மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 11

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 11

12. திருமண உரிமைகளின் பரிணாம வளர்ச்சி இன்றைய சமுதாயத்தில் கருமுட்டை அல்லது விந்து தானம் செய்தவரின் பெயரை அதை தானமாகப் பெற்றவர்களுக்குக்கூடத் தெரியாத அளவிற்கு ரகசியமாக வைக்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. ஆனால், கருமுட்டை அல்லது விந்து தானம் என்ற அதிநவீன விஞ்ஞானமுறை இல்லாததாலும் குழந்தை ‘வரம்’ தந்தவரே நேரடியாக உடலுறவு வைத்துக்கொள்வதாலும் குழந்தையின் தாய் யார் என்பதையும் தந்தை யார்  என்பதையும் மறைக்க இயலாத சூழல் அப்போது இருந்தது. அது பல்வேறு சமயங்களில் விதுரன் போன்ற ஞானிகளைக்கூடக் கடும் அவமானத்திற்கு உள்ளாக்கி வைத்ததையும் பார்க்கிறோம். ஒருவகையில் பார்த்தால், குருவம்சத்தினர், மீனவர் குலப் பெண்ணான சத்யவதியின் வழித்தோன்றல்கள். இன்னொரு கோணத்தில் பார்த்தால், வேதங்களைத் தொகுத்தவர் என்று சொல்லப்படும் வேதவியாசரின் வாரிசுகள் என்பதை மகாபாரதத்திலிருந்து நாம் புரிந்துகொள்கிறோம். அதனால், பீஷ்மரைப் போன்றவர்கள், தொடர்ந்து சத்திரியகுலம் மட்டுமே அரசாளத் தகுதியுள்ளவர்கள் என்று சொல்வது மகாபாரதக் கதையின் கதைப்போக்கிற்கு எதிர்மாறாக இருப்பதை வாசகர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது. பாண்டு, மாத்ரியுடன் உடலுறவுகொள்ள முற்பட்டபோது, முனிவரின் சாபத்தின்படி தலை சுக்கு நூறாக வெடித்துச் செத்துப் போனான். பாண்டுவின் இளைய தாரமான மாத்ரி, கணவனுடன் உடன்கட்டை ஏறித் தன்னை மாய்த்துக்கொண்டாள். ஆனால், பாண்டுவின் முதல் மனைவியான குந்திதேவி, உடன்கட்டை ஏறுவதைத் தவிர்த்துவிட்டு, பாண்டவர்களை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டாள். இந்த நிகழ்வு, உடன்கட்டை ஏறும் வழக்கம் மகாபாரதக் காலத்திலேயே இருந்தது என்பதைக் காட்டுகிறது. ஆனால், உடன்கட்டை ஏறுவதைப் பொறுத்தவரையில், இறந்தவரின் மனைவிக்குக் குழந்தைகள் இருந்தால் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொள்ளத் தேவையில்லை என்பதும், குறைந்தது குழந்தைகளைக் கவனித்து வளர்க்க இறந்துபோன கணவனுக்கு குந்திதேவி போல இன்னொரு மனைவி இருந்தால்தான் உடன்கட்டை ஏறி, ‘சதிமாதா’ ஆகமுடியும் என்பதும் விளங்கும். எனவே, மகாபாரதக் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் மனைவி கடைபிடிக்க வேண்டிய கட்டாயமான நியதி அல்ல என்பதைத்தான் குந்திதேவியும் மாத்ரியும் நமக்கு உணர்த்துகிறார்கள். மகாபாரதக் காலத்தில் பெண்ணிற்குப் பல உரிமைகள் மறுக்கப்பட்டது என்றாலும் பெண் என்பவள் ஆன்மா என்று ஒன்று இல்லாத ஜீவன் என்ற நிலைப்பாடு அப்போது இல்லை என்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. பெண் ஆன்மா இல்லாதவள் என்பதால், இறந்துபோன கணவனுடன் உடன்கட்டை ஏறி சதிமாதாவாகக் கடமைப்பட்டவள் என்பது, பின்னாளில் பார்ப்பானியத்தால் முனமொழியப்பட்ட நிலைப்பாடு. உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கம், ராஜாராம் மோகன்ராய் மற்றும் ஆங்கிலேயர்களின் முன்முயற்சியினால் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டுவிட்டது. இப்போது ‘உடன் கட்டை’ ஏறும்படி செய்பவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படுகிறது. மத ரீதியான பாரம்பரிய  வழக்கம் என்ற வாதத்தைச் சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. இதன் காரணமாக, ‘உடன்கட்டை’ ஏற்றும் வழக்கம் இப்போது இந்தியாவில் அடியோடு ஒழிந்துவிட்டது. அதிலும், பலதார மணம் புரிவது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 494 சொன்னபிறகு, ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கருத்தியல், நடைமுறைக்கு வந்துவிட்டது. மேலும் பெண்ணிற்கு 1955ஆம் ஆண்டு, இந்து திருமணச் சட்டத்தின் மூலம், விவாகரத்து உரிமை வழங்கப்பட்ட பின்பு, ‘கற்பு’ என்ற கற்பிதத்திற்குக் கொடுக்கப்பட்டு வந்து புனித அந்தஸ்தைச் சட்டம் ஒழித்துவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. இருபாலருக்கும் திருமண உரிமை வழங்கப்பட்ட பின்பு, இந்து திருமணச் சட்டத்தில் கூறியுள்ள காரணங்களின் அடிப்படையில், இருபாலரும் விவாகரத்து பெற்றுக்கொள்வதோடு, வேறு ஒருவரை மறுமணமும் செய்துகொள்ள முடியும். அவ்விதம்  மறுமணம் செய்தவரையும் விவாகரத்து செய்தால், மீண்டும் மறுமணம் செய்துகொள்ளும் உரிமையைப் பெறுவதால், அந்த உரிமையின் உள்ளே ‘பலதாரத் திருமண உரிமை’யும் ‘பலபுருஷத் திருமண உரிமை’யும் ஒளிந்திருப்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அதாவது, ஒரு சமயத்தில் ஒரு பெண் (அ) ஆண் பல ஆண்களை அல்லது பெண்களை மகாபாரதக் காலம் போல மணம் செய்துகொள்ள முடியாது என்றாலும், வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு மறுமணத்தின்போதும், பல புருஷர்களுடன் வாழும் உரிமையைப் பெண்களும் பல பெண்களுடன் வாழும் உரிமையை ஆண்களும் பெற்றுவிட்டனர் என்பதுதான் இன்றைய சட்ட நிலைப்பாடு. சட்டமே அங்கீகாரம் வழங்கிய பின்பு, இன்றும் கற்பின் புனிதம் பற்றியும் மேன்மை பற்றியும் பேசுவது நடப்பில் இருக்கும் இந்து திருமணச் சட்டப் பிரிவுகள் கூறும் உள்ளடக்கம் பற்றிய அறியாமையின் காரணமாகச் சொல்லப்படும் வாதமேயன்றி வேறில்லை. பெண்ணை உடன்கட்டை ஏற்றுவதைப் புனிதச் செயல் என்று கொண்டாடிய காலத்திலிருந்து, விவாகரத்து உரிமை வழங்கியதன் மூலம், கற்பு என்ற கற்பிதத்திற்குக் கொடுத்துவந்த புனித அந்தஸ்து சட்டத்தால் பறிக்கப்பட்டுவிட்ட காலகட்டத்திற்கு வந்துவிட்டோம் என்பதுதான் புரிந்துகொள்ளப்பட வேண்டிய சமூகப் பரிமாணம். இப்போது, ‘திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட புனித உறவு’ என்ற அபத்ததிலிருந்து, வால்டேர் போன்ற மேலைநாட்டுச் சிந்தனையாளர்கள் சொல்லியவண்ணம், ‘திருமணம் என்பது இருவருக்குமிடையில் செய்துகொள்ளப்படும் சமூக ஒப்பந்தம் (Social Contract)’ என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என்பது தெளிவு. இது புரியாதவர்கள், திருமணம், விவாகரத்து, மறுமணம் இவற்றைப் பற்றிய பழைய பாரதக் கலாச்சாரம்தான் உலகத்திற்கே வழிகாட்டிக்கொண்டு இருக்கிறது என்று பத்தாம்பசலித்தனமாக உளறிக்கொண்டு இருக்கிறார்கள். அந்தப் புரிதல் இல்லாததால்தான், இந்து மதம், உலகில் உள்ள ஏனைய மதங்களைவிட மேன்மையான மதம் என்ற கருத்தோட்டத்தில் இருந்துகொண்டு, அவர்கள் தங்கள்  கண்ணோட்டத்தை உலகக் கண்ணோட்டததிலிருந்து சுருக்கிக்கொண்டுவிடுகிறார்கள். (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

திருப்பூர் எனும் திருப்புமுனை – 3

திருப்பூர் எனும் திருப்புமுனை – 3

பொதுவாக உலகெங்கிலும் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுக்கு வாடிக்கையாளர்களால் கொடுக்கப்பட்ட ஆர்டருக்குத் தேவையான ஆடைகளை உற்பத்தி செய்ய, தங்களின் தேவைக்கேற்ற தர வரையறைக்குள் துணி தயாரிக்கும் ஆலைகளிடம் துணிகளை ஆர்டர் செய்து பெற்று, ஆடைகளைத் தயாரித்து அனுப்புவர். திருப்பூரைப் பொறுத்தமட்டில், இங்கு துணி தயாரிப்பு நிறுவனம் என்பது கிடையாது (அண்மைக் காலங்களில் உருவாகி வருகிறது). ஆடைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தேவைகளுக்கேற்ப நூலை மொத்தமாக நூற்பாலைகளிலிருந்து கொள்முதல் செய்து, அதனைப் பல்வேறு படிநிலை சார்பு நிறுவனங்களுக்கு அனுப்பி, ஆடைத் தயாரிப்பிற்கு ஏற்ற வகையில் துணியாக உற்பத்தி செய்யபடும். முதல் நிலை, நிட்டிங் என அழைக்கப்படும். வாங்கிய நூலை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த குறியீடுகளுக்கு உட்பட்டு, அதற்குரிய துணி உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டு துணியாகப் பின்னல் செய்யப்படும். அடிப்படைத் துணி இவ்வாறாகத் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்நாட்டு இயந்திரங்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்ட நிலை மாறி, தற்போது அதிநவீன இறக்குமதி இயந்திரங்கள் வாயிலாக, அதிகளவு துணி உற்பத்தி நடைபெறுகிறது. உற்பத்தி செய்யபட்ட துணி, வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ள விவரக்குறிப்பிற்கு உட்பட்டு சாயம் ஏற்றப்பட்டு அல்லது சலவை செய்யப்பட்டு, சில சமயங்களில் துணியாக இருக்கும் நிலையிலேயே பிரிண்ட் செய்யப்பட்டு, உரிய செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு, ஆடைகளாகத் தைத்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும். இதில் ஆடைகளின் வடிவத்திற்கு ஏற்ப பிரிண்டிங், எம்பிராய்டரி போன்ற மதிப்புக்கூட்டல் செய்யப்படும். இது தவிர, அக்சஸரீஸ் என அழைக்கப்படும் லேபிள், டேக், ஸ்டிக்கர் மற்றும் ஆடைகளைப் பாதுகாப்பாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப நெகிழிப் பைகள், அட்டைப் பெட்டிகள் உள்ளிட்டவை அதற்குரிய தயாரிப்பு நிறுவனங்களிடம் ஆர்டர் செய்து பெறப்பட்டு ஆடைகளைப் பேக்கிங் செய்து அனுப்பிவைக்கப்படும். மேற்சொன்ன விபரங்களைக்கொண்டு திருப்பூரின் பின்னலாடை உற்பத்திச் சங்கிலியைச் சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம். இந்த உற்பத்திச் சங்கிலியின் ஒவ்வொரு நிலையிலும் நூறு முதல் ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. 5 லட்சம் ரூபாய் முதல் கோடிகளில் – நிறுவனத்தின் உற்பத்திப் பின்னணி மற்றும் திறன் அடிப்படையில் – முதலீடு செய்யப்பட்டு இயங்கிவருகின்றன. குறைந்தபட்சம் 5 முதல் ஆயிரங்கள் என்னும் எண்ணிக்கையில் ஒவ்வொரு நிறுவனத்திலும் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த உற்பத்திச் சங்கிலியின் தலைமைப் பொறுப்பு, ஏற்றுமதி அல்லது உள்நாட்டு ஆடை உற்பத்தியாளரையே சாரும். ஒவ்வொரு நிலை சார்பு நிறுவனமும் அடுத்தடுத்த நிலை சார்பு நிறுவனங்களைச் சார்ந்தே இயங்குகிறது. சார்ந்து இயங்கினாலும் ஒவ்வொரு படிநிலை உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பு மட்டுமே இந்த மாதிரியான உற்பத்திச் சங்கிலியை வெற்றிகரமாக இயங்க செய்யும். இதுவொரு இயல்பான கலாச்சாரமாகவே இங்கு உருவெடுத்துள்ளது. இப்படியான ஒரு அமைப்பை நான் அறிந்தவரை உலகளவில் திருப்பூரில் மட்டுமே காண இயலும். திருப்பூரில் உற்பத்தியாகும் ஒவ்வொரு பின்னலாடையையும் ஒரு பண்பாட்டு உருவாக்கமாகவே நாம் பார்க்கலாம். இந்தப் பண்பாட்டு இயக்கம் பல ஆயிரம் நபர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்தியது. நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளியாக உயரப் பெரும் காரணம் இந்தப் பண்பாட்டு விழுமியமே என்று சொன்னால் மிகையல்ல. ஒரு தொழில் நகரம் உருவாகும்போது, ஒரு சமூகக் கட்டமைப்பு உருவாகும். அந்த வகையில், இங்கு பனியன் தொழில் சாராத பல தொழில்கள், அதாவது ஒரு கை வண்டியில் காய்கறி, பழங்கள் விற்கும் எளிய வியாபரி முதல், மளிகை, உணவகம், தங்கும் விடுதிகள், பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், மருத்துவமனைகள், திரை அரங்குகள், நகைக் கடைகள், அடுமனைகள் (பேக்கரி) என, பல அடுக்குகளில் தொழில்கள் உருவாகிச் செழித்து வளர்ந்துள்ளன. இப்படியாக, திருப்பூரின் பின்னலாடைத் தொழில் என்பது, மிகப் பெரிய கட்டமைப்பைக் கொண்டது. ஒரு கிராமமாக ஒரு காலத்தில் அறியப்பட்ட ஊர், இன்று ஒரு மாவட்டத் தலைநகராக எவ்வாறு தன்னைத்தானே உயர்த்திக்கொண்டது என்பதை மேற்சொன்ன விவரங்கள் வாயிலாகப் புரிந்துகொள்ளலாம். இங்கு பின்னலாடைத் தொழிலுக்கு ஒரு பிரச்சனை என்றால், அதன் பாதிப்பு மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவே இவ்வளவு செய்திகளைக் கூறவேண்டியுள்ளது. இந்தத் தொடரின் இரண்டாம் பகுதியை வாசித்த ஒரு சகோதரி, நொய்யல் ஆற்றின் நிலை குறித்த தனது கவலையைப் பகிர்ந்திருந்தார். அவரின் கவலை, ஒட்டுமொத்த நொய்யல் வழித்தடச் சமூகத்தின் கவலை என்பதாகவே நாம் கருதலாம். ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் அதில் ஒரு அங்கம். கண்களை விற்று ஓவியம் வாங்குவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒட்டுமொத்தத் தொழில்துறையினரின் நிலைப்பாடும் அதுதான். இந்தத் தொடரில், நொய்யல் குறித்து, விருப்பு வெறுப்பின்றி தனி அத்தியாயமே வரும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வெள்ளிக்கிழமை நான்காம் அத்தியாயத்தில் மற்றுமொரு தரவோடு உங்களைச் சந்திக்கிறேன்.

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 10

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 10

11. மகாபாரதத்தில் தாசியும் நவீன பாரதத்தில் கொத்தடிமையும் திருதராஷ்டிரன் ஏன் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாகப் பிறந்தான் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் சொன்ன வியாசர், அதற்கு திருதராஷ்டிரனின் தலைவிதியோ கர்மாவோ காரணம் என்று சொல்லி மழுப்பவில்லை. திருதராஷ்டிரன் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாகப் பிறந்தததற்கு, அவனுடைய தாய் அந்நியருடன் உறவு கொள்வதை எண்ணி, கண்ணை மூடிக்கொண்டதால் ஏற்பட்ட எதிர்பாரத விபத்து என்று கூறிக் கதையை நகர்த்துகிறார். முதல் நாள் இரவு, நன்கு அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் தள்ளப்பட்ட அம்பிகை, பயங்கரமான உருவத்தில் இருந்த வேறொரு ஆணுடன் கலவி முடியும்வரை, கண்ணை இறுக மூடிக்கொண்டுவிட்டாள். அம்பிகை, கலவியின்போது கண்ணை இறுக மூடிக்கொண்டதால், திருதராஷ்டிரன் பார்வை  இல்லாத மாற்றுத்திறனாளியாகப் பிறந்தான் என்கிறார் வியாசர். அம்பாலிகையும் வியாசருடன் சகஜமாக உறவில் ஈடுபடவில்லை. மிகுந்த கூச்சத்துடன் நடந்துகொண்டதால் உடல் வெளுத்தும் மலடனாகவும் பாண்டு பிறந்தான் என்கிறது மகாபாரதம். ஆகவே, இரண்டு மனைவியர் இருந்தும் சாபத்திற்கு முன்பே அவனுக்கு குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. இதுபோகவும் அம்பிகையின் சேடிப் பெண்ணாக வேலை பார்த்த ஒரு பெண்ணையும் வியாசருடன் உறவு கொள்ள வைத்தார்கள். அந்த வேலைக்காரப் பெண்ணிற்குப் பிறந்தவன்தான் விதுரன். இந்தச் சம்பவங்களின்படி பார்த்தால், திருதராஷ்டிரனும் பாண்டுவும் சத்ரியர்களாக மாட்டார்கள்.  ஆனால் அவர்கள் விசித்ர வீரியனின் வாரிசுகளாக அரச பதவி பெற்றனர். அவர்களுடைய சகோதரன் விதுரன் மட்டும் சூத்திரனாகவே நடத்தப்பட்டான். திருதராஷ்டிரனும் பாண்டுவும் விதுரனும் வியாசருக்குப் பிறந்தவர்கள் என்பதால், ஒன்றுவிட்ட சகோதரர்கள் ஆவார்கள். ஆனால், விதுரனின் தாய் வேலைக்காரி (தாசி) என்பதால், மற்ற இருவரும் விசித்திர வீரியனின் புதல்வர்களாக ஒப்புக்கொள்ளப்பட்ட போதும், விதுரனை விசித்ரவீரியனின் மகனாக அன்றைய உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவும் ஏறத்தாழ, கர்ணன் பாண்டுவின் புத்திரனாகக் கருதப்படமாட்டான் என்ற சட்ட நிலைப்பாட்டோடு ஒத்த நிலைப்பாடாகும். விதுரன், பெரிய நீதிமான் என்று கொண்டாடப்பட்டவன். கிருஷ்ண பரமாத்மாவின் பரம பக்தன். அவன் கையில் இருந்த சிவதனுசு, உலகை வெல்லக்கூடியது. விதுரனால் சொல்லப்பட்ட சமூக நீதிகளை ‘விதுர நீதி’ என்ற பெயரில் தொகுத்துள்ளார்கள். திருதராஷ்டிரன் அரசவையில் முக்கிய அமைச்சராக இருந்த விதுரன், பல சமயங்களில் பாண்டவர்களை ஆதரித்துப் பேசும் வழக்கமுள்ளவனாக இருந்தான். அது துரியோதனனை எரிச்சலடைய வைத்தது. கிருஷ்ணன் ஊசிமுனை நிலம் கேட்டு சமாதானத் தூதுவனாக வந்தபோது, ‘நீ என்ன இருந்தாலும் தாசி மகன் (வேலைக்காரியின் மகன்)தானே’ என்று விதுரனை துரியோதனன் கடுமையாக வசை பாடினான். கர்ணனுக்குத் தன் தாய் யார் என்று தெரியாததால் ஏற்பட்ட அவமானத்தைவிட, தன் தாய் யார் என்பது தெரிந்ததால் விதுரன் சொல்லொணா அவமானப்பட்டான். பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி என்ற காரணத்திற்காக, அரசாட்சிப் பொறுப்பேற்கும் உரிமையைத் தன் தந்தை இழந்ததும் மூத்தவன் இருக்கும்போது இளையவன் மன்னனானதும் துரியோதனனை நிலைதடுமாற வைத்த மோசமான சட்ட நிலைப்பாடுகள். இவை ஒருபுறமிருக்க, ‘தாசி மகன்’ (வேலைக்காரியின் மகன்) என்றழைக்கப்பட்ட விதுரனின் தாயையும் அவளைப் போல அந்தப்புரங்களில் பணியாற்றிய வேலைக்காரப் பெண்களைப் பற்றியும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் அடிமைச் சமுதாயம் ஒருபோதும் இருந்ததில்லை என்பது சில தத்துவ ஆசிரியர்களின் கருத்து. அடிமைச் சமுதாயத்தைக் கடந்துதான் நிலப் பிரபுத்துவ சமுதாயம் ஏற்பட்டது என்று வாதிடுவோரும் உண்டு. இந்தச் சர்ச்சை இன்றும் முடிவில்லாத சர்ச்சையாக இருக்கிறது. அந்தப்புரப் பெண்களுக்குப் பணிவிடை செய்து அந்தப்புரத்திலேயே வாழும் பெண்களை, வேத வியாசர் ‘தாசி’ என்ற பெயரில்தான் அழைக்கிறார். ‘தாசி’ என்ற சொல்லுக்கு, வேலைக்காரி என்ற அர்த்தம் மட்டுமின்றி அடிமை என்ற அர்த்தமும் உண்டு. ஆனால், மகாபாரதத்தில் சொல்லப்படும் யயாதியின் கதையில், அசுர குருவின் (பிராமணர்) மகள் தேவயானியை, யயாதி மணந்தபோது அசுரர்களின் அரசனின் மகளான சர்மிஷ்டை, அவளுடைய தீய செயலுக்கு (வேறொன்றுமில்லை.. அசுர குருவின் மகள் தேவயானியை அரசனின் மகள் என்ற நிலையில் அவமதித்தாள்) தண்டனையாக தேவயானியின் ‘தாசி’யாக அனுப்பப்படுகிறாள் என்கிறது  மகாபாரதம். அதுமட்டுமன்றி, பின்ளாளில் யயாதி, சர்மிஷ்டையை தேவயானிக்குத் தெரியாமல் மணந்துகொண்டதால், தேவயானியை சமாதானம் செய்வதற்காக அசுர குரு சுக்கிராச்சாரியார், ‘உன்னுடைய யௌவனம் இப்போதே அழிந்து நீ முதுமை எய்துவாயாக’ என்று யயாதிக்கு சாபம் கொடுத்ததாகவும் மகாபாரதம்  சொல்கிறது. யயாதியின் கதை தனிக்கதை. அதை ‘தாசி’ பற்றிய பதப் பிரயோகத்தை விளக்குவதற்காக இங்கே குறிப்பிட நேர்ந்தது. தாசி என்பவள் ஒரு மணப்பெண்ணுக்கு தரப்படும் சீர்வரிசைப் பொருளைப்போல, எந்த உரிமையும் இல்லாத ஒரு அஃறிணைப் பொருளாக நடத்தப்படுவதை மகாபாரதத்தில் பார்க்கிறோம். அதனால் ‘தாசி’யை விரும்பி மணந்த யயாதி, சபிக்கப்பட்டான். விதுரனின் தாய் அவளுடைய விருப்பமின்றியே வியாசருடன் உடலுறவு கொள்ளும்படி செய்யப்பட்டாள். இந்த அடிமைமுறை, இப்போது இந்தியாவில் சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ‘கொத்து’ என்றால் உணவு என்று அர்த்தம். ‘கொத்தடிமை’ என்றால் உணவை மட்டும் கொடுத்து அடிமையைப் போல 24 மணி நேரமும் முதலாளிகளுக்கு உழைக்க வைக்கப்படுபவர்கள் என்று பொருள். கொத்தடிமை முறை இப்போது பெரும்பாலும் செங்கல் சூளைகளில்தான் இருக்கிறது. அங்கே, பள்ளிக்கூடம் போகவேண்டிய மாணவர்கள் வறுமையின் காரணமாக, ‘கொத்தடிமை’ ஆக்கப்படுகிறார்கள். அவர்கள் விலங்குகளைவிடக் கேவலமான வாழ்க்கை முறைக்கு உள்ளாக்கப்படுவதுடன், ஒரு சுதந்திர நாட்டில் எந்த மனித உரிமையும் இல்லாமல் ஒட்ட சுரண்டப்படுகிறார்கள். இப்போது இந்த முறை ‘சுமங்கலித் திட்டம்’ என்பதுபோல, பல்வேறு பெயர்களில் நூற்பாலை முதல் பல்வேறு தொழில்களில் கால் பதித்துவிட்டது. எங்கே இந்தக் கொத்தடிமை முறை வழக்கில் இருக்கிறதோ, அங்கே பெண்கள் எஜமானர்களின் காமப் பசிக்கு இரையாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. ‘கொத்தடிமை’ முறை குற்றம் என்று சட்டம் அறிவித்துவிட்டாலும் மகாபாரதக் காலத்தில் இருந்ததைப்போல், இன்றும் அது வழக்கில் இருப்பதைப் பார்த்து ரத்தக்கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது. இப்போது, ‘தொழில் வளர்ச்சியின்’ மூலம் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துகிறோம் என்ற சாக்கில், அந்நிய முதலாளிகளை இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அழைக்கும் அரசுகள், அவர்கள் தொழில் நடத்த சாதகமான சூழலை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில், இதுவரை 8 மணி  நேரமாக இருந்த வேலை நேரத்தை 12 மணி நேரமாக்க முயல்கிறார்கள். 8 மணி நேர வேலை – 8 மணி நேர ஓய்வு – 8 மணி நேர ஆக்கப்பூர்வமான செயல்பாடு என்று, ரத்தம் சிந்தியும் உயிர்த் தியாகம் செய்தும் மே தினத் தியாகிகள் பெற்றுத்தந்த மனித உரிமையைப் பறிப்பதற்கு, எல்லாவிதமான பசப்பு வார்த்தைகளையும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பேசுகின்றன. 12 மணி நேர வேலை என்பது, வேறு வடிவத்திலான கொத்தடிமை முறை என்பதை இந்தியத் தொழிலாளர் வர்க்கம் அறியும். எனவே, வேலை நேரத்தை அதிகரித்து அதிக உபரி மதிப்பை லாபமாகப் பெற, தொழிலாளர் வர்க்கத்தைக் கொடும் சுரண்டலுக்கு உள்ளாக்கி, தொழிலாளியை குடும்பம், சமூகம்,அறிவியல் மற்றும் கலையில் ஈடுபாடு முதலான எல்லா அம்சங்களில் இருந்தும் அந்நியப்படுத்த முன்னெடுக்கப்பட்ட முயற்சி, இப்போது தற்காலிகமாக முறியடிக்கப்பட்டுவிட்டாலும், அந்த அபாயம் முழுமையாக நீங்கிவிடவில்லை என்பதால், அதை எதிர்க்க சதா விழிப்புணர்வோடு இருக்கவேண்டியது அவசியமாகிறது. அன்றாடம் காய்ச்சிகளான கட்டடத் தொழிலாளர்கள், வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘கூலிமுக்குகள்’ அதிகரித்துக்கொண்டே போகின்றன. அந்தத் துறையில் வேலைநேரம் முறைப்படுத்தப்படாமல், கடும் உடல் உழைப்பினால் மாடமாளிகைகளைக் கட்டவேண்டியுள்ளது. அவர்களுக்கு தினந்தோறும் வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதமுமில்லை. அந்தக் கூலி முக்குகள் கடும் போட்டியின் காரணமாக, ‘கொத்தடிமைச் சந்தைகளாக மாறிவருவதை, ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பொய் பேசும் அரசியல்வாதிகள், கருத்திலேயே கொள்வதில்லை என்பது வேதனையான விஷயம். அதனால் மகாபாரதக் காலத்தில் ‘அடிமை முறை’ இருந்ததா? இல்லையா? என்பது ஒருபுறமிருக்க, இன்றைய சமுதாயத்தில் ‘நவீனக் கொத்தடிமை முறை’ இந்தியாவில் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. (வரும் புதன்கிழமை தொடர்வோம்)

