலை தான்நோக்கும் – என்விரல்சிறைபடச் செய்த சிகையின் அழகுசேர்த்தநல் வலையாக்கும்! வரைய இருந்த வனப்புறு அழகின்வடிவம் அவளாக்கும் -நான்நிறைய நிறைய நினைத்த வண்ணநித்திலப் பூவாக்கும்! உண்டு உருண்டு உதடுகள் உலரஉணர்வுகள் உசுப்பேத்தும் – தேனில்வண்டு விழுந்த வகையென் மனதுவழிதொட கொதிப்பேத்தும்! கண்டு நெருங்கி கலப்பது காவியகலையில் ஒன்றாக்கும் – அவளைக்கொண்டு குலவி கொஞ்சும் வேளைகுமணன் நானாக்கும்! பொன்மணிதாசன்

பெண்களை அடிப்பதுதான் திராவிட மாடலா?

பெண்களை அடிப்பதுதான் திராவிட மாடலா?

“உலகில் மனித வரலாற்றில் அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையில்தான் சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும்” என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்ற வேளையில் பெரியார் சொல்லிச் சென்றவை இன்றும் சொற்களாகவேதான் இருக்கின்றனவேயன்றி, செயலாக்கம் பெறவில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது தமிழக அமைச்சரின் நேற்றைய செயல். ஒன்பது முறை எம்.எல்.ஏ வாகவும் ஆறாவது முறையாக அமைச்சராகவும் பதவியில் இருக்கும்  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்களிடமிருந்து இப்படி ஒரு செயலை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள  பாலவநத்தம் கிராமத்தில், அமைச்சரைக்கண்டு தனது கோரிக்கை குறித்து  மனு அளிக்க வந்த ஒரு பெண்ணின் தலையில், தன் கையிலிருந்த பேப்பரால் அமைச்சர் அடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்ணியவாதிகளும், பெண்களுக்காகக் குரல்கொடுப்பவர்களும் அமைச்சரின் இந்த ஆனவப் போக்கைக் கடுமையாகக் கண்டிப்பதுடன் தேசிய மகளிர் ஆணையம் அமைச்சரமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். பாஜக வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் அல்லது அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  ஆனால், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வழக்கம்போலவே செலக்டிவ் பாலிடிக்ஸ் மனப்பான்மையுடன் கள்ள மௌனம் காக்கின்றன. சற்றே துணிவுடன் வீட்டைவிட்டு வெளியே வரும் பெண்களை மீண்டும் மீண்டும் வீட்டிற்குள் அடக்கி வைக்கும் செயலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. சமுக வலைத்தளங்களில் நொடிக்கொருமுறை வலம் வரும் இது போன்ற காணொலிகளைக் காணும் எந்தப் பெண்களும், இனி எப்படி மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்க முற்படுவார்கள்? தங்களுக்கான உரிமைகளையோ, தேவைகளையோ எவ்வாறு கேட்டுப்பெறுவார்கள்? பலர்கூடி நிற்கும் பொதுவெளியில் மனு கொடுக்கச் செல்லும் பெண்களுக்கே இந்த நிலைதான் இங்கு. தனது அதிகாரத்தின் வலிமையை விளிம்புநிலை மக்களிடம் காட்டுவதுதான் பொறுப்பிலிருக்கும் அமைச்சர்களுக்கான மாண்பா? பொதுவாக அரசியல்வாதிகளின் அதிகார போதையே ஏழை மக்களின் மீது கை வைக்கும் துணிச்சலைத் தருகின்றது. அதுவும் பெண்கள் என்றால், அந்தத் துணிவு பன்மடங்காகப் பெருகி விடுகிறது.  