கருடன்

கருடன்

திரை விமர்சனம்: மது ராஜேந்திரன் நேர்மையான காவல்துறை துணை ஆணையருக்கும் மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த புகாருக்கு இலக்கான ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கும் இடையில் நடைபெறும் சட்டப் போராட்டம்தான், அருண் வர்மாவின் அறிமுக இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகி ஆங்கிலத் திரை வசனங்களுடன் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘கருடன்’ திரைப்படம். விசாரணை அலுவலராக டிசிபி ஹரிஷ் மாதவ் (சுரேஷ் கோபி) இந்த வழக்கில் திறம்படச் செயல்பட்டு, ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை அடுத்து, அரசு வழக்குறிஞர் தாமஸ் ஐப் (சித்திக்) கல்லூரி பேராசிரியர் நிஷாந்த் ( பிஜு மேனன் ) குற்றவாளி என்று நிரூபித்து, ஆயுள் தண்டனை பெற்றுத் தருகிறார். பலாத்காரத்திற்கு உள்ளான மாணவி தெரசா ஃபிலிப் (சைதன்யா பிரகாஷ்) நினைவிழந்து ‘கோமா’ நிலைக்குச் சென்றுவிட்டார். ஏழு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு வெளிவரும் நிஷாந்த், ஹரிஷ் மாதவ் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளில், தனது வழக்கை மீண்டும் விசாரணை செய்ய கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது, வழக்கில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட, நிஷாந்த் குற்றவாளி என  நிரூபிக்க காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆதாரங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி, தாமே முன்னின்று வாதாடி, குற்றமற்றவன் என்று விடுதலையாகி வெளியே வருகிறான், நிஷாந்த். தவிர, விசாரணை அலுவலர் மீதான அவனது அவதூறு வழக்கில், டிசிபி ஹரிஷ் மாதவ் நஷ்ட ஈடாக 70 லட்சம் அவனுக்குத் தரும்படி உயர்நீதிமன்றம் ஆணையிடுகிறது. நிலைகுலைந்து போன ஹரிஷ் மாதவ், அரசு வழக்குறிஞர் தாமஸ் ஐப்பிடம் இந்த வழக்கில் நான் தவறு ஏதும் செய்யவில்லை என்பதைத் திடமாக நம்புவதாகவும் தெரிவித்து, புத்திசாலியான நிஷாந்த் திட்டமிட்டு நடத்திய நாடகத்தை வெளிக்கொணர்வதாக உறுதியளிக்கிறார். அதை அவர் நிறைவேற்றுகிறாரா என்பதுதான் ‘கருடன்’ படத்தின் மீதிக் கதை. காவல்துறை உயரதிகாரியாக சுரேஷ் கோபியும் கல்லூரிப் பேராசிரியரும் ஒரு பாலியல் குற்றவாளியுமாக பிஜூ மேனனும் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பில் திறமை காட்டுகின்றனர். தொழில் நேர்த்தியையும் முயற்சியில் வெற்றி பெறும்போது அதீதமாக இல்லாமல் அழுத்தமான ஒரு புன்முறுவலையையும்  தோல்வியடையும்போது அதை ஜீரணிக்க இயலாத நிலையிலும் தான் தவறு ஏதும் செய்யவில்லை என நிற்பதில் காட்டும் உறுதியையும் சுரேஷ்கோபி துல்லியமாக வெளிப்படுத்தும் பாங்கு ரசிக்கத்தக்கது. அதேபோன்று கண்ணியமான பேராசிரியர் பதவிக்கே இழுக்கு நேரும் நிலையில் குறுகிப்போவதும் நீதிமன்றத்தில் குற்றவாளி என உறுதி செய்யப்படும் நிலையில் உடைந்து போவதும் தண்டனை முடிந்து வெளியே வரும்போது மகளுடன் வரும் மனைவி தன்னை உதாசீனப்படுத்தும்போது தவித்துப் போவதும் பின்னர் ஹரிஷ் மாதவ்விடம் வெளிப்படும்போதான மாறுபாடான முக பாவமுமாக எதிர்மறையான பாத்திரமாக இருந்தாலும் அதன் தன்மையை முழுதுமாக உள்வாங்கி பிஜு மேனன், தன் பங்களிப்பை அற்புதமாக வழங்கியுள்ளார். கதையில் அவர்களுக்குள்ள இடமும் கண்ணாமூச்சி விளையாட வசதியாக இருக்கின்றது. ஜெகதீஷ் (சலாம்), அபிராமி (ஸ்ரீதேவி), திவ்யா பிள்ளை (ஹரிதா), தலைவாசல் விஜய் (கார்னல் ஃபிலிப் ஜார்ஜ்), திலீஷ் போத்தன் (ஐ ஜி பி சிரியா ஜோசப்), நிஷான் சாகர் (நாரி சுனி), மாளவிகா (அருனிமா) போன்ற ஏராளமான துணைப் பாத்திரங்களும் அவரவர்களுக்கு உரிய பங்கை சிறப்புறவே செய்துள்ளனர். ஜினேஷின் கதைக்கு, மிதுன் மேனுவல் தாமஸ் தெளிவான திரைக்கதை எழுதியுள்ளார். அஜய் டேவிட் கச்சபில்லியின் கண்கவர் ஒளிப்பதிவும் ஜேக்ஸ் பிஜய்யின் கதைக்கு இணக்கமான இசையும் ஸ்ரீஜித் சரங்கின் கச்சிதமான படத்தொகுப்பும் அறிமுக இயக்கத்திற்கு வலு கூட்டுகின்றன. ஏழு கோடியில் எடுக்கப்பட்ட படம் 27 கோடி வசூலைக் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிஷாந்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டனை பெற்றுத்தர விசாரணை அதிகாரி மேற்கொண்ட முயற்சிகளைக் காட்டிய அளவில், அவனது விடுதலைக்குப் பிறகு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஏற்ற நிலைக்கு பிந்தைய காலத்தில் காட்டப்படாதது குறையே.  அவ்வாறே, அமைச்சரின் டாலர்ஸ் ஸ்மக்லிங் வழக்கு, ஒட்டாத வாலாகத் தனித்து ஆடுகிறது; தவிர்த்திருக்கலாம். இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், சுரேஷ்கோபி, பிஜு மேனன், சித்திக் கூட்டணியின் சிறப்பான பங்களிப்பு, அறிமுகச் சுவடே தெரியாத இயக்கம், படத்தை இரண்டு மணி நேரமும் தொய்வின்றி விறுவிறுப்பாகக் கொண்டுசென்றது என்கிற வகையில், அருண் வர்மாவின் ‘கருடன்’  உயர்ந்தே பறக்கிறது. மதிப்பெண் : 7/10