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

முதல் பகுதிக்குக் கிடைத்த ஆதரவு, மகிழ்ச்சியையும் கூடவே பொறுப்புணர்வையும் அதிகரித்துள்ளது. ஏனெனில், பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டு, இதுவொரு வரலாற்றுப் பதிவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பிலும் உருவாகியுள்ளது. இவற்றையெல்லாம் உள்வாங்கி, உணர்ந்து, நம்பிக்கையுடன் தொடர்வோம். பொதுவாகவே, கொங்கு மண்டலப் பகுதி என்பது மழை மறைவுப் பிரேதேசம் ஆகும். இந்தப் பகுதியின் நீராதாரம் நொய்யல், பவானி, அமராவதி உள்ளிட்ட ஆறுகளையும் பருவமழையையும் மட்டுமே சார்ந்துள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் விவசாயம், பருவமழை சார்ந்த விவசாயம் என்பதால், பொருளீட்டலுக்கான தேடல் கொங்குப் பகுதிகளில் இயற்கையாகவே அதிகம். இதன் காரணமாகவே, பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் இங்கு பல்கிப் பெருகி, தமிழ்நாட்டின் தொழில் சார்ந்த வேலைவாய்ப்புகளிலும் பொருளாதாரம் மற்றும் உற்பத்திக் குறியீடுகளிலும் கொங்குப் பகுதி எப்பொழுதும் முன்னணி வகிக்கிறது. ஒட்டுமொத்த கொங்குப் பகுதிகளில் ஜவுளித் தொழில் பிரதானமாக வளர்ந்ததற்கு, பருத்தி உற்பத்தியோடு, நான் மேற்சொன்ன காரணங்களும் உள்ளடங்கியுள்ளன. இதையும் கடந்து, ஒரு வரலாற்றுத் தரவையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த கொடுமணல் என்னும் ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் பட்டுப்பூச்சி வளர்ப்பும் பட்டாடைகள் நெய்து ரோமானிய நாட்டிற்கு ஏற்றுமதியும் நடந்துள்ள விவரங்கள் கிடைத்துள்ளன. எனவே, இங்குள்ள மக்களின் மரபணுவிலேயே ஜவுளித்தொழிலின் தாக்கம் இருப்பதே, இங்கு இந்தத் தொழில் வளர முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கூறலாம். 1950-களில் வேறொரு பணியின் காரணமாகக் கல்கத்தா சென்ற திரு. குலாம் காதர் அவர்கள், அங்கிருந்து தையல் இயந்திரங்களை வாங்கிவந்து, இங்கு பனியன் உற்பத்தியை முன்னெடுத்தார்.  தொடக்கத்தில் வெள்ளை நிற உள்ளாடைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. நூலைத் துணியாகப் பின்னுவதற்கான நிட்டிங் இயந்திரம் லூதியானாவிலிருந்து வாங்கப்பட்டு, துணி உற்பத்தி தொடங்கியது. தொடர்ந்து, அந்தத் துணிகளை வெள்ளையாக்கும் வேலைகளைச் செய்ய சலவைப் பட்டறைகள் உருவாக்கப்பட்டன. 1970-களில் துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் சாய ஆலைகள் தொடங்கப்பெற்று, உள்ளாடைகளைத் தாண்டி மேலாடை உற்பத்தியும் தொடங்கியது. பின்னர் ஆடைகளில் அச்சு (பிரிண்ட்) செய்வதற்கான ஆலைகளும் உருவாகின. ஏற்றுமதித் தரம் வாய்ந்த ஆடைகளின் தயாரிப்பு தொடங்கப்பெற்று, 1980-களில் ஏற்றுமதியும் தொடங்கியது. ஒரு தொழில் அமைக்க ஏதுவான சுற்றுச்சூழல், அந்தத் தொழில் குறித்தான நுட்பங்கள், அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள், அதனைச் சந்தைப்படுத்தும் வழிகள், எல்லாவற்றிற்கும் மேலாகப் பொருளாதாரம், இவையனைத்தையும்  உள்ளடக்கியதுதான் வெற்றிகரமான உற்பத்தித் தொழிலுக்கான அடிப்படை. எந்தவித தொழில்நுட்ப, கல்விப் பின்புலமோ வழிகாட்டுதல்களோ இல்லாது, ‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து’ என்னும் திருவள்ளுவரின் வாக்குக்கேற்ப, உயர வேண்டும் என்கிற எண்ணமும் அதற்கான தேடலும் தேடலைப் பகிர்தலும் அதன் வாயிலாக ஒரு சமூகமாக உயர்ந்ததும் திருப்பூரின் வெற்றிக்கான அடிப்படை. இந்தத் தொழிலும் இந்த ஊரும் சுயம்புவாக உருவானவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. 1980-களில் ஒரு தொலைபேசி இணைப்பைப் பெறுவதற்கே பெரும் செலவு செய்து, நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். அதுவும், வெளிநாடுகளுக்குத் தொடர்பு கொள்வது அத்தனை எளிதல்ல. அந்தக் காலகட்டத்தில் திருப்பூர் ஒரு சிறு நகரம்; ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் ஒரு அங்கம். வெளிநாடுகளுக்கான தொலைபேசித் தொடர்புக்கு கோவைக்குச் செல்லவேண்டிய சூழல் இருந்தது. ஏற்றுமதிக்கான ஆவணங்களைத் தயார் செய்துகொண்டு, அதற்கான அனுமதியை அளிக்கும் மத்திய  அரசின் அலுவலகங்களை நோக்கி சென்னை, பெங்களூரு, மும்பை அல்லது டெல்லி செல்லவேண்டும். இத்தகையை சிரமங்கள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களின் மனோபலமும் விடாமுயற்சியும் எதற்கும் துணிந்த செயல்பாடுகளும் இந்தத் தொழிலின் ஆரம்பகாலச் சிரமங்களைக் கடந்து முன்னேற, அடுத்தடுத்து இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்குப் பெருமளவு உதவியது. பொதுவாக ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கும்போது, எளிதாக அந்தத் தொழிற்சாலைக்குள் அனுமதிப்பதோ நுட்பங்களைக் கற்று கொடுப்பதோ சந்தையைப் பற்றிய அறிவினைப் பகிர்வது என்பதோ நடக்காது. இன்றும், இந்தத் தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ள காலத்திலும் பல இடங்களில் இது சாத்தியமில்லை. ஆனால், திருப்பூரைப் பொறுத்தமட்டில் இந்தத் தொழில் வளர்ந்ததற்கான பிரதான காரணங்கள் பல என்பதை ஒவ்வொரு இடத்திலும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். அதுபோலவே, பகிர்தல் என்பது திருப்பூரின் வளர்ச்சிப் பின்புலத்தின் பிரதான காரணங்களில் ஒன்று. தொழில் நுட்பங்கள், நிதியாதாரத் திரட்டல், சந்தை வாய்ப்புகள், மூலப்பொருட்களின் மூலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எந்தவிதத் தயக்கமுமின்றி இந்தத் தொழிலை முன்னெடுக்க வந்த நண்பர்கள், உற்றார், உறவினர், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்களின் நண்பர்கள் எனப் பகிர்ந்து, அவர்களையும் தொழிலை நிறுவச்செய்த பண்பாடு  திருப்பூரைத் தவிர வேறெந்த ஊருக்கும் இல்லாத சிறப்பு என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிடலாம். இதைச் சொல்வதால் மற்ற தொழில் நகரங்களைத் தாழ்த்தியோ அல்லது திருப்பூரை உயர்த்தியோ கூறுவது நோக்கமல்ல. இங்குள்ள இயல்பினையும் சுயம்புவாக இந்தத் தொழில் உருவானதையும் பல பத்தாண்டுகளாக நாட்டின் பல்வேறு மாநிலங்களின் ஆட்சியாளர்கள் திருப்பூரைப் போன்ற ஒரு தொழில்நகரைத் தங்கள் மாநிலங்களில் அமைக்க முயன்று இயலாமல் போனதும் இன்றைய, மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்  திரு. பியூஸ் கோயல், பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில்சார் கூட்டங்களில், ‘திருப்பூரைப் போன்று, இந்தியா முழுவதும் 75 திருப்பூரை உருவாக்கவேண்டும்’ என்று பதிவு செய்வதின் அடிப்படையும் திருப்பூரின் இந்தப் பண்பாட்டு விழுமியமே. ‘திருப்பூர் எனும் திருப்புமுனை’ கட்டுரை, இன்றைய சிக்கலான சூழலை விவரிக்கத்தானே! ஏன் பழைய வரலாறுகளைப் பேசவேண்டும்?’ என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழலாம். திருப்பூரின் தொழில், அடுத்த தலைமுறை மற்றும் சில தொழிற்சாலைகளில் இரண்டாம் தலைமுறைக்கு நகர்ந்துள்ள சூழலில், ஜவுளித் தொழிலைச் சாராதவர்களும் இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது, அவர்களுக்கும் இந்தத் தொழில் கடந்து வந்த பாதை, அதைக் கடக்க ஏற்பட்ட சிரமங்கள், அந்தப் பயணத்தில் நேர்ந்த நல்ல விடயங்கள் மற்றும் தவறான முடிவுகள், செய்யத் தவறிய விடயங்கள் உள்ளிட்டவற்றை விவரித்தால் மட்டுமே, அடுத்து பயணிக்க வேண்டிய பாதையை வலுவாக அமைத்துக்கொள்ளலாம் என்பதாலேயே முந்தைய வரலாறுகளைச் சொல்ல வேண்டியுள்ளது. எனவே கடந்தகால வரலாற்றை மிகச் சுருக்கமாகப் புரிந்துகொண்டு, மேலும் பல்வேறு தகவல்களை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 8

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 8

9. வியாசர் வம்சாவழி விளக்குவதென்ன? அம்பையின் கதை பீஷ்மரின் வாழ்க்கைச் சரித்திரத்தில் துடைத்தெறியப்பட முடியாத களங்கமாகும். ஏனென்றால், அம்பை ‘ராட்சதத் திருமணம்’ பற்றி எடுத்துவைத்த வாதம், மறுக்கப்பட முடியாத சட்ட நியதியாகும். அம்பை சால்வனைக் காதலித்தவள் என்பது உண்மையாக இருந்தாலும்  ராட்சதத் திருமண முறையில் பெண்ணின் விருப்பு வெறுப்பிற்கு முக்கியத்துவமில்லை என்பதால், அதைக் காரணம் காட்டி அவளைத் திருமணம் செய்ய மறுத்தது ஏற்றுக்கொள்ளவே முடியாத அதர்மம். மற்றவர்களின் சார்பில் அவர்களுடைய பிரதிநிதியாக, சுயம்வர மண்டபத்திற்கு வந்திருப்பதை வெளிப்படச் சொல்லாமல், ‘ராட்சதத் திருமண முறையில்’ சகோதரர்களுக்காக, இளவரசிகளை பலவந்தமாகத் தோள்பலத்தினால் தூக்கிச் சென்றுவிட்டு அநாதரவாக விடுவதும் நிச்சயமாக ஏற்கமுடியாத அநீதியாகும். விசித்ரவீரியன் அம்பிகையையும் அம்பாலிகாவையும் திருமணம் செய்துகொண்டான். விசித்ரவீரியனுக்கு மனைவியர் மூலம் குழந்தைப் பேறு இல்லை. மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லாவிட்டால், அந்த அரசவம்சம் அத்தோடு அழிந்துவிடும். மிகவும் உடல் நலிவடைந்திருந்த விசித்திர வீரியன், தனக்கு குழந்தைப்பேறு இல்லை என்பதும் தெரிந்திருந்தான். அரசி சத்யவதி பீஷ்மரிடம் விவாதித்தாள். அப்போதுதான் இன்னொரு ரகசியம் வெளிப்பட்டது. சத்யவதி, சந்தனு அரசனை மணக்கும் முன்பே பராசரர் என்ற முனிவரோடு சேர்க்கை ஏற்பட்டு, ஒரு குழந்தைக்குத் தாயாகியிருந்தாள். அந்தக் குழந்தைதான் வியாசர். விசித்திர வீரியனுக்கு, தாய் வழியில் அண்ணன் முறையாவார். உத்தமரான வேத வியாசரை அம்பிகையோடும் அம்பாலிகையோடும் உடலுறவு கொள்ளச் செய்து, அதன் மூலம் புதல்வரைப் பெற்று, அரச வம்சத்தைத் தழைக்க வைப்பது என்ற யோசனையை சத்யவதி முன்வைத்தாள். பீஷ்மருக்கு வேறு வழியில்லை என்று புரிந்தது. ஆகவே சம்மதித்தார். விசித்திர வீரியனும் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தான். அரச வம்சம், வாரிசின்றித் துண்டிக்கப்பட்டுவிடக்கூடிய அபாயம் பற்றி, பீஷ்மரும் அமைச்சர்களும் அரசியல் பிரதானிகளும் பார்ப்பன வழிகாட்டிகளும் அமர்ந்து, அது குறித்துத் தீவிர ஆலோசனை செய்தார்கள். சத்யவதியின் யோசனை அனைவராலும் ஏற்கப்பட்டது. வியாசரும் அந்த ஏற்பாட்டிற்கு உடன்பட்டார். அதன்பிறகு விசித்திர வீரியன் சிறிது காலத்தில் இறந்துபோனான். விசித்ர வீரியனின் இறப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த ஏற்பாடு நடத்தி முடிக்கப்பட்டது என்றும் விசித்ரவீரியன் உடல் நலிவுற்று சிரமத்தில் இருக்கும்போதே, அவன் சம்மதத்துடன் இந்த ஏற்பாடு நடந்ததென்றும் இருவிதமாகக் கதைகள் சொல்லப்படுகின்றன. ஏனெனில், கணவன் சம்மதத்துடன் இந்த உறவு நடந்தால் மட்டுமே வியாசரின் பிள்ளைகள் விசித்ர வீரியனின் வாரிசுகள் என்று ஏற்கப்படுவார்கள். கணவனின் சம்மதத்துடன் வேறொரு ஆணுடன் கலவியில் ஈடுபட்டுக் குழந்தைப் பேறு அடைவதை இன்றைய சமுதாயத்தின் பார்வையில் பார்த்தால், அது மிக மிக ஆபாசமானதும் அசிங்கமானதுமான செயலாகத் தோன்றும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், உடலுறவின்றி கருமுட்டை அல்லது விந்து தானம் செய்து, செயற்கைக் கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை ஒத்த ஏற்பாடு இது. இந்த முறையைப் பல்வேறு கோணங்களில் இருந்து, பல்வேறு விதமாக நியாயப் படுத்தினாலும் இன்றைய சமுதாயத்தால் ஏற்க முடியாத கேவலமான ஏற்பாடாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. இதிலும் அம்பிகை மற்றும் அம்பாலிகையின் விருப்பம் குறித்து யாரும்  கவலைப்படவில்லை. இது அரச வம்சத்தை விருத்தி செய்ய, அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நியதி. வியாசருக்கும் அம்பிகைக்கும் பிறந்த திருதராஷ்டிரன், பிறவியிலேயே பார்வை இல்லாதவன். வியாசருக்கும் அம்பாலிகைக்கும் பிறந்த மகன் பாண்டு. திருதராஷ்டிரன் பாண்டுவிற்கு மூத்தவன். மூத்தவன் என்ற வகையில் அஸ்தினாபுரத்து அரசனாக வேண்டியவன் திருதராஷ்டிரன்தான். ஆனால் பார்வை இல்லாதவன் என்பதால், அரசனாக அவனுக்குத் தகுதியில்லை என்று கருதி, இளையவனான பாண்டுவிற்குத்தான் மன்னனாகப் பட்டம் சூட்டினார்கள். பாண்டு, தனது மனைவியரான குந்திதேவி மற்றும் மாத்ரியுடன் கானகத்திற்குப் போனபோதுதான், பாண்டுவின் பிரதிநிதியாக, அஸ்தினாபுரத்தின் மன்னாக, திருதராஷ்டிரன் ஆட்சி நடத்தினான். இதுதான் மகாபாரத இதிகாசத்தில் குருஷேத்ர யுத்தம் நடந்ததற்கான மூலகாரணம் என்பதை விளங்கிக் கொள்ளாவிடில் மகாபாரதமே விளங்காது. பார்வையற்றவன் அல்லது மாற்றுத் திறனாளிக்கு மன்னனாக உரிமையில்லை என்பது அன்றைய சட்ட நிலைப்பாடு. அந்த பாரதக் கலாச்சார நிலைப்பாடு இன்று மாறிவிட்டது. மாற்றுத் திறனாளி என்பதற்காக, யாரையும் எந்த ஒரு பொறுப்பு வகிப்பதில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்பதை சொல்லத் தேவையில்லை. குருக்ஷேத்ர யுத்தத்தின் அடிப்படைக் காரணமாக இருந்த ஒரு சட்ட நிலைப்பாடு, இன்று காலாவதியாகிவிட்டதைப் பார்க்கிறோம். இந்தத் தகுதி நிர்ணயம் இல்லாமல் இருந்திருந்தால், மூத்தவனான திருதராஷ்டிரன்  அஸ்தினாபுரத்தில் சட்டப்பூர்வமான மன்னனாகி இருப்பான். திருதாஷ்டிரனின் புதல்வர்களான கௌரவர்களும் அஸ்தினாபுர ராஜ்ஜியத்தின் சட்டப்பூர்வமான வாரிசுகளாகி இருப்பார்கள். பாண்டுவின் மைந்தர்களான பாண்டவர்களுக்கு, ராஜ்ஜியத்தில் பங்கு கோர உரிமையில்லை என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கும். மாற்றுத்திறனாளி என்ற குறைபாடுதான், கௌரவர்களை உரிமை கோர விடாமல் தடுத்த சட்ட முட்டுக்கட்டை. இந்த விஷயத்தை சரியாகப் புரிந்துகொண்டவர்கள், துரியோதனனைக் கெட்டவன் என்று சொல்லப் பலமுறை யோசிப்பார்கள். மாற்றுத்திறனாளி என்பதால், தன் தந்தைக்கு அரச பதவி வகிக்கத் தகுதியில்லை என்ற சட்ட நிலைப்பாட்டை துரியோதனன் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான், ராஜ்ஜியம் திருதராஷ்டிரனின் வாரிசுகளான தங்களுடையது என்பதிலும் பாண்டு புத்திரர்களுக்கு அதில் உரிமை கோர அருகதையில்லை என்பதிலும் அவன் திடமாக இருந்தான். அதிலும் பாண்டவர்கள் உண்மையில் பாண்டுவின் புத்திரர்கள் இல்லை என்பதும் அவனை  அவனுடைய நிலைப்பாட்டில் ஊன்றி நிற்க வைத்தது. மேலும், பாண்டு இறந்து போன பின்பு, திருதராஷ்டிரன் உயிரோடு இருந்து, மன்னனாக ஆட்சிபுரிந்துகொண்டு இருக்கும்போது, யுதிஷ்டிரன் அல்லது தருமபுத்திரனுக்கு இளவரசனாகப் பட்டம் சூட்டுவது முறையில்லை என்பதும் அவன் கருத்தோட்டத்திற்கு வலு சேர்த்த இன்னொரு முக்கியமான அம்சமாகும். (வரும் புதன்கிழமை தொடர்வோம்)

