மார்க்சின் தோழன்

மார்க்சின் தோழன்

ஏங்கெல்ஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை: அக்ரி பரத்வாஜ் பிரெடரிக் ஏங்கல்ஸ் மார்க்சிய மூலவர்களில் ஒருவர். மார்க்ஸ் – ஏங்கல்ஸ் என்ற இரட்டையர்கள் இல்லாது மார்க்சியம் இல்லை. ஒரு திட்டவட்டமான வேலைப் பிரிவினையின் அடிப்படையில் இருவரும் பணியாற்றினர். அந்த இரு மேதைகளும் வாழ்நாள் தோழர்களாய் இணைந்து நவீன கம்யூனிச இயக்கத்தின் முதல் சிற்பிகளாய்/மூலவர்களாய் விளங்கினர். மார்க்சைவிட இளம் வயதிலேயே, தனது 24ஆம் வயதிலேயே இன்றும் போற்றப்படும் ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை’ என்ற நூலை எழுதியதில் தொடங்கி, தனது இறுதிக்காலத்தில் மார்க்ஸின் மூலதனத்தை வெளியிடுவது வரை ஏங்கல்ஸ் மார்க்சிய ஞானரதத்திற்கு அளித்திட்ட செல்வங்கள் ஏராளம். ஏங்கல்ஸின் முழுப் படைப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல் மார்க்சியத்தைப் புரிந்துகொள்வது என்பது இயலாத ஒன்று. மார்க்ஸ் – ஏங்கல்ஸ் கூட்டு மேதமைகளுக்குள் நுழைந்து பயணப்படாத எவரும் ஒரு மார்க்சியவாதியாக இருக்கமுடியாது. இவர்களது நட்பைப்பற்றி லெனின் கூறும்போது, மார்க்ஸ் – ஏங்கல்ஸ் இருவரிடையே நிலவிய உறவு, முன்னோர்கள் மனித நட்பு பற்றி எழுதியுள்ள நெஞ்சையள்ளும் கதைகளையெல்லாம் மிஞ்சக்கூடியது என்கிறார். ஏங்கெல்ஸ் என்றும் மார்க்ஸின் தோழன் என்றே அறியப்படுகிறார். பிரெடரிக் ஏங்கல்ஸ் 1820ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி பார்மன் என்ற இடத்தில் பிறந்தார். உப்பர்டால் என்றழைக்கப்பட்ட பார்மன், ஜெர்மனியில் உள்ள ஒரு சிற்றூர். பணக்கார தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்த இவர், உழைப்பாளிகளின் ஏழ்மையைக் கண்டு மனம் வருந்தினார். மேலும் இப்பகுதியில் நிலவிய மத ஆதிக்கத்தை – அதன் போலித்தனத்தை வெறுத்தார். இளமையிலேயே அவர் மத எதிர்ப்பாளராக விளங்கினார். இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளை, ஜெர்மானிய செவ்வியல் இலக்கியத்தை ஆர்வத்தோடு கற்றவர். ஜெர்மனியை ஆண்ட நான்காம் பிரெடரிக் வில்லியம் என்ற சர்வாதிகாரி, கருத்துச் சுதந்திரத்தை அறவே இல்லாமல் இருக்கச் செய்தார். இதன் காரணமாக மதம் சார்ந்த கருத்துக்கள், மூடநம்பிக்கைகள் வலுவாகச் செயல்பட்டன. இந்தக் காலகட்டத்தில்தான் மதத்தையும் அரசனையும் எதிர்த்து ஏங்கல்ஸ் எழுதத் தொடங்கினார். அவரது தொடக்கக் காலத்தில் அவற்றைக் கவிதை வடிவில் எழுத ஆரம்பித்தார். அந்தக் கவிதைகளில் விடுதலைபற்றிய கருத்துக்களிருந்தன. 1839ஆம் ஆண்டு ‘உப்பர்டால் கடிதங்கள்’ என்ற தலைப்பில் கடிதங்களை எழுதினார். இவை அவர் மதத்தின் பிடியிலிருந்து விலகுவதைக் காட்டுகின்றன. டேவிட் ஸ்ட்ராஸ் எழுதிய ஏசுவின் வாழ்க்கை என்ற நூல், விவிலியம் தெய்வீகத் தன்மை வாய்ந்தது அல்ல என்றும் அது ஆரம்பக்காலக் கிறிஸ்துவக் குழுக்களில் தோன்றிய