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி

திரை விமர்சனம்: மது ராஜேந்திரன் பெயர் அன்விதா ரவாலி ஷெட்டி. வயது 38. வேலை ஸ்டார் ஹோட்டலில் சீப் செஃப். பிடித்தது அம்மா அம்மா மட்டுமே. பிடிக்காதது காதல், உறவு, கல்யாணம். விருப்பம் குழந்தை – குழந்தை மட்டுமே. பிரச்சினை, கல்யாணம் இல்லாது அதை அடைவது. அதை அவள் அடைவதற்கு என்னென்ன செய்தாள், இறுதியில் அடைந்தாளா என்பதுதான், காதல், நகைச்சுவை கலந்தும் உணர்வுப்பூர்வமானதாகவும் திரைக்கதையாக்கி, மகேஷ் பாபு இயக்கி, தமிழ் வசனங்களுடன் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ தெலுங்குத் திரைப்படத்தின் மொத்தக் கதை. அன்விதாவாக வரும் அனுஷ்கா ஷெட்டியைச் சுற்றியே கதை சுழல்கிறது. காதல், திருமணம், உறவு குறித்து அம்மா(ஜெயசுதா)விடம் விவாதிக்கும்போதும் அம்மா இல்லாத தனிமையை உணரும்போதும் வியாவிடம் (சோனியா தீப்தி) உணவகத்தில் வெள்ளந்தியாகப் பேசும்போதும் மருத்துவரிடம் (ஹர்ஷவர்தன்) ஆலோசிக்கும்போதும் ‘ஸ்பேர்ம் டோனர்’ பற்றி ஆய்வு செய்யும்போதும் சித்துவை (நவீன் பொலிஷெட்டி) முழுதுமாக அறியும் பொருட்டு நெருக்கத்தைத் தொடரும்போதும் அவர்களுக்கான உறவு மேலும் கீழுமாகப் பயணிக்கும் போதும் இறுதியில் சித்து இல்லாததை உணர்ந்து வருந்தும்போதும் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் பல்வேறு பரிமாணங்களில் மின்னுகிறார். அவரது அழகும் உடல்வாகும் கூடுதல் சிறப்பு. சித்து பொலிஷிட்டியாக, ஸ்டாண்ட் அப் காமெடியனாக, அம்மாவுக்குச்  செல்லப் பிள்ளையாக, அன்வித்தாவுடன் காதல் வயப்படும் இளைஞனாக, அவளது நோக்கத்தை அறிந்த நிலையில் ஆடிப்போனவனாக, ஒருகட்டத்தில் அவனை உணர்ந்த அவளைப் புரிந்து உருகுபவனாக அனுஷ்காவுக்கு ஈடு கொடுத்து நடிப்பில் திறமையைக்  காட்டி இருக்கிறார், நவீன் பொலிஷெட்டி. பாசமுள்ள அம்மாக்களாக ஜெயசுதாவும் துளசியும், கண்டிப்பான அதே நேரத்தில் அக்கறை கொண்ட அப்பாவாக முரளி ஷர்மா, அன்விதா குறித்துப் பெருமிதம் கொள்ளும் லண்டன் ஹோட்டலில் தலைவராக நாசர், சித்துவின் நண்பன் ராகுலாக அபிநவ் கோமடம், காவியாவாக சோனியா தீப்தி, டாக்டராக ஹர்ஷர்வர்த்தன் போன்ற துணைப் பாத்திரங்களும் நடிப்பில் அவர்களது பங்களிப்பைச் சிறப்புற வழங்கியுள்ளனர். “என் கண்ட்ரோல்ல இருக்கற லைஃப இந்த மாதிரி காதல், கல்யாணம், ரிலேஷன்ஷிப்புன்னு என் கையவிட்டுப் போற நிலைமை எனக்கு வேண்டாம்” (அன்விதா) “அப்படின்னா கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க எல்லாரும் பிரிஞ்சு போயிடுறாங்களா?” (அம்மா) “நீ பிரிஞ்சிட்ட இல்ல?” (அன்விதா) “போகப்போற நம் உசிர, போகாமப் பிடிச்சுக்கறதுக்கு எல்லாருக்கும் ஒரு கை தேவைப்படும். நீ நம்பற துணை உனக்குக் கிடைக்கும்போது நீ கை விட்றாதே” (அம்மா) “இது விஷயம் இல்லடி, விசேஷம்!” (காவியா) “அம்மா ஆகணும்னா ‘பிரக்னன்ட்’டானா போதாதா, ஏன் மேரேஜ் ஆகணும்?” (அன்விதா) “டெஸ்ட் மூலமா டோனரோட ஸ்பேர்ம் குவாலிட்டிய கண்டுபிடிக்கலாம். ஆனா, டெஸ்ட் பண்ணி டோனரோட குவாலிட்டிய கண்டுபிடிக்க முடியாதுமா” (டாக்டர்) “அவரும் ஸ்டாண்ட் அப் காமெடியனா?” (அன்விதா) “இல்லங்க, அவருக்கு ஸ்டேபிள் இன்கம் வருது” (சித்து) “அவங்க எல்லாரும் சக்ஸஸ் பீப்பிள் அதான்” (பனிந்திரா) “இதே சின்சியாரிட்டிய வேலயில காட்டிருந்தா, இந்நேரம் கல்யாணம் ஆகிக் குழந்தை பொறந்திருக்கும்” (பனிந்திரன்) “அந்த வேலயாதான் போயிட்டு இருக்கேன்” (சித்து) “உனக்குச் சம்பந்தப்பட்ட சின்ன விஷயமா இருந்தாலும் சரி, என்னோடதா இருக்கணும்னு ஆசைப்படறேன்…. மேரேஜுக்கு முன்ன டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்துப் போட்றா மாதிரி இருக்கு, அன்விதா” (சித்து) “இங்கு நடக்கறது ஹோமம் இல்ல, காமம்….  பொறக்கப் போற குழந்தைக்கு உன் ஜாடையே இருக்காது, இவ ஜாடைதான் இருக்கும்” (சித்து) “வெளியே காரியத்தால வேல நடக்குதுன்னா, இங்க வீரியத்தால வேல நடக்கும்” (டாக்டர் ஹர்ஷவர்தன்) “நான் அம்மா ஆகறதுக்கும் அனாதையா மிஞ்சிப் போறதுக்கும் இடையில இருக்கேன்….” (அன்விதா) “நாளைக்கு உனக்கு ஒரு பொண்ணோ பையனோ பொறந்ததுக்கு அப்புறம், ‘எங்க அப்பா யாருன்னு கேட்டா, யாருன்னு தெரியாத ஒரு ‘ஸ்பெர்ம் டோனர்’னு சொல்லாம, அவங்க அம்மாவ லவ் பண்ண ஒருத்தன்னு சொன்னா போதும்” (சித்து) “எனக்கு நீ வேணும்னு சொன்னியே தவிர, உனக்கு நான் இருக்கேன்னு எப்போவாவது சொன்னியா? நேரா போய் அவ நம்பிக்கைய ஜெயிக்கிறதுக்கு ஃபன் பண்ணு” இவை இயக்குநரே எழுதியுள்ள வசனங்களில் நினைவை ஈர்க்கும் சில. அழகான லண்டனையும் ஹைதராபாத்தை அழகாகவும் காட்டி இருப்பதுடன், கலைநயமான ‘ப்ரேம்’களையும் வைத்து, கண்களுக்குக் குளுமை சேர்த்துள்ளார், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா. பாடல்களுக்கு ராதனின் இசை இனிமை. கோபி சுந்தரின் பின்னணி இசை அருமை. படத்தொகுப்பு கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ். குறைவில்லை என்றாலும் சற்று சோர்வு தரும் ஒரே மாதிரியான காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவதைத் தவிர்த்து, நீளத்தை குறைத்திருந்தால்,  சிறப்பாக இருந்திருக்கும். பாலுறவு பற்றி எல்லாம் மேடையிலே கதைக்கும், ஐடி கம்பெனியில் பணிபுரியும் நவீன உலகின் இன்றைய  இளைஞனுக்கு, செயற்கை முறையில் கருத்தரிக்கும் மருத்துவமுறை பற்றித்  தகவலாகக்கூட அறிந்திருக்கவில்லை என்பதுதான், நெருடலான ஒன்று ! கொடையாளி யார் என்பதைத் தெரிவிப்பது, இந்த இந்தப் பிரச்சனைகள் எழும் என்பதால் சட்டத்திற்குப் புறம்பானது எனில், கொடையாளியைத் தானம் பெறுபவரே அழைத்துவரும்போது, என்னதான் ஒப்பந்தம் செய்துகொண்டாலும், அடையாளம் தெரிவதால் எழும் பிரச்சனைகள் எழாது என்பதும் அது சட்டத்திற்குப் புறம்பானது இல்லை என்பதும் எவ்விதத்தில் நியாயமாகுமோ! இந்தக் ‘கரு’வைச் சுற்றிப் பின்னப்பட்ட திரைக்கதை புதுமையானது. சொன்ன விதமும் சுவையானது. நிலவும் சமூகச் சூழலில், கொஞ்சம் சறுக்கினாலும் அருவருப்பாக நெளியவைத்துவிடும், கத்தி மேல் நடக்கக்கூடிய சவாலை, கலகலப்பாகவும்  நெகிழ்வை ஏற்படுத்தியும் எதிர்கொண்டு, இயக்குநர் மகேஷ் பாபு வெற்றியும் பெற்றுவிடுகிறார். மதிப்பெண்: 7/10