மரு வைத்து வந்துள்ள மணற்கேணி

மரு வைத்து வந்துள்ள மணற்கேணி

புதிய கண்டுபிடிப்புகளைப் போலவே கல்வித் துறையிலிருந்து ஒவ்வொரு அறிவிப்பும் வெளியிடப்படுவது குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆன்லைன் கல்விக்கு அடிகோலும் முயற்சிகள்தான் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் அனைத்தும். இதற்காகப் பணியாற்றி, கடும் உழைப்பைத் தந்திருக்கும் கல்வித்துறையின் அத்தனை ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளாக அந்த ஆசிரியர்களின் பணியிடங்களில் வகுப்புகளை கவனிக்க, பாடம் நடத்த, வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் சிறப்பு. இல்லை என்றால் அது குழந்தைகளுக்குச் இழைக்கப்படும் துரோகம்; அநீதி. கல்வித் துறையில் மணற்கேணி என்ற செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மணற்கேணி குறித்து, இரு வழிகளில் நாம் விளக்கலாம்.  முதலாவதாக, இது நாட்டிலேயே  முதன்முதலாக என்பது உண்மை அல்ல. ஆம், தமிழ்நாட்டின் கல்வித்துறையில் பத்தாண்டுகளுக்கும் முன்பாகவே, சபிதா ஐஏஎஸ் அவர்கள் கல்விச் செயலாளராகப் பணியாற்றியபோது, மாநிலக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) டிஜிட்டல் கன்ட்டென்ட் என்ற கோட்பாட்டை முன்னெடுத்தது. பல்வேறு வகையான பயிற்சிகள், பாடப்பொருள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு, அறிவியல் காணொளிகள் என்று, முப்பரிமாண (3D) வரைவில் பலவிதமான வழிகளில் டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிக்கப்பட்டது. SCERTஇல் ICT CELL என்ற ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு SCERTஇன் விரிவுரையாளர் ஒருவரை அதற்குப் பொறுப்பாளராகப் பணியமர்த்தியது. அங்கு ஒருங்கிணைப்பாளராக பள்ளி ஆசிரியர் ஒருவரும் பணியாற்றினார். ICT CELL வழியாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிப்புப் பணியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். 2013 முதல் 2016 வரை டிஜிட்டல் கன்ட்டென்ட் சார்ந்த ஏராளமான பணிகள் ICT CELL வழியாக முன்னெடுக்கப்பட்டன. ஆசிரியர்கள் தயாரித்த டிஜிட்டல் கன்ட்டென்ட் அனைத்தும் மாணவர்கள் பயன்பாட்டுக்காக SCERT  வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்காகச் சேகரம் செய்யப்பட்டன. SCERTஇல் பயிற்சி பெறாமல், தனிநபராக ஆர்வமாக டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களிடமிருந்தும்கூட அவை பெறப்பட்டன. சில மாவட்டங்களில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், முதல்வர்கள் தலைமையில், ஆசிரியர்கள்  டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்,  அந்த நேரத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கலாச்சாரமும் பெருகின. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளை நவீனப் பள்ளிகளாக மாற்றம் செய்ய முயற்சி செய்ய ஆரம்பித்து வேகமெடுத்தது என்றும் கூறலாம். பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் உள்ள மனப்பாடப்பகுதியை, பாடல்கள் வழியாக டிஜிட்டல் கன்ட்டென்ட்டுகளாக மாற்றினர். அது மட்டுமல்ல; சிறு வகுப்புகள் முதல், ஒவ்வொரு வகுப்பிற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்ப்பாடம் மட்டுமல்ல; ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும்  சமூக அறிவியல் என அனைத்துப் பாடங்களுக்கும் இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் நீட்சியாகத்தான் சில வருடங்கள் கழித்து, கல்வித் தொலைக்காட்சி என்ற முயற்சியும் விரிவாக்கம் செய்யப்பட்டது.  கற்றலில் புதுமை செய்யக் கூடிய ஆசிரியர்களது (Innovative  Practicing Teachers)   பணிகளை டிஜிட்டல் ஆவணமாக்கும் வேலையையும் SCERT முன்னெடுத்தது. முதற்கட்டமாக, நூறு ஆசிரியர்களைத் தேர்வு செய்து  அவர்கள் செய்யும் புதுமையான கற்பித்தல் முறைகளைக் காணொளிகளாக  தயார் செய்து, வலைத்தளத்தில் பதிவேற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்காகவும் ஒரு பெரும் தொகையை (ரூபாய் பத்து லட்சம்) SCERT  ஒதுக்கியது. இப்பணியைச் செய்ய முன்வந்தவரும்கூட, சேலம் மாவட்ட ஆசிரியர் ஒருவர்தான்.  இப்பணி நிறைவடைந்ததா என, இன்று வரை தெரியவில்லை. நூறு ஆசிரியர்களில், ஒருசிலரின் காணொளிகளை மட்டும் SCERT சேனலில் பார்க்க முடிகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பாடப்பிரிவுகளுக்கு, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் ஆகுமெண்டேட் ரியாலிட்டி என்ற  என்ற பிரிவிலும் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் தயாரிக்கப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அப்போது முன்னெடுக்கப்பட்ட பணிகளுக்கான ஒரு சில உதாரணங்கள்: இப்படி ஏராளமான முன்னெடுப்புகள் செய்யப்பட்டன.  அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகே அமைந்துள்ள கல்வியியல் இணையக் கழகம், ஆசிரியர்களுக்கு செயலிகள் உருவாக்கும் (App Development) பயிற்சிகளையும்கூட வழங்கியது. அதற்கும் SCERT இன் ICT CELL  தான் ஒருங்கிணைப்பு செய்தது. பாடப்புத்தகங்களை ஃபிலிப் (flip) போல விரலால் புத்தகத்தின் பக்கங்கள் திருப்பும் முறையைப்போல டிஜிட்டல் பக்கங்களை உருவாக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்குத் தரப்பட்டது. இக்குழுவில் இணை இயக்குநர் ஒருவரையும் இணைந்திருந்தது SCERT நிறுவனம். டெல்லியில்  தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) வழியாக இப்பயிற்சியை எடுத்துக் கொண்ட ஆசிரியர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்  (SCERT) ஒருங்கிணைப்பில் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களை flip முறையில் டிஜிட்டல் கன்ட்டென்ட் உருவாக்கம் செய்தனர். இப்படியாக, தொடர்ச்சியான பன்முகத்தன்மையுடன் பல வருடங்களாக, தொடர்ச்சியாக, டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிப்புப் பணிகளைச் செய்ய ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். அந்தப் பயிற்சிகளில் திறன்பெற்ற ஆசிரியர்கள்தான், மாநில மையத்தில் பெரும்பாலும் டிஜிட்டல் கன்ட்டென்ட் உருவாக்கம் உள்பட, பள்ளிக்கல்வி முன்னெடுக்கும் ICT சார்ந்த தொழில்நுட்பக் கற்றல் – கற்பித்தல்  திட்டங்கள் அனைத்திற்கும் இன்றளவும்  பங்காற்றி வருகின்றனர்.  சில வருடங்களாக அல்லது பல வருடங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள், பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்குப்  பாடம் நடத்துவதே இல்லை என்ற விமர்சனமும் பரவலாக உள்ளது. அரசின் முயற்சிகள் கல்வித்துறையை நவீனமாக்கும் பார்வையைக் கொண்டிருக்கலாம். ஆனால் எந்தத் திட்டம் போட்டாலும் ஆசிரியர்களே அதைக் கவனிக்க வேண்டும் என்றால், கற்பித்தல் பணிக்கு யாரை நியமிப்பார்கள்? முதல் பத்தியில் கூறியபடி, இரண்டாவது விளக்கம்: இந்த மணற்கேணி திட்டம் இணையவழிக் கல்வியை ஊக்குவிக்க உருவாகியுள்ளது. இது தேசியக் கல்விக் கொள்கை 2020இன் ஒரு கூறு. ஆம், ஏற்கனவே DHIKSHA செயலி வழியாக ஆசிரியர்கள் செய்யும் டிஜிட்டல் கன்ட்டென்ட் பதிவேற்றம் செய்யப்படும் என செய்தி வெளியானது; பின்னர் அது நடைமுறையிலும் வந்தது. புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020இல் தலைப்பு 24, இணைய மற்றும் டிஜிட்டல் கல்வி என்ற உபதலைப்பின் 3ஆவது பிரிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.  இணைய வழிக் கற்பித்தல் மற்றும் கருவிகள் என்ற தலைப்பில், DHIKSHA குறித்துக் குறிப்பிட்டுள்ளனர். இதைத்தான் அப்போதே நாம் வேண்டாம் என்று கூறினோம். அதாவது, மரு வைத்து மாறுவேடம் பூண்டால் அது மணற்கேணி. மருவை எடுத்துவிட்டால் அது DHIKSHA. DHIKSHA செயலியில் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் பதிவேற்றம் செய்ததும், வகுப்பறையில் ஆசிரியர்கள் ஒருநாளைக்கு ஒருமுறையாவது அதைத் திறந்து பயன்படுத்த வேண்டும் என்றனர். ஆனால் அதில் கற்றல் வளங்கள் (டிஜிட்டல் கன்ட்டென்ட்டுகள்) எல்லாத் தலைப்புகளுக்குள்ளும் காலியாகவே இருக்கும். அது பெயருக்குத்தான் உருவாக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 வளர்க்க நினைக்கும் இணையவழிக் கல்வியையே நாடச் சொல்கின்றன. நேரடிக் கற்பித்தலுக்கு வழிவகுக்காத இவை புறக்கணிக்கத்தக்கவையே. இதுவரை நாம் இங்கு கூறிய பத்தாண்டு கால டிஜிட்டல் வளங்கள் தமிழ்நாட்டின் குழந்தைகளது கல்வித்தரத்தை எந்த விதத்திலும் உயர்த்தவோ தரப்படுத்தவோ இல்லை. தரம் குறையவே செய்திருக்கிறது. அடிப்படையில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக ஆசிரியர்கள் நியமனம், கற்றல் கற்பித்தல் பணி தொய்வின்றி நிகழ்வதற்கான சூழலை உருவாக்குதல், ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மட்டும் மேற்கொள்ளச் செய்தல் என யோசிக்கலாம். அதை விடுத்து, புதிய புதிய பெயர்களில் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது – மணற்கேணி என்ற பெயரில் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகளில் ஒன்றான DHIKSHA  செயலியைப்போன்ற செயலியை அறிமுகம் செய்வது அவசியமற்றது. தேவைக்கேற்ற செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டால்தான், கல்வி‌ ஏற்றமிகு வழியில் உயரும். 

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 7

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 7

8. அம்பையைக் கொன்ற பீஷ்மர் விசித்திரவீரியன் சார்பில் காசி இளவரசிகள் சுயம்வரத்தில் பங்கேற்க பீஷ்மர் சென்றார் என்பதை முந்தைய பகுதியில் பார்த்தோம். மகாபாரதக் காலத்தில் பல திருமண முறைகள் அங்கீகரிக்கப்பட்ட திருமண முறைகளாக இருந்தன. அதில் ஒன்றுதான் ‘ராட்சதத் திருமண முறை’ என்பதாகும். ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண், தன்னுடைய போட்டியாளர்கள் அனைவரையும் யுத்தம் செய்து தோற்கடித்து, பலவந்தமாகக் கவர்ந்துகொண்டு போய்த் திருமணம் செய்துகொள்ளும் முறைக்குத்தான் ‘ராட்சதத் திருமண முறை’ என்று பெயர். சுயம்வரத்திற்கு வந்திருந்த அனைவரும் பீஷ்மரின் வருகையின் நோக்கம் பற்றிப் புரியாமல் குழம்பிப்போய் நின்றனர். சுயம்வர மண்டபத்திற்குள் வந்த பீஷ்மர், திருமண விருப்பத்தின் பேரில் கூடியிருந்த மன்னர்களையும் இளவரசர்களையும் பார்த்து, “நான்  காசி இளவரசிகள் மூவரையும் கவர்ந்து போகிறேன். உங்களில்  அதை ஆட்சேபிக்கும் இளவரசர்கள் யாரேனும் இருந்தால், என்னுடன் போர்புரிந்து என்னைத் தடுத்துக் கொள்ளுங்கள்” என்று கர்ஜித்தபடி தன் வில் வளைத்து நாணேற்றி  யுத்தத்திற்குத் தயாரானார். அவர் கர்ஜனையைக் கேட்டதும் குழுமி இருந்த இளவரசர்களில் ஒருவனைத் தவிர, மற்ற அனைவரும் அவருடன் யுத்தம் செய்யப் பயந்து ஒதுங்கிக்கொண்டனர். சால்வன் என்ற இளவரசன் மட்டும் பீஷ்மரோடு யுத்தம் புரிய முன்வந்தான். அதற்குக் காரணம், மூன்று இளவரசிகளில் மூத்தவளான அம்பையும் அவனும், ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். சுயம்வரம் நடந்திருந்தால் அம்பை சால்வனின் கழுத்தில்தான் மாலையைப் போட்டு தன்னுடைய கணவனாக வரித்து இருப்பாள். பீஷ்மரின் செயலால் அதிர்ச்சியுற்ற சுத்தவீரனான சால்வன்,  அம்பையைத் தீவிரமாகக் காதலித்து வந்ததால், பீஷ்மரின் புகழ் பற்றியும் வீரம் பற்றியும் கவலைகொள்ளாமல் பீஷ்மருடன் கடும் யுத்தம் செய்தான். ஆனால் நீண்ட யுத்தத்திற்குப் பின் தோற்றுப்போய், மனமுடைந்து யுத்த களத்தை விட்டு விலகினான். ராட்சதத் திருமண முறையில், ‘கவர்ந்து செல்லப்படும்’ கன்னியரின் அபிப்பிராயத்தையோ விருப்பத்தையோ கேட்கும் வழக்கமில்லை. நிபந்தனை விதித்துத் திருமணத்திற்கு உடன்பட்ட கங்காதேவியைப் பார்த்த நாம், விருப்பு வெறுப்பை வெளியே சொல்லக்கூட உரிமையில்லாமல், பலவந்தமாய்த் தேரில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட  கன்னியரையும் பார்க்கிறோம். பீஷ்மரின் இந்த நடவடிக்கை முழுவதும், திருமணம் பற்றி மகாபாரதக் காலத்தில் வழக்கில் இருந்த சட்ட நியதிகளைக் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. எது எப்படியாயினும், ‘ராட்சதத் திருமண முறைப்படி’ யார் கவர்ந்து செல்கிறார்களோ, அவர்களேதான் கவர்ந்து சென்ற கன்னியரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமே தவிர, அவர்களை வேறு ஒருவருக்கு, அவர்கள் சொந்த சகோதரனாக இருந்தாலும் கன்னிகாதானம் செய்து  கொடுத்துத் திருமணம் செய்துகொள்ள வைப்பது என்பது ‘ராட்சதத் திருமண முறைக்கே’ விரோதமான செயல். பலவந்தமாகக் கவர்ந்து செல்லப்பட்ட மூன்று இளவரசிகளும், தங்களைத் திருமணம் செய்து மனைவியாக்கிக் கொள்ளவே பீஷ்மர் யுத்தம் செய்து அழைத்துச் செல்வதாக நினைத்துக்கொண்டு இருந்தார்கள். அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோர் இளவரசிகளாக இருந்தாலும், தங்கள் விருப்பத்தை வெளியில் சொல்ல முடியாதது மட்டுமல்ல, தாங்கள் யாரை மணம் முடிக்கப் போகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது என்பதை இது காட்டுகிறது. இந்த ‘ராட்சதத் திருமண முறையில்’ இளவரசிகள் மூவரும் அஃறிணைப் பொருட்கள் போல நடத்தப்பட்டார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ‘பலமுள்ளவன் விரும்பியதை அடைந்து கொள்ளலாம்’ என்ற மிருக இனவிதி, மகாபாரதக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட விதியாக இருந்தது என்றாலும் அந்த விதி, நாம் நாகரீக உலகம் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய சமுதாயத்திலும் அங்கீகரிக்கப்படாத விதியாக உள்ளது என்பதை ஊன்றிக் கவனித்தால் புரிந்துகொள்ள முடியும். அஸ்தினாபுரம் போன பின்புதான், தங்களை மணக்கப் போவது பீஷ்மரல்ல என்பது இளவரசிகளுக்குத் தெரிந்தது.  மேலும், பீஷ்மரின் ஒன்றுவிட்ட சகோதரருக்கு, மனைவியராக்கவே தாங்கள் தூக்கி வரப்பட்டிருக்கிறோம் என்பதும் தெரிந்தது. சால்வனின் காதலியான அம்பைக்கு மட்டும் இந்த ஏற்பாட்டை ஒப்புக்கொள்ள இயலவில்லை. தைரியத்தை வரவழைத்துச் கொண்டு விசித்ரவீரியனிடம் ‘தான் சால்வனை உளமாரக் காதலிப்பதை’ நயமாக எடுத்துச் சொன்னாள். அதைக் கேட்ட விசித்ரவீரியன், வேறொருவரை மனம் விரும்பிக் காதலிக்கும் பெண்ணை, தான் திருமணம் செய்து தன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று சொல்லிவிட்டான். அதனால் விசித்ரவீரியன் பீஷ்மரிடம் விஷயத்தைச் சொல்லி, அம்பையை சால்வனிடம் அனுப்பி வைத்துவிடும்படி கேட்டுக்கொண்டான். நிலைமையைப் புரிந்துகொண்ட பீஷ்மரும் அம்பையை அவள் விரும்பிய வண்ணமே சால்வனிடம் பாதுகாப்பாய் அனுப்பி வைத்தார். ஆனால் சால்வனோ, ‘நான் சத்ரியன், என்னைப் போரில்  தோற்கடித்துவிட்டு, வேறொருவன் கவர்ந்து போன பெண்ணை நான் ஏற்றுக்கொள்வது சத்ரியனுக்கும் சத்ரிய தர்மத்திற்கும்  கேவலமான இழுக்காகும். எனவே உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம் காதலை மறந்துவிட்டு நீ பீஷ்மரிடமே போய்விடு’ என்று அம்பையைத் திரும்பவும் விசித்திரவீரியனிடம் அனுப்பி வைத்துவிட்டான். இதேபோல சால்வனும் விசித்திரவீரியனும் திரும்பத் திரும்ப ஒருவரிடம் இருந்து ஒருவர் அனுப்புவது பலமுறை தொடர்ந்தது . அம்பை மனமுடைந்து போனாள். அதனால் அவள் பீஷ்மரிடமே போனாள்.  ‘நீங்கள்தானே என்னைக் கவர்ந்து வந்தீர்கள்; இப்போது விசித்திரவீரியனும் சால்வனும் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் கவர்ந்து வந்த சத்திரியகுலத் திலகமான நீங்கள்தான் என்னை மணந்துகொள்ள வேண்டும்’ என்று சொன்னாள். ‘அம்பையே,  நான் பிரமச்சாரியாக  வாழ்வேன்’ என்று உலகறிய சபதம் செய்தவன். எனவே நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வது என்ற பேச்சிற்கே இடமில்லை’ என்று பீஷ்மர் கறாராகச் சொல்லி அனுப்பிவிட்டார். என்ன சொல்லியும் யார் சொல்லியும் பீஷ்மர் அம்பையின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். அம்பை பல மன்னர்களை அணுகி, தனக்கு நீதி கிடைக்க வழி செய்யும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். அவர்கள் அனைவரும் பீஷ்மரின் பெயரைக் கேட்டதும் பயந்து விலகிக்கொண்டார்கள். இறுதியில் மகாவிஷ்ணுவின் இன்னொரு அவதாரமான பரசுராமரிடம் போய் அம்பை முறையிட்டாள். சத்ரியர்களை வதம் செய்வதையே தனது புனிதப் பணியாகக் கருதி, சத்ரியர்களை அழித்தொழித்தலில் ஈடுபட்டுவந்த பரசுராமரின் ‘சத்திரிய வதம்’ பற்றிய சபதம், மகாபாரதத்தின் இன்னொரு சுவாரசியமான உபகதை. பரசுராமர் அம்பையின் பொருட்டு பீஷ்மருடன் போரிட்டார். பல நாட்கள் நடந்த அந்த யுத்தம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததால் அம்பையின் எண்ணம் ஈடேறவில்லை. அதனால் பல்வேறு முயற்சிக்குப் பிறகு, சிவபெருமானை வேண்டி நெடுந்தவம் புரிந்து சிவபெருமானைத் தரிசித்து, ‘அடுத்த பிறவியில் பீஷ்மரைக் கொல்லும் வீரனாகப் பிறக்கும்’ வரத்தைக் கேட்டுப்பெற்று, தீக் குண்டத்தில் குதித்து இறந்துபோனாள். அந்த வரத்தின்படி, அடுத்த பிறவியில் சிகண்டியாகப் பிறந்து, பீஷ்மர் கொல்லப்பட அம்பை பிரதான காரணமானாள். இதில் உள்ள கேள்வியே, இதில் பீஷ்மர் செய்தது பின்னாளில் பிதாமகனாகக் கருதப்பட்டவரின் சரியான செயல்தானா என்பதுதான். அம்பையை விசித்ரவீரியன் மறுதலித்ததிலும் சால்வன் அம்பையை நிராகரித்ததிலும், அவர்களுக்குரிய நியாயம் இருந்தது. ஆனால் அம்பையை ‘ராட்சதத் திருமண முறைப்படி’ கவர்ந்து வந்த பீஷ்மர், சத்திரிய தர்மப்படி நடந்துகொள்ள மறுத்ததாலும், அதனால் அரச குமாரி என்றாலும் நிர்க்கதியாய் விடப்பட்ட அம்பையினால் பீஷ்மரை எதிர்த்துப் போராடி நியாயத்தை நிலைநாட்ட முடியவில்லை என்பதாலும், பீஷ்மர் ஒரு அபலைப் பெண்ணின் காதல் கோட்டையைத் தகர்த்தெறிந்ததுடன் அவளையே மரண வளையத்திற்குள் தள்ளிவிடும் அக்கிரமத்தையும் செய்தார். (வரும் சனிக்கிழமை பார்க்கலாம்)

ஆயிஷா

ஆயிஷா

திரை விமர்சனம் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள மாசூம் எனும் செல்வந்தர் வீட்டிற்கு, ஒரு பணிப் பெண்ணாகக் கேரளாவில் இருந்து செல்லும் ஆயிஷா, சில சிரமங்களைத் தாண்டி, அரண்மனை போன்ற அந்த வீட்டின் நடைமுறைகளை அறிந்துகொண்டு, நாளடைவில் குடும்பத்தின் தலைவி மமாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார். விளைவு, சக பணியாளர்களின் மகிழ்ச்சிக்கு உகந்தவராகவும் அதுவரை மமாவின் முதன்மைப் பணியாளர்களாக இருந்த பெண்களுக்கு எதிரியாகவும் ஆகிவிடுகிறார். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த வாழ்வில், ஆயிஷா குறித்த ஒரு உண்மை வெளிப்பட, நிலைமை தலைகீழாகிறது. மமாவுடனான ஆயிஷாவின் பிணைப்பு இளக, அவள் கேரளா திரும்புகிறாள். அடுத்து, ஆயிஷாவின் வாழ்க்கைப் பயணம் எப்படிச் செல்கிறது என்பதுதான், ஆஷிப் கக்கோடி அழகான திரைக்கதை எழுதி, அமீர் பள்ளிக்கல் அருமையாக இயக்கி, அரபிக் மற்றும் மலையாள மொழிகளில் தயாரிக்கப்பட்டு, அமேசான் பிரைம் வீடியோவில், ஆங்கிலத் திரை வசனங்களுடன் வெளியாகி உள்ள ‘ஆயிஷா’ திரைப்படத்தின் மீதிக் கதை. ஆயிஷாவாக மஞ்சு வாரியார், உழைப்பாளர்களைச் சுரண்டும் இடங்களில் எல்லாம் சீற்றம் கொள்ளும்போதும், “நான் எவ்வளவு அதிகாரம் மிக்கவன்னு உனக்குத் தெரியாது” என்று சொல்லும் சாராவிடம், “சாரா, என்னைப் பத்தி உனக்குத் தெரியாது. என்னோட விளையாடாத; உன்னோட விளையாட்டை நீயே நிறுத்திக்கோ. அதுதான் உனக்கு நல்லது” என்று புன்முறுவலுடன் சொல்லும்போதும், மமாவின் முதல் சந்திப்பில் நிகழும் சிறுசிறு தவறுகளை அதற்கடுத்த முறை சரி செய்துகொள்வதும் அவர்களுக்கு இணைப்பு இறுகவும் விலகவுமான நிகழ்வுகளின்போதும் முந்தைய வாழ்க்கை நினைவுகளில் லயிக்கும்போதும் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். நடனக் காட்சிகளிலும் கவர்கிறார். ஆயிஷா பாத்திரத்திற்கு இணையான மமா பாத்திரத்தில் மோனா டவில், அதியற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளார். செல்வந்தர் வீட்டில், குடும்பத் தலைவியாகக் காட்டும் கண்டிப்பும் பணக்கார மிடுக்கும் தோரணையும் ஆயிஷாவிடம் காட்டும் அன்பும் அவளிடம் தன் சொந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளும் பாங்கும் அவளைச் சொந்த ஊருக்கு அனுப்பச் செய்யும் நாடகமும் பிரிவை ஜீரணிக்க முடியாத தவிப்பும் திரும்பப் பார்த்ததும் பெறும் உற்சாகமும் மன வலியும் உடல் வலியும் ஒரு சேர அழுத்த அவற்றின் வெளிப்பாடாய் முகப் பிரதிபலிப்பும் காதல் கணவர் நாசருடன் சென்ற அனுபவங்களை, அந்த இடங்களுக்கெல்லாம் விரும்பியவாறு பயணிக்க அவரது உடல்நிலை இடம் தராத நிலையில், அந்த நினைவுகளை ஆயிஷா நாடக வடிவில் உருவகித்ததைக் காணும்போதான நெகிழ்வும் என நடிப்பில் அற்புதங்கள் செய்கிறார். நிஷா (ராதிகா), அபித் (எஸ் வி கிருஷ்ண சங்கர்), சாரா (லத்தீஃபா), ஹார்வா (சல்மா), அப்துல்லா (இஸ்லாம் அப்துல் கவாத்), அகீஃப் (பாரா அல் நிஜாமீ), ஹம்சா (சம்சுதீன்), நர்ஸ் மெரினா குரியன் (மினி அல்போன்ஸ்) போன்ற துணைப் பாத்திரங்களும் சோடை போகவில்லை. அரபு நாடுகளுக்கு வீட்டு வேலைக்குச்  செல்லும் பெண்கள் பல விதங்களில் அவமரியாதையும் கொடுமையும் படுத்தப்படுவதாகத்தான் செய்திகளும் ஏன், படங்களும்கூட வந்திருக்கின்றன. இந்தப் படம் அவற்றையெல்லாம் மறுதலிக்கும் விதத்தில் உள்ளதே என்கிற சிந்தனைக்கு, “எந்த வீட்டுக்கு நாம அனுப்பப்படறோமோ அதப் பொருத்து நம்ம நெலம அமையும்” என்று வீட்டு வேலைக்கு ரியாத்திற்கு வரும் பெண்மணிகளில் ஒருவர் ஆயிஷாவிடம் சொல்வதில் விடை கிடைத்துவிடுகிறது. “பெண்கள மதிக்கறவங்கதான் அரேபியர்கள்”“வீட்டுக்கு வந்த விருந்தினர்ங்க மூனு நாள் தங்க இடமும் விருந்தும் கொடுத்ததுக்கு அப்புறம்கூட, எதுக்கு வந்தீங்கன்னு கேட்காததுதான் அரேபியாவோட பாரம்பரியம்” என்று நிமிஷா, ஆயிஷாவிடம் சொல்வதும் அதற்கு வலு சேர்க்கிறது. “மமாவோட நினைவு மங்கி வருது. பழசுதான் ஞாபகம் இருக்கு. ஆனா அவங்க மறந்துபோன பட்டியல்ல ஆயிஷா பேர் இல்ல” (சாரா)“எவரெஸ்ட் மலைய தாண்டறதவிடக் கஷ்டம்  மனுஷங்களோட மனச ஜெயிக்கிறது, இல்ல?” (நிமிஷா)போன்ற வசனங்களும் ஆயிஷா மமா இடையிலான உரையாடல்களும் நயம். இயற்கை அழகு கொஞ்சும் கேரளாவையும் பரந்த பாலைவனத்தில் ஆங்காங்கே பிரமிக்க வைக்கும் அரண்மனை வீடுகளையும் ஒருங்கே அழகுற வழங்கிய ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மாவின் திறன் பாராட்டுக்குரியது. கதைக் களத்தோடு இயைந்த பின்னணி இசையையும் பாடல்களுக்கான துள்ளலான இசையையும் அற்புதமாக வழங்கி உள்ளார், எம் ஜெயச்சந்திரன். படத்தொகுப்பைப் பழுதில்லாமல் செய்துள்ளார், அப்பு என் பட்டாத்திரி. இடதுசாரி இயக்கங்களோடு பணியாற்றி, இஸ்லாமியப் பெண்ணாக இருந்தாலும் சமூகத் தடைகளைத் தாண்டி, கருத்தியலைப் பிரதிபலிக்கும் நாடகங்களில்  நடித்ததால், எதிர்ப்புகளையும் கல்லடிகளையும் ஏன், துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொண்டு துணிவுடன் நடித்து, ஒரு கட்டத்தில் அரபு நாட்டிற்குப் பணிப் பெண்ணாகச் சென்று திரும்பிய நிலாம்பூர் ஆயிஷாவின் சுய வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் ‘ஆயிஷா’. திரைப்படத்தில், அவர் நாடகக் கலைஞராக இருந்த வாழ்க்கை சுருங்கிப் போயிருந்தாலும்,  சவுதி அரேபியாவில் பணிப் பெண்ணாக வாழ்ந்த காலம் விரிவாகவும் அவருக்கும் மமாவுக்கு இடையிலான பாசத்தின் பரிமாணத்தை மிகவும் அழகாகவும் நயமாகவும் சொல்லப்பட்டதற்காகவும் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கத்தக்க வகையில் ‘ஆயிஷா’ திரைப்படத்தை வழங்கியதற்காகவும் இயக்குநர் ஆமீர் பள்ளிக்கல் பாராட்டுக்குரியவர். மதிப்பெண் : 7/10

