சுலைகா மன்சில்

சுலைகா மன்சில்

திரை விமர்சனம் ஒருவரது இதயத்திலிருந்து  வரும் ஒரு சில வார்த்தைகளும்கூட,  இன்னொருவரது வாழ்க்கையின் பிடிமானமாகி, சடுதியில் தெளிவை ஏற்படுத்தும் என்பதன் அழகான திரை வடிவம்தான், அஷ்ரப் ஹம்சா எழுதி இயக்கி, மலையாளத்தில் உருவாகி, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் தமிழ் வசனங்களுடன் வெளியாகியுள்ள ‘சுலைகா மன்சில்’. சுலைகாவின் ஒரே மகள் ஹாலா. அவள் விரும்பும் ஆஷிக்கிடம் தான் எதிர்பார்க்கும் தகுதியில்லை என்று மூத்த சகோதரன் சமீர் மறுக்க, எதிர்பாராமல் விபத்தில் அவன் உயிர் இழக்கிறான்.  பிறகு சகோதரன் பார்க்கும் வரன்களையெல்லாம் ஏதோ ஒரு காரணம் கூறி, ஐந்தாண்டுகளாக மறுத்துவரும் ஹாலா, ஒரு கட்டத்தில் அமீனை மணக்கச் சம்மதம் தெரிவிக்கிறாள். நிச்சயதார்த்த நிகழ்வுக்கு முன்னதாக, வளைகுடா நாட்டிலிருந்து வந்திருக்கும் அமீன், ஹாலாவைத் தொடர்புகொண்டு பேச முயல்கிறான். விருப்பம் இருந்தும் வீட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளால் அவளால் பேச இயலாத நிலை. அதைப் புரிந்து கொள்ளாத அமீன் அவளிடம் கடுமையாகப் பேசிவிடுகிறான். நண்பன் அன்வர் எடுத்துக் கூற, அவளிடம் மன்னிப்புக் கோருகிறான். அன்றிரவு அவளது வீட்டின் பின்புறம் சந்திக்கிறான். பேச்சு வாக்குவாதமாகிவிட, திருமணத்தை நிறுத்திவிடுவதாக அவன் முடிவு செய்கிறான். திருமணம் பிரச்சனையில் முடிந்ததா, பிரச்சனை தீர்ந்து திருமணம் முடிந்ததா என்பதுதான் ‘சுலைக்கா மன்சில்’ படத்தின் மீதிக் கதை. ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் நிகழும் எளிமையான சம்பவங்களின் தொகுப்பாக, படம் முழுவதும் ஒரே சீராக, கலகலப்பாகச் செல்ல மாப்பிள்ளை, மணப்பெண் உள்ளங்களில் மட்டும் ஏற்றமும் இறக்கமுமான உணர்ச்சி அலைகள். இரு வேறு நிலைகளையும் அழகியலுடன் வழங்கியிருக்கிறார் இயக்குநர் அஷ்ரப் ஹம்சா. ஹாலாவாக அனார்கலி மரிக்கர், குதூகலக் காதலையும் கொஞ்சம் வெறுமையையும் வரப்போகும் புதிய உறவில் தெளிவையும் உறுதியையும் அவற்றுக்கு ஏற்ற முகபாவங்களுடன், அழகுற வெளிப்படுத்தும் பாங்கு பாராட்டுக்குரியது. லக்மேன் அவரன் அமீன் பாத்திரத்தின் அவசரத்தன்மை கொண்ட, உணர்ச்சிவயப்பட்ட, சற்றுக் குழப்பமான தன்மையை நடிப்பில் குழப்பம் இல்லாமல் செய்துள்ளது சிறப்பு. செம்பொன் வினோத் ஜோஸ் (சமீர்), ஆமல்டா லிஸ் (பத்துல்), சபரீஷ் வர்மா (ரம்ஜான்), தீபா தாமஸ் (டாக்டர் அமீனா), நவ்ஷத் அலி (அன்வர்), அர்ச்சனா பத்மினி (ஹவ்வா), மம்மு கோயா (அப்துல் ரகுமான்),  சுபா ஸ்ரீதரன் (சுலைகா), ஷெபின் பென்சன் (ஆஷிக் மலியெக்கல்) உட்பட துணைப் பாத்திரங்களை ஏற்ற அனைவரும் தத்தம் பங்களிப்பை  நிறைவாகவே வழங்கியுள்ளனர். “ஜென்னத்துக்கே வந்துட்ட மாதிரி இருக்கு…”“ஜென்னத்துன்னா… சொர்க்கம்னு அர்த்தம்”“அப்பா.. சொர்க்கத்துல இப்படியெல்லாம்தான் லைட் போட்டுருப்பாங்களா?” “முறையா என்ன கூப்பிடல.. எனக்குத் தன்மானம்தான் முக்கியம்”“என்னால நடக்கிற கல்யாணத்துக்கு என்னையே கூப்பிட வருவியா? நாங்க அங்க வர்றதுக்குத்தான் கிளம்பிட்டு இருக்கோம்” “என்னடா தலை மட்டும் தனியா வருது?”“உடம்பும் இருக்கு” “செருப்பு இல்லாம கபரஸ்தான் வழியா போனா, கல்லு இல்ல, பாம்புகூட குத்தும். எப்பவும் ‘சென்டிமென்ட்ஸ்’சோட சுத்தனா இப்படித்தான் நடக்கும்” “படா பையாவா இருக்கறது ரொம்பக் காம்ப்ளிகேட்டட் பொசிஷன் இல்ல?” “பார்லர்க்கா? ஏற்கனவே அங்க இருந்து வந்த மாதிரிதான் இருக்கீங்க. திரும்ப பெயிண்ட் அடிக்கப் போறீங்களா?” “கொஞ்ச நேரத்துல அப்படி என்ன பேச முடியும்?”“காலைல எழுந்து சுலைமானி டீ குடிப்பியா? இல்ல.. பிளாக் காபி குடிப்பியான்னு கூடத் தெரியாதே!” “இது நல்லா இருக்காதுன்னு எனக்குத் தெரியும். இத போட்டுக்க வேண்டாம், போட்டுக்கறேன்னு அவர்கிட்ட ஒரு வார்த்த மட்டும் சொன்னா போதும், மத்தத நான் பாத்துக்கறேன்” “உங்களுக்கிருக்கற சாய்சும் பெர்சனாலிட்டியும் எனக்கும் இருக்குமில்ல?”“நீங்க ஹேப்பியா இல்லன்னா எங்க பைய்யாகிட்ட வந்து பேசுங்க, பொறுமையா டைம் எடுத்துட்டு லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கலாம்” “நான் வீட்டுக்குப் போய் சொல்லட்டுமா, ஹாலா?”“அப்போ அவங்க சந்தோஷம் முடிஞ்சு போயிடும்”“உங்களுக்கு இத்தனை பேரோட சந்தோஷத்தக் கெடுக்கணும்னு தோணல இல்ல.. இதவிடப் பெரிய குவாலிட்டி உள்ள லைஃப் பார்ட்னர் எனக்கு வேணும்னு நான் ஆசைப்பட்டதில்ல” ~இவை ரசிக்கத்தக்க, அர்த்தபூர்வமான வசனங்களில் சில. “நாளைக்குதானே உங்க அண்ணனோட கல்யாணம்?” என்று இளநீர்க் கடைக்காரர் அமீனிடம் கேட்பதும் அதற்கு அமீன் மறுப்பேதும் சொல்லாததும் நம்மைக் குழம்பச் செய்கிறது.   கண்ணன் பட்டேரியின் ஒளிப்பதிவு, கண்களுக்குக் குளுமை. பாடல் காட்சிகளைப் படமாக்கிய விதமும் அருமை. பாடல்களுக்கான விஷ்ணு விஜயின் துள்ளலான இசை தாளம் போட வைக்கின்றது. பின்னணி இசையும் அருமை. நவ்புல் அப்துல்லாவின் படத்தொகுப்பு கச்சிதம். வெறும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை கலந்து கலகலப்பாகவும் இளைய தலைமுறைக்கு ஒரு ‘பிரீ வெட்டிங் கவுன்சிலிங்’ போலவும் ‘சுலைகா மன்சில்’ படத்தை வழங்கியுள்ள இயக்குநர் அஷ்ரப் ஹம்சாவுக்கு ஒரு சபாஷ் போடலாம். மதிப்பெண் : 7.5/10

ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ ?

ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ ?

பள்ளி திறந்து சில நாட்கள் ஆகின்றன. ஜூன் முதல் தேதி பள்ளி திறந்தாலே பாடத்திட்டங்களை முழுவதுமாக முடித்துவிட முடியாது என்கிற சூழலில் 11 நாட்கள் தாமதமாவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒருபக்கம் வெயிலின் தாக்கம்  காரணமாக இந்தத் தாமதம் இருந்தாலும் களத்தில் வேறுவகையான பிரச்சனைகளை ஆசிரியர்கள் சந்திக்கின்றனர். தமிழ்நாட்டின் பள்ளிகளில் எந்தப் பாகுபாடுமின்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தினால், அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத மாணவர்கள் எல்லா இடங்களிலும் எல்லாப் பள்ளிகளிலும்  இருப்பார்கள். தனியார் பள்ளிகளில் இப்பிரச்சினை எப்படி கையாளப்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கும்போதும் பாடத்துக்கு ஒரு ஆசிரியர், மொழி ஆசிரியர் என முதல் வகுப்பில் இருந்தே மாணவர்களைக் கையாளும்போதும் இப்பிரச்சினைகள் களையப்படலாம். அப்படியான சூழல் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளிலோ கடந்த பல பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதத் தெரியாதவர்கள், வாசிக்கத் தெரியாதவர்கள், அடிப்படைக் கணக்குத் திறன்கள் இல்லாதவர்கள் என ஆறாம் வகுப்பிலிருந்து  பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் காணலாம். இருபதாண்டுகளுக்கு முன்னால் தொடக்கப்பள்ளிகளிலிருந்து அல்லது நடுநிலைப் பள்ளிகளிலிருந்து  வெளிவரக்கூடிய மாணவர்கள் எழுத்துகளை வாசிக்கவும் எழுதவும் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவே இருப்பர். ஆனால் சமீப காலங்களில் இதுபோன்று இல்லாமல், மிக மோசமான கற்றல் அடைவுடன், அடிப்படை எழுத்துகள் அறியாமலும் வாசிப்பின்றியும்தான் மாணவர்கள் வெளிவருகின்றனர். கணக்குப் பாடத்திலும் அடிப்படைச் செயல்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் வாய்ப்பாடு தெரியாமலும்தான் இருக்கின்றனர். இவர்கள் அரசுப் பள்ளிகளிலிருந்து வருபவர்கள் மட்டுமல்ல; தனியார் பள்ளிகளிலிருந்தும் வருகிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படியாக, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆறாம் வகுப்பில் அல்லது ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில்  சேர வரும் மாணவர்களை நாம் தனியார் பள்ளிகளைப்போல நுழைவுத்தேர்வு வைத்துப் புறக்கணிக்கவோ அல்லது இது உங்களுக்கான பள்ளி இல்லை எனத் திருப்பி அனுப்பவோ முடியாது; அனுப்பவும் கூடாது. சட்டப்படியும் அது ஏற்புடையதல்ல. ஏனெனில் அரசுப் பள்ளிகள் எல்லாருக்குமான பள்ளிகள். மேற்குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகளுடன் அரசுப் பள்ளிகளை வந்தடையும் மாணவர்கள் எண்ணிக்கை  ஒவ்வொரு வருடமும்  ஏறத்தாழ 50 சதவீதத்தைத் தாண்டிவிடுகிறது. வகுப்பறையில் பெரும்பான்மைக் குழந்தைகள் மேற்கூறிய பிரச்சனைகளுடன்தான் இருக்கின்றனர். இவர்களைக் கையாளும் ஆசிரியர்கள், தனிப்பட்ட கவனம் எடுத்துதான் இந்தச் சிக்கலைச் சரி செய்ய முயற்சி செய்கிறார்கள். பல பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர்களுடன் கலந்து பேசி, 6 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களில் வாசிக்கத் தெரியாதவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுப்பது நடக்கும். அல்லது வகுப்பாசிரியர் கவனித்து கூடுதல் நேரம் எடுத்து எழுத்துகளைக் கற்பித்தல், பயிற்சி தருதல் போன்ற செயல்பாடுகள் நடக்கும். ஆனால் எல்லாப் பள்ளிகளும் இவற்றைச் செயல்படுத்துகிறதா என்பது குறித்துத் தனியாக ஆய்வு செய்துதான் அறிந்துகொள்ள முடியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, பல மாவட்டங்களில் அல்லது அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் இப்பிரச்சனையை முன்வைத்து , வாசிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சொல்கின்றனர்.  பெரும்பாலும்  இந்த  ஆணை வாய்மொழி உத்தரவவாகத்தான் இருக்கும். இது வருடத்திற்கு வருடம் கூடுதல் அழுத்தங்களுடன் நடந்தேறி வருகிறது. இதற்காகத் தனிப் பதிவேடு பராமரிக்க வேண்டும் என்று EMIS வரை எடுத்துச் சென்றனர். உண்மையாகவே கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் மேம்படுகின்றனரோ இல்லையோ, பதிவேடு தயாரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி.  இந்தக் கல்வி ஆண்டில், சில தினங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், ‘இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் கற்றலில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு, அடிப்படைக் கற்றலை மேம்படுத்தும் விதமாக, தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாத, அடிப்படைக் கணிதக் கணக்குகள் மற்றும் வாய்ப்பாடு தெரியாத, கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தனியாக ஒரு பிரிவை (section) உருவாக்கி, பள்ளி திறந்த நாளிலிருந்து (12/06/2023) முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கென கால அட்டவணை‌ (Time Table) தனியாகப் பின்பற்றி, மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்தி, மீண்டும் அதே வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் அவர்களை சேர்த்துக் கல்வி பயில அனுமதிக்குமாறு, தங்கள் பள்ளிகளில் பணிபுரியும்  6 முதல் 8 வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான முயற்சியைப் போர்க்கால அடிப்படையில் எடுத்துள்ளது  வரவேற்கத்தக்கது. ஆனால் இதைத் தொடக்கப் பள்ளிகளிலேயே நடைமுறைப்படுத்தி, எழுத்துகளைக் கற்றுக் கொடுத்தபிறகு  உயர்நிலை வகுப்புகளுக்கு ஏன் அனுப்பக்கூடாது? என்ற கேள்வியை நாம் முன்வைக்கிறோம். தொடக்க வகுப்புகளில் ஐந்தாம் வகுப்பு வரை என்ன நடக்கிறது? எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவர்கள் கற்றல் அடைவுகளுக்கு ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இத்தனை ஆண்டுகளாக, ‘தொடக்கக்கல்வி முடித்து வரும் குழந்தைகள் ஏன் அடிப்படைத் திறன்களைப் பெறாமல் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்கின்றனர்?’ என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. அங்குள்ள ஆசிரியர்களைக் கல்வி அலுவலர்கள் கேள்வி கேட்காமல், அதே குழந்தை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து படிக்கும்போது, அங்குள்ள ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் தருகின்றனர் என்ற புலம்பல் ஆசிரியர்களிடம் இருப்பதை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்தால், அரசியல் சட்டத்தின்படி எல்லாருக்குமான சமமான கல்வி கிடைக்கிறதா என்று சிந்திக்கத் தோன்றும். ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் அதிகம் இருப்பதாலும் வெறும் திட்டங்களை மட்டுமே நடைமுறைப்படுத்தி வருவதாலும் தொடக்கப்பள்ளி மாணவர்களை நாம் முழுமையான எழுத்தறிவு பெற்றவர்களாக உருவாக்குவதில்லை என்றும் அறிந்துகொள்ள முடியும். அந்தந்த வகுப்புகளுக்கான பாடங்களை அவர்கள் எப்போது படிப்பார்கள்? மேற்சொன்ன சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மாத காலத் தனி  வகுப்பு என்பது  மாணவர்களுக்கு மிக முக்கியமான காலம். பள்ளி திறந்து முதல் மூன்று மாதங்களில்தான்  முதல் பருவப் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். முதல் பருவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை இந்த மாணவர்கள் எப்போது கற்றுக்கொள்வார்கள்? இப்படியாக ஒரு வகுப்பில் படிக்கவேண்டிய பாடங்களைத் தவறவிட்டு, தவறவிட்டு பத்தாம் வகுப்பு வரும்போது வெறும் 35 மதிப்பெண்களுக்கு அவர்களைத் தயார் செய்யும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. இதில் எங்கே நாம் அனைவருக்குமான கல்வியை, சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்குகிறோம்? ‘ஒரு மாணவனுக்கு வெறும் எழுத்துக் கூட்டிப் படிக்க, எழுத மட்டுமே கற்றுத் தருவதற்கு, எதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்கவேண்டும் என்றுதான் இப்போதெல்லாம் தற்காலிக ஆசிரியர்களைக் குறைந்த ஊதியத்திற்கு அரசு நியமனம் செய்துகொள்கிறதோ?!’ என்ற எண்ணம் தோன்றுகிறது. நுண்திறன்களைக் கற்றுக்கொள்ள நம் மாணவர்களை எப்படித் தயார்படுத்துவது? ஆகவேதான் தொழிற்கல்வி பற்றியும் திறன் மேம்பாடு என்று சொல்லி, வேலைக்காக ஆட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளாக மட்டுமே பள்ளிகளைத் தயார்படுத்தி வருகிறது அரசு. நவீன அறிவியலையும் கணக்கு உள்ளிட்ட பாடங்களையும் படித்து ஆராய்ச்சி மாணவர்கள் உருவாகாமல் போவதற்கு தொடக்க வகுப்புகளில் சரியாகக் கற்றுத்தராதது மிக முக்கியமான காரணம். கல்வி அலுவலர்கள் என்ன செய்கின்றனர்? தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அடிப்படை வாசிப்பை மாணவர்களிடம் உருவாக்கி எழுத்துகளைக் கற்றுக்கொடுக்க வேண்டியதை ஏன் கல்வி அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதில்லை? எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இல்லம் தேடிக் கல்வியும் எட்டாம் வகுப்புவரை செயல்பட்டது. இத்தனை இருந்தும் ஏன் அனைத்துக் குழந்தைகளையும் எழுத்துகளை வாசிக்கவைக்கக்கூடச் செய்ய முடியவில்லை?   தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறுதலாகி வந்துசேரும் 60% குழந்தைகள் அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத நிலையில் இருக்கும் போக்கும் நிலவுகிறதே, அந்தப் பள்ளிகளை அரசு ஏன் கண்டுகொள்வதில்லை? BRT எனப்படும் கல்வி அலுவலர்கள், வருடந்தோறும் பள்ளிகளை ஆய்வு செய்கின்றனரே! ஏன் முழுமையான வாசிப்புத் திறனைக்  கொண்டுவர இயலவில்லை? உளவியல் சிக்கல் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இது போன்ற மாணவர்களைத் தனியாகப் பிரித்து உட்கார வைக்கும்போது மனதளவில் தாழ்வு மனப்பான்மை உருவாவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.  குழந்தைகள் உரிமை, சமத்துவம் எதுவும் இங்கே காக்கப்படுவதில்லை. குழந்தைகளிடம் கற்றல் திறனில் வேறுபாடு இருக்கலாமே தவிர, எழுத்துகளை, அடிப்படை வாசிப்பைக்கூடக் கற்றுத் தராமல், குற்றத்தைக் குழந்தைகள் மீதே போடும் போக்கு வரவேற்கத்தக்கதல்ல. அவர்களை எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று ஒதுக்கி வைத்து, எட்டாம் வகுப்பு வரை கடைசி பெஞ்ச் மாணவர்களாக மாற்றி, சமூகத்தின் எதிரிகளாகச் சித்தரிக்கும் போக்கைப் பொதுச்சமூகம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். குழந்தைகள் உரிமைக்கான அமைப்புகள், சிறார்களுக்காக இயங்குவோர் என அனைவரும் இவை பற்றியெல்லாம் சிந்திக்கின்றனரா என்று தெரியவில்லை. குழந்தைகள் உரிமையைத் தட்டிப் பறிக்கும் போக்கு இங்கே நிலவுகிறது. அடித்தட்டு மக்கள், முதல் தலைமுறைக் குழந்தைகள் ஆகியோருக்கு தொடக்கப் பள்ளிகளில் அடிப்படை எழுத்து, வாசிப்பு, கணக்குத் திறன்களைக் கொடுக்காத சூழலில், அவர்களை அவையில் முந்திய இருக்கச் செய்வது எப்படி? சிறார்களின் மன, உளவியலைக் கணிக்கிறோமா, காக்கிறோமா என்று ஆய்வு செய்யுங்கள். தரமான கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் எனில், அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் இங்குள்ளோருக்கு வேண்டும். அப்போதுதான்  ஐந்தாம் வகுப்பிலேயே சரளமாக எழுதப் படிக்க, அடிப்படைக்  கணக்குகளைச் செய்ய மாணவர்களைத் தயார்படுத்தி அனுப்பவேண்டும் என்ற கருத்து வலுப்பெறும். ஆறாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் பெரிய பாடப் புத்தகங்களை வாசித்து உள்வாங்கி, தனக்கான வாழ்க்கையை நோக்கி  நகரும் சூழல் உருவாகும். ஆகவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் எழுத்துகள் கற்றுத்தரும் வேலையை மட்டும் ஆசிரியர்கள் செய்யாமல், அவரவர் பாடங்களைக் கற்பிக்கும் பணியை உருவாக்க வேண்டும். முக்கியக் காரணமும் உரிய தீர்வும் என்ன? அரசு தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்தவரை, ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் ஏராளமாக இருக்கும் சூழலில், ஐந்து வகுப்புகளையும் ஒரே ஆசிரியர் மட்டுமே கவனித்துக்கொள்ளும் சூழல் இருப்பதால், அவர்களால் ஒரே நேரத்தில் ஐந்து வகுப்புகளுக்கும் எவ்வாறு கற்றல் பணியை மேற்கொள்ள இயலும்? எனவே ஒரு வகுப்புக்கான பாடங்களை எடுக்கும்போது, மற்ற நான்கு வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் – கற்றல் நிகழ்வதில்லை. ஐந்தில் ஒரு பங்கு கற்பித்தல் மட்டுமே நிகழ்வதால், இறுதியாக அவர்கள் ஐந்து வகுப்புகளை முடித்து வெளியே வரும்போது ஒன்று அல்லது இரண்டாம் வகுப்புக்கான மாணவர்களின்