கண்டுகொள்ளப்படாத ‘கக்கன்’ திரைப்படம்

கண்டுகொள்ளப்படாத ‘கக்கன்’ திரைப்படம்

திரைப்பட அறிமுகம்: ரசல்ராஜ் தமிழ்நாட்டின் முக்கியத் தலைவர்களாக இருந்த தந்தை பெரியார், கல்விக்கண் திறந்த காமராசர், துணிச்சல் மிக்க ஜெ.ஜெயலலிதா இவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய படங்கள் திரையில் உலாவின. மக்களும் கண்டுகளித்தனர். அதே வரிசையில் நேர்மையின் சிகரமாகத் தமிழக அமைச்சரவையில் திகழ்ந்த அமைச்சர் ‘கக்கன்’ அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட படமான ‘கக்கன்’ கடந்த ஆகஸ்ட் மாதம் 24இல் வெளிவந்தது. ‘என்ன கக்கன் படமா? எப்போ வந்துச்சு?’ என ஆச்சரியப்படவேண்டாம். வருத்தப்படவும் வேண்டாம். ‘கக்கன்’ படம் வந்ததும் தெரியாது; திரையரங்கை விட்டுக் காணாமல்போனதும் தெரியாது பலருக்கு. எழுத்தாளர் ஒருவர் எப்படியாவது ‘கக்கன்’ படத்தைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் திரையரங்கை நோக்கிச் செல்ல,அவருக்கு முன்பாகவே திரைப்படம் திரையரங்கைவிட்டு வெளியேறிச் சென்றிருந்தது கண்டு, பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது எழுத்தாளருக்கு. நம் தமிழகத்தில் விளம்பரமில்லா நல்ல படங்களுக்கும் வரலாற்றுப் படங்களுக்கும் கிடைக்கும் வெகுமதி இதுதான். அடிதடிப் படங்களுக்கும் வன்முறையைத் தூண்டும் படங்களுக்கும்தான் திரையரங்குகள் திறந்திருக்கும்; நிறைந்திருக்கும். சமீபத்தில் வெளியான ‘சித்தா’, ‘ஹர்காரா’ போன்ற சிறந்த கதையமைப்பைக்கொண்ட எளிய, குறைந்த பட்ஜெட் படங்களுக்கும் இதே நிலைதான். இதுபோன்ற படங்களுக்கு மக்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு கிடைப்பதில்லை. படம் வந்ததே பலருக்குத் தெரிவதில்லை. தலித் இயக்கங்களும் கக்கன் படத்தைக் கண்டுகொள்ளவில்லை. சமூச அக்கறையுள்ளவர்களின் சமூக வலைதளங்கள் மூலமாகவும் இணைய இதழ்களின் மூலமாகவுவே இப்படங்கள் மக்களைச் சென்றடைகின்றன. நேர்மையோடு, எளிமையாக, மக்களின் நலனுக்காகத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த ‘கக்கன்’ போன்ற மாமனிதர்களின் வரலாற்றைக் கூறும் படங்களை, குறைந்த கட்டணத்தில் திரையரங்குகளில் மக்கள் பார்க்கவும் கல்விக் கூடங்களில் மாணவர்கள் பார்த்து அறிந்துகொள்ளும் வகையிலும் அரசே முன்வந்து, ஏற்பாடு செய்ய வேண்டும். எத்தனையோ இலவசத் திட்டங்களை அறிவிக்கும் அரசு, கக்கன் படத்தைப் பார்ப்பவர்களுக்குச் சலுகைகள் அறிவித்திருந்தால் தியாகசீலர் கக்கனும் மக்கள் மத்தியில் தெரிவார். அரசும் பெருமை கொள்ளலாமே! நேர்மையின் சிகரம் ‘கக்கன்’ படத்திற்கு ஜோசப் பேபி திரைக்கதை, வசனம் எழுதி அவரே கக்கனாக நடித்துமிருக்கிறார். தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருக்கிறார். ஒரு மணிநேரம் 40 நிமிடம் ஓடக்கூடிய இவ்வரலாற்றுப் படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவானது, தமிழக முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ். அழகிரி மற்றும் கக்கன் அவர்களின் மகள் கஸ்தூரி, பேத்தி ராஜேஸ்வரி (IPS) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது மகிழ்ச்சிக்குரியதுதான். 1951 முதல் 1967 வரை தமிழக அமைச்சரவையில் உள்துறை, ஆதிதிராவிடர், விவசாயம், பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக இருந்தவர் கக்கன். கக்கன் அவர்களின் பேத்தியும் சேலம் சரக போலீஸ் அதிகாரியுமான ராஜேஸ்வரி (IPS), படத்தின் தொடக்கத்தில் ‘கக்கன்’ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த, படம் ஆரம்பமாகிறது. முதல் காட்சியிலேயே, நினைவிழந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கக்கனைப் பார்வையிட வருகிறார்கள் சிலர். மதுரை மேலூரில் உள்ள தும்பைப்பட்டியில் பூசாரி கக்கன் (கக்கனின் தந்தை) கோயில் பூசாரியாக இருந்து, குடிசை வீட்டில் மனைவி குப்பு (கக்கனின் அம்மா) உடன் எளிய வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். கக்கன் பிறப்பு (1908), சட்டைகூடப் போடாமல் திண்ணைப் பள்ளிப் படிப்பு என, அடுத்தடுத்த காட்சிகளாக எளிய வறுமை நிறைந்த வாழ்க்கை வரலாறு நகர்கிறது. வறுமையால் ‘ஹரிசன சேவ சங்கம்’ (மதுரை) மூலம் கக்கனைப் படிக்கவைக்க விடுதியில் சேர்த்துவிடுகிறார் பூசாரியான அவரின் அப்பா. ஒரு பாடத்தில் தோல்வி அடைகிறார் கக்கன். பள்ளியில் பணம் கட்டமுடியாமல் தவிக்கும் கக்கனுக்கு, வைத்தியநாதய்யர் உதவிசெய்து கடனையும் அடைக்கிறார். ‘ஹரிசன சேவா சங்கமும்’ உதவி செய்து கக்கன் படிப்பும் தொடர்கிறது. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்வை யவை (குறள்:400) உணவைப்போல் கல்வியும் அவசியம் என வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு ‘இரவு நேரக் கல்வியை’ நிதியில்லாமல், சமூக ஆர்வலர்கள் மூலம் நடத்துகிறார் கக்கன் தம் இளமைப் பருவத்தில். கணபதி ஐயர் மதுரையில் ஆசிரியராகப் பணிபுரியும் ‘சொர்ணம் பார்வதி’யைக் கக்கனுக்கு மணமுடித்து வைக்க எண்ணி, பூசாரியான கக்கனின் அப்பாவிடம் கேட்க, பெண் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவள் என்பதால் முதலில் மறுப்புத் தெரிவிக்கிறார் அவர். “நாங்க வீரமாகாளியைக் கும்பிடுகிற குடும்பம்; பொண்ணு வேதம் படிக்கிற பொண்ணு. எப்படிங்க?” எனத் தயங்குகிறார் கணபதி ஐயரிடம். பின்பு, ஊர்ப் பெரியவர்கள் கலந்து பேச, மிகவும் எளிய முறையில் சீர்திருத்தத் திருமணம், கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் தாலி எடுத்துக்கொடுக்க, திருமணம் (1932) நடைபெறுகிறது, ‘காந்தியடிகளின்’ பெரிய புகைப்படத்திற்கு முன்னால். திருமணம் முடிந்ததும் மனைவியிடம், “கல்வி அழியாத சொத்து. இயலாத குழந்தைகளை மதுரையில் விடுதி அமைத்துப் படிக்கவைக்க வேண்டும் பார்வதி. இதில் உனக்குச் சம்மதம்தானே?” எனக் கேட்க, “வள்ளுவனுக்கு ஒரு வாசுகி எனப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். எனக்கு முழுச் சம்மதங்க” என முகமலர்ச்சியோடு சொல்லும் சொர்ணம் பார்வதியின் வார்த்தைகள் அவருக்கு உறுதுணையான காட்சி. மதுரையில் காந்தியடிகளைச் சந்தித்தபோது (1934), “தமிழ் எனக்குப் பிடித்த மொழி. தமிழர்களை நான் மிகவும் நம்புகிறேன்” எனக் கூறும் காந்தியடிகளிடம் கக்கனின் நேர்மையையும் நாட்டுப்பற்றையும் பற்றித் தெரிவிக்கிறார் காங்கிரஸ் தலைவர் N.M.R.சுப்புராமன். காங்கிரஸில் இணைந்த கக்கன், கோவில்களில் நுழைய ஹரிசன மக்களுக்கு இருந்த தடைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி, கோயில்களுக்குள் நுழைகிறார். அதில் தமிழக வரலாற்றில் முதல் வெற்றியும் பெறுகிறார். “சாதியையும், மதத்தையும் முதல்ல ஒழிக்கணும். அப்போதான் நமக்குள்ள சமத்துவம் பிறக்கும்”, “நமக்குள்ளயே ஒத்தும இல்ல; பின்ன எப்படி வெள்ளக்காரங்கக்கிட்ட போராடி விடுதலைய வாங்கமுடியும்?” என்று அமைதியாகப் பேசும் இடங்களில் கக்கனின் விடுதலை தாகம் தென்படுகிறதைக் காணலாம். ஆங்கிலேயர்களை எதிர்த்து ‘வந்தே மாதரம்’ என முழங்கியதற்காகவும் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததிற்காகவும் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் கடுங்காவலில் சிதைக்கப்படுகிறார்; நினைவிழக்கிறார். அக்கொடூரக் காட்சியைக் கண்ட அவரது மனைவி கண்ணீர் சிந்தும் காட்சி நமக்கும் துயரம்தான். நம் கண்ணிலும் வெள்ளம்தான்; வேதனைதான். விடுதலையாகி, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் மாறுவேடமிட்டு (பர்தா அணிந்து) மறைவாகத் தன்னைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொள்கிறார். வீண்பழி சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதியின் கேள்விகளுக்கு, “தமிழன் ஒருநாளும் இந்தியாவைக் காட்டிக்கொடுக்க மாட்டான்” என்று விடுதலை உணர்ச்சி பொங்கக் கூறும் காட்சி, நம்முள்ளத்திலும் உணர்வைத் தூண்டிவிடுகிறது. 