காலத்தால் அழியாத கவி கா. மு. ஷெரீப்

காலத்தால் அழியாத கவி கா. மு. ஷெரீப்

எளிமையான வார்த்தைகளைத் தேடிப்பிடித்து, பாமரனும் புரிந்துகொள்ளும் வண்ணம் பாடல்களை இயற்றுவதில் வல்லமை படைத்த, கதை, வசனகர்த்தா,எழுத்தாளர், கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களது நினைவு தினம் இன்று. தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்று, சுயம்புக் கவிஞரான ‘காதர்ஷா முகம்மது ஷெரீப்’ என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக் கொண்டார். இவர் தஞ்சை மாவட்டத்தில் அபிவிருத்தீஸ்வரம் என்னும் ஊரில், 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் காதர்ஷா ராவுத்தர். தாய் முகம்மது இப்ராகிம் பாபாத்தம்மாள். தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாய் தந்தையர் போதிக்க, ஒழுக்கக் கல்வியைத் தவிர பள்ளிப் படிப்பில்லை. பட்டறிவும் இறைவன் கொடுத்த அறிவும் அவரைப் பல்துறை வித்தகர் ஆக்கின. 15ஆம் அகவையிலேயே அரசியலில் நுழைந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தொடக்க காலத்தில் அவர் மனதைக் கவர்ந்தாலும் பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். ‘தமிழரசுக் கழகத்துடன்’ இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவி கா.மு.ஷெரீப், தமிழரசு இயக்கக் கவிஞர்களாகத் திகழ்ந்த கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு முன் தோன்றியவர். “தமிழ் முழக்கம்”, “சாட்டை” போன்ற பரபரப்பான திங்கள், திங்கள் இருமுறை, கிழமை ஏடுகள் நடத்திக் கைப்பொருள் இழந்தார். சிறுகதை நூல்கள் 3, நவீனம் 1, நாடக நூல்கள் 4, பயண நூல் 1, குறுங்காஇயம் 1, அறிவுரைக் கடித நூல் 1, இலக்கியக் கட்டுரை நூல் 1 எனப் பலவற்றை எழுதிக் குவித்தார். கவி கா.மு.ஷெரீப் கவிதைகள் மட்டுமல்லாது, இலக்கியத்தில் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார். தன் பதினெட்டாம் வயதிலிருந்து கவிதை புனைந்தவர். அவரின் முதல் கவிதை “குடியரசு” ஏட்டில் 1934ஆம் ஆண்டு வெளிவந்தது. 1948இல் அறிஞர் அண்ணாவின் ‘சந்திரமோகன்’ நாடகத்தில், ‘திருநாடே’ என்று அவர் எழுதிய பாடலை அன்று முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதலில் நாடகங்களுக்குப் பாடல் எழுதி, அதன் பின்னர் கொலம்பியா கம்பெனி ரிக்கார்டுகளுக்காக வசனமும் பாடலும் எழுதி, திரை உலகுக்குள் மெல்ல நுழைந்தார். முதன் முதலாக இவர் 1948இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “மாயாவதி” எனும் படத்திற்குத்தான் பாடல் இயற்றினார். முதல் பாட்டை ஏ.பி.கோமளா எனும் பாடகி பாடினார். அதனைத் தொடர்ந்து இவரது வெற்றிப் பயணம் மிக விரைவாகத் தொடர்ந்தது. பழைய திரைப்பாடல்களில் பல, இன்னும் புதிதுபோல் இருப்பதை இளம் ரசிகர்கள் கூட மறுக்கமாட்டார்கள். “ஏரிக்கரை மேலே… போறவளே பெண் மயிலே….!” என்று கம்பீரமாகவும் காதலுடனும் ஆரம்பிக்கும் ‘முதலாளி’ திரைப்படத்தில் வரும் பாடலை, கிராமப்புறத்தில் உள்ளவர்களெல்லாம் பாடிக்கொண்டு திரிந்த காலம் ஒன்று உண்டு. “சிட்டுக் குருவி… சிட்டுக் குருவி.. சேதி தெரியுமா? உன்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பலே” என்ற டவுன் பஸ் திரைப்படத்தில் வரும் பாடல், வில்லனுக்குக் கிடைத்த அபூர்வ டூயட்! மக்களைப் பெற்ற மகராசி என்ற திரைப்படத்தில் வரும் “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா… உண்மைக்காதல் மாறிப் போகுமா?” என்ற இனிமையான பாடல், இன்றைக்கும் கூட நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. இந்தப் பாடலில் இருக்கும் இனிமையோடு இன்னோரு ஆச்சரியமும் ஒளிந்திருக்கிறது. தமிழ்சினிமா மூலம் 40 ஆண்டு காலம் ரசிகர்களை மிரட்டிவந்த முதுபெரும் வில்லன் நடிகர். மிகச்சிறந்த அபூர்வக் கலைஞர், எம்.என். நம்பியார் – எம்.என்.ராஜம் இருவரும் சேர்ந்து பாடிய டூயட் பாடல் இது. “வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா..!”, “பணம் பந்தியேயிலே குணம் குப்பையிலே… இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே..”, “வானில் முழு மதியைக் கண்டேன்.. வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்”, “நான் பெற்ற செல்வம், நலமான செல்வம்..”, “உலவும் தென்றல் காற்றினிலே.. ஓடமிதே… நான் மகிழ ஊஞ்சலாடுதே…”, “வாராய் நீ வராய் போகுமிடம் வெகுதூரமில்லை…”, “அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை…” “பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமோ… துயரம் இதுதானா?” போன்ற எண்ணற்ற அழியாப் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களையும் எழுதியவர். 400-க்கும் மேற்பட்ட வெற்றிபெற்ற திரைப்படப் பாடல்களை எழுதி, திரைத் தமிழுக்கு மாபெரும் பங்களிப்பை செய்திருக்கிறார். இவர் திரைப்படத்திற்காக எழுதிய முதல் பாடல்” அல்லியின் வெண்ணிலா வந்தது போல்” என்று தொடங்கும் பாடல். 1948இல் வெளிவந்த ‘மாயாவதி’ என்ற படத்தில் இடம்பெற்றது. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதிய இவர், பெண் தெய்வம், புது யுகம் ஆகிய திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற, ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ என்ற பாடலை கவி கா. மு. ஷெரீப் எழுதி இருந்தாலும் அது வேறொரு கவிஞர் பெயரில் வெளியானது. ஆனாலும் இவர் பெருந்தன்மையுடன் “கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது!” என்று குறிப்பிட்டதாக ஜெயகாந்தன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். “செங்கோல்” வார ஏட்டில் ஏராளமான தமிழ், தமிழர் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார். ஒளி, சாட்டை, தமிழ் முழக்கம் ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார். (1952-1962) “சிவாஜி” என்ற ஏட்டின் துணை ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். திரை உலகத்தோடும், தமிழர் இயக்கங்களோடும், தொடர்பு கொண்டிருந்த அவர், தனது வாழ்வின் பின்னாட்களில் மிகச் சிறந்த ஆன்மீகவாதியாக மாறினார். சிந்தை அள்ளும் சீறாப்புராணத்திற்கு மிகச் சிறந்த உரை ஒன்றினை எழுதினார். இறைவனுக்காக வாழ்வதெப்படி?, இஸ்லாமும் ஜீவகாருண்யமும், இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?, கிழக்கிலுள்ள பிறைக்கொடி நாடுகள், பயண நூல், ஆகிய இஸ்லாமிய சமயம், வாழ்வியல் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். சினிமா உலகத்துடன் தொடர்பு கொண்டிருந்த காலத்திலும் அதன் சீரழிவில் சிக்கிக் கொள்ளாதவர். ‘அழைத்தால் வருவோம்; வாய்ப்புக் கொடுத்தால் பாடுவோம்; யாரையும் சார்ந்து வாழ மாட்டோம்; யாரிடமும் எதையும் கேட்க மாட்டோம்’ என்ற கொள்கைப்படி வாழ்ந்தவர் கவி கா.மு.ஷெரீப். கலைஞர் கருணாநிதி அவர்களை அழைத்து வந்து, தான் பணிபுரிந்த மாடர்ன் தியேட்டர்ஸ்-ல் வேலைக்குச் சேர்த்துவிட்டவரும் இவர்தான் என்றும் ஒரு செய்தி உண்டு. “கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி பத்தியம் இருக்கணும். ரசிகர்ளை அவன் புள்ள மாதிரி நேசிச்சு, எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக் கூடாதுன்னு ஒரு பொறுப்புணர்ச்சியோடு எழுதணும்” என்ற இவர், தான் சொல்லியபடி வாழ்ந்தும் காட்டினார்.  வரோன் ஷர்மிளா

அகிலன் என்னும் இலட்சிய எழுத்து

அகிலன் என்னும் இலட்சிய எழுத்து

தமிழ் படைப்பிலக்கிய உலகில் மிகச் சிறந்த ஆளுமையாக விளங்கியவர் எழுத்தாளர் அகிலன். 1922 இல் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் என்னும் ஊரில் பிறந்த அகிலாண்டம் என்ற அகிலன் 1938 இல் தனது முதல் கதையை எழுதினார். பள்ளியில் வெளிவந்த பத்திரிகையில் ‘அவன் ஏழை’ என்ற அந்தக் கதையை பதினாறு வயதுப் பையனான அகிலன் கொடுத்தபோது, அந்தக் கதையின் நடைச் சிறப்பு ஆசிரியருக்கு ஐயத்தை ஏற்படுத்த, இந்தக் கதையை எங்கு திருடினாய்?’ என்று கேட்டார். ‘ஐயா, என் கதையை நீங்கள் பிரசுரிக்க வேண்டாம். திருப்பித் தந்து விடுங்கள். நான் திருடனில்லை’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் அகிலன். அந்த ரோசத்திலேயே உண்மையை உணர்ந்த ஆசிரியர், அவரைத் தட்டிக் கொடுத்தார். 1944 இல் அவரது முதல் நாவல் ‘மங்கிய நிலவு’ வெளிவந்தது. ஆனால், அகிலன் தமிழ் வாசகர்களிடையே வாழ்நாள் முழுவதும் மங்காத முழு நிலவாகவே பிரகாசித்தார். பள்ளிப் பருவத்திலேயே வாலிபர் சங்கம் அமைத்து, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணிகள் நிராகரிப்பு என்றெல்லாம் தேசிய இயக்கங்களில் செயல்பட்டிருக்கிறார். தேசிய இயக்கத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்த அகிலனுக்கு, ‘தேச விடுதலை மக்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும்’ என்று, அன்றிருந்த எல்லாப் படைப்பாளிகளைப் போலவே மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்யோ என்ற யதார்த்தம் அவரைச் சுட்டிருக்க வேண்டும். அவர் படைப்புகளில் இந்த ஏமாற்றத்தை நாம் அடையாளம் காண முடியும். மு.வ., கி.வா.ஜ. உள்ளிட்ட இலக்கிய ஜாம்பவான்களிடமும், சிவாஜி கணேசன், டி.கே.எஸ். சகோதரர்கள் உள்ளிட்ட கலைஞர்களுடனும் நெருக்கமும் அன்பும் கொண்டிருந்தார். தீவிர கொள்கைப் பிடிப்பும் நேர்மையும் அவரது எழுத்தாளர் வாழ்வின் இலட்சியமாக இருந்தன. போட்டி மிகுந்த அன்றைய படைப்புலகில், அவர் தன் இலட்சியத்தில் என்றும் தளராமல் தன் படைப்புகளை வெளிக் கொணர்ந்தார். அகிலனுக்கென்று மிகப் பெரிய வாசகர் வட்டம் எப்போதும் இருந்தது. எல்லா வார, மாத இதழ்களிலும் அவரது சிறுகதைகளோ தொடர் கதைகளோ நிச்சயம் வந்த வண்ணம் இருக்கும். மொத்தம் 20 நாவல்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாடகங்கள் மற்றும் சிறுவர் நூல்கள் என்று பன்முகப் படைப்பிலக்கியங்களிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். எளிய நடையுடன் கூடிய இவரது படைப்புகளில், சமூகப் பொறுப்புடன் கூடிய எழுத்து வேட்கை துலங்குவதைக் காண முடியும். சுவையான கதைக்களம், உயிர்த் துடிப்பான பாத்திரப் படைப்பு, அறம் சார்ந்த வாழ்க்கையின் மீதான பிடிப்பு என்று, அகிலனின் படைப்புகள் வாசகர் மனதைக் கொள்ளை கொண்டன. 1963 இல் அவரது சரித்திரப் புதினமான ‘வேங்கையின் மைந்தன்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற அகிலன், 1975 இல் அவரது ‘சித்திரப் பாவை’ நாவலுக்கு ஞான பீடம் விருதையும் வென்றார். அவரது பாவை விளக்கு, வாழ்வு எங்கே மற்றும் கயல் விழி ஆகிய படைப்புகள் திரைப்படங்களாக வந்தன. எங்கே போகிறோம், சிநேகிதி, பெண், கொம்புத் தேன் மற்றும் நெஞ்சின் அலைகள் உள்பட்ட மகத்தான நாவல்களைப் படைத்த அகிலன், தனக்கென்று மிகப் பெரிய வாசகர் உலகத்தைக் கொண்டிருந்தார். அகிலனின் படைப்புகள் சர்ச்சைகளையும் காட்டமான விமர்சனங்களையும் சந்தித்த தருணங்களும் உண்டு. அவற்றை மிகுந்த நேர்மையுடன் அணுகினார் அகிலன் என்ற பண்பாளர். மிகச் சிறந்த இலக்கிய மேதையும் ஒரு அரை நூற்றாண்டு கால இலக்கிய உலகின் இலட்சியம் மிக்க அடையாளமாகவும் (1944 – 1988) தமிழ் உலகில் சுடர் விட்ட அகிலனுக்கு இன்று நூற்றாண்டு தொடங்குகிறது. சுவடு இதழ், ஒரு தொடக்கமாக அகிலனின் நூற்றாண்டை, எழுத்தில் சமூகப் பொறுப்பின் அடையாளமாகப் போற்றிக் கொண்டாட வாசகர்களை அழைக்கிறது. வாழ்க அகிலன் புகழ்! கோமதி சங்கர்

அடடே சுந்தரா

அடடே சுந்தரா

திரை விமர்சனம் நானி, தெலுங்கில் அறிமுகமாகும் நஸ்ரியா நசீமுடன் இணைந்து  அட்டகாசமாக நடித்து, விவேக் ஆத்ரேயா எழுதி சிறப்பாகவும், சிரிப்பாகவும் இயக்கியுள்ள காதல் கதைதான், சுந்தரத் தெலுங்கில்  ‘அண்டே சுந்தரநிக்கி’, மொழி மாற்றத்தில் தேன் தமிழில் ‘அடடே சுந்தரா’. காதல் என்றாலே, வழக்கமாகச் சாதியோ மதமோ ‘கேட்’டைப் போடும்தானே! இந்தப் படத்தில் மதம்! எதற்கெடுத்தாலும் ஹோமம் செய்யும் விஸ்வநாத ஐயரின் (நரேஷ்) ஒரே மகன் சுந்தர பிரசாத் (நானி), ஊரறிந்த இந்து. பாயசமே கசப்பான முன் அனுபவத்தால், இந்து மதமும் கசந்த தாமஸின் (அழகம் பெருமாள்) இரண்டாவது மகள் லீலா தாமஸ் (நஸ்ரியா நசீம்). அவர்களுக்குள் லேசுப்பட்ட காதல் இல்லை. பள்ளி நாடகத்தில் வேஷமிட்டு நடித்தபோது துவங்கிய 100% உண்மையான காதல். நடுவிலே சுந்தரன் தொடர்பற்றுப்  போக, பருவமடைந்த லீலா கொஞ்சம் டைவர்ஷன் ஆகி, பின் சற்றுச் சுதாரித்து, இப்போது மீண்டு(ம்) சுந்தரனின் பாதையில்! 180 டிகிரி எதிரும் புதிருமாக உள்ள குடும்பத்தில் நிலவும் மத நல்லிணக்கத்துக்கு எதிரான நிலையைக் கடந்து,  காதலை நிறைவேற்றிக் கொள்ளத்தான், எத்தனை பாடுகள், பொய்கள், தந்திரங்கள், கோபதாபங்கள், உணர்ச்சிப் பிரவாகங்கள், மௌன யுத்தங்கள், சரணாகதிகள்…!!! இத்தனையையும் தாண்டி, அவர்களின் காதல் கைகூடியதா என்பதுதான், ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் மொத்தக் கதை. நகைச்சுவை கலந்த திரைப்படம், நானி, நஸ்ரியாவின் அசத்தலான தலைமையில், நரேஷ், ரோகிணி, பாட்டி அருணா பிக்‌ஷு,  அழகம் பெருமாள், நதியா, தன்வி ராம்,  மேனேஜர் ஹர்ஷவர்தன் பலமான கூட்டணியில்,  தங்குதடையின்றி ‘கலகல’வென்று செல்வது, இனிமை, சிறப்பு. மனிதத்தை மறுக்கும் மதவாதக் கருத்தியல்கள், சடங்கு சம்பிரதாயங்கள் மீது, ஆங்காங்கே அழுத்தமாகக் குட்டு வைப்பதும் பாராட்டத்தக்கது. பிராமணன், சமுத்திரத்தைத் தாண்டக்கூடாது என்கிற சம்பிரதாயம், அவசியத்திற்கும் அவசரத்திற்குமேற்ப மீறவும், அதற்கான பரிகாரமும்  படிப்படியாக நீர்த்துப்போய், நாக்கிலே ஒற்றைத் தர்ப்பையைக் கொளுத்தி, குறுக்கில் இழுத்து விடுவதில் குறுகிப் போவதையும், சுயநலத்தோடு ஒரு சமயம் மதத்தைப் பொருட்படுத்தாததையும், பிறிதொரு நிலையில் மதத் துவேஷத்தில் உக்கிரத்துடன் நிற்பதையும் இயக்குனர் பதிவு செய்திருப்பது, அவர்களை ஒருவேளை சிந்திக்க வைக்கக்கூடும். லேடிஸ் பை-சைக்கிளை எதிர்க்கும் சுந்தரனிடம் அப்பா, சிலதைக் காப்பாத்தணும்னா, சிலதை இழந்துதான் தீரணும்; விதவிதமான ரீசன் எல்லாம் உங்களாலதான் சார் சொல்ல முடியும்; என்னது! நல்ல குடும்பம்னு சொல்லி, சம்மதிக்க வெச்சியா? அப்ப, நம்ம குடும்பம் நல்ல குடும்பம் இல்லியா? போன்ற வசனங்களும், சுந்தரனுக்கும் அவனது மேனேஜருக்குமான  உரையாடல்களும் சுவையானவை. மேலும் இப்படத்தில், கருத்தரித்தது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும், ‘டிஸ்ஜெர்மினொமா’ எனும் கொடிய கருப்பைப் புற்று நோயின் அடையாளத்தை மறைத்துவிடும் கொடுமை குறித்து விழிப்புணர்வு கொள்ள வழிவகுத்த இயக்குனரை வெகுவாகப் பாராட்டலாம். சிறுவன் சுந்தரன் (வினய்) மற்றும் சிறுமி லீலா தாம்ஸன் (ஹரிகா கோயிலம்மா) போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக நடித்துள்ளனர். சௌமியா (அனுபமா பரமேஸ்வரன்),  ஜோதிடர் ஜோகராவ் ( ஸ்ரீகாந்த் ஐயங்கார் ), சுந்தரின் மாமா (பிரித்வி ராஜ்), ஜோசப் (வெங்கடேஷ் மஹா), டாக்டர் குரு (ராகுல் ராமகிருஷ்ணன்), கைனகாலஜிஸ்ட் (பவித்ர லோகேஷ்), வம்சி (சாய் ரோனக்), பட இயக்குநர் (அலி) எனத் துணைப் பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களும், நடிப்பில் சோடை போகவில்லை. விவேக் சாகரின் பின்னணி இசையும் பாடல்களும் இனிமை. நிகேத் பொம்மியின் கண்கவர் ஒளிப்பதிவு ‘பளிச்’. குறிப்பிடத்தகுந்தது, ரவி தேஜா கிரிஜாலாவின் படத்தொகுப்பு. குறிப்பாக, ‘கட் டயலாக்ஸ்’  காட்சிகளை குழப்பமில்லாமல், விறுவிறுப்பு குறையாமல் ‘கட்’ செய்தது. படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க, நிறைய நியாயம் இருக்கிறது. முன் பாதியில் கணிசமாகக்  குறைக்க வாய்ப்பும் இருக்கிறது. படத் தொகுப்பாளரை இயக்குநர் அனுமதித்திருக்கலாம். சமூகத்தில் முதன்மை பெற வேண்டியது, மதம் தாண்டிய மனிதக் காதலே என்பதை, அழுத்தந்திருத்தமாகவும் நகைச்சுவையுடனும் வழங்கும் விவேக் ஆத்ரேயின் ‘அடடே சுந்தரா’, பலே சுந்தராதான். மதிப்பெண் : 8/10 மது ராஜேந்திரன்