மூச்சுக்கு மூச்சு, சமூக நீதியை வலியுறுத்தும் கட்சியிலிருந்துதான் இப்படியொரு மனிதத் தன்மையற்ற செயல் வெளிப்பட்டிருக்கிறது. பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஐ சமூகநீதி நாளாக அறிவிப்பதனால் மட்டும் சமூகநீதி பிறந்துவிடாது. அதன் ஓர் அங்கமான பெண் உரிமைக்காகவும், பெண்விடுதலைக்காகவும்  பெரியார் காட்டிய பாதையில் நடப்பதுதான் அரசின் இலக்காக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, சமூக நீதி என்பது குறிப்பிட்ட இனத்திற்கானது இல்லை,  இச்சமூகத்தில் உள்ள அனைவருக்குமானது. குறிப்பாக ஆயிரமாயிரமாண்டுகளாக  பள்ளங்களிலும், ஏற்றத்தாழ்வுகளிலும் புதையுண்டு ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கானது. அந்தப் பள்ளங்களைச் சமன் செய்து, பாதிக்கப்பட்டவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூகநீதியேயன்றி தங்களுக்கு தேவைப்படும்போது, தேவையான இடங்களில் மட்டுமே பேசி, கைதட்டு வாங்குவதல்ல என்பதை அமைச்சரும், கட்சி மேலிடமும் புரிந்துகொள்ளவேண்டும். சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பரவி சூடுபிடிக்கத் துவங்கிய சில மணி நேரங்களில், பாதிக்கப்பட்ட பெண்ணே, “அமைச்சர் என்னை அடிக்கவில்லை, அவர் என் குடும்பத்தில் ஒருவர்” என விளக்கமளித்திருப்பது – விளக்கமளிக்க வைக்கப்பட்டிருப்பது – நகைச்சுவையின் உச்சம். இன்றைய முதல்வர் கடந்த ஆட்சிக்காலத்தில், சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞரை அடித்துவிட்டு, பின்னர் வீட்டிற்கு அழைத்து உபசரித்த காட்சி இப்போது நம் நினைவில் மீண்டும் வருகிறது. தன் குடும்பத்துப் பெண்ணாக இருந்தாலும் அடிக்கும் உரிமையை எந்த அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது? ஒரு சாமானியப் பெண்ணைப் பொதுவெளியில் அலட்சியமாக நடத்தும் அரசியல்வாதிகள், இதுபோன்ற சாமானியர்களால்தான் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். பொதுவெளியில் பெண்களை அராஜகமாக நடத்துபவர்கள் குடும்ப உறுப்பினர்களோ, மேன்மைதாங்கிய(!) மக்கள் பிரதிநிதிகளோ யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே; கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே. எனவே, முதலமைச்சர் உடனடியாக அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி, அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே, இது மக்களாட்சி என்ற நம்பிக்கையை உருவாக்கும். அதுமட்டுமல்லாது, இதுபோன்ற உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மக்களை மதிக்க வேண்டும் என்ற சிந்தனை இவரைப்போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உருவாகும். இந்த ஆட்சி மீது மக்களுக்கு நன்மதிப்பு உண்டாகும். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பதவி, பொருளாதாரம் உள்ளிட்ட எந்த வேறுபாடும் இன்றி மக்கள் அனைவரையும் சமமாக மதிப்பதே உண்மையான சமூக நீதி. அதுவே உண்மையான திராவிட மாடல். எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதி அவமதிப்பது திராவிட மாடல் அல்ல; அது சட்ட விரோதம். ரமாதேவி இரத்தினசாமி

வேர்களாகும் விழுதுகள்

வேர்களாகும் விழுதுகள்

டிங்டிங் டிங்டிங் டிங்டிங் மதிய உணவுக்கு மணியடித்த இரண்டாம் நிமிடம் பள்ளிக்கு வெகு அருகில் இருந்த ஆலமர விழுதில் தூரி ஆடிக்கொண்டிருந்தாள் என் மாணவி போதும் பொண்ணு. பெயரே அதுதான். நான்கு பெண் குழந்தைகளுக்குப்பின் ஐந்தாவதும் பெண்ணாக இவள் பிறக்க, அடுத்ததாவது ஆண் குழந்தை பிறக்கட்டும் என வைக்கப்பட்ட பெயர் ‘ போதும் பொண்ணு’. உலகை வென்ற மகிழ்ச்சியுடன் வேகவேகமாக சிரித்த முகத்துடன் அவள் தூரி ஆடுவதைப் பார்த்தபோது வறுமையால் குழந்தைத் தொழிலாளியான  கிராமத்து சிறுமி ஒருத்தி    “ஆலமர விழுதில நான்  தூளி கட்டி ஆடனும்” என  அவளது கனவுகளை வரிசைப்படுத்தும் பாடலொன்று நினைவிற்கு வந்தது. எனக்கும் அது போல விழுதைப் பிடித்துத் தொங்கவேண்டுமென்ற  நிறைவேறாத ஆசையொன்று இருக்கிறது. என் வகுப்பறையிலிருந்து பார்த்தால் ஐம்பதடி தூரத்தில் இருக்கிறது பரந்து விரிந்து இளம் மங்கைபோல் மலர்ந்திருக்கும் அந்த  ஆலமரம்.  மரங்களில் ஆலமரம் எப்போதுமே வசீகரிக்கும் தன்மை கொண்டது. வேர் போலவே தொங்கும் விழுதுகள் கொள்ளை அழகு. விழுதுகள் தாங்கிய ஆலமரத்தை எத்தனை பெரிய புயலும் எளிதாகச் சாய்த்து விட முடியாது என்பதால்தான்  இதில் பல  இனப் பறவைகளும் தஞ்சம் புக விரும்புகின்றன. இந்த மரத்தைப் பார்க்கும் போதெல்லாம், தமிழ்ப்பட நாட்டாமைக் காட்சிகள் நினைவில் வந்து போகும்.  ஆலமர நிழலில் அமரும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்று கூறப்படுவதால் பஞ்சாயத்துகளின் மேடையாக ஆலமரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.  குருசேத்திரம் சென்ற போது கண்ணன் இந்த மரத்தடியில்தான் பகவத் கீதை உபதேசம் செய்ததாகக் கூறி ஒரு ஆலமரத்தைக் காட்டினர். புனிதம் கருதி மர இலைகள் கூட கீழே விழாதவாறு வலை கட்டி வைத்திருந்ததைப் பார்த்து, “இந்த மரத்திற்கு வயது 5000 ஆண்டுகளா?” என வாய் பிளந்தேன். மகாபாரதம் உண்மையா? புனைவா? உண்மையில் மகாபாரதப் போர் நடந்திருக்குமா?  கிருஷ்ணனும் அர்ஜூனனும் இங்கே நின்றிருந்தார்களா? ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான போர்வீர்ர்கள் பாதம் பதிந்த மண்ணா இது? அன்று எப்படி இருந்திருக்கும் இந்த இடம்? அடர்வனமாகத்தானே இருந்திருக்கும்! அம்மக்கள் என்ன மொழி பேசியிருப்பார்கள்? என்ன சாப்பிட்டிருப்பார்கள்? தனிப்பட்ட மனிதர்களுக்காகத் துவங்கிய போர், எத்தனை அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியிருக்கும்? இந்த மண்ணில் எத்தனை இரத்தம் ஓடியிருக்கும்? கற்பனையில் குருசேத்திரப் போர் நிகழ்வு ஓடியது. பலரது நம்பிக்கையின்  சான்றாய் நிற்கும் அம்மரம் கொள்ளுப் பெயர்த்திகள், எள்ளுப் பெயரன்கள்  கண்டு கனிந்து நிற்கும் கிழத்தியாய்த் தோன்றியது.     தனிமரம் தோப்பாகிய அதிசயத்தை  அடையாரில் பார்த்து வியந்திருக்கிறேன். தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாய், சற்றே ஞானச் செருக்குடன் நிமிர்ந்து நிற்கும் பெண்ணாய்த் தோன்றியது. அன்னிபெசன்ட் அம்மையார் சுதந்திரத்திற்கு முன் இங்கு அமர்ந்து வீர உரையாற்ற, தமிழ்த்தென்றல் திரு.வி.க அமர்ந்து ஆர்வமாய்க் கேட்டிருக்கிறார். 450 வருடங்கள் பழமையான இந்த மரம்  59500 சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இம் மாபெரும் மரத்தின் முதல் முதலில் கால் ஊன்றிய விழுது (வேர்) எது?  இதுவோ! அதுவோ! என ஒவ்வொரு விழுதாய் தடவிப் பார்த்திருக்கிறேன்.  ஆதி  கால விழுதுகள், தலைமுறை தாண்டிய விழுதுகளைத் தேடி, இதுதான் முதல் விழுதாய் இருக்கக் கூடும் என நானாகவே யூகித்து  வேரான ஓர் விழுதை அடையாளம் கண்டு அணைத்திருக்கிறேன்.  இது போன்றே,   ஆலமரங்களை எங்கு கண்டாலும் ஒரு பெண்ணாகவே உருவகப்படுத்த முடிகிறது என்னால். உயர்ந்து வளரும் ஆலமரத்தின் விழுதுகள் பூமிக்குள் நுழைந்து வேர்களாக மாறுவதால், அடிமரம் அரிக்கப் பட்டாலும் விழுதுகள் கிளைகளைத் தாங்கிக் கொள்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போது, விழுதுகள்  மரத்திற்கு பாரமாய் தொங்குவது போலத் தோன்றினாலும், உண்மையில் கிளைகளைத் தாங்கி நிற்கும் விழுதுகள்தான்   பின்னர் மரத்திற்கே வேர்களாய் மாறுகின்றன இதே நிலைதான் பெண்ணிற்கும். குடும்பத்திற்கு பாரமாய் இருப்பது போல இச்சமூகத்தால் கட்டமைக்கப்பட்டாலும்கூட, குடும்பத்தின் வேர்களாய் மாறி, முழு குடும்பத்தையும் தாங்கி நிற்கும் பெண்களை எங்கும் காணமுடிகிறது.  “துரங்குகிற வாவலுறை தொன்மரங்கள் என்ன ஓங்குகுலம் வையவதன் உட்பிறந்த வீரர் தாங்கல் கடனாகும்” எனக் கூறும் சீவக சிந்தாமணியும் கூட, ‘வௌவால்கள் தொங்கி வாழ்கின்ற முதிய ஆலமரங்களை விழுதுகள் காப்பதுபோல குலம் நையுமாயின் அக்குலத்தில் பிறந்த மற மைந்தர்கள் தங்குலத்தை தாங்கிக்காத்தல் கடமையாகும்’ என்று ஆண்களையே குடும்பத்தைத் தாங்கும் விழுதுகளாகச் சித்தரிக்கிறது. ஆனால் உண்மையில் எத்தனையோ குடும்பங்களை பெண்கள் விழுதுகளாய், வேர்களாய்த் தாங்குவதை வரலாறு  பதிவு செய்ததேயில்லை.   ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவும், ‘மனதில் உறுதி வேண்டும்’ நந்தினியும் இது போன்ற பெண்களுக்கான செல்லுலாயிட் உதாரணங்கள். பிரச்சினையால் மூழ்கிக் கிடக்கும் குடும்பத்தின் மொத்த வடத்தையும் தனிஒருத்தியாய் இழுத்துப் பிடித்து, குடும்பத்தேரை நிலைநிறுத்தப் போராடுவாள் அவள் ஒரு தொடர்கதை நாயகி. தமிழ் சினிமாவில் காட்டப்படும் பெண் சுதந்திரம், முன்னேற்றம், சிந்தனைப் புரட்சி அனைத்திற்கும் கவிதா (சுஜாதா)தான் ஆரம்பப் புள்ளி.  