18 மாதச் சிறைத் தண்டனையை அலிப்பூர் மத்தியச் சிறையில் பட்டினியாக இருந்து, கல்லுடைத்து, லத்தியால் முதுகில் அடிக்கு மேல் அடி வாங்கும் காட்சிகளைக் காணும்போது, உண்மையிலேயே அவர் இதைவிடக் கொடுமைப்படுத்தப்பட்டிருப்பார் என்றெண்ணிக் கண்கள் குளமாகின்றன. இந்திய விடுதலைக்குப் பின், தமிழக முதலமைச்சர் காமராசரின் ஆட்சியில் ‘கக்கன்’ அமைச்சராகிறார். ஒப்பந்த அடிப்படையில் போடப்பட்ட தரமற்ற சாலைகளை நேரிலே பார்வையிட்டுக் கண்டிக்கிறார்; ரத்தும் செய்துவிடுகிறார். மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கான (1966) ஆணையை கக்கன் மற்றும் அமைச்சர்களோடு கலந்தாலோசித்துத்தான் முடிவெடுக்கிறார் கர்மவீரர் காமராசர். “விவசாயிகளின் எதிர்காலமும் குழந்தைகளின் கல்வியும் ரெண்டு கண்ணுங்றேன். அட.. என்ன நான் சொல்றது சரிதான..” என்று திருநெல்வேலியின் வட்டார மொழியோடு காமராசர் பேசுவதைக் கேட்க இனிமையாக இருக்கிறது. அவரின் அக்கறையும் இனிமையிலும் இனிமையல்லவா! ஒருமுறை கக்கன் அவர்களின் வீட்டிற்குக் காமராசர் வர, அரிசிகூட இல்லாமல் சொர்ணம் பார்வதியும், மகள் கஸ்தூரியும் விழிக்க, அதை நாசூக்காக அறிந்த காமராசர், வறுமை நிலையை அறிந்து சொர்ணம் பார்வதிக்கு அரசு வேலை ஒன்றை ஏற்பாடு செய்கிறார். இதை அறிந்த கக்கன் காமராசரிடம், “அண்ணன், என்னோட வறுமை நிலையை வச்சு என் மனைவிக்கு நீங்க வேல போட்டு கொடுத்தது உங்க பதவிய நீங்களே துஷ்பிரயோகம் செஞ்ச மாதிரி. தமிழகத்தில் எத்தனையோ படித்த மக்கள் வேலையில்லாம இருக்காங்க. முதல்ல 1000 பேருக்கு வேல போட்டு குடுங்க. அவளோட வேலைய வாபஸ் வாங்குங்க” என்று உணர்ச்சி ததும்பக் கூறும்போது, கேட்கும் காமராசரே கண் கலங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது படத்தில். காமராசர் ஆட்சியைப் போன்று ‘இனிமேல் வாரோதோ’ என எதிர்ப்பார்க்க முக்கியக் காரணமே, கக்கன் போன்ற நேர்மையான அமைச்சர்கள் மட்டுமே காமராசர் ஆட்சியில் இடம் பெற்றிருந்ததுதான். தும்பைப்பட்டி சென்று அப்பா அம்மாவைப் பார்க்கிறார் அமைச்சர் கக்கன். அங்கு ‘தீட்டு’ எனச் சொல்லி, கிராமத்தின் ஒரு பிரிவினரைத் தண்ணீர் பிடிக்கவிடாமல் செய்கின்றனர், அதே கிராம மக்களின் மற்றொரு பிரிவினர். இரு பிரிவினரையும் பஞ்சாயத்துக்கு அழைத்து, அமைச்சராக இருந்தாலும் பஞ்சாயத்தின் தீர்ப்புக்கு ஒரு ‘அமைச்சரே’ கட்டுப்பட்டு குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் காட்சி மனத்திற்கு இதம். படத்தில் கக்கனின் நேர்மைக்குச் சான்றாக மற்றுமொரு காட்சி. கக்கன் காவல்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது தம்பியான விஸ்வநாதனுக்குக் காவல்துறையில் வேலை கிடைத்ததை அறிந்து, தம்பியிடம் வேலையை விட்டுவிடும்படியாகவும் வேலைக்குத் தேர்வு செய்த அதிகாரியிடம் “அவனது கையில் விரல் கோணலாக இருக்கிறது. அவனால் எப்படி துப்பாக்கியைப் பிடித்து மிகச்சரியாகச் சுடமுடியும்? நம் நாட்டில் திறமைக்குத்தான் வேலை. நான் காவல்துறை மந்திரியாக இருப்பதால்தானே அவனுக்கு வேலை கொடுத்தீர்கள்?” என்று நேர்மை தவறாமல் கூறும் காட்சியைப் பார்க்கும்போது மெய்சிலிர்த்துவிடும். இப்படி இக்காலத்தில் அமைச்சரில் யாரேனும் இருப்பார்களா?! இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ‘அட, நாடு நமக்கு மட்டும் சொந்தமில்ல. அவங்களுக்கும்தான்’ என்ற காமராசரின் வாய்மொழி, 1967 தேர்தல் பரப்புரைகளில் ஒலிபெருக்கிகளில் ஒலிக்கும் கலைஞரின் குரல், நேர்மையான காமராசர் மற்றும் கக்கன் ஆகியோரின் தேர்தல் தோல்வி, உதயமாகும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, பணப்புழக்கத்தால்தான் வெற்றி என்ற பேச்சு (இன்றைக்கும் அதே நிலைதானே). உடல் நலம் குன்றிப் பல்லவன் பேருந்தில், போதிய காசுகூட இல்லாமல் பயணிக்கும் கக்கனின் எளிமை, மதுரை இராசாசி மருத்துவமனையில் தரையில் படுத்தபடி மேற்கொள்ளும் முடக்குவாதச் சிகிச்சை, தற்செயலாக வந்த எம்.ஜி.ஆர் விவரமறிந்து முதல் தர சிகிச்சைக்கு உத்தரவு, ஆட்சியின்போது வரும் நன்கொடைகளை அரசுப் பதிவேட்டில் குறித்துக்கொள்ளும் காட்சி (தங்கப் பேனாவையே வேண்டாம் என்றவராச்சே), அரசு ஊழியர் தன் வீட்டிற்கு மண்ணெண்ணெயை வாங்கி வருவதைக் கண்டு அவரையும் மனைவியையும் கடிந்துகொள்ளும் காட்சி என, அன்று நடந்ததைச் சிறந்த காட்சிகளாக நாம் வியந்து பார்க்கும் அளவுக்கு, நமக்கெல்லாம் நினைவூட்டி இருக்கும் படக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். ஆனால், ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை இப்படம் தரவில்லை. ஆவணப்படம் போன்ற உணர்வைத்தான் தருகிறது. கதாபாத்திரங்களின் நடிப்பிலும் அத்தனை அழுத்தமில்லை.