சில தொல்கதைகளின் தொகுப்பு என்றும் குறிப்பிட்டார். இந்நூல்தான் ஏங்கல்ஸின் மதம் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றியது. ஜெர்மனியின் புகழ்பெற்ற தத்துவஞானியான ஹெகலின் உலகம், பொருள் ஆகிய எல்லாவற்றிற்கும் எண்ணம் அல்லது கருத்துதான் முக்கியம் என்பதிலிருந்து ஏங்கல்ஸ் வேறுபட்டார். அதேநேரத்தில் ஹெகல் பயன்படுத்திய இயங்கியலை ஏற்றுக்கொண்டு அதை சமூக வாழ்க்கைக்குப் பயன்படுத்தினார். எல்லாப் பொருள்களும் மாறுகின்றன; காலாவதியானவற்றையும் அறிவுக்குப் பொருத்தமற்றவற்றையும் அகற்ற வேண்டும் என்ற இயங்கியல் கருத்துகளைக் கொண்ட இடதுசாரி மனோபாவம் கொண்ட இளம் ஹெகலியர்களின் தொடர்பு ஏற்பட்டது. மதம் பற்றிய இளம் ஹெகலியர்களின் விமர்சனம், அரசியல் பற்றிய கருத்துகள் ஏங்கல்ஸை அவர்கள்பால் ஈர்த்தன. இவ்வாறாக நாத்திகவாதியாக, இயங்கியல்வாதியாக மாறிய ஏங்கல்ஸ் ‘புனிதக் குடும்பம்‘ (1845), ‘ஜெர்மானியக் கருத்தியல்‘ (1864) ஆகிய இரு நூல்களை மார்க்ஸுடன் இணைந்து எழுதினார். புனிதக் குடும்பம் என்பது புருனோபார் என்பவரையும் அவரது சகாக்களையும் விமர்சனம் செய்து எழுதப்பட்ட நூல். இந்நூலில் ஹெகலின் கருத்து முதல்வாதம் விமர்சிக்கப்படுகிறது. வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் விளக்கப்படுகிறது. நூலில் பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் பற்றியும் தத்துவத்தின் வரலாறு பற்றியும் பேசப்படுகிறது. நியாயவாதிகளின் சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் இருவரையும் கொள்கை அறிக்கை தயாரிக்கும்படி அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கம்யூனிசத்தின் அடிப்படைகள் என்ற துண்டுப் பிரசுரத்தினை கேள்வி – பதில் அடிப்படையில் ஏங்கல்ஸ் தயார் செய்தார். இதன் அடிப்படையில் கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்ஸ் தயார் செய்தார். அந்த அறிக்கையினை “பாடல்களின் பாடல்” என்றழைத்தார் ஸ்டாலின். மார்க்ஸால் எழுதப்பட்ட தத்துவத்தின் வறுமை என்ற நூலிற்கு ஏங்கல்ஸின் மகத்தான பெரும் பங்கு உண்டு. சொத்து என்பதே திருட்டு என்று கூறிய பிரெஞ்சு சோசலிஸ்ட் புருதானை விமர்சனம் செய்து எழுதப்பட்ட நூலிது. பல நாடுகளிலிருந்து மார்க்ஸின் கொள்கைகளை விளக்கிப் பல நூல்கள் வெளிவந்தபோதிலும் மார்க்சியத்தை விளக்கி முதன்முதலாக எழுதப்பட்ட ‘டூரிங்கிற்கு மறுப்பு‘ என்ற நூல், ஏங்கல்ஸின் நூலாகும். இந்நூல் 400 பக்கங்களைக் கொண்டது. நூலில் டூரிங் என்ற தத்துவவாதி மார்க்ஸின் கருத்துகளைத் திரித்துக்கூறியபோது அவரை எதிர்த்து ஏங்கல்ஸ் எழுதிய நூலாகும். டூரிங், அடிப்படையில் கருத்து முதல்வாதி. சில எண்ணங்களின் அமைப்புகள்தாம் உலகிற்கே அடிப்படை என்றதை மறுத்து வரலாற்றுப் பொருள் முதல் வாதம், இயங்கியல் விதிகள், சோசலிசம் பற்றிய பல விளக்கங்களை நூலில் தருகிறார் ஏங்கல்ஸ். மார்க்சியம் கற்க விரும்புவர்களுக்கு இது விலைமதிக்க முடியாத கையேடெனலாம். மார்க்ஸின் மூலதனம் பற்றி என்ற சிறு நூலில் அதன் சுருக்கத்தை வெளியிட்டார். இதைப் படிப்பதன்மூலம் மார்க்ஸின் மூலதனத்தின் மூன்று பாகங்களில் உள்ளதை அறிந்துகொள்ள முடியும். பாரீசில், கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார். 