திராவிட மாடல் – கவிதைகள்

திராவிட மாடல் – கவிதைகள்

சமத்துவம் நான் உனக்காக மாறிவிடநிறைய இருக்கின்றன நீயும் எனக்காக மாறிக்கொள்ளகொஞ்சம் இருக்கிறது ஆனால்நமக்காக மாறிக்கொள்வதில் மட்டும்கவனம் கொள்வோம் மற்றவை மாறிடினும்மாறாவிடினும் என்ன? நீ பாதி நான் பாதி என்பதில்உனக்கு நம்பிக்கை உண்டா? நீயும் முழுமைநானும் முழுமைஎன்பதே சரிஅதற்கு மாறிக் கொள்வோம் ============================ சுயமரியாதை என்னிடத்திலான உன்எதிர்பார்ப்புகளெவையும்நமுத்துப் போகாதவரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு உன் அன்றாடத் தேவைகளெதுவும்எள்ளளவும் அயர்ச்சியுறாத வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு என் சுயத்தை முற்றிலுமாய் ஒழித்துஉன் சுயத்துக்காய் நான் ஒடுங்கியிருக்கும் வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு உன் நினைவின் பின்னோடேஎன் நடை நழுவாதிருக்கும் வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு அடுப்பங்கறை தாண்டிஎன் சிந்தைகளுக்குச்சிறகு முளைக்காதவரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு கிள்ளியெடுக்கும் பூவில்வழியும் வலி யாரறிவார்?! முனை மழுங்கிப்போன என்சுயமரியாதையைப் புதைத்த இடத்தில்முளைத்து நிற்கும் சுயபச்சாதாபத்தைவேரோடு பொசுக்கிவிட்டால்உனதன்போடு பின்னிக்கொள்வதில்எந்தத் தடையும் இருக்கப்போவதில்லைஎனக்கும்

கலைஞராலேயே கைவிடப்பட்ட பூம்புகார்

கலைஞராலேயே கைவிடப்பட்ட பூம்புகார்

மீண்டும் வளம் பெறுமா? நாம் அறிந்த வரையில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் முற்றிலும் புதிதாக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சுற்றுலாத்தலமென்றால் அது பூம்புகார்தான். சிலப்பதிகாரத்தின் கதை மாந்தரின் ஊரான பூம்புகார், பழைய காலத்தில் புகார் நகரம் என்றே அழைக்கப்பட்டது. காவிரி புகும், பகைவர்கள் புகார் எனும் பொருள்படும், ‘புகும் புகார்’ என்பதே பின்னாளில் பூம்புகார் என்றானது. காவிரிப்பூம்பட்டினம் என்றொரு பெயரும் உண்டு இதற்கு. சங்க காலம் முதலே சோழர்களின் துறைமுக நகராகவும் முதல் தலைநகராகவும் விளங்கியது. காலப்போக்கில் கடல்கொண்ட புகார் நகரம் போய், ஒரு சிறு மீனவ கிராமமாகச் சுருங்கிவிட்டது. இந்த இடத்தில் சிலப்பதிகாரத்தின் நினைவாக ஒரு சுற்றுலாத்தலம் அமைக்க விரும்பினார் கலைஞர். அதன்படி இங்கே சிலப்பதிகாரக் கதையை விளக்கும் அழகிய சிற்பங்கள் அடங்கிய சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்றும் நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம், பாவை மன்றம், கண்ணகி கோட்டம் ஆகியவையும் அமைக்கப்பட்டன. கலைக்கூடத்தின் முகப்பு அக்கால எழுநிலை மாடத்தின் வடிவில் அமைக்கப்பட்டது. உள்ளே சிலப்பதிகாரக் காட்சிகளும் நடு முற்றத்தில் கண்ணகி, மாதவி ஆகியோருக்கு ஆளுயரத்துக்கு மேற்பட்ட கலைநயம் கொஞ்சும் சிலைகளும் அமைக்கப்பட்டன. அக்காலப் புகார் நகரின் அமைப்பை விளக்கும் முப்பரிமாண மாதிரி வடிவம் ஒன்றும் இதில் இருந்தது. கலைக்கூடத்தைச் சுற்றி கண்ணைக் கவரும் தோட்டங்களும் நடைபாதைகளும் இளைப்பாறும் இடங்களும் அமைக்கப்பட்டன. இளங்கோ அடிகளுக்கும் கரிகால் சோழனுக்கும் கம்பீரமான சிலைகள் அமைக்கப்பட்டன. வண்ண விளக்குகளும் நீரூற்றுகளுமாய் ஜொலித்தன. இந்தக் கலைக்கூட எழுநிலை மாடம்தான் முன்பு தமிழ்நாடு செய்திப் பிரிவின் இலட்சினையாக (லோகோ) விளங்கியது. இதனைத் தவிர சிலப்பதிகாரத்தில் ஐவகை மன்றங்கள் பூம்புகாரில் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. 1.வெள்ளிடை மன்றம், 2.இலஞ்சி மன்றம், 3.நெடுங்கல் மன்றம், 4.பூத சதுக்கம், 5.பாவை மன்றம் ஆகியவையே அவை. இவற்றில் வெள்ளிடை மன்றம், பூத சதுக்கம் தவிர மற்ற மூன்று மன்றங்கள் இக் கலைக்கூடத்தைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன. 1. இலஞ்சி மன்றம் கூன் முதுகுடையோர், குள்ளமாய்ப் பிறந்தோர் மற்றும் உடல் குறைபாடுகள் உடையவர்கள் மூழ்கி எழுந்து, அந்தக் குறைபாடுகள் நீங்க சுற்றிவந்து வழிபட, பொய்கையும் மண்டபமும் கூடிய இலஞ்சி மன்றம்! “கூனும் குறளும் ஊமும் செவிடும்அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்றுவலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்” – சிலப்பதிகாரம். இது தற்போது, ஒரு பூங்காவின் நடுவே இரண்டு தடாகங்களும் (நீச்சல் குளம்) இரண்டுக்கும் இடையில் ஒரு மண்டபமும் அதன் இருபுறமும் உடை மாற்றும் அறை போன்ற வட்ட வடிவ அறைகளும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்திலும் நீராடும் பெண்ணின் பல்வேறு நிலைச் சிற்பங்கள் – நீராடச் செல்லுதல், உடை அணிதல், ஒப்பனை செய்து கொள்ளல், மாலை சூடுதல் என்ற நிலைகளில் பெண்களின் கலைநயமிக்க சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2. பாவை மன்றம் அரசன் நீதி தவறும்போதும் நீதி வழங்கும் அவையில் தவறான தீர்ப்பு – நடுநிலையாக இல்லாமல் ஒரு சார்பில் வழங்கப்படும்போதும் அந்தத் தவறை வாய் திறந்து சொல்லாமல் குறிப்பாலே கண்ணீர் வடித்துக் காட்டிக்கொடுக்கும் பாவை நிற்கும் பாவை மன்றம் ! “அரைசு கோல் கோடினும், அறம் கூறு அவையத்து,உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும்,நாவொடு நவிலாது, நவை நீர் உகுத்து,பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும்” – இந்திர விழா ஊர் எடுத்த காதை சிலப்பதிகாரம் இது கலைக்கூடத்தின் நேர் எதிரே பூங்காவிற்கு இடையில் ஒரு வட்ட வடிவ மண்டபமாக உள்ளது. இதில் சிலப்பதிகார வரிகளுடன் பெண்களின் சிற்பங்கள் ஒவ்வொரு தூணிலும் உள்ளன. 3. நெடுங்கல் நின்ற மன்றம் பிறரால் வஞ்சிக்கப்பட்டு பித்துப் பிடித்தவர்களும் நஞ்சு உண்டு அவதிப்படுவோரும் பாம்பு தீண்டியவர்களும் பேய் பிடித்தவர்களும் சுற்றி வர, அவர்களின் துயரத்தைப் போக்கும் நெடிய கல் நிற்கின்ற நெடுங்கல் நின்ற மன்றம்! இது ஒரு Menhir கல்போல இருந்திருக்கலாம். வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர்சுழல வந்து தொழத்துயர் நீங்கும்நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்! – இந்திர விழா ஊர் எடுத்த காதை சிலப்பதிகாரம் இது கலைக்கூடத்தின் பின்புறம் ஒரு கலைநயமிக்க நெடுந்தூணும் அதனைச் சுற்றிலும் சிற்பங்களும் கொண்ட அழகிய கலை வடிவம். இதன் மினியேச்சர் வடிவத்தைதான் கலைஞர் தனது பூம்புகார் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் லோகோவாகப் பயன்படுத்தினார். இதைத்தவிர சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு ஓட்டலும் உணவு விடுதியும் நத்தாங்கூடு மற்றும் முத்துச்சிப்பிகளின் வடிவில் காட்டேஜ்களும் அமைக்கப்பட்டன. கலைக்கூடத்தின் வெளி நுழைவாயிலிலிருந்து, கதவு, கைப்பிடி, பூங்காக்கள் மற்றும் பேருந்து நிலையம்கூட சிலம்பு வடிவத்திலேயே வடிவமைக்கப்பட்டது. இந்திரவிழா நடத்தும் பொருட்டு ஒரு அரங்கமும் அமைக்கப்பட்டது. இது தவிர ஊருக்கு ஏழு கிலோமீட்டர் முன்னதாகவே பூம்புகார் நுழைவு வாயில், கரிகால் சோழன் தோரண வாயில், இளங்கோ அடிகள் தோரண வாயில், கோவலன் தோரண வாயில், கண்ணகி தோரண வாயில், மாதவி தோரண வாயில் போன்ற வாயில்களும் அமைக்கப்பட்டன. சுற்றுலாவை மேம்படுத்த, தமிழ்நாட்டில் எங்கு பேருந்துகளுக்கு சுற்றுலா ரூட் பர்மிட் கேட்டாலும் அதில் தஞ்சை மாவட்டத்திற்கான பர்மிட் கட்டாயமாக சேர்த்தே அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவு நாளில் இந்திரவிழா, அரசு விழாவாக மாவட்ட நிர்வாகத்தால் கலை/இலக்கிய நிகழ்வுகளுடன் நடைபெற்றது. இவையெல்லாம் கலைஞர் ஆட்சியிலிருந்த வரை சிறப்பாக நடைபெற்றன. பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இந்த இடம் கேட்பாரற்று விடப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி கலைஞர் தலைமையில் வந்தபோதும் இந்த இடம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. இந்திர விழா மட்டும் பெயரளவில் நடைபெற்றது. பூங்காக்கள் அழிந்தன; கட்டடங்கள் சிதிலமுற்றன; முத்துச் சிப்பி, நத்தாங்கூடு வடிவக் காட்டேஜ்கள் எலும்புக்கூடாய்ப் போய் இன்று தரை மட்டமாகி, இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பாவை மன்றம் நாய்களும் சமூக விரோதிகளும் புழங்கும் இடமாயிற்று. நெடுங்கல் மன்றத்தைச் சுற்றி இருந்த பூங்காக்கள் அழிந்து, இன்று அருகில் செல்லக்கூடப் பாதை இல்லாமல் திறந்த வெளியில் நிற்கின்றன. இலஞ்சி மன்றத்தின் நீச்சல் குளங்கள் வறண்டு போய், பூங்காக்கள் அழிந்து, அதன் கருமை நிற கிரானைட் கட்டடங்களின் மேல் தற்காலக் காவியக் காதலர்கள் தங்கள் பெயர்களைக் கல்வெட்டாகச் செதுக்கி வைத்துள்ளனர். இதன் நுழைவாயில் வாசமிகு கருவாட்டுக் கடைகளால் சூழப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஓட்டலும் உணவகமும் காணாமல் போய்விட்டன. ஒரே ஒரு சுற்றுலா அலுவலகம் பெரும்பாலும் திறக்கப்படாமல் உள்ளது. அங்குள்ளவர்களிடம் பூம்புகார் பற்றியோ சிலப்பதிகாரம் பற்றியோ எந்த ஒரு தகவலும் கிடைக்காது. சுக ஜீவனம் நடத்தும் அரசு ஊழியர்கள். தற்போது கலைக்கூடத்தையும், ‘புதுப்பிக்கிறோம் என்ற பெயரில்’ நீண்ட காலமாக மூடி வைத்துள்ளனர். பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. மற்ற இடங்களை, திறந்த வீட்டில் குக்கல்கள் போலச் சுற்றி வரலாம். சிலம்பு வடிவப் பேருந்து நிலையம் பழுதுபட்டுள்ளது. அதனைச் சுற்றி ஜேசிபிக்கள் ஏதோ பணி செய்கின்றன. கலைஞரின் கனவு சுற்றுலாத்தலமான பூம்புகாரை ஏனோ கலைஞரே பின்னாளில் கண்டுகொள்ளவில்லை; தொகுதியையும்தான். நீண்டகாலம் தொகுதியைக் கூட்டணி வேட்பாளர்களுக்கே ஒதுக்கினார். வெகு நீண்ட காலத்திற்குப் பின்னர் தற்போது திமுக எம்.எல்.ஏ. பார்க்கலாம், பூம்புகார் மீண்டும் நலம் பெறுகிறதா, வளம் பெறுகிறதா என்று.

ஒரு சாமானியன் போதும்

ஒரு சாமானியன் போதும்

திரை விமர்சனம் சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை  பாமரத்தனமான கடவுள் பக்தியும் தங்களையே கடவுளாக வரித்துக்கொள்ளும் சாமியார்கள் மீதான கண்மூடித்தனமான பக்தியும் அந்தச் சமூகத்தை, அதன் அங்கமாக உள்ள  மக்களை, குறிப்பாகப் பெண்களை எப்படியெல்லாம் சீரழித்து வருகிறது என்பதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டேதான் வருகிறோம். அதிலிருந்து நாம் கற்ற பாடம் என்ன என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.   இப்படியான உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், தீபக் கிங்கிரணியின் விறுவிறுப்பான கதை திரைக்கதை வசனத்தில், அபூர்வ் சிங் கார்க்கியின் நேர்த்தியான இயக்கத்தில், மனோஜ் பாஜ்பேயின் அழுத்தமான நடிப்பில் உருவாகி, ஜீ5 தளத்தில் தமிழ் வசனங்களுடன் வெளியாகியுள்ள ஹிந்தித் திரைப்படம்தான் ‘ சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ (ஒரு சாமானியன் போதும்). வாய்ப்புக்கு ஏதுவான இந்தப் ‘புண்ணிய’ பூமியில் வறுமை, நோய், அறியாமை, பேதமை, கல்வி அறிவின்மை தாண்டி, பகுத்தறிவின்மை, அச்சம் காரணமாக எதையும் நம்பும் மனோநிலையில் மக்கள். தீர்வு தேடி உழன்றுகொண்டிருக்கும் அவர்களிடையே ‘கடவுள் அவதார’மாக முளைத்துச் செழிக்கும் சாமியார்களில் ஒருவன்தான் பாபாஜி. அவனின் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் இளவயதுப் பெண்ணுக்காக நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தைத் தனிமனிதனாக நடத்துகிறார், குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர் சோலங்கி. பாபாஜிக்குப் பண பலம், ஆள் பலம் தாண்டி மக்களின் கண்மூடித்தனமான ஆதரவும் இருக்கிறது. மிகமிகப் பிரபல வக்கீல்கள்,  அவர் பொருட்டுப் பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜர் ஆகிறார்கள். சாட்சிகள் விலை பேசப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். கொடிய குற்றத்தைப் பின்னுக்குத் தள்ளி, அந்தக் கார்ப்பரேட் சாமியாரின் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆசிரமங்கள் ஆகியவற்றால் மக்களின் ‘சேவை’ தடைபடுவதாக மட்டுமே, நீதிமன்றங்களில், மக்கள் மன்றங்களில், ஊடகங்களில் முன்னிறுத்தப்படுகின்றது. ஐந்து ஆண்டுகளாக நீளும் சட்டப் போராட்டத்தில்,  அப்பெண்ணின் வலி உணர்ந்த, உண்மைக்காகப் போராடும் வழக்குரைஞர் சோலங்கி, அந்த இளவயதுப் பெண்ணுக்கு நீதியைப் பெற்றுத் தந்தாரா என்பதுதான், ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ படத்தின் மொத்தக் கதை. “எப்படியாவது அவர் மேல இருக்கிற போக்சோ கேச டிரா பண்ணு, இல்லன்னா பிரச்சனை பெருசா போய்டும்.” இப்படி பாபாஜி தரப்பு அலறுவதிலிருந்தே, போக்சோ  சட்டத்தின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம். அதீத நம்பிக்கை கொண்ட அந்தக் குடும்பம் பாபாஜியின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைகிறது. உதவ நினைக்கும் காவல்துறை பெண் அதிகாரி, போக்சோ சட்டத்தின் நுணுக்கங்களை அறிந்த வழக்குரைஞர் சோலங்கியை அவர்களுக்குப்  பரிந்துரைக்கிறார். அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்து கலங்கிப் போகும் சோலங்கி, தீவிர சிவ பக்தனாக இருந்தும், பாபாஜியின் கேடுகெட்டச் செயலை ஜீரணிக்க இயலாமல், வழக்கை எடுத்துக் கொள்கிறார். அவரிடம், “சார்.. உங்களோட பீஸ்?” தயங்கித் தயங்கிக் கேட்ட பாதிக்கப்பட்ட பெண் நூவின் தந்தையிடம், சோலங்கி  புன்முறுவலுடன் சொல்கிறார், “அந்தப் பொண்ணோட சிரிப்பு..” ” கோர்ட்ல கீழ்த்தரமான கேள்வி எல்லாம் கேப்பாங்க. எப்படியாவது உன் மனசை உடைக்க நெனப்பாங்க. நீ எதுக்கும் பயப்படக் கூடாது” என்று விசாரணைக்கு நூவைத் தயார் செய்யும்போதும், நூவின் பெற்றோர்களிடம் ஒரு கதையைச் சொல்லி, அவர்களது ஒத்துழைப்பைக் கோரும்போதும்,  போக்சோ சட்டத்தின் கூறுகளை, அவற்றின் நுணுக்கங்களை எடுத்துரைத்து, அழுத்தமான வாதங்களை முன்வைக்கும்போதும், சூழ்ந்துள்ள ஆபத்தில் தனது மகன் காணாமல் போனதை அறிந்து பதைபதைக்கும்போதும், “தற்கொலை செஞ்சுக்கலாம்னு தோனுது” என்று சொல்லும் நூவிடம், “நடக்கிற இந்தப் போருக்கான முழக்கத்தை அவங்க எழுப்பிட்டாங்க கண்ணா” என்று தைரியம் சொல்லி, சங்கநாதம் முழங்கும்போதும், பிரிய விரும்பாத தன் ஜூனியரிடம், அவரின் பாதுகாப்பு நிலைமையை எடுத்துச் சொல்லி, அக்கறையும் கண்டிப்புமாக வலியுறுத்தும் பொருட்டு அவரது காலில்விழ முயலும்போதும், ஐந்தாவது முறை ஷூவைப் பாலிஷ் செய்வதைப் பையன் கிண்டல் செய்வதை ரசிக்கும்போதும், “ஸ்கூல், ஹாஸ்பிடல் கட்டுறதுனால, அவர் ரேப் பண்ணலாம்னு ஒன்னும் அர்த்தம் கிடையாது…. இல்லையா?” என்று பாபாஜி தரப்பில் வந்த அட்வகேட்டிடம் செவுளில் அறைந்ததுபோல் கேட்கும்போதும், “இந்த நாட்ல ஒரு பெண்மணியோட வாழ்க்கையில ஏகப்பட்ட கஷ்டங்க ஏற்படுது. அந்தக் கஷ்டங்களோட ஒரு பிரதி பிம்பமா பாதிக்கப்பட்ட இந்தப் பெண் இருக்கா. இப்படிச் சொல்வதற்கு எனக்கு உண்மையிலேயே அவமானமா இருக்குது, யுவர் ஹானர்” என்று வாதத்தினிடையே தெரிவிக்கும்போதும், “மொத்த ‘ப்ரோசிடிங்ஸ்’லயும், ஒரு சில பேர் அவள பாதிக்கப்பட்ட பொண்ணா பாத்தாங்க, இல்ல பணமா பாத்தாங்க, சில பேர் அவங்க காமப் பசிக்குப் போகப் பொருளாப் பாத்தாங்க, இன்னும் சில பேர் ‘டி.ஆர்.பி’ யா பாத்தாங்க… நான் அந்தப் பொண்ணுக்குள்ள காளிய பார்த்தேன்..” என்று உணர்ச்சிவயப்பட்டுக் கூறும்போதும், வழக்குரைஞர் சோலங்கியாக மனோஜ் பாஜ்பேயி, மாறுபட்ட நடிப்புத் திறமையால் நம்மைப் படம் முழுவதும் அத்துடனேயே கட்டிப்போட்டுவிடுகிறார். நேர்மையான வழக்கறிஞர்கள் மீதான மதிப்பைப் பல மடங்கு கூட்டியும் விடுகிறார். பெரும்பாலான நீதிமன்றக் காட்சிகளில் முகத்திரை இட்டிருந்தும், கண்களிலேயே நுட்பமான பாவங்களை வெளிப்படுத்தி நடிப்பில் அசத்திய அட்ரிஜா சின்ஹா (நூ) சபாஷ் போட வைக்கிறார். பசுத்தோல் போர்த்திய புலியாக வரும் பாபாஜி (சூரிய மோகன் குல்ஸ்ரேஷ்தா), பாபாஜி தரப்பு அட்வகேட் சர்மா (விபின் ஷர்மா), சோலங்கியின் ஜூனியர், அவரது அம்மா, மகன், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள்,  நூவின் பெற்றோர்கள்,  உட்பட ஏனைய துணைப் பாத்திரங்கள் அனைவரும் அவர்களுக்குரிய நேர்மையான பங்களிப்பைத் தந்துள்ளது சிறப்புக்குரியது. பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றங்களில் அமைந்திருந்தாலும் கொஞ்சமும் சலிப்புத் தட்டாத வகையில் படமாக்கியதில், அர்ஜுன் குக்ரேட்டியின் ஒளிப்பதிவுக்குப் பெரும்பங்கு உண்டு. படத்தை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதைக்கேற்ற கொதிநிலையில் வைத்திருந்தமைக்கு சங்கீத் சித்தார்த்தின் இசை ஒரு காரணம். இன்னொரு காரணம், ‘சிக்’கென இருந்த சுமித் கோட்டியனின் படத்தொகுப்பு. ஒட்டுமொத்தமாக அல்லாது அவ்வப்போது ஃப்ளாஷ் பேக் உத்தியைப் பயன்படுத்திப் படக்கதை நகர்வது அழகு. அன்று, காவல்துறை அதிகாரிகளிடம் நேர்மை, நீதித்துறையில் தலையீடின்மை, பாதிக்கப்பட்ட பெண்ணின் மனோவலிமை, பெற்றோர்களின் உறுதி, உயிர் அச்சத்தையும் பொருட்படுத்தாமல் கயவர்களுக்கு எதிராக போராடும் சில மனிதர்களின் துணிச்சல், எல்லாவற்றுக்கும் மேலாக, சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்று ஒதுங்கி நின்ற ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு என்ற சூழல்தான், பெண்ணின் பார்வையில் வலி உணர்ந்து, சூழ்ந்துள்ள ஆபத்தை அறிந்தும் வழக்கை அணுகிய வழக்குரைஞர் சோலங்கியால் உண்மையை நிலை நாட்டிடச் செய்தது. எந்தப் புராண இதிகாசங்களைக் கைக்கொண்டு, இத்தகைய கார்ப்பரேட் சாமியார்கள் மக்களின் பாமரத்தனத்தின் மீது, தத்தம் மோசடிகளைக் கட்டமைத்து முறையற்ற சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்களோ, குற்றம் என்னவென்று கருதாமல் குற்றவாளிகள் யார் என்று கருதக்கூடிய ‘செலெக்ட்டிவ் அப்ளிகேஷ’னுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய, அதே புராண இதிகாசங்களை நீதிமன்றங்களிலேயே மேற்கோள் காட்டி, அவர்களுக்கு எதிரான நீதியைப் பெற முயல்வது,  நகை முரண். என்றாலும், நீதிமன்றம் இந்தியக் குற்றவியல் சட்டம் மற்றும் போக்சோ சட்டங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பை வழங்குவதாக அமைத்ததற்கும் காலத்தின் கட்டாயமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழியைத் தோலுரித்துக் காட்டும் ஒரு நேர்த்தியான திரைப்படத்தை  வழங்கியதற்கும் இயக்குநர் அபூர்வ் சிங் கார்க்கி, வெகுவான பாராட்டுக்கு உரியவராகிறார். மதிப்பெண் : 8/10