இறுகப்பற்று

இறுகப்பற்று

திரை விமர்சனம்: மது ராஜேந்திரன் காதலித்து மணந்த அர்ஜுன் (ஸ்ரீ) திவ்யா (சானியா ஐயப்பன்) இடையே, அவள் சுறுசுறுப்பாகவும் புத்திசாலியாகவும் இல்லாததாகப் பிரச்சினை. ஒரு குழந்தை உள்ள ரங்கேஷ் (விதார்த்) பவித்ரா (அபர்னதி) தம்பதியருக்குள், அவள் குண்டாக இருப்பதுதான் பிரச்சினை. இனி சேர்ந்து வாழ முடியாது என விவாகரத்து முடிவுக்கு வந்துவிடும் நிலையில் அவர்கள் தனித்தனியாகவும், சமயத்தில் ஒன்றாகவும் உளவியல் நிபுணரும் திருமண ஆலோசகருமான மித்ராவைச் சந்திக்கிறார்கள். “கல்யாணம் என்பது கண்ணாடி மாதிரி. உடைந்தால் ஒட்டாது. உறவு என்பது ரப்பர் பேண்ட் போன்றது. இருபக்கம் இழுக்கும்போது அறுந்துபோகும். அதைச் சிலர் தூக்கி வீசுவார்கள். சிலர் அதை முடிச்சுப் போட்டுப் பயன்படுத்துவார்கள். வீசி எறிய வேண்டுமா, முடிச்சுப் போட வேண்டுமா என்பது நம் கையில்தான் இருக்கிறது” என்று, ஆலோசனைக்கு வரும் அத்தம்பதியர்களிடம் நேர்மறையான முடிவை எட்டும் நோக்கில், எதிர்மறையான சில செயல்பாடுகளை முன்னெடுக்கும்படி ஆலோசனை கூறும் மித்ராவும் (ஸ்ரத்தா ஸ்ரீநாத்) கணவன் மனோகருடன் (விக்ரம் பிரபு) சந்தோஷமாகச் சென்றுகொண்டிருந்த வாழ்வில் எதிர்பாராத விதமாகப் பிரச்சினையைச் சந்திக்கிறாள். அவர்களுக்குள் உள்ள பிரச்சினைகளின் உண்மையான வடிவத்தை இனம் கண்டு, அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை விறுவிறுப்பாகவும் சுவைபடவும் கூறுவதுதான், மகராஜ் தயாளனுடன் திரைக்கதை எழுதி, யுவராஜ் தயாளன் இயக்கி வெளிவந்துள்ள ‘இறுகப்பற்று’ திரைப்படம். ஸ்ரத்தா ஸ்ரீநாத் – விக்ரம் பிரபு ஜோடியாகட்டும், ஸ்ரீ சானியா ஐயப்பன் மற்றும் விதார்த் அபர்னதி ஜோடிகளாகட்டும், பாத்திரங்களின் தன்மையை முழுவதுமாக உள்வாங்கி, நடிப்பில் அற்புதமாக  வெளிப்படுத்தும் பாங்கில், ஒருவருக்கொருவர் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருப்பது சிறப்பு. சில நிமிடங்கள்தான் என்றாலும், அந்தப் பாத்திரத்திற்கு மனோபாலா ஏகப் பொருத்தம். அவர் இனி இல்லாதது பெரும் வருத்தம். கோகுல் பினாயின் ஒளிப்பதிவு ‘பளிச்’சென்று கண்களுக்குக் குளுமை. ஜஸ்டின் பிரபாகரனின்  மென்மையான பின்னணி இசையும் இனிமை தரும் பாடலிசையும் அருமை. ஜே.வி. மணிகண்ட பாலாஜியின் படத்தொகுப்பு, கச்சிதம். கதைக்கரு புதிதல்ல. அதைத் திரையில் தந்த விதம் அருமை. நகைச்சுவை குழைத்த வசனங்கள்; என்றாலும், சில ‘நறுக்’கென்று இருக்கின்றன. என்னதான் திருமணமாகிவிட்டாலும், கணவனோ மனைவியோ அவரவர்க்கு உள்ள தனித்த அடையாளங்களை, திருமணத்திற்குப் பிறகு விட்டுவிட வேண்டும் என்கிற பரஸ்பர எதிர்பார்ப்புதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை. சமரசமின்றி இந்த எதிர்பார்ப்புகளைத் தவிர்த்து, பரஸ்பரம் துணை நின்றால் பிரச்சினைகளுக்கே இடமில்லை என்பதை, அழுத்தம் திருத்தமாகவும் கலை நயத்தோடும் சொல்வதில், இயக்குநர் யுவராஜ் தயாளன் வெற்றி பெற்றிருக்கிறார். பிரச்சினைகளில் உழலும் தம்பதியர், அவற்றைக் களைய ஏதுவாக, சுயபரிசோதனை செய்துகொள்ளவும், திருமணத்தை எதிர்கொள்ளும் ஆண் பெண்ணோ, காதலர்களோ, திருமண ஆலோசனையாகக் கொள்ளவும் அவசியம் இந்த, ‘இறுகப்பற்று’. மதிப்பெண் : 8/10