1849இல் செருமனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து கார்ல் மார்க்சுக்கு உதவத் தொடங்கினார். பணமின்றித் துயரப்பட்டுக்கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869 சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870, செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தினார் ஏங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். ஏங்கல்ஸ் அரசாங்கம் பற்றிக் கூறும்போது “வர்க்கங்களாக சமூகம் பிரியும்போது அரசாங்கம் ஏற்படுகிறது. இது பொருளாதார ரீதியாக வலுவாக உள்ள வர்க்கத்தின் கருவியாகவே மாறுகிறது” என்கிறார். “அரசு பொருளாதாரத் திசையை மாற்றிவிடுகிறது. அரசு பொருளாதார சக்தியாக விளங்குகிறது. அரசுக்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது. ஆனால், அதன் நோக்கம் பொருளாதார விஷயங்களைக் கட்டுக்குள் வைப்பதுதானே ஒழிய, தீர்மானிப்பதல்ல. இது ஒரு வகையான இயங்கியல் உறவு ஆகும்” என்று விளக்கமளிக்கிறார். விவசாய வர்க்கத்துக்குள்ளாக சிறு, நடுத்தர, பெரிய விவசாயிகள் எனப் பல பிரிவுகள் உள்ளன. கூலி விவசாயிகள் தனியானவர்கள். இவர்களில் பாட்டாளி வர்க்கக் கட்சி, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளை அணுகவேண்டும். ஏனென்றால் கையளவு நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்தாலும் நிலத்தை எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இயந்திரமயமாகும்பொழுது இந்த விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகிறார்கள். இவர்கள் பாட்டாளிகளாக மாறும் தன்மை உள்ளவர்கள். ஆனால் பரம்பரையாக இவர்களிடம் ஊறியிருக்கும் சொத்துரிமை என்ற உணர்வு, இவர்களை நிலத்துடன் பிணைத்து வைத்துவிடுகிறது. இவர்களைக் கட்டாயப்படுத்தி நிலத்தை விட்டுவிடச் செய்யக்கூடாது. அவர்களாகவே முன்வந்து ஒன்றிணைந்து கூட்டுறவு முறையில் விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம்தான் முதலாளித்துவத்தின் அழிக்கும் செயலில் இருந்து பாதுகாக்க முடியும். இந்த அடிப்படையில்தான் சோசலிசக் கட்சிப் பிரச்சனையை அணுக வேண்டும். பெரும் நிலச்சுவான்தார்கள், அவர்களது குத்தகைதாரர்கள் ஆகியவர்களை மட்டுமே எதிர்த்துப் போராட வேண்டும் என்று விளக்கமளிக்கிறார். மக்களின் விடுதலைப் போராட்டத்தில் மார்க்ஸின் இணைபிரியாத் தோழர், விஞ்ஞானபூர்வமான உலகக் கண்ணோட்டத்தை நிறுவிய, தொழிலாளி வர்க்கத்தின் சக்திகளை உலக அளவில் ஒன்று திரட்ட முன்கையெடுத்தவர் பிரெடரிக் ஏங்கல்ஸ்.