விழுதில்லா ஆலமரம்

விழுதில்லா ஆலமரம்

கவிதை வீழ்ந்து கிடந்தது தெருமூலையில்கிழிந்த கம்பளியில் கசங்கிய கவிதைகுலுங்கிய கம்பளியில் இருமலின் இசைஎழுதிய கவிஞர் எண்திசை ஓடினர்காற்றில் பக்கங்கள் பின்னால் புரண்டனகாலத்தின் கசடுகள் கவிதையாய்ச் சிரித்தனஞாலத்தின் தவறுகள் கிறுக்கலாய் விரிந்தன இருட்டிய பிறகுதான் இவர்களின் சொர்க்கம்முக்காடு மாக்களின் இடைகளின் ஏற்றம்சாக்காடுச் சல்லாபச் சரித்திரப் பதிவேற்றம்குலுங்கிய வளையினில் குதூகல ஆட்டம்குழைந்த மைதொட்டுக் கவிதையின் ஓட்டம்பல்மொழிக் கவிஞர் உரைபட்டி மன்றம்சிதைந்த கழிவாய்க் கம்பளியில் ஒடுக்கம் தேனிருந்த கூடுஅதுவோ தெருவினில் கிடக்குதுதேனுண்ட நரியெலாம் வேறெங்கோ சென்றதுமானென்று சொன்னதெலாம் மறுகி விலகிஓடியதுபழந்தின்ற வௌவால் பறந்தெங்கோ மறைந்ததுகறைநனைத்த அலையெலாம் திசைமாறிச் சென்றதுகாலத்தின் கோலத்தால் நூலதுவும் கிழிந்ததுகாமத்தின் குப்பையாகிக் கம்பளிக்குள் நடுங்குது எண்திசைப் பறவைகள் நாடிவந்த ஆலமரம்தன்னாசை எச்சமிட்டு ஆடிநின்ற இச்சைமரம்நிலவொளிக் கவிஞர் கற்பனை காத்தமரம்கணக்கின்றிக் காலிடை காமரசம் ஏற்றமரம்உடையின்றி இரவினில் உல்லாசம் விற்றமரம்எச்சங்கள் ஏற்றதனால் நாற்றத்தில் நலிந்தமரம்விழுதுகள் இல்லாததால் வீழ்ந்திட்ட ஆலமரம்

ஆசிரியர் சங்கங்கள் பெரும் சாபக்கேடு

ஆசிரியர் சங்கங்கள் பெரும் சாபக்கேடு

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, 2021இல் திமுக அரசு கொடுத்த தேர்தல் அறிக்கையை உற்று கவனிப்போமானால், கல்வித்துறையைப் பொறுத்தவரை முதல் வாக்குறுதியாகக் காணக் கிடைப்பது  அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்ததாக, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் சமூக நீதி மற்றும் மொழிக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை அழித்தொழிப்பதாக அமைந்துள்ளதால், திராவிட முன்னேற்றக் கழகம் அதனை முற்றிலும் நிராகரிக்கிறது என்பது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். புதிய அரசு அமைந்தவுடன் மக்கள் அதீத நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட்ட மனநிலைக்குச் சென்றதென்னவோ உண்மைதான். ஆனால் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர என்ன மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தெரியவில்லை; தெளிவுமில்லை. கல்வித்துறையைப் பொறுத்தவரை அரசு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தாலும்  நாம் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா எனில் அது ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது. ஏனெனில் கல்விக்காகப் பல நல்ல திட்டங்களை இந்த அரசு  கொண்டு வந்ததாகக் கூறினாலும் அந்தத் திட்டங்கள் பலவும் ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை மையப்படுத்தியே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்பதாகக் கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற தற்போதைய தமிழ்நாடு அரசு செய்வதென்ன?  கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒன்றிய அரசின் அதே தேசிய கல்விக் கொள்கையின் உட்கூறுகள் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதோ, இந்தக் கல்வியாண்டின் முதல் பயிற்சி. ஆசிரியர்கள் அனைவருக்கும் CPD பயிற்சி, வரும் சனிக்கிழமை (10/06/2023) தொடங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த கல்வியாண்டுக்கு முன்புவரை, 1-10 வகுப்புகளுக்கான 5 பாடம் கற்பிக்கும்  இடைநிலை ஆசிரியர்கள் (SGT) மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு (B.T) மட்டும் இந்தப் பயிற்சிகள் இருக்கும். கடந்த கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர்களுக்கும் (PG Teachers) பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி,  பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, காலமுறை ஊதியம் (Regular Pay) வாங்கும் அனைவருக்கும் இந்தப் பயிற்சி, பகுதி நேர ஆசிரியர்கள் தவிர என்று குறிப்பிட்டுள்ளனர்.  அதாவது விளையாட்டு ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், பாட்டு ஆசிரியர்கள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்தே ஊதியம் சார்ந்து ஏதோ மாற்றம் வரப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 2019இலிருந்து, புதிய தேசிய கல்விக் கொள்கையின் ஒவ்வொரு கூறாக தமிழ்நாடு கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று நாம் கரடியாகக் கத்துகிறோம். ஆனால் ஆசிரியர்கள் சங்கத்தினரில் பெரும்பகுதி அதைக் கண்டுகொள்ளவில்லை. பள்ளிக் கல்வி ஆணையர் நியமனம்இல்லம் தேடிக் கல்விஎண்ணும் எழுத்தும்இணையவழி மதிப்பீட்டு முறைகள்கல்வியில் தொழில்நுட்பம்EMIS developmentநம்ம ஸ்கூல் பவுண்டேஷன்தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்நான் முதல்வன் திட்டம்ஃபெல்லோஷிப் நியமனங்கள்பள்ளிகளில் தன்னார்வலர்களை முழுவதும் நுழைத்தல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிக் கல்வி இப்படியாக NEP-2020இன் எல்லாப் பகுதிகளும் மிக அழகாகத் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளிக்கல்வி ஆணையருக்கு பதிலாக மீண்டும் இயக்குநர் நியமனம் மட்டும் நடந்துள்ளது. மேற்சொன்னவற்றின் நீட்சியாக, கல்விக்கொள்கையில் ஆசிரியர்கள் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள தரவுகளின்படி அவர்களுக்குத் தரப்படும் பயிற்சிகளுக்கு CPD என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை குறுவள மையப் பயிற்சி (CRC- Cluster Resource Centre) என்று அழைக்கப்பட்டு வந்தது, தற்போது CPD ( Continuous Professional Development) தொடர்ச்சியான தொழில்சார் மேம்பாடு என்று மாற்றப்பட்டுள்ளது. கற்பித்தல் பணி செய்யும் ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சி தேவைதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது ஊக்க ஊதியம், பதவி உயர்வு என அடிப்படை வாழ்வாதாரத்தில் கை வைப்பதாக மாறப்போகிறது என்பதைத்தான் நாம் இங்கு கேள்விக்கு உட்படுத்துகிறோம். NEP வரைவு 2019இன் படி CPD என்பது, ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு வருடமும் 50 மணி நேரம் திறன் மேம்பாடு பற்றிய பாடங்களை நேரடி வகுப்பாகவோ அல்லது இணைய வழியாகவோ கட்டாயம் கற்க வேண்டும். இந்தப் பாடங்களில் தொடர்ச்சியான மதிப்பீடு இருக்கும். இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு 5 வகையான தர மதிப்பீடு (RANK) வழங்கப்படும். Early Teacher (without tenure), Early Teacher (with tenure), Proficient Teacher, Expert Teacher and Master Teacher ஆகிய ஐந்து பிரிவுகளாக ஆசிரியர்கள் தரம் பிரிக்கப்படுவார்கள். இதன் விளக்கத்தை அறிந்துகொள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை இங்கு தருகிறோம். வரைவு தேசிய கல்விக் கொள்கையில், (பகுதி I) பள்ளிக் கல்வி என்ற தலைப்பில் (5) ஆசிரியர்கள் என்ற உபதலைப்பில் (5.4) பணி மேலாண்மை என்ற உட்பிரிவு உள்ளது. அதில், 5.4.3இன் படி,   தொழில் சார் திறமைகளுக்கு ஏற்ப பதவி மற்றும் ஊதிய உயர்வு, தங்களது நிலை சார்ந்து இல்லாமல் தகுதி உள்ள ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பகுதி IIIஇல் முக்கிய கவனம் பகுதியில், (எண் 19.3) ஆசிரியர்களுக்கான கற்பித்தல் முன் தயாரிப்பு மற்றும் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாடு என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை (NEP 2020) நடைமுறைப்படுத்துவது வெற்றிபெற வேண்டுமானால் ஆசிரியர்களின் CPDயை நோக்கிய மிகப்பெரிய முயற்சி தேவைப்படும். இவை 2019இல் வெளியிடப்பட்ட வரைவு தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளவை. அடுத்து, தேசிய கல்விக் கொள்கை இறுதிப்படுத்தப்பட்ட பிறகு வெளியிட்ட கொள்கைக் குறிப்பில் பின்வரும் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. 5.15 தொடர்ச்சியான தொழில் சார் மேம்பாடு (CPD- Continuous Professional Development) என்ற பகுதியில், மிகச் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் மற்றும் ஊக்கப்படுத்தப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வும் அளிக்கப்படும் இவற்றை வழங்க செயல்திறன் அடிப்படையிலான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 5.17. மிகச் சிறப்பான பணிகளைச் செய்யும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும். 5.20. ஆசிரியர்களுக்கான தொழில்சார் தர நிலைகள் என்ற தலைப்பின் கீழ், ஆசிரியர்களுக்கான தேசிய தொழில் முறை தர நிலைகளின் (NPST- National Professional Standards for Teachers ) ஒரு பொதுவான வழிகாட்டல் 2022இல் உருவாக்கப்பட்டு, தேசிய கல்விக் கவுன்சில் அதன் மறுசீரமைக்கப்பட்ட புதிய வடிவத்தில் பொதுக் கல்விக் கவுன்சிலின் (GCE- General Education Council) கீழ் ஒரு தொழில் முறை தர நிர்ணய அமைப்பாக (PSSB- Professional Standard Setting Body)  உருவாக்கப்படும். NCERT மற்றும் SCERTகள், பிராந்தியங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர்களை உருவாக்கும் மற்றும் வளர்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற அமைப்புகள், தொழிற்கல்வியில் நிபுணத்துவ அமைப்புகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுடன் ஆலோசனை மேடையில் வெவ்வேறு நிலைகளில் ஆசிரியர்களின் பங்கு பற்றிய எதிர்பார்ப்புகளையும் அந்த நிலைக்குத் தேவையான திறன்களையும் தர நிலைகள் உள்ளடக்கும். ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தர நிர்ணய அமைப்பானது ஆசிரியர்களுக்கான பயிற்சி பாடத்திட்டத்தை வடிவமைக்கும். இது மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசிரியர் தொழில் நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிக்கலாம். இதில் பதவிக்காலம், தொழில்முறை மேம்பாட்டு முயற்சிகள், சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் பிற அங்கீகாரங்கள் அடங்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு ஆகியவை பதவிக்காலம் மற்றும் மூப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட மாட்டாது ஆனால் தர நிர்ணய அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்சொன்ன அனைத்தும்தான் தற்போது நடைமுறைக்கு வந்துகொண்டுள்ளது. எனில் தமிழக அரசு NEP 2020ஐ நிராகரிக்கிறது என்று நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்? அரசின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாகவே நமக்கு உணர்த்திவிடலாம். புதிய தேசியக் கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்கிறோம் என்று அறிவித்து விடலாம். கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசின் மேற்சொன்ன நிலைப்பாடு குறித்துத் தெரியவில்லையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அறியமுடியவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் இருவரும் வெளிப்படையாகக் கூறிய நல்ல விஷயங்களில் இவையும் அடங்குமா எனத் தெரியவில்லை. 2022இல் இதற்கான NPST உருவாக்கப்பட்டுள்ளது. வரைவறிக்கையிலேயே (2019) இதுபற்றி முன்னறிவிப்பு செய்துவிட்டது ஒன்றிய அரசு. எனில் நடவடிக்கை எடுக்காமல், விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது  தமிழ்நாட்டு ஆசிரியர் இனமே. நாம் நமது பணிக்காலத்தை முடித்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர்களாக ஆசிரியர்கள் இருப்பதும் எதிர்காலச் சந்ததியினர் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக நியமனம் ஆகவேண்டும் என்ற வேட்கையும் இல்லாதவர்களாக, இயங்காத அமைப்புகளாக சங்கங்கள் மாறியுள்ளது பெரும் சாபக்கேடு.  அரசியல் கட்சிகளுக்கு அடிவருடும் வேலை செய்யும் நபர்களாகவும் சில சங்கவாதிகள் மாறியுள்ளது வெட்கக்கேடு.  ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆசிரியர்களுக்குத் தெரியாமல் அரசுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்துள்ளனரா எனவும் சாமானிய ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில்  சங்க நிர்வாகிகள் 2019இல் வந்த தேசிய கல்விக் கொள்கை வரைவை வாசித்தார்களா அல்லது அதன்மீது விவாதம் எதுவும் நடத்தினார்களா என்ற கேள்வி எழுகிறது. சங்கம் என்பது ஆசிரியர்கள் சமூகத்தின் மிக முக்கியமான  ஆயுதம். ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், உரிமைகள் பறிபோகாமல் தடுக்கவும் வேண்டிய முக்கியக் கடமை சங்கங்களுக்கு உண்டு. இன்றைய ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி எதிர்கால ஆசிரியர்களுக்கும் நம்பிக்கை தரும் அமைப்புகளாக அவை இருக்க வேண்டும். ஆனால் நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் வெற்று அமைப்புகளாகவே அவை இருக்கின்றன. ஆசிரியர்களோ எதற்காகவும் மறுப்போ எதிர்ப்புக்குரலோ பதிவு செய்ய முன்வராத மிக நல்ல மனிதர்கள். மாணவர்களிடம் எப்படி கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார்களோ அதேபோல, அவர்களும் அதிகார அடுக்குகளுக்கும் ஆணைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கும் நற்குணம் பெற்றவர்கள் அவர்கள்.  புதிய தேசிய கல்விக் கொள்கைதான் நமது மாநிலத்தில் பின்பற்றப்படுகிறது என்ற உண்மையை, மாண்புமிகு கல்வி அமைச்சர், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியோ அல்லது அறிக்கை வெளியிட்டோ சுற்றறிக்கை மூலமாகவோ வெளிப்படையாகவே அறிவித்துவிடலாம்.  ஆசிரியர்கள் தங்களைத் தேர்வுகளுக்கும் துறையின் கட்டளைகளுக்கும் தயார் செய்ய ஆரம்பிக்கட்டும். ஐந்து வகையான தர மதிப்பீடு (Rank) அவர்களுக்கு வழங்கப்படட்டும். அதன் அடிப்படையில் பதவி உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, இன்னபிற அங்கீகாரங்கள் வழங்கப்படட்டும். CPD என்ன செய்யும்? பணி மூப்பின் அடிப்படையில் இல்லாமல் திறன் அடிப்படை என்றால், அதை நிர்ணயிப்பவர்கள் யார்? இங்கு தகுதி என்பது எது? ஆசிரியர்கள் பெறும் மாநில, தேசிய விருதுகள் போல இதிலும் ஊழல் நிலவுவதா? அதோடு இணைய வழியில் தேர்வு என்பது எத்தனை தூரம்