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 6

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 6

7. பீஷ்ம சபதமும் மீனவக் குடிவழிக்குப் போன அரசுரிமையும் கங்காதேவி எட்டாவது குழந்தையைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போனபின், சந்தனு மகாராஜனுக்கு அவர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் நீண்டகாலம் வாய்க்கவே இல்லை. மனநிம்மதியின்றி, எப்போதும் கங்கைக் கரையில் உலாவிக்கொண்டிருந்த சந்தனு மகாராஜன், மிக அழகானவனும் ஆஜானுபாகுவானவனுமான ஒரு இளைஞன் கங்கையின் ஓட்டத்தை அம்புகள் எய்து நிறுத்திவைத்ததைப் பார்த்தான். அந்த அற்புதமான செயல் சந்தனு மகாராஜனைத் திகைக்க வைத்துவிட்டது.வியாசர் எந்தவொரு கதாபாத்திரத்தையும் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியுடன் மட்டுமே அறிமுகம் செய்வாரே தவிர, தட்டையாக அறிமுகம் செய்யமாட்டார். உபகதைகளைப் போலவே ஒரு அபூர்வமான நிகழ்ச்சியின் மூலம் ஒரு கதாபாத்திரத்தை மறக்க முடியாதபடி அறிமுகப்படுத்துவதும் மகாபாரதம் மாபெரும் இதிகாசமாக விளங்குவதற்குக் காரணமாக உள்ளது என்பது பலருடைய அபிப்பபிராயம். யாராலும் மறித்து நிறுத்த முடியாத கங்கையின் நீரோட்டத்தை மறிப்பவன், ஈடு இணை இல்லாத அஸ்திரப்பயிற்சி பெற்ற மாவீரனாகத்தான் இருக்க முடியும் என்று சந்தனு மகாராஜன் நினைத்தான். அப்போது கங்காதேவி மனிதவடிவில் சந்தனு மகாராஜன் முன் தோன்றினாள். “நீ வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞன்தான் உன் மகன். அவன் பெயர் தேவவிரதன். அவனுக்குப் போர்க் கலை உள்ளிட்ட எல்லாக் கலைகளும் கற்றுத் தந்து மாபெரும் ஆளுமையாக்கி இருக்கிறேன். இனி அவன் என்னிடமும் உலகத்திடமும் கற்றுக்கொள்ள எந்த வித்தையும் பாக்கி இல்லை. எனவே நீ அவனை உன்னுடன் அழைத்துக் கொண்டு போ” என்று சொல்லி, தேவவிரதனை சந்தனு மகாராஜனிடம் ஒப்படைத்தாள். சந்தனு மகாராஜன் தேவவிரதனைக் கட்டித் தழுவிக்கொண்டு, கங்காதேவி சொன்னபடியே தன்னுடன் அழைத்துக்கொண்டு போனான். அதுமுதல், தேவவிரதனை கங்காபுத்ரன் என்று உலகம் அழைத்தது. வழக்கமாக, புதல்வரையும் புதல்வியரையும் தந்தையின் பெயரைச் சொல்லி, ‘அவர்களின் மகன்/மகள்’ என்று இப்போது அழைக்கும் வழக்கத்திற்கு மாறாக, தாயின் பெயரைச் சொல்லி அவருடைய மகன்/ மகள் என்றழைக்கும் பழக்கம் பரவலாக அப்போது வழக்கத்தில் இருந்தது இதன்மூலம் தெரியவருகிறது. மகாபாரதக் காலத்தில் தாய் வழிச் சமுதாயத்திலிருந்து தந்தை வழிச் சமுதாயமாக மாறும் போக்கு (transition) நிகழத் தொடங்கி இருந்தாலும் தாய்வழிச் சமுதாய வாழ்முறையே பெருமளவில் வழக்கில் இருந்ததை இது காட்டுகிறது. நமக்குத் தெரிந்து ஒரே ஒரு இடத்தில்கூட, வியாசர் உட்பட எந்தவொரு கதாபாத்திரமும் தேவவிரதனை ‘சந்தனு புத்ரன்’ என்று அழைத்ததாகத் தெரியவில்லை. பாண்டவர்களை ‘குந்தி புத்திரர்கள்’ என்று அழைப்பார்கள். ‘பாண்டுவின் புத்திரர்கள்’ என்றழைப்பது அபூர்வம். கர்ணனை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கிருபாச்சாரியரும் பாண்டவர்களும் ‘தேரோட்டியின் மகன்’ அல்லது ‘ராதேயன்’ என்று அழைப்பதில் மகிழ்ச்சி கண்டார்கள். இப்படி இருக்கையில், சந்தனு மகாராஜன் மீண்டும் சத்யவதி என்ற மீனவப் பெண்ணின் வசம் மையலில் விழுந்தான். மீனவப் பெண்ணின் தந்தை விதித்த பல நிபந்தனைகள் ஏற்க முடியாதவையாக இருந்ததால், சந்தனு மகாராஜாவால் சத்யவதியை மணம் முடிக்க முடியவில்லை. அதனால் ஊனும் உயிரும் உருகி உருக்குலைந்து போனான். அதை அறிந்த தேவவிரதன், தன் தந்தை சந்தனு மகாராஜனுக்கு சத்யவதியைத் திருமணம் செய்து வைக்க, சத்யவதியின் தந்தையிடம் பேசினான். சத்யவதியின் தந்தையான மீனவர் தலைவன் அதிபுத்திசாலி. “என் மகளின் அழகுக்கு, அவளுக்குப் பிறக்கப்போகும் மகன் மன்னனாக வேண்டியவன். மகாராஜாவின் மூத்த மகனாகவும் பட்டத்து இளவரசனாகவும் நீங்கள் இருக்கும்போது, என் மகளின் மகன் எப்படி மன்னாக முடியும்?’ என்று சத்யவதியின் தந்தை தேவவிரதனிடம் கேட்டான்.“நான் இப்போதே பட்டத்து இளவரசன் என்ற பொறுப்பைத் துறக்கிறேன். அதுமட்டுமன்றி என் வாழ்நாள் முழுவதும் இளவரசனாகவோ மன்னனாகவோ முயற்சிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்” என்று தேவவிரதன் கூறி சத்தியம் செய்தான். இருந்தும் சத்தியவதியின் தந்தை திருப்தி அடையவில்லை. “நீங்கள் பட்டத்து இளவரசனாகவோ மன்னனாகவோ மாட்டேன் என்று சத்தியம் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் பின்னாளில் உங்களுக்குத் திருமணமாகி உங்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் உங்கள் பிள்ளைகள் அரசனாகும் உரிமையைக் கோரலாம் அல்லவா? அந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய மகளின் மகனுக்கோ அவனது பிள்ளைகளுக்கோ அரசனாகும் வாய்ப்பு இல்லாமற் போய்விடுமே” என்றான் சத்தியவதியின் தந்தை. உடனே தேவவிரதன், “என் வாழ்நாளில் நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன். பிரம்மச்சாரியாகவே இருப்பேன். இது சத்தியம்” என்று சத்தியம் செய்தான்.உடனே வானிலிருந்து “பீஷ்ம, பீஷ்ம” என்ற முழக்கம் கேட்டது. பீஷ்மன் என்றால் ‘செய்தவற்கரிய செய்பவன்’ என்று பொருள். சத்ரியர்கள் மட்டுமே அரசனாகத் தகுதி வாய்ந்தவர்கள் என்று சொல்லிவந்த பீஷ்மருக்கு, சத்யவதியின் வாரிசுகள் என்ற வகையில் குருவம்சமே மீனவ குலத்தைச் சேர்ந்தவர்களாகி விடுவார்கள் என்பது நினைவில் இல்லாமல் போனது விந்தையான உண்மை. தற்போது தங்களை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்ளும் பலருக்கும் மகாபாரதத்தில் சத்திரியர்களாக முன் நிறுத்தப்படும் அனைவரும் சத்யவதி என்ற மீனவ குலப் பெண்ணின் வழித்தோன்றல்கள் என்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கலாம். இந்தக் கோணத்தில் பார்த்தால், கர்ணணின் மகன் விருஷகேதுவை, சூத்திரன் என்ற காரணத்தினால் முடி சூட்டிக்கொள்ளக் கூடாது என்று தீர்ப்பளித்த பீஷ்மரின் சட்ட நிலைப்பாடு சரியானதாகத் தோன்றவில்லை என்பது ஒரு முக்கியமான விஷயம். சத்யவதியும் சந்தனு மகாராஜனும் திருமணம் செய்த கொண்டு இல்லறம் நடத்தியதன் பயனாக, சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்று இரண்டு புதல்வர்கள் பிறந்தனர். அவர்கள் பீஷ்மரின் ஒன்றுவிட்ட சகோதரர்கள். சித்திராங்கதன் இறந்துபோனான். விசித்திர வீரியன் அரசனான். காசி தேசத்து இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்ற மூவருக்கும் சுயவரம் நடக்க இருப்பதை பீஷ்மர் கேள்விப்படுகிறார். அவர்களை, தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனான விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்புகிறார். பீஷ்மர் வில்வித்தையில் மகாவிஷ்ணுவின் இன்னொரு அவதாரமான பரசுராமனுக்கு மட்டுமே இணை வைத்துப் பேசக்கூடிய அளவிற்கு அற்புதமான வில்லாளி. அவருடைய போர் செய்யும் ஆற்றல்பற்றி, அனைத்து நாட்டு இளவரசர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும். அதேபோல, அவர் பிரம்மச்சர்ய விரதம் பூண்டவர் என்பதும் தெரியும். இந்தச் சூழலில் அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரின் சுயவரத்துக்கு பீஷ்மரே நேரில் வந்ததைப் பார்த்து சுயம்வரத்துக்கு வந்திருந்த அனைத்து இளவரசர்களும் திகைத்துப் போயினர். அவர் விசித்திர வீரியனின் சார்பில் அவர்களுடைய பிரதிநிதியாக சுயம்வரத்துக்கு வந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அதுவே இதுவரை இல்லாத நடைமுறை. அதிலும் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர் சுயம்வரத்தில் பங்கு கொள்வது என்பது கேள்விப்படாத விநோதம் மட்டுமல்ல. அது ஒரு முக்கியமான சட்டப் பிரச்சனையும் தர்ம நியதிப் பிரச்சனையுமாகும். தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனுக்காக, சுயம்வரத்தில் அவனுடைய பிரதிநிதியாகக் கலந்துகொண்டாலும் அது பீஷ்மரின் பிரம்மச்சரிய விரதத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பீஷ்மர் சுயம்வரத்தில் பங்கு கொண்டிருந்தாலும், வயதில் மூத்தவரும் பிரம்மச்சரிய விரதம் பூண்டவரும் அரச பதவி வேண்டாம் என்றவருமான பீஷ்மருக்கு இளவரசிகள் மாலை சூட்டியிருக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். ஆக, பீஷ்மரின் சபதம் மீனவப் பெண்ணின் மகனுக்கு அரச பதவியைக் கொடுத்தது என்றால், அவரது வீரம் அவரது பிரம்மச்சரிய விரதத்தைக் கேலிப் பொருளாக்கி இன்னொரு அற மீறலுக்கும் காரணமாகிவிட்டது. (புதன்கிழமை தொடர்வோம்)

அக்கா

அக்கா

சிறுகதை “அப்பா.. அப்பா போயிட்டாருடா கதிரு…” சென்னையில் உறங்கிக்கொண்டிருந்தவனை மதுரையிலிருந்து அண்ணன் செல்வத்தின் குரல் இப்படியா வந்து எழுப்பி உலுக்கிப் போட வேண்டும்?! இரவு தூங்கியவர் காலையில் எழவேயில்லையாம். கதறி அழுதான் அண்ணன். ‘இப்படி விடியத்தான் காத்திருந்ததா இந்த ஞாயிறு’ என்று ஒரு கணம் நாளினைச் சபித்துத்கொண்டது நாக்கு. “அக்காவுக்கு சொல்லிட்டியாண்ணே?” அடுத்த வார்த்தையாய் இதுதான் வந்து விழுந்தது கதிரிடமிருந்து. “இப்பத்தான்டா டாக்டரக் கூட்டியாந்து கன்பஃர்ம் பண்ணேன். முதல்ல ஒனக்குத்தான் போடுறேன். இனிமேத்தான் எல்லாருக்கும் சொல்லணும். சொல்லாம இருப்பனா? நீ வா பேசிக்கலாம்.” அலுவலகத்துக்கும் மகளின் பள்ளிக்கும் விடுமுறை சொல்லி, வாடகைக் காருக்கு முகவரி தந்து என்று ஒருவழியாக அடித்துப் பிடித்துக் கிளம்பி அவன் பறந்த வேகத்திற்கு, காருக்கு வெளியே நகரம் நகர்வேனா என்றது. போன மாதம்தான் தன் மகளும் பேத்தியும் விடுமுறைக்கு வந்திருப்பதால், கொள்ளுப் பேத்தியோடு அப்பா இருக்கட்டும் என்று சொல்லி அப்பாவை அழைத்துப் போயிருந்தான் செல்வம். எதையாவது காரணம் சொல்லி, தங்களோடு அப்பாவின் இருப்பை நீட்டித்துக் கொள்வதில் இருவருக்குமே அப்படியொரு தாகம். “அக்கா ஊருக்குப் போனதும் நீங்க இங்க வந்துடணும் தாத்தா” என்று கையைப் பிடித்துக்கொண்டு சிணுங்கிய கதிரின் மகளுக்கு, ‘பத்து நாளில் வந்துவிடுவேன்’ என்று சமாதானம் செய்துவிட்டுப் போன அப்பா, இப்போது வராமலேயே போயிருந்தார். எண்பத்திரண்டு ஆகிறது. உழைத்துக் கழிக்கத்தான் அவரைச் சபித்திருந்தது போல இந்தப் பிறப்பு. ஊரில் விவசாயம் பொய்த்துப் போய் மூன்று பிள்ளைகளைக் கையில் பிடித்துக்கொண்டு மதுரைப் பக்கம் பஞ்சம் பிழைக்க வந்த சம்சாரி. பேப்பர் போடுவது, தேங்காய் பறிப்பது, சுண்ணாம்பு அடிப்பது, தியேட்டரில் டிக்கெட் கிழிப்பது என்று ஆட்டங்காட்டிய வாழ்வு, ஒருகட்டத்தில் அதுவே அசந்துபோய் அம்மன் கோயிலுக்கு அருகே பூக்கடையே நிரந்தரப் பிழைப்பு என்ற நிலைக்கு வந்திருந்தது. விடியலிலேயே பூ மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்த சரக்கை, மொத்தக் குடும்பமும் நாள் முழுக்கக் கட்டிக்கொண்டிருக்கும். அப்படி மணத்துப் போனதுதான் இப்போதைய இந்த வாழ்வு. பூக்கடை வாசத்தில் பிழைப்போடு பிழைப்பாக, ஒரு முனைப்போடுபடித்ததனால், செல்வம் மதுரையிலேயே அரசுப் பள்ளி ஆசிரியராகவும் கதிர், சென்னையில் ஒரு தனியார் அலுவலகப் பணியிலுமாகத் திருமணம் குழந்தையென்று குடும்பம் விருத்தியாகி நிமிர்ந்தபோது, அதற்காகவே காத்திருந்ததைப் போல விடைபெற்றுக்கொண்டாள் அம்மா. வாலறுந்த பட்டம் போல, தன் உயிரறுந்து போனதில் அப்பாவின் ஓட்டமத்தனையும் அம்மாவின் மூச்சோடே ஒடுங்கிப் போனது. அம்மாவுக்குப் பிறகான நாட்களெல்லாம் அம்மாவின் நினைவுகளாக அப்பாவைத் தின்றுகொண்டிருந்தன. ஒட்டுமொத்த தைரியமும் அம்மாவோடு கரைந்து போயிருந்தும் பயமுறுத்துகிற வீட்டுக் கடனுக்காக வேண்டி, ‘ஓடுகிற வரைக்கும் ஓடுகிறேனே’ என்று சொன்ன அப்பாவை மகன்களது அதட்டல்தான் வீட்டோடு நிறுத்தியிருந்தது. வயதும் விசனமும் ஒருசேர மூத்திருக்க, உறக்கமில்லாப் பொழுதுகளோடு உழன்றுகொண்டிருந்தவர். பழுத்தால் உதிரவேண்டும் என்பது என்ன நியதியோ? “சார்… டீ சாப்பிடலாமா?” டிரைவர் அழைத்தபோது திருச்சி வந்திருந்தது. மகள் உறக்கத்திலிருந்தாள். “நேரத்துக்குச் சாப்பிடாம இந்த டீயக் குடிச்சேதான் பொழப்பு பொழப்புன்னு ஓடுனாரு ஒங்கப்பா. இந்நேரம் நம்மளோட இருந்திருந்தா நாலு டீ குடிச்சிருப்பாரு, இல்லங்க..”என்று கவிதா சொல்ல, ‘இனி இப்படித்தான் போல. ஆண்டாண்டு கால உறவின் பிணைப்பும் உயிர்ப்பும் இறுதியில் வெறும் நினைவுகளாக மட்டுமே தங்கிப் போகின்றன’ என்பதன் நிதர்சனம் உறைக்கையில் டீயும் கசப்புத் தட்டியது கதிருக்கு. மூன்று பிள்ளைகளை வளர்த்துக் கரையேற்றியது போக, ஒரு மச்சு வீடு கட்டிக்கொண்டதுதான் அப்பாவின் வாழ்நாள் சாதனையாக மிஞ்சியிருந்தது. பிழைக்க வந்த இடத்தில் எப்படியாவது முளைத்து எழுந்துவிட வேண்டுமென்ற வீம்பும் வாழ்ந்தேயாக வேண்டுமென்ற வைராக்கியமுமாக அப்பா வாழ்க்கையைப் படித்திருந்தார். கூடவேயிருந்து செல்வமும் கதிரும் அப்பாவைப் படித்திருந்தார்கள். ஆனால் எவர் எடுத்துச் சொல்லியும் எட்டாவதைத் தாண்டாத அக்கா ஜெயா மட்டும் எப்போதும் எதையும் யாரையும் படிக்கத் தலைப்படவேயில்லை. வீட்டில் மொத்தப் பேருக்குமே அக்கா என்றால் எப்போதுமே ஒருவித பயமும் பதற்றமும்தான். கோபமும் பிடிவாதமும் அழிச்சாட்டியமும் அவள் கூடவே பிறந்தவை. எதிலும் நிறைவு காணாத கண்கள். எத்தனைதான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் சிலிர்த்துக்கொண்டு நிற்பாள். ‘கெடக்கட்டும்.. நாளப் பின்ன வந்தா, குத்த வச்சுக்க புடி மண்ணு வேணும்ல’ என்ற கணக்கில் ஊரில் விட்டு வந்த ஒரு துண்டு நிலத்தையும்  அடிமாட்டு விலைக்கு விற்றுத்தான் அக்காவின் கல்யாணம் முடிந்திருந்தது. அதிலும் ஏகப்பட்ட குறை அவளுக்கு. காப்பிப்பொடி கலரில் இன்னும் கொஞ்சம் கனத்த கரை போட்ட பட்டு எடுத்திருக்கலாம்… காதுத் தோடு இன்னுங்கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம்… அம்மாவின் அந்த எட்டுக்கல்லு பேசரியைத் தனக்குப் போட்டிருக்கலாம்… எலுமிச்சம் பழக்கார வீட்டு அன்னக்கொடி புருசனைப்போல இல்லாவிட்டாலும் மாப்பிள்ளையை இன்னும் கொஞ்சம் லட்சணமாகப் பார்த்திருக்கலாம்.. என்று வளர்ந்துகொண்டே போகிற அவளது குறைகளுக்கெல்லாம் காது கிடைத்தால் போதும்; இன்றைக்குப் பூராவும் கண்ணைக் கசக்கிக்கொண்டிருப்பாள். எப்போது பிறந்த வீட்டுக்கு வந்தாலும் இரண்டே நாளில் சந்தி சிரிக்கச் செய்துவிட்டு, ‘இனி இந்தப் பக்கமே வரமாட்டேன்’ என்று மூக்கைச் சிந்திவிட்டுப் போவாள்.  எண்ணி ஆறு மாதத்தில் புதிதாய் ஒரு பட்டியலோடு வந்து நிற்பாள். ‘பகல் கொள்ளை தோத்தது போங்க’ என்பாள் அம்மா. “விடுமா.. யார்ட்ட கேக்குறா அவ? செல்லுபடியாகுற எடத்துலதானே சிணுங்க முடியும்?!” சிரித்துக் கடந்துவிடுவார் அப்பா. இரண்டு அக்காக்களோடு பிறந்த அப்பாவுக்கு, செத்துப்போன அவரது பெரியக்காளின் சாயலும் குணமுமாகப் பிறந்திருப்பதாக மகளின் மீது வாஞ்சை அதிகம். அதனாலேயே அவளது கல்யாண குணங்கள் அத்தனையும் பொறுத்துக்கொள்ளுகிற அப்பா. “அதட்டவும் கொட்டவும், அக்கா தங்கச்சி இருக்கக் குடுத்து வச்சிருக்கணும்டா செல்வம். மாமஞ்சீரு நீங்க செய்ய.. அத்த சீரு அவ செய்யன்னு.. மனசாரக் குடுக்கவும் மனசார வாங்கிக்கவும் பொறந்தவன்னு ஒருத்தி இருக்க, புண்ணியம்ல பண்ணியிருக்கணும்..” என்று அவளது அதிகாரத்தையும் ஏவல் கேவல்களையும் மகன்களிடம் பூசி மெழுகுவார். அப்படியெல்லாம் பூசி மெழுகி வைத்துக்கொண்ட அக்காதான், அம்மா இறந்த கருமாதி வீட்டில், “வீட்ட தம்பிக வச்சுக்கட்டும். அம்மாவோட பண்ட பாத்திரம், பட்டுச்சேலை, காது கழுத்துல கெடந்த பத்துப் பவுனும் பொறந்த மக எனக்கு வந்தாகணும், சொல்லிப்புட்டேன்” என்று, சபையில் ஆங்காரமாக நின்றாடியபோது அப்பா ரொம்பவே ஆடிப்போனார். “ஏத்தா.. அம்புட்டுச் செரமத்துலயும் ஊருக்காட்ட வித்து , நீ கேட்டதுக்கும் மேலயே ஒம்மனசு குளுரக் குளுர நிறைவா செஞ்சுட்டேன். விடுத்தா பாத்துக்கலாம். இத்தோடயா போச்சு? இன்னும் எம்புட்டோ இருக்கு.  மலையாட்டமா இருக்காங்கெ ஒந்தம்பிக ரெண்டு பேரும். அப்டில்லாம் விட்டுறுவாங்கெளா உன்ன? இப்ப பாத்திரம் பண்டம், சேல கீலன்னு நீ கேட்டத எடுத்துக்க தாயீ. ஒனக்கே தெரியும்.. அடுத்தடுத்து ஒந்தம்பிங்க கல்யாணச் செலவு ஒங்கம்மா வைத்தியச் செலவுன்னு வம்பாடு பட்டுக் கட்டுன வீடும் பேங்கு அடமானத்துல இருக்கு. இன்னும் எனக்கு எத்தன நாளு விதிச்சுருக்கோ தெரியல. அதுக்குள்ள ஒங்கம்மா நகை அதுயிதுன்னு கொஞ்சம் சேத்துப் புடிச்சுத் தேத்தி வீட்ட மீட்டுறுவேன். நாம்பொழச்ச இந்தப் பொழப்புக்கு, ஒந் தம்பிக தலையிலக் கடனக் கட்டிட்டுப் போன பாவத்த வேற நான் தூக்கிட்டுப் போகணுமாத்தா..?” “எப்புடியோ வீடு அவனுகளுக்குத்தானே? அதுல எனக்கென்னா பங்கா கேக்கப் போறேன்? அப்புடில்லாம் பேராச புடிச்சவ இல்ல நானு. ஆத்தா சொத்து மகளுக்குத்தே. என்னைய ஏமாத்தப் பாக்காதிக. நான் விட மாட்டேன் ஆமா, சொல்லிப்புட்டேன்.” “இருக்கற நகையெல்லாம் ஒன்ட்ட குடுத்துட்டு, வெறுங் கடனை மட்டும் ஒந்தம்பிக தலையில கட்டச் சொல்றியே, நியாயமாத்தா? அவனுக குடும்பம் பாத்து கடெங்கட்டி வீட்டை மீட்டு எந்தக் காலத்துல எந்திரிச்சு நிக்க?” ம்ஹும். எந்த நியாயமும் செல்லுபடியாகவில்லை அக்காவின் தராசுக்கு முன்னே. தெரிந்த கதைதான். “சரி விடுத்தா. நீ முடிவு பண்ணிட்டு பேசுற. நா என்னத்தச் சொல்ல? தோடு வளையலுன்னு அஞ்சு பவுன மனசார வாங்கிக்க. ஆத்தா கழுத்துச் செயினு மட்டும் அப்பனோட இருக்கட்டும். ஏம் மிச்ச நாளுக்கு ஒரு பிடிப்பு வேணாமா? நீயே சொல்லு..” அப்பாவின் இறுதியான உறுதியிலும் சபையின் தீர்ப்பிலுமாக, அஞ்சு பவுனு குறைந்துபோன ஆத்திரம் அக்காவிற்கு. ‘இனி இந்த வீட்டுப் படி ஏறமாட்டேன்’ என்று கண்ணீர் விட்டுத் தூற்றியவாறு சாபமிட்டுவிட்டு, மறக்காமல் பண்ட பாத்திரங்களோடு போனவள்தான். வருடம் பதினாறு முடிந்தது. இந்த முறை அக்கா சொன்னபடியே செய்தாள். “வந்துருவா கழுத. எங்குட்டுப் போயிருவா..” மகன்களைத் தேற்றுவதாகத் தன்னை ஆற்றிக்கொண்டிருந்தார் அப்பா. காலங்கள் உருண்டோடி இருந்தாலும் கசப்புகளென்னவோ எல்லாருக்குள்ளும் உருண்டு திரண்டிருந்தன. கடைசியாக இப்போது அப்பாவைப் பார்க்கவாவது அக்கா வருவாளா, தெரியவில்லை. வீட்டுக்குள் நுழையும்போதே செல்வம் கதறிக்கொண்டு ஓடி வந்தான். கண்ணாடிப் பெட்டிக்குள் இப்பவும் அப்பா உறங்குவது போலவேதான் இருந்தார். பட்டு வேட்டி சட்டையில் அப்பாவைப் பார்க்கப் பார்க்கப் பொங்கிக்கொண்டு வந்தது துக்கம். செல்வம் தன் மகளின் திருமணத்திற்கு எடுத்துக் கொடுத்தது.  “ரொம்ப வெளீர்னு இருக்கு.. வேணாண்டா. சொன்னாக் கேளுங்கடா. விடுங்கடா என்னிய..”  என்று பிடிவாதம் பிடித்தவரை, மல்லுக்கட்டி முகூர்த்தம் வரைக்கும் கட்ட வைத்திருந்தார்கள். சாதாரண வேட்டி சட்டைக்கு மாறின பின்புதான் சாதாரணமாக இருந்தார் அவர். வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருக்க, கதிர் நினைத்தது போலவே அக்கா இன்னும் வந்திருக்கவில்லை. “சென்னையிலேர்ந்து நீ வந்து எறங்கிட்ட. இங்கன அழகர்கோயில்ல இருந்துகிட்டு இன்னும் வந்துச்சாப் பாரு.. காலையிலேர்ந்து நாலஞ்சு ஆள அனுப்பியாச்சு. என்ன செய்யக் காத்திருக்கோ?” என்று செல்வம் புலம்பிக்கொண்டிருந்தான். “நல்ல சாவுப்பா. கொடுத்து வச்சவரு. மேலுக்கு சொகமில்லன்னு கெடக்காம வைக்காம,யாருக்கும் தொந்தரவில்லாம தூக்கத்துலயே போய்ச் சேர்றது யாருக்குக் கிடைக்கும்!” என்பதான பெருமூச்சுகளுக்கிடையே, அழுகையும் புழுக்கமுமாக வியர்த்துக் கிடந்த நேரத்தை நெளிந்துகொண்டே போக்கிக்கொண்டிருந்த பெருசுகளின் குரல்கள், மெல்ல மெல்லக் காரியங்களை விரட்டத் தொடங்கின. “ஏப்பா செல்வம்.. வர்ற சனம் வந்துகிட்டே இருக்கட்டுமப்பா. அதுக்குள்ள நாம காரியத்த ஒவ்வொன்னாப் பாத்துக்கிட்டே இருப்போம். நேரம் போவுது பாரு..” நீர்க்குடத்துக்கு சருவம் எண்ணி, கோடிச் சீரெடுக்க சம்பந்தக்கார மக்களை அழைத்துக்கொண்டிருக்கையில் குடும்பத்தோடு வந்து இறங்கினாள் அக்கா. துள்ளத் துடிக்க, அழுகையோ ஆர்ப்பாட்டமோ எதுவுமில்லை. கால்கள் தயங்கித் தயங்கிப் பின்னிக்கொள்ள, குனிந்த தலை நிமிராமல்  உள்ளே போனாள்.இடையே காணாமல் போயிருந்த காலம், அவளை யாரோவாய்க் காட்டியது. கண்ணாடிப் பெட்டியின்மீது உரசிக் கொள்ளாத தூரத்தில் நின்றபடி அப்பாவின் முகத்தோடு உறைந்திருந்தவள், “அக்கா..” என்றழைத்தபடி பின்னாலேயே செல்வமும் கதிரும் வந்து நிற்க, சட்டென்று முன்னுக்கு நகர்ந்து குவிந்திருந்த மாலைகளைப் புறந்தள்ளிக்கொண்டே முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டாள். கோடியெடுத்து, நீர்க்குடம் தூக்கி, குளிப்பாட்டி,