சொல்லணு குண்டுகள்

சொல்லணு குண்டுகள்

கவிதை எங்கள் கவிதை வரிகளேஎங்கள் வெடிகுண்டுத் தொழிற்சாலையிலிருந்துவெளி வருகின்ற அணுகுண்டுக் காவியங்களே நாங்கள் உங்களை வெளியே வீசும்போதுஅன்று யூரோசீமாவில் வீசப்பட்டஐன்ஸ்டீன் உருவாக்கியஅணுகுண்டுகளைப் போல் அழிவுகள்உருவாகப்போவதில்லை அந்த அணுகுண்டுசுரண்டுவோன் சுரண்டப்படுவோன் என்றுஎவரையும் மிச்சம் வைக்காமல்தன் தீ வாயினுள் வைத்துப்பொசுக்கி உண்டு ஜீரணித்துவிட்டது ஆனால், இன்று நீங்களோஏழைகளைச் சுரண்டியதால் தங்கள் வாழ்க்கையைசொர்க்கமாக மாற்றிக்கொண்டிருக்கும்சூழ்ச்சிக்காரர்களின் உல்லாச உப்பரிகைகளைவேரோடு தரைமட்டமாக்கிஇந்நாள் வரையில் சுரண்டப்பட்டுஏழ்மைக் குவியல்களில் வாழ்கின்றமுதுகுத் தண்டுகளுக்குப் புதிய பாதைசமைக்கப் போகின்றீர்கள் இந்த சமுதாய ஜீவநதியைத்தனது நச்சுக் கருத்துக்களால்சாக்கடை நீராக்கி, சகதிக் குளமாக்கிஓட முடியாமல் தேங்கும்தடைகளைக் களைவதற்குஎங்கள் உடலிலிருந்து ஒவ்வொரு செல்லையும்அழித்து உருவாக்கும் எங்கள்அருமைக் கவிதைகளே நீங்கள் வெளியே பாய்ந்து வருவதுஅந்தச் சாக்கடையில் சங்கமாவதற்கு அல்லஉங்களுள் இருக்கின்ற சொல்லணுக்களால்அதிலே இருக்கின்ற கிருமிகளையும்கிளர்ச்சி செய்து போரிட்டு அழித்து ஒழித்துவிட்டுபுதிய ரத்த ஓட்டத்தை உருவாக்கவேநீங்கள் புறப்பட்டுச் செல்கின்றீர்கள் நீங்கள்வரிசை வரிசையாய்ஏட்டில் வந்து படியும்போதெல்லாம்எங்களது கண்களில்தொழிலாளி வர்க்கம்வரிசை வரிசையாக வந்துஓரணியில் திரண்டு கூக்குரல் இடுகின்றகாட்சிகள்தான் தென்படுகின்றன தான் உண்ட உணவை ஜீரணிக்கதன்னைச் சுற்றிக் கூடு கட்டிக்கொண்டிருக்கும்கூட்டுப் புழுக்கள் அல்ல நீங்கள்இந்தச் சமுதாயத்திலுள்ள கொடுங்கோலர்களைக்கொட்டுவதற்காகப் பறந்து செல்லும்குளவிப் பூச்சிகள் இந்தச் சமுதாயத்தில் நீச்சலடிக்க முடியாமல்தத்தளிக்கும் ஏழை மக்களுக்கு நீங்கள்கட்டுமரங்களாகவும் கலங்கரை விளக்கமாகவும்விளங்க வேண்டுமென்றேஎங்கள் சிந்தனைத் தேரோட்டத்திலிருந்துசெதுக்கப்பட்டுப் புறப்படுகின்றீர்கள் எங்கள் சோதனைக் குழாயிலிருந்துவெளி வருகின்ற நீங்கள் குழந்தைகள் அல்லதிராவக ஆவிகள் உங்களை உருவாக்கும் பிரம்மாபின்புறம் கையை வைத்துஉங்கள் தலையெழுத்தை எழுதவில்லைமுன்னே வைத்துதீர்க்க தரிசனப் பார்வையோடுஇரும்புச் சூட்டு எழுத்துக்களால் எழுதுகிறான் உங்களது கதிரொளியால் இங்கு உருவாகப்போவதுபச்சை நிற வயல் வெளிகளல்லசெஞ்சாத்து நிறத்தின் செங்குருதிஆற்றில் மிதக்கக் போகும்துப்பாக்கிக் கட்டைகள் நீங்கள் மேடை ஏறியதும்உங்களுக்கு சூட்டப்படப் போவதுமலர் மாலைகள் அல்லஇரும்புச் சங்கிலிகளும்தூக்கு மரச் சுறுக்கு முடிச்சுமே ஆகும் உங்களை யாரும் தூக்கி வைத்துகுழந்தைப் பாட்டு பாடப்போவதில்லைஉங்களைத் தூக்கி தூக்கி வீசப் போகிறார்கள்ஏனென்றால் நீங்கள்அனைத்தும் வெடிகுண்டுகள் நீங்கள் ஆடப் போவதுஊர்வசியின் மோகன அடிகளல்லதொழிலாளி வர்க்கத்தின் ருத்ர தாண்டவம் உங்களிடமிருந்து பனி உருகுவதால் நீங்கள்வால் நட்சத்திரமாய்த் தெரியப் போவதில்லைஅப்போது உருகப்போவதுதனியுடைமைவாதிகளின் ரத்தக் கொழுப்புகள் உங்கள் அடிகளின் கீழே நசுங்கப்போகும் மாட மாளிகைகள்சுரண்டியதால் உருவான குடிசைகளைவிண் முட்டும் கோபுரங்களாகக் காட்டப்போகின்றன