O2

O2

திரை விமர்சனம் ஆக்சிஜன்,  பிராணவாயு என்றெல்லாம் குறிப்பிடப்படும் உயிர்க்காற்று, உயிரைக் கொடுப்பதற்கு மட்டுமல்ல,  எடுப்பதற்கும்கூடக் காரணமாக அமையலாம் என்பதை,  ‘சீட் ஏஜ் திரில்லர்’ திரைக்கதையாக அறிமுக இயக்குனர் ஜிஎஸ் விக்னேஷ்,  ‘ஓ2’ திரைப்படத்தின் மூலமும் நயன்தாரா வழியாகவும் வழங்க முனைந்திருக்கிறார். ‘சிஸ்டிக் ஃபைரோசிஸ்’ எனும் சுவாச பாதிப்பால் ஆக்சிஜன் சிலிண்டர் உதவி இல்லாமல் சுவாசிக்க முடியாத வீராவுக்கு (ரித்விக்) அறுவைச் சிகிச்சை செய்யும் பொருட்டு, கோவையிலிருந்து கொச்சி நகருக்குத் தனியார் பேருந்தில் அழைத்துச் செல்லும் அம்மா பார்வதி (நயன்தாரா). இவரைப் போன்று அவரவர் பிரச்சனைகளுடன் ஒருங்கே பயணிக்கும் சில பயணிகள். போக்குவரத்து நெரிசல் காரணமாக, வழக்கமான பாதையை விட்டு குறுக்கு வழியில் செல்லும் பேருந்து, எதிர்பாராத விதமாக நிலச்சரிவில் பூமியில் புதைந்து, நம்மையும் பயத்தில் புதைய வைத்து விடுகிறது. அம்மா, குழந்தை, பேருந்து ஓட்டுநர் உட்பட பயணிகளின் கதி என்ன என்பதுதான், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள இரண்டு மணிநேரப் படத்தின் மொத்தக் கதை. தாவரங்களின் வகை, தன்மை, சுற்றுச்சூழல் மற்றும் உயிர்க்காற்றின் முக்கியத்துவம் ஆகியவை குறித்த புரிதலைக் கொண்ட தாய் பார்வதியாக நயன்தாரா, ‘எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு ஆபத்துன்னா, அத பார்த்துகிட்டு சும்மா இருக்கமாட்டா; தட் அப்ளைஸ் டு மதர் நேச்சர் டூ’, ‘உண்மைய சொல்லனும்னா நாமெல்லாம் ஒரு சவப்பெட்டியில் புதஞ்சிருக்கோம்’, ‘ஒரு மனுஷன் சும்மா இருந்தாலே ஒரு நிமிஷத்துக்கு 16 லிட்டர் காத்து தேவைப்படுது; கண்ணுக்குத் தெரியாத பிரச்ன ஆக்சிஜன்’ என்று சொல்வதும், குழந்தையைக் காப்பாற்ற நடத்தும் துணிச்சலும் உணர்வுப்பூர்வமுமான போராட்டங்களும், அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்துகின்றன. அம்மாவுடன் பாசத்தைப்  பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகளிலும், ஆக்சிஜன் வேண்டி, ஜோம்பிகள் போன்று எல்லோரும் தம்மை வெரித்துப்  பார்க்கும்போது, ஒருவித அச்சத்துடன் அவர்களை நோக்கும் போதும், குழந்தை ரித்விக்கின் நடிப்பு பளிச்சிடவே செய்கிறது. எதிலும் எப்போதும் சுயநலமாக நடந்து கொள்ளும், சட்டத்திற்குப் புறம்பான காரியத்தைச் செய்யும், தண்ணீர் கொடுத்தவனையே ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லவும் செய்கின்ற, கொடுமையே உருவான போலீஸ்காரர், ‘கடவுளே ஒரு குறை வச்சாலும், ஒரு தாய் நெனச்சா அத சரியாக்க முடியும் தாயி ‘ என்று கூறும் குற்றமே செய்யாமல் தண்டனை அனுபவித்த கைதி, அரசியல்வாதி ஆர். என். ஆர். மனோகர்,  பேருந்து ஓட்டுநர் ஆடுகளம் முருகதாஸ், ‘உன் தகுதிக்கேத்த ஸ்கூல்ல சேக்கோணும்’ என்று கூறும் பஸ் முதலாளி கவிதா பாரதி, அப்பா இடிக்கி பாஸ்கர், மகள், மருத்துவப் படிப்பை முடித்த இளைஞர் எனத் துணைப் பாத்திரங்களை ஏற்ற கலைஞர்களும் கவனம் பெறுகிறார்கள். யாராலேயோ அலட்சியமாக வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பை, எங்கெங்கோ பயணித்து இறுதியில் காற்றாடியின் இயக்கத்தையே நிறுத்தி விடுவதான குறியீடு, காரில் போனால் கண்டம் என்று சொன்ன ஜோசியக்காரர், நடக்கப் போகிற விபரீதத்தைச் சொல்லாத அங்கதம், எதற்கெடுத்தாலும் ‘பேட் டே’ என்று சொல்லிக் கொண்டு வரும் இளைஞன், பஸ் என்ன ஆகியிருக்கும் என்று உணர்ந்த வினாடி ‘மை குட் டே’ என்று கூறுவதிலான நகைமுரண் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. குழந்தை வீராவை அத்துணை நிர்பந்தப்படுத்தி, மீண்டும் பேருந்தில் மின்சாரத்தைப் பெறக் கீழே இறக்குவது, மூச்சுத் திணறலுக்கு ஆக்சிஜன் பெற முயல்வதைவிட அவசியமானதோ! நிலச்சரிவு நிகழக்கூடிய மலைப்பாங்கான மாநிலத்தில் இல்லாது, புதைந்திருக்கும் பேருந்தில் சரியான இடத்தை அறிந்துகொள்ள உதவும் கருவியை அரக்கோணத்தில் இருந்துதான் பெறவேண்டுமென்று கூறுவதை ஜீரணிக்க இயலவில்லை. இதுபோன்ற கதைக்கரு கொண்ட படத்திற்குப் பக்கபலமாக இருக்க வேண்டியது இசை. விஷால் சந்திரசேகர் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும். கிடைத்த வாய்ப்பில் ஓரளவு நிறைவைத் தந்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன். ஆர் கே செல்வா படத்தொகுப்பை இன்னும் கூர்மைப்படுத்தியிருக்கலாம். நயன்தாரா முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்தும், கதைக்கரு வித்தியாசமாக இருந்தும், வாய்ப்பிருந்தும் அதனைப் படமாக்கிய விதத்தில் செழுமை இல்லாது, இந்த பட்ஜெட்டுக்குள் எடுக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தில் எடுத்தது போன்று, போதிய விறுவிறுப்பு இல்லாமல் போனதும், சில காட்சிகள் ‘அமெச்சுரிஸ்ட்’டாகவும்கூட அமைந்து விட்டது, சோகமே. மதிப்பெண் : 6/10 மது ராஜேந்திரன்

இருபத்து ஒரு கிராம்

இருபத்து ஒரு கிராம்

திரைவிமர்சனம் உள்ளார்ந்த அர்த்தத்தில் ஒரு சிலர் சற்று ஆணவமாகக்கூட “என் வெயிட் தெரியாம பேச வேண்டாம்” என்று கூறுவதைக் கேட்டு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கும் தெரியாத ஒன்றுதான், அவர்களுடைய உயிரின் வெயிட்! அதைக் கண்டுபிடித்து, மர்ம முடிச்சுகளுடன் கூடிய விறுவிறுப்பான கதையை, பிபின் கிருஷ்ணா அறிமுக இயக்கத்தில் பெயரிட்டு, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம்தான்,  ‘இருபத்து ஒரு கிராம்’. பெருநிறுவன மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் அஞ்சலி (மானசா ராதாகிருஷ்ணன்) கொலை செய்யப்படுகிறார். வழக்கு விசாரணை கிரைம் பிரான்ச் டி.எஸ்.பி நந்த கிஷோர் (அனூப் மேனன்) வசம் வருகிறது. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சன்னி (அனு மோகன்) தலைமையிலான சிறப்புப் படையுடன் விசாரணை சென்று கொண்டிருக்கும் போதே, அயல்நாட்டில் இருந்து திரும்பும் அஞ்சலியின் சகோதரன் மார்ட்டின் (சந்து நாத் ஜி நாயர்) எரித்துக் கொல்லப்படுகிறார். சந்தேக ரேகை படிந்த மார்ட்டின் நண்பன் ஜிம்மி (அஜி ஜான்), ஃபாதர் ஜோசப் (நந்து) தவிர்த்து,  டிப்பர் டோனி (பினெஷ் பாஸ்டின்)  நிகில் (ஜீவா ஜோசப்) அடுத்தடுத்து கொலை செய்யப்பட, வழக்கு முட்டுச் சந்தில் நிற்க, எதிர்பாராமல் கிடைத்த ஒரு துப்பில், வேகமெடுத்துக் குற்றவாளியை நெருங்க, அவனே கொலையாகி வழக்கு மீண்டும் இடியாப்பச் சிக்கலாகி விடுகிறது. என்றாலும் சலைக்காமல், நுணுக்கமாக ஆய்ந்து, விடாமல் துரத்தும் நந்த கிஷோர், குற்றவாளியைப் பிடித்தாரா, குற்றவாளியைத்தான் பிடித்தாரா என்பதுதான், திருப்பங்களோடு சுவையாகச் செல்லும், ‘இருபத்து ஒரு கிராம்’ படத்தின் கதை. அருமையான மகளை இழந்து, விளைவாக மனைவியை (லினா லிஷாய்) இழந்து விடக்கூடாது என்கிற சோகம் ஒரு புறம் இருக்க, சவாலான இந்தத் தொடர் கொலை வழக்கைக் கையாள வேண்டிய நந்த கிஷோர் பாத்திரத்தில் அனூப் மேனன் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஷூட்டிங், சேசிங், பைட்டிங் இல்லாமல், விசாரணை, துப்பு, தடயவியல் முடிவுகள், நுணுக்கமான புலனறிவு என அப்பாத்திரமாக இயங்குவதில் அனூப்  தனது பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்குகிறார். மானசா ராதாகிருஷ்ணன், அனு மோகன், லினா லிஷாய், அஜி ஜான், ஜீவா ஜோசப், லினா, நந்து, ரஞ்சித், ரெஞ்சி பணிக்கர், விவேக் அனிருத் ஆகியோரும் ஏற்ற  பாத்திரங்களில் நேர்மையான பங்களிப்பை வழங்கியுள்ளனர். குழப்பமில்லாத திரைக்கதை. ஜித்து தாமோதர் ஒளிப்பதிவும், தீபக் தேவ் இசையும், அப்பு என் பட்டாத்ரி படத்தொகுப்பும் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி, இயக்குநருக்குப் பக்க பலமாக உள்ளன. ஒரு வழக்கில் சந்தேகத்திற்கு உள்ளான ஒருவரை, குற்றவாளியாக  நிறுவுவதற்கு அடிப்படைத் தேவை, குற்றத்தின் நோக்கம். அதனைச் சந்தேகத்துக்கிடமின்றி அணுகுவதிலுள்ள காவல்துறையினரின் பல்வேறு கஷ்டநஷ்டங்களையும், சிரமங்களையும், ஏன், அழுத்தங்களையும்கூட உணரச் செய்யும் விபின் கிருஷ்ணாவின் ‘இருபத்து ஒரு கிராம்’,  இன்வெஸ்டிகேஷன் திரில்லர் விரும்பிகளுக்கு விருந்துதான். மதிப்பெண்: 7/10 மது ராஜேந்திரன்

ஷாம் சிங்கா ராய்

ஷாம் சிங்கா ராய்

திரை விமர்சனம் சமீப காலங்களில் திரையுலகம் சமூக இழிவுகளை, மனித அவலங்களைத் துணிச்சலுடன் திரும்பிப் பார்க்க விழைந்துள்ளதும் சராசரி ரசிகர்களையும் அக்கறையுடன் அவற்றைக் கவனிக்கச் செய்துள்ளதும் வரவேற்கத்தக்கது, பாராட்டவும் தக்கது. அந்த வகையில், ஜங்கா சத்யதேவ் கதைக்கு, ராகுல் சாங்கிருத்தியன் அருமையாக திரைக்கதை எழுதி இயக்கி, சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் உடன் இரட்டைவேடங்களில் நானி  நாயகனாக நடித்து, தெலுங்கில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் ‘ஷாம் சிங்கா ராய்’. தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது சிறப்பு. அறிமுக இயக்குனர் வாசுதேவ் கந்தா (நானி) மீது கதைத் திருட்டு வழக்காகத் துவங்கி, அந்தக் குற்றச்சாட்டை அறவே மறுக்கும் அவன், அதிலிருந்து மீண்டு வர  மேற்கொள்ளும் முயற்சிகளாக விரிந்து, எதிர்பாராத முடிவாக முடிவது, அவனுக்கு மட்டுமல்ல; ரசிகர்களுக்கும் கூடத்தான். “நாங்க கேணிகிட்ட போ கூடாதுங்கய்யா” – “அப்படின்னு கேணி சொல்லுச்சா? உன் குடம் நிறையனும்னா உடனே மழை வரணும்; இல்லன்னா உனக்குள்ள தைரியம் வரணும்”,  “அவங்கள்லாம் தாழ்த்தப்பட்டவங்க” – “அதுக்காக தாகமும் தாழ்ந்து போயிடுமா? அவன் தீண்டத்தகாதவன்னா, அவன் நடந்து போற பாதையில நீங்க ஏன் நடந்து போறீங்க? அவன்  சுவாசிச்சு விடற காத்த நீங்க ஏன் சுவாசிக்கிறீங்க? நிறுத்திக்க வேண்டியதானே? காற்றுக்கும் நீருக்கும் நிலத்துக்கும் காப்பாற்றுகிற குணம் இருக்குமே தவிர, காவு வாங்கற குணம் இருக்காது. இது குலத்தோட காலைப்பிடித்துத் தொங்கிட்டு இருக்கறதுக்கு ரிக்வேதம் காலம் கிடையாது, சுதந்திர பாரதம்”, “இப்போ இந்தக் கேணியும் தாழ்த்தப்பட்டதுதான், அவனுக்கே சொந்தம். தாகம் இருக்கிறவங்க மொண்டு குடிங்க, சாதி இருக்குங்கிறவன் நாவறண்டு சாவுங்க. அவன் குடிசையை எரிக்கப் போனீன்னா, உன் வீடு எங்கிருக்குன்னு ஷாம் சிங்கா ராய்க்கு நல்லாத் தெரியும்” “மனுஷன மனுஷனா பார்க்காதவன் ஊரா இருந்தா என்ன, வீடா இருந்தா என்ன, என்னால இருக்க முடியாது”, ” சமுதாயத்தை மாத்தற சக்தி எழுத்தாளனுக்கு மட்டும்தான் உண்டு, நான் போகணும், நான் எழுதணும்”, “பண்டிகை ஒவ்வொரு வருஷமும் வரும், என் காலம் போனால் திரும்பி வராது” போன்ற அர்த்தபூர்வமான காட்சிகளும் வசனங்களும் அசத்தல். “இந்த உலகத்ல ஒவ்வொரு வேலையையும் ரெண்டு விதமா செய்யலாம். ஒண்ணு பயத்தோட, இன்னொன்னு காதலோட”,  “தெய்வத்தின் துரோகத்தால் தேகமெங்கும் முள்ளாகி, மனமெல்லாம் தெய்வீகம் நிரம்பிய ரோஜாமலர்”, “பெண் யாருக்கும் தாசி இல்லை; தனக்குத் தாசி வேணும்னு  நெனக்கிறவன் கடவுளே கிடையாது”, “ஆத்ம அபிமானத்தவிட, எந்த ஆகமும் தப்பு கிடையாது. தப்புன்னு தெரிஞ்சா கடவுளே ஆனாலும் எதிர்க்கறதுல தப்பே கெடையாது. பயந்தவங்கதான் கர்மா சித்தாந்தம் பேசுவாங்க”, “எம்.எஸ். சுப்புலட்சுமி பேரை கேள்விபட்டிருக்கியா, ஒரு காலத்தில் தேவதாசி, இப்ப பத்மபூஷன் அவார்டு வாங்கி இருக்காங்க. பரதநாட்டியத்தில் பாரத தேசத்தில் மிகப் பெரிய டான்சர் பாலசரஸ்வதி, தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான்”,“பெண் யாருக்கும் தாசி அல்ல; அந்தக் கடவுளுக்கும் கூட” எந்த ஒரு சமூகத்திலே தன் பசியைப் போக்கிக்கறதுக்கு ஒரு பெண் மேலேயும் கீழேயும் இருக்கற அவயங்கள விற்கிறாளோ, அந்தச் சமூகத்தில இருக்கிற ஆம்பளைங்க, ஆம்பளைங்களே கிடையாது, பெண்கள் விற்பனைப் பொருள்கள் அல்ல” இப்படி மனதை வருடும், சிந்தையில் அறையும் வசனங்கள் படமெங்கும். காளி கோவிலில் உள்ள தேவதாசிகளில் தினமொருவளை சுகித்து வரும் தலைமை அர்ச்சகர் மஹந்தாவிடம், “யார் வேணா தொட்டுப் பார்க்கறதுக்கு நாங்க கோயில்ல உள்ள தூண்கள் கெடயாது, மானமுள்ள மனுஷிங்க. எங்க மேல யாருக்கும் உரிமை கெடயாது, அந்த தெய்வத்துக்கும் கூட” என்று ரோஸி சொல்ல, “நீ கடவுளுக்குத் தாசி கிடையாது; எனக்குதான் தாசி” என்று சொல்லி, ரோஸியைப் பல பெண்களுக்கு மத்தியில் கடுமையாகத் தாக்கி, மனுசாஸ்திரம் பாதுகாப்பில் பூணூலைக் காதிலே சுற்றி, அவள்மீது சிறுநீர் கழித்து அவமதித்த மகாதேவ் மஹந்தாவின் ஆணுறுப்பை, காளி சிலை கையில் இருந்த அரிவாளைக் கொண்டு அறுத்தெறிந்து, அவனை நெருப்புச் சட்டியில் ஷாம் சிங்கா ராய் எறியும் காட்சி புல்லரிக்கச் செய்கிறது. வித்தியாசமான உருவ அமைப்பில்,  உடல் மொழியில், இருவேடங்களில் நானியும், வயது வித்தியாசங்களில் சாய்பல்லவியும், பக்குவப்பட்ட சிறப்புக்குரிய நடிப்பை வழங்கியுள்ளது அருமை. இருவருக்குமே திரை வாழ்க்கையில் இப்படம், குறிப்பிடத்தக்க ஒரு படமாக அமையலாம். க்ருத்தி ஷெட்டி (காதலி கீர்த்தி), மடோனா செபாஸ்டியன் (லாயர் பத்மாவதி), நண்பன் பிரமோத் (அபிநவ் கோமடம்), உளவியல் நிபுணர் (லீலா சாம்சன்), ஜிசு சென்குப்தா (தேபேந்திர சிங்கா ராய்), ராகுல் ரவீந்திரன் (மனோஜ் சிங்கா ராய்), முரளி சர்மா (அட்வகேட் கிருஷ்ணமூர்த்தி), மனீஷ் வத்வா (மகாதேவ் மஹந்த்), சுபலேகா சுதாகர் (நீதிபதி) ஆகிய கலைஞர்களும் தத்தம் பங்கினைச் சிறப்பாகவே செய்துள்ளனர். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாக, சாய் பல்லவி நடனக் காட்சிகள், நானியின் சண்டைக் காட்சிகள்,  பரந்த கங்கை நீர் நிலை, கொல்கத்தா காளிகாட் (செட்) நகரம். மிக்கி ஜே மேயரின் பின்னி எடுக்கும் பின்னணி இசையும், ஈர்க்கும் பாடல்களும் சிறப்பு. பழுதில்லாத படத்தொகுப்பு, நவீன் நூலி. கதைத் திருட்டு புகாரின்பேரில் கைது செய்வது எல்லாம், சற்று அதீதம். அறிவியல் ரீதியான பாலி கிராப் முறையை ஏற்கும் சாட்சிகள் சட்டம், அதே ரீதியிலான உளவியல் நிபுணரின் ஹிப்னாஸிஸ் அறிக்கையை ஏற்காதது, வினோதம். ரோஸி குழந்தை பெற வாய்ப்பில்லை என  போகிற போக்கில் மருத்துவர் சொல்வதுபோல் சொல்வது, தெளிவில்லை. மறு ஜென்மத்திற்கு அறிவியல் ரீதியான சாட்சி இல்லை என்கிற வாதத்தை மறுப்பதற்கு, விஷ்ணு மறு ஜென்மத்தில் ராமராக வந்தார் என்பதை அடிப்படையாகக் கொண்டு, நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ( ! )  மேற்கோள்காட்டி நிறுவ முற்படுவது, அபத்தமானது; கதைக் கருவுக்குப் பின்னடைவாக அமைந்திருக்கக் கூடியது. நல்லவேளை, இந்த நீதிமன்றம் இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்காதது! திரை உத்திக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்பட்ட, படத்தில் அறிவியலுக்குப் புறம்பான சிலவற்றை, சினிமா லாஜிக்,  லிபர்டி என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப,  ஏற்றுக் கொள்வதோ, தள்ளுவதாகவோ இருந்தாலும் அதையும் தாண்டி புரிய வேண்டியவர்களுக்கு, அவரவர்களுக்குப் புரிகிற மொழியில், உத்தியில் கதைக்கருவும் வசன – காட்சி அமைப்புகளால் அதனை அழுத்தம் திருத்தமாக மனதில் உறைக்கும்படியும் பதியும்படியும் கட்டமைத்தும் வழங்கப்பட்டிருப்பதில் இயக்குனரின் திறமையையும் நேர்த்தியையும் பாராட்டித்தான் ஆகவேண்டும். மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