உணவுத் தீண்டாமை

உணவுத் தீண்டாமை

இந்தச் சமூகத்தில், நாம் உண்ணுகிற உணவு என்பது, ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு வேறுபட்டுள்ளதைப்போல, ஒவ்வொரு மனிதருக்கும் உணவுப் பழக்கவழக்கம் வேறுபட்டே உள்ளது. உணவு விருப்பம் என்பது எல்லாருக்கும் ஒன்றுபோல இருக்கிறதா என்றால், இல்லை என்பதே உண்மை.   உலக நாடுகளில், அந்தந்த நாடுகளின் வாழ்வியல் சார்ந்து மக்கள் உணவுப் பழக்கத்தை வைத்திருக்கிறனர். அதில் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் போன்றவை பொதுவான அசைவ வகை உணவுகளாக அறியப்படுகின்றன. மேற்சொன்னவை மட்டுமல்லாது, நிலத்திலும் நீரிலும் வாழும் பல்வேறு விலங்குகள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள் ஆகியவையும் பல இடங்களில் மனிதர்களின் உணவுப் பட்டியலில் இருக்கின்றன. காய்கறிகளை / தாவரப் பொருட்களை மட்டுமே கொண்டு சமைக்கப்படும் உணவுகள் சைவ வகை உணவுகளாக அடையாளம் பெற்றுள்ளன. உலகின் பல நாடுகளில் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி,  மீன் வகைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள்தான். இந்தியா போன்ற சில நாடுகளில் வாழ்கிற மக்களிடம், அவர்களின் குடி, சமயம், குடும்பம் போன்றவற்றின் அடிப்படையில், உணவுப் பழக்கவழக்கங்களில் அசைவமும் சைவமும் கலந்திருக்கிறன. உயிர் வாழவும் பசி போக்கவும் நாம் உண்கிற உணவில், சைவ உணவுதான் சிறந்தது என்று சிலரும், இல்லை இல்லை, அசைவ உணவுதான் சிறந்தது என்று சிலரும் அவரவர் உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். உண்மையைச் சொன்னால், அவர்கள் அவர்களை அறியாமலே, மறைமுகமானதொரு அரசியல் வலையில் சிக்கவைக்கப்டுள்ளனர். இதனால் மனிதர்களுக்குள்ளே ஒற்றுமையை விலக்கி, வேற்றுமையை உருவாக்கி, உளவியல் ரீதியில் அவர்களை ஒருவகை நெருக்கடிக்கு உள்ளாக்கி வைத்திருக்கிறது இந்த உணவு அரசியல். இதனால், பழக்கப்பட்ட உணவை வைத்து ஒருவரை ஒருவர்  ஏளனமாகவும் இழிவாகவும் பார்க்கிற பார்வை இங்கே பரவலாக இருந்து வருகிறது. ஆம், சைவ உணவை உண்பவர்கள் எல்லா வகையிலும் உயர்ந்தவர்கள், போற்றத்தக்கவர்கள், அது பிறப்பின் பெருமை என்பதோடு, அசைவ உணவை உண்பவர்களை மிகவும் கேவலமாகவும் அருவருக்கத் தகுந்தவர்களாகவும் கீழானவர்களாகவும் தீண்டத் தகாதவர்களாகவும் பார்க்கிற எண்ணமும் ஒரு சாராரிடம் நிறைந்திருக்கிறது. அவர்களால் பொது இடங்களில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறபோது, அசைவ உணவு கொண்டுவந்தவர்களோடு இயல்பாகச் சேர்ந்து உணவருந்த முடிவதில்லை. அவர்களின் செயல்பாடுகளால் அசைவ உணவை உண்பவர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. அதைப்போலவே சைவ உணவு உண்பவர்களுக்கும் பல சங்கடங்கள் நிகழ்கின்றன என்பதையும் நாம் பார்க்கவேண்டும். பெரும்பான்மையாக அசைவ உணவுப் பிரியர்கள் ஒன்றுகூடும் இடங்களில், சைவ உணவு உண்பவர்களை, சாம்பார் சோறு என்றும் தயிர் சோறு என்றும் ஏளனத்துக்கு ஆளாகிறார்கள். காரணம், பெரும்பான்மை கோலோச்சுகிற இடங்களில் சிறுபான்மை தாக்குதலுக்கு உள்ளாகிறது. உணவு என்பது அவரவர் விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர, ‘நீ அதை உண்ணாதே என்பதும் இதைத்தான் உண்ண வேண்டும் என்பதும் ஆதிக்க மையத்தின் அடாவடிச் செயலாகும்.  இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், ஏழை எளியோர்களின் அன்றாட உணவுகளான பழஞ்சோறு, கஞ்சி, கூழ் போன்றவற்றைப்பற்றிப் பொது இடங்களிலோ மற்றவர்களிடத்திலோ பேசும்போது ‘ஆஹா, ஓஹோ’ என்பவர்கள், அதை ஏழைகளிடத்தில் காண்கிறபோது ஏளனமாகப் பார்கிற பார்வை பெரும்பாலோரிடம் இருக்கிறது. அது சைவமோ அசைவமோ, எதுவாக இருந்தாலும் ஏழைக்களிடம் இருப்பதால் அது, இவர்களைப் பொறுத்தவரை தீண்டத்தகாத உணவு, அவ்வளவுதான். என்னதான் ஒருவருக்கொருவர் உணவு விஷயத்தில் ஒவ்வாமையைக் காட்டினாலும், உணவுத் தீண்டாமை என்பது, ஏழைகளின் உணவுகளைபோல அசைவ உணவுகளின் மீது மட்டுமே அதிதீவிரமாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக அசைவத்தின் மீது வெறுப்பை உமிழ்பவர்கள் தொடர்ந்து இருந்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். அண்மையில், முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி, தனது சமூக வலைத்தளப் பதிவில், ‘அசைவ உணவு சாப்பிடுவோரின் ஆன்மாவால், நெற்றிப் பொட்டில் உள்ள சவ்வைக் கிழித்துக்கொண்டு சென்று இறைவனைச் சேர முடியாது’ என்று அவருடைய குரு கூறியதாகப் பதிவு செய்திருந்தார். உண்மையில் அவர், சைவத்துக்கு ஆதரவு என்கிற பெயரில் அசைவ உணவு குறித்த தன் அறியாமையை வெளிப்படுத்தியிருந்தார், அவ்வளவே. முருக பக்தரான கிருபானந்த வாரியார் சுவாமிகள் போன்றவர்களுக்குக்கூட, உணவு விஷயத்தில் போதிய அறிவு இல்லை என்பதை அவரது உரைகளின் வழியே நான் கேட்டிருக்கிறேன். ஒருமுறை  அவர், சைவமே சிறந்ததென்று சொல்வதற்காக, ஒரு முருங்கை மரத்தின் கிளைகளை வெட்டி நட்டு வைத்தால், அது பல முருங்கை மரங்களாக வளர்ந்து நமக்குப் பயன் தரும். ஆனால் ஒரு ஆட்டை வெட்டி அதன் கால்களை நட்டுவைத்தால் ஆடு வளருமா எனக் கேட்கிறார். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் பகுத்தறிவற்றுப் பேசுகிறபோது சிறிய மனிதராக ஆகிவிடுகிறார்கள் என்பதற்கு உதாரணம் இதுபோன்ற மூடத்தனமிக்க பேச்சுகள்தான். முருங்கை குறித்த அவர் பேச்சு சரிதான் என்று வைத்துக்கொண்டாலும், எல்லா மரங்களும் வெட்டி நட்டால் வளராது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தென்னை மரத்தையோ பனை மரத்தையோ அல்லது நெல், சோளம் போன்ற பயிர் வகைகளையோ வெட்டி நட்டால் அவை வளராது; பக்குவப்படுத்தப்பட்ட விதைகளைப் போட்டால்தான் வளரும். அப்படித்தான், ஒரு ஆட்டை வெட்டி அதன் கால்களை நடுவதால் ஆடு வளராது. ஆனால் ஆடுகளை வளர்த்து பல குட்டிகளைப் போட்டபின்பு அது கசாப்பு கடை வழியே உணவாக மாறுகிறது. ஒரு ஆடு பல குட்டிகளை ஈனும். அவை இன்னும் பலப்பல குட்டிகளை ஈனும். விவசாயம் எப்படி நடைபெறுகிறதோ அதற்குச் சற்றும் குறைந்ததல்ல கால்நடைகள் வளர்ப்பு. அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு தம்பி பேசுகிறபோது, சைவம் சிறந்ததென்று சொல்வதற்காக, வாரியம் சுவாமிகள் சொன்னதாக ஒரு செய்தியைச் சொன்னார்.  எது சைவம்? எது அசைவம்?  என்று அவரிடம் கேட்டபோது, சாலையில் ஒரு ஆடு அடிபட்டு உயிருக்குப் போராடுகிறபோது, யார் கண்களில் நீர் சுரக்கிறதோ அது சைவம் எனவும் யார் வாயில் நீர் சுரக்கிறதோ அது அசைவம் என்றும் சொன்னதாகச் சொல்கிறார். இது எத்தகைய வக்கிர மனப்பான்மை?! அதாவது, சைவம் உண்பவர்கள் ஜீவகாருண்யம் மிக்கவர்கள், அன்பை போதிப்பவர்கள், யாருக்கும் தூன்பம் தராதவர்கள், நல்லவர்கள் என்பது போலவும் அதேசமயம் அசைவம் உண்பவர்கள் மற்ற உயிரினங்கள் மீது அன்பு செலுத்தாததோடு அதைக் கொன்று தின்பதையே முதல் குறிக்கோளாக வைத்திருப்பவர்கள், கொடூரமானவர்கள், மொத்தத்தில் நல்லவர்களில்லை என்பதாகவும் தரம் தாழ்த்தி பேசுபவரான வாரியார் சுவாமிகள், மிக நல்லவராக, பக்திமானாக நம் எல்லாராலும் மதிக்கப்படுகிறார்.  இவர்களைப் போன்ற சைவப் பெருமை பேசுகிறவர்களை, நடிகர் எம்.ஆர்.ராதா அவர்கள் போகிற போக்கில், “மூட்டைப் பூச்சிகளையும் கொசுகளையும் கொத்துக் கொத்தாக அடித்துக் கொல்பவர்களும், பல ஆயிரம் கூட்டுப்புழுக்களைக் கொன்று உருவாக்கப்படும் பட்டாடைகளை உடுத்துபவர்களும் மாட்டின் காம்புகள் நோகப் பாலைக் கறப்பவர்களும் மற்றவர்களுக்கு புத்தனைப்போலப் போதிப்பானுங்க; அயோக்கியப் பயலுங்க” என்று சாடுவார்.   உணவுகளில் எல்லாமும் எல்லாருக்கும் பிடிப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கிறது. அதைத்தான் அவர்கள் விரும்பி உண்கிறார்கள். சைவ உணவுப் பிரியர்கள் ஒதுக்கி வைக்கும் காய்கறிகள் ஏராளம். போலவே அசைவப் பிரியர்கள் ஒதுக்கும் கறி வகைகளும் ஏராளம். ஆகவே சைவமோ அசைவமோ, அவரவர் விருப்பத்திற்கு உண்பதைத் தாழ்வானதாகவோ அருவருக்கத்தக்கதாகவோ யாரும் கருதவேண்டாம். ஒருவருக்கு ஜீரணம் ஆகிற எந்த உணவும் உண்ணக்கூடியதே. உயிர்கள் பிறப்பின் நோக்கம் இனப்பெருக்கம் என்கிறது அறிவியல். இனத்தைப் பெருக்க வேண்டுமென்றால், நீடித்து உயிர் வாழ வேண்டும். உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம். அவரவர் உடல் நிலைக்கு ஏற்ற உணவினை உண்டு நீடித்து வாழ்வோம்.