நீங்கள் சுவற்றில் எழுதப்படுகின்றதேர்தல் கோஷங்கள் அல்லஇதயத்தில் கீறப்படுகின்ற வறுமை கீதங்கள் நீங்கள் சிவப்பு விளக்கு போட்டுக்கொண்டுவெளியே வந்தாலும்அங்கே நடக்கப்போவதுபாலியல் வன்கொடுமைகள் அல்லஅங்கே போடப்போவதுபொதுவுடமைப் பூ மஞ்சமும்அறிவுடைய அன்பு வாழ்வுமே ஆகும் நீங்கள் வெளியே வரும்போதுகோழி இறகால் உங்களை நாங்கள்அடைகாக்கப் போவதில்லைசெங்கற்சூலை போட்டுசுட்டு எடுத்து அடுக்குகிறோம் உங்களைக் கொண்டு கட்டப் போகும் மாளிகைக்குகுருதி நீர்தான் தெளிக்கப்பட்டாலும்அதன் நிறம் இறுதியில்வெண்மையாகவே மாறப்போகிறது நீங்கள்நான்கு சுவர் அறையிலேபாப் மியூசிக்கோடு கத்தப் போகும்காட்டுக் கூச்சல் அல்லதெருவின் முனையில்பசியின் கண்களோடும் கிழிந்த உடைகளோடும்ஆவலோடு எதிர்பார்க்கும்ஏழைகளின் காதுகளில் விழப் போகும்பூபாள எழுச்சி ராகங்கள் நீங்கள்இந்தத் தனியுடமைக் கடலைத் தாண்டும்போதுஎதிர்ப்படுகின்ற முதலாளித்துவ அரக்கிகளின்வாயிலே புகுந்து காதிலே வரக்கூடாதுஉன் அகன்ற தீ வாயிலேஅவர்களை விழுங்கிவிட்டுபொதுவுடைமை பூமியிலே காலூன்ற வேண்டும் செல்லுங்கள்திசை மாறிச் சென்று சோம்பிக் கிடக்காதீர்கள்உங்களுக்குநாங்கள் ‘போ போ’ என்று கட்டளை இடவில்லைஉங்கள் காதுகளிலே ‘போர் போர்’ என்றதாரக மந்திரத்தை உச்சரித்து அனுப்புகிறோம் உங்களுக்காகஏழை மக்கள் கோடி கோடியாகக்காத்துக் கிடக்கின்றனர்அவர்களின் கைகளிலேயேஉறுதி மிகுந்த அன்புப் பிணைப்பினை ஏற்படுத்துங்கள்முதலாளித்துவத்தின் தலையிலேசதிராட்டம் போடுங்கள்

பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா

பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா

தோழர் ஜீவானந்தம் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் களங்களில், உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது என்ற இலக்கை நோக்கிச் செல்வதையே இலக்காகக் கொண்ட, காலத்தால் உருவாக்கப்பட்டவர்தான் தோழர் ஜீவா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தோழர் ஜீவானந்தம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907 ஆகஸ்ட் 21ஆம் தேதி பிறந்தார் ஜீவா. ஜீவாவின் பெற்றோர் பட்டம் பிள்ளையும் உமையம்மையும் அன்றைய ஆதிக்க ஜாதியைச் சார்ந்தவர்கள். பொருளாதார வசதியில் குறைந்திருந்தாலும் பட்டம் பிள்ளையின் பொதுப்பணித்துறைக் காவலர் பணி அவரை அரசு விசுவாசியாக வாழ நிர்ப்பந்தித்திருந்தது. தென்பாண்டிச் சீமையில் நிரம்பி வந்த வழக்கத்தின்படி நான்காவதாகப் பிறந்த இந்தக் குழந்தைக்கு மூக்காண்டி என்ற பெயரைச் சூட்டினர். இது அங்கு நிலவி வந்த ஒரு பழக்கம். குலதெய்வமான சொரிமுத்தையன் பெயரைச் சூட்டும் வகையில் சொரிமுத்து என்ற பெயரையும் ஜீவாவிற்கு இட்டனர். பங்கிம் சட்டர்ஜியின் நாவலான ஆனந்த மடத்தில் வரும் ஜீவானந்தர் என்ற பெயரின் தாக்கத்தாலும் விவேகானந்தரின் மீது கொண்ட ஈடுபாட்டாலும் சிராவயல் காந்தி ஆசிரமத்தை அமைத்து நடத்தத் தொடங்கியபோதுதான் தன் பெயரை மாற்றிக்கொண்டார். ஐந்தாவது படிவத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே 80 வெண்பாக்களை இயற்றியவர். இளமைப் பருவத்திலேயே மகாத்மா காந்தி வாசகசாலை அமைத்தார்; நாடகக் குழுக்களை