சண்டிகர் கரே ஆஷிகி

சண்டிகர் கரே ஆஷிகி

திரைவிமர்சனம் எத்தனையோ வாதப் பிரதி வாதங்களையும் தாண்டி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, நாடாளுமன்றம் இயற்றிய சட்ட அங்கீகாரத்தின்படி, இந்நிகழ்வு இன்றைய நிலையில் இயல்பான ஒன்று என்றாலும், அத்தனை சுலபமாக இல்லாமல், நடைமுறையில் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், சிரமங்கள், வலிகளின் நேர்த்தியான திரை வடிவம்தான், சுப்திக் சென், துஷார் பரஞ்சிபே எழுதி, அபிஷேக் கபூர் இயக்கி, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஹிந்தியில் வெளியாகியுள்ள ‘சண்டிகார் கரே  ஆஷிகி’. பாடி பில்டர் மனு முஞ்சள் (ஆயுஷ்மான் குரானா) சொந்தமாக ஜிம் நடத்தி வருகிறான். அதன் ஒரு பகுதியில், ஜும்பா நடனப் பயிற்சி தரும் ஆசிரியை மான்வி (வாணி கபூர்) இடையே மலர்ந்து பயணிக்கும் காதல், திருமணத்தை எட்டும் நிலையில், அவள் சொல்லும் ‘அந்த’ உண்மையை அவன் சகித்துக் கொள்ள முடியாமல், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முனைகிறான். தனது நேர்மையை உணராமல் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதையும், யாதொரு தவறும் செய்யாத நிலையில், சுயமரியாதை  காயப்படுத்தப்பட்டதையும் ஜீரணிக்க முடியாது தவித்துப் போகிறாள் மான்வி. இந்நிலையில், இவர்களிடையேயான பிரச்சனை எவ்விதம் தீருகிறதென்பதே சண்டிகார் கரே  ஆஷிகி படத்தின் மீதிக் கதை. புரிந்து கொள்ளாமல் மனு கிளம்பும்போது,  உடைந்து போவதில் ஆகட்டும், ஒரு சிறு கீரலுக்குக் குழந்தை போல அழுததைச் சுட்டிக்காட்டி, எத்தனை வெட்டு, ரண வலிகளை தான் தாங்கியதைச் சொல்லி, “இனி இதைவிட என்னைக் காயப்படுத்த ஏதுமில்லை, அப்படியான வலி ஏதாவது உனக்கு இருந்தா காட்டு” என்று சவாலாகச் சொல்வதில் ஆகட்டும், அப்பா, மகன் என்று குறிப்பிடும்போது, உடன் ‘மகள்’ என்று திருத்துவதில் ஆகட்டும், ஜிம்மை விட்டு நின்று விடும்படி கோரும் அப்பாவிடம், “என்னோட ஸ்கூல், என்னோட வீடு, என்னோட ஊர விட்டுட்டேன். இப்போ ஜிம்மையும் விட்டுட்டு எங்க ஓடுவேன்? நான் நான்தான். நானா இருக்கிற  எனக்கு எந்த அவமானமும் கிடையாது” என்று ஸ்திரமாக சொல்வதில் ஆகட்டும், “என்னோட கௌரவத்தை என்னால பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று சொல்வதில் ஆகட்டும் மான்வி பாத்திரத்தில் வாணி கபூர், அதேபோல, அவளின் நிலையை, அவளுடனான உறவை ஏற்றுக்கொள்வதிலான தயக்கத்தால், தேய்த்துத் தேய்த்துக் குளிப்பதில் ஆகட்டும், தனது நண்பர்களுடன் அவற்றைப் பகிர்ந்து தவறு இழைத்ததாகத் தடுமாறிப் புலம்புவதில் ஆகட்டும், அதே சந்தர்ப்பத்தில் அவர்கள் அவளை இழிவாகக் குறிப்பிடுவதை ஏற்காமல் சண்டையிடுவதில் ஆகட்டும், மருத்துவர் வழங்கிய ஆலோசனைகளுக்குப் பிறகு தெளிவு பெறுவதில் ஆகட்டும் மனு முஞ்சள் பாத்திரத்தில் ஆயுஷ்மான் குரானா என இருவருமே ஏற்ற பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, தத்தம் நடிப்பின் பன்முகத் தன்மையை வெளிக்காட்டியுள்ளது சிறப்பு. மான்வியின் தந்தை மொஹிந்தர் (கன்வல்ஜித் சிங்), மனுவின் நண்பர்கள் (கௌரவ் சர்மா, கௌதம் சர்மா), மனுவின் அப்பா நவீன் (கிரிஷ் தாமிஜா), மனுவின் சகோதரிகள் (தான்யா அப்ரால், சாவன் ரூபாவாலி) ஆகிய கலைஞர்களும் சிறப்பாகவே பங்களிப்பைச் செய்துள்ளனர். ஒளிப்பதிவும் (மனோஜ் லோபோ) அருமை.  மாண்டேஜ் வகைப் பாடல்கள் இனிமை. இசை, சச்சின்-ஜிகர். சந்திரன் அரோரா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஓடும் படத்தில், முதல் நாற்பதாவது நிமிடத்திலேயே ‘அந்த’ உண்மையைப் போட்டுடைத்தும், படத்தின் இறுதிவரை இக்கதைக் கருவில் ரசிகர்களை அக்கறைப்படுத்தி,  ஈடுபாட்டுடன் கொண்டு செல்லும் இயக்குனர் அபிஷேக் கபூரின் துணிச்சலான திறமை பாராட்டுக்குரியது. மதிப்பெண்:7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

கலாட்டா கல்யாணம் (அத்ராங்கி ரே)

கலாட்டா கல்யாணம் (அத்ராங்கி ரே)

திரை விமர்சனம் ஒரு வாரத்தில் மதுரையில்  மாண்டி என்கிற மந்தாகினியுடன், வெங்கடேஷ் விஸ்வநாத் ஐயர் என்கிற விஷுவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பீகாரில் ரிங்கு சூரியவன்ஷியுடன் திருமணம் நடந்தேறிட, அதை இருவருமே விரும்பாத நிலையில், அவர்களது வாழ்க்கைப் பயணத்தை விறுவிறுப்பாகவும் சுவையாகவும் கொஞ்சம் லாஜிக் தவிர்த்தும் கூறும் ஹிந்திப்  படம்தான், ஹிமன்ஷு ஷர்மா கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஆனந்த் எல்.ராய் இயக்கி, தமிழ்  மொழி மாற்றத்தில், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள ‘அத்ராங்கி ரே’, தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’. “இந்த வாயாலதான் நான் இன்னும் உயிரோட இருக்கேன், இல்லேன்னா என்னை எப்பவோ வெட்டி இந்த அடுப்புல போட்டுப் பொசுக்கி இருப்பீங்க, என்னை என்ன கோயில் பிரசாதம்னு நினைச்சியா? கையை நீட்றவனுக்கெல்லாம் தூக்கி கொடுக்கறதுக்கு, இதென்ன கருமம் பிடிச்ச லவ்வு? லவ்வுன்னா நாலஞ்சி தலைங்க உருளனும், ரெண்டு வீட்டுக்காரர்களும் அடிச்சுக்கணும், ஊர்ல பேரு கெடணும், ரெண்டு குடும்பமும் பத்திக்கிட்டு எரியணும். இதெல்லாம் இல்லேன்னா பீகார்ல அது அரேஞ்ச்ட் மேரேஜ் தான்”  ரிங்கு பேசும் இத்தகு வசனங்களிலிருந்து பீகாரின் சமூக நிலையைத் தெளிவாகப் புரிந்து  கொள்ளலாம். ரொமான்டிக் காமெடி வகையான இப்படத்தில், அக்ஷய் குமார் (சஜ்ஜாத் அலி கான்), சாரா அலி கான் (ரிங்கு), தனுஷ் (விசு) போன்றோரின் பண்பட்ட நடிப்பால், அழகான அழுத்தமான பங்களிப்பை வழங்கி, இரண்டே கால் மணி நேரம் போவதே தெரியாமல், ரசிகர்களைப் படத்தோடு லயித்துப் போகச் செய்து விடுகின்றனர். சாரா அலி கானின் மனப்போராட்டம், வெகுளித்தனம், காதல் வயப்படுதல் என, அசத்தலான நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதேபோன்று, நிச்சயதார்த்தத்தின்போது திருமணம் நின்ற பின்பு, முதன்முதலாக ரிங்குவிடம் தனது காதலை தனுஷ் வெளிப்படுத்துவதும் அருமை. சாரா அலி கான் – அக்ஷய் குமார் இணைந்து வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பானவை. “டெல்லி… கொஞ்சம் மூச்சுதான் விட முடியல, மத்தபடி நல்லா இருக்கு” ஆட்டோவுக்கு வெளியே தலை நீட்டிச் சொல்லும் ரிங்கு, “விஷு சார், இந்த உலகத்லேயே நான் ஒரே பொண்டாட்டின்னு நெனைக்கிறேன், சொந்தப் புருஷனோட எங்கேஜ்மெண்ட்ல இவ்வளவு குஷியா இருக்கேன்”, விஷுவிடம் ரிங்கு, “இவன் பாடு ரொம்பக் கஷ்டம்ப்பா, ஒரு மொபைலில் ரெண்டு சிம் போடப் பாக்கறான்”, எம்.எஸ்.  சஜ்ஜாத் கொண்டு வரும் ஆட்டைக் கட்டி, மது பால் கறக்கும் பரிதாபம், ஆக்ராவில் தாஜ்மகாலை மறைய வைக்க முயன்று,  முடியாத தோல்வியை ரிங்கு உணரும் சோகம், தொடர்ந்து விஷுவை அவள் உணர்ந்து கொள்ளல் போன்றவை, பசுமையாக நினைவில் நிற்கும் காட்சிகள். துணைப் பாத்திரங்களான, ஆஷிஷ் வெர்மா (எம்எஸ்), டிம்பிள் ஹயாதி (மாண்டி), சீமா பிஸ்வாஸ் (துல்ஹயன்), நித்யா ரவீந்திரன் (விசுவின் அம்மா), ஜி மாரிமுத்து (மாண்டியின் அப்பா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பில் நிறைவைத் தருகின்றனர். படத்தின் இன்னுமொரு சிறப்பு, இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் துள்ளலான பாடல் இசையும் அருமையான பின்னணி இசையும்தான். மதன் கார்க்கி, யுகபாரதி, கபிலன், தனுஷ், ரோகிணி, விவேக் எழுதிய அனைத்துப் பாடல்களும், மனோ, ஹரிசரன் சேஷாத்ரி, ஸ்ரேயா கோஷல், ஏ.ஆர். ரகுமான், கே.எஸ்.சித்ரா, தனுஷ்  குரல் இனிமையால், பன்முக உணர்வுகளில் மூழ்கடித்து விடுகின்றன, பாடல்கள் அனைத்தும். பங்கஜ் குமாரின் காமிரா, பீகார் சிவன் ஜங்ஷன், டெல்லி, ஆக்ரா, செட்டிநாடு வெளிப்புறம் உள்புறமுமாகவும், பகலும் இரவுமாகவும் சுழன்று சுழன்று கண்களைக் கவர்ந்து விடுகிறது. ஹிமல் கோத்தாரியின் படத்தொகுப்பும் நிறைவைத் தருகிறது. சுவைக்காகவும் சுலபத்திற்காகவும் அமானுஷ்யம், பேய் பிசாசு என்று பூ சுற்றி விடாமல், உளவியலை  (பாராகசம்) முன்வைத்து, தெளிவான ஒரு கதையை அழகான பொழுதுபோக்குச் சித்திரமாக்கித் தந்திருக்கும் இயக்குனரின் நேர்மை பாராட்டுக்குரியது. மதிப்பெண் : 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

ஆன்டி இண்டியன்

ஆன்டி இண்டியன்

திரை விமர்சனம் வழக்கமான கதை, திரைக்கதை இல்லை. வழக்கமான நடிகர், நடிகைகள் இல்லை. வழக்கமான காதல், சண்டை, நகைச்சுவைக் காட்சிகள் இல்லை. வழக்கமான ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு இல்லை. வழக்கமான திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. வழக்கத்திலிருந்து வேறுபட்டுத் தனித்து, விறுவிறுப்புடன் ரசிகர்களைச் சுவைக்கவும் சிந்திக்கவும் கொஞ்சம் வருந்தவும் செய்து, இறுதிவரை இருக்கையில் இறுத்திப் பார்க்க வைத்து விடுகிற படம்தான், மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்து, ப்ளூ சட்டை சி இளமாறன் கதை, திரைக்கதை, வசனம், இசை பொறுப்பேற்று, அறிமுக இயக்கம் என்கிற சுவடே தெரியாமல் அருமையாக இயக்கி வெளிவந்துள்ள ‘ஆன்டி இந்தியன்’ திரைப்படம். சென்னை மயிலாப்பூர் இடைத் தேர்தல் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, அத்தொகுதியைச் சேர்ந்த சுவர் ஓவியர் பாஷா (ப்ளூ சட்டை இளமாறன்) யாது காரணத்தாலோ, யாராலேயோ வெட்டிக் கொல்லப்பட்டு விடுகிறார். ஒரு பக்கம் காவல்துறை விசாரணை நடத்த, மறுபக்கம் கட்சிகளின் தேர்தல் வியூகம் நடைபெற்றுக் கொண்டிருக்க, அவரை எரிப்பதா, புதைப்பதா, அடக்கம் செய்வதா என்பதில் துவங்கும் பிரச்சனை, எவ்விதம் முடிவுக்கு வருகிறது என்பதுதான் ‘ஆன்டி இந்தியனி’ன் மொத்தக் கதை. தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் புறா கதை, ப்ளூ சட்டை மாறன் துணிச்சலுடன், இப்படி ஒரு படத்தை நேர்த்தியாக எடுத்துத் தருவதற்கு அடிப்படை என்பது, சுவையான ஒரு செய்தி !ஆரம்பத்தில் சொல்லும் இக்கதையை மாறன் இறுதியில் வைத்து முடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். “மதத்த நம்பறவன் கோச்சுக்க மாட்டான்… மதத்தை வெச்சு பொழப்பு நடத்தறான் பாத்தியா, அவன்தான் கோச்சுப்பான்”, “நம்ம மக்களப் பத்தி நமக்கு தெரியாதா? செருப்பால அடிச்சிட்டு… கைல கருப்பட்டி கொடுத்தா, நக்கிக்கிட்டே போயிடுவாங்க” செத்தவன் பேரு பாஷா, அப்பன் பேரு இப்ராஹிம், உங்க பேரு?, என்ன, சரோஜாவா?, நம்ம புள்ளைங்கங்ற நம்ம அடையாளமே இல்லீயேப்பா…, இந்துக்களுக்கு என்ன ஒரு பிரச்சனையானாலும் அங்க நாங்க இருப்போம், நார்த் மாதிரி இல்ல தலைவரே, இங்கே எல்லாமே கஷ்டம், அவரு 25 வருஷமா இதோ வரேன் அதோ வரேன்னு சொல்லி, அவர் ரசிகர்களை ஏமாத்திட்டிருக்காரு, செத்தவனை வச்சு பொழப்ப நடத்தி, வாழ்ந்தவங்கதானே நம்ம அரசியல்வாதிக, இவங்க பொணத்த வெச்சிகிட்டு வெளயாட்டு காட்டிட்டிருக்காங்கண்ணா, முன்னாடி எல்லாம் தூர்தர்ஷன்னு ஒரே ஒரு சேனல் இருக்கும், அதுல ஒரு பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கும். இன்னிக்கு ஊர்பட்ட சேனல்ஸ் இருக்கு, எல்லாத்திலும் வெறும் பஞ்சாயத்து மட்டும்தான் ஓடிட்டு இருக்கு, -இப்படிப் படம் முழுவதும் ‘பஞ்ச் டயலாக்’ ஸாக இல்லாது, ரசிகர்களின் மனதைப் ‘பன்ஞ்’ செய்து விடுகிற டயலாக்குகளாக விரவி இருக்கின்றன. இந்தப் படம் எந்த ஒரு தரப்பையும் குறிப்பாகச் சுட்டிக் காட்டிடவில்லை; மதவாதிகள், அரசியல்வாதிகள், ஊடகவாதிகள், ஏன் மக்களையும் சேர்த்து, எல்லோரையுமே அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. என்னதான் இயல்புத் தன்மையைப் பிரதிபலிப்பதாக இருந்தாலும், படம் முழுவதுமாகத் தொடரும் கெட்ட வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம். இறந்த உடலுக்குச் சுன்னத் செய்ய, மார்க்கம் அனுமதிக்குமோ ! படத்தின் பெயரும் கதைக்கருவோடு ஒட்டவில்லை. ராதாரவி (முதல்வர் செங்குட்டுவன்), ஆடுகளம் நரேன் (காவல்துறை துணை ஆணையர்), வழக்கு எண் முத்துராமன் (காவல் ஆய்வாளர்) ஜெயராஜ் (ஏழுமலை) வேலு பிரபாகரன் (ஹாஜியார்) விஜயா (சரோஜா), பசி சத்யா (சரோஜாவின் தோழி) உட்பட அனைத்துக் கலைஞர்களும் தத்தம் பங்கினைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். கதிரவனின் ஒளிப்பதிவும், சுதர்சனின் படத்தொகுப்பும், மாறனின் பின்னணி இசையும், உறுத்தாமல் படத்தின் தேவையை நிறைவு செய்கின்றன. இடையிடையே கானா பாடல், இனிமை சேர்க்கிறது. “பேசாம பாடிய எடுத்துட்டு போய் மெடிக்கல் காலேஜிலாவது போடுங்க சார், பசங்கலாவது அதை வெச்சி படிக்கட்டும்” என்று கருஞ்சட்டை மனிதர் (கில்லி மாறன்) மூலம் துணிச்சலுடன் சொல்லிய இயக்குனர் மாறன், படத்தின் இறுதிக் காட்சியையும் அதே துணிச்சலுடன், மதச் சார்புத் தன்மையை மறுக்கும் விதத்தில், அவ்விதமே அமைத்திருந்தால், ‘ஆன்டி இந்தியன்’ கூடுதல் சிறப்புப் பெற்றிருக்கும். மதிப்பெண் : 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