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 5

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 5

6. மகாபாரதத் திருமணங்களில் ‘சமூக ஒப்பந்தம்’ இருந்ததா? இன்றைய சட்டங்களின்படி வேறொரு தம்பதிக்குப் பிறந்த குழந்தையை ஒருவர் தத்து எடுத்துக்கொள்ள முடியுமே தவிர, தன் மனைவிக்கு வேறொரு ஆண்மூலம் தனது சம்மதத்துடன் பிறந்த குழந்தையைத் தத்து எடுக்க முடியாது. மகாபாரதக் காலத்தில் நடந்ததையே பாருங்களேன்..! கர்ணன் பாண்டுவின் மகனும் அல்ல; பாண்டுவின் வாரிசும் அல்ல; அதனால் ராஜ்ஜியத்திற்கு உரிமை கோர அருகதை உள்ளவனும் அல்ல. அதேபோல் அவன் மகனுக்கும் முடிசூட்டிக்கொள்ள உரிமையில்லை. மகாபாரதக் காலத்தில் நடைமுறையில் இருந்த இந்தச் சட்டங்களில் ஜாதி அல்லது குலம் எவ்வளவு பெரிய பங்கு வகித்திருக்கிறது என்பதை, கர்ணனும் விருஷகேதுவும் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது, தாய்வழியில் கர்ணன் க்ஷத்திரியன் என்றாலும் பாண்டுவின் புதல்வன் என்ற அங்கீகாரம் அவனுக்குத் தரப்படவில்லை. கர்ணனின் புதல்வன் என்றாலும் தாய் சூத்திரக் குலத்தில் வந்ததால் விருஷகேதுவுக்கும் பீஷ்மர் அங்கீகாரம் தரவில்லை. இது சரி என்றால், விசித்திர வீரியன் மீனவப் பெண்ணின் புதல்வன் ஆயிற்றே..! அவனுக்கு எப்படி அரச பதவி கிடைத்தது  என்ற பெரிய கேள்வி வருகிறது. அதை பீஷ்மரே அங்கீகரித்தும் இருக்கிறார். பீஷ்மரின் இயற்பெயர் தேவவிரதன். அவர் கங்காதேவிக்குப் பிறந்த எட்டாவது மகன். பீஷ்மரின் தந்தையின் பெயர் சந்தனு. சந்தனு அவள் கங்கை என்று அறியாமல் கங்காதேவி மேல் காதல் கொள்கிறான். கங்காதேவியும் திருமணத்திற்குச் சம்மதித்ததால் அவள் சந்தனுவின் முதல் மனைவியானாள். ஆனால் திருமணத்தின்போது கங்காதேவி,  சந்தனு மகாராஜனுக்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறாள். தன்னை ‘யார்’ என்று சந்தனு மகாராஜன் ஒருபோதும் கேட்கக்கூடாது என்பது அதில் முதல் நிபந்தனை.  தான் என்ன செய்தாலும் ‘ஏன் செய்கிறாய்’ என்று கேட்கக் கூடாது என்பது இரண்டாவது நிபந்தனை. மோகத் தீயில் கொதித்துக்கொண்டிருந்த சந்தனு மகாராஜன், அந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு கங்காதேவியை, அவள் கங்காதேவி என்று அறியாமலேயே திருமணம் செய்துகொண்டான். சந்தனு மகாராஜனுக்கும் கங்கா தேவிக்கும் எட்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. முதல் குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையை கங்காதேவி கங்கையில் கொண்டுபோய் வீசி மூழ்கடித்துக் கொன்றுவிட்டாள். சந்தனு மகாராஜனால் அதுபற்றி எதுவும் கங்காதேவியிடம் கேட்கமுடியவில்லை. அமைதியாக இருந்துவிட்டான். அதேபோல தொடர்ந்து பிறந்த இதர ஆறு குழந்தைகளையும் கங்காதேவி கங்கையில் வீசிக் கொன்றுவிட்டாள். சந்தனு மகாராஜனால் எதுவும் கேட்க முடியவில்லை. கடைசியாக எட்டாவது குழந்தை பிறந்த பின்பு  அதையும் கொல்வதற்கு கங்காதேவி குழந்தையை எடுத்துக்கொண்டு கங்கைக் கரைக்குக் கிளம்பியபோது, சந்தனு மகாராஜனால் முன்போல அமைதியாக இருக்க முடியவில்லை. ‘நீ யார்? ஏன் குழந்தைகளைக் கொல்கிறாய்?’ என்று சந்தனு  மகாராஜன்,  நிபந்தனையை மீறி கங்காதேவியைக் கேட்டுவிட்டான். கங்காதேவி சொன்னாள், ‘நான்தான் அமிர்தமாய் ஓடும்  கங்கை; நான் ஒரு சாபத்தால் மானுட வடிவத்தில் இருக்கிறேன்; இதுவரை நான் கொன்ற என் ஏழு மகன்களும் அஷ்ட வசுக்கள்; வசிட்ட முனிவரின் பசுவை அவர்கள் கவர்ந்துபோனதால் அஷ்ட வசுக்களை பூமியில் மனிதர்களாகப் பிறந்து வாடும்படி வசிட்ட முனிவர் சாபமிட்டார். (மனிதனாகப் பிறப்பதே இந்த ரிஷிகளுக்கு ஒரு தண்டனையாகத் தெரிவது வேடிக்கையான விஷயம்). பயந்துபோன அஷ்டவசுக்கள் தங்களால் மனிதர்களாகப் பிறந்து வாடமுடியாது என்றும் சாபத்தைத் திரும்பப் பெறும்படியும் வசிட்ட முனிவரைக் கெஞ்சினார்கள். மனமிரங்கிய வசிட்ட முனிவர், ‘எட்டு அஷ்டவசுக்களாகிய உங்களில் ஏழு பேர் மட்டும் பிறந்ததும் இறந்து சாப விமோசனம் பெற்றுவிடுவீர்கள்; ஆனால் பசுவைக் கவர்ந்துபோன எட்டாவது அஷ்டவசுவான பிரபாஸ் மட்டும் மனிதனாகப் பிறந்து நீண்ட காலம் வாழ்ந்த பின்புதான் மரணமடைய வேண்டும்’ என்று சாபத்தை மாற்றினார். அஷ்டவசுக்கள் என்னிடம் வந்து தன்னை அவர்களுடைய தாயாக இருக்கும்படியும் அதில் தங்களில் ஏழு பேரைப் பிறந்தவுடன் கங்கையில் வீசிக் கொன்று சாப விமோசனம் அளிக்கும்படியும் எட்டாவது அஷ்டவசுவை மட்டும் கொல்லாமல் வளர்த்து ஆளாக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள். அதன்படி, நான் எனக்குப் பிறந்த ஏழு அஷ்டவசுக்களைக் கொன்று அவர்களுக்கு சாபவிமோசனம் கொடுத்தேன். எட்டாவது மகனாகப் பிறந்த இந்த அஷ்டவசுவைக் கொல்லமாட்டேன். நானே வளர்த்து மாபெரும் ஆளுமையாக்கி, தக்க நேரத்தில் அவனை உன்னிடம் ஒப்படைப்பேன்’ என்று சொல்லிவிட்டு மகனை அழைத்துக்கொண்டு போய்விட்டாள். கங்காதேவிக்கும் சந்தனு மகாராஜனுக்கும் இடையே நடந்த திருமணத்திலும்  ஒரு சட்டப் பிரச்சனை இருக்கிறது. பாரதக் கலாச்சாரத்தின்படி, திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் புனிதமான செயல் என்பார்களே.. பாரதக் கலாச்சாரத் திருமணத்தை மேலை நாட்டினரைப் போல ‘சமூக ஒப்பந்தம்’ (Social Contract) என்று ஒப்புக்கொள்வது இல்லை.  துல்லியமாகச் சொல்லப்போனால் பெண்களுக்கு ஆன்மா என்று ஒன்று இருப்பதையே மனு சாத்திரம் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் கணவன் இறந்தபின்பு மனைவியைக் கணவனின் சிதையில் அமர வைத்து அவனுடனே தீயில் கொளுத்திப் பஸ்பமாக்கி, சதிமாதா என்று கோயில் கட்டி வணங்கினார்கள்.  அதனால் ‘சமூக ஒப்பந்தம்’ என்ற கருத்தியல்  பாரதீயக் கலாச்சாரத்திற்கு எதிரானது.  ஆனால் கங்காதேவி விஷயத்தில் கங்காதேவி விதித்த நிபந்தனைகளை சந்தனு மகாராஜா ஏற்றுக்கொண்ட பின்புதான் கங்காதேவி திருமணத்திற்கே உடன்படுகிறாள். தான் யாரென்பதை வெளிக்காட்டாமலேயே சந்தனு மகாராஜனுடன் குடும்பம் நடத்துகிறாள். ஏழு குழந்தைகளைக் கங்கையில் வீசிக் கொல்கிறாள். அதுபற்றி சந்தனு மகாராஜன் கேள்வி கேட்டதும் தன்னை கங்காதேவி என்று வெளிப்படுத்திவிட்டுப் பிரிந்து போய்விடுகிறாள். இது மகாபாரதத்தில் வேறு எந்தப் பெண் பாத்திரத்திற்கும் கிடைக்காத சுதந்திரம்.  ‘சமூக ஒப்பந்தம்’ என்ற கருத்தியலில் விவாகரத்து என்ற உரிமை ரகசியமாக உள்ளடங்கியுள்ளது என்பதைக் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. மகாபாரதத்தில் உள்ள விதிவிலக்கான நிகழ்ச்சி இது.  இதுதான் அப்போதைய சட்டவிதி என்று சொல்லமுடியாது. இது தாளமுடியாத மோகத்தின் காரணமாக அப்சரஸ் போன்ற ஒரு அழகியின் நிபந்தனைக்கெல்லாம் ஒரு மன்னன் கட்டுப்பட்டு நடந்ததைக் காட்டும் வித்தியாசமான நிகழ்ச்சி. இந்த தேவவிரதன் செய்த மகத்தான சபதத்தால் மகாபாரத வாரிசுரிமை மீனவப் பெண்ணின் மகனுக்கு போனது. (அதை வரும் சனிக்கிழமை பார்க்கலாம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

5. கர்ணன் பாண்டு புத்திரனா? மகாபாரதத்தில், பீஷ்மப் பிதாமகர் அம்புப் படுக்கையில் இருந்து பேசிய, சத்திரிய – சூத்திரத் தகுதிகள் பற்றிச் சொல்லி சென்ற பகுதியை முடித்திருந்தோம். பீஷ்மர் இதுபோல் பலமுறை சட்டங்கள், தர்மங்கள் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். கர்ணனை, குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் ஏனைய பாண்டவர்களின் தந்தையான பாண்டுவின் மகனாக வீடுமன் கருதவில்லை என்பதைப் பார்த்தோம். ஏன்?கர்ணன் பிறந்தபோது, குந்திதேவி திருமணமாகாத பெண். கர்ணன் பிறந்த பின் திருராஷ்டிரனின் தம்பி பாண்டுவைத் திருமணம் செய்துகொள்கிறாள். பின்னர், பாண்டு சல்லியனின் தங்கை மாத்ரியை, இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொள்கிறான். பாண்டுவிற்கு, தன் திருமணத்திற்கு முன்பு குந்திதேவிக்குக் கர்ணன் என்றொரு மகன் இருப்பதே தெரியாது. இந்த நிலையில், பாண்டுவும் குந்திதேவியும் மாத்ரியும் வனத்திற்குப் போய் விளையாடிக் களித்துக்கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு அருகில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மான் உருவம் எடுத்து கலவியில் ஈடுபட்டு மகிழ்ந்துகொண்டிருந்தனர். முனிவரும் அவரது பத்தினியும் மான் வேடத்தில் இருப்பதை அறியாத பாண்டு, மான் வேடத்தில் இருந்த ரிஷியை அம்பெய்திச் சாய்த்தான். மரணத் தருவாயில் இருந்த ரிஷி, ‘அயோக்கியனே, நீ எந்த ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபட்டாலும் அந்தக் கணமே உன் தலை சுக்கு நூறாக வெடித்து நீ இறந்துபோவாய்’ என்று சபித்துவிட்டு இறந்துவிட்டார்.அந்த சாபத்தினால் மனமுடைந்துபோன பாண்டு, தன்னுடைய இரு மனைவியரையும் தொடாமலேயே பிரம்மச்சாரியைப் போல் வாழ்ந்து வந்தான். அஸ்தினாபுரத்தின் மன்னான பாண்டுவிற்குக் குழந்தைப் பேறு வாய்க்க வாய்ப்பே இல்லை என்பது, பாண்டுவைக் கடும் மனவேதனைக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில்தான் குந்திதேவி, ‘முன்னொரு சமயம் துர்வாசமுனிவர் தனக்கு, தான் விரும்பும் யாரையும் அழைத்து உறவுகொண்டு குழந்தைப் பேறு அடையும் மந்திரத்தை’ வரமாகத் தந்திருப்பதைப் பாண்டுவிற்குத் தெரிவித்தாள். அப்போதும், தான் கன்னியாக இருந்தபோதே சூரிய தேவனிடம் அதைப் பரீட்சித்துப் பார்த்து, கர்ணனைப் பெற்றெடுத்த சம்பவத்தைப் பாண்டுவிடம் சொல்லாமல் குந்திதேவி மறைத்துவிட்டாள். அந்தக் குழந்தையை ஆற்றோடு விட்டுவிட்டதே கர்ணனின் துயரங்களுக்குக் காரணமாய் அமைந்தது. துர்வாசர் தந்த வரம் பற்றிக் குந்திதேவி சொன்னதைக் கேட்டு, பாண்டு அகமகிழ்ந்தான்.அந்த மந்திரத்தைத் தனது இரண்டவாது மனைவியான மாத்ரிக்கும் சொல்லித்தரும்படி பாண்டு குந்திதேவியிடம் சொன்னான். அதன்படியே, அந்த மந்திரத்தைக் குந்திதேவி மாத்ரிக்கும் சொல்லிக் கொடுத்தாள். குந்திதேவி அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி தருமதேவனை (எமதர்மன்) வரவழைத்து, அவன் மூலம் தருமன் என்கிற யுதிர்ஷ்டனைப் பெற்றெடுத்தாள். பின்னர் வாயு பகவானை வரவழைத்து, பீமனைப் பெற்றெடுத்தாள். கடைசியாக இந்திரன் மூலம் அர்சுனனைப் பெற்றெடுத்தாள். அதேபோல் மாத்ரி, அஸ்வினி சகோதரர்களை வரவழைத்து நகுலனையும் சகாதேவனையும் பெற்றெடுத்தாள். தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற பெயருள்ள ஐவரையும் குடிமக்கள் அனைவரும் பாண்டவர்கள் என்று அழைத்தனர். பாண்டவர்களைப் பாண்டுவின் சம்மதத்தின் பேரில் பாண்டுவின் மனைவியர் வெவ்வேறு தேவர்கள் மூலம் பெற்றெடுத்ததால் பாண்டு அவர்களை, ‘தனக்கே பிறந்த தன்னுடைய வாரிசுகள்’ என்று ஏற்றுக்கொண்டான். அதனால் அவர்கள் ‘பாண்டுவின் புத்திரர்கள்’ ஆவார்கள். அதாவது மகாபாரதக் காலத்தில், ஒரு பெண் தன் கணவனின் சம்மதத்தோடு, வேறு ஆண்களோடு உறவுகொண்டு பெற்ற பிள்ளைகள், கணவனின் சட்டப்பூர்வ வாரிசுகள் என்ற தகுதியைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் பாண்டவர்களுக்கு மூத்தவனான கர்ணன், குந்திதேவிக்கு பிறந்தது பாண்டுவிற்கு மரணம் வரை தெரியாத ரகசியம். அதனால் பாண்டுவிற்குத் தெரியாமலும் பாண்டுவின் சம்மதமின்றியும் பிறந்த கர்ணன் பாண்டுவிற்குப் பிறந்த மகனாகவும் வாரிசாகவும் கருதப்படமாட்டான் என்பதும் பீஷ்மர் சொன்ன இன்னொரு சட்டவிதி. அதாவது, கர்ணன் குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் பாண்டவர்களின் மூத்த அண்ணனாக இருந்தாலும் அவன் பாண்டுவின் மகனாகமாட்டான் என்பதால் பாண்டவர்களைப் போல அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோரும் உரிமையுள்ளவனாக மாட்டான் என்பது, தத்து எடுப்பது சம்பந்தமாக அப்போதைய நடைமுறையில் இருந்த சட்டவிதி. கர்ணனே அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோர அருகதை இல்லாதவன் என்பதால், விருஷகேதுவுக்கும் உரிமை கிடையாது என்பதை சொல்லத் தேவையில்லை.இதுதான் மகாபாரதம் சொல்லும் பாரதக் கலாச்சாரம் என்றால் பலர் ஆச்சர்யப்படக் கூடும். இந்த மகாபாரதக் கால வாரிசுரிமைகள், இத்தனை தூரம் வளைந்து போவதற்கும் ஆதிக் காரணம் பீஷ்மர்தான். எப்படி?(வரும் புதன்கிழமை பார்க்கலாம்)

ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டம்

ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டம்

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாக, இந்தியா ஒருபோதும் ஒரே நாடாக இருந்ததில்லை. பரந்த இந்த நிலப்பரப்பில் ஏராளமான இன, மொழி, பண்பாட்டு, பழக்கவழக்க, ஆட்சி முறை வேறுபாடுகள் தொன்றுதொட்டே இருந்து வந்துள்ளன. ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்த அந்த இந்தியாவும்கூட இன்று இல்லை. அன்று ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த பல பகுதிகள் இன்றைய இந்தியாவில் இல்லை. அப்போது ஆங்கிலேயர் வசமில்லாத சில பகுதிகள் இப்போது இந்தியாவுடன் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே, இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இருந்தபோதும்கூட, இந்தியாவில் பிரிவினைக் கோரிக்கைகளும் முழக்கங்களும் போராட்டங்களும் எழாமல் இல்லை. ஆனாலும்கூட, காலச் சூழல்களைக் கருத்தில்கொண்டு, வேற்றுமைகளைப் புறந்தள்ளித்தான் இந்திய ஒன்றியம் இதுகாறும் நிலைபெற்று இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், பாரதிய ஜனதா கட்சியும் அதன் சார்பு அமைப்புகளும், தொடர்ந்து பொதுக் குடிமைச் சட்டம் – Uniform Civil Code என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றன. ஏற்கனவே அரசமைப்புச் சட்டத்திலேயே, கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பார்சிகள் தவிர்த்த அனைவரையும் இந்துக்கள் என்ற வட்டத்தில் அடைத்ததன் மூலம், பல்வேறு பண்பாடு, பழக்கவழக்க, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வந்த சமூகங்களின் பன்முகத் தன்மைக்கு வேட்டு வைக்கப்பட்டது. அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் என்பது, இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கே ஊறு விளைவிக்கக் கூடும் என்பதை அவர்கள் உணர முற்படவேயில்லை. இந்தச் சூழலில், 2014இல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. முந்தைய சட்ட ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழு, பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்று கூறிய பிறகும், தற்போது அமைந்துள்ள 22ஆவது சட்ட ஆணையம்,  பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துவரும் சூழலில், இந்தக் கருத்துக் கேட்பு, நாளையுடன் (ஜூலை 14) முடிவடைகிறது. தமிழக அரசின் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரும் சென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான பேராசிரியர் மு. நாகநாதன், இந்தியா சட்ட ஆணையம் அமைத்துள்ள குழுவிடம், பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்ற தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். பேராசிரியர் மு. நாகநாதன், பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துச் சட்ட ஆணையத்திடம் வழங்கிய கருத்துரு: பொது சிவில் சட்டத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்காக எனது கருத்துக்களைப் பின்வருமாறு முன்வைக்கிறேன். 1. அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்பது, பல்வேறு இன, மொழி, மதங்கள் கொண்ட இந்தியச் சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்த்துவிடும். 2. பன்முகத்தன்மையில்தான் இந்தியா வாழ்கிறது. இந்த நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும்கூட, பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. மக்கள் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பின்பற்றுகிறார்கள்; வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள்; வெவ்வேறு உணவுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் நூற்றுக்கணக்கான திருமண முறைகள் உள்ளன. இந்தத் திருமண முறைகளும் கிராமத்திற்கு கிராமம் மற்றும் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன. ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்ற பெயரில் ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு காரியம். 3. மாபெரும் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனரும் அண்ணா என்று அனைவராலும் அழைக்கப்படுபவருமான டாக்டர்.சி.என்.அண்ணாதுரையின் கருத்துகளை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ் இனம் மற்றும் தனித்துவம் வாய்ந்த தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலாசாரத்தை உறுதிப்படுத்த, அவர் தனித் தமிழ்நாடு கோரிக்கையைக் கொண்டிருந்தார். இருப்பினும், 1962இல், சீனாவுடனான எல்லைப் போரின்போது, பிரிவினைக்கான கோரிக்கையை அவர் ஒதுக்கி வைத்துவிட்டு, பிரதமர் ஜவஹர்லால் நேருவை முழு மனத்துடன் ஆதரித்து, தேசத்தின் ஒற்றுமைக்காக உடன் நின்றார். 4. ஆனால் ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில், தமிழ்நாடு ஒருபோதும் தனது தனித்துவத்தைப் பலியிடாது என்றும் அண்ணா கூறியிருந்தார். 5. 1967இல் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ‘தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பிரிவினை கேட்பதற்கான காரணங்கள் தொடர்கின்றன’ என்பதை, அண்ணா தனது சட்டமன்ற உரையில் நினைவூட்டினார். எவ்வாறாயினும், நாட்டில் பல்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பின்பற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அனைத்து அரசியல் தலைவர்களின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் தற்போதைய அடிப்படை சமூக – பண்பாட்டுக் கட்டமைப்பிற்கு எதிரான எந்தவொரு சட்டத்தினாலும் ஒற்றுமையை கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது. 6. எந்தவொரு பொதுவான சட்டத்தின் பெயராலும், இந்தப் பன்முகத்தன்மைகளை ஒருபோதும் சிதைக்கக்கூடாது. 7. 1963இல் அண்ணா தனது உரையில், “இறையாண்மை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கிவிடுவதில்லை. நம்மிடம் ஒரு கூட்டாட்சி அமைப்பு உள்ளது. அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒற்றையாட்சி அமைப்புக்குப் பதிலாக, கூட்டாட்சிக் கட்டமைப்பை விரும்பினர். ஏனெனில் பல்வேறு அரசியல் தத்துவ அறிஞர்கள் சுட்டிக்காட்டியபடி, இந்தியா மிகவும் பரந்தது. உண்மையில் இது ஒரு துணைக் கண்டம் என்றே குறிப்பிடப்படுகிறது. மக்களின் மனநிலைகள் மாறுபட்டவை.  மரபுகள் மிகவும் வேறுபட்டவை. வரலாறு மிகவும் மாறுபட்டது. இங்கு ஆதிக்கம் மிக்கதொரு ஒற்றையாட்சி அமைப்பு இருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். 8. அண்ணாவின் கருத்தில் உள்ள அதே பார்வையை, நோபல் பரிசு பெற்ற டாக்டர். அமர்த்தியா சென் தனது ‘The Argumentative Indian’ என்ற புத்தகத்தின் முன்னுரையில், இவ்வாறு குறிப்பிடுகிறார். “இந்தியா என்பது மிகப்பெரும் வேறுபாடுகளைக் கொண்ட, பலவேறுபட்ட நோக்கங்கள், பரந்த அளவில் வேறுபட்ட நம்பிக்கைகள், பல்வேறு வகையான பழக்கவழக்கங்கள் மற்றும் பல்வேறு வகையான சிந்தனைகளைக் கொண்ட ஒரு மாபெரும் நாடு.” 9. இந்தப் பின்னணியில், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கும், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கும் இடையே ஏற்பட்ட விவாதத்தையும் அவர்களுக்குள் ஏற்பட்ட உடன்பாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழு இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது, “வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. வடக்கு பழமைவாதத்தில் ஊறிப்போயுள்ளது. தெற்கு முற்போக்குப் பாதையில் பயணிக்கிறது. வடக்கில் மூடநம்பிக்கை அதிகமாக உள்ளது. தெற்கில் பகுத்தறிவு பரவியுள்ளது. தெற்கு கல்வியில் முன்னோக்கிப் பயணிக்கிறது. வடக்கு கல்வியில் பின்தங்கியுள்ளது” என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். நான் வழக்கமானதொரு சந்திப்பிற்காக திரு.ராஜகோபாலாச்சாரியாரிடம் சென்றேன். அதுதான் அப்போதைய நடைமுறை. அத்தகைய ஒரு சந்திப்பில், அரசமைப்புச் சபை உருவாக்கும் அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி திரு.ராஜகோபாலாச்சாரி  குறிப்பிடுகையில், “நீங்கள் ஒரு பெரிய தவறு செய்கிறீர்கள். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கொண்ட, இந்தியா முழுமைக்குமான ஒரு கூட்டமைப்பு சரிவராது. அப்படிப்பட்டதொரு கூட்டமைப்பில், இந்தியப் பிரதமரும் குடியரசுத் தலைவரும் எப்போதும் இந்தி பேசும் பகுதியிலிருந்துதான் தேர்வுசெய்யப்படுவார்கள். இங்கே, வடக்கில் ஒரு கூட்டமைப்பும் தெற்கில் ஒரு கூட்டமைப்புமாக இரண்டு கூட்டமைப்புகள் இருக்க வேண்டும். மேலும் வடக்கு மற்றும் தெற்குக் கூட்டமைப்புகள் இணைந்து, சமமான பிரதிநிதித்துவத்தோடு  சட்டமியற்றுவதற்கு மூன்றாவது கூட்டமைப்பும் வேண்டும்” என்று கூறினார். இவைதான் திரு.ராஜகோபாலாச்சாரியின் சிந்தனைகள். ஒரு உண்மையான காங்கிரஸ்காரரின் ஆழ்மனத்தில் இருந்து வெளிப்பட்ட கருத்துக்கள் இவை. நான் இப்போது, இந்தியா வடக்கு மற்றும் தெற்காக உடைவதை முன்னறிவிக்கும் தொலைநோக்காளராகவே திரு.ராஜகோபாலாச்சாரியைக் கருதுகிறேன். அவரது துல்லியமான கணிப்பைப் பொய்யாக்குவதற்கு நாம் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். 10. அமெரிக்காவில் வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் உள்நாட்டுப் போர் இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியாவில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் உள்நாட்டுப் போர் ஏற்படலாம். காலம், அத்தகைய மோதலுக்குப் பல காரணங்களை வழங்கும். வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பரந்த பண்பாட்டு வேறுபாடுகள் உள்ளன என்பதையும் அவை எளிதில் பற்றி எரியக்கூடியவை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. 11. வடக்கை ஒருங்கிணைத்து, தெற்கைப் புறக்கணிப்பதன் வாயிலாக, ‘இது வெறும் மொழிப் பிரச்சினை அல்ல; ஒரு அரசியல் பிரச்சினை’ என்பதை ஆணையம் உணரவில்லை. இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்படாமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, சரியான, அறிவுசார்ந்த, இயைந்த அணுகுமுறை அல்ல. இதற்கு என்னதான் தீர்வு? 12. வருந்தத்தக்கது என்னவெனில், 1940களில் சி.ராஜகோபாலாச்சாரி கணித்த விஷயங்களில் ஒன்று, இப்போது மணிப்பூரில் நடப்பதை நாம் காண்கிறோம். ஒற்றுமையின் அடிப்படைக் கோட்பாடுகள், நாட்டு மக்களின் பல்வேறு கலாச்சார, இன, மொழி நடைமுறைகளில் பெருமளவில் காணப்படுகின்றன. ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டுவரும் திட்டம், அடிப்படையில் இந்திய மக்களின் விருப்பத்திற்கு எதிரானது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களைக் கலந்தாலோசிக்காமல், ஆளும் பாஜக அரசால் தொடங்கப்பட்ட ஒரே மாதிரியான சிவில் சட்டத்தின் முன்மொழிவு, இயல்பிலேயே கூட்டாட்சிக்கு எதிரானது. இது இந்திய ஒற்றுமைக்கு சாவு மணி அடிக்கும். கடுமையான நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு, அச்சுறுத்தலான பல பொருளாதாரப் பிரச்சினைகள் அவசரமாகக் கையாளப்பட வேண்டியுள்ளன. நாட்டில் சமத்துவமின்மை அதிகரிக்கிறது, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது, வறுமை அதிகரித்து வருகிறது, விலைவாசி உயர்கிறது. பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான்; ஏழை மென்மேலும் ஏழையாகிறான். பொதுக்கடன் அதிகரித்து வருகிறது. வங்கி அமைப்பு நிலையற்ற தன்மையைச் சந்தித்து வருகிறது. வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையே தொடர்ந்து இடைவெளி இருப்பதால், நிதி அமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சர்வதேச அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளின்படி, பசி மற்றும் வறுமைக் குறியீடுகளில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதாவது, 191 நாடுகளில் இந்தியா 132ஆவது இடத்தில் இருப்பதாக UNDP மனித மேம்பாட்டு அறிக்கை தெரிவிக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அச்சுறுத்தும் இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் உடனடியாக எதிர்கொண்டு தீர்வு காண, நமக்கு ஒரு அறிவுப்பூர்வமான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. ஒரே மாதிரியான சிவில் சட்ட நடவடிக்கைக்கான முன்மொழிவு விவேகமற்றது மற்றும் தேவையற்றது. இந்தத் திட்டத்தைக் கைவிடுவதே நியாயமான நடவடிக்கையாகும். இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பேராசியர் மு.நாகநாதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளை, சட்ட ஆணையத்திடம் பதிவு செய்ய விரும்புவோர், நாளைக்குள் தங்கள் கருத்துகளை, membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.  