உருவாக்கினார்; கிராமங்களில் மாணவர் அமைப்புகளை உருவாக்கி, கிராமச் சேவைகளில் நிவாரப் பணிகளில் ஈடுபட்டார். ஐந்தாம் படிவம் படித்துக்கொண்டிருந்தபோது சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன் என்ற நாவலையும் ஞான பாஸ்கரன் என்ற நாடகத்தையும் எழுதினார். ஞான பாஸ்கரன் நாடகத்தை அவரே தயாரித்து அரங்கேற்றி, அதில் நடிக்கவும் செய்தார். எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பிற்குக் கோட்டாறு அரசுப் பள்ளியில் சேருகிறபோது வட கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கெடுத்தார். கவிஞர் ஜீவா ஒருபக்கம் தேச விடுதலை, மறுபக்கம் சுயமரியாதை, மூன்றாவது பக்கம் தொழிலாளி வர்க்க விடுதலை என்று முப்பரிமாணம் கொண்ட ஜீவா, சின்னஞ்சிறு வயதிலேயே தேச விடுதலைப் பாடல்களை எழுதியவர் காரைக்குடி வட்டார வாழ்வில் ஒரு பெண்விடுதலைக் கவிஞராகவும் தலித் விடுதலைக் கவிஞராகவும் புகழ்பெற்றவர். மார்க்சியத்தோடும் தொழிலாளி வர்க்கத்தோடும் கொண்ட தொடர்பால் அவரது பாடல்களில் சோசலிசம், ஜனநாயகம், தொழிலாளர் விடுதலை ஆகியவை பாடுபொருளாக அமைந்தன. சிறந்த ஜெர்மனி ஆசிரியரான ரெணி புலாப் மில்லர் எழுதிய போல்ஸ்விசம் அகமும் முகமும் என்ற நூலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்து, அந்தப் பாடலைத் தழுவி 1934இல் கோடி கால் பூதமடா என்ற பாடலை எழுதினார். ஏங்காதெழுந்திருடா என்ற தலைப்பில் அவர் எழுதிய வீரச் சுவை மிக்க பாட்டு, பொதுமையாகக் கடமையை வற்புறுத்தும் பாட்டாகும். செயலில் குதிக்கக் கொதிப்பேறி ஓடும் குருதியில் தெம்பு பாய்ச்சும் பாட்டாக அது இன்றும் விளங்குகிறது. 1938இல் பாசிசம் என்ற தலைப்பில், பாசிச எதிர்ப்பை முன்வைத்து,   பாசிசமே பாசிசமேபாதக ஏகாதிபத்தியத் தீதின் அகோரத்தன்மைநீசத்தனத்தின் எல்லை நிட்டூர ரூபம்நெறியில் சர்வாதிகார வெறி மகாபாபம் என்ற பாடலை எழுதினார். பட்டிமன்றப் பேச்சாளர் ஜீவா கம்பன் விழாவின் ஒருபகுதியாக நடந்த பட்டிமன்றத்தில், கூற்றினும் கொடியவள் கூனியா? சூர்ப்பநகையா? கைகேயியா? என்ற தலைப்பில் ம.பொ.சி, எஸ்.ராமகிருஷ்ணன், தோழர் ஜீவா ஆகியோர் பேசினர். கைகேயியே என்ற தலைப்பில் ஜீவா பேச எழுந்து, 20 நிமிடங்கள் முன்னுரையாகப் பேசினார். பின்பு, ‘கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் கேட்கிறாள். ஒன்று, ராமன் காட்டுக்குப் போக வேண்டும்; இரண்டு, பரதன் நாட்டை ஆள வேண்டும். இவற்றைக் கேட்டதும் தசரதன் மயங்கி விழுந்துவிடுகிறான். இதைக் கண்ட கைகேயி, ராமனுக்கு ஆள் அனுப்புகிறாள். ராமன் வருகிறான். தசரதன் மயங்கிக் கிடக்கிற அந்த நிலையிலேயே ராமனிடம் கைகேயி, ‘நீ காட்டுக்குப் போக வேண்டும்; பரதன் நாட்டை ஆள வேண்டும். இது மன்னனின் கட்டளை’ என்கிறாள். ராமன் உடனே காட்டுக்குப் புறப்படுகிறான். மயக்கம் தெளிந்து தசரதன், ‘ராமன் எங்கே?’ என்று கேட்க, கைகேயியோ அவன் காட்டுக்குப் போய்விட்டான் என்கிறாள். அதைக் கேட்டதும் வருத்தம் தாளாமல் தசரதன் செத்து விடுகிறான். கணவன் இறந்ததைப் பார்த்த கைகேயி தூங்கப் போகிறாள். ராமன் காட்டுக்குப் போயாச்சு; தன்மகன் நாடாள வந்து விடுவான்; தன் கணவனும் இறந்தாச்சு என்று நிம்மதியில் தூங்குகிறாள் என்று கூறிவிட்டு, ஜீவா கூட்டத்தைப் பார்த்து, கூற்றினும் கொடியவள் யார்?  நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள்’ என்று கூற, கூட்டமே கொந்தளித்து ஆரவாரித்தது. 22ஆவது கம்பன் விழாவின் இறுதி நாளில், இதுவரை வழக்கில் இல்லாத வகையில் தனது பேச்சால் கம்பன் அடிபொடி ச. கணேசனின் மனத்தைப் பூரிப்படையச் செய்கிறார். ச.கணேசன் தனது நன்றியுரையில், இதுவரை கம்பன் விழா நடத்திய பயன் முழுவதையும் இன்றுதான் பெற்றேன் என்று கூறி முடிக்கிறார். இவ்வாறுதான், ஜீவா என்ற மார்க்சியவாதி கம்பனைப் பார்த்தார். பாரதியைப்பற்றி சரியான முறையில் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் ஜீவாதான். ஒருமுறை பாரதியைப்பற்றிப் பேசிவிட்டு இறங்கியபோது, பாரதியின் மகள் சகுந்தலா பாரதி ஓடிவந்து, அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு நா தழுதழுக்க, ‘என் தந்தையின் பெருமையை இன்றுதான் நிஜமாக உணர்கிறேன்’ என்றாராம். அதேபோன்று, தாகூர் விழாவில் அவர் பேசி முடித்ததும், தாகூரின் பேத்தி ஓடிவந்து ஜீவாவைப் பாராட்டி, ‘என் தாத்தாவின் கவிதைகள் எவ்வளவு ஆழமானவை என்பதை இன்றுதான் உணர்ந்தேன்’ என்றாராம். இவையெல்லாம் ஜீவா ஒரு மாபெரும் கொள்கையாளர்; எதார்த்த இலக்கிய நெறியைத் தமிழ் மக்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தியவர் என்பதைக் காட்டுகின்றன. போராளி ஜீவா மேடையில் ஓர் வேங்கை பாயுமேகைகளை விண்ணோக்கி வீசி வருமேவீறு கொண்டு ஓர் யானை போரில் கிளம்புமேவெஞ்சேனை முறுக்கேறுமேகோடையின் இடி கொண்டு கொட்டுமேவார்த்தையில் கொஞ்சு தமிழ் விளையாடுமே என்ற வரிகளுக்கேற்ப வாழ்க்கையோடு மல்லுக்கட்டிய தோழர் ப. ஜீவானந்தம், நாடக உலக தேசபக்தரான விஸ்வநாததாஸ் உடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவருக்கு சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன் என்ற நாடகத்தை எழுதித் தந்தவர். ஜீவா பத்தாம் வகுப்பு படிக்கும்போது காந்திஜியைப் பற்றியும் கை ராட்டினத்தைப் பற்றியும் எழுதியபாடல், அந்த நாடகத்தில் முதல் பாடலாக இருந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் ஆகியன ஜீவாவை தேசிய இயக்கத்தின்பால் ஈர்த்தன. கதர் ஆடை அணியும் வழக்கத்தை அவர் கடைசிவரை கைவிடவில்லை. அவருடைய அன்னை இறந்தபோதுகூட கதர் ஆடை கிடைக்காததால் கொள்ளி வைக்கவே மறுத்துவிட்டார். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வே.சு. ஐயர் நடத்திய பரத்வாஜர் ஆசிரமத்தில் ஏற்பட்ட சாதியப் பாகுபாடு, ஜீவாவைப் பொதுவுடைமையை நோக்கி நகரச் செய்தது என்பதில் இருவேறு கருத்து கிடையாது. சிராவயல் ஆசிரமத்தில் வர்ணாசிரம தர்மம் பற்றிக் காந்தியிடம் விவாதித்தார். காந்திஜியின் வர்ணாசிரமக் கருத்துக்கள் முற்போக்கானவை அல்ல என்பதை உணர்ந்தார். உலகில் உள்ள துன்பங்கள் எல்லாம் முடிய வேண்டுமானால், சமூகக் கொடுமைகள் எல்லாம் முடிய வேண்டுமானால், சமூகச் சீர்திருத்தம் மட்டும் போதாது;  சமூகப் பொருளாதார அமைப்பை மாற்ற வேண்டும்; அதைச் சமதர்ம அஸ்திவாரத்தில் கட்ட வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். காந்தியத்திலிருந்து விலகி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து, வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு, தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக, அவரைச் சங்கிலியில் கட்டி அடித்து இழுத்து வந்தனர் அன்றைய ஆங்கிலேயக் காவலர்கள். வர்ண பேதங்களுக்கு எதிராக மட்டுமல்லாது வர்க்க பேதங்களுக்கு எதிராகவும் போராடவேண்டும் என்று பெரியாரிடம் வாதிட்டார். 