மோஸ்ட் டேஞ்சரஸ் கேம்

மோஸ்ட் டேஞ்சரஸ் கேம்

திரை விமர்சனம் எப்போது வரும், எப்படி வரும் என விளையாட்டுக காட்டும் மரணத்தை, அறியாத நிலையில் அதன் நினைப்பில் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், அந்த மரணத்தையே வலிந்து எதிர்கொள்ளும் ஒருவனின் கதைதான், லைம் ஹெம்ஸ்வொர்த் நடித்து, நிக் சன்தோரா எழுதி, ஃபில் ஆபிரகாம் இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில், தமிழ் வசனங்களுடன் வெளியாகியுள்ள ‘மோஸ்ட் டேஞ்சரஸ் கேம்’ ஆங்கிலத் திரைப்படம். டெட்ராய்ட் நகரில் வசிக்கும் முன்னாள் தடகள வீரரும், ரியல் எஸ்டேட் தொழிலில் தோல்வியுற்றுத் துவண்டிருப்பவரும், உயிர்க்கொல்லி நோயால் மரணத்தை எதிர்கொண்டு இருப்பவருமான டாட்ஜ் டைன்ஸ், பிறக்கப் போகும் தனது குழந்தை மற்றும் மனைவியின் எதிர்கால நலனுக்காக, யாருமே துணியாத அபாயகரமான ஒரு திட்டத்திற்கு உடன்படுகிறார். அதன் அடுத்தடுத்த நிகழ்வுகளும், முடிவுமே இப்படத்தின் மொத்தக் கதை. இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தின் முப்பதாவது நிமிடத்தில், கதை நாயகன் டாட்ஜ், தன்னைத் துரத்தும் மரணத்திலிருந்து தப்பிக்க ஓடத் தொடங்கிய நிமிடம் முதல், படமும் படுவேகமாக ஓட்டமெடுக்கிறது. குலை நடுங்க வைக்கும் ஓட்டத்தில், அவனோடு நம்மையும் இழுத்துக் கொண்டே ஓடுகிறான். விரக்தி, கோபம், பாசம்,நட்பு,வருத்தம், கண்களில் மரண பயம் என, பல்வேறு முகபாவ வெளிப்பாடுகளுடன் லைம் ஹெம்ஸ்வொர்த் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் மைல்ஸ் செல்லர் (கிறிஸ்டோபர் வால்ட்ஸ்), மனைவி வால் (சாரா கார்டன்), நண்பன் ரோஜர் (ஜாக் செர்ரி), கண்காணிப்பாளர் கானல் (ஆரன் பூளே), வேட்டையாளர் நிக்சன் (கிரீஸ் வெப்ஸ்டர்), ரீகன் (பில்லி புர்க்), கார்ட்டர் (ஜிம்மி அக்கின்போலா), எல்பிஜே (பேட்ரிக் காரோ), கென்னடி (நட்டாஷா லியோ போர்டிஸோ) ஆகியோர் அவரவர்களுக்குரிய பாத்திரப் படைப்புக்கு நேர்மையான பங்களிப்பை வழங்கியுள்ளனர். தனது உடல்நிலை பற்றி உண்மை தெரிந்த வினாடியில் டாட்ஜ் நிம்மதி பெற்றாலும், தான் ஏமாற்றப்பட்டதையும், பேரபாயத்தில் சிக்க வைக்கப்பட்டதையும் உணர்ந்து கொதித்து வெடிக்கும்போது, “எல்லாம் உனக்கு ஹெல்ப் பண்ணத்தான். நீ செத்துகிட்டுதானே இருந்தே, உன்கிட்ட பணம் இல்ல, காரியர் இல்ல, ஃப்யூச்சர் இல்ல, நீ சந்தோஷமாக வாழ்ந்து எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? நான்தான் உனக்கு புது வாழ்க்கைய தந்திருக்கேன்” என்று மைல்ஸ் செல்லர் கூலாகச் சொல்வதும், தன்னைக் காப்பாற்றும் நண்பனை டார்ஜ் புரிந்து கொள்ளும் தருணமும், எந்தப் படுமோசமான சூழ்நிலைகளிலும் எல்லோருமே விதிகளைக் கடுமையாகப் பின்பற்றும் நிகழ்வுகளும், பதைபதைக்க வைக்கும் கிளைமாக்ஸ்சில், ஹன்டர் நிக்சன் “சூரியன் வந்திருச்சி, கேம் முடிஞ்சு போச்சு. நல்ல விளையாடின, தேங்க்ஸ். எனக்கு ஆட்டத்த காமிச்சிட்டே” என்று ஜென்டிலாக சொல்லிச் செல்வதும் ரசிக்கத்தக்கக் காட்சிகள். மேத்யூ ஜே லாய்ட் டின் அற்புதமான ஒளிப்பதிவும், டோடர் கொபகோவ்வின் அசத்தலான பின்னணி இசையும், வில்லியம்ஸ் டரோ, கெய்ஜர் ஆகியோரின் கச்சிதமான படத்தொகுப்பும் பட இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன. படத்தின் இறுதிக் காட்சியில், மிகவும் பேராபத்தான விளையாட்டின் மரண பயத்தில் இருந்து நாமே விடுபட்ட உணர்வை ஏற்படுத்தி விடுவதுதான், ‘மோஸ்ட் டேஞ்சரஸ் கேம்’ திரில்லரின் வெற்றி. மதிப்பெண் : 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

ஜீவன் சந்தியா

ஜீவன் சந்தியா

திரை விமர்சனம் அங்கிங்கு என்று இல்லாமல், இந்தியச் சமூகத்தில் எங்குமே எப்போதுமே நிலவும் ஒன்றுதான், ‘காதல் கசக்குதையா’. ஜீவன் அபயங்கர், சந்தியா ஜோஷி விஷயத்திலும் அதே நிலைதான். அவரவர் குடும்பங்கள் அவர்களது நட்புக்கு, காதலுக்கு, வாழ்க்கைக்கு, தோழமைக்கு குறுக்கே நிற்கின்றன. தடைகளைத் தாண்டி, அவர்கள் இணைந்தார்களா? வாழ்ந்தார்களா? என்கிற கேள்விகளுக்கு விடைதான், தீபக் பிரபாகர் மாண்டே எழுதி இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள மராத்தி மொழி குடும்பச் சித்திரம்,  ஜீவன் சந்தியா. காதலுக்குக் கண்ணில்லை என்பது மட்டும் இல்லை, வயதும் இல்லை; தேவை மட்டுமே உண்டு. என்ன ஒன்று, ஜீவன் அபயங்கர் (அசோக் சரப்) சந்தியா ஜோஷி (கிஷோரி சஹானே) ஜோடி, அவர்களின் தேவையை உணரும்போது கொஞ்சம் வயதாகி விடுகிறது;  அறுபதுகளில்தான் அவர்களிடத்தில் காதல் வாய்க்கிறது. அதனால் ஒன்றும் அது சுலபமாகி விடவில்லை. வாழ்க்கையில் போராட்டமாகவும், போராட்டமே வாழ்க்கையாகவும் தொடர்கிறது, பரஸ்பரம் கைத்தலம் பற்றியே என்பதால், சுமையும் சுகமுமாக. மர்ம முடிச்சுகள் இல்லை. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. கிளுகிளுப்பான காட்சிகள் இல்லை. சண்டை சர்க்கஸ் இல்லை. கிளாமருக்கு இடமில்லை. விரசம் இல்லை. காமெடி டிராக் இல்லை. இத்தனை ‘இல்லை’ என்றாலும், நிறைவும் இல்லாமல் இல்லை. நடுங்கும் கையைப் பற்றிக் கொண்டு, “மிஸ்டர் அபயங்கர், எனக்கு நீங்க கைய கொடுக்கறீங்களா? இல்ல, பிடிமானத்துக்காக என் கைய  புடிச்சுக்கிறீங்களா?” எனக் கேட்கும் சந்தியாவிடம், “கைய நீ கொடுத்தாலும், நான் கொடுத்தாலும் இந்த வயசுல நம்ம ரெண்டு பேருக்குமே பிடிமானம் தேவைப்படுதே, மிஸஸ் அபயங்கர்” என்பதும்,  ஆட்டோவில் அவர்களுக்குள் ஏற்படும் அறிமுகம், ரெஸ்டாரண்டில் ஜோஷியின் அழகை ஆராதித்து, ஜீவன் அபயங்கர் வண்ணத்துப்பூச்சியை வாழ்க்கைக்கு ஒப்பீடு செய்தலும், சந்தியா மகளிடம் பேச முனையும்போது முடியாமல் போவதும், பின்னர் மகள் பேச முனையும்போது பேச்சை முடித்து விடுவதும், பூங்காவில் அபயங்கர், ஜோஷி பூவைச் சூடிக் கொள்ளச் சம்மதிக்க அந்த மலர் பற்றி எடுத்து விளக்குவதும், கண்ணாடியைப் பார்க்கச் சொல்ல, அவள் பார்ப்பதும், நட்பு காதலாகித் திருமணத்தில் வந்து நிற்கும் நிலையில், பூங்காவில் அவர்களுக்குள்ளான உரையாடலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அபயங்கரோடு சந்தியாவின் பேச்சும், அப்பாவின் வாழ்க்கை குறித்து எடுத்த முடிவை மகன் அங்கூர் சொல்ல, “உன்னுடைய சந்தோஷத்துக்காக வேண்டுமானால் அந்த பேப்பரில் கையெழுத்துப் போடுகிறேன். ஆனா ஒரு விஷயம் ஞாபகத்தில வெச்சுக்கோ, பேப்பர்ல போடற கையெழுத்து நாங்க ஒருத்தர ஒருத்தர் விரும்புறத நிறுத்தப் போறதில்ல” என்று சொல்வதும், நர்ஸ் மமதா கரே வாக அபயங்கர் குடும்பத்தினருடன் அளவளாவதும், ரசிக்கத்தக்க  நயமான காட்சிகள். தொலைபேசியிலோ செல்பேசியிலோ அனைத்துப் பாத்திரங்களும் ஒரு முறை பேசி விடுகிற காட்சி தவறாமல் இடம் பெற்றிருக்கிறது. சந்தியா ஜோஷியை சந்திக்கக்கூட மறுக்கும் அளவிற்கு, மகன் அங்கூர் அபயங்கரின் அதீத வெறுப்புக்கு வலுவான காரணம் இல்லை. பாத்திரத்தின் தன்மையால் அசோக் சரப்பும், கிஷோரி சஹானாவால் பாத்திரமும் மெருகேறி நிற்பது சிறப்பு. ஜீவன் அபயங்கராக முற்பகுதி நடிப்பில் இருந்த இயல்பு, பிற்பகுதியில் சற்று தொய்வடைந்து விடுகிறது. சந்தியா ஜோஷியாக  ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொடர்கிறது நடிப்பில் சரிவே இல்லாத செறிவு. சமீர் தர்மாதிகாரி (அங்கூர் அபயங்கர்),  பிரதீபா அபயங்கர் (ருசிதா ஜாதவ்), ரவீந்திர மக்கானி (டாக்டர் தாமலே), ரமேஷ் தியோ (சந்தீப்), சீமா தியோ (சினேகா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பை, ஏற்ற பாத்திரங்களுக்குப் பழுதில்லாமல்  வழங்கியுள்ளனர். அதுல் பாலச்சந்திர ஜோஷியின் இசையில் இனிமையான  பாடல்களும், பின்னணி இசையும், மங்கேஷ் அஷோக் கடேக்கர் கண்கவர் ஒளிப்பதிவும் மனதைக் கவர்கின்றன. மஹந்தேஷ்வர் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். இரண்டு மணி 15 நிமிடங்கள் ஓடும் படத்தின் நீளத்தை, இயக்குனர் உடன் இணைந்து பேசி, இருபது நிமிடங்களைக் குறைத்திருந்தால், இன்னும் நிறைவாக இருந்திருக்கும். காதல் என்பது எதுவரை என்கிற கேள்விக்கு, இறுதிச் சுவாசம் உள்ளவரை என்கிற பதிலை, அறுபது வயதிற்கு மேற்பட்டவருக்கு என்று இல்லாமல், எல்லா வயதினர் மனதிலும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது, ‘ஜீவன் சந்தியா’. மதிப்பெண்: 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

ஜெய் பீம்

ஜெய் பீம்

திரை விமர்சனம் யாரெல்லாம் மனித உயிருக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டுமோ அவர்களே அதற்கு எதிராக இருந்தால் என்ன விளைவு என்பதுதான், ட்டி.ஜெ.ஞானவேல் எழுதி இயக்கி, சூர்யா-ஜோதிகா தயாரிப்பில், முதன்மைப் பாத்திரத்தில் சூர்யா நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம். கல்வி அறிவுக்கு வாய்ப்பில்லாத, சாதி பண பலமில்லாத ராஜாக்கண்ணு, ஒரு திருட்டுப் புகாரில் உறவினர் சிலரோடு விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர், அவனது மனைவி செங்கேணியிடம், அவர்கள் தப்பித்து விட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். நம்ப மறுத்த மனைவி, காவல்துறையினரின் சித்திரவதை நெருக்கடிகளைத் தாண்டி, கையிலும் வயிற்றிலும் குழந்தைகளோடு சந்துரு என்கிற வழக்குரைஞர் துணையுடன், காணாமல் போன தனது கணவனை மீட்டுத் தர நீதிமன்றங்களில் சட்டப் போராட்டத்தை நடத்துகிறார். அதன் முடிவு என்ன என்பதே ஜெய் பீம் படத்தின் கதை. “ஒரு ஆளு மேல ஒரு கேசுதான் போடணும்னு சட்டம் இருக்கா என்ன? தலைக்கு ரெண்டு கேசு போட்டு வையுங்க, எவன் வந்து கேட்கப் போறான்?” – ஜெயிலர், “நேத்து அடி வாங்கினான், இன்னிக்கு வந்து போராட்டம் பண்றான். இதுதான் ட்ரீட்மென்ட் கொடுக்கற லட்சணமா? யூஸ்லெஸ் ஃபெலோஸ்” – காவல்துறை அதிகாரி “விஐபி கேஸ்கூட இல்லை மேடம், சாதாரண டிரைபல் உமன் கேசுதான்” – உயர்நீதிமன்ற வழக்குரைஞர் “ஒரு டிரைபல் பொம்பளைய ஹைகோர்ட் வரை வர விட்டிருக்க” – அட்வகேட் ஜெனரல் “குற்றத்தைத் தடுக்கணும்னா எல்லா நேரமும் சட்டப்படி நடக்க முடியாது சந்துரு” – காவல்துறை அதிகாரி “நாளை ஒரு நாள் மட்டும் சமாளிச்சுட்டா போதும், ஜட்ஜ் பேனல் மாறுது” – அட்வகேட் ஜெனரல் – லாக்கப் உள்ளே இருப்பது மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் இந்தவகை மனோநிலைக்கு மத்தியில், வெளியே இருப்பதும்கூட பேராபத்துதான் என்பதை, இதைப்போன்ற வசனங்கள் மூலம் படம் துல்லியமாகச் சித்தரிக்கிறது. “எம்மா நடந்தாலும் எங்க ஆளுங்களுக்கே பட்டா கெடைக்கறதில்ல. நீங்க என்னமோ பட்டாங்கறீங்க, படிங்கறீங்க..” என மைத்ரா டீச்சரிடமும், “பாம்பு பிடிக்க வேணாம்னுதாய்யா படிக்க ஆசைப்பட்றான்” என்று தாசில்தாரிடமும், “டே பையா, மனுஷங்கிட்ட இருந்து ஒத்தி இருந்தாதான் உனக்கு நல்லது, போயிட்டு வா” என்று பாம்பிடமும், “இந்தக் காயமெல்லாம் கொஞ்ச நாள்ல ஆறிடும். ஆனா திருட்டுப் பட்டம் காலத்துக்கும் தங்கிடும்டா…” என்று சகோதரன் இருட்டப்பனிடமும் கூறும், அப்பாவி இருளர் ராஜாகண்ணுவாக வரும் கே.மணிகண்டன் –    “உழைச்சுப் பொழைக்க தெம்பு இருக்கும்போது, நாங்க ஏஞ்சாமி திருடனும்?” என திருட்டுத் தாலி என்று பரிகசிக்கும் காவலரிடம் சொல்லும்போதும், “இந்தக் கேஸ்ல தோத்தாகூடப் பரவாயில்லை, புள்ளைங்ககிட்ட போராடித் தோத்துட்டேன்னு சொல்லிக்கிறேன்” என டிஜிபியிடம் சொல்லும்போதும், டிஜிபி சொல்லியபடி போலீஸ் ஜீப்பில் ஏறாமல் நடந்தும் பஸ்ஸிலுமாக வீட்டிற்குத் திரும்பும்போதும், சித்திரவதைக்கு இடையில் வெளியே சாப்பிட ஒரு வாய் எடுத்து வைக்கும்போது லாக்கப் உள்ளே ஆணும் பெண்ணுமாகக் காவலர்களின் சித்திரவதைகளால் அலற, அழுதுகொண்டே சாப்பாட்டைத் தவிர்க்கும்போதும், தனது கணவனின் பெயர் ஒரு பாடலில் வருகிறது என்கிற ஒரே காரணத்தால், அந்தப் பாடலையே நேசிக்கும் போதும், சுயமரியாதையும் பாசமும் நேசமும் கொண்ட பெண் செங்கேணியாக லிஜோமோல் ஜோஸ் – “அசிங்கம் அவங்க பேச்சில இல்ல, நம்ம நடத்தையிலும் இருக்கு” என்று சக காவல் அதிகாரியிடம், “ஜனநாயகத்தை நில நிறுத்தணும்னா சில நேரத்துல சர்வாதிகாரத்தக் கையிலெடுத்துதான் ஆகணும்” என்று வழக்குரைஞர் சந்துருவிடம், “டிபார்ட்மெண்ட்டுக்காக எதையாவது விட்டுக் கொடுக்கலாம், எதற்காகவும் என் மனசாட்சிய விட்டுக்கொடுக்க முடியாது, சாரி சார்” என்று டிஜிபியிடம், உச்சபட்சமாக உயர்நீதிமன்றத்தில் மனசாட்சிப்படி விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்து, சாட்சிகளின் வாக்குமூலம் வழங்கும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ் – “அப்போ கடைசிவரை வேடிக்கை மட்டும்தான் பாப்பீங்க? ஏழாயிரம் மனுஷங்க சார்”, “இல்ல சார், நீங்க இவ்வளவு பாசிட்டிவா சொல்றதுதான், இன்னும் எனக்குச் சந்தேகமா இருக்கு” சந்திரனிடம் அவ்வப்போது பேசும்போதும், “திருடங்க இல்லாத சாதி இருக்கா நடராஜ்? முதல்ல, ஒரு ஜாதி பெயரைச் சொல்லி அவங்களை இப்படி பிராண்ட் பண்றத நிப்பாட்டுங்க” என்று காவல்துறை அதிகாரியிடம் கூறும்போதும், ” “எந்த ஆதாரமும் இல்லாமல் கேஸ் போடுவது, போலீசை எதிர்த்து அல்ல, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் எதிர்த்து. இந்த அரசாங்கத்த எதிர்த்து. சவாலான போராட்டமாய் இருக்கும், தயாரா இருங்க” என்று செங்கேணியிடமும், மைத்ராவிடமும் சொல்லும்போதும், “எதையும் சாதிப்பதற்காக இந்தக் கேஸ எடுக்கல சார். ஒரு இன்னசன்ட் டிரைபல் உமனுக்கு ஜஸ்டிஸ் கிடைக்கணும்னு போராடறேன். இன்னிக்கு செங்கேணி, நாளைக்கு இன்னொரு பொண்ணுக்கு ஆதரவா நிப்பேன். நீதி கிடைக்கலன்னா, ரோட்டுல நின்னு போராடுவேன். போராடறதுக்கு லா எனக்கு வெப்பன், தட்ஸ் ஆல்” என்று அட்வகேட் ஜெனரல் ராம்மோகனிடம் தெளிவு படுத்தும்போதும், “தப்பு பண்றவங்களுக்கு ஜாதிகள் நிறைய இருக்கு சார், பாதிக்கப்பட்டவங்களுக்கு நாமதானே இருக்கோம்? நாமும் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போலாம் சார்” என்று ஐஜி பெருமாள்சாமியிடம் உறுதியாகத் தெரிவிக்கும்போதும், “காந்தி நேருன்னு முக்கியமான தலைவரெல்லாம் இருக்காங்க, ஏன் அம்பேத்கர் மட்டும் இல்ல!?” என்று வினவும் போதும், “ஏழு பேரா, ஏழாயிரம் பேராங்கறது முக்கியம் கிடையாது. பாதிக்கப்பட்டவங்க யாராயிருந்தாலும், அவங்க எத்தனை பேரா இருந்தாலும் நீதி கிடைக்கணும். அத உறுதி செய்யறது இந்த நீதிமன்றத்தோட தார்மீகக் கடமை, மை லார்ட்”, “பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, அவங்களுக்கு நடந்த அநீதியைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்”, “நீதிக்கு ஆதரவான வார்த்தைகளவிட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்தானது”, “வரலாறு தெரியாதவங்களுக்குச் சொல்றேன். கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட புருஷனோட மரணத்துக்கு நீதி கேட்கற இந்தப் பொண்ணு செங்கேணிதான், நம்ம கண்ணு முன்னாடி நிக்கற கண்ணகி”, “கணவன இழந்த செங்கேணிக்கு ஊர் மையத்துல ஒரு பட்டா வழங்கனும்னு கேட்டுக்கறேன்” என்று ஆணித்தரமான வாதங்களை உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைக்கும்போதும், சட்ட நிபுணத்துவம் மட்டுமல்லாது மனிதநேயமும் கூடிய உயர்நீதிமன்ற வழக்குரைஞராக வரும் சூர்யா – என அனைவருமே கதை, சம்பவங்கள், காட்சியமைப்பு, வசனங்கள் சேர்ந்து செதுக்கிய இம்முதன்மைப் பாத்திரங்களில் ஒன்றி, உச்சபட்ச அர்ப்பணிப்புத் திறமையால், அவை ‘பளிச்’சிட்டுத் துலங்கச் செய்துவிடுவது தனிச்சிறப்பு. அவ்வாறே, குழந்தை அல்லி (பேபி ஜோஷிகா மாயா), எஸ்.ஐ. குருமூர்த்தி (தமிழ்), ஆசிரியை மைத்ரா (ரஜிஷ விஜயன்), தலைமைக் காவலர் வீராச்சாமி (சூப்பர்குட் சுப்பிரமணி) காவலர் கிருபாகரன் (பால அசன்), அட்வகேட் ஜெனரல் எஸ் ராம்மோகன் (ராவ் ரமேஷ்), வழக்குரைஞர் சங்கரன் (எம்.எஸ்.பாஸ்கர்), பப்ளிக் ப்ராசிக்யூட்டர் செல்லபாண்டியன் (குரு சோமசுந்தரம்), ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன் (இளவரசு), காவல்துறை அதிகாரி நடராஜ் (ராஜேஷ் பாலச்சந்திரன்), டிஜிபி எஸ் ராதாகிருஷ்ணன் (ஜெயபிரகாஷ்) தத்தம் பங்களிப்பைக் குறைவில்லாமல் வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவும் (எஸ்.ஆர்.கதிர்) இசையும் (சீன் ரோல்டன்) படத்திற்கு வலு சேர்த்துள்ளன. தோய்வே தோய்ந்து போகும் அளவிற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு கச்சிதம். கலை இயக்குனர் மற்றும் காஸ்ட்டிங் டைரக்டர் வெகுவான பாராட்டுக்குரியவர்கள். காவல்துறையினரின் லாக்கப் சித்திரவதைகள் திரையைத் தாண்டி வந்து நம்மைத் தாக்குகின்றன. இனி, இது நின்று விடுமா? சாத்தான்குளம் சம்பவமே வெற்றிமாறனின் ‘விசாரணை’க்கு பிறகும்தானே! ஒட்டுமொத்தமாக நிற்காது, குறையலாம். அப்பட்டமாக ஒரு அப்பாவியைக் கொலை செய்த, அதை மறைக்கப் பாடுபட்ட அத்தனை நெஞ்சழுத்தக்காரர்களின் மனசாட்சியையும் நிச்சயம் இது உலுக்கி இருக்கும். அவ்விதம் அவர்கள் செய்ய எத்தனிக்கும்போது, இனி யோசிக்க வைக்கும். ஜெய் பீம் உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டு இருந்தாலும், சில சித்தரிப்புகள் அதனுடன் சேர்க்கப்பட்டிருப்பது, கலையம்சம் மிகுந்த படமாகவும் பரிணமிக்கச் செய்வதுடன், பட்டவர்த்தனமான உண்மைகளைக் கூறும் ஆவணப்படங்களில் இருந்து விலகி நிற்பவர்களையும்கூட, ஆவணப்படுத்தப்பட்ட உண்மை நிலையை அறியச் செய்வதும்தான் ! சித்தரிப்புகளில் சில, சிலரிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்குமாயின், அவை சரியாகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றது; அவ்விதமான சித்தரிப்புகள் இனியும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கேதான் உண்டு. ஜெய் பீம் கொண்டாடப்பட வேண்டிய படம் மட்டுமல்ல; அது பேசும் உண்மைகளை, திரையரங்க வெளியீட்டின் மூலமும் கடைகிராம மக்கள் வரை, கொண்டு சேர்க்கப்பட வேண்டிய படமும்கூட. முழுத் தகுதிகள் இருந்தும் விருதுகள் கிடைக்காமல் போகலாம் – காட்டப்படும் உண்மைகளையும் சேர்த்துச் சேர்த்து அங்கீகரிப்பதாகி விடுமோ எனும் அச்சத்தால். இதை வெறும் படமாக மட்டும் கடந்து செல்லாமல், பல பரிமாணங்களில் அது தரும் பாடத்தையும், படத்தைக் காண்பவர் எல்லாம் பாராட்டித் தீர்ப்பதுதான், அதன் வெற்றி. 27 ஆண்டுகளுக்கு முன்பு, ஜஸ்டிஸ் கே.சந்துரு சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞராக இருந்தபோது கையாண்ட வழக்கின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஜெய் பீம் படத்தில், வழக்குரைஞர் சந்துருவாக பாத்திரமேற்று உயிர்ப்பித்ததின் மூலம், நீதி நாயகம் கே.சந்துரு மற்றும் நடிகர் சூர்யா பரஸ்பரம் கௌரவம் பெறுகிறார்கள். இப்படம், நடிகர் சூர்யாவின் நடிப்புத் தொழிலில் மட்டுமல்ல, அவரது வாழ்க்கையிலேயே ஒரு மைல்கல். மதிப்பெண் : 9/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