பாதி ஆப்பிள் விளைவு

பாதி ஆப்பிள் விளைவு

காதல் எனப்படுவது யாதெனின்.. ஒளி வீசிக்கொண்டிருந்த ஆதவன் கார்மேகக் கூந்தலுக்குள் மறைந்துகொண்டான். ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருந்த கிளைகளும் உரசி உரக்க உரையாடிக்கொண்டிருந்த இலைகளும் தங்களின் அசைவுகளை நிறுத்திக்கொண்டன. மின்கம்பங்களுக்கு இடையே தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பிகளில் கொஞ்சிக்கொண்டிருந்த காகங்கள் இரண்டு சட்டென்று சிறகை விரிந்துப் பறக்க, ஈர்ப்புவிசை மாறுதலால் துள்ளி எழும்பிக் குதித்து ஆடின மின்கம்பிகள். தன் வாலைப் பின்னங்கால்களுக்குள் உள்ளிழுத்துக்கொண்டு சாலையோரத்தில் படுத்துக்கொண்டது தெருநாய் ஒன்று. என் மனதோ விழித்துக்கொண்டது. திடீரென ஏற்படும் காலமாற்றமும் தென்றலின் தீண்டலும் வீணை நரம்புகளின் மீட்டலும் அவளின் வருகைக்கான சமிக்ஞைகளே. கருவிழிக்குள் அவளின் பிம்பம் குவியும்போதெல்லாம் என் உடலின் ஒவ்வொரு அணுவும் கனவுலகில் சஞ்சாரிக்கிறது. புத்திக்கும் மனத்திற்கும் மட்டுமல்ல, என் உடல் அணுக்களுக்கும் கனவுகாணும் சக்தியைக் கற்றுக்கொடுக்கும் வல்லமை அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் உண்டு. அவளை நினைக்கும்போதெல்லாம் உடலெங்கும் புல்லரிப்பதும் அதனால்தானே. இதனை விஞ்ஞானம் என்பதா அல்லது என் மெய்ஞானம் என்பதா? இது உன்மீது நான் கொண்ட காதலா? அல்லது என் பருவ வயதின் காமமா? குயில்கள் கூவுவதும் மயில்கள் தோகையை விரித்தாடுவதும் மலர்கள் மலர்ந்து மணம் பரப்புவதும் தன் இணையைக் காமத்திற்கு அழைக்கும் காதலன்றி வேறேது? இந்தக் காதல் என்னும் ரசாயன மாற்றம் மனிதர்களுக்கு மட்டுமானதா என்ன?   அவளின் சுவாச ஒலி என் செவிகளுக்குள் புது ராகம் பாடியது. அவளின் வாசம் என் சுவாச மலர்களை மலரச் செய்தது. தடையின்றிச் சுரந்த உமிழ் நீரை முழுவதுமாய் விழுங்கமுடியவில்லை. அது தொண்டைக்குள் உருளும் உருண்டைக்குள் சிக்கிக்கொண்டது. முதலாம் புலனுறுப்பான என் விழிகள் அவள் வரும் திசையைத் தேடின. அவளின் நெளிந்து சுருண்டு காற்றில் ஆடும் காதோரத்துக் கூந்தலோ, இடது வில் புருவத்தின்மீது தவம் செய்யும் மச்சமோ, குவிந்த செவ்விதழ்களின்மீது தீட்டிய ஓவியத்தை ஒத்த ரேகைகளோ, சங்குக் கழுத்தினில் தொங்கியபடி ஊஞ்சலாடும் முத்து மாலையோ, ஏதோ ஒன்று எந்தன் பித்தம் தலைக்கேற்றும் வித்தையைக் கற்றறிந்திருக்கிறது. அன்பு, பாசம், நேசம், விருப்பம், நட்பு எனப் பல சொற்கள் தமிழில் இருந்தாலும் காதல் என்ற சொல் புதிதாய் ஏன் வந்திருக்கும்? பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ இல்லாத ஒரு உணர்வு மனிதர்களுக்கு மட்டுமா உள்ளது? மனிதனைத் தவிர மற்றவற்றுக்குக் காமம் என்பது பசியைப்போல, உறக்கத்தைப் போல எப்போதாவது ஏற்படும் உடலின் தேவைதானே.. பசி வரும்போது வேட்டையாடுவதைப்போல, காமமும் உணர்வெழுச்சியின்போது மட்டுமே. அவை அனைத்து நேரங்களிலும் காமத்தைத் தூக்கிச் சுமப்பதில்லை, நம்மைப்போல. மொட்டுகள் மலர்வது வண்டினங்களுக்குத் தெரிந்துவிடும்தானே.! அவளை நான் உணர்வதும் அதுபோலத்தான். வண்டினங்களின் பசிதான் மலர்களில் தேன் உண்பதெனில், அதில் காமம் ஏது? காதல்தான் ஏது? மலர்கள் உணவுதானெனில் அவளை நான் மலரோடு பொருத்திப் பார்ப்பது தவறல்லவா? காம உணர்வு மனிதனை மட்டும் எல்லா நேரத்திலும் ஆட்கொள்வது ஏன்? மனிதன் ஆடைகொண்டு தேகத்தை மறைக்கவேண்டியதும் அதனால்தான் தோன்றியதாம். பருவம் வந்ததும் நம் மூளையில் எப்போதுமே காமச் சுரபிகள் சுரந்துகொண்டேதான் இருக்கின்றன. பசி, தூக்கம் மறந்தும் காமத்தில் திளைத்திருக்க நம்மால் முடிகிறது. காமத்தை மறைக்கும் ஆடையை நெய்வதென்பது மனிதனால் முடியாத ஒன்றாய் இருக்கிறது. உலகில் இருக்கும் அனைத்தும் நமக்காகத்தான் என அபகரித்த மனிதனால், சக மனிதனை அபகரிக்க முடியவில்லை. பசிக்கு உணவு கிடைப்பதுபோல காமப்பசியை எளிதில் தீர்த்துக்கொள்ள முடியாது தவிக்கிறான். பலம்கொண்ட வர்க்கம், பலம் குறைந்த வர்க்கத்தை அடிமையாக்கக் கற்றுக்கொண்டது. இருவரும் ஒருவருக்கொருவர் காமப் பசியைப் பகிர்ந்துகொள்ள இந்த ஆண்டான் அடிமை உறவு கைகொடுக்கவில்லை. காமம் என்னும் கட்டில் முற்களாலும் பாறைகளாலும் செய்யப்பட்டிருந்தன. வலியும் வேதனையும்தான் புணர்வு தருமெனில் அதை ஏன் மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டே இருக்கிறான்? இவை அனைத்திற்கும் பதில் தேடும் முயற்சிதான் காதல். காதல் எனப்படுவது.. காதல் என்பது ஓர் கற்பனை ஒழுங்குவாதம். புணர்தலையும் புணர்வுச் சிந்தனையையும் மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றவே காதல் என்ற ஒன்றை நம்பவேண்டியிருக்கிறது. காதலும் கடவுளும் ஒன்றுதான் போல. நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கு சில வரைமுறைகளை வகுத்துக்கொள்ளத்தான் கடவுள் நம்பிக்கை என்னும் கற்பனை ஒழுங்குவாதம் தேவைப்படுகிறது. அதுபோல, காமத்திற்குக் காதல் தேவைப்படுகிறது. இதோ கார்மேகங்களின் புணர்வில் முதல் துளி மண் சேர, மண் வாசம் மணக்கத் தொடங்கிவிட்டது. அவளை ஆரவாரமாய் வரவேற்கத் தொடங்கிவிட்டது. என் இதயமும் படபடக்க, சாரல் மழை என் மேனி நனைக்க, உள்ளுக்குள்ளும் நனையத் தொடங்குகிறேன். என் இமைகள் பட்டாம்பூச்சியாய்த் துடிக்கின்றன, அவளின் கடைக்கண் பார்வைக்காக. எளிய மொழியில் சொன்னால், காதல் என்பது உருட்டு மட்டுமே. உருட்டுவதாலேயே காதல் உயிர்வாழ்கிறது. எல்லாம் ஏவாள் கடித்துக் கொடுத்த பாதி ஆப்பிளின் விளைவு என்ற உருட்டைப்போலவே.

காட்டுக்குப் புலிகள்; நாட்டுக்குக் கவிஞர்கள்

காட்டுக்குப் புலிகள்; நாட்டுக்குக் கவிஞர்கள்

உலகக் கவிதை நாள் /உலக வன நாள் / மார்ச் 21 புலிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு வருடமும் ஜூலை 29 ஆம் தேதியைப் ‘புலிகள் தினமா’கக் கொண்டாடுகிறது உலகம். மற்ற விலங்குகளுக்கு இல்லாத முக்கியத்துவம் புலிகளுக்கு மட்டும் ஏன்? ஏனெனில் உலகச் சூழலியல் வட்டத்தின் மையமாகப் புலிகள் இருக்கின்றன. ஒரு காட்டில் புலிகள் இருந்தால் அவற்றுக்கு உணவான மானும் கால்நடைகளும் அங்கு இருக்கவேண்டும். மான் இருந்தால் மானுக்கு உணவான புல் மற்றும் தாவரங்கள் அங்கு இருக்க வேண்டும். தாவரங்கள் வளர வேண்டுமென்றால் அங்கு நீர்நிலைகள் இருக்க வேண்டும். ஒரு காட்டில் நீர்நிலைகள் இருக்கின்றன என்றால் அங்கு தொடர்ந்து மழை பொழிகிறது என்று பொருள். ஓர் இடத்தில் தொடர்ந்து மழை பொழிகிறது என்றால் அங்கு வனச் சூழலும் , வானலாவிய உயர்ந்த மலைகளும் இருக்கின்றன என்று பொருள். இப்படி வளமான ஒரு சூழலுக்கு அடுத்தாற் போல்தான்அதைச் சார்ந்து வாழும் ஊர்களும் இருக்க முடியும். இந்த உலகில் இருக்கிற ஒவ்வொரு மனிதரும் ஏன் ஒவ்வொரு உயிரும் அவற்றுக்குத் தேவையான உணவு, உடை ,உறைவிடம் ஆகியவற்றோடு நிம்மதியோடு வாழ இந்த சூழலியல் சங்கிலி சமநிலையோடு இருந்தாக வேண்டியது அவசியம். அதைப் பாதுகாக்கிற மையப் புள்ளியாக புலிகள் இருப்பதனால்தான் புலிகளுக்கு முக்கியத்துவமும் புலிகள் தினக் கொண்டாட்டமும். காட்டுக்குப் புலிகள் எப்படி அவசியமோ அப்படித்தான் நாட்டுக்குக் கவிஞர்களும். கவிஞர்கள் இயற்கையின் அழகுகளைப் பாடுகிறவர்களாகவும், சமுதாயச் சமநிலையை நேசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஓடும் நதிகளும், உயர்ந்த மலைகளும், பூத்துக் குலுங்கும் செடிகொடிகளும், வான் நோக்கி வளரும் மரங்களும், துள்ளி ஓடும் மான்களும், துதிக்கை உயர்த்தும் யானைகளும், கர்ஜனை புரியும் சிங்கங்களும்,பாடும் பறவைகளும், பட்டாம்பூச்சிகளும், தட்டான்களும், புல் பூண்டுகளும், புழு பூச்சிகளும் அவ்வளவு ஏன் சிறு கூழாங்கற்கள் கூடஅவர்கள் கண்களுக்கு அற்புதங்களாகவும் அதிசயங்களாகவும் தெரிகின்றன. அவற்றைத் தங்கள் கவிதைகளில் அழகியலோடு பாடி வைக்கிறார்கள். மேலும் அவர்கள் உலகின் ஆதாரமான அறத்தைப் பாடுகிறார்கள். நீதியைத் தங்கள் கவிதைகளில் போற்றி வழிபடுகிறார்கள். அநீதிக்கு எதிரான குரலை எழுப்புகிறார்கள். கனிம வளங்களுக்காக ஒரு மலை உடைக்கப்படுகிறது என்றால், மணல் கொள்ளைக்காகஒரு நதியின் சுரண்டப்படுகிறது என்றால், மரங்களுக்காக ஒரு வனம் மொட்டையடிக்கப்படுகிறது என்றால் அவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புகிற முதல் மனிதனாகக் கவிஞன் இருக்கிறான். அவற்றைத் தன் சொந்தச் சொத்தாகவே அவன் நினைக்கிறான். அது மட்டுமல்ல..சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுகிறவர்களின் குரலாக அவன் இருக்கிறான். கண்ணீரைத் தவிர வேறு எந்த ஆயுதத்தையும் ஏந்த முடியாதவர்களுக்காகத் தன் சொற்களை ஆயுதமாக ஏந்துகிறான். விவசாயம் அழிக்கப்படும்போதுஉழவர்களின் குரலாக மட்டுமல்ல…. எதிர்காலச் சந்ததியினருக்காக அவன் அறச்சீற்றம் கொள்கிறான். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் மலிந்து வரும் சூழலில் அவர்களின் சார்பாக அவன் கொதித்தெழுகிறான். வருங்காலத் தலைமுறைகளுக்காக வாதாடும் வழக்கறிஞன் அவன். சூரியனுக்குக் கீழே இருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்திக்கிற சிந்தனையாளன் அவன். அவை ஒன்றோடு ஒன்று கொண்டிருக்கும் இயைபை உணர்ந்து அவை ஒவ்வொன்றையும் பாதுகாக்கும் காவலனாகத் தன்னைத் தானே நியமித்துக் கொள்கிறான். அவை மீறப்படும்போது நீதிபதியாகவும் மாறி வாழ்வியல் சட்டங்களை வகுக்கிறான். அவை அற நூல்களாகி காலத்தின் கல்வெட்டுகளாக நிலைக்கின்றன. ஆகவேதான் “பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்” என்றான் நம் பாட்டன் மகாகவி பாரதியும். ஒரு கவிஞன் எழுதும் அழகியல் பாடல்கள் அவற்றை வாசிப்பவர்களின் இதயங்களில் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன. ஆகவேதான் கவிஞன் வாழ்கின்ற நாடுவளமான பண்பட்ட சமுதாயமாக போற்றப்படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைப் பாரம்பரியத்துடன் தொடரும் ஒரு சமுதாயமாக தமிழகம் இருந்து வருகிறது. அதுதான் அதன் வரலாற்றுப் பெருமை. அந்தச் சங்கிலி இன்றும் தொடர்கிறது. ஆங்கில வழிக் கல்வி எனும் மொழிக் கொலையினையும் தாண்டி இந்தச் சங்கிலி உயிர்ப்புடன் தொடர்கிறது. ஆரம்ப நிலைகளில் கவிதை எழுதும் ஒரு கவிஞன் கூட மொழியைப் பாதுகாக்கிறவன் என்ற முறையில் போற்றப்பட வேண்டியவனே. ‘உலகக் கவிதை நாள்’ கொண்டாடப்படும் (மார்ச் 21) இன்று ‘உலக வன நாளா’கவும் கொண்டாடப்படுவது எவ்வளவு பொருத்தம்! worldpoetryday internatonaldayofforests

அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்?

அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்?

தமிழக அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்காக வானவில் மன்றம் என்ற புதிய முயற்சியை தமிழக அரசு இந்த ஆண்டு உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் 13210 அரசுப்பள்ளிகளில் இத்திட்டத்தைத் தொடங்கிவைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் அரசு ஆதி திராவிடர் நலப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது.  வானவில் மன்றம் என்பது அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களின்மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு வரும்படியாக அவர்களைத் தயார்படுத்தும் ஒரு புதிய முயற்சி என்ற செய்தி நிலவிவருகின்றது. அதனை நாம் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையைத் தூண்டுவது கல்விதருவதன் ஒரு பகுதியே. ஆனால் இந்தத் திட்டம் புதிது அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இது  ஒன்றிய அரசுத் திட்டத்தின் வழியாக நிதி ஒதுக்கப்படக்கூடிய ஒரு  திட்டம்தான். பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள STEM (Science Technology Engineering and Mathematics) என்ற திட்டமே புதிய பெயரில் மீண்டும் வருகிறது. இதே திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு பள்ளிகளுக்கும் அதற்கான கருவிப்பெட்டிகள் (KIT) வழங்கிய நடைமுறை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்தது. அப்போது தன்னார்வலர்கள் என்றோ தொண்டு நிறுவனங்கள் என்றோ பள்ளிக்குள் எவரும் ஊடுருவவில்லை. ஆனால் தற்போதைய வானவில் மன்றம் திட்டத்தில், வெளியிலிருந்து கார்ப்பொரேட் கல்வி நிறுவனங்களை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துவந்து நுழைக்கும் வேலையை பிராதானமாகச் செய்கின்றனர் அதிகாரிகள்.  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குனரான சுதன் ஐஏஎஸ் அவர்கள் இதற்கான சுற்றறிக்கையை மாநிலம் முழுவதிலும் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அரசுப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம்  செயல்படுத்தப்படப் போவதாகவும் இதற்காக சிறந்த நிபுணர்கள் வந்து செயல்முறைகளைச் செய்துகாட்டுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். யார் அந்தச் சிறந்த நிபுணர்கள்?  பள்ளிக்குள்  அறிவியலைக் கற்று உயர்கல்வி பயின்று தேர்வு எழுதி ஆசிரியராக வருபவர்களிடம் இந்தத் திறன் இல்லையா என்று நாம் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். சிறந்த நிபுணர்கள் என்ற அடையாளத்துடன் பள்ளிகளுக்கு உள்ளே நுழைபவர்கள் கார்ப்பொரேட்டுகள் என்பதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த நிறுவனங்கள் அனைத்துமே நிதி பெற்றுக்கொண்டு பணியாற்றும் கார்ப்பரேட் அமைப்புகள். இந்த அமைப்புகளில் பயிற்சி பெற்றுள்ள ஊழியர்கள்தான் (தன்னார்வலர்கள் என்பது தவறு) சிறப்புப் கருத்தாளர்களாம். இந்த அமைப்புகளின் லோகோக்களைத் தாங்கித்தான் வானவில் மன்றங்களின் செயல்பாடுகளை வடிவமைத்துள்ளனர். இவர்களைத் தேர்வுசெய்ய கல்வித்துறையினருக்கு வழிகாட்டுவது யார் என்ற கேள்வியை நாம் எழுப்புவதே எழுவதேயில்லை. திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு, கார்ப்பொரேட்டுகளை பள்ளிக்கல்வியில் நுழைக்கும் முறைக்குப் பெயர் என்ன? கல்வித்துறையில் பணியாற்றும்   இளங்கலை முதுகலை பயின்ற திறமையான ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அறிவியல் மற்றும் கணக்குப் பாடங்களைக் கற்றுத் தேர்ந்தவர்களைக் கொண்டதுதான் தமிழக பள்ளிக்கல்வித் துறை. 12000 ஆசிரியர்கள் தாமாகவே முன்வந்து இத்திட்டத்திற்கு ஆலோசனை வழங்கியதாகவும் செய்திக்குறிப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. அப்படியிருக்க ஆசிரியர்களைத் தயார்படுத்தும் பணியைச் செய்யாமல்  அவர்களிடம் உள்ள திறமையை மாணவர்களுக்குக் கடத்த நினைக்காமல், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத ஏராளமான பணிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, மறுபுறம் தன்னார்வலர்கள் என்ற பெயரில் பெருநிறுவனங்களைக் கொண்டு பள்ளிகளுக்குள் மாணவர்களிடையே பரிசோதனைகள் நடக்கும் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் உள்ளன. அங்கு ஆராய்ச்சிப் படிப்பு முடித்த பேராசிரியர்கள் இருக்கின்றனர். கல்வி மாவட்டந்தோறும் ஒன்றிய அளவில் அறிவியல் கணக்கு படித்த ஆசிரியர் பயிற்றுனர்கள் (BRT) ஏராளமாக இருக்கின்றனர். அவர்களை எல்லாம் புள்ளிவிவரக் கணக்குகளை எடுக்கவைத்துவிட்டு, பள்ளி ஆசிரியர்களையும் தகவல் சேகரிப்பு, புள்ளி விவரங்கள் சேகரிப்பு என திசைமாற்றி அனுப்பிவிட்டு கார்ப்பரேட்டுகளைப் பள்ளிக்குள் திட்டமிட்டு நுழைப்பதன் பின்னணி என்ன? அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் ஏற்படுத்துவதுதானே அறிவியல் ஆசிரியர்களின் பணி? அதை அவர்கள் செய்யட்டுமே? கணக்குப் பாடத்தைக் கற்பிப்பதுதானே கணக்கு ஆசிரியர்களின் வேலை? அதையெல்லாம் அவர்கள் செய்யட்டுமே? அதைவிடுத்து தன்னார்வலர்கள் ஏன் இந்த இடங்களுக்கு வரவேண்டும்? இதற்காக வருபவர்களுக்கு பயணப்படி உள்ளிட்ட தொகை நிச்சயமாக வழங்கப்படும். இதற்காக 1.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம்.  ஒவ்வொரு பள்ளிக்கும் முதல்கட்டமாக ரூபாய் 1200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறிவியல், கணிதப் பாடங்களில் சோதனைகள் செய்வதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து வாரந்தோறும் அந்தப் பாடத்தில் உள்ள தொடர்புடைய கருத்துக்களை விளக்குவதற்கான உபகரணங்களை வாங்குவதாகவும் அவற்றைப் பயன்படுத்தி சோதனைகளை விளக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். கற்பித்தல் பணியை ஆசிரியர்களிடம் விட்டுவிட்டு, எழுத்தர், கணக்கர், புள்ளிவிவரங்கள் சேகரிப்பவர், ஆதார் எண் இணைப்பவர் போன்ற பணிகளுக்கு இவர்களைப் போன்ற கார்ப்பொரேட் நிறுவங்களை அரசு பயன்படுத்தலாமே? நமக்கு எழக்கூடிய சில ஐயங்களை இங்கே பட்டியலிடுகிறோம். ஆகா குரு (Aha Guru) என்பது எந்த அமைப்பு? (நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் அமைப்பு இது என்பது வெளிப்படை) Parikshan, AID INDIA மற்றும் சுடர் அமைப்பு இவர்களெல்லாம் யார்?  எல்லோருமே கார்ப்பரேட் அமைப்புகள். கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் இவை. இந்தக் குறிப்பிட்ட அமைப்புகளை இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்த அரசு யாரிடம் ஆலோசனை கேட்டது? எந்த அடிப்படையில் இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது? இந்த நிறுவனங்கள் பள்ளிகளுக்கு அனுப்புகின்றவர்கள் அறிவியல் மற்றும் கணக்குத் துறையில் பெற்றுள்ள நிபுணத்துவம் என்ன? தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் (Tamilnadu Science and Technology Centres), ‌‌‌கோளரங்குகள் போன்ற அரசு  அறிவியல் நிறுவனங்கள் இருக்கின்றனவே! அவர்களை ஏன் இந்தத் திட்டங்களில் ஈடுபடுத்தவில்லை? சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், கோவை, திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அறிவியல் மையங்கள் இந்த வானவில் திட்டச்செயல்பாட்டில் ஈடுபடுத்தப்படாதது ஏன்? இந்த அரசு நிறுவனங்களின் லோகோக்கள் இல்லை வானவில் மன்றத் திட்ட அறிவிப்புகளில் இல்லை. ஆனால் கல்வி வியாபாரக் கார்ப்பொரேட்டுகளின் லோகோக்கள்தான் வானவில் மன்றம் செயல்திட்டங்களின் முகப்பில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அறிவியல் இயக்கம் என்ற அமைப்பு அரசுப் பள்ளிகளுடன் நல்ல புரிதலையும் இணக்கத்தையும் பின்பற்றி அறிவியல் மனப்பான்மையைக் கொண்டுசேர்க்கும் விதமாகப் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. அதில் ஆயிரக்கணக்கான உண்மைத் தன்னார்வலர்கள் இயங்கி வருகின்றனர். நூற்றுக்கணக்கான பரிசோதனை முயற்சிகளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பல பத்தாண்டுகளாக அந்த அமைப்பினர் செய்துவருகின்றனர். அதைப்போன்ற அமைப்புடன் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பயிற்சிபெற்று வானவில் மன்றங்களை நிதிச்சுமையின்றிச் செயல்படுத்தலாம். இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கும் நிதியைப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம். இத்திட்டம் மாநில அரசால் மேற்கொள்ளப்படுகிறது எனில் இதற்கான நிதி மாநில அரசால் வழங்கப்படுகிறதா? முதல்வர் உருவாக்கிய திட்டம் எனில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுமா? அல்லது அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே இந்தத் திட்டமா? அரசுப்பள்ளிகளில் கல்வி வியாபார நிறுவங்களை உள்ளே நுழைத்து, அந்த நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களை இழுக்கத் தூண்டில் போடவும் அதற்கான புள்ளிவிவரங்களை அந்த நிறுவனங்களுக்கு வழங்கவும் அரசே வாசல் திறந்து வைக்கிறதா? இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? என்ற கேள்விகளையும் முன்வைக்கிறோம். ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் தனியார் கல்வி வியாபாரிகளை நுழைக்கும் பள்ளிக்கல்வித்துறையின் இந்தப் போக்கிற்கு திராவிட மாடல் ஆட்சி தரப்போகும் விளக்கம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா?

அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா?

மனிதர்களை அடிமைப்படுத்தி, சந்தையில் அவர்களை நிறுத்தி விற்பனை செய்த வரலாறுகளைப் படித்திருக்கிறோம். கிளர்ந்தெழுந்த அடிமைகள் கொடூரமாக ஒடுக்கப்பட்ட கதைகளைப் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட அடிமை வணிகங்கள் இல்லாததாக இன்றைய உலகம் மாறிவிட்டது என்று நிம்மதியாகப் பெருமைப்படுகிறோம். ஆனால் உண்மையில் அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா? நவீன காலத்து அடிமைமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பு பதிவு செய்திருக்கிறது. பாலியல் தொழில், கொத்தடிமை, கட்டாயப்படுத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் முறை இவற்றில் குறைந்தது 4 கோடிப் பேர் சிக்கியிருக்கிறார்கள். நாடுவிட்டு நாடு மட்டுமல்லாமல் ஒரு நாட்டுக்குள்ளேயே மனிதக் கடத்தல் நடக்கிறது. இவற்றுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதில் பல லட்சம் கோடி ரூபாய் புழங்குகிறது. உலக அளவில் சுமார் 12.16 லட்சம் கோடி ரூபாய் லாபம் குவிக்கப்படுகிறது. உழைப்புச் சுரண்டல், பாலியல் வன்மம் மட்டுமின்றி இவர்கள் அனுபவிக்கிற உடல் நோய்கள் உள்ளிட்ட துயரங்களும் அவமதிப்புகளும் ஏராளம். மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையாக இருக்கக்கூடிய பழங்குடியினர், பூர்வ குடியினர், ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட, வஞ்சகங்களுக்கு எளிதில் இரையாகக்கூடிய மக்கள் நவீன அடிமை வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள், பெண்கள், மனநலம் குன்றியோர், உடல் ஊனங்களுக்கு உள்ளானோர் போன்ற எதிர்த்துநிற்க முடியாதவர்கள் வலுக்கட்டாயமாகவோ, பணத்தைக் காட்டியோ, சூழ்ச்சி செய்தோ கடத்தப்படுகிறார்கள். குழந்தைகளில் நான்குக்கு ஒரு குழந்தை வீதம் கடத்தப்படுகிற தகவல் நெஞ்சை உறைய வைக்கிறது. என்ன செய்யப் போகிறோம்? அடிமைத்தனத்தை ஒழிப்பது என்பது அ, டி, மை என்ற மூன்று எழுத்துக்களை அழிப்பதல்ல. நவீன அடிமைத்தனத்தை ஒழிக்கச் செயல்படுவோம். அவ்வாறு செயல்படுகிறவர்களோடு சேர்ந்தாவது நிற்போம். இந்தத் தகவல்களை சக மனிதர்களுக்குச் சொல்வோம். நவீன பொருளாதார அடியாட்களான அரசாங்கங்களின் கொள்கைகளும் பாராமுகங்களும் இதற்கொரு காரணம் என்பதையும் சேர்த்தே சொல்வோம். அழகுக்கு அடிமை, அன்புக்கு அடிமை, கவிதைக்கு அடிமை, காதலுக்கு அடிமை… என்பதாகவெல்லாம் உணர்ச்சி மிகுந்து பேசுவோமே, அதை நிறுத்திக்கொள்வோம். எதற்காகவும் யாரும் யாருக்கும் அடிமையாவதை மறுப்போம். இன்று (டிசம்பர் 2) உலக அடிமைத்தன ஒழிப்பு தினம்.

கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு

கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு

வ. உ. சி. நினைவுநாளில் அவர் புகழ் பாடும் கவிதை நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனகடலிலும் நீசுதந்திரக் கொடிபறக்கவிட்டாய் கப்பல் ஓட்டிய உன் கம்பீரம்இன்னும் பட்டொளி வீசிப்பறக்கிறது பாரெங்கும் நீதிமன்றத்தில் மட்டும்வழக்காடி வாழ்ந்திருந்தால்கப்பல் கப்பலாய் நீபொருள் ஈட்டியிருக்கலாம் மக்கள் மன்றம் வந்துஉரிமைக் குரல் கொடுத்ததால்நீதிமன்றம் கொண்டுபோய்நிறுத்தினார்கள் உன்னை ஆம்…வழக்கறிஞராகப் போகவேண்டியநீதிமன்றத்துக்குகுற்றவாளியாகக் கொண்டு போய்நிறுத்தியது காலம் கண்ணை மூடிக்கொண்டுதண்டனையும் கொடுத்தாள்அன்று கோலோச்சியஆங்கில நீதி தேவதை நீதி தேவதையா?அநீதி தேவதையானஅவள் வழங்கியதோஇரட்டை தீவாந்திரம் அத்தோடு மூழ்கியதுஉன் வாழ்க்கைக் கப்பல் முள்ளை முள்ளால்தான்எடுக்க வேண்டும் என்பதால்கப்பலில் வந்த வெள்ளையனைகப்பலோட்டியே கப்பலேற்றலாம்என நீ நினைத்தாய் சட்டம் படித்த உன் நெஞ்சில்இருந்தது நீதிஅதனால் உன் முள் கூடதராசு முள்ளாகத்தான் இருந்தது வணிகம் செய்ய வந்துஆட்சியைப் பிடித்தவெள்ளையன் வைத்திருந்ததோவிஷம் தடவிய முள் ஆயுள் தண்டனை விதித்துசிறையில் அடைத்துஉன் சிறகுகளைப் பிய்த்து எறிந்ததுஆங்கில ஏகாதிபத்தியம் செக்கிழுத்து செக்கிழுத்துசிறையிலேயே நீசிதைந்து போனாய் விடுதலை அடைந்து வெளியே வந்ததும்உன் துடுப்புகளையும்உடைத்துப் போட்டதுஎமது அலட்சியம் ஏற்கனவே உடல் தேய்ந்திருந்த நீஅதனால் உள்ளமும்ஓய்ந்து போனாய் அடியோடு வீழ்ந்துபோனதுஅரசோடு போட்டி போட்ட உன்அகண்ட பொருளாதாரம் அன்றாட வாழ்க்கைக்கேதள்ளாடும் நிலைக்குப் போனதுஉன் வாழ்வாதாரம் பின் உயிர் வாழ்ந்த நாளெல்லாம்கொடும் வெயிலானதுகடன்காரர்கள் பட்டியலேஉன் உயிலானது கடிதம் எழுதி எழுதியேகாலாவதி ஆனதுன் காலம் கணக்குப் பார்த்தாதீர்க்க முடியும் உன் தியாகத்தை? கடலில் கரைத்த பெருங்காயமானதுஉன் தியாகம்கண்ணீராலும் ஆறாத பெருங்காயமானதுஎங்கள் இயலாமை காந்தி கணக்கானதுஉன் வாழ்வு மன்னிக்கச் சொல்லிஉன் முன் மன்றாடுவதன்றிவேறொன்று தோன்றவில்லை எனக்கு இவ்வளவு நெருக்கடிகளுக்கிடையேஎப்படி உனக்குள்அப்படி ஒரு இலக்கிய தாகம்? கடலையே குடித்துவிடுவதுபோல்எழுதித் தள்ளியிருக்கிறாய்! பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தாய்ஆங்கில நூல்களை மொழிபெயர்த்தாய்கவிதை எழுதினாய்உரை எழுதினாய்சிறையிலும் எழுதினாய் எங்கள் பாரதியின் தோழனேஉன்னை எழுதாமல் இன்று நான்வேறு யாரை எழுதிஎன்ன பயன்? கப்பலால் கவிழ்ந்தகலங்கரை விளக்கேஒன்றை மட்டும் யாரும்மறைக்கமுடியாது எங்கே எப்போதுகப்பலைப் பார்த்தாலும்உன் ஞாபகம்தான்எங்கள் நெஞ்சில் எழுகிறது ஏனெனில்தேசத்தின் முதல் சுதந்திரக் கப்பல்உன்னுடையதல்லவா?அதில் பட்டொளி வீசிப் பறந்ததுஇந்த மண்ணின் மானம் அல்லவா? அதிகாரத்துக்கு அஞ்சாமல்நெஞ்சு நிமிர்த்திய வீரனேசட்டத்தால் போராடிய சூரனே சதி காரத்தால் நீ வீழ்ந்திருந்தாலும்இந்திய விடுதலை வரலாற்றில்என்றென்றும் ஒளிவீசும் அத்தியாயம்உன் சரித்திரம் காலக் கடலில் கரைந்து போகும்எத்தனையோ மனித வாழ்க்கையில்என்றென்றும் கரையாமல் வாழும்கப்பல் ஓட்டிய உன் கம்பீரம் இந்தியப் பெருங்கடல் அலைகள்உன் பெயரை ஓயாமல்பாடிக்கொண்டே இருக்கும் எங்கள் நெஞ்சின் அலைகளும்.

எழுவர் விடுதலையும் விதை போட்டவரும்

எழுவர் விடுதலையும் விதை போட்டவரும்

ராஜீவ் கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த எழுவரும் இன்று (11.11.2022) உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பு போன்றவற்றில் நம்மைப் பின்னோக்கி இழுக்கும் அதே நீதிமன்றம், இப்படியான தீர்ப்புகளையும் அவ்வப்போது வழங்குவதே நமக்கான ஆறுதலாகவும் நீதிமன்றத்தின் மீதான பிடிப்பாகவும் இன்னும் நீடிக்கிறது. எழுவர் விடுதலையின் கிரெடிட்டை எடுத்துக்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், தனி நபர்கள் இப்படி ஏராளனமானோர் வரிசையில் இருக்கிறார்கள். ஆனாலும்கூட, இந்த விடுதலைக்கு – தீர்ப்புக்கு ஒட்டுமொத்தமாக எவரொருவரும் உரிமை கோர முடியாது. இருப்பினும், எந்த ஒன்றுக்கும் தொடக்கப்புள்ளி என்ற ஒன்று வேண்டுமல்லவா? ஒரு கட்டடம் கட்ட முதல் கல், ஒரு கோலம் போட முதல் புள்ளி, ஒரு காடு வளர்க்க முதல் விதை.. இந்த வரிசையில், எழுவர் விடுதலைக்கு முதல் விதை போட்டவர் யார்? ஒருவேளை,  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்குத் தூக்கு உறுதி செய்யப்படாமல், அவர்களின் கருணை மனு ஜனாதிபதியால் ஏற்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டிருந்தால், இந்த ஏழு பேரும் வாழ்நாள் முழுக்க சிறையிலே கிடந்துக்கூட மரணம் எய்தியிருக்கக்கூடும். ஆனால், கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மூவரையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்ட நிலையில், மீண்டும் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டி, ராம் ஜெத்மலானியை அழைத்துவந்து வாதாடி, அவர்கள் தூக்கிலிடப்படுவதைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் நீண்ட நெடிய சட்டப் போராட்டங்கள் நடத்தி, உச்சநீதிமன்றத்தின் வழியே நிரந்தரமாக அவர்களின் தூக்குக் கயிற்றை அறுத்தெறிந்தவர் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ. மூவரின் தூக்கை ரத்து செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அவர்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்யும் முடிவையும் மாநில அரசே எடுக்கலாம் என்றும் கூறியது. அந்தத் தீர்ப்புதான்  பேரறிவாளன் முதலான எழுவரின் விடுதலைக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது. அந்தத் தீர்ப்பை முன்வைத்துதான் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன; அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பியது. அம்முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்ததால்தான், இன்றைய தீர்ப்பில், ஆளுநர் தன் கடமையைச் செய்யத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதை முன்வைத்தே இன்று அறுவர் விடுதலை பெற்றுள்ளனர். இதில் இன்னொரு கூடுதல் மகிழ்ச்சியாக, மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் விதமாக, சட்டமன்றமும் அமைச்சரவையும் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல், சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்ளும் ஆளுநர்களுக்கும் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு, மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி மட்டுமன்று. எதிர்காலத்தில் எந்த ஒரு ஆளுநரும் இவ்வாறு நடந்துகொண்டால், அதை முறியடிக்க உதவும் வழிகாட்டுதலாகவும் அமைந்துள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சட்டப் போராட்டங்களுமே இன்றைய விடுதலையைச் சாத்தியப்படுத்தியுள்ளன. நளினியின் தாயார் தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டதைப் போல, இந்த விடுதலையானது ஒரு கூட்டு முயற்சியே. அந்த முயற்சியில் மேலே குறிப்பிட்டதைப்போல, பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தலைவர்கள், வழக்கறிஞர்கள், பொருளாதார ரீதியாகவும் தார்மீக அடிப்படையிலும் உதவியவர்கள் என்று அனைவரின் பங்களிப்பும் உள்ளது. 30 ஆண்டுகளாக சிறையில் வாடியவர்கள் விடுதலை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மூவர் தூக்கை எதிர்த்து மீண்டும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறியதன் வழியே, ‘இன்றைய மகிழ்ச்சிக்கான விதையை அன்றே ஊன்றியவர் வைகோ’ என்பதை யாரும் மறுத்துவிட முடியாது என்பதே உண்மை, தேவர் மகன் திரைப்படத்தில், “நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ; பிறகு உன் மகன் சாப்பிடுவான், அதன்பிறகு அவன் மகன் சாப்பிடுவான். ஆனா விதை.. நான் போட்டது” என்று சொல்வாரே அதைப் போல.   