தபால்காரர் தெய்வமான கதை

தபால்காரர் தெய்வமான கதை

திரைப் பார்வை ‘அலை ஓசை’ நாவல் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும், அதன் முதல் அத்தியாயத்தில் தபால் சாவடி என்று வரும். 1930களின் போஸ்ட் ஆபீசை, கல்கி அவ்விதம் எழுதியிருப்பார். ‘வெளியே சற்றுத் தூரத்தில் ‘ஜிங் ஜிங் ஜிக ஜிங்’ என்ற சத்தம் கேட்டது. வர வர அந்தச் சத்தம் தபாலாபீசை நெருங்கியது. ரன்னர் தங்கவேலு கையில் உள்ள ஈட்டிச் சிலம்பைக் குலுக்கிக்கொண்டு தபால் சாவடியின் வாசலுக்கு வந்து சேர்ந்தான்‘ என்று அந்த அத்தியாயத்தை முடித்திருப்பார் கல்கி. 1930களில் தபால்காரருக்கு ரன்னர் என்ற பெயர் வழக்கத்தில் இருந்தது என்பதை அறிகிறோம். தபால்காரர்கள் வெள்ளையர் காலத்திலேயே கேந்திரமான பணியை வகித்தார்கள். நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த தபால்காரர்களுக்கும் தற்காலத்தில் வேலை பார்க்கும் தபால்காரர்களுக்கும் மிக முக்கியமான வேறுபாடே, முன்னவர்கள் நடந்தும் ஓடியுமே கடிதங்களைக் கொண்டு சேர்த்தார்கள் என்பதுதான். வனத்திலும் மலையிலும் அவர்களின் தடத்தை இந்தத் திரைப்படம் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது. ‘ஹர்காரா‘ படத்தைப் பார்த்ததும் ஹர்காரா என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தபால்காரர் என்று தெரிந்தது. நூறாண்டுக்கு முந்தைய தபால்காரரின் கதையைக் கேட்கிற இன்றைய தபால்காரர்.. எல்லா வேலைகளிலும் ரொம்ப முன்னால ஒருத்தர் இருந்திருப்பாரே.. இன்றைய மாறுதல்கள் எல்லாவற்றின் ஆரம்பமும் அவர் அல்லவா?! அவரின் கதை என்ன? அவர் ஒரு மலை மக்களின் தெய்வமாக மாறியது எப்படி? சென்ற காலத்தின் வரலாற்று விழுமியங்கள் நிகழ்காலத்தில் புதைக்கப்பட்டதால் எதிர்காலத்தைப் பற்றிய கவலை மண்டிக் கிடக்கும் சூழலில் வந்திருக்கும் சரியான கலைப் படைப்பு. ஆனால் தியேட்டரில் வெகுஜனங்களுடன் பார்த்து, திரைப்படம் முன்வைக்கும் விவாதங்களை ரசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை. இதைப் பற்றியும் கவலை மேலிடுகிறது. பாலசந்தரின் ‘தண்ணீத் தண்ணீர்’ வெகுமக்கள் திரள் முன்பு எத்தனை விவாதங்களைத் தந்தது? ஜெயிலருக்கும் சந்திரமுகிகளுக்கும் கோடித் திரைகள் திறக்கட்டுமே.. எம் மக்களின் கதைகளைக் கேட்பதற்கு ஓரிரு திரைகளாவது ஒளிரக்கூடாதா? இப்படித்தான் ‘கக்கன்’ என்றொரு படம் வெளியாகி, தியேட்டர் இல்லாமல் பார்க்க முடியாது போனது. தமிழ்த் திரைஅரங்குகள் வெகுஜன விழுமியத்தில் இருந்த காலம் போய்விட்டது. சரி, படத்துக்கு வருவோம். மலையும் வனமும் சூழ்ந்திருக்கும் கிராமம் ஒன்றில், மலை மக்களைச் சமாளிக்க முடியாத தபால்காரரின் சிரமம் மிகுந்த பணிக்கிடையே, அவர் கேட்கும் பழைய தபால்காரரின் கதையை அவரோடு நாமும் கேட்கிறோம். ஒரு தபால்காரனின் துணிச்சலான முடிவு, வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வர்த்தகச் சதியை முறியடிக்கிற கதையை, அதன் விளைவாக அவன் கழுவேற்றப்பட்டு தெய்வமாகிற சரித்திரத்தை நாமும் கேட்கிறோம். 19ஆம் நூற்றாண்டில் வெள்ளையன், தன்னை எதிர்ப்பவர்களைத் தூக்கில் ஏற்றுவான், பீரங்கி வாய்முன் சுட்டுப் பொசுக்குவான். கழு ஏற்றினானா என்று தெரியவில்லை. இந்தப் படத்தின் கதை விவாதத்தில் பயணித்திருக்கிற வாசிப்பை நேசிப்போம் குழுவின் கதிரவன் ரத்தினவேலிடம் பேசும்போது, அப்படியான செய்திகள் கிடைத்திருக்கின்றன என்கிறார். மலை சூழ்ந்த சூழலில் அதிகாரம் செலுத்துகிற வெள்ளைத் துரைகள் தனக்கு வாய்ப்பான முறையைப் பின்பற்றியிருக்கலாம் என்று சமாதானம் கொண்டேன். ஒரு மலைக் கிராமத்துக்குப் புதிதாக வந்திருக்கும் தபால்காரரை அந்த மலைக் கிராமத்து மக்கள் அணுகும் முறையில் பளிச்சென்று படம் தொடங்குகிறது. விடியும்போதே தபால்காரரை எழுப்பி, சேமித்த பணத்தைக் கேட்டு, அதிலும் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அதிகமாகப் பெற்றுச் செல்கிற பெண்ணும் அப்பெண்ணுக்கு ஆதரவாகப் பேசுகிற மக்களும்.. கொட்டாவி கலையாத முகத்துடன் பணத்தைக் கொடுக்கிற நம் தபால்கார் காளி என்ன செய்வார், பாவம்? தனக்கு மாற்றல் வேண்டி மேலதிகாரிகளுடன் பேசுகிறார். அதுவும் எப்படி? சிக்னல் இல்லாத மலைப் பிராந்தியத்தில் போனை வைத்துக்கொண்டு அலைந்தவாறு சிக்னல் கிடைக்கும்பொழுதில் சின்ன சந்தோஷத்தை முகத்தில் காட்டிப் பேச, மாறுதல் மறுக்கப்பட, உடனே எரிச்சலைக் காட்டுகிற அழகு.. மலைக் கிராமத்து தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டர், குமாஸ்தா, போஸ்ட்மேன் எல்லாம் ஒருவரே. நம் ஊர் ஓராசிரியர் பள்ளி போல, ஒரு நபர் போஸ்ட் ஆபிஸ்.