சூதாட்டம் – விளையாட்டா?

சூதாட்டம் – விளையாட்டா?

சூதாட்ட விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என்று 50ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். விளையாட்டு என்பது மனத்தையும் உடலையும் பலப்படுத்துவதற்கான, செழுமைப்படுத்துவதற்கான ஒரு செயல்முறை. மற்றவர் திறனைப் பார்த்துக் கற்றுக்கொள்ள ஊக்கமளிப்பது. தோல்வியிலிருந்து பாடம் கற்று வெற்றிபெற வேண்டும் என்ற பாடத்தைக் கொடுப்பது. தோல்வி என்பது வெற்றிக்கான முதல் படி என்பதைப் பயிற்றுவிப்பது. இறுதிவரை போராடும் குணத்தைக் கற்றுக் கொடுப்பது. வெற்றியும் தோல்வியும் வாழ்வில் இயல்பானவை என்பதை உணர்த்துவது. இவற்றையெல்லாம் முறையான பயிற்சிகள் மூலம் கைவரப் பெறலாம்; மேம்படுத்தலாம். எனவேதான் விளையாடுபவர்களை வீரர்கள் என்று சொல்கிறோம். அந்த அடிப்படையில்தான் மனிதனை மனிதனாக்கும் செயல்முறைப் போக்கான கல்வியில், விளையாட்டும் ஒரு அங்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. நடைமுறையில் அது எப்படி உள்ளது என்பது வேறு விஷயம். ஆனால் சூதாட்டம் அப்படி அல்ல. ஒருவரிடம் ஆசையைத் தூண்டி ஏமாற்றுவது என்பதே சூதாட்டத்தின் தத்துவம். எப்படியாவது அதிகமாகப் பணம் ஈட்டலாம் என்ற நப்பாசையைத் தூண்டி, அதற்கு அவரை அடிமைப்படுத்தி, அதன் மூலம் அவரிடம் கொள்ளையடிப்பது. சூதாட்டம் என்பது திரைமறைவு வேலைகள், நேர்மையற்ற தந்திரங்கள், ஏமாற்று வித்தைகளை அடிப்படையாகக் கொண்டது. அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பவைப்பது. இது ஒரு இழிவான செயல். இதனை எவரும் பாடமாக ஏற்கமுடியாது. இந்த நிலையில், சூதாட்ட விளையாட்டு என்ற பதம் சரியான ஒன்றா? நிச்சயமாக இல்லை. சூதாட்டமும் விளையாட்டும் எதிரெதிர் குணாம்சங்களைக் கொண்டவை. சூதாட்டம் ஒரு முறைகேடான செயல். முறைகேட்டிற்கு வழிவகுக்கும் செயல். இத்தகைய சூதாட்டங்கள் மிக மோசமான விளைவுகளை சமுதாயத்தில் ஏற்படுத்திக்கொண்டிருப்பதை அறிவோம். குறிப்பாக, இன்றைய இணையவழித் தொடர்பு உலகில், ஆன்லைன் விளையாட்டு என்ற பெயரில் ஏராளமான ஆன்லைன் சூதாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏதோ விரும்பிச் செல்பவர்களை மட்டும் இந்த சூதாட்டங்கள் ஏமாற்றவில்லை. மொபைல் ஆப்கள் மூலமாகவும் குறுஞ்செய்திகள் வாயிலாகவும் வண்ணமயமான படங்களையும் போலியான தகவல்களைக் காட்டி விளம்பரங்கள் செய்கின்றனர். ‘ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால், அவரது ஆசையைத் தூண்ட வேண்டும்’ என்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தின் வசனத்தைப் பின்பற்றி, ‘உங்கள் கணக்கில் சில ஆயிரங்கள் வரவு வைக்கப்பட்டுள்ளது; வந்து விளையாடுங்கள்’ என்று, நப்பாசையைத் தூண்டும் விதமாகச் செய்திகளை அனுப்புகின்றனர். இவையெல்லாம் கணினி மென்பொருட்கள் வாயிலாக நடைபெறுபவை. பிதாமகன் திரைப்படத்தில், கதாநாயகன் சூதாட்டம் நடத்துவார். கதாநாயகி முதலில் ஒரு ரூபாயை வைத்து சூதாடத் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட தொகை கிடைத்ததும் அந்தத் தொகையை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது, அவரைக் கட்டாயப்படுத்தித் தொடர்ந்து சூதாட வைத்து, அவரிடமிருந்த பொருட்கள் அனைத்தையும் நாயகன் பறித்துக்கொள்வார். இதே வழிமுறையைத்தான் இணைய வழியில் நடக்கும் சூதாட்ட மென்பொருட்கள் பின்பற்றுகின்றன. அதாவது, சூதாட்டக் களத்தில் இறங்கிய ஒருவர், அதிலிருந்து மீள வழியே இல்லாதவாறே அவை வடிவமைக்கப்படுகின்றன. முதலில் குறிப்பிட்ட திறனுடையவர்களை, அல்லது அனைவரையும் வெற்றிபெற மென்பொருளானது அனுமதிக்கும். குறைந்த தொகையை வென்றதாக அறிவிப்பும் கிடைக்கும். ஆனால் அந்தத் தொகையை நம்மால் வங்கிக் கணக்குக்கு மாற்ற இயலாது. நீங்கள் மேலும் பணம் செலுத்தி விளையாடவேண்டும் என்று நிர்பந்திப்பர். அது கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி, சூதாட்ட வளையத்திற்குள் ஆழமாக இழுத்துச் செல்லும். இப்படிப்பட்ட சூதாட்டங்களில் ஈடுபட்டவர்கள் பணத்தை இழக்கின்றனர். எப்படியாவது இழந்த பணத்தை மீட்டுவிட வேண்டும் என்ற வேட்கையில், கடன் வாங்கிப் பணத்தைச் செலுத்தி விளையாடி அதையும் இழந்து தவிக்கின்றனர். மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய சூதாட்டங்கள் மனநோயாளிகளையும் உருவாக்கி வருகின்றன. சிலர் பெரும் பணத்தை இழந்து, இறுதியில் மன அழுத்தத்தாலும் கடன் தொல்லையாலும் தற்கொலை செய்துகொள்கின்றனர். வயது வித்தியாசமின்றி பள்ளி மாணவர்கள் முதல் பெரியோர் வரை இதற்கு பலியாகின்றனர். அபரிமிதமான கேளிக்கை வெறியை உண்டாக்கும். எனவேதான் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் தர மறுத்ததையும் தமிழ்நாடு கண்டது. ஏற்கனவே விளையாட்டுகளையே சூதாட்டமாக்கிவிட்டனர். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் சூதாட்டம் நடப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஐபிஎல்-லில் சூதாட்டமென்று நடவடிக்கையே எடுத்தனர். பலர் கைது செய்யப்பட்டனர். பல விளையாட்டு வீரர்கள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், சூதாட்டத்துக்கு வரி விதிப்பு என்பது, உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ள நிலையில், மிகப்பெரிய சூதாட்டத்தை நடத்த அனுமதிப்பதுபோல் உள்ளது. இத்தகைய சூதாட்டங்களில் நிழலுக தாதாக்கள், சமூக விரோதிகள் ஈடுபடுவதாகவும் கூறுகின்றனர். அந்த வகையில் பார்த்தால் மது, போதைப் பழக்கங்களைப் போலவே, சொல்லப்போனால் அதைவிட, சூதாட்டமும் மிகவும் மோசமானது. இப்படிப்பட்ட நிலையில் சூதாட்ட விளையாட்டு என்று பெயரிட்டு அதற்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பது எத்தகைய செயல்? ஒரு மக்கள் நல அரசாங்கம் இப்படிச் சிந்திக்க முடியுமா? சூதாட்டங்களுக்கு வரி வசூல் செய்ய நினைப்பது எரிகிற பிணத்திலிருந்து எதையாவது உருவும் செயலுக்கு ஒப்பாகும். இப்படியே போனால் கஞ்சா, ஹெராயின் போன்ற பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிப்பார்களோ!!!??? “நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், எங்களுக்கு வரி கொடுங்கள்” என்று கூறுவது இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் காட்சிகளையே நினைவூட்டுகிறது. வளர்ச்சிக்கான ஒரு அரசாங்கம் மனிதகுலத்திற்கு நன்மை தரும் பொருளுற்பத்தி, அறிவு உற்பத்திகளை மட்டுமே ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் இன்று அரசாங்கங்கள் மது, சூதாட்டம் போன்ற மனிதர்களுக்குக் கேடிழைக்கும் செயல்களை அரசாங்கத்தின் வருவாயாகப் பார்ப்பது மோசமானது, ஆபத்தானது, மனிதகுலத்தின் வளர்ச்சிக்கே எதிரானது. ஒரு பொருள் அல்லது சேவையின் மீது வரி விதிப்பது என்பது, அந்தப் பொருள் அல்லது சேவை விற்பனையைச் சட்டப்பூர்வமாக அனுமதிக்கும் செயலாகும். சூதாட்டத்துக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டால் அது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதாகவே கருதப்படும். அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு, அதே வகைமையில் வரும் இன்னொரு மோசடிக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிப்பது வேடிக்கையான செயல் அல்லவா? சூதாட்டத்துக்கு வரி விதிக்கத் தயாராக இருக்கும் அரசு, பல ஆயிரம் கோடி ரூபாய்கள் புழங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்களை வரி வளையத்துக்குள் கொண்டுவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசவையிலேயே மனைவி முதலான அனைத்தையும் வைத்து சூதாடியவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு ஆள்பவர்களின் ஆட்சியில் இதெல்லாம் மிகச் சாதாரணம்தானே?

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

3. பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் ஒரே இலக்கு மகாபாரதத்தில் வரும் உப கதைகள் வியாசருடையதா அல்லது பிறருடையதா என்ற கேள்வியை முந்தைய பதிவில் கேட்டு வைத்தோம். இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே மக்களால் தக்க இடங்களில் எண்ணற்ற உப கதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மக்கள் இலக்கியமாக மாற்றம் கொண்டிருக்கின்றன என்ற எமது கருத்தையும் சொல்லி வைத்தோம். தொடர்ந்து இன்னும் சில கதைகளைப் பார்ப்போம். காந்தாரியை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் முடித்தபின்பு, பீஷ்மருக்கு ஒரு ரகசியம் தெரியவருகிறது. அதாவது, ஜாதகப்படி காந்தாரியின் முதல் கணவர் இறந்துவிடுவார் என்றும் அதனால் காந்தாரி விதவையாகிவிடுவாள் என்பதும் அவளுடைய ஜாதக அமைப்பு என்று சோதிடர்கள் சொன்னார்கள். அதற்குப் பரிகாரமாக, காந்தாரியை ஒரு ஆட்டிற்குத் திருமணம் செய்துகொடுத்து, அந்த ஆட்டினை காந்தாரியின் முதல் கணவனாகக் கருதிக் கொன்றபின், அவளை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். அந்த வகையில் திருதராஷ்டிரனுடனான அவள் திருமணம் அவளுக்கு இரண்டாவது திருமணம் மட்டுமல்ல, விதவா திருமணமும் ஆகும். இந்த உண்மை, திருதராஷ்டிரனின் திருமணத்தின்போது பீஷ்மரிடம் சொல்லாமல் மறைக்கப்பட்டுவிட்டது. ஆனால் உண்மை தெரிந்ததும் பீஷ்மரால் கோபத்தை அடக்க முடியவில்லை. காந்தாரியின் தந்தையையும் சகுனி உட்பட காந்தாரியின் நூறு சகோதரர்களையும் சிறையில் அடைத்தார். அனைவருக்கும் சேர்த்து அவர்கள் உயிர்வாழ நூறு சோற்றுப் பருக்கையும் ஒரு நத்தை ஓட்டில் தண்ணீரும் கொடுத்தனர். குருவம்சத்தினர், தங்கள் கைதிகளுக்கு சோறும் தண்ணீரும் கொடுக்காமல், பட்டினி போட்டுக் கொன்றனர் என்ற பழி வராமல் இருக்க இந்த விசித்ரமான ஏற்பாடு. ஆனால் காந்தார (இன்றைய ஆப்கானிஸ்தான்) இளவரசர்கள் ஆலோசனை செய்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பருக்கையைத் தின்று உயிர் வாழ்வது முடியாதகாரியம் என்பதால், நூறு பருக்கைகளையும் இளையவனான சகுனிக்குக் கொடுத்து அவனை உண்ண வைத்து, அவன் மட்டுமாவது உயிர்வாழ்ந்து குருவம்சத்தைவேரறுக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டனர். அந்த யோசனையின்படியே சகுனியை மட்டும் உயிர்வாழ வைத்துவிட்டு, மற்றவர்கள் இறந்துவிட்டனர். சகுனியின் தந்தை இறப்பதற்கு முன்பு தன்னுடைய நடுவிரல்களை உடைத்து, இரண்டு தாயக்கட்டைகளைச் செய்து சகுனியிடம் கொடுத்து, அந்த தாயக்கட்டைகள் சகுனி கேட்கும் எண்களையே போடும் என்று வரம் தந்துவிட்டு இறந்து போகிறான். இந்த தியாகத்தை, குரு வம்சத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அவர்கள் செய்கிறார்கள். அந்த முறையில் பார்த்தால், பூமியின் பாரத்தைக் குறைப்பது, அதாவது மனிதக் கூட்டத்தைக் கொன்றழிப்பது என்ற, யோசித்தால் நாகரிகத்தில் மிகவும் கீழ்மையான அவதார நோக்கம் கொண்டு வந்திருக்கும் யாதவ குல வாசுதேவ கிருஷ்ணன் என்ற கிருஷ்ண பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரே நோக்கம் என்பது வியாசர் இதிகாசத்தில் வியப்பைத் தருவதாகும். ஏனெனில், இதிகாச நாயகன் கிருஷ்ணன் என்றால் இதிகாச வில்லன் சகுனி. கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் ஒரே நோக்கத்தையே இலக்காக வைத்தஒரே ஒரு இதிகாசம் மகாபாரதம்தான். இதில் யார் நல்லவர் என்பதும் யார் கெட்டவர் என்பதும் விடை காண முடியாத கேள்வி. மகாபாரதத்தில் எத்தனை உபகதைகள் இருக்கின்றன என்று ஊன்றிப் பார்ப்பவர்களுக்கு, மகாபாரதத்தை ‘மண்-பொன்-பெண்-ஆசைகூடாது’ என்று ஒரே வாசகத்தில் சொல்லவும் முடியும்; பல்லாயிரம் பக்க அளவிற்கு விரிவுபடுத்தியும் சொல்லமுடியும் என்பது புரியும். இந்த பீஷ்மர் எப்போதெல்லாம் சட்டங்களை நீட்டினார் என்பதைத் தொடர்ந்து பார்க்கப் போகிறோம்.. (மீண்டும் புதன்கிழமை தொடர்வோம்)

மாமன்னன்

மாமன்னன்

திரை விமர்சனம் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட, ஒடுக்குமுறைக்குப் பழகிய சமூகத்தைச் சார்ந்த, தன் இயற்பெயரே மறந்த, மறக்கடிக்கப்பட்ட மண்ணு, தனது அடுத்த தலைமுறையான மகன் அதிவீரனால் ஆதிக்கச் சமூகத்தின் அடக்குமுறைகளையும் தாண்டி, மாமன்னனாக நிமிர்ந்த கதைதான், மாரி செல்வராஜ் எழுதி இயக்கி, வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீரத்தி சுரேஷ், ஃபகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘மாமன்னன்’ படத்தின் கதைச்சுருக்கம். “பன்னி மேய்க்கிற பசங்க கோவில் குளத்துல குளிக்கிறாங்களாம்… அவன்கள இன்னிக்கு விடக்கூடாது” என்று அந்த கிராமத்துப் பெரியவர்கள்(!) செய்யும் செயலிலேயே தெறிக்கிறது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நேரும் கொடூரம். அடுத்து, நல்லிணக்கத்தைப் ‘பாதுகாக்கும்’ பொருட்டு, ‘கோவில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து நான்கு சிறுவர்கள் மரணம்’ என்கிற பத்திரிகைச் செய்தியோடு முடித்துக்கொள்வது, உச்சபட்சக் கொடூரம். நியாயம் கேட்கும் மண்ணுவை அப்போதைய எம்.எல்.ஏ சுந்தரம் மன்னித்துவிட நிர்ப்பந்திக்கிறான். இதிலிருந்து தப்பிப் பிழைத்தும், அப்பாவின் மௌனத்தைச் சகியாமலும் அந்த ஊரைவிட்டு ஓடிய அதிவீரன், ஊருக்குத் திரும்பியபின் தன் ஆசானிடம் கற்றுக்கொண்ட ‘அடிமுறை’ தற்காப்புக் கலையைக் கற்பிக்கும் பயிற்சிப் பள்ளி நடத்துகிறான். ஒரு கட்டத்தில், அதே ஊரைச் சேர்ந்த லீலா நடத்தும் இலவசப் பயிற்சி வகுப்புக்கும் அங்கு இடம் அளிக்கிறான். இதனால் பாதிக்கப்படும் சுந்தரம் கல்விக் குழுமம், ஆட்களை அனுப்பி அந்தப் பயிற்சி வகுப்பை அடித்து நொறுக்குகிறது. கொதித்தெழுந்த அதிவீரன், இளைஞர்களோடு சென்று அக்கல்விக் குழுமத்தை நாசம் செய்கிறான். தற்போதைய மாவட்டச் செயலாளரான சுந்தரத்தின் மகன் ரத்தினவேலு, இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, எம்.எல்.ஏ. மண்ணுவையும் அதிவீரனையும் அழைக்கிறான். கட்சித் தொண்டனாக அன்று சுந்தரத்தின் எதிரில் நின்ற மண்ணு, அவன் மகன் ரத்தினவேல் தற்போது உட்கார்ந்திருக்க, எம்.எல்.ஏ. மாமன்னனாக இன்றும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துப் பொங்குகிற அதிவீரன், அவரை உட்காரச் சொல்கிறான். திடுக்கிட்ட ரத்தினவேலு, “யார் சொன்னாலும் அப்பா உட்கார மாட்டாருப்பா..” என்று சொல்ல, ‘நீ உட்காரச் சொன்னியா?’ என்று ரத்தினவேலுவிடம் கேட்பதோடு, மாமன்னனை நிர்பந்தப்படுத்தி உட்கார வைத்துவிடுகிறான் அதிவீரன். சகிக்க முடியாத ரத்தினவேலு அதிவீரனைத் தாக்க, அவன் திருப்பித் தாக்க, மிகப்பெரிய கைகலப்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் முதல்வர் இதில் தலையிட, அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை, தேர்தலின் வெற்றி தோல்வி தீர்மானிக்கட்டும் என்று முடிவாகிறது. “நாம கேள்வி கேட்கவே ஒரு பதவிக்கு, ஒரு இடத்துக்கு வர வேண்டி இருக்கு” என்கிற அதிவீரன், அதை அடைந்தாரா என்பதுதான் ‘மாமன்னன்’ படத்தின் மீதிக் கதை. பார்த்ததும் சிரித்தே பழக்கப்பட்ட நம்மைக் கண்கலங்க வைக்கிறார் வடிவேலு. “இனிமேலாவது யாருக்கும் எங்கயும் இது நடக்கக் கூடாது” என்று முதல்வரிடம் நா தழுதழுக்கக் கோரும் மாமன்னனாக, ஒவ்வொரு ஃபிரேமிலும் வடிவேலுவின் மாறுபட்ட அசத்தலான நடிப்பு, “அவங்கள நிக்க வைக்கிறது என்னோட அடையாளம். இவன உட்கார வைக்கிறது என்னோட அரசியல்” என்று, கழுத்து நரம்பு புடைக்க, சாதிய ஆதிக்கமும் அரசியல் அதிகார வெறியும் கொப்பளிக்கும் இரத்தினவேலுவாக ஃபகத் பாசிலின் மிரட்டலான பங்களிப்பு,  “என்னடா பண்ணுவீங்க? உங்க ஊருக்குள்ள வந்தா கொன்றுவீங்களா? கொன்றுவீங்களாடா..?” என்று கொந்தளிக்கும் அதிவீரனாக உதயநிதி ஸ்டாலினின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டதான நடிப்பு, “இங்கு மதம் அடிக்குதா, ஜாதி அடிக்குதா, பணம் அடிக்குதான்னு யோசிச்சோம்னா நமக்குப் பைத்தியமே பிடிச்சுடும்…” என்று பொருமும் நீலாவாக, கிடைத்த வாய்ப்பில் பழுதில்லாமல் செய்த கீர்த்தி சுரேஷ்,  பாடல்களிலும் பின்னணியிலும் கதைக்கருவுக்கு நெருக்கமாக, இசையில் புதிய பரிமாணத்தைக் காட்டியுள்ள ஏ.ஆர்.ரகுமான், வேட்டை நாய்கள், குதிரை, புத்தர்,  அம்பேத்கார், பெரியார் போன்ற வழக்கமான குறியீடுகள் இருந்தாலும் பிரச்சார நெடி வீசாமல், இன்னும் பரவலாக நிலவும் சாதிக் கொடுமையை, அது ஏற்படுத்தும் வலியை, செதுக்கியது போன்ற அழுத்தமான பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள மாரி செல்வராஜ் என, ‘மாமன்னன்’ பலவகையில் ஒரு மாறுபட்ட படம். அழகம்பெருமாள் (சுந்தரம்), கீதா கைலாசம் (மாமன்னனின் மனைவி வீராயி), லால் (முதல்வர் சிந்தனை ராஜன்), சுனில் ரெட்டி (ரத்தினவேலுவின் சகோதரன்), ரவீனா ரவி (ரத்னவேலுவின் மனைவி) போன்ற துணைப் பாத்திரங்களும் தத்தம் பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். இசை போன்று, கதைக்கருவுக்கு நெருக்கமாகவே வண்ணத்திலும் கருப்பு வெள்ளையிலும் காட்சிகளைத் தத்ரூபமாகப் பதிவு செய்துள்ள தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்பும் கவனம் பெறுகின்றன.  யுகபாரதியும் அறிவும்  எழுதியுள்ள பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றன. வடிவேலு பாடிய ‘ராசாக் கண்ணு’ அருமை. எம்.எல்.ஏ.வைச் சுற்றி, ஒரு பத்து பேராவது எப்போதும் இருப்பது எங்கும் நடப்பதுதான். எப்போதும் மாமன்னன் ஒத்தையாகவே நிற்பதும் அந்தத் தொகுதி மக்களுக்கு சாதி வித்தியாசமின்றி நேர்மையாக உழைத்த, அவர்களது சுகதுக்கங்களில் பங்கெடுத்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை, ஒட்டுமொத்த கிராமங்களும் உள்ளே வரக்கூடாது என்று கூறுவதும்,  திடகாத்திரமான சங்க நிர்வாகிகளில் ஒருவரை, ரத்னவேலு  நாயைக் கொன்றதுபோல அடித்துக் கொன்றது குறித்து எவருமே கேள்வி எழுப்பாததும் நம்பக் கூடியவையாக இல்லை. இறுதிக் காட்சியில், வடிவேலு உள்ளே நுழைய, முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நிற்பதில், ரத்தினவேலுவின் மனைவியைக் குறிப்பிட்டு காட்டுவது, நயம். இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், அவர் சார்ந்துள்ள கட்சி, தலித் சமூகம், சமூக நீதி, வேங்கை வயல், முன்னாள் சபாநாயகர் தனபால் போன்றவற்றையெல்லாம் மறந்து, மறைத்து, ‘இப்படி எல்லாம் இப்போது எங்கு நடக்கும்? யார் சாதி பார்க்கிறார்கள்?’ என்று கேட்கிற, சுயசாதிப் பெருமை பேசுகிற மனநிலை கொண்டவர்கள், மாமன்னன் படத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடலாம். இல்லையெனில், மனத்தளவில் அதற்கான பொறுப்புத் துறப்புடனும் திறந்த மனத்துடனும் படத்திற்கு வரலாம். அப்படி வந்தால் மட்டுமே, யாதொரு மனப்புழுக்கமும் இல்லாமல் திரைப்படத்தில் லயிக்கவும் முடியும். சாதிய இழிவுகள், ஏற்றத்தாழ்வுக் கொடுமைகள் முற்றிலுமாக ஒழிய, முன்னெடுத்துச் செல்லும் தொடர்ப் பயணத்தில் ‘மாமன்னன்’ ஒரு சிறு பங்களிப்பு. மதிப்பெண்: 7.5/10