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் – பிருந்தா சாரதி

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் – பிருந்தா சாரதி

சாகித்திய அகாடமியும் சென்னை லயோலா கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து, எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை நவம்பர் 4, 5 தேதிகளில் மழைக்கு ஊடாகவும் சிறப்பாக நடத்தின. அகிலனின் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் அவரது பன்முகப் படைப்புகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. அவற்றுள், திரையில் அகிலனின் நாவல்கள் என்ற அமர்வில் கலந்துகொண்ட கவிஞரும் திரை இயக்குனருமான பிருந்தா சாரதி ஆற்றிய உரை மிக முக்கியத்துவம் வாய்ந்தது.   ஒரு எழுத்தாளன் என்பவன் வாசக மனங்களில் கனவுகளை விதைக்கிறவன். அதுவும் பெருந்திரளான மக்களால் வாசிக்கப்படும் ஓர் எழுத்தாளனால் பகிர்ந்துகொள்ளப்படும் கருத்துக்கள், சமூக மனதில் ஆழமாக விதைக்கப்பட்டு பெரும் விளைச்சலை வழங்குகின்றன. இங்கே நேற்றைய அமர்வில் பேசிய எழுத்தாளர் திலகவதி அவர்கள், தான் மாணவப் பருவத்தில் படித்த அகிலனுடைய பெண் கதாபாத்திரங்கள் தன்னை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்று கூறினார். அதேபோல, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கைது செய்யப்பட்ட சமயத்தில், தான் அவரைச் சந்தித்தபோது, அகிலனின் ‘பொன்மலர்’ நாவலை வாங்கி வருமாறு கேட்டதைக் குறிப்பிட்டார். பிறகு கலைஞரை மருத்துவமனையில் சந்தித்தபோதும் தலைமாட்டில் அந்நூலைக் கண்டதாகக் கூறினார். ஒரு முதலமைச்சர் முதல் சிற்றூரில், கிராமத்தில் படிக்கிற மாணவி வரை அகிலனின் எழுத்துக்களால் கவரப்பட்டு இருக்கிறார்கள். எழுத்தாளர் அகிலன் அவர்கள், ஏறக்குறைய 20 நாவல்கள், 200 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள்,  சிறுவர் கதைகள், நாடகம், வாழ்க்கை வரலாறு, திரைக்கதை என, தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். சாதாரண மனிதர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு, எதார்த்தமான கதைகளை, மானுடத்தின் மாபெரும் லட்சியமான அன்பை முன்வைத்து காந்திய வழியில் தன் கதைகளை எழுதியவர் அகிலன். எளிய மொழி அவரது மொழி. கதை கூறும் முறையிலும் பெரிய சிக்கல் எதுவும் அற்றவை அவரது கதைகள். ஆனந்த விகடன், கலைமகள், கல்கி முதலான பெரும் பத்திரிகைகளில் அவர் கதைகள் வெளிவந்தபோது, பலரும் வாசித்து அதன்மூலம் தங்கள் வாழ்க்கையையே சீரமைத்துக் கொள்ளும் உந்துவிசை பெற்றதைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவருடைய கதைகளின் நாயகர்கள், நாயகிகள் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். ஏன், அவர் பெயரையே குழந்தைகளுக்குச் சூட்டியவர்களும் உண்டு. அந்த அளவிற்கு ஆக்கபூர்வமான விளைவுகளை சமூகத்தில் உருவாக்கியவர் அவர். அகிலனின் கதைகள் ஒரு காலகட்டத்தின் முகம் என்றும் கூறலாம். சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமான 50 ஆண்டுகளின் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களைத் தன் கதைகளில் எழுதினார் அகிலன். பெண்ணுரிமை, பொருளாதாரச் சமத்துவம்,  போலித்தனங்களைத் தோலுரித்து உண்மையைத் தேடுதல் போன்ற கருப்பொருட்களை காந்திய நெறியில் எழுதியவர். தமிழில் முதன்முதலாக ஞானபீட விருது பெற்றவர். சாகித்திய அகாடமி, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பெற்றவர். கவிஞர்களை, எழுத்தாளர்களைக் கொண்டாடுகிற சமூகம்தான் வளர்ச்சி பெறுகிற ஒரு சமூகமாக முன்னேற முடியும் என்பதை நாம் எல்லோருமே ஏற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன். ஆகவே எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டை, குறைந்தபட்சம் 100 இடங்களிலாவது கொண்டாட வேண்டும் என்று இக்கருத்தரங்கின் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன். சாகித்ய அகாடமி தொடங்கி வைத்து விட்டது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு ஊரிலும் இருக்கிற இலக்கிய அமைப்புகள் அகிலனின் படைப்புகள் குறித்துக் கூட்டங்கள் நடத்தி விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இளைய மனங்களில் நல்ல நெறிகளையும் நம்பிக்கையையும் விதைப்பதற்கு இது உதவியாக இருக்கும் என்பது என் கருத்து. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

கரையற்ற நீர் – நூல் அறிமுகம்

கரையற்ற நீர் – நூல் அறிமுகம்

காதலையும் சமூக அக்கறையையும் கரைகளாகக் கொண்ட தீராநதி கவிஞர் சூரியதாஸின் ‘கரையற்ற நீர்’. இரண்டு பகுதிகளை கொண்ட இக்கவிதைத தொகுப்பின் முதல் பகுதி சமூகத்திற்கானதும் ஒவ்வொரு மனிதனுக்குமான உணர்வுக் குவியலும். இரண்டாம் பகுதி தனக்கே தனக்கெனக் கொள்ளும் காதலைச் சொல்லும் குட்டிக் குட்டி நட்சத்திரக் கவிதைகள். சமப்ர்பணத்தில் ‘கவிதைப் ப்ரியர்களுக்கும்’ எனக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. இக்கவிதைத் தொகுப்பை எல்லோருக்குமானதாகவே கொள்ளலாம். உதிரி மல்லிகையைச் சுமந்துகொண்டு அந்தத் தெருவின் வீடுகளையெல்லாம் வாசத்தால் கோர்க்கும் பூக்காரியின் வாசமிகு கவிதையில் ஆரம்பமாகும் கரையற்ற நீரின் பயணம், ‘மலம் தின்ன வைக்கும் சாமியை விட சோறுண்ண வைக்கும் பூச்சாண்டி மேல்’ எனச் செல்வது நெகிழ்வு. ‘கோடிட்ட இடத்தின் மீதுநீட்டிப் படுத்திருக்கிறான் நியூட்டன்ஒரே ஒரு மதிப்பெண்ணுக்காக’என்ற கவிதை இன்றைய கல்வி முறை கேள்வி பதில்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைச் சொல்கிறது. கவிஞரின் அரசியல் சாடல் அலாதியானது. அக்கவிதைகளில் உடனிருக்கும் பகடி சமூக அக்கறை கொண்டது. எடுத்துக்காட்டிற்கு சில கவிதைகள்: ‘யார் வந்தாலும் குரைத்து எச்சரித்து அனுப்புகிறதுதிருடன் உள்ளே படுத்திருக்கிறானென்றுஅமைச்சர் வீட்டு நாய்’ ‘தெய்வம் ஒளிந்து கொண்டதுசாமி கும்பிட வருகிறார்அமைச்சர்’ காதலியின் இதழ் புன்னகை இழைகளால் தூக்கணாங்குருவிக் கூடு கட்ட முற்படும் கவிஞர்,‘உன்னைப் பார்த்ததும் முதலில்ஆச்சர்யக்குறி இட்டுவிட்டேன்அப்புறம்தான் கவிதையே எழுத ஆரம்பித்தேன்’என்று குறிப்பிடும் மோகத்தில் வார்க்கப்பட்ட காதல் நம்மையும் மயக்கத்தான் செய்கிறது. ‘முதன்முதலாக நாம் சந்தித்தபொழுது பருகியமுதல் கோப்பை தேநீருக்குமது என்று பெயர்’போதை தரும் துளியிது. ‘தெய்வத்தை வாசலில் பார்த்தேன்தேவதையை வரவேற்கநீ கோவிலுக்கு வருகிறாய்’எனும் வரிகள் காதலிக்கான அதிகபட்ச ஆராதனை. யானையைப் பற்றியான ஒரு கவிதையை மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்திருப்பது ஒரு கவிஞருக்குச் செய்யும் ஆகச்சிறந்த மரியாதை. வாழ்த்துகள் மொழிபெயர்த்தவர்களுக்கும். இது கரையற்ற நீர் மட்டுமல்ல; கறையற்ற நீரும் கூட. இதில் யாவரும் மூழ்கித் திளைக்கலாம். முகிழ்ந்து முத்தெடுக்கலாம். சமூகம் ஒதுக்காது காதல் செதுக்கிக் கவிதை படைத்த கவிஞருக்கு வாழ்த்துகள். வாசுகி தேவராஜ்

கல்விப் பாதுகாப்பு நாள் – வித்யாசாகரர் பிறந்தநாள் – AISEC தமிழ்நாடு

கல்விப் பாதுகாப்பு நாள் – வித்யாசாகரர் பிறந்தநாள் – AISEC தமிழ்நாடு

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பிறந்த நாளான செப்டம்பர் 26 , அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டி- தமிழ்நாடு சார்பாகக் கல்வி பாதுகாப்பு தினமாக செப்டம்பர் 25 அன்று கொண்டாடப்பட்டது. அத்தருணத்தில் இரண்டு நிகழ்வுகள் பிரதானமாக இடம் பெற்றன. நிகழ்வில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரிப் பேராசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக பேராசிரியர் அமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் (AUT, TNGCTA)பலரும் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களும் (AIFETO) கலந்து கொண்டு சிறப்பித்தனர். அது மட்டுமன்றி தேசியக் கல்விக் கொள்கை வரைவு வந்தபோதும் (2019), அடுத்து கொள்கை விளக்கக் குறிப்பு வந்த போதும் தமிழில் மொழிபெயர்ப்புப் பணியை தன்னார்வக் குழுவினருடன் முன்னெடுத்த சிறார் எழுத்தாளர் விழியன் கலந்து கொண்டார். இந்திய விவசாயிகள் போராட்டம் நடந்தபோது, அதற்காக தமிழகத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்த தோழர் பாலகிருஷ்ணன் (சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு ) தோழர் மேரி , அகில இந்திய விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மேனாள் தமிழ்நாடு தலைவர் தோழர் ரங்கசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் அறம் இணைய இதழின் ஆசிரியர் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், சுவடு இதழின் நிர்வாக ஆசிரியர் அஹமது மன்சூர், தமிழர் எழுச்சிக்குரல் ஆசிரியர் நாஞ்சில் நாட்டான், சமூக செயற்பாட்டாளர் சௌந்திரராஜன், ஊடகவியலாளர் நெய்வேலி பாலு, அறிவியல் விஞ்ஞானி வெங்கடேசன் , அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு கிளை உறுப்பினர்கள் திரு சுதாகர், திரு லேனா குமார், திரு மருதநாயகம், திரு கோமல் தமிழமுதன், திரு சதாசிவம் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திலகர் நிகழ்வை ஒருங்கிணைத்தார். சென்னையில் எழும்பூர் மியூசியம் எதிரில்‌ அமைந்துள்ள இக்சா (ICSA) அரங்கத்தில் செப்டம்பர் 25, ஞாயிறன்று, மாலை 4 -7 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது . ஈஸ்வர சந்திர வித்யாசாகரர் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு முதல் நிகழ்வாக, மேற்கு வங்காளத்தில் தோன்றி, இந்திய மறுமலர்ச்சியின் முன்னோடியாகத் திகழ்ந்த மாமனிதர் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு நிகழ்ந்தது. சுவடு பதிப்பகத்தை நடத்தி வருபவரும் சமூக மாற்றத்தை முன்வைத்து வாசிப்பு இயக்கத்தை பரவலாக்குவதன் பொருட்டு, நுழைபுலம் என்ற அமைப்பை நடத்தி வருபவருமான தோழர் நல்லு ஆர் லிங்கம் அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார்.மிகச் சிறப்பாக பணியாற்றி இக்காலத்தின் தேவையை கணக்கில் கொண்டு இப்புத்தகம் கொண்டுவரப்பட்டுள்ளது. பேரா மருதநாயகம் அவர்கள் நூலை வெளியிட ஆசிரியர் கோமல் தமிழமுதன் பெற்றுக் கொண்டார்.அதோடு கோமல் தமிழமுதன் அவர்கள் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் குறித்து சிறப்பானதொரு சிற்றுரையையும் நிகழ்த்தினார். உரையானது ஏன் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என வந்திருந்தவர்களுக்கு எழுச்சியூட்டும்படி இருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்வாகக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதன் பொருண்மையானது அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் விதமாக அமைந்தது. கல்வியில் பெரும் அழிவினை விளைவிக்கின்ற தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் தாக்கம் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக அறிவியல்பூர்வக் கல்வியின் தேவை குறித்து மிகப்பெரிய கருத்துரையாடல் நடைபெற்றது. சு.உமாமகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர், அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு (A3), உறுப்பினர், AISEC தமிழ்நாடு கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்ற சு.உமாமகேஸ்வரி அவர்கள் தனது தலைமை உரையில் , தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வியில் தற்போது நடைமுறையில் பின்பற்றப்படும் திட்டங்கள் பலவும் (இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உட்பட பல திட்டங்கள்) எவ்வாறு தேசியக் கல்விக் கொள்கையின் சரத்துகளாக இருக்கின்றன, ஆசிரியர்கள் நியமனமின்மை , உட்கட்டமைப்பு வசதியின்மை, ஓராசிரியர் பள்ளிகளில் உள்ள பிரச்சனைகள் என தனது அனுபவத்தின் வழியாக கல்வி சார்ந்த சிக்கல்கள் குறித்துப் பேசினார். உயர்கல்வியில் நான் முதல்வன் திட்டம் உட்பட அனைத்தும் தேசிய கல்வி கொள்கையின் வடிவங்களே. ஆனால் முதல்வர் தனது கனவுத் திட்டம் என்று கூறி வருகிறார். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை கல்விப் புரட்சி என்கிறார். கல்வித் துறை அவலத்தில் சிக்கி சீரழிகிறது எனப் பகிர்ந்தார். திரு V.அண்ணாமலைAIFETO பொதுச்செயலாளர் தனது ஐம்பது ஆண்டுகால அனுபவத்தில் கல்வி எத்தனையோ மாற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால் தற்போது தமிழக அரசின் கல்விக் கொள்கை ஆசிரியர்களைப் பணியாற்ற விடாமல் எமிஸ் (EMIS) உள்ளிட்ட கற்பித்தல் அல்லாத பணிகளை செய்ய வைத்து உளவியல் ரீதியாக ஆசிரியர்களை பாதிக்க வைத்து வருகிறது. கல்வித்துறையினாது பொறுப்பு ஆணையர்கள் கைகளில் சென்றுள்ளது ஒரு முக்கியமான பிரச்சனை. அவர்கள் அன்றாடம் ஒரு அறிக்கையும் ஆணையும் அனுப்பிக் கொண்டே இருக்கின்றனர். கொரோனா காலத்தில் ‌‌சுமார் ஐந்து லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். ஆனால் ஆசிரியர்கள் நியமனம் என்பதே இதுவரை இல்லை. புதிய தேசிய கல்வி கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டே அதில் உள்ள எல்லா திட்டங்களையும் திமுக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. பாடநூல் அச்சடித்து வகுப்பறைகளில் பயன்படுத்தப்படாமலேயே வீணாகிறது. தீவுத்திடலில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் முதல்வர் தங்களுக்கு ஏதேனும் நல்ல திட்டங்களை அறிவிப்பார் எனக் காத்திருந்து ஏமாற்றத்தால் கண்ணீர் விட்டுக் சென்றனர். மாணவர்கள் தவறு செய்தாலும் ஆசிரியர்களின் மீதே நடவடிக்கை, மண்டல ஆய்வு என பாடம் நடத்தவிடாமல் அதிகாரிகள் செய்யும் போக்கு தமிழக அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமோ என அச்சமாக உள்ளது. பள்ளிகளை இணைக்கும் வேலைகளைச் செய்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் எந்தப் பள்ளியிலும் இல்லை ஆனால் மாதிரிப் பள்ளிகளை அமைக்க முடிவு செய்துள்ளனர். வகுப்புக்கு ஓராசிரியர் இல்லாமல் மூன்றாம் வகுப்பு வரை பாடநூலை நடத்த விடாமல் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கட்டாயப்படுத்துவது உள்பட தேசிய கல்வி கொள்கை தான் பின்பற்றப்படுகிறது. ஆனால் மக்களிடம் நாங்கள் தமிழ்நாட்டில் அதனை உள்நுழைய விடமாட்டோம் என பொய்பேசி வருகின்றனர்.இதற்கு நாம் முடிவு கட்ட வேண்டும் என்று உரைத்தார். பேராசிரியர் ஜெ.காந்திரராஜ்தலைவர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT) தொடர்ந்து பேச வந்த பேராசிரியர் ஜெ.காந்திரராஜ் தனது அனுபவத்தையே முன்வைத்து உரையாட ஆரம்பித்தார். நான் கல்லூரியில் சேர்ந்து படித்ததற்குக் காரணம் இட ஒதுக்கீடு தான். ஆனால் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் இட ஒதுக்கீடு என்ற பதமே ஓரிடத்தில் கூட இடம்பெறவில்லை. அப்படியென்றால் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே கல்வி கிடைக்க வேண்டும் என்று புதிய தேசியக் கல்விக் கொள்கை உறுதியாகத் திட்டமிட்டுள்ளது. நமக்கென்று ஒரு கல்விக் கொள்கை வகுக்க வேண்டும் என அனைவரும் கேட்டதன் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 14 பேர் அடங்கிய கல்விக் குழுவை தமிழக அரசு நியமித்தாலும் குழு உறுப்பினர்கள் யாவரும் அமர்ந்து பணியாற்றுவதற்கென ஒரு இடத்தைக் கூட தரவில்லை என்பதையும் அக்குழு பெயரளவுக்கு செயல்பட்டு வருகிறது என்பதையும் அனைவர் முன்பும் இந்த அரங்கத்தில் பதிவு செய்கிறேன் என்றார். உயர்கல்வி முழுவதும் தேசிய கல்வி கொள்கை ஊடுருவி வருகிறது. திறன் மேம்பாடு என்ற பெயரில் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலமாக உயர்கல்விப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழிவகை செய்து கொடுத்திருக்கிறது. இது தேசிய கல்விக் கொள்கையில் உள்ள கல்வி கிரெடிட் பேங்க் முறையை அடிப்படையாக க் கொண்டு (ABC) நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திறன் மேம்பாடு கல்வி உயர்திறன்கள் அன்றி சாதாரண திறன்களையே மையப்படுத்தி கொண்டுவரப்பட்டுள்ளது ஆன்லைன் கல்வி வழியாக கொண்டு வரப்படும் இது கல்வி தரத்தை மிகவும் சீரழிக்கவே விளைகிறது. மாணவர்கள் எண்ணிக்கை அளவின் அடிப்படையில் கல்லூரிகளை மூடவும் திட்டமிட்டு வருகின்றனர். 45000 எண்ணிக்கையுள்ள கல்லூரிகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில், அவற்றை சில நூறு பல்கலைக்கழகங்களாக அல்லது தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர். உயர்கல்வி இன்னும் சில வருடங்களில் எட்டாக்கனியாகிட வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. கல்வியை முழுமையாக வியாபாரமயமாக்கிடவே இக்கல்வி கொள்கை வழிகாட்டுகிறது.மத்திய அரசின் வழியில் மாநில அரசு தேசிய கொங்கு கொள்கையின் பல அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருவதால் ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பையும் உருக்குலையும் சூழல் உருவாகியுள்ளது. இவற்றின் அபாயத்திலிருந்து தமிழ்நாட்டு மாணவர்கள் காக்கப்பட வேண்டுமெனில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார். அதோடு, தான் சார்ந்த அமைப்புகள் அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியுடன் இணைந்து களத்தில் நின்று போராடத் தயாராக இருக்கிறோம் என்றும் பதிவு செய்தார். பேராசிரியர் P.சிவக்குமார்மேனாள் முதல்வர் , குடியாத்தம் கலைக் கல்லூரி தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் பாதகங்கள் இன்று புதியதாக உருவானவை அல்ல. ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 1986இல் கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை அன்றே விமர்சித்து கூட்டங்கள் நடத்தினோம் என்று தனது மாணவர் பருவம் முதல் இன்று வரை கல்விக் கொள்கை குறித்தான பல பாதகங்களை முன்வைத்தார். உயர்கல்வியின் வியாபாரமயமாக்கல், அரசு உதவி பெறும் தனியார் நிறுவனக் கட்டணக்கொள்ளை எனத் தோலுரித்ததுடன் சுயநிதிக் கல்லூரிகளின் நிலை குறித்து விரிவாகப் பேசினார். சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களின் நிலை எவ்வளவு பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது என்றும் புரிய வைத்தார். 35 ஆண்டுகளுக்கு முன்பே அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி தேசிய கல்விக் கொள்கை 1986ஐ எதிர்த்து கொண்டு வந்த புத்தகத்தை அவையோருக்குக் காண்பித்தார். மேலும்பல புத்தகத் தரவுகளுடன் இன்றைய தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்தை எடுத்துக்காட்டினார். ஆகவே ஒன்றிணைந்து இந்த கல்விக் கொள்கையின் அபாயங்களைக் களைய முற்படவேண்டும் என்று பகிர்ந்தார். பேராசிரியர் T.வீரமணிமாநிலத்தலைவர் TNGCTA தேசிய கல்விக் கொள்கை வரைவு வந்த காலத்தில் இருந்து பேசி வருகிறோம். ஆனால் மிக சாமர்த்தியமாக மத்திய அரசின் போக்குக்கு ஏற்ப மாநில அரசு எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்றோம், ஆனால் ஒரு பக்கம் அதற்கு தயாராகிக் கொண்டே இருக்கிறோம். ‘நான் முதல்வன்’ திட்டம் வழியாக திறன் மேம்பாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எதையாவது நிறுத்த முடிகிறதா? இவற்றின் பாதிப்பு நமக்கு இப்போது தெரியாது. ஆனால் ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் அனைத்தையும் இழந்திருப்போம். நம் மாணவர்கள் அத்தனை பேரும் மாடு மேய்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். காரணம் நுழைவுத்தேர்வில் தேறி வருவதற்கான வாய்ப்புகள்