08.01.1932இல் கோட்டையூரில் தடை உத்தரவை மீறிப் பேசிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுச் சிறை புகுந்தார். சிறை வாழ்க்கையின்போது பகத்சிங்கின் தோழர்களான பூதேஸ்வர் தத், குந்தர் லால், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி போன்றோரைச் சந்தித்ததன் மூலம், 1932இல் ஒரு காங்கிரஸ்காரராகச் சிறை புகுந்து, அதே ஆண்டு நவம்பரில் ஒரு கம்யூனிஸ்டாக சிறையிலிருந்து வெளிவந்தார் ஜீவா. பின்னர் சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் சென்னை மாகாணச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 25 மட்டுமே. அதன்பிறகு 1936இல் தமிழ்நாட்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் ஜீவா உறுப்பினராக இருந்தார். தமிழ்ப் பற்றாளர் ஜீவா மறைமலை அடிகளுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, தனித்தமிழ்ப் பற்றாளராக, ஜீவா என்ற தன் பெயரை உயிர் அன்பன் என்று மாற்றிக்கொண்ட அவர், மிகப்பெரும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்டவர். ஜீவாவின் நடவடிக்கைகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பிரிட்டிஷ் அரசு, வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டு, ஜீவா தமிழ்நாட்டில் நடமாடத் தடை விதித்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர், நேரு தலைமையிலான அரசு 1948 முதல் 1951 வரை கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்த காலத்தில் சிறை சென்று திரும்பினார். 1952இல் அன்றைய வண்ணாரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்றம் சென்றார். திமுக சட்டமன்றத்துக்குள் நுழையும் முன்பாகவே, தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டுமென்று சட்டமன்றத்தில் பேசியவர் தோழர் ஜீவானந்தம். தமிழ்நாட்டில் தமிழ் மொழியே ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். கல்வி, நீதிமன்றம், நிர்வாகம் என எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் என்று 1952 செப்டம்பர் 29இல் சட்டமன்றத்தில் முழங்கினார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்த அவர், மேற்குத் தாம்பரத்தில் ஒரு சிறிய குடிசையிலேயே கடைசிவரை வாழ்ந்தார். இதைக் கேள்விப்பட்ட அன்றைய முதல்வர் காமராஜர், அவருக்குத் தனியே வீடு ஒதுக்க முன்வந்தபோதும் அதை ஏற்க மறுத்துவிட்ட மாமனிதர் அவர். 1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் உடல்நலக் குறைவால் அவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். அவரது இறுதிச் சடங்கில் பாவலர் வரதராஜன் கண்ணீர் மல்கப் பாடிய வரிகள் இவை. சிங்கமென முரசறைந்த குரலும் எங்கே?செந்தமிழை ஆய்ந்து சொன்ன உருவம் எங்கே?செங்கொடி ஈன்றெடுத்த ஜீவா எங்கே?இனி எங்கள் குறை ஈடு செய்ய யார்தான் இங்கே?