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தை, பலர் பலமுறைகளில் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். பல விதங்களில் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். மகாபாரத மீள் வாசிப்புகளும் விவாதங்களும் பாரதி தொட்டு, தற்காலத்தில் பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று நீள்கிறது. அவ்வகையில், எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் ஞானபாரதி சின்னச்சாமி அவர்கள் மகாபாரத உபகதைகளை எடுத்துக்கொண்டு, மகாபாரதக் காலத்துச் சட்ட விதிகளை – சமூக விதிகளை விவாதிக்கிறார். அவரது விசாரணைகள் சுவடு இணையத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தொடராக வெளியாகும் – சுவடு ஆசிரியர் குழு 1. அறிமுகம் இதிகாசமும் உபகதைகளும் மகாபாரதம் என்ற மாபெரும் இலக்கியப் படைப்பை, அதன் வேறொரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காட்டுவதற்கான சிறு முயற்சி இது. இதிகாசம் என்பதற்குப் பல அர்த்தங்களும் இலக்கணங்களும் சொல்லப்படுகின்றன. மதவாதிகள், கடவுள் ஒரு நோக்கத்திற்காக மனித உருவில் பூமிக்கு வந்து, வாழ்ந்து, திரும்பவும் மேலுலகம் செல்லும் வரையில் உள்ள கதையைச் சொல்வது இதிகாசம் என்று சொல்கின்றனர். இதிகாசங்கள், அவை இயற்றப்பட்ட காலத்தின் சமுதாய வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று சமூக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். பண்டைக் கால வாழ்க்கை முறையைப்பற்றி அறிந்துகொள்கிற அக்கறையும் முனைப்பும் இல்லாதவர்களோ, ‘இதிகாசம் என்பது ஆபாசக்குப்பை’ என்று முற்றிலுமாகக் கழித்துக் கட்டிவிடுகிறார்கள். மகாபாரதத்தை, அதன் பிரம்மாண்டமான வடிவமைப்பையும் கதாபாத்திரங்களையும் அதில் உலவும் எண்ணிலா நுட்பங்களையும் மனதில் கொண்டு, அதற்கு இணையான படைப்பு எதுவுமில்லை என்பதால் அதை இதிகாசம் என்று கொண்டாடுவோரும் உண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், ஒரு இதிகாசம் என்பது அதில் நிகழும் ஒவ்வொரு சம்பவத்தையும், ‘பின்னிட்டு விளக்கவும் முன்னிட்டு விளக்கவும்’ தக்க சுவாரசியமான உபகதைகளைச் சேர்ப்பதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதும், அதுபோன்ற உபகதைகளைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கத்தக்க இடம் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதுமே இதிகாசத்தின் பல இலக்கணங்களில் முக்கிய இலக்கணம் என்று கருதுகிறேன். அவ்வாறே மகாபாரதத்தில் பலப்பல உபகதைகள் சேர்க்கப்பட்டும் உள்ளன. அவ்வாறு சேர்க்கப்பட்ட உபகதைகள் மூலமாக, மகாபாரதக் காலத்தின் சமூக விதிகளை உசாவிப் பார்க்க முடிகிறது என்பதும் அவை மீறப்பட்ட தருணங்களை ஆராயவும் முடிகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கன. அதுமட்டுமின்றி, அந்த ஆய்வுகளின் வழியாக, இன்று இதிகாசங்கள் சொல்வதைத் தங்களுக்கு ஏற்றாற்போல் திரித்துக்கொண்டு, பாரத கலாச்சாரம் என்பதாக நடப்பியலில் பரப்புவதை மறுக்க முடியும். இராமாயாணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே, மக்களால் தக்க இடங்களில் எண்ணற்ற உபகதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மக்கள் இலக்கியம் என்பது என் அப்பிப்பிராயம். அத்தகையதொரு இதிகாசத்தை எவ்வளவு பெரிய மூளை படைத்த அசுர எழுத்தாளனாலும் இன்றைக்கு எழுதிவிட முடியாது என்பதும் அவ்வளவு உபகதைகளை தக்க இடத்தில் சேர்க்க முடியாது என்பதும் பல படைப்பாளிகளின் பிரதானமான வாதம். இன்று எந்த ஒரு தனிப் படைப்பாளியாலும் அதுபோலத் தன் படைப்பில் நிகழ்வுகளின் காரண காரியத்தை விளக்க உபகதைகளை சேர்க்கத்தக்க இடத்தை உருவாக்கித் தரமுடியாது என்பதில் சந்தேகமில்லை. அவற்றில் ஒளிந்திருக்கும் மகாபாரதக் காலச் சமூக விதிகளைப் பார்க்கலாம், வாருங்கள். 2. பெண்கள் இரகசியத்தைக் காப்பதில்லையா? நாடு முழுவதும் பேசப்படும் கர்ணனைப் பற்றிய உபகதைகளைச் சேகரித்தால், அது ஆயிரத்தைத் தாண்டும் என்கின்றனர். அவற்றில் மிகப்பல வியாசரே சேர்த்தவை. மற்றவை, தங்கள் கற்பனா வளத்தின் மூலம் யாரால் சேர்க்கப்பட்டது என்று வித்தியாசப்படுத்திப் பார்க்க இயலாத வண்ணம் மக்கள் சேர்த்தவை. கிருஷ்ணனின் அண்ணனான பலராமனின் மகள் வத்சலாவின் திருமணத்திற்கு, துரியோதனன் பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்புகிறான். அதில் முக்கியமானது கண்ணாடி பதித்த ஒரு மாயப் பேழை. அந்த மாயப்பேழையின் சிறப்பு என்னவென்றால், அந்தப் பேழையின் மேல் யார் ஏறி நின்றாலும் அவர்கள் எவ்வளவு திடசித்தத்தோடும் கட்டுப்பாடோடும் இருந்தாலும் அவர்களுடைய உள்மனத்தில் வெளி உலகம் அறியாவண்ணம் மறைத்து வைத்திருக்கும் பிடித்தமான நபர் அல்லது ரகசியத்தை அது வெளிப்படுத்திவிடும். திரௌபதி மாயப் பேழையில் ஏறி நிற்க மிகவும் தயங்கினாள். மிகவும் வற்புறுத்தி மாயப்பேழையில் திரௌபதியை ஏறி நிற்கவைத்தபோது மாயப் பேழையின் கண்ணாடியில் வசீகரச் சிரிப்புடன் கர்ணன் தோன்றினான். கர்ணனைப் பார்த்ததும் திரௌபதி வியர்த்து விறுவிறுத்து மயங்கிவிடும் நிலைக்குப் போய்விட்டாள். அன்றுதான் பாண்டவர்களின் தர்மபத்தினியான திரௌபதி, கர்ணனையும் காதலிக்கிறாள் என்ற மர்மம் அம்பலமாயிற்று. இன்னொரு உபகதையைப் பார்ப்போம். கர்ணன் படுகளத்தில் வீழ்ந்த பின்புதான், குந்திதேவி ‘மகனே.. என் மகனே..’ என்று அரற்றிக்கொண்டு, அழுது புலம்பியபடி கர்ணனைத் தேடிவருகிறாள். அப்போதுதான் பாண்டவர்களுக்கு, தங்கள் தாய் குந்தியின் மகன்தான் கர்ணன் என்பதும் அதனால் கர்ணன் தங்களுடைய மூத்த சகோதரன் என்பதும் தெரியவந்தது என்று மகாபாரதம் சொல்கிறது. கர்ணன் பாண்டவர்கள் அனைவருக்கும் மூத்தவன். துரியோதனனின் உயிர் நண்பன். ஆகவே ஒரு வாதத்திற்காக, ‘கர்ணன் தங்களுடைய அண்ணன் என்று தெரிந்திருந்தால் பாண்டவர்களும் ராஜ்ஜியத்தைக் கர்ணனுக்கு விட்டுக் கொடுத்திருப்பார்கள். துரியோதனனும் மனமுவந்து ராஜ்யத்தைக் கர்ணனுக்கு விட்டுக் கொடுத்திருப்பான்’ என்று வைத்துக்கொண்டால், குருக்ஷேத்திர யுத்தத்தில் இரு தரப்பிலும் 10 பேரைத் தவிர போரில் பங்குகொண்ட அனைவரும் மரணமுற்று இருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்காது. குந்திதேவி இந்த ரகசியத்தைக் கர்ணனின் மரணத் தருவாய் வரையில் பாதுகாத்து வைத்திருந்ததால்தான் இவ்வளவு உயிர்ப்பலி ஏற்பட்டது என்பது தருமபுத்திரனைக் கடும் சினம் கொள்ள வைத்தது. ஏனெனில், ‘பட்டத்திற்குரியவனைக் கொன்றுவிட்ட பின்பு பெற்ற வெற்றியினால் என்ன பயன்?’ என்று தருமன் மனம் கொந்தளித்தது. அதனால் ‘பெண்களுடைய மனத்தில் இனி ரகசியமே தங்கக் கூடாது’ என்று தருமன் குந்தி தேவியைச் சபித்தான் என்பது ஒரு உப கதை. பெண்களால் ரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பது பிற்போக்கான கருத்துதான். ஆனால் அதைக் கல்வி அறிவு இல்லாத நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், வெறும் போகப் பொருளாகவும் வீட்டு வேலைக்காரியாகவும் இருந்த பெண்கள், பொழுதுபோக்காக அரட்டை அடிக்கும்போது, ஒளிவு மறைவின்றி எல்லாவற்றையும் தோழிகளிடம் பகிர்ந்துகொள்வதாகப் பார்க்கிறோம். குந்திதேவி இந்த ரகசியத்தை நெடுங்காலம் பாதுகாத்து வந்ததற்குக் காரணம், அது குந்திதேவியின் ஒழுக்கம் சம்பந்தப்பட்டது என்பதுதான் இந்தச் சம்பவத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயமாகும். இந்த இரண்டு விஷயங்களையும் இவ்வளவு விரிவாகச் சொல்லக் காரணம், இவை இரண்டும் இரு சுவாரசியமான உபகதைகள் என்பதுதான். ‘பெண்களின் மனத் தில் ரகசியம் தங்கக்கூடாது’ என்று தர்மபுத்திரன் கொடுத்த சாபம் பாலியல் சம்பந்தப்படாத விஷயங்களில் மட்டுமே பலனளித்தது போலும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் எனது நண்பர். (தொடரும் )

பாவமன்னிப்பு

பாவமன்னிப்பு

உள்ளங்கையின் இதயரேகையைவிரல்முனைகள் நான்கும் அழுத்தஒலிவாங்கிமுன் விரைப்புடன்பாடிக்கொண்டிருக்கும் தேசியகீதத்தின்ஏதோவொரு ஏகார ஓசையில்வந்துத் தொலைக்கும்கொட்டாவியை எப்படித் தடுப்பது?! சுதேசி கோஷத்துடன்பரிந்துரைக்கப்பட்டதால்251 ரூபாய் செலுத்திவிட்டுக் காத்திருக்கும்எனக்கான செல்போன்தயாராகிவிட்டிருக்குமா?! பேரிடரில் பிழைத்தவர்கள்அளித்த கொடையில்பிழைப்பு நடத்தியவர் யாரோ?! உலகப் பணக்காரர்களின்வரிசைக் கோடுகளைபரோட்டோ சப்ளையர் கோடுகளாக்கிவிளையாடும் கபடிக் குழுவில்எனக்கும் இடம் கிடைக்குமா?! சற்றுப் பொறுங்கள் தேசத்துரோகச் சட்டம் பாயும்முன்ஆளுங்கட்சியில்ஐக்கியமாகிவிடுகிறேன்

யோகக் கலை ஆரோக்கியமா? ஆன்மீகமா?

யோகக் கலை ஆரோக்கியமா? ஆன்மீகமா?

இன்று சர்வதேச யோகா தினம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, மதங்கள் ஏதுமற்ற பண்டைய இந்தியாவில் தோன்றிய யோகக் கலை, உடல் ஆரோக்கியத்திற்கான கருவியாகப் பயன்பட்டு வந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட அந்தக் கலையை, பின்னாட்களில் வேத மதத்தினர் தங்களதாக்கிக்கொண்டதால், பிற மதத்தினர் அக்கலையை மதச்சார்பு கொண்டதாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் இறை மறுப்பாளர்களும்கூட தங்கள் உடல்நலம் பேண யோகப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி யோகப் பயிற்சிகள் செய்யும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்தச் சூழ்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபையால் அறிவிக்கப்பட்டு, 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய பிரதமரின் முன்னெடுப்பு இதில் உள்ளது என்பதாலேயே முற்போக்காளர்களாகக் காட்டிக்கொள்வோரின் ஏளனத்திற்கு யோகக் கலை ஆளாகியுள்ளது. இதற்கிடையே யோகக்கலை தமிழர்களின் சொத்து என்று வாதிடுவோரும் உண்டு. யோகக் கலை மதச் சார்பு கொண்டதா, குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமே  அது சொந்தமானதா, பிற மதத்தினர் யோகப் பயிற்சிகள் செய்ய மத ரீதியான தடைகள் உண்டா, யோகக் கலையின் பின்னணி என்ன போன்ற பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சென்னை புழல் அருகிலுள்ள விநாயகபுரத்தில் யோகப் பயிற்சி மையம் நடத்திவரும் யோக ரத்னா சி. முத்துசாமி. அரியலூர் மாவட்டம் இலந்தங்குழி கிராமத்தில் பிறந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காகச் சென்னைக்கு வந்த இவர், கடந்த 18 ஆண்டுகளாக சென்னையின் புறநகர்ப் பகுதியான விநாயகபுரம் VMK நகரில் M. P. யோகா மையம் என்ற யோகப் பயிற்சி மையத்தை நிறுவி யோகக்கலை பயிற்றுவித்து வருகிறார். யோகக் கலையில் முதுநிலை அறிவியல் பட்டமும் யோகா சிகிச்சை முறையில் முதுநிலைப் பட்டயமும் பெற்றுள்ளார். இவர் மட்டுமல்லாது இவரது இணையர் பொற்கொடி, மகன்கள் அருண் ராஜா, அசோக் ராஜா ஆகியோரும் யோகக் கலையை முறையாகப் பயின்று மக்களுக்கும் பயிற்றுவித்து வருகின்றனர். இனி, யோகக் கலை குறித்த நம் கேள்விகளும் யோக ரத்னா முத்துசாமி அவர்களின் பதில்களும்: யோகக் கலை எப்போது தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? யோகக் கலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பழமையான கலையாகும். பதஞ்சலி முனிவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த யோகக் கலை, தமிழகத்தில் சிறந்து விளங்கிய 18 சித்தர்களில் ஒருவரான திருமூலர் எழுதிய திருமூலம் என்ற நூல் வழியாக நாம் அறியக் கிடைக்கிறது. அஷ்டாங்க யோகம் ஆரோக்கிய வாழ்விற்குச் சிறந்ததாக பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் உள்ளது. அதையே நாங்கள் எங்கள் பயிற்சி மையத்தில் பின்பற்றி வருகிறோம். யோகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு உண்டா? யோகா மதம் சார்ந்ததா? உடலினை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்தக் கலை. முந்தைய காலங்களில் ஆன்மிகம் மற்றும் மதச்சார்புகள் இந்தக் கலையோடு இணைந்திருந்தது. நாங்கள் கற்றுக்கொண்ட காலத்திலும்கூட அது இருந்தது. ஆனால் தற்காலத்தில் அவை பெரும்பாலும் களையப்பட்டுவிட்டன. பல்கலைக்கழகங்களிலேயே யோகக் கலைக்கான படிப்புகள் வந்துவிட்டன. எங்கள் பயிற்சி மையத்தில் அத்தகைய சார்பு நிலைகள் எதுவும் கிடையாது. எந்தப் பாகுபாடுமின்றி மக்கள் அனைவரும் நலமுடன் வாழவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். யோகா கற்றுக்கொள்ள உணவுக் கட்டுப்பாடுகள் ஏதும் உண்டா? குறிப்பாக புலால் உணவுக்குத் தடை உள்ளதா? எந்தவிதமான உணவுக்கும் தடை இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிரதமும் நஞ்சு. எனவே எந்த உணவாக இருந்தாலும் அளவோடும் சரியான நேரத்துக்கும் எடுத்துக்கொள்ளும்படி மட்டுமே நாங்கள் வலியுறுத்துகிறோம். சூரிய நமஸ்காரம் போன்றவை வழிபாட்டு முறைகள்தானே? அதிகாலைப் பயிற்சி உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் என்பதால், பண்டைக் காலத்தில் சூரியன் உதிக்கும் நேரத்தை வைத்துப் பயிற்சியை உருவாக்கி இருக்கலாம். பிற்காலத்தில் சூரிய நமஸ்காரம் செய்யும்போது மந்திரங்களையும் சிலர் சேர்த்துக்கொண்டார்கள். ஆனால் எங்கள் பயிற்சி மையத்தில் மந்திரம் சொல்லித் தருவதுமில்லை. அது அவசியமும் இல்லை. 12 நிலைகளையும் எண்களில் குறிப்பிட்டு அந்தந்த நிலைக்கான பயன்களைச் சொல்லியே கற்றுத் தருகிறோம். நீங்கள் யோகா மையம் தொடங்க குறிப்பிட்ட காரணம் ஏதாவது உண்டா? ஆம். நான் லாரி ட்ராஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்துவந்தேன். மூட்டு வலி காரணமாக வண்டி மேலே ஏற முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். பல்வேறு சிகிச்சைகள் செய்தும் எதுவும் நிரந்தரத் தீர்வாக அமையவில்லை. வேலை போய்விடும் என்ற நிலையில் என் உடல்நிலை இருந்தது. அந்த நேரத்தில்தான் எனது ஆசான் முனைவர் ஆசன ஆண்டியப்பன் அவர்களின் விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்தேன். யோகாவில் மூட்டு வலி நிரந்தரமாக குணமாகும் என்று இருந்தது. தொடக்கத்தில் யோகப் பயிற்சிக்குப் போகும்போது படி ஏற முடியாமல் சிரமப்பட்ட நான், இரண்டே மாதத்தில் வலி குறைந்து உற்சாகமாக ஆகிவிட்டேன். அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. எனக்குக் கிடைத்த நிம்மதி எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் என்று எனக்குள் எழுந்த சிந்தனையின் விளைவுதான் இந்த மையம். எத்தனை ஆண்டுகளாக யோகா செய்கிறீர்கள்? இந்த மையத்தை எப்போது தொடங்கினீர்கள்? 2000-ஆவது ஆண்டில் யோகா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் யோகக்கலையில் டிப்ளமோ முடித்தேன். அதைத் தொடர்ந்து நானும் என் மனைவியும் பட்டப் படிப்பை முடித்து 2005இல் மையம் தொடங்கினோம். எங்கள் மகன்களும் எங்களோடு இணைந்துகொண்டார்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இதில் ஆர்வம் வந்தது எப்படி? நான் மூட்டு வலியில் கஷ்டப்பட்டதையும் யோகா கற்றுக்கொண்டு அதைத் தொடர்ந்து பின்பற்றும்போது நான் சரியாகி ஆரோக்கியமாக இருப்பதையும் பார்த்து, அவர்களும் ஆர்வத்தோடு இணைந்து கற்றுக்கொண்டார்கள். எந்த ஒரு நடைமுறையைத் தொடங்கினாலும் ஏதாவது ஒரு தடங்கல் வரும். உங்களுக்கு ஏதேனும் தடங்கல் வந்ததா? எங்களுக்கு அதைப்போல எந்தத் தடையும் வரவில்லை. மக்கள் ஆர்வத்தோடுதான் வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் அழைத்து வருகிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. உங்கள் பயிற்சி அனுபவத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஏதாவது? நிறைய உள்ளது. 2007இல் ஒரு ஆசிரியை மெனோபாஸ் பிரச்சனையால் அதிகமான உதிரப்போக்கின் காரணமாக வகுப்பில் நின்று பாடம் எடுக்க முடியாத நிலையில் பயிற்சிக்கு வந்தார். முறையாகப் பயிற்சி செய்யத் தொடங்கிய நான்கு ஐந்து மாதங்களில் பிரச்சினை நீங்கியது. ‘நீங்கதான் என் தெய்வம்’ என்று அவர் நெகிழ்ச்சியாகச் சொன்னபோதுதான் நான் யோகா பயிற்றுவித்ததின் முழுமையை நானே உணர்ந்தேன். அடுத்து, தைராய்டு பிரச்சினை காரணமாக உடல் பருமனால் அவதிப்பட்ட ஒரு இளம்பெண் பயிற்சியில் சேர்ந்தார். தொடர் பயிற்சிக்குப் பிறகு தைராய்டு பிரச்சினை நீங்கி திருமணமும் முடிந்தது. சாதாரண பிரசவத்தில் குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையிலிருந்து அவர் அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதும் மறக்க முடியாதது. உங்களின் இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் ஆரோக்கியத்தைத் தேடி ஆண்கள் அதிகம் வருகிறார்களா அல்லது பெண்கள் அதிகம் வருகிறார்களா? தொடர்ச்சியான வருகையில் யார் அதிகம்? இங்கே பெண்கள்தான் அதிகளவில் வருகிறார்கள். தொடர்ந்து வருவதும் அவர்கள்தான். வெளியிடங்களில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளீர்களா? ஆரம்பத்தில் அப்படிக் கலந்துகொண்டோம். ஆனால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. எங்கள் நிறைவு பிறர் எங்களால் நன்மை அடையும்போதுதான் என்று புரிந்துகொண்டு போட்டிகளில் கலந்துகொள்வதை நிறுத்திக்கொண்டோம். அதேபோல எங்களின் இரண்டு மகன்களும் கல்வி பயின்ற பள்ளிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற தூண்டுதல் எங்களுக்கு உருவானது. எனவே நாங்கள் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு ஓராண்டுக்கு இலவசமாக யோகா பயிற்சி வழங்கியுள்ளோம். யோகா முறைகளில் ஏதேனும் புதுமைகள் புகுத்தியிருக்கிறீர்களா? அல்லது பாரம்பரிய முறையிலேயே தொடர்கிறீர்களா? பயிற்சிகளில் நாங்கள் ஆராய்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். முன்பு இருந்ததோடு சேர்த்து அவரவர் உடல்நிலைக்குத் தகுந்த பயிற்சிகள் வழங்குகிறோம். எங்களுடைய அனுபவங்களோடு வேறு பல யோகா சார்ந்த தரவுகளின் உதவியுடன் யோகா எனும் அற்புத சக்தி என்ற புத்தகத்தைக் கடந்த ஆண்டில் வெளியிட்டுள்ளோம். யோகா செய்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் உண்டாகுமா? பயிற்சியைப் பாதியில் நிறுத்திவிட்டால் பக்கவிளைவுகள் ஏதேனும் வருமா? அதைப்போல எந்தவிதமான பக்கவிளைவுகளும் யோகாவில் கிடையாது. தொடர்ந்து யோகா செய்ய முடியாதவர்களுக்கு ஏதேனும் எளிய வழிமுறைகள் உண்டா? தொடர்ந்து மூச்சுப் பயிற்சி மட்டுமாவது மூன்று வேளையும் செய்து வந்தாலே ஓரளவு ஆரோக்கியமாக இருக்கலாம். உங்களுடைய பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து சுருக்கமாக.. எங்களுக்குப் பணம் நோக்கமில்லை. வசதியற்ற சிலருக்கு நாங்கள் கட்டணம் இல்லாமலும் கற்றுத் தந்திருக்கிறோம். பல அரசுப் பள்ளிகளிலும் கட்டனமில்லா வகுப்புகள் எடுத்திருக்கிறோம். ‘ஒரு தெருவில் குறைந்தது நான்கு யோகா பயிற்சி மையங்கள் வரவேண்டும். அப்போதுதான் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்’ என்று எங்கள் ஆசான் சொல்வார். அதேபோல ஒருநாள் கூட விடுமுறை விடக்கூடாது என்றும் சொல்வார். அதை இன்றுவரை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். எங்கள் மூச்சு நிற்கும்போதுதான் இங்கே வகுப்புகள் நிற்கும். உடல் ஆரோக்கியத்துடன் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுதற்கும் வளரும் பிள்ளைகளிடம் வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டுவரும் முயற்சியிலும் இங்கே வரும் மாணவர்களுக்கு அவர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது புத்தகங்கள் பரிசளிக்கிறோம். இளம் பேச்சாளர்களுக்கான மேடையாக திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கதின் 31ஆவது கிளையைத் தொடங்கியுள்ளோம். அதன் மூலம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை அவர்களுக்கே அறிமுகம் செய்கிறோம். உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள்? வலிகளைச் சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்காமல் வாழும் வழிகளைச் சொல்லி நெறிப்படுத்துவது, எண்ணிக்கையைப் பார்க்காமல் எண்ணங்களால் மேம்பட்டவர்களோடு இணைந்து பயணிப்பது, தேகநலன் காத்தலில் உள்ளடங்கியதே சமூகநலன் என்பதை உணர்த்திக்கொண்டே இருப்பது ஆகியவற்றோடு ஆரோக்கியமாக இருப்பவனே உலகின் மிகப்பெரிய பணக்காரன் என்பதை உர(ரை)க்கச் சொல்வதும்.