4, 5 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் தமிழக அரசு

4, 5 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் தமிழக அரசு

புதிய தேசிய கல்விக்கொள்கை 2020-ஐக் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறிவரும் தமிழ்நாடு அரசு, 4, 5 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வையே மாநில அளவில் நடத்த உத்தரவிட்டுள்ளது. திராவிட மாடல் அரசு என்றும் மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவோம் என்றும் சொல்லிக்கொண்டே, புதிய கல்விக்கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் இந்த நடவடிக்கை, கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆசிரியர் கூட்டணி, இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வாசகர்களின் பார்வைக்கு: காலாண்டு தேர்வினையே பொதுத் தேர்வாக்கிக்கொண்டு 4,5 வகுப்புகளுக்கு மாநில அளவில் ஒரே வினாத்தாள் தயாரித்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்புகின்ற பள்ளிக்கல்வித்துறையின் மாடல், புதிய கல்விக் கொள்கை மாடல் அல்லவா?.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய உடனடி நடவடிக்கைக்காக தொகுத்து அனுப்பியுள்ளோம்..! AIFETO 23.09.2022 தமிழக ஆசிரியர் கூட்டணிஅரசு அறிந்தேற்பு எண் :36/2001. புதிய கல்விக் கொள்கையினை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம்!.. மாற்றாக மாநிலக் கல்விக் கொள்கையினை வகுப்பதற்கு குழுவினை நியமித்துள்ளோம், என்பது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கொள்கை வழி அறிவிப்பாகும். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைத்து வருகிறார். ஆனால் பள்ளிக்கல்வித்துறையை நிர்வகித்து வரும் ஐஏஎஸ் அதிகாரிகள் புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறார்கள். இது அரசுக்கு தெரியுமா?.. தெரியாதா?.. என்று நமக்குத் தெரியவில்லை. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் 3,5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பது இடம்பெற்றுள்ளது. அவ்வாறு பொதுத் தேர்வு நடத்தினால் தேர்வு பயத்தினால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகும். இடைநின்ற மாணவர்கள் குடும்பத் தொழிலில் ஈடுபடுவார்கள், அல்லது குடும்பத்தினரைக் காப்பாற்ற வேறு எங்காவது கூலி வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சாதாரண ஏழை எளிய மக்களின் பிள்ளைகளின் கல்வியறிவு பெறுவதை இந்த பொதுத்தேர்வு பாழ்படுத்திவிடும். நவீன குலக்கல்வித் திட்டத்தை இந்திய அரசு நாகரிகமாக புகுத்தி வருகிறது என்ற எச்சரிக்கையினை தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். ஆனால் தமிழ் நாட்டில் நடைபெறுவது என்ன?.. எண்ணும் எழுத்தும் பயிலும் 1,2,3 வகுப்புகளுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரையில் செயலி வழியாக வளரறி மதிப்பீடு தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த தேர்வில் தமிழ் , ஆங்கிலம், கணக்கு பாடங்களுக்கு பத்து கேள்விகள் கேட்கப்படுகின்றது. மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல், இரண்டு பாடங்களுக்கான தேர்வு வினாத்தாளும் அதற்குள்ளேயே உள்ளடக்கி வருகிறதாம். தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டு உள்ள புத்தகத்தை முழுவதுமாக அப்புறப்படுத்தி விட்டார்கள். 1,2,3 வகுப்புகளில் 35…, 40… வரை உள்ள மாணவர்களை வைத்து ஓர் ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்துகிறார். அவரும் இந்த செயலி வழியாகத்தான் தேர்வு நடத்தவேண்டும். முதலில் தமிழ் பாடத்துக்கான தேர்வினை நடத்துகிறார். பிறகு ஆங்கில பாடத்திற்கான தேர்வினை நடத்துகிறார். பிறகு கணித பாடத்திற்கான தேர்வினை நடத்துகிறார். பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு மறுபடியும் அதே போல செயலி மூலம் தேர்வு நடத்தி வருகிறார். இந்த திட்டத்தில் மாணவர்கள் எழுதுவதற்கும், படிப்பதற்கும் வாய்ப்பில்லாமல் போகிறது. இந்த மாணவர்கள் நான்காம் வகுப்பு வருகின்ற பொழுது எப்படி புத்தக பயிற்சியில்லாமல் எழுதவும், படிக்கவும் செய்வார்கள்?.. இவர்களுக்கு செயல்பாடுகள் வழியாகவே பாடங்கள் நடத்துவதும், செயலி வழியாகவே தேர்வுகள் நடத்துகின்ற போது பெற்றோர்கள் எழுத்துப் பயிற்சிக்கு வாய்ப்பில்லாமல் போகிறது என்று அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். இதனால் அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் மனநிலை பெற்றோர்களுக்கு இருக்கவே இருக்காது. எப்பாடுபட்டாவது சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை சேர்ப்பதற்கு முனைப்பு காட்டுகின்ற சூழ்நிலையை இந்த தேர்வு முறை ஏற்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு மெட்ரிக் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள் நடத்தி வரும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மறைமுகமான ஒப்புதல் அளித்து வருகிறார்கள் என்ற ஐயம் எழத்தானே செய்கிறது. சுயநிதி பள்ளிகளிலும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் படித்துக்கொண்டிருந்த எங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் கொண்டு வந்து சேர்த்தோமே?.. பாடப் புத்தகத்தின் வழியாக பாடத்தினை நடத்தாமல், எழுத்துப் பயிற்சி இல்லாமல் PRE KG, LKG, UKG வகுப்பு பாடத்தினை மூன்றாம் வகுப்பு வரை நடத்தினால் எங்களின் பிள்ளைகள் கல்வி எதிர்காலம் என்னாவது?.. என்று பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழுவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் அதிருப்தியினைத் தெரிவித்து வருகிறார்கள். எண்ணும் எழுத்தும் செயலியில் மாணவர்களுக்கான அந்த மதிப்பீடுகளின் கேள்வித்தரத்தினை ஒப்பிட்டுப் பார்க்கிற பொழுது ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கக்கூடிய PreKG மாணவர்களின் தேர்வு தரமும், இரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு LKG வகுப்புகள் தேர்வு தரமும் மூன்றாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு UKG வகுப்பு தேர்வு தரமாகத்தான் இந்த கேள்விகள் அமைந்துள்ளன. அடுத்து 4, 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு பொதுத் தேர்வு நடைபெறும். மாநில அளவில் SCERT யில் இருந்து ஒரே மாதிரியாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டு குறுந்தகடு வழியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ளார்கள். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வினாத்தாள்களை அவர்களுக்கு வேண்டிய அச்சகத்தில் அச்சடித்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு முதல்நாள் அனுப்பி வைப்பார்கள். வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் இருந்து பள்ளி தலைமையாசிரியர்கள் வினாத்தாள் கட்டணமாக 10 ரூபாய், 15 ரூபாய் ஒவ்வொரு மாணவனுக்கும் வினாத்தாளுக்குரிய கட்டணத்தை உரிய முறையில் வசூல் செய்து அவர்களிடம் கொடுத்துவிட்டு, தேர்வு நடைபெறும் காலை 8.00 மணிக்கு 60 கிலோ மீட்டர் தூரமாக இருந்தாலும் பயணம் செய்து வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சென்று வினாத்தாள்களை பெற்று வர வேண்டும். அதற்கு பிறகு பள்ளிக்கு எடுத்து வந்து ஆசிரியர் குழு முன்னிலையில் அந்த வினாக்கட்டுகளைப் பிரித்து மாணவர்களுக்கு வழங்கி தேர்வு வைக்க வேண்டும். தேர்வு முடிந்தவுடன் அந்த வினாத்தாள்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அடுத்தடுத்த ஐந்து தேர்வுகளுக்கும் வட்டாரக் கல்வி அலுவலகம் சென்று வினாத்தாட்களை பெற்று வர வேண்டுமாம்!.. புதிய கல்விக் கொள்கையில் கூட ஆண்டுக்கு ஒருமுறைதான் பொதுத்தேர்வு நடத்துகிறார்கள். இந்த மாதிரி கெடுபிடிகள் எல்லாம் இல்லை. TRB, UPSC, TNPSC GROUP-1, NEET தேர்வுகளை எல்லாம் விஞ்சிய வகையில் காலாண்டு பொதுத்தேர்வினை SCERT மூலமாக நடத்துகிறார்கள். 120 பிள்ளைகளுக்கு 1முதல் 5 வகுப்பு வரை ஒரே ஒரு ஆசிரியர்தான் பல இடங்களில் பாடம் நடத்திவருகிறார். தற்காலிக ஆசிரியர் நியமனங்களில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள் நினைவிடங்களாக காட்சி அளித்து வருகின்றன. 80% பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவே தமிழ்நாட்டில் இயங்கி வரும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது. அதைப்பற்றியெல்லாம் கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காமல் செயல்படுவது, SCERT யா?.. இல்லை தேர்வு நடத்தும் TNPSC துறையா?.. பள்ளிக் கல்வி ஆணையர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?.. புதிய கல்விக் கொள்கையினை அமல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறாரா?.. இலவச கட்டாய கல்வி, சீருடை, புத்தகம், நோட்டுகள், மதிய உணவு, புத்தகப் பைகள், காலணிகள், மிதிவண்டிகள், லேப்டாப் இவையெல்லாம் கொடுக்கின்ற அரசு இந்த வினாத்தாள்களை தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க முன் வரக்கூடாதா?.. மாணவர்களுக்கு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை மனம் குளிர வரவேற்று மகிழும் பெற்றோர்கள் வினாத்தாட்களுக்கு 15 ரூபாய் கொடுக்கும் போது இரண்டையும் சிந்தித்து பார்க்க மாட்டார்களா?.. இந்த ஆண்டு கொரானா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் படிக்காமலேயே அடுத்த வகுப்புகளில் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் இந்த மாணவர்களுக்கு இவ்வளவு கெடுபிடிகளுடன் தேர்வு நடத்தி என்ன செய்யப் போகிறார்கள் ?.. அடுத்து 6,7,8 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு மாதிரியாக வினாத்தாளினுடைய விலையினை பதிவிட்டு வருகிறார்கள். அண்மைக் காலமாக ஆசிரியர்களே வினாத்தாட்களை தயாரித்து தேர்வு நடத்தி வந்தனர். அதேபோல் நீண்ட காலமாக தனியார் நிறுவங்கள் மூலம் வினாத்தாள்களை பெற்று வந்து மாணவர்களுக்கு தேர்வினை நடத்தி வந்தார்கள். தரமான தாளில் அச்சடித்து 7,8 ரூபாய்களில் விடைக்குறிப்புடன், கொடுத்து வந்தார்கள். அவர்களிடம் வினாத்தாள்களைப் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று இந்த அரசு நினைத்திருந்தால் மாணவர்களுக்கு இலவசமாக வினாத்தாள்களை வழங்கி இருக்க வேண்டும். அதுதான் திராவிட மாடல் கல்விக் கொள்கையின் சிறப்பம்சமாக அமைந்திருக்கும். இனிவரும் காலங்களில் தொடக்கக் கல்விக்கு பொதுத்தேர்வு என்ற நடைமுறை மாநில அளவில் வினாத்தாள் தயாரித்து அந்த வினாத்தாள்களில் பெற்று வழங்வதில் கெடுபிடி, நடத்துவதில் கெடுபிடி என அனைத்து நடைமுறைகளும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு தடுத்து நிறுத்த முடியாத சூழல் ஏற்படுமாயின் கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்களை இணைத்து தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டு வரும் நவீன குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து மக்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்க்கும் முனைப்பு இயக்கத்தினை நடத்துவோம்!.. எண்ணும் எழுத்தும் கல்வி முறையினையினைப் போன்று இல்லாமல், முற்றிலும் பாட புத்தகத்தை கொண்டு கற்பித்தல் பணியாற்றுவதற்கு ஆசிரியர்களை அனுமதியுங்கள்!. புள்ளி விபரங்களில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து முழுநேரம் ஆசிரியர்களை கற்றல் கற்பித்தலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு அளியுங்கள்!.. புத்தகங்கள் இல்லாமல் எண்ணும் எழுத்தும் முறையுமே நீடித்தால் கல்வி வளர்ச்சி நாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாடு கல்விச் சீரழிவு நாளினை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்போம்!. என்பதை உணர வேண்டிய சுயபரிசோதனைக்கு நம்மை ஆட்படுத்தி கொள்வோம்!.. மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதற்கு ஒரு குழு அமைத்ததைப் போல தேர்வினை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு ஒரு ஆய்வுக் குழுவினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும்,தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கல்வித் துறையின் பொறுப்பு வகிக்கக்கூடிய முதன்மைச் செயலாளர்-1 அவர்களும் அமைத்திட வேண்டுமாய் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும், ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் சார்பிலும் பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்!.. அரசுப் பள்ளிகளின், மாணவர்களின் கல்வி நலனில் எப்போதும் அக்கறை காட்டிவரும்…. WE REJECT NEP2020 SAVE OUR CHILDREN SAVE OUR EDUCATION SAVE OUR TAMILNADU வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,

கற்பைப் பிடித்துத் தொங்குகிறதா இலக்கிய உலகம்?

கற்பைப் பிடித்துத் தொங்குகிறதா இலக்கிய உலகம்?

தமிழினி இணையத்தில் எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய இசைவு என்ற சிறுகதை நேற்றிலிருந்து (05.09.2022) இலக்கிய இணைய உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. சரி, அப்படி என்னதான் பஞ்சாயத்தைக் கிளப்பி வைத்திருக்கிறார் என்று பார்க்கலாம் என்று கருதி, அந்தப் பக்கத்திற்குச் சென்று கதையை வாசித்தேன். மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே உறவு உண்டாகி, மருமகனின் பிள்ளைக்குத் தாயாகிவிடுகிறார் மாமியார். தொடக்கத்தில் இருவரையும் கண்டிக்கும் மகள், கதையின் இறுதிக்காட்சியில் இந்த உறவு தந்தைக்குத் தெரியாமல் மறைப்பதை, அந்த உறவுக்கான இசைவு எனக் குறிப்பால் உணர்த்துவதாகக் கதை முடிகிறது. இணைய வெளியில் பலரும் விமர்சித்ததைப்போல, நகர்ப்புற நாகரிகத்துக்குத் தம்மை வரித்துக்கொண்டு, மேட்டிமைச் சிந்தனைக்குள் குடியேறிவிட்ட தற்காலச் சமூகத்துக்கும், மனதின் ஒரு மூலையில் கதைக்களம் குறித்த தெளிவு இருந்தாலும், எங்கே நாம் இதை எதிர்க்கவில்லையென்றால் பெரும்பான்மைச் சமூகம் நம்மையும் ஒரு பாலியல் குற்றவாளி ஆக்கிவிடுமோ என்ற பதற்றத்தில் சிக்கிக்கொள்வோருக்கும் நிச்சயமாக இந்தக் கதை ஒரு அதிர்ச்சியாகவோ ஆபாசமாகவோ தோன்றுவதில் வியப்பில்லை. அண்மையில் வெளியான, வீட்ல விசேஷம் திரைப்படத்தில், திருமண வயதில் வீட்டில் மகன் இருக்க, குழந்தை பெற்றுக்கொண்ட தாயின் மனப் போராட்டம், அந்தக் குடும்பத்திலேயே நிலவிய குழப்பம், இறுதியில் உண்டான தெளிவு ஆகியவை நகைச்சுவை இழையோட, நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. அந்தப் படமும் முற்போக்காளர்களால் சிலாகித்துப் பேசப்பட்டது. முக்கியமாக, அந்தப் படத்தில் பாட்டி கதாபாத்திரம் பேசும் ஒரு வசனம் முக்கியமானது. ‘எத்தனை வயது கடந்தாலும் கணவன் மனைவிக்குள் நெருக்கம் இருந்தால்தானே குழந்தை பிறக்கும்?! 50-களைக் கடந்த பின்னும் பிறக்கும் இந்தக் குழந்தை, அந்தக் கணவன் மனைவிக்குள் இன்னமும் நீடிக்கும் காதலின் சாட்சி’ என்பதாக இருக்கும். வீட்ல விசேஷம் திரைப்படத்துக்கும் இசைவு சிறுகதைக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு, பிறந்த அந்தக் குழந்தைக்குத் தந்தை யார்  என்பதுதான். இசைவு கதையில் மாமியாரின் குழந்தைக்கு மருமகன் தந்தை ஆகிறான். அதாவது, தன் மகனுக்கு, தானே மைத்துனனும் ஆகிறான். இந்த உறவுச் சிக்கல்தான் கதையில் விழுந்துள்ள சிக்கலான முடிச்சு. இந்த முடிச்சுதான் எல்லோரையும் பதற்றம் கொள்ள வைக்கிறது. அந்தப் பதற்றமே இந்தக் கதையை, மஞ்சள் பத்திரிக்கை கதை, சரோஜாதேவி கதை என்றெல்லாம் வகைப்படுத்தச் செய்கிறது. மணி பார்க்கும் கடிகாரம்கூட ஊருக்கு ஒன்றோ இரண்டோ மட்டுமே இருக்கும் அளவினான குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த, மிகவும் எளிமையான மக்களோடு வாழ்ந்து பழகிய என்னைப் போன்றோருக்கு இப்படியான கதைகள், வெறும் கதைகள் மட்டுமே. அதாவது, இவ்வாறான நிகழ்வுகளை எங்கள் இளம் வயதிலேயே கதைகளாகவும் செய்திகளாகவும் கேட்டும், தவிர்க்க இயலாத சில தருணங்களில் கண்டும் கடந்தும் வந்திருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியும் சினிமாவும் மிகமிக அரிதாக இருந்த காலத்தில் வாழ்ந்த எளிய மக்கள் இத்தகைய நிகழ்வுகளை மிக எளிதாகப் புறந்தள்ளி, கடந்து சென்று, வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்ளாமல் வாழ்ந்த மக்களைக் கண்டு வளர்ந்தவர்கள் நாங்கள். மாமியார் மருமகன் மட்டுமல்ல, மாமனார் மருமகள், கணவன் இருக்கும்போதே தன்னுடைய மனம் கவர்ந்த தன்னைவிட வயதில் இளைய ஆடவனைத் தன் வீட்டோடு வைத்துக்கொண்ட பெண், மனைவியின் நண்பன் வந்தால், அந்த நண்பனின் வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவன், நெருங்கிய உறவுக்குள்ளேயே இரண்டு வெவ்வேறு வீடுகளில் இரட்டைப் பிள்ளைகளைப் போல அச்சு அசலான பிள்ளைகள், இப்படிப்பட்ட மனிதர்களைச் சந்தித்துவிட்டு, அவர்களோடு பழகிவிட்டுத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ஒரு திரைப்படத்தில், ஊருக்குள் திருவிழா நடக்கும் நேரத்தில், மைக் செட்காரர் வீட்டுக்குள் ஊர்ப் பெரிய மனிதர் நுழைந்து, ‘சுத்தபத்தமாதானே இருக்க?’ என்று கேட்பாரே, அதற்கு இணையான காட்சியை கண்ணால் கண்ட சாட்சிகள் நானும் என் தம்பியும். அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும்கூட, இரண்டு பெண்கள் மீதும், தான் சமமான காதல் வைத்திருப்பதாக அந்த நாயகன் சொல்வார். அதனால் இரண்டு பெண்களுமே அவரைத் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். ஆனால், ஒரே மேடையில் இரண்டு பெண்களை ஒரு ஆண் திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஒரு அழைப்பிதழும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அது பலராலும் ஏளனமும் செய்யப்பட்டது. தமிழ் சினிமா ஊதி ஊதிப் பெருக்குவதற்கு முன்பாக இந்தச் சமூகம் கற்பைக் குறித்து அத்தனை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தாலி மற்றும் கற்பு குறித்தான சென்ட்டிமென்ட்களைக் காட்டுத் தீயினும் வேகமாகப் பரப்பிய பெருமை சினிமாவையே சாரும். அதன் நீட்சியைத் தற்போது தொலைக்காட்சித் தொடர்கள் செய்து வருகின்றன என்று கருதுகிறேன். அண்மையில் ஒருவர், ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மீது ஈர்ப்பு வந்தால் அது மனநலக் கோளாறு என்று எழுதி இருந்தார். காதல் ஒரே ஒருவரிடம் மட்டும்தான் வரவேண்டும் என்ற சிந்தனையின் மறுபக்கம்தான் அது என்றுதான் அதை என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது. ஒரு மனநோயாளி தன்னை ஒருபோதும் மனநோயாளி என்று ஒப்புக்கொள்ள மாட்டார் என்று சொல்வதைப் போல, ஈர்ப்பு வந்தாலே மனநோயாளி என்றால், இங்கே ஏராளமான மனநோயாளிகள் தங்களை மறைத்துக்கொண்டு வாழ்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். உண்மையாகவே – நேர்மையாகவே – ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மீது ஈர்ப்பு வரவில்லை என்றால், அவர்கள் எங்கோ பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது கட்டுப்படுத்தப் பட்டிருக்கலாம் என்பது என்னுடைய கணிப்பு. இன்னும் சில இடங்களில், காமம் சார்ந்த செயல்களை விலங்குகளோடு ஒப்பிட்டு வசை பாடுவதும், அதற்கு முரணாக, கருவுற்று இருக்கும் பெண் விலங்கை ஆண் விலங்கு அணுகாது என்பதும் எனக்குள் சிரிப்பை உண்டாக்கும் நகைச்சுவைகளே அன்றி வேறல்ல. விலங்குகளுக்கு காமம் என்பது இனப்பெருக்கச் செயல்பாடு என்று மட்டுமே இங்கே வரையறுக்கப்படுகிறது. ஆனால், விலங்குகள் மனிதர்கள் கையில் அகப்படாதவரை அவற்றுக்குக் காமம் தோன்றிய உடனே வடிகாலும் கிடைத்துவிடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மனிதன் கையில் சிக்கிக்கொண்ட விலங்குகளுக்கு அவற்றின் இயல்பான காம உணர்வுக்கான வடிகால் மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. கண்ணகியைக் கற்புக்கரசி என்று சொல்லித்தானே மெரினாவில் சிலை வைத்துப் போற்றுகிறோம்? கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண்ணில் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று மேடை போட்டு முழங்குகிறோம்? கணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு மதுரையை எரித்த கண்ணகி, தன்னைத் தவிக்கவிட்டு வெளியேறிய கணவனுக்கும் தண்டனை தரவில்லை. அல்லது தானும் இன்னொரு துணை தேடிக்கொள்ளவில்லை. இன்சூரன்ஸ் துறையில் நீங்கள் இழப்பீடு கோரும்போது ‘விபத்துக்கான/ மரணத்துக்கான காரணம்’ – cause of accident/ death – என்வென்று ஆய்வு செய்வார்கள். உதாரணமாக, ஒரு வண்டியில் பிரேக் ஆயில் லீக் ஆகி, அதன் காரணமாக பிரேக் பிடிக்காமல் விபத்து நடந்தால், அது வண்டியின் பராமரிப்பில் கோளாறு என்ற காரணத்தால் இழப்பீடு நிராகரிக்கப்படும். ஆனால், மழையின் காரணமாக, சாலை சேறும் சகதியுமாக இருந்து வண்டி பிரேக் பிடிக்காமல் வழுக்கிச் சென்று விபத்து நேர்ந்தால் அது தங்கள் கட்டுப்பாடுக்குள் இல்லாத விபத்தாகக் கருதப்பட்டு இழப்பீடு வழங்கப்படும். அதேபோல, கோவலன் வறுமை நிலைக்கு வந்து மதுரைக்கு வந்ததற்கு அவனேதான் காரணம். இருந்தாலும் தண்டனை என்னவோ ஒட்டுமொத்த மதுரை மக்களுக்கும். ஆனால் நமக்கு முக்கியமானது என்னவோ, கணவன் கைவிட்டுப்போன பின்னும் அவனுக்காகவே காத்துக்கிடந்த அவளின் கற்பு நெறிதானே? இன்னமும் இந்தச் சமூகம் கற்பு எனும் கற்பிதத்தைத்தான் பிடித்துத் தொங்குகிறதா? அல்லது, மற்றவர்களுக்கு உற்ற துணை யார் என்பதை இந்தச் சமூகம்தான் தீர்மானிக்க விரும்புகிறதா? ஒழுக்கத்துக்கான அளவுகோலாகப் பெண்களின் உடலை மட்டுமே வைத்திருக்கவே இந்தச் சமூகம் விரும்புகிறதா? காமம் என்பதைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஒழுக்கசீலர் சான்றிதழ் வழங்கப்படுமா? காமத்தைக் கடந்து இந்தச் சமூகத்தில் நிலவும் பிற சிக்கல்கள் யாவும் உரிய தீர்வினை எட்டிவிட்டனவா? ஒரு பெண்ணுக்குத் தன்னுடைய உடல் மீதான உரிமையை இந்தச் சமூகம்தான் எப்போதும் தீர்மானிக்குமா? இப்படி ஏராளமான கேள்விகள் என் உள்ளத்தில் ஊற்றெடுத்தவண்ணம் இருக்கின்றன. எனக்குள் எழும் இன்னொரு முக்கியமான கேள்வி, இவர்களில் எத்தனை பேர் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தை வாசித்திருப்பார்கள் என்பதே. இந்தக் கதையிலும் அந்தப் பெண்ணுக்கு விருப்பமான ஆண், மருமகனைத் தவிர வேறு ஒருவராக இருந்திருப்பின் இந்தப் பதற்றம் உருவாகி இருக்காது என்றே நான் கருதுகிறேன். அதை முற்போக்குச் சிந்தனை என்றும்கூடச் சிலர் கொண்டாடி இருக்கக்கூடும். ஆனால் அந்தப் பெண்ணின் விருப்பத்தையோ அல்லது கதாசிரியர் விருப்பத்தையோ, விமர்சிப்பவர்கள் தீர்மானிக்க முடியாது அல்லவா? இதற்கும் ஒரு உதாரணம் சொல்கிறேன். தோழர் சி. ஞானபாரதி எழுதிய அவஸ்தை என்ற சிறுகதையின் ஒரு காட்சியில், வறுமையில் வாடும் ஒரு ஏழைப் பெண்ணின் வீட்டைக் குறித்த வர்ணனையில், வீட்டின் சமையலறையில் சடை சடையாக ஒட்டடை தொங்குவதாக எழுதி இருந்தார். அந்தக் கதையை வாசித்துவிட்டு நான் அவரோடு உரையாடுகையில், வறுமைக்கும் தூய்மைக்கும் தொடர்பு இல்லையே தோழர்; சிறிய வீடாக இருந்தாலும் அந்தப் பெண் வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ளலாம் அல்லவா? என்று கேட்டேன். அதற்கு ஞானபாரதி தோழர் சொன்ன பதில், “நீங்கள் பார்த்த வீடுகள் அவ்வாறு இருக்கலாம் தோழர். ஆனால், நான் பார்த்த பெண்ணின் வீடு எப்படி இருந்ததோ அதைத்தான் எழுதியுள்ளேன்” என்பதுதான். ஒருவேளை தோழர் இராசோ-வும் இதே பதிலைச் சொல்லக்கூடுமல்லவா? நல்லு இரா. லிங்கம் செப்டம்பர் 9, 2022