சர்தார் உத்தம்

சர்தார் உத்தம்

திரை விமர்சனம் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி, பஞ்சாப் மாநில ஆளுநர் லெப்டினன்ட் மைக்கேல் ஓ டயர் ஆணையின் பேரில், அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில், அமைதியாகக் கூடியிருந்த 20 ஆயிரம் பேர்கள் மீது முன்னெச்சரிக்கை ஏதும் செய்யாமல், பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு டயர் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட, ரத்தக் குளியலில் ஆயிரக்கணக்கில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் கொல்லப்பட்டனர். அப்படுகொலையைக் கண்ணுற்றுத் தகித்துப் போன மாணவர் உத்தம் சிங், 1933 ஆம் ஆண்டு ஆப்கான், ரஷ்யா வழியாகக் கடும் பயணம் மேற்கொண்டு, லண்டனுக்குச் சென்று, படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயர் மரணமுற்றதை அறிந்து, அடுத்து அப்படுகொலைக்கு ஆணையிட்ட அன்றைய ஆளுநர் மைக்கேல் ஓ டயரை 1940 மார்ச் 13 ஆம் தேதி சுட்டுக் கொன்று, ஜூலை 31 ஆம் தேதி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வரலாற்றின் இந்தி திரை வடிவம்தான், விஷால் கௌசல் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து, சூஜித் சிர்கார் இயக்கி அமேசான் பிரைம் வீடியோவில் தமிழில் வசன எழுத்துகளுடன், தற்போது வெளியாகியுள்ள ‘சர்தார் உத்தம்’. படம் ஆரம்பித்து இருபத்தேழாவது நிமிடத்தில் எதிர்பாராத அதிர்ச்சிகரமான அந்த நிகழ்வு நடந்தேறிவிட, அதற்குப் பிறகும் படம் தொடர்கிறது. அடுத்த ஒன்றேகால் மணி நேரத்தில், பேரதிர்ச்சியான தீர்ப்பு வெளியாகிவிட, படம் முடியவில்லை, தொடர்கிறது. அதற்கடுத்த 15 நிமிடங்களில் முத்தாய்ப்பாக, எல்லாவற்றுக்கும் அடிப்படையான நிகழ்வு விரிந்து, 24 நிமிடங்கள் நீடித்து மனதை ரணமாக்கிட, அதற்குப் பிறகான நிகழ்வில் உள்ளம் கனத்தும் போகிறது. ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் ஓடும் இந்தப்படத்தின் முக்கியமான ஒவ்வொரு நிகழ்வுக்குப் பிறகும், தொய்வில்லாமல் விறுவிறுப்புடன் படம் தொடர்வதற்கு அடித்தளம், வலுவான திரைக்கதையும், அர்ப்பணிப்புடன் கூடிய இயக்கமும்தான். சுதந்திரமும் உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில், அந்தச் சுதந்திரத்திற்காகவும் மனித உரிமைக்காகவும் போராடும் மனித குலப் பிரதிநிதிகளின் வீரமும் தியாகமும் செறிந்த வரலாற்றின் ஒரு கீற்றுதான், சர்தார் உத்தம். லண்டன் காக்ஸ்டன் ஹாலில், காவல்துறை பிடியில், எதிர்த்து ஆரவாரம் செய்யும் மக்களிடையே, பதட்டம் இல்லாமல் தெளிவான முகத்துடன் வெளியே வரும்போதாகட்டும், ஸ்காட்லாந்து யார்டின் மூன்றாம் தர விசாரணை நடைமுறையின் போதுகூட “மரணத்தப் பார்க்கற நான், வலியை உணரல” என்று சிரித்துக் கொண்டே சொல்லும்போதாகட்டும், சுதந்திரத்திற்காகப் போராடுவது குறித்து எலீன் பால்மரிடம் விவாதிக்கும் போதாகட்டும், இந்தியர்களைப் பற்றி, சுதந்திரத்திற்காகப் போராடும் புரட்சியாளர்களைப் பற்றி மைக்கேல் ஓ டயர் பேச்சுகளைக் கேட்ட உணர்வில் தகிக்கும் போதாகட்டும், “அதனாலே பகத்சிங் பத்தி பேசாதே… அவரப்பத்தி உனக்குத் தெரியாதா?” என்று டிடெக்டிவ் ஸ்வைனிடம் சொல்லும் போதாகட்டும், கள்ளம் கபடமற்ற தோழி ரேஷ்மாவுடன் அளவளாவும் போதாகட்டும், “உங்க பிரிட்டிஷ் சட்டத்தில் இந்தக் கொலை, போராட்டமாகக் கருதப்படுமா? அல்லது கொலையாகக் கருதப்படுமா?” என்று லாயர் ஹாட்சிசனிடம் அப்பாவியாகக் கேட்கும் போதாகட்டும், “என்னைச் சுடு, இந்த வழக்கே நேர விரயம். பேசாம என்னைச் சுட்டு விடு. டயர் குற்றவாளி, நீங்களும் உங்க கொள்கைகளும்தான் குற்றவாளிகள்…” என்று துவங்கி, தண்டனை அறிவிப்புக்குப் பிறகு, “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக, கொடுங்கோன்மை ஒழிக, புரட்சி நீண்ட காலம் வாழ்க” என தீரத்துடன் நீதிமன்றத்தில் வாதாடுவதாகட்டும், “நான் ஒரு புரட்சியாளன் என்பதை இந்த உலகுக்குத் தெரிய வைங்க” என்று ஸ்வைனிடமும், ‘செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கோரினால் வாழ முடியும்’ என்று கூறும் எலீன் பால்மரிடம் மறுத்து, “என் நண்பன பாக்கற நேரம் வந்துடுச்சு…” என்று பகத்சிங்கை நினைத்துச் சொல்லும் போதாகட்டும் இப்படத்தில் விஷால் கௌவுசல், சர்தார் உத்தம் சிங்காகவே வாழ்ந்திருக்கிறார். மைக்கேல் ஓ டயர் (ஷான் ஸ்காட்), டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஸ்வெயின் (ஸ்டீபன் ஹோகன்), பகத்சிங் (அமோல் பரசார்), ரேஷ்மா (பணிட்டா சந்து), ஜெனரல் ரெஜினால்ட் டயர் (ஆண்ட்ரூ அவில்), எலீன் பால்மர் (கிறிஸ்டியன் அவெர்டன்) ஆகியோரும் தத்தம் பாத்திரத்திற்கு உரிய பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர். சிந்தனைக்குரிய வசனங்களும் தத்ரூபமான காட்சியமைப்புகளும் அருமையான ஒளிப்பதிவும் மிகவும் பொருத்தமான பின்னணி இசையும் நேர்த்தியான படத்தொகுப்பும் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பும் படத்தின் சிறப்புக்குப் பக்கபலம். “ஒரு உண்மையான புரட்சியாளர் சில கொள்கைகள பின்பற்றணும். நீங்க பாரபட்சமாக, மத வெறியனாக, சாதி வெறியனாக இருக்க முடியாது. பொருளாதார அல்லது சமூக வர்க்க வேறுபாடு இல்லாது கடைப்பிடிக்கும் ஒரே உண்மை, சமத்துவமாகும். எல்லாரையும் சமமாக நடத்தி மனித நேயத்தில் வலுவான நம்பிக்கையோடு இருப்பது…. “ “அவங்க என்னைக் கொன்று விடலாம். ஆனா என் கருத்துகள கொல்ல முடியாது. ஒரு கொள்கைக்கான நேரம் வந்துட்டா அதன் பிறகு அதைத் தடுக்க முடியாது. நீங்க எதிர்த்திடா விட்டால் அல்லது ஒடுக்குபவருடன் போராடாம விட்டால், உங்க உரிமைகள் உங்களுக்கு எப்பவுமே கிடைக்காது. ஒரு உண்மையான கொள்கை இன்றிக் கிடைக்கும் சுதந்திரம், அடிமைத்தனத்தை விட மோசமாக இருக்கும். சுதந்திரம் நமது பிறப்புரிமை, எனவே, இந்த அடக்குமுறை ஆட்சியை நாங்கள் நிராகரிக்கிறோம்”. இவை யாவும் பகத்சிங்கின் வார்த்தைகள்தாம்; எனினும், அவரது நிலையில் உலகில் இருக்கும் எவர் சிந்தனையும் இவையாகத்தான் இருக்கக்கூடும். முதல், இரண்டாம் உலகப் போர்களில் பிரிட்டிஷ் நாட்டிற்காக 2.6 மில்லியன் இந்தியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்காலக் கொள்கையின்படி ‘மனித ஏற்பாடா’க உருவாக்கப்பட்ட வங்காளப் பஞ்சத்தால் 4 மில்லியன் இந்தியர்கள் பட்டினியால் இறந்திருக்கிறார்கள். நூறு ஆண்டுகள் கடந்தும், நிகழ்த்திய ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு, பிரிட்டிஷ் அரசிடமிருந்து அலுவல் பூர்வமான மன்னிப்பை இந்தியாவால் இன்னும் பெற இயலவில்லை என்பது கூடுதல் கொடுமை. எது தேசபக்தி என்று பாடம் எடுக்காமல், இதுதான் தேசபக்தி என்று பாடமாகவே வாழ்ந்து, மன்னிப்புக் கேட்டு மறுவாழ்வு பெறுவதை மறுத்து, சுத்த சுயமரியாதை வீரனாகத் திகழ்பவன்தான், சர்தார் உத்தம்சிங். வரலாற்றை மறைப்பதற்கோ திருத்துவதற்கோ முன்னரே, அதனைப் படித்து விழிப்புணர்வு பெறுவது மிகவும் அவசியம்; அந்த வகையில், ‘ சர்தார் உத்தம் ‘ வரலாற்றுத் திரைப்படத்தைப் பார்ப்பதும்கூட. மதிப்பெண் : 9/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

தலைவி

தலைவி

திரைவிமர்சனம் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையிலோ சுய வரலாற்று அடிப்படையிலோ அல்லாது, அஜயன் பாலா எழுதிய நூலைத் தழுவி, அதே பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், கங்கனா ரனாவத் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘தலைவி’. பதிவாகியுள்ள அரசியல் வரலாற்று நிகழ்வுகளுடன், யூகங்கள் மற்றும் செவிவழி அடிப்படையிலான சில செய்திகளையும் தொகுத்து, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியைச் சுவையாக இயக்குனர் விஜய் காட்சிப்படுத்தியிருக்கிறார். எனவே, இதிலுள்ள உண்மைத்தன்மை நூறு விழுக்காடும் உத்தரவாதத்திற்கு உரியது அல்ல. விருப்பமில்லாமல் வந்த திரைத்துறையிலும் விருப்பமில்லாமல் வர நேர்ந்த அரசியலிலும் அப்போது நிலவிய ஆணாதிக்கத்தைத் துணிவுடன் எதிர்த்து, சுயமரியாதையுடன் கூடிய பெண்ணாக, வெற்றியும் பெற்ற ஜெயலலிதாவின் வாழ்க்கைதான் ‘தலைவி’யில் விவரிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையும் அரசியலும் பின்னிப்பிணைந்த தமிழக வரலாற்றின் தலைவி அத்தியாயத்தில், ஜெயலலிதாவாகட்டும், ஆர் எம் வீரப்பனாகட்டும், வி.என்.ஜானகியாகட்டும், அத்தனை பேரும் சுற்றிவரும் மையப்புள்ளி எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆரின் விருப்பம் என்னவாக இருந்தாலும், இவர்கள் அனைவரது விருப்பமும், அவர் ஒருவராகத்தான் இருந்திருக்கிறது. அதனை வெளிப்படுத்திய விதம் அவரவர்களுக்கு ஏற்ப, மாறுபட்டும் இருந்திருக்கிறது, அவ்வளவுதான். தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றியதே கலைஞர்தான் என்றாலும், அதன் பிறகு அவரது அரசியலும் அவரைச் சுற்றியேதான் தொடர்ந்தது என்பதும் உண்மையே. இப்படத்தின் கதை ஜெயலலிதாவை நோக்கியது என்கிற வகையில், எம்ஜிஆரின் அரசியல் செயல்பாடுகள், அவரது காலத்தில் கலைஞரின் அரசியல் எல்லாம் ஒரு வரையறைக்குள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஜெயாவாகக் கங்கனா ரனாவத் நிறைவாகவே தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். ஆரம்பத்திலிருந்தே ஆர். எம்.வீரப்பன் உடனான மோதல், சீண்டல், அலட்சியம், கிண்டல், எகத்தாளம், எம்.ஜி.ஆர். மீதான அதீத அன்பு, அவ்வப்போதான பிணக்கு, சமயோசித அறிவு, திறன், கோபம், கண்டிப்பு, உணர்ச்சி வயப்படுதல் என ஜெயாவின் பன்முகத் தன்மையை, படத்தில் கிடைத்த வாய்ப்பில் வெளிப்படுத்தியுள்ளது சிறப்பு. அரவிந்த் சுவாமிதான் எம்.ஜி.ஆர். கனப்பொருத்தம். அவரிடமே வெளிப்பட்டிராத முக பாவங்களைக்கூட, இதில் இவர் வெளிப்படுத்தி இருப்பது அருமை. நாசர் (கலைஞர் கருணாநிதி), சமுத்திரக்கனி (ஆர் எம் வீரப்பன்) இருவரும் ஏற்ற பாத்திரத்தைப் பழுதில்லாமலும் அட்டகாசமாகவும் செய்துள்ளனர். உடல்மொழியுடன் குரலும் நாசருடையதே என்றால், அவருக்குக் கூடுதல் பாராட்டு. பாக்யஸ்ரீ (சந்தியா), ரெஜினா கஸன்ட்ரா (சரோஜாதேவி), மதுபாலா (வி என் ஜானகி), தம்பி ராமையா (மாதவன்), ஷாம்னா காசிம் (வி.கே. சசிகலா), ராதாரவி (எம்.ஆர்.ராதா) தத்தம் பாத்திரத்தில், உரிய பங்களிப்பைக் குறைவின்றி வழங்கியுள்ளனர். ‘அறிந்தேன் ஆண்மையினை… உண்மையைத்தான் சொன்னேன்’ ‘செட்’டில் எம்.ஜி.ஆரிடம் சரோஜாதேவி, ‘செட்டுக்குள்ள நடிக்கறதுக்கு மட்டும்தான் நீங்க சம்பளம் தர்றீங்க. வெளியே வந்து நீங்க எடுக்கிற பாடத்த கேட்டுக்கறதுக்கு இல்ல..’ ஆர்.எம்.வீ.யிடம் சரோஜா தேவி, ‘தப்பில்லம்மா, அம்மா பண்ணதான், தப்பு’ அம்முவிடம் மாதவன், ‘இப்ப மரியாதை மனசுல வந்துருச்சு’ மாதவனிடம் அம்மு, ‘காப்பாத்தினது கடவுள் இல்லை. இதோ, இந்த மருத்துவரும் மருத்துவமும்தான். அறிவுதான் கடவுள்’ கலைஞர், ‘நல்லா இருக்கு; நான் உங்கள ரெஸ்ட் எடுக்க சொன்னா, நீங்க என் நிம்மதிய கெடுக்கப் பாக்கறீங்களா?’ எம்ஜிஆரிடம் ஜெயா, ‘இது என் படம். என் பணம். யார் வாழணும், யார் சாகணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன். டென்ஷனா இருந்துச்சுன்னா மெதுவடை சுட்டு மெதுவா சாப்பிடு’ ஜெயாவிடம் ஆர்.எம்.வீ. ‘உண்மையைச் சொல்லுங்க; ரெண்டு பேர்ல யாரு பெஸ்ட் ஆக்டர்?’ கேட்கும் மாதவனிடம் ‘அது கொஞ்சம் கஷ்டம்தான். ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? யார் பெஸ்ட் ஆக்டர்ன்னா, அது நான்தான்’ என்று சொல்லும் ஜெயா, ‘விரும்பறவங்களோட மனச கோபப்படுத்தலாம், காயப்படுத்தக் கூடாது’ அம்முவிடம் சந்தியா, ‘என்னைத் தவிர என் வாழ்க்கைக்கு எல்லாரும் முடிவெடுக்கிறாங்க, எனக்கு ஒரு வேலையும் இல்ல’, ‘இது விட்ட மாதிரி தெரியல, வேணான்னு வெட்ன மாதிரி தெரியுது’ ‘நாம விரும்பறவங்க நம்ம பக்கத்துல நிற்கும்போது எப்படி சந்தோஷம் இல்லாம இருக்க முடியும்? அது நிஜமல்ல, வெறும் பிம்பம்தான்னு நினைக்கும்போது எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?’ ஜெயா, ‘நாம மக்கள விரும்பினா மக்கள் நம்மள விரும்புவாங்க. அதான் அரசியல்’, எம்ஜிஆர், ‘ஜானகி அம்மாதான் எம்.ஜி.ஆரோட மனைவி, அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா, மனைவி தலைவியாக முடியாது’ ஜெயா. இப்படி வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம்; பலே, மதன் கார்க்கி. காமிரா கோணங்கள், லைட்டிங், ஏரியல் ஷாட்ஸ், பாடல்களைப் படமாக்கிய விதம் என விஷால் விட்டலின் ஒளிப்பதிவு அருமை. இணையாக, ஜி வி பிரகாஷ் குமாரின் அந்தந்தக் காலகட்டத்திற்கான திரை இசை உட்பட, உணர்வுபூர்வமான பொருத்தமான பின்னணி இசையும் அருமை. படத்தொகுப்பு அந்தோணி. தொலைக்காட்சித் தொடராகவோ, திரைப்படமாக இருந்தால் பாகங்களாகவோ எடுக்க வேண்டிய அளவிற்கு விரிவாக்கம் தேவைப்படுகின்ற இக்கதையை, இரண்டரை மணி நேரத்தில் சுருக்குவது என்பது மிகவும் சிரமம்தான். விளைவு, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்கிற விதத்தில், நிகழ்வுகளின் ஓட்டத்தில் தவிர்த்திருக்க வேண்டிய, ஆனால் இயலாத திடீர்த் தாவல்கள் நிறைய. எம்.ஆர்.ராதா ஓர் இரவில் எம்.ஜி.ஆரைச் சந்திக்கச் செல்கிறார். சுடும் சத்தம் கேட்கிறது. அடுத்து எம்.ஆர். ராதா காயத்தோடு வெளியேறுகிறார்; எம்ஜிஆர் ரத்தவெள்ளத்தில் தரையில், என்று துண்டு துண்டாகக் காட்சிகள். டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசி, எடுத்த முடிவை உடனடியாக எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்காத ஜெயலலிதா, ‘இதை எப்போ, எங்க சொல்லனும்னு எனக்குத் தெரியும், நான் சொல்லிக்கிறேன்’ என்கிறார். ஆனால், அதை இறுதி வரை சொல்லாமல் போனதாகத்தான் படத்தில் தெரிகிறது. அதே போன்று, சிகிச்சை பெற்று இந்தியாவுக்குத் திரும்பியதில் இருந்து, இறக்கும்வரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைச் சந்திக்காதது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திரைத்துறையிலும் அரசியல் துறையிலும் தவிர்க்க இயலாத பிரமுகர்களாகத் திகழ்ந்த, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எம். வீ சார்ந்த நிகழ்வுகளும் செய்திகளும், ஏறக்குறைய அனைத்தும் அறிந்தவைதான் என்கிற வகையில், இந்தக் கதையில் புதுமை இல்லைதான். என்றாலும், பிந்தைய ஆட்சி அதிகாரம், வாழ்க்கை, அரசியல் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எழக்கூடிய எந்தவிதமான மதிப்பீடையும் தவிர்த்த மனநிலையுடன், ஆணாதிக்கம் மிகுந்த திரைத்துறையில் நுழைந்த ஜெயலலிதா அங்கும், அதற்குப் பின்னர் பல இடர்ப்பாடுகளைத் தாண்டி, ‘தலைவி’யாக அவதாரமெடுத்த அதே ஆணாதிக்கம் மிகுந்த அரசியலிலும் சுயமரியாதையுடன் கூடிய பெண்ணாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதான நிகழ்வுகள் அனைத்தையும் ஒருசேர ‘மலரும் நினைவு’ களாக, இப்பாத்திரங்களை ஏற்ற கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பில், மீண்டும் திரையில் காண்பது, சுவைதரும் அனுபவமே. மதிப்பெண் : 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