அதனைத் தொடர்ந்து அதே இயக்குநர் பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ நாயகி நந்தினி, போராட்டங்களே வாழ்க்கையாகிப் போக, மாறாப் புன்னகையுடன்  வாழ்வை எதிர்கொள்வாள். இவர்கள் இருவரும்தான்  சுயசிந்தனை கொண்ட பெண் கதாபாத்திரங்களுக்கு முதன்முதலில் திரையில் இராஜபாட்டை அமைத்துக் கொடுத்தனர்.   ஆனால் இலக்கிய உலகில்  ஆண் சாதனையாளர்களின்  புத்தகங்களும், ஆண்களின்  சுயசரிதைகளும் நிரம்பிக்கிடக்க, பெண்களின் சரிதைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தான் இருக்கின்றன.      ஆணின் நிழலிலேயே பெண் இருக்க வைக்கப்பட்டதால், அவளுக்கென்று தனி வரலாறு தேவை இல்லை என்றே சமூகம் முடிவு செய்தது.  உலக வரலாறோ, உள்ளூர் வரலாறோ,  பெண்கள் பற்றிய செய்திகள் எடிட்டிங்கில்  தூர வீசப்பட்டன. வீட்டிற்குள் அடைக்கப்பட்டவளின் வாழ்க்கை, வரலாறாவதற்கு ஒன்றுமில்லை என நினைத்திருக்கலாம்.  ஆனால் பெண் சாதுர்யமானவள். இந்த உலகம் தன்னை நிராகரிப்பதை உணரும்போதெல்லாம், தன்னுடைய வரலாற்றையும் தன்னை பாதித்த வரலாற்றையும்  கதைகளாக மாற்றி உலவவிட்டாள். இயல்பாய் அவளுக்குள்ளிருக்கும் மொழியாற்றலால், செவிவழிக் கதைகளும், நாட்டுப்புறக் கதைகளும், பாரம்பரியக் கதைகளும், கட்டுக்கதைகளும் அவளால்  கட்டப்பட்டன.  பாட்டிகள்மூலம் வழிவழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன. சோகக் கதைகளும்  நாட்டார் கதைகளும், சாமி கதைகளும், வீரப் பெண்கள் கதைகளும் பரப்பப்பட்டன. இப்படித்தான் புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியும், வறுமையில் உழன்ற நல்லதங்காளும் பரப்பப்பட்டனர்.  குலதெய்வமாகிய முன்னோர்களின் கதைகள் விவரிக்கப்பட்டன. என் சிறு வயதில் குலதெய்வ வழிபாடன்று 10, 12 வயது பெண் குழந்தைகளை இருட்டறையில் வைத்து ஒரு பாட்டி,   குலதெய்வமாய் வழிபடப்படும்  பெண் குறித்த கதைகளைக் கூறுவது ஒரு சடங்காகவே பின்பற்றப் பட்டது. கன்னி தெய்வங்களாய் அவர்கள் மாறிய வரலாறு, அவர்களின் வாழ்வியல் போராட்டங்களாகவோ, குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றக் காவு கொடுக்கப்பட்ட நிகழ்வுகளாகவோ இருக்கும்.     .      ஆனால் கடுமையான எதிர்வினையுடன் கையில் பிரம்பேந்தி, சட்டாம்பிள்ளையாய்க் காத்திருக்கும் வாழ்வை இலாவகமாகக் கையாளத் தெரிந்தவள் பெண். எந்தத் துயரையும் தின்று செரித்து மீண்டெழக் கற்றவள் பெண். வேர்கள் இடையறாது தன் தேவைக்கான தேடலைத் தொடர்வதால், வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரம் போல, பெண்ணும் நம்பிக்கையையும்  துணிவையும் ஆணிவேராகக்  கொண்டு ஒடிக்க ஒடிக்க துளிர்க்கிறாள்; வெட்ட வெட்ட வளர்கிறாள். நொறுக்க நொறுக்கப் படர்கிறாள். வேரோடு பிடுங்கி நட்டாலும் புதுமண் பற்றி உயர்ந்து செழிக்கிறாள். பரந்து விரிந்து  நிற்கும் கிளைகளின் உயரத்தை உலகமே வியந்து பார்க்க முடியும். ஆனால் மண்ணுக்குள் அடக்கமாய்ப் புதையுண்டிருக்கும், கண்களுக்குப் புலப்படாத வேர்களின் ஆழத்தை எவரும் அறிந்ததில்லை.   