சாகாவரம் தேடு

சாகாவரம் தேடு

என் மனதுள் நுழையமுனைந்து முனைந்து என்னால்விரட்டப்படாமல்வாசலில் நிற்பவனே!! உனது அன்பின் ஆழம்மாவலி கங்கையின் நீளத்திலும்நீளமானதுஅறிவேன் நன்கு. என் விழிகளில் விழி நுழைத்துமுகம் புகழ்ந்துபருவத்தின் மீது புராணம் பாடிபாதச்சுவடுகளின் மீதுலவுகிறாய் என் செய்வேன்?உன் மீதுபரிதாபம் மட்டுமேபட முடிகிறது உலகம் நானென்கிறாய் – உலகவிந்தை நானென்கிறாய்கவிதைகளும் காட்சிகளும்அனைத்தின்பமும் நானென்கிறாய்எத்தனை பொய்!!! பகலின் இரவுகளில்நாடு கடத்தப்பட்டுகாடுகளின் சுதந்திரச் சிறைகளில்மனித இயந்திரங்களாய்இருநூறாண்டுகள் இருளுக்குள் உழலும் மக்கள்கூட்டத்திலிருந்துஎழுந்து வந்தவன் நீநினைவுகளை ஞாபகத்திற்கழை. எவனெவன் வாழ்வுக்கோ உதிரம் சிந்திஉழைத்து மரிக்கும்அறியாமைகளுக்குஉனை விட்டால் ஒளிப்பிழம்பு யார்? உலக விழிகளால்மறுதலிக்கப்பட்ட அந்த உலகம்உன்னிடம் எதையெதையோபார்த்திருக்கிறது!!! அதன்காய்ந்து வறண்டதொண்டைகளில்தாகம் ஏக்கம்பசி கனவு! விழிகளுக்கு மிக அருகாமையில்விழித்து நிற்கும்பொறுப்புகள் கடமைகள் துறந்துமேல் வர்க்க இளைஞனாய்வாலிபத்தைசல்லாபத்தி லிடுகிறாய். எத்தனைத் துயரேற்றாள்உன் தாய் உனை ஈன; உனை வளர்க்க??எத்தனை இடர் கடந்தார்உன் தந்தை நீ பள்ளி செல்ல??எத்தனை துன்பமுற்றமக்கள் கூட்டம் உன் மண்ணில்?? விருப்பமில்லா விடுமுறையில் உன்ஏழையூர் விரைகையில்அம் மலையக மனிதரின் விழிகளில்இல்லாமையும் இயலாமையும்இணைத்திசைக்கும்துயர கீதங்களைக்கேட்டிருக்கிறாயா? ஒழுகும் கூரைகளின் கீழ்உறக்கங்களை வழியவிட்டஇரவுகளின் அழுகையொலிகள்எட்டியிருக்கறதா உன் செவிகளுக்கு? பசுமை அடர்ந்த உயர்ந்த மண்ணில்தாழ்வுடைய வறண்டவாழ்வின் சுமைகளைத்தராசிலிட்டிருக்கிறாயா? இனத்தால் பொருளால்சாதியால் நிறத்தால்விலக்கப்பட்டவர்களுக்குவிடுதலைக்காய் முழங்கப்போகும்குரல் யாருடையது?? பரம்பரையைப் பரிசளித்து வளர்த்தமண்ணை மூழ்கடிக்கும்அதிகாரங்களுக்கெதிராய்நிமிர்வது யார்??விடைகாணா வினாக்கள்ஆயிரமிருக்க நீயோ…..வலிமையை இளமையைஎன் நடைபாதையெங்கும்பூக்கள் விரிக்கச் சிந்திக் கொண்டிருக்கிறாய் இளமையின் சுகிப்பைவியர்வையூரியகருப்பு மண்தந்த எழுத்துக்களால்அலங்காரப்படுத்துகிறாய். எப்போது அவர்களின்அழுகை தடுக்கும்ஆயுதம் செய்ய உன் அறிவைக்கருவாக்கப் போகிறாய்??? இங்கு உன்னையும் என்னையும்இணைத்த இப்பெரும்பல்கலைகழக மெனும்அறிவாலயம்மனிதர்களுக்கான மனிதர்களைஉரு செய்யவே உழைக்கிறது. இங்கு மனிதனாவது சாதரணம்!மனிதர்களுக்கான மனிதராவதேசாகாவரம். நீசாகாவரம் பெறுஅப்போதுஉன் காதல்மறுபரிசீலனைக்குட்படலாம்!! ஏனெனில்நான் நம் மண்ணையும் மக்களையுமேசிந்தித்துக் கொண்டிருக்கிறேன் எஸ்தர், மலையகம், இலங்கை

கரைசேராப் படகுகள் – 12

கரைசேராப் படகுகள் – 12

கோபாலண்ணன் கொடுத்த பேப்பரில் இருந்த பேரும் மகான் சொன்ன பேரும் ஒன்றாக இருந்தது. சுப்புடு ஐயர் ‘சுவாதி’ங்கற பெயரை எழுதிக் கொடுத்திருந்தார். அதைப் பார்த்ததும் செந்தாமரை கலங்கினார். ‘மகான் சொன்னது போல எனக்கு ஏதாவது கஷ்டம் வருமோ?’ன்னு மனசு கலங்கினார். செந்தாமரை முகம் மாறி, வெளிறிப்போய் நிற்பதைப் பார்த்ததும், “வில்லிபுத்தூர் ராசகோபுரமும்  கரிகாலனும் தோத்துதான் போவாங்க என் ராசா கம்பீரமா நீ நின்னா.. ஏன் ராசா கலங்கி நிக்கற?”ன்னு கேட்ட பட்டம்மாவுக்கு, “ஒன்னுமில்ல ஆத்தா, மயிலம் மலை கணக்கா கல்லாட்டம்தான் இருக்கேன்.. நீ சோலிய பாரு ஆத்தா” என்று பட்டம்மாவை விரட்டி விட்டார் செந்தாமரை. “விடுப்பா செந்தாமரை.. ஒன்னும் நடந்திடாது. ஐயனாரப்பன் துணையிருக்கான்; போப்பா, போய் விசேசத்த பாரு. நான் போய் பொழுது சாயறச்சே வர்றேன்”னு சொல்லிட்டு கோபாலண்ணன் கிளம்பினார். டவுன்ல வாங்கிவந்த காப்பை யாருக்கும் தெரியாமல் பொஞ்சாதிகிட்டேயும் ஆத்தாகிட்டேயும் காட்டினார் செந்தாமரை. அந்தக் காப்பைப் பாத்ததும், “காணாதத கண்டாளாம் கண்டாங்கி கட்டனவ; போகும்போது போச்சாம் பவுசத்துப் போய்”ன்னு புலம்ப ஆரம்பிச்சா பட்டம்மா. “மாமா.. என்ன விலையிருக்கும்?”னு கேட்ட மரகதத்திற்கு, “பவுனு 50 ரூவா.. இந்தக் காப்பு அரைப் பவுனுக்குக்கூட. 30 ரூவா” என்று விளக்கமாகச் சொன்னார் செந்தாமரை. “காசு உன் சம்பந்தி குடுத்தாளா? அவதான் “எள்ளப் பிச்சு எழுவது பேருக்குப் பங்கு வைக்கறவளாச்சே”ன்னு சந்தேகமாகக் கேட்டார் பட்டம்மா. “ஆமாம் அத்தே, எனக்கு்ம் புலப்படல. இந்த மனுசன் சூது பேசறாரோன்னு தோனுது”ன்னு மாமியாளுக்கு ஒத்து ஊதினாள் மரகதம். “வேப்பமரத்துப் பேயும் ஆலமரத்துப் பிசாசும் ஆம்படையனை அடிக்க ஒன்னா சேந்துச்சாங்கற கதையா, ரெண்டு பேரும் ஒன்னா சேந்துட்டீங்களா? நான் விளங்கனா மாதிரிதான்”னு சொல்லிவிட்டு, பால் கறக்கப் பால் லோட்டாவை எடுத்துக் கொண்டு கிளம்பினார் செந்தாமரை. “வீட்டுக்கு மக்க, மனுசா எல்லாம் வருவாக. பொழுதோட மாட்ட ஓட்டியான்னு மாரியான்ட காலைலேயே சொன்னேன். மாடு வந்துதான்னு தெரியல” என்று புலம்பிக்கொண்டே கொட்டகைப் பக்கம் வந்தார் செந்தாமரை. “புனிதா இருக்கற அறையில மூனு பொட்டப் புள்ளையும் ஒன்னுக்கு மண்ணா உக்காந்து அரட்டை அடிக்கறாளுங்க. ஒன்னா வளந்ததனாலதான் பாசம் விட்டுப் போவல”ன்னு மரகதம் மனசுல நினைச்சுகிட்டாள். “மரகதத்தோட கூட பொறந்த கொடிங்க ரெண்டு பேரு இருக்காங்க. எங்க, அறுப்பை வச்சிகிட்டு ஊர் ஊரா  சொல்ல முடியல. அதான் பொண்ணு குடுத்த சம்பந்தியோட நிறுத்தியாச்சு”ன்னு மரகதம் வந்தவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தாள். திடீரென மேகங்களெல்லாம் தரையிறங்கி வந்திடுச்சி. இந்திரன் குதிரையாட்டம் நாலு காலு பாய்ச்சல காளையும் கன்னும் வீட்டுக்கு ஓடியாற, பெரும் புழுதி மூட்டம் கிளம்பியது. அந்த மண்வாசம், ஆயிரம் ரோசா தோட்டம் இருந்தாலும் இந்த வாசத்துக்கு ஈடாகாது. அக்கம் பக்கத்து மக்களெல்லாம் சீவிமுடித்து சிங்காரித்து ஒவ்வொருத்தரா சேர ஆரம்பித்துவிட்டார்கள். பக்கத்து வீட்டு வள்ளியும் எதிர்த்த வீட்டு சக்குபாயும் சமையல்கட்டுக்குக் கூடமாட ஒத்தாசைக்கு வந்தார்கள். அந்த நேரம் பாத்து வாசல்ல  “கடகட..கட”ன்னு அவுத்திமேட்டு மல உருண்டு வர்ற சத்தம் வாசலில். புனிதா மாமியார் வூட்டு சனங்க வந்தார்கள். “பட்டாட்டம் பொட்டி வண்டி, கட..கட.. கட்ட வண்டியோட சம்பந்தம் பேசியிருக்கே.. எங்க அடுக்கும் இந்த நியாயம்?”னு புலம்பினா பட்டம்மா. “த.. ஆத்தா புலம்பாம இரு, அவுங்க காதுல விழப்போவுது”ன்னு  அதட்டினார் செந்தாமரை. வந்தவர்களை வாங்கன்னு கூப்பிட்டு, காபி தண்ணி கொடுத்தாள் மரகதம். ஏழாம் காப்பு செய்றதுக்கு, கூடத்தைச் சுத்தம் பண்ணி, கூடத்துக்கு நடுவுல பச்சரிசி மாவுல கோலம் போட்டா. சுத்தி பட்டை பட்டையா கோடு போட்ட ஜமுக்காளம் போட்டு வந்தவர்களை உட்கார  வைத்தார்கள். அதற்குள் குப்புசாமி ரெட்டி, கண்ணு உடையாரு, கோவாலு நாய்க்கரு, பண்டாரம் எல்லாரும் வந்துட்டாங்க. வந்த ஆம்பளங்க ஒரு பக்கமாகவும் பொம்பளங்க ஒரு பக்கமாகவும் அடைஞ்சி உட்காந்தார்கள். மரகதம் மாமியாகாரி முகத்தைப் பார்த்தாள். “எலி மூஞ்சி என்ன வளையில தூக்கி வச்சிருக்கு?”ன்னு யோசிச்சவ, அவங்கள கேட்காம செய்யறம்னு கோபம் போலன்னு புரிஞ்சிகிட்டு, “அத்தை, அப்பறம் என்ன செய்யணும்னு சொல்லுங்க”ன்னு கேட்டாள். “என்னவோ சொன்ன கதையில, எலி ரவுக்க கேட்குதாம் சபையிலங்கற மாதிரி எங்கிட்ட எதுக்குடி கேட்கற? இவ்வளவு நேரம் நீதானே செய்த?”ன்னு வெடுக்குனு பேசினா மாமியார். “தெரியலன்னுதானே கேட்கறாங்க.. சொன்னா, சிலுக்கு சீமைக்குப் போய்டுமா?’ன்னு பதில் பாட்டு பாடிகிட்டே, அங்க ஒரு மணைப் பலகை போட்டு, அதும் மேல வெள்ளை வேட்டியைப் போட்டாள் மரகதம். மணைக்கு எதிரில் செங்கல்லு வச்சு அதுமேல சாணியில மூனு பிள்ளையார் பிடிச்சு வச்சு, அதுமேல அருகம்புல்ல வைடி”ன்னு மாமியாகாரி அதிகாரம் பண்ணினார்கள். பட்டம்மா சொன்னா மாதிரியே எல்லாம் பண்ணி, தோட்டத்துல இருந்து அடுக்குமல்லியைப் பறிச்சு அதை சரமா கட்டி, பிள்ளையாருக்கும் விளக்குக்கும் போட்டாள் மரகதம். ஒரு குட்டி மண் பல்லாவுல விளக்கெண்ணெயும், மூலிகைத் தழையும், வேப்பங்குச்சி, கருடக்கிழங்கு, இதெல்லாம் போட்டு கரியாக்கிய மையை வைத்தாள். இந்த மையை வச்சா பால் மணத்துக்கு காத்து கருப்பு அண்டாது. ஒரு பித்தள தட்டுல பால்மணி, கருப்பு மணி, வெள்ளருக்கம் வேரில் திரிச்ச அண்ணாக்கயிறு, அதே வேருல திரிச்ச காப்பு இதெல்லாம் வைத்திருந்தாள் மரகதம். குத்துவிளக்கும் காமாட்சி அம்மன் விளக்கும் ஏற்றி வைத்து, புனிதாவையும் குழந்தையையும் சீவி சிங்காரிச்சு அழைச்சிட்டு வந்து மணையில உக்கார வச்சாங்க. கற்பூரம் ஏற்றி பூசை பண்ணினாள் மரகதம். புனிதா மாமியாரைக் கூப்பிட்டு  வெள்ளெருக்கங் காப்பு போடச் சொன்னாங்க. தட்டில் இருந்தது எல்லாவற்றையும் குழந்தைக்குப் போட்டார்கள். செந்தாமரையின் மூத்த மகள்கள், குழந்தை கையில் ஆளுக்குப் பத்து ரூபாய் கொடுத்தார்கள். “குழந்தைக்குப் பவுன்ல காப்பு போடலையா?”ன்னு கூட்டத்துல யாரோ கேட்டார்கள். உடனே செந்தாமரை ஓடிப்போய் பவுனு காப்பை எடுத்து வந்து புனிதா மாமனாரிடம் தந்தார். அவரும் குழந்தைக்குப் போட்டுவிட்டார். “குழந்தைக்கு என்னப்பா பேரு?”ன்னு குப்பு ரெட்டி கேட்க, “சுவாதி”ன்னு செந்தாமரை சொன்னாரு. “என்னது… என் பேத்திக்கு நீங்க பேரு வைக்கறதா…?”ன்னு புனிதாவின் மாமனார் கத்தினார். தொடரும். சாம்பவி சங்கர்