ச ன் னி

ச ன் னி

திரை விமர்சனம் கொரோனா பேரிடர் காலத்தில் தனிமைப்படுத்தலின் துயரத்தை ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அனுபவித்திருப்போம். அத்துடன், தனிப்பட்ட துயரங்கள் கூடுதலாகச் சேர்ந்து கொள்ளுமாயின், அக்கடுந்துயரின் உச்சம் ஒரு மனிதனை எவ்விதமாகவெல்லாம் ஆட்டுவிக்கும் என்பதை, வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தியிருக்கும் படம்தான் ‘சன்னி’.ரஞ்சித் சங்கர் எழுதி இயக்கி, ஜெய சூர்யாவுடன் இணைந்து தயாரித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள 93 நிமிடங்களே ஓடும் மலையாளத் திரைப்படம். வளைகுடா நாட்டில் இருந்து திரும்பும் சன்னி (ஜெயசூர்யா), கொச்சி விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தலின் பொருட்டு ஹயாத் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு வந்து சேர்கிறார். ஹோட்டலின் வரவேற்பாளர் ( பூர்ணிமா கிருஷ்ணன் ) குவாரண்டைன் விதிகளைக் கூறி, அறையின் சாவியை வழங்குகிறார். இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமான் ஒரு முறை தங்கியிருந்த ‘சூட்’ தான், சன்னியின் அறை. அந்த அறையில் சன்னியுடன் இருப்பது அவனது செல்போன் மட்டுமே. நண்பன் கோஷி ராஜேஷ் (அஜு வர்கீஸ்) துவங்கி, ‘பழக்க’மான டாக்டர் அனுராதா (மம்தா மோகன்தாஸ்), கேப் டிரைவர் (கேஜி பினாய்), மணிலெண்டர் ஜேக்கப் (சித்திக்), எஸ்.ஐ. சதாசிவன் நாயர் (விஜயராகவன்), டாக்டர் ஈரலி (இன்னொசென்ட்), பிரிதொரு அறையில் குவாரன்டைனில் இருக்கும் அதிதி (ஸ்ரீதா சிவதாஸ்), அட்வகேட் பால் (விஜய் பாபு), விவாகரத்து கோரும் கருவுற்ற மனைவி நிம்மி (ஷிவதா) என்று பேசி முடிப்பதுதான் படம். இதில், சன்னியுடன் தெரிவது கேப் டிரைவர், அதிதி மட்டுமே. மற்றவர்கள் அனைவரும் ஏற்ற இறக்கங்களுடனான அசரீரிகள்தான். படம் முழுவதும் தொடர்ந்து நிறைந்திருக்கிற ஒரே முகம், சன்னிதான். அறைக்குள் ஒரு ‘முடிவு’டன் நுழைந்து, மணிலெண்டரிடம் அதையும் வெளிப்படையாகவே தெரிவித்து முயற்சித்த சன்னியை, அவனது உடல் நிலையை விசாரிக்கும் எஸ்.ஐ. ஏற்பாடு செய்த உளவியல் மருத்துவர் ஈரலியின் தொடர் ஆலோசனைகளும், நேரான மேல் அறையில் இருந்து பறந்து வந்த துப்பட்டா மூலம், பாதி முகமாக அறிமுகமான அதிதியின் அவ்வப்போதான பேச்சும், அவனின் ‘அந்த’ முயற்சியைச் சற்று நிதானப்படுத்த, அவனது அட்வகேட்டிடம் இருந்து வந்த நம்பிக்கை தரும் வார்த்தைகளும், முற்றிலும் எதிர்பாராத விதமாக நிம்மியின் அழைப்பும், எந்த ‘முடிவு’க்கு இட்டுச் சென்றன என்பதுதான், ‘சன்னி’யின் மொத்தக் கதை. படம் முழுவதும் ஜெயசூர்யா, தன்னம்பிக்கையுடன் சன்னி பாத்திரத்தில் தனி ஆவர்த்தனமாக, அற்புதமான பங்களிப்பைத் தந்திருக்கிறார். விரக்தி, வேதனை, பரவசம், கோபம், துக்கம், அழுகை, நிம்மதி, நம்பிக்கை என பல உணர்வுகளை, முகபாவங்களாக அழுத்தமாகப் பதிவு செய்து, மனதில் நிற்கிறார். ஹோட்டல் அறை, மிஞ்சிப் போனால் வெளியே கடல்வெளி தவிர, பயணிக்க வாய்ப்பு இல்லாத ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன், அத்தனை உழைப்பையும் ஜெயசூரியாவின் முகபாவனைகளை நுட்பமாக ஒற்றி எடுத்துக் கொள்வதில் கொட்டியுள்ளது சிறப்பு. கதைக் கருவுக்கு நெருக்கமாகவும், சன்னி கதாபாத்திரத்தின் மன உணர்வுகளுக்கு இயைபாகவுமான இசையை, சங்கர் சர்மா வழங்கியுள்ளது அருமை. சமீர் முகமதுவின் படத்தொகுப்பு கச்சிதம். தனித்துவமாக இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்கவும், சன்னியின் ஆரம்ப ‘மனோநிலை’யில் இருக்கும் எவரும் அதிலிருந்து வெளிவரவும் தேவை, துணிச்சல். அதற்காகவே, ‘சன்னி’யைத் தவறாது சந்திக்கலாம். மதிப்பெண் : 6.5/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

சுந்தரி

சுந்தரி

திரை விமர்சனம் ‘இப்படியெல்லாம் நடக்குமா!’ என்று வியக்க வைக்கும், ஏன், அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயங்கள் நடைமுறையில் நடக்காமலும் இல்லை என்பதே உண்மை, ஆம், கசப்பான உண்மை. அப்படியான ஒரு கதைதான், கல்யாண்ஜி கோகனா எழுதி இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘சுந்தரி’. ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள அந்தக் கிராமத்திற்கு வந்த பிரபு (அர்ஜுன் அம்பட்டி), தற்செயலாக அங்கு காண நேர்ந்த சுந்தரி (ஷாம்னா காசிம்/பூர்ணா) மீது மையல் கொண்டு, மணமும் செய்து கொள்கிறான். மாதம் ஒரு லட்சம் ஊதியத்தில், மிகப்பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் அனாதையான பிரபுவின் நவநாகரிகமான இல்லத்தில் அடியெடுத்து வைக்கும் கிராமத்துச் சுந்தரிக்கு அந்த நகரச் சூழல் வியப்பையும் கொஞ்சம் அச்சத்தையும் தருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவை தெளிந்து வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பிரபுவுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. அதற்கான காரணத்தை அவன் சொல்லவில்லை; அவளும் கேட்கவில்லை. தொடர்ந்து பல இடங்களில் தேடியும், வேலை கிடைக்கவில்லை. வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் விற்கும் நிலை. பிரபுவின் குடிப்பழக்கமும் குடும்பத்தில் சச்சரவும் தொடர்கின்றன. பெற்றோர் இருந்து, ஜாதகம் பார்த்து அவளை மணம் முடிக்காததாலேயே, அவளது ‘ராசி’யால்தான் இவையெல்லாம் என்று, சுந்தரி மீது வீசிய பிரபுவின் வார்த்தைகள் திராவகமாகத் தகிக்கச் செய்கின்றன. இதற்கு ஒரு ‘முடிவு’ காண அவள் மேற்கொண்ட முயற்சி, அறிந்த பலன், முயன்ற விபரீதப் பரிகாரம், கிடைத்த அதிர்ச்சியான உண்மைகள், எடுத்த தீரமான முடிவுதான் சுந்தரி திரைப்படத்தின் மொத்தக் கதை. சுந்தரியாக, ஷாம்னா காசிம் என்கிற பூர்ணா, மிகவும் பொருத்தமே. அவரது காஸ்ட்யூம் டிசைனர் பாராட்டுக்குரியவர். அமைதியான கிராமத்துப் பெண்ணாக, தாம்பத்திய வாழ்க்கையில் காதலில் கட்டுண்ட மனைவியாக, நகர வாழ்க்கையில் நிலவும் நரகச் சூழலில் தகிக்கும் அழகியாக, கேள்வியே இல்லாது கணவனை, ஜோசியத்தை, ஜோதிடனை நம்பும் வெள்ளந்தியாக, உண்மைகளை உணர்ந்து தெளிந்து, வெடிக்கும் அறிவார்ந்த மனுஷியாக, பூர்ணா பல பரிமாணங்களில் வெளுத்து வாங்குகிறார். ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என ஆரம்பித்த அர்ஜுன் அம்பட்டி, பீரும் குடிக்கும் என்கிற வகையில் தனது பங்களிப்பை, அளவோடு வழங்கியிருக்கிறார். சுரேஷ் பொப்ளி இசையும், அளவான பின்னணி இசையும் அருமை. பால் ரெட்டியின் ஒளிப்பதிவு, கிராமம் நகரம், உள்ளே வெளியே எல்லாவற்றிலும் ‘பளிச்’சென்று கவர்கின்றது. மணிகாந்தின் படத்தொகுப்பும் கச்சிதம். பாமரர்கள், படித்தவர்கள் என்ற வேறுபாடில்லாமல், பேராசையால், அறியாமையால்,  அச்சத்தால், சுய சிந்தனை இல்லாமல், மூடத்தனமான நம்பிக்கைகளில் கண்மூடித்தனமாக வீழ்ந்து, உயிரை, உடைமையை, உயிருக்குயிரானவர்களை, ஏன் மானத்தையும் கூட இழந்து, பரிதாப நிலைக்கு உள்ளான நிகழ்வுகளின் பின்னணியில், இந்த சுந்தரி ஒரு விழிப்புணர்வு தரும் எச்சரிக்கை. மதிப்பெண்: 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

ஹோம்

ஹோம்

திரை விமர்சனம் கால் வலி இருந்தாலும் பொருட்படுத்தாமல்,  வழமையான வேலைகளைச் செய்யும் குட்டியம்மா (மஞ்சு பிள்ளை), உழைத்துத் தேய்ந்த நிலையில், அவ்வப்போது நினைவுகளும் தப்பும் பெரியவர் அப்பச்சன் (கயினிகரி தங்கராஜ்), டீ குடித்த கப்புகளைக்கூட கீழே திருப்பி எடுத்துச் செல்லாமல், சுழலும் மின் விசிறியை நிறுத்தக்கூட கீழே இருக்கும் அம்மாவை, மாடி அறைக்கு அழைக்கும் இளைஞன் சார்லஸ் ஆலிவர் (நேஸ்லன் கே கபூர்), அறியாமல் சிறுநீர் கழித்துவிடும் அப்பாவை நொந்து கொள்வதும் உடன் அப்படி நொந்துகொண்ட தன்னையே அதற்கு நொந்து கொள்வதும், மாடித் தோட்டத்தை மட்டில்லா மகிழ்ச்சியுடன் கவனித்துக் கொள்வதுமான குடும்பத் தலைவன் ஆலிவர் ட்விஸ்ட் (இந்ரன்ஸ்), அந்த இல்லத்தில் இருந்து 220 கிலோமீட்டர் தள்ளி, தனது அடுத்த படத்திற்கான ஆயத்த வேலையில் மூழ்கி இருக்கும் திருமணமாகாத இளம் இயக்குனர் அந்தோனி டிவிஸ்ட் (ஸ்ரீநாத் பாஷி), இவர்களுக்குள் நிலவும் உறவை, உரிமையை, உயர்வை, உரசலை ஆழமாகவும் அதே அளவுக்கு மெதுவாகவும் சித்தரிக்கும் மலையாள மொழித் திரைப்படம்தான், ரோஜின் தாமஸ் எழுதி இயக்கி, அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘ஹோம்’. “பாரு, இந்த இடம் எவ்ளோ அழுக்கா இருக்கு? இது உன்னோட அறை அல்ல, மனசு. ஒரு வேலை செய். இங்கிருந்துட்டு கிளைமாக்ஸ் எழுதாதே. உன்னோட முதல் படத்தோட கதைய எங்கிருந்து  எழுதின?” புரொடியூசர் பேபி கேட்க, பதிலாக செல்போன் அழைத்து அந்தோணி எடுத்துப் பார்க்க,  படத்தின் தலைப்பு வருவது நயம். அந்தோணி வீட்டுக்கு வந்தும் அப்பாவின் நேசம் அவன்மீது படராமல், அவரின் நெருக்கம் தொடராமல், அவ்வப்போது அவன் ஸ்மார்ட்போனும்  அதில் வரும் காதலி பிரியாவும் இடையூறாகவே இருக்கின்றனர். இது, “வழக்கமா வீட்ல இருக்கும்போது அவன் படுக்கப்போகும் முன்னே நம்மள முத்தமிட்டு குட் நைட் சொல்வான்” என்று குட்டியம்மா ஆலிவரிடம் அன்று இல்லாததைக் கூறி வருந்துவதில் பளிச்சிடும். அந்தோணி படித்துக் கொண்டிருந்த ஜோசப் லோபஸின் வாழ்க்கை வரலாறு பற்றி விசாரித்த ஆலிவர், தாமும் ஏன் இப்படி எழுத முடியாது? என்று கேட்க, “வாழ்க்கையில் அசாதாரணமானவை நிகழணும். அதுக்கப்புறம்தான் ஒரு புத்தகம் எழுத முடியும். இந்தப் பக்கத்திலே அவரோட சாதனைகள பாருங்க. உங்க சுயசரிதை அரைப் பக்கம்கூட வராது. ‘நான், ஆலிவர் ட்விஸ்ட்’ ன்னு அதுக்கு ‘பளிச்’சுன்னு பேரு தரலாம். நான் கடை நடத்தனேன், காலத்துக்கு ஏத்த மாதிரி மாற முடியாமல் அதை மூடிட்டேன். இப்போ மாடித் தோட்டத்தப் பராமரிச்சுகிட்டு சும்மாவே உக்காந்திருக்கேன். வேற எழுத என்ன இருக்கு? இது அரைப் பக்கம்கூட வராது”. அந்தோணியின் இந்த வார்த்தைகள் ஆலிவர் ட்விஸ்ட்டிடம் பல ட்விஸ்ட்களை ஏற்படுத்தி விடுவதை விவரிக்கும் சுவாரசியம்தான், ஹோம் படத்தின் மீதிக் கதை. வருங்கால மாமனாருக்குதான் மகன் ஸ்மார்ட் போன் வாங்கவிருக்கிறான் என்றறிந்து, தானே குறைந்த விலையில் ஒரு போன் வாங்கி வந்து இருக்க, எதிர்பாராதவிதமாக மகன் அந்தோணி அவருக்காக ஒரு ஸ்மார்ட் போன் வாங்கித் தந்ததை அறிந்து, ஆலிவர் மகிழும் போதே பாக்கெட்டில் இருந்த செல்போன் ஒலித்ததை அடுத்து, அவர் சங்கடத்தில் நெளிவதும் சின்ன மகன் சார்லஸ்சிடம்  செல்போனைப் பயன்படுத்துவது குறித்துப் பாடம் எடுத்துக் கொள்வதும் ஜோசப் லோபசைப் படமெடுக்க இயலாமல் தவிப்பதும் நடிகர் விஷாலிடம் சகஜமாகப் பழகிப் பேசுவதிலும் உளவியல் மருத்துவரிடம் விவாதிப்பதிலும் அங்கு டாக்டர் அவரிடம் கேட்டது போல சார்லஸிடம் கேட்டு, எதிர்பாராதவிதமாகப் பதில் வந்து விடுவதிலும்  ‘எல்லாம் போனில் இருக்கிறது’ என்று சொல்லும் ஜோசப்பிடம், ‘போனில் இருக்கலாம். ஆனா, மனசுல இல்ல’ என்று சொல்வதிலும் ஆலிவராக இந்ரன்ஸ் மிளிர்கிறார். பாசத்தைக் காட்டிட முனைவதிலும் மாறிவரும் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதில் ஏற்படும் பரவசத்தையும் ஏக்கத்தையும் பரிதவிப்பையும் ஒருசேர அற்புதமாகப் பிரதிபலிக்கவும் செய்கிறார். ஒரு பக்கம் தொழில், இன்னொரு பக்கம் காதல் என்று ஆதங்கமும் அவதியுமாக ஸ்ரீநாத் பாஷியின் நடிப்பும் அருமை. மஞ்சு பிள்ளை, நேசலன் கே கபூர், கயினிகரி தங்கராஜ், தீபா தாமஸ் (பிரிய ஜோசப்), விஜய் பாபு (டாக்டர். பிராங்கிளின்), ஜானி அந்தோனி (சூரியன்), மணியன்பில்லா ராஜு (பேபி), அனுப் மேனன் (நடிகர் விஷால்), கே.பி.ஏ.சி. லலிதா (அன்னம்மா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். ராகுல் சுப்பிரமணியம் இசையின் இனிமையும் நீல் டி குன்ஹாவின் கண்கவர் ஒளிப்பதிவும் படத்தின் மெதுவான நகர்வையும் பொருட்படுத்தாமல் செய்துவிடுகின்றன. படத்தொகுப்பைக் கவனித்துள்ள பிரிஜிஷ் பிரகாஷ், இன்னும் கடுமையாகக் கவனித்து, படத்தின் வேகத்தைச் சற்று கூட்டி இருக்கலாம் அல்லது அதன் நீளத்தையாவது குறைத்திருக்கலாம். எல்லோரது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சாதனை இருக்கத்தான் செய்கிறது. அதைக் கண்டறியக்கூட இயலாத வகையில்தான், அவரவர் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. அதனை வெளிக்கொணர்ந்து அங்கீகரிக்க உறவுகள் உதவ வேண்டும். அப்படி உதவினால்தான் அது உறவு என்பதையும் எங்கு கோபப்பட மாட்டார்களோ, சந்தோஷப்படுத்துவார்களோ, தவறிழைத்தால் கண்டிப்பார்களோ, தவறு எனில் திருத்துவார்களோ, அதுதான் ‘இல்லம்’ என்பதையும், எத்தனை நவீன தொழில்நுட்பங்களுக்கு நாம் அறிமுகமானாலும், அடிப்படையான மனிதப் பண்புகளை மட்டும் இழந்து விடக்கூடாது என்பதையும் அழகாகவும் அன்பாகவும் அழுத்தமாகவும்கூட எடுத்துச் சொல்லும் படம்தான், ஹோம். மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

வைகைப் புயலே வருக!