சமூகத்தால், குடும்பத்தால் அடித்து வீழ்த்தப்படும் பெண்கள், தங்கள் வாழ்வின் கடைசி நம்பிக்கையும் அற்றுப்போய் வீழ்ந்த பெண்கள், சாம்பலிலிருந்து மீண்டெழுந்த  பீனிக்ஸ் பறவைகளாய் தங்கள் துயரிலிருந்து மீண்டு,  குடும்ப வேர்களாய், சமுதாய வேர்களாய்  மாறிய நிகழ்வுகள்  குறித்தே பேசப் போகிறோம்.  ‘போதும்   பொண்ணு’ என பெண்ணை வெறுத்த இச்சமூகத்தில் வரலாறாய் மாறிய பெண்களைப் பற்றிப் பேசப் போகிறோம்.  வாழ்க்கை அவ்வளவுதான் என்றெண்ணிய பெண்களும், வாழ்வில் எதையேனும் சாதித்தே ஆக வேண்டும் என்றென்னும் பெண்களுமாய், என்னைச் சுற்றியுள்ள இவர்களிடமிருந்து நான் கவனித்ததையும் கற்றதையும் எழுத்துக்களாக்கியுள்ளேன்.  பெண் என்பவள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள் என்கிறது பிரெஞ்சுப் பழமொழி. ஆம், சமூகத்தின் சாட்டையடிகள் அவள் மன உறுதியை மேலும்   இறுக்குகின்றன. உளிகளின் வலிகள் அவளை சிற்பமாக்குகிறது. நெருப்பின் வெப்பம் தங்கமாய் ஜொலிக்க வைக்கிறது. தீட்டத் தீட்ட வைரமாய் மின்னுகிறாள். அவளைப் புனிதப்படுத்தியதிலும், அந்நியப்படுத்தியதிலும் எவ்வாறு சமூகம் முக்கியப் பங்கு வகித்ததோ, அதேபோல் அவள்  வீறு கொண்டெழவும் சமூகமே முக்கியக் காரணியாகிறது. சமூகம் தனக்குக் கொடுத்ததை, தன் எழுச்சியின் மூலம் மௌனமாய் திருப்பித் தருகிறாள். வலி நிரம்பிய பக்கங்களால் நிரப்பப்பட்ட தன் வாழ்வை, வரலாற்றுப் பக்கங்களாய் மாற்றுவதற்குப் போராடிய பெண்கள் இவர்கள். ஏற்கனவே சமகாலத்தில்  ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு விட்ட சாதனைப் பெண்களை விடுத்து, எந்தவிதப் பின்புலமும் இல்லாமல், தன்னுடைய முயற்சியினாலும், தன்னம்பிக்கையினாலும் தடைகளை உடைத்து வாழ்வை வென்ற, மாறுபட்டு சிந்தித்த,  மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்த, சாமான்யப் பெண்களைக் குறித்தே பேசப்போகிறோம். இந்த சாமான்யப் பெண்கள் நம்மை தினமும் கடந்து செல்பவர்களாக இருக்கலாம். நீங்களும் நானும் பார்த்து வியக்கும் அக்காக்களாக,  அம்மாக்களாக, அத்தைகளாக இருக்கலாம். வாழ்க்கை சேற்றில் உழன்று கடும் முயற்சிக்குப்பின் காலூன்றி நிற்கும் தங்கைகளாக, பிள்ளைகளாக  இருக்கலாம். அகவாழ்க்கைக் கனவுகள் கசந்து போக, சாவின் விளிம்பை ருசித்து மீண்ட உங்கள் வீட்டு, நம்வீட்டுப் பெண்களாக இருக்கலாம். பார்வையைத் திருப்புவோம், வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து