வைகைப் புயலே வருக!

நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிப்பதற்குத் தடை விதித்து போடப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் அவர் களம் இறங்கவிருக்கிறார் என்பது மகிழ்வான செய்தி. ரெட் கார்டு நீக்கப்பட்டது குறித்துப் பேட்டியளித்த அவர், “இது என்னுடைய மறுபிறவி” என்று நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார். ரெட் கார்ட் வழங்கப்பட்ட காலத்தில், திரைப்படங்களில்தான் வடிவேலு நடிக்கவில்லையே தவிர, தொலைக்காட்சிகள் வழியாகவும் மீம்கள்  வழியாகவும் அன்றாட வாழ்வில் அவரது வசனங்கள் வாயிலாகவும் நம்மைத் தொடர்ந்து சிரிக்க வைத்துக்கொண்டேதான் இருந்தார் என்பதுதான் உண்மை.  தனி மனிதன் என்பது வேறு. ஒரு கலைஞனாக இருப்பது என்பது வேறு. தனிமனிதனின் கருத்து சுதந்திரத்திற்காக ஒரு துறை அவனது கலை வாழ்வை முடக்கி வைத்திருந்தது. இப்பொழுதாவது அந்தத் தடை நீங்கியிருப்பது நல்லது.  ஒவ்வொரு நடிகனுக்கும் ஒரு பருவம் உண்டு. SEASON என்று சொன்னால் சிலருக்கு எளிதில் புரியும். அதேபோல, ஒரே மாதிரியான தொனி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பேசப்படும். நாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், ஜனகராஜ் , கவுண்டமணி, செந்தில், விவேக், சூரி என இப்பொழுது இருக்கும் யோகிபாபு வரை நீண்ட நெடிய பருவங்கள் உண்டு. நாகேஷ் ஒரு ட்ரெண்ட் செட் செய்தார். அவர் காலத்தில் அல்லது அவரது காலத்தைத் தொடர்ந்த  சிலர் அவரவர் பாணியில் ட்ரெண்ட் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுக்கென ஒரு பாணியை உருவாக்குவதற்குள் நிலைத்தன்மை பெறாமல் பல நல்ல கலைஞர்கள் காணாமல் போனார்கள். அது தான் நிதர்சனம். ஆனால் எப்பொழுது கேட்டாலும் இனிக்கும் வகையான இசை இருப்பது போல் சில நகைச்சுவைகளை நாகேஷ் உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.  கவுண்டமணி – செந்தில் காம்போவும் சரி, கவுண்டமணியின் சிங்கிள் ட்ராக் காமெடிகளும் சரி, நகைச்சுவையில் புது ட்ரெண்ட்டை உருவாக்கினாலும் அதைத் தொடர்ந்து வந்த வடிவேலு, விவேக் பருவங்கள் முக்கியமானவை. அதில் நிலைத்து தனக்கென்று தனிப்பட்ட முத்திரையை இன்றளவும் பதித்துக்கொண்டிருப்பவர் வடிவேலு.  வடிவேலுவின் மகத்தான வெற்றிக்கு சில காரணங்களைப் பட்டியலிட்டுச் சொல்ல முடியும்.  முதலில் திகட்டவே திகட்டாத தென் தமிழகத்தின், முக்கியமாக மதுரை வட்டார வழக்குமொழி.  சொற்களைப் பிரயோக்கிக்கும் அலைவரிசை மற்றும் அதற்கேற்றபடி உடல் மொழியை, முக பாவனைகளைக் கோர்க்கும் நடிப்புத்திறமை.  ஒரு சாமான்யனாக, மனதில் தோன்றும் அசரீரிகளை அசரீரிகளாகவே ஒலிக்கவிட்டு, அதையும் வடிவேலுவின் குரலாக ஒலிக்கவிட்டு எல்லா மூலைகளிலும் வடிவேலுவைப் பயன்படுத்தத் தெரிந்த, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த கன்டென்ட் ரைட்டர்ஸ் மற்றும் இயக்குனர்கள்.  இவை எல்லாம் ஒன்று சேர்ந்த கலவைதான் வடிவேலுவின் வெற்றி.  குழந்தைகளை ஈர்க்கும் முக பாவனைகள் வடிவேலுவிடம் உண்டு. ஒரு படத்தில் ஒரு குழந்தை பலூன் ஊதச்சொல்லும், அவரும் ஊதுவார்.  பலூன் உடையும். உடைந்ததும் முகத்தில் ஒரு பாவனை காட்டுவார். குழந்தை அழும்போது குழந்தையை மிரட்டும் தொனியாக மாற்றுவார். ஆனால் குழந்தையிடம் தோற்கும் முகத்தை நகைச்சுவைக்காக மாற்றுவார்.  எந்த வார்த்தையை எப்படிச் சொன்னால் அது விகாரமாக மாறும் என்று தெரியாமல் பயன்படுத்தி சிலர் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். ஆனால் வடிவேலுவிடம் இருக்கும் தனித்திறமை, எந்த வார்த்தையை எப்படிச் சொன்னால் மக்கள் சிரிப்பார்கள் என்பதைப் புரிந்து வைத்திருப்பது. இது அனைவருக்கும் வராது. உதாரணத்திற்கு, ‘உயிரே.. உயிரே.. தப்பித்து எப்படியாவது ஓடிவிடு… ஐயயோ வருதே… மூதேவி வருதே…” என்று வடிவேலுவின் குரலில் ஒலிக்கும்பொழுது திரையில் வடிவேலுவின் முகமும் உருவமும் பர்தாபோட்டு மூடியிருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும். ஆனாலும் நம்மால் அந்தக் குரலைக் கேட்டவுடன் வரும் வெடிச்சிரிப்புக்குத் தடை போட முடியாது. நகைச்சுவையில் தனித்து நின்ற உச்சரிப்புகளில் அதுவும் ஒன்று.  வடிவேலு பற்றி சமூக வலைத்தளங்களில் பல கட்டுரைகள் எழுதப்பட்டுக்கொண்டு இருந்தாலும் நுணுக்கமான விசயங்களை மட்டுமின்றி வெகுஜனக் காமெடிகளில் பரவலாக அறியப்பட்ட காமெடிகளைச் சொல்லாமல் கட்டுரை நிறைவு பெறாது என்பதுதான் வடிவேலுவின் வெற்றி.  ஒரு தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வரும் வாக்காளர் இன்னொரு கட்சி பூத்தில் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்றும் வடிவேலுவின் பூத்திற்கு வந்து உங்களுக்குத்தான் ஓட்டு போட்டேன் என்றும் கூறுவார். “அவன்ட்ட வாங்குன காசுக்கு ஏணியில ஒரு குத்து, உன்ட்ட வாங்குன காசுக்கு தென்னை மரத்துல ஒரு குத்து” என்றும் சொல்வார். “மூன்றாவது குத்த நான் குத்தவா?” என்று வடிவேலு சொல்வதற்கு முன், எழுத்தால் எழுத முடியாத ஒரு சத்தத்தை (ஜங்……) எழுப்பி, “ங்கொய்யாலே” என்று அவனை அடிப்பார். உண்மையில் அந்தக் காமெடிக்கான சிரிப்பின் ஆதிப்புள்ளி முத்துக்காளை வசனத்தைச் சொல்ல ஆரம்பிக்கும்போது உருவானாலும் வடிவேலு உச்சரிப்பில் மொழியும் சொல்லும் அற்ற அந்த ஒலிதான் சாமான்யனையும் தன்னை மறந்து சிரிக்க வைக்கும் அல்லது வெடிக்க வைக்கும் பெரும்புள்ளி. அதே காட்சியில் அடுத்து வரும் நபர், அவர் கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்று சொல்வதை வடிவேலு நம்ப மறுப்பார். அதற்கு அவர் “நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரிஞ்சுதான் ஓட்டு போட்ட சீட்டைக் கொண்டு வந்திருக்கேன்” என்று சொல்லி பாக்கெட்டில் இருந்து சீட்டை வெளியே எடுத்துக் காண்பித்து, 17 வருசமா உங்களுக்குத்தான் ஓட்டு போடறேன்” என்று சொல்வார். “அப்படின்னா 17 வருசமா கொண்டு போய்ட்டுதான் இருக்கியா?!!” என்று சொல்லி, முதல் நபருக்குக் கோபத்தைக் காண்பித்தவர், இரண்டாவது நபருக்கு முகத்தில் அதிரிச்சியையும் குரலில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் அந்த நகைச்சுவையின் நீட்சி. ஒரு நெடிய காட்சியைத் திரைப்படுத்தும்பொழுது இரண்டு சவால்கள் உள்ளன. அந்தக் காட்சிக்கென்று இருக்கும் உணர்வை பார்வையாளனுக்கு ஏற்படுத்துவது. இரண்டாவது, காட்சி தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கும் பொழுது, பார்வையாளனை அந்த உணர்வுக்குள்ளேயே தக்க வைப்பது. ஆனால் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் நெடிய காட்சிகளாகப் படமாக்கப்படும்பொழுது, அவை அதே உணர்வில் இருப்பதோடு அல்லாமல், உணர்வு மோலோங்கவும் செய்யும். அதாவது நகைச்சுவையின் வீச்சு அதிகமாகவும் செய்யும்.  அதே திரைப்படத்தில் ஒரு நபரிடமிருந்து ஃபோன் வரும், இவர் சொல்ல வருவதற்குள் எதிர்முனையில் இருப்பவர் இவரைப் பேசவே விடாமல் ஏதோ பேசுவார். அந்த ஒலி திரையில் வராது. ஆனால் எதிர்முனையில் இருப்பவன் தன்னைப் பேச விடாமல் பேசுவதைத் தன் குரல் சமிக்ஞைகள் மூலமாகவே எதிரொலிப்பார், எதிரொளிப்பார்.  வடிவேலுவின் வெற்றிக்கு அவரது வட்டாரமொழி என்று இந்தக் கட்டுரையை ஆரம்பித்தாலும் வெறுமனே சமிக்ஞைகளைக் கொண்டு மனதில் நின்ற கலைஞனாகவே வடிவேலுவை நிலை நிறுத்த விரும்புகிறேன்.  பல ஐ.டி நிறுவனங்களில், மருத்துவமனைகளில் வடிவேலுவின் பிரபல மீம்களும், அவர் பேசிய உரையாடல்களும் பேசப்படுகின்றன. வடிவேலுவின் நகைச்சுவைகள் A B C  என்று சென்டர் பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்குமாய் இருந்தது என்பதுதான் உண்மை.  நகைச்சுவையோடு இசையையும் இணைத்து அதற்குத் தன் குரலையும் நடனத்தையும் ஒருசேர ஒப்புக் கொடுத்தவர் வடிவேலு. பல பாடல்கள் வடிவேலுவிற்கென்றே நடன அமைப்புகளால் அரங்கேற்றப்பட்டன. நடன அமைப்பாளரின் தொனியை வடிவேலுவிற்கு ஏற்றுவதற்கு பதிலாக ஒட்டுமொத்த நடனக் கலைஞர்களும் வடிவேலுவின் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கும் பாடல் காட்சிகளும் உண்டு. பிரபுதேவாவுடன் இணைந்து ஆடிய ‘ஆல் டே ஜாலி டே’, விஜய்யுடன் இணைந்து ஆடிய ‘வாடி வாடி வாடி, கை படாத ஜோடி’ உள்ளிட்ட பல பாடல்களில் திறமையான நடனக் கலைஞர்களுக்கு சவால் விடும் வகையில் அவரது உடல் மொழி அமைந்திருக்கும்.   வாடகைக்கு சைக்கிள் எடுக்கும் எளிய நகைச்சுவையில், ‘எடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லை” எனக் காந்தர்வக் குரலிசையை ஒலிக்கச் செய்திருந்தார். “இந்த ஊரே என் பாட்டைப் பாடும்” என்ற குரல் பாடகர் வடிவேலுவிற்கானது.  என்.எஸ்.கே., சந்திரபாபுவிற்குப் பிறகு நகைச்சுவை நடிகர் பாடகராக வலம் வருவதும் அந்தக் குரலை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாடுவதும் வடிவேலுவின் குரல்தான். மிகவும் சாமானியர்களில் ஒருவனாக பல படங்களில் நடித்த வடிவேலு, 23ஆம் புலிகேசியாக நகைச்சுவையை மிக இயல்பாக வெளிப்படுத்தினாலும் ஒரு மன்னனுக்கு உண்டான அந்த கெத்துடன் வாழ்ந்து காட்டினார் என்று சொன்னால் அது மிகையில்லை. ஒவ்வொரு நடிகனும் ஒவ்வொரு காலகட்டத்தில் தேங்கி நின்றுவிடுவான்.  அதற்கு திரைக்காட்சியின்மீது ஏற்படும் அயற்சியும் தலைமுறையினர் மாறுவதால் ரசனையின் வீச்சு மாறுவதாலும்தான். ஆனாலும் அனைத்துத் தலைமுறையையும் கவரும் ரஜினி போல தன்னைத் தலைமுறைகள் கடந்து தக்க வைத்துக்கொண்டவர் வடிவேலு.  கலைத்துறையில் கலைஞனுக்கும் சரி, ரசிகனுக்கும் சரி சலிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. இருவரில் ஒருவருக்குச் சலிப்பு ஏற்பட்டாலும், அந்தக் கலைஞன் தன் சந்தையைத் தவறவிடுவான். வடிவேலுவின் வளர்ச்சியில் பல முட்டுக்கட்டைகள் வந்தாலும், அவருக்குக் விதிக்கப்பட்ட தடைக் காலத்தில் அவருடைய இருப்பை பல ரசிகர்கள் தவறவிட்டார்கள். சூரி யோகிபாபு போன்ற நகைச்சுவை நடிகர்கள் அந்த இடங்களைப் பூர்த்தி செய்தாலும் புது ரகங்களைக் கொண்டுவந்தாலும் வடிவேலுவின் வசனங்களும் சமிக்ஞைகளும் பார்வைகளும் மக்களின் வாழ்வியலில் ஒன்றாகிவிட்டன.  நேசமணி காண்ட்ராக்டருக்குத் தலையில் அடிபட்ட நகைச்சுவை வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, #PrayForNesamani ஹேஷ் டேக் உலக அளவில் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி சமூக வலைத்தளங்களிலும் மெயின் ஸ்ட்ரீம் மீடியாவிலும் பேசுபொருளாய் ஆனது.  கமலஹாசனின் விக்ரம் பட போஸ்டரில் வடிவேலுவை போட்டும், ஜேம்ஸ்பாண்ட் படத்தில் அவரைப் போட்டும் வலைதளங்கள் அதிர்ந்து கொண்டிருக்கின்றன. பொன்னியின் செல்வன் போஸ்டர்கள் வெளியான சில மணி நேரங்களில் அனைத்து கதாபாத்திரங்களிலும் வடிவேலுவின் முகத்தைப் பொருத்தி அதிரச் செய்தார்கள் மீம் கிரியேட்டர்கள். ஒரு கலைஞன், தன் தொழிலுக்கு நேர்மையாக தியாக மனப்பான்மையுடன் உழைக்கும்பொழுது வெற்றி பெறுகிறான். மக்களை மகிழ்விக்கும் கலையை அவன் நேசிக்கும் விதமே, அவனை மக்கள் மத்தியில் நிறுத்துகிறது.  இவ்வளவு ஆண்டுகால தடைக்குப் பின்னும் வடிவேலுவின் நடிப்பும் பாணியும் மக்களிடம் புழங்குவதன் மையச்சரடு, வடிவேலு சாமான்யர்களின் கலைஞன் என்பதும் அவரது நகைச்சுவைகள் வாழ்வியல் எதார்த்தங்களைப் பிரதிபலிக்கின்றன என்பதும்தான்.  எவ்வளவு கடினமான மனநிலையிலிருந்தும் வெளிவர, ஒற்றை வீரபாகுவின் பார்வையோ, ஏட்டு ஏகாம்பரத்தின் ‘மல…’ என்ற சிரிப்போ, ‘வேணாம், வலிக்குது, அழுதுருவேன்’ என்ற கைப்புள்ளயின் குரலோ, ‘ஒய் பிளட், சேம் பிளட்’ என்ற வார்த்தையோ போதுமானது. பல குழப்பங்களுக்கு மத்தியில் ‘என்னடா நடக்குது இங்க…?’ என்ற விசித்திர குரலும், ‘தம்பி, டீ இன்னும் வரல’, ‘இது வாலிப வயசு’ போன்ற கெத்தும்தான் வாழ்வியல் முறைகளுக்குள் ஊடுருவிவிட்ட வெற்றியின் தடயம்.  யாராலும் தடைசெய்ய முடியாத வைகைப் புயல் மீண்டும் வருகிறது, பலரின் சுமைகளைத் தீர்க்க. தயாராகவே இருப்போம். இனி, “Sing in the rain….” கட்டுரையாளர்: பழனிக்குமார்,

பூமிகா

பூமிகா

திரை விமர்சனம் அறிவியல் ரீதியாகச் சொல்லும் கதைகளை விட, திரைக் கலைஞர்களுக்குச் சுலபமானதும், பெருவாரியான ரசிகர்களுக்குச் சுவையானதுமானவை, அமானுஷ்யம் கலந்து  சொல்லும் கதைகளே. நிரூபிக்க வேண்டிய அவசியமில்லாது, தகவல்களைக் கடத்தினால் மட்டும் போதும் என்கிற நிலையில், திரைமொழியில் இது ஒரு புதிய உத்தி.  இந்த உத்தியில் உதித்ததுதான், ரவீந்திரன் ரா. பிரசாத் எழுதி இயக்கி, நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள பூமிகா. ‘புவியை நாம் பாதுகாத்தால், அது நம்மைப் பாதுகாக்கும்’ என்கிற கருத்தைக் கொண்ட ஒற்றை வரிதான் மொத்த கதையும்.  ஒரு நள்ளிரவில் கர்ப்பிணி மனைவியுடன் பேசிக்கொண்டே காரைச் செலுத்தும் கேப் டிரைவர் கிருஷ்ணா (ஈஸ்வர் கார்த்திக்) விபத்தில் இறக்கிறான். மறுநாள் மலைப்பாங்கான பகுதியில், மரம் செடி கொடிகள்  அடர்ந்த வெளியை வெட்ட வெளியாக்கி, அமைச்சரின் ஒரு திட்டத்தை நிறைவேற்ற கௌதம் (விது), சம்யுக்தா (ஐஸ்வர்யா ராஜேஷ்), குழந்தை சித்து (அய்யன் அபிஷேக்), காயத்ரி (சூர்யா கணபதி), அதிதி (மாதுரி) காரில் அங்குள்ள கைவிடப்பட்ட ஒரு கட்டடத்திற்கு வந்து, தங்குகின்றனர். உதவிக்குக் காவலாளி தர்மன் (பாவெல் நவகீதன்). அந்த நிமிடத்தில் இருந்து துவங்குகின்றன, திடுக்கிட வைக்கும் அசாதாரண நிகழ்வுகள், தேடல்கள். அமானுஷ்யம் கலந்த திரில்லர் உத்தியில் வெளியான, இயக்குனரின் ‘இன்மை’ படத்தைப் போன்றே, இதிலும் மர்ம முடிச்சுகளைப் படிப்படியாக அவிழ்த்துக் கொண்டே, நிகழ்விலும் பிளாஷ்பேக்கிலுமாகக் கதையை இறுதிவரை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நகர்த்திச் செல்லும் விதம் பாராட்டத்தக்கது. இயக்குனரின் இந்த உத்தி அவரின் பாணியாகவே தொடராமல் இருந்தால், முத்திரைக்கு  இலக்காவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். வழக்கம்போல் இயக்குனர் ரதீந்திரன் இதிலும், ஜேம்ஸ் லவ்லாக் எனும் பிரிட்டன் விஞ்ஞானியின் ‘கையா ஹிப்போதீசிஸ்’ எனும் சயின்டிஃபிக் தியரியை, புதிய விஷயமாக அறிமுகம் செய்து, ரசிகர்களின் சிந்தனைக்குத் தீனி இடுகிறார்.   அவந்திகா வந்தனாபு ஆட்டிஸ சிறுமியாக, படு அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். உடல் மொழியே முழு மொழியாக, பூமிகா பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதே தெரியாத அளவிற்கு இயல்பாக மிளிர்கிறார். கதை நடிகர்களைத் தேர்வு செய்துள்ளதால்,  ஐஸ்வர்யா ராஜேஷ், பாவெல் நவகீதன் தவிர மற்றவர்கள் அறிமுகக் கலைஞர்களாக இடம்பெற்றுள்ளது, எந்த விதத்திலும் கதை நகர்வுக்கு இடறலாக இல்லை. அடுத்து, பூமிகாவின் கதையை ஒட்டி, பூமியை அழகாகவும் அழுத்தமாகவும் உருவகிக்கும் காவல்காரர் தர்மன் கவனத்தைக் கவருகிறார்.  ஒரு சைக்காலஜிஸ்ட் என்கிற மனநிலையோடு, உறுதியுடன் பிரச்சனைகளை அணுகும் பாத்திரத் தன்மையை அழகுற வெளிப்படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ், பேசிய வார்த்தைகளில் அதிகமாக உச்சரித்தது, ‘என்னாச்சு? ஏன், என்னாச்சு? சூர்யா கணபதி, விது அந்தச் சூழலுக்கு இன்னும் கூடுதலான அளவு ரியாக்ட் செய்திருக்கலாம். அதிதியின் ரியாக்சன் சற்று அதீதம். பிரித்வி சந்திரசேகரனின் இசை, கதைக்குப் பக்கபலம் மட்டுமல்ல, பக்கா பலமும் கூட. இதற்குச் சற்றும் குறையாத உழைப்பை ஒளிப்பதிவாளர் ரோபோர்டோ ஜஜ்ஜாரா வழங்கியுள்ளார். பூமிகா வரையும் ஓவியங்களாகட்டும்,  அவள் உலவும் இயற்கை அழகு ததும்பும் இடங்களாகட்டும், ஒளியும் வண்ணமும்  தெறித்து விழுகின்றன. ஓவியங்கள் அத்தனையும் அருமை. கலை இயக்குநருக்கும் ஓவியர்களுக்கும்  பாராட்டுகள். ஆனந்த் ஜெரால்ட்டின் படத்தொகுப்பு சற்று சவாலானதுதான். படத்தின் முன் பகுதியில் சற்று வேகத்தைக் கூட்டி இருக்கலாம் அல்லது நீளத்தைக் குறைத்திருக்கலாம். “பூமிகா யாரு? அது பூமிங்க. இந்த பூமி கிதே பூமி, அது ஒவ்வொரு நிமிஷமும் நம்ம கிட்ட பேசுது. அது தெளிவா சொல்லுதுங்க, என்ன தெரியுங்களா? ‘என்ன காப்பாத்திக்க எனக்குத் தெரியும், முடிஞ்சா எங்கிட்ட இருந்து உங்கள காப்பாத்திக்குங்க’. அவ கொஞ்சம் சிலிர்த்தாலும் ஒருத்தரும் தாங்க மாட்டீங்க ” என்று சொல்லும், தெள்ளத்தெளிவாக அந்தப் பகுதியின் வரலாறு தெரிந்த தர்மனிடம், இவர்கள் எதையும் விசாரிக்காதது, சற்று வியப்பைத் தருகிறது . அமானுஷ்யம் என்று வந்து விட்டாலே, ‘லாஜிக்’ பார்க்க முடியாதுதான். என்றாலும் அதற்குள்ளாகவே, அதற்கென்று இருக்கக்கூடிய லாஜிக்கும் கூட ஆங்காங்கே சறுக்குகிறது.  மீண்டும் இடைஞ்சல் தருவதாகக்  கருதி, அவர்களை அங்கிருந்து விரட்ட முனையும் பூமிகா, அவர்கள் காரில் கிளம்பிச் செல்ல முடிவெடுத்தபின் நிறுத்துவானேன்? அப்படி காரை நிறுத்த முடிந்த பூமிகாவால், ஐஸ்வர்யா ராஜேஷ் செல்லும்போது, அவ்விதம் நிறுத்த முடியாமல் பின்தொடர்ந்து ஓடுவானேன் . அப்பள்ளத்தாக்கில் கட்டுமானப்  பணியில் இருந்தவர்களைத் தவிர்த்து, மாணவர்களையோ ஆசிரியர்களையோ பூமிகா பாதிக்காத நிலையில், மவுண்ட் ரோஸ்யார்ட்  பள்ளியை மூட வேண்டிய அவசியமோ, அப்பகுதி மக்கள் இடம்பெயர வேண்டிய அவசியமும்தான் ஏனோ? ‘பாராநார்மல்’ செயல்பாடுகளுக்கு,  மிதமானது முதல் மிக அதிகமானது வரையிலான நிலநடுக்கம், நிலச்சரிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி இருந்தால், அவரவர்கள் பார்வையில் அவை அமானுஷ்ய நம்பிக்கையாகவும், அறிவியல் பூர்வ உண்மையாகவும், ஏற்புடையதாக அமைந்திருக்கக் கூடும். ஒரு உத்தியாகக்  கொண்டுள்ள அமானுஷ்யத்தில், இந்த லாஜிக் தேடல்களை எல்லாம் சினிமா லிபர்டியாகக் கொண்டு விட்டுவிட்டு, புவி சமநிலையை வலியுறுத்தும் அக்கறையுடன், “என்னிக்குப்  பாலை மட்டுமே குடிக்க வேண்டிய குழந்தை, பெத்தவ மார்பைத் தின்ன ஆரம்பிக்குதோ, அன்னிக்குத் தாய்,  பேயா மாறிடுவா” என்கிற கலை வடிவான, அழுத்தமான, திரை வடிவச் செய்திக்காகவே ரதீந்திரனின் பூமிகாவை வரவேற்கலாம். விமர்சனம்: மது ராஜேந்திரன் மதிப்பெண் : 7/10

குருதி

குருதி

திரை விமர்சனம் இன்றுள்ள நிலையில், மதச் சார்பாக அன்றி, அதனைப் புறந்தள்ளி, மனிதத்தைத் தூக்கிப் பிடித்து, வலியுறுத்துவதற்குத்தான் துணிச்சல் வேண்டும். கத்தி மேல் நடக்கும் லாவகமாக அந்தத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் அனிஷ் பல்யல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, மனு வாரியார் திறம்பட இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம்தான் ‘குருதி’ (சடங்கு படுகொலை). மலையும் காடும் சூழ்ந்துள்ள பகுதியில் ஏற்பட்ட ஒரு மோசமான  நிலச்சரிவில், பலர் உயிரிழந்து, எஞ்சியவர்கள் இடம்பெயர்ந்து செல்ல, இரண்டு குடும்பம் மட்டுமே அப்பகுதியில் வசிக்கின்றன. வயதான காதர் மூசா (மம்முகோயா), நிலச்சரிவில் தனது மனைவியையும் மகளையும் இழந்த அவரது மூத்த மகன் இப்ரஹிம் (ரோஷன் மேத்யூ), இளையவன் ரசூல் (நேஸ்லன்) உள்ளடக்கிய குடும்பத்திற்கு அருகிலுள்ள வீட்டில், பேரமன்(மணிகண்டராஜன்), அவனது சகோதரி சுமதி (ஸ்ரீரிந்தா).  இப்ரஹிமின் சமையல் பிடிக்காத மூஸாவுக்கு, பெரும்பாலும் சுமதியின் சாப்பாடுதான். வேலைக்குச் செல்லாமல் சதாசர்வகாலமும் கேரம் ஆடுவதும், கரீமுடன் (ஷைன் டாம் சாக்கோ) சுற்றுவதுமான ரசூலுக்கும், ஒரு வேலைக்குச் செல் என்று வற்புறுத்தும்  மூஸாவுக்கும் இடையே, அவ்வபோது சிறுசிறு தகராறுகள் முற்றும்போது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பவளும் சுமதிதான். தனியாளாகச் சிரமப்படும் இப்ராஹிமை,  மணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தும் உரிமையும் அந்த வீட்டில் சுமதிக்குத்தான் இருக்கிறது. சகோதரிக்கும் தமக்கும் இடையேயான பஞ்சாயத்திற்குப் பேரமன் துணைக்கு அழைப்பது இப்ராஹீமைத்தான். இரு குடும்பத்திற்குள்ளும் அப்படி ஒரு அன்னியோன்யம். இப்படியாக நகர்ந்து கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில், அன்றிரவு இப்ரஹிம் வீட்டின் கதவு தட்டப்பட்டுத் திறக்க, அதிரடியாக உள்ளே நுழைந்தவர்கள் ஒரு காவல் உதவி ஆய்வாளரும்,  கைவிலங்கிடப்பட்ட கைதியும். ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விஷ்ணு (சாகர் சூர்யா)வை, எஸ்.ஐ. சத்யன் (முரளி கோபி) காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் சிலரால் தாக்கப்பட, தப்பித்து ஓர் இரவு தங்க அந்த வீட்டிற்கு வருகிறார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், அதே வீட்டில் அடுத்தடுத்துப் பலவந்தமாக நுழைபவர்கள் ரசூலின் நண்பன் கரீம், இளைஞன் லாயிக் (பிரித்திவிராஜ் சுகுமாரன்),  அவர்கள் இருவருக்கும் அறிமுகமான இன்னொருவர். தான் தேடிவந்த தனது தந்தையைக் கொன்ற விஷ்ணுவைத் தன்னிடம் ஒப்படைக்க வலியுறுத்தும் லாயிக்கிற்கும்,  காவல் உதவி ஆய்வாளருக்கும் இடையே நடைபெறும் வாதம் கைகலப்பாகி, சத்யன் கத்தியால் கடுமையாகத் தாக்கப்படுகிறார். உயிருக்குப் போராடும் எஸ்.ஐ., இப்ரஹிமிடம், ‘விஷ்ணுவை போலீசைத் தவிர யாரிடமும் ஒப்படைக்க மாட்டேன்’ என்று,  குர்ஆன் மீது சத்தியம் பெற்று விடுகிறார். மூசா, இப்ரஹிம், ரசூல் கொண்ட குடும்பத்தின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று நம்பி, இப்ரஹிம் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியால் அது இல்லாமல் போக, வெறிபிடித்தவன் ஆகிறான் லாயிக். அதன் உக்கிரம் எவ்வாறு இருக்கும் என்பதும் அது எவ்விதமாக முடிந்தது என்பதும்தான், குருதி திரைப்படத்தின் விறுவிறுப்பான மீதிக் கதை. “ஆண்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு பெண்ணுக்கு என்ன வேலை?” என்று கேள்வி எழுப்பும் சுமதியை ஒரு பெண்ணாக சகியாத லாயிக், “உன் நம்பிக்கையைக் கைவிடப் போறியா?” என்று இப்ரஹீமைப் பார்த்துக் கேட்கும் லாயிக்கிடம், “ஒரு மனித உயிரைப் பலிகொடுத்து, அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமா?” என்கிறார் மூசா. “நான் செய்யறது சரி இல்லன்னா, கடவுள் என் விதியைத் தீர்மானிக்கட்டும்” என்று கூறும் இப்ராஹிம், “அதே கடவுளின் மகிமையைக் காப்பாத்தத்தான்  நான் இங்கே இருக்கேன். என்னைத் தடுத்தால்  வெட்டிக் கொல்வேன், உங்க எல்லோரையும்” என்று கர்ஜிக்கும் லாயிக், இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் உரிமை, சட்டம் நீதி, முகலாயர் ஆட்சி காலச்  செயல்பாடுகள், வரலாறு போன்றவற்றில் அடிப்படைப் புரிதல் இல்லாமல் விஷ்ணு செய்யும் அறிவுப் பூர்வமற்ற விவாதங்கள், அதற்குச் சற்றும் குறைவில்லாதவாறு, மத நூல்களை மேற்கோள் காட்டியும், பிற மதத்தினர் மீது வெறுப்பைக் கூட்டியும், இப்ரஹிமிடமும் இறுதியில் ரசூலிடமும் மூளைச்சலவை செய்யும் விதமாக அமையும் லாயிக்கின் குரூரமான வார்த்தை வித்தகம், “ஏழைகளான எங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சி என்ன ஆகப்போகுது? இறந்து போன அந்த ராஜாக்களால்  எங்களுக்கு என்ன பிரயோஜனம்? ஒரு பஞ்சத்துக்கும் அடுத்த வெள்ளத்துக்கும் இடையே உயிரை விட்டுடாம வாழ முயற்சி செஞ்சுட்டு இருக்கோம்”  “எப்ப மனுஷன் ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்சானோ, அன்னிலிருந்து இன்னிவரைக்கும் நிறுத்தாத ஒரு விஷயம், சண்டை போடுவதும், கொல்வதும்தான். காரணம் வெறுப்பு. மனுஷனுக்கு வெறுக்க, எப்போதும் ஒன்னு தேவைப்படுது. அதுக்கு நமக்குள்ள தேவைப்பட்றது, ஒன்னு,  ‘அவங்க’ (them) இன்னொன்னு ‘நாம’ (us). அந்த நெருப்பைப் பத்த வைக்கப் பகை ஒன்னு போதும், அது கொழுந்து விட்டு எரியற வரைக்கும் வெறுப்பும் சாகாம இருக்கும். இறுதியில நாம ஜெயிச்சுட்டோம்னு நம்மள நாமே முட்டாள்தனமா ஏமாத்திகிட்டு அதே நெருப்பில விழுந்து எரிஞ்சும் போவோம் ”   “ஒருத்தன் தன் குழந்தைகளுக்குப்  படிக்கக் கத்துக் கொடுக்கலேன்னாலும், யாரை வெறுக்கணும்னு கத்துக் கொடுக்கறான். வர்ற தலமுறையும் இந்த ஏரியற வெறுப்பு நெருப்புல எரிஞ்சுதான் போகும். மனுஷன் செத்தாலும் அவனுக்குள்ள இருக்கற வெறுப்பு மட்டும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்” இடையிடையே பதட்டம் இல்லாமல் காத்திரமாகப் பேசுகிற மூசா, இவ்விதம், கிடைத்த வாய்ப்பில் எல்லாம், அவரவர் மத நிலையிலான மனநிலைக்கேற்பக் கடவுளின் பெயரால், ‘புனித’ நூல்களின் பெயரால் மதத்தையும் அதையொட்டி அவர்களின் ‘நியாய’த்தையும் அவற்றைத் தாண்டிய மனிதத்தையும் கூடத் தூக்கிப் பிடிப்பதில், புரிந்து தெளிய வேண்டியவை ஏராளம்.  அடுத்தடுத்து நிகழும் விறுவிறுப்பான சம்பவங்களின் இடையிடையே, இவ்விதம் வலிமையான வசனங்களால் நெய்யப்பட்ட அக்காட்சிகள் யாவும், சலிப்பைத் தரவில்லை. மாறாக, சமகால அரசியலை, அடிப்படைவாதத்தை பேசாமல் பேசி,  சிந்திக்கவும் எச்சரிக்கை கொள்ளவும் இடமளிக்கின்றன. ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் கூட, மூசா குறிப்பிடும் ஆதி பாவமான காபில் காலத்துப் பகையும் கொலையும், அந்த இனம் சார்ந்ததே தவிர, பிறர் மீதான தொடுப்புக்கான  நியாயமோ, ஏன், அவர்களுக்குள்ளேயே கூட அதையே சொல்லி அன்றிலிருந்து இன்றுவரை தொடர்வதற்கான அவசியமோ என்ன இருக்கிறது? விஷ்ணுவின் சிந்தனை முழுவதும் வன்மம் நிறைந்து இருப்பதற்கும் லாயிக் ரசூலிடம் கத்தியைத் தருவதன் மூலம் பகை வெறியைக் கடத்துவதற்கும் பகுத்தறியும் குறைபாடே தவிர, வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்? பிரித்திவிராஜ் சுகுமாரன், ரோஷன் மேத்யூ இருவரும் நடிப்பில், சளைக்காமல்  போட்டி போட்டுக்கொண்டு ஜமாய்த்திருக்கிறார்கள். மம்முகோயாவின் பக்குவப்பட்ட பங்களிப்பும் ஸ்ரீரிந்தாவின் உணர்வுபூர்வமான நடிப்பும் மனதில் நிற்கின்றன. முரளி கோபி, நெஸ்லன், சாகர் சூர்யா, மணிகண்டராஜன், ஷைன் டாம் சாக்கோ தத்தம் பங்களிப்பை நிறைவாகவே செய்துள்ளனர். காடு மலை பகுதியிலும் சிறிய வீட்டிலும், இரவிலும் குறைந்த ஒளியிலும், உள்ளேயும் வெளியேயும், பனிபடர்ந்த சூழலிலும் ட்ரோன் ஷாட்ஸ் உட்பட, அற்புதமாக காட்சிகளை, பாத்திரங்களின் முகபாவங்களை நுட்பமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் அபிநந்தன் ராமானுஜம். அதற்கு இணையாக வெளுத்து வாங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்.  அகிலேஷ் மோகனின் படத்தொகுப்பில் பழுதில்லை என்றாலும், இரண்டு மணி நேரத்திற்கு ஓடும் திரைப்படத்தின் முற்பகுதியில் இருந்த விறுவிறுப்பின் வேகம், பிற்பகுதியில் குறைந்து இருப்பதைத் தவிர்க்க, நீளத்தைச் சற்றுக் குறைத்திருக்கலாம். பாம்பு கடித்து உடலில் நீலம் பரவிவிட்ட நிலையில், அதைப் பற்றிப் பொருட்டே இல்லாமல் அத்துணை  மணி நேரம் பேரமனும் மற்றவர்களும் வாளா இருப்பதும், ஒரு கையையும் காலையும் லாயிக் உடைத்த பின்பும், அந்த உணர்வோ வலியோ இல்லாமல் சற்றும் பிரதிபலிக்காமல், தாங்கியபடி நடப்பதைத் தவிர மிக இயல்பாக இருப்பதுமான காட்சிகள், ஜீரணிக்க முடியாத சினிமா லிபர்ட்டி போலும். படத்தைப் பார்த்து முடித்ததும் மனதில்  பளிச்சென்று மின்னல் வெட்டாக மின்னுவது பெரியாரின் ‘மதம் உள்ளே போனால், மதி வெளியே போகும்’ என்கிற அழுத்தமான வார்த்தைகளே. வாழ்க்கையில் மனிதத்தை முதன்மையாகக் கொள்ளும்  எவர் மனதிலும் இப்படி மின்னுவதும்  இயல்புதான். மதிப்பெண்: 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து