தன் மாறுதலுக்காக மலை மக்களுக்கான அந்த ஒற்றைத் தபால் அலுவலகத்தையும் இல்லாமல் செய்ய, அந்த வெள்ளந்தி மக்களையே ஏமாற்றி அவர்களிடம் கைநாட்டு வாங்குகிறார் இந்தத் தபால்காரர் காளி. எத்தகைய மக்கள்? அரசுப் பணியில் இருக்கும் அந்தத் தபால்காரரை வெள்ளந்தியாக நம்புகிற மக்கள். வாழ்க்கையில் நேர்மறையான நம்பிக்கையை மட்டுமே வெளிப்படுத்துகிற மலைவாசிகள். அந்த ஒற்றைக் காக்கிச் சட்டைக்காரரின் மேல் உரிமையையும் அன்பையும் காட்டுகிற கள்ளமில்லாத மக்கள். மாரியம்மாள் என்கிற, மலைமேல் இருக்கிற ஒரு முதிய பெண்ணுக்கு வந்திருக்கும் கடிதத்தைக் கொடுக்க, ‘நடை தூரத்தில்தான் இருக்கிறது’ என்று மலை மக்கள் வழிகாட்ட, போய்க்கொண்டே இருக்கும் மலைப் பாதையில் ஏறிக் களைத்துப்போய் மாரியம்மாளிடம் கடிதத்தைக் கொடுக்கிறார். மிக நீண்ட காலம் போராடிய அவளுக்கு, அரசு அவள் கோரிக்கையை ஏற்ற செய்தியைத் தெரிவிக்கிற கடிதம் அது. அது அவளுக்கான கோரிக்கை மட்டுமல்ல; அந்த மலை மீது வாழ்கிற முதியவர்கள் அனைவருக்குமான கோரிக்கை. அது என்ன? அது சொல்லும் அரசியல் என்ன? முதியோர் பென்சனைத் தபால்காரர் கொண்டு தந்து, வாங்கிக்கொண்டிருந்த மலைமக்களை இனி வங்கிக் கணக்கு மூலமாக வாங்கிக்கொள்ளுங்கள் என்று முகத்தில் அறைந்துவிட்டது அரசு. மாரியம்மாள் தொடர்ந்து மனுப் போட்டு, மீண்டும் தபால் அலுவலகம் மூலம் தபால்காரரே கொண்டு தருவார் என்று தனது கோரிக்கையில் வென்றிருக்கிற செய்தியைச் சுமந்து வந்திருக்கிறார் நம் காளி. அதாவது, மலை மக்கள் சேமிப்பைத் தபால் அலுவலகம் இல்லாமல் வங்கிக்கு மாற்றலாம் என்று மலை மக்களே கேட்பதாகப் பொய் மனு எழுதி, மக்களிடம் கைநாட்டு வாங்கி இருக்கிற காளி. மலை மீது ஏறிவரும் பாதையில், ஏகாதிபத்திய வெள்ளையனால் கழுவிலேற்றப்பட்டு தெய்வமான பழைய ‘ஹர்காரா’ என்ற ரன்னர் மாதேஸ்வரனின் கதையைச் சொல்கிறார் அந்த மலைவாழ் பெரியவர் ஒருவர். செஞ்சட்டை அணிந்திருக்கிறார். அவர் காளியைக் கேட்கும் கேள்விகள், திரையரங்கில் பார்த்தால் கைத்தட்டல்களை அள்ளிவிடும் தன்மையுடன் மிகக் கூர்மையாக நம்மைத் துளைக்கின்றன. மாதேஸ்வரனின் கதை காவியத் தன்மையோடு திகழ்கிறது. மாதேஸ்வரனாக நடித்திருக்கும் ராம் அருண் காஸ்ட்ரோ அந்தப் பாத்திரத்தின் கூர்மையைக் கொண்டுவர இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அவரே படத்தின் இயக்குநரும் அவரே. இயக்குநராகவே அதிகம் ஸ்கோர் செய்கிறார்.தபால்காரர் காளி பாத்திரத்தில் வருபவர் பெயரும் காளி வெங்கட்தானாம். என்ன அருமையான, இயல்பான நடிப்பு! மலைக் கிராமப் பணியின் மீதான எரிச்சல், பொய் மனு வேலையில் காட்டும் கள்ளத்தனம், மாரியம்மாளைப் பார்த்துவிட்டு வரும்போது தன்னில் எழும் குற்றவுணர்வு, அத்தனையிலும் சிறந்த நடிப்பைக் காட்டியிருக்கிறார். பட்டப் படிப்பு படித்திருந்தாலும் கிராம வாழ்வை மெச்சி வாழும் அந்தக் கிராமத்தின் இளைஞன், பொய் மனுவைப் படிக்காமலே கையெழுத்துப் போடும்போது தங்கள் ஊர் தபால்காரர் மீது காட்டும் நம்பிக்கை மனதை அள்ளிவிடுகிறது. விடிந்தும் விடியாத காலையில் சேமிப்புக் கணக்கில் இல்லாத பணத்தை வாங்கி வந்து, அதைக் கறாராகத் திருப்பிக் கொடுத்ததுடன், தனது குட்டியாடை நன்றியுடன் தபால்காரரின் பெயரான காளி என்று பெயரிட்டு அழைக்கும் நன்றியறிதலில் கரைந்துபோகிறோம். நவீன யுகத்துத் தபால்காரர் ஒரு சைக்கிளாவது வைத்துக்கொண்டிருக்கலாமே என்பது மட்டும் பெரிதாக உறுத்துதியது. தலைப்பும் மக்களை ஈர்க்கும் விதத்தில் இருந்திருக்கலாம். படத்தின் தொழில்நுட்பக் குறைகளைக் கலைத்துறையில் தேர்ந்தவர்கள் சொல்லக்கூடும். முதல் முயற்சியிலேயே நல்லதொரு படத்தைத் தந்திருக்கும் இந்த வளர்ந்துவரும் கலைஞர்களைப் பாராட்ட மட்டுமே தோன்றுகிறது. பார்க்க வேண்டிய படம். பார்த்தவர்கள் மனம் நிறைக்கும் படங்களில் ஒன்றாகக் கண்டுகொள்வீர்கள். ஹர்காரா, தெய்வமானவர்களின் கதை மட்டுமல்ல; முதல் தலைமுறை அஞ்சல்காரர்களின் வரலாறும்தான்.

சித்தா

சித்தா

திரை விமர்சனம் பழனி நகராட்சியில் பணிபுரியும் ஈஸ்வரன், அவனது அண்ணி, அவளது எட்டு வயது சுந்தரி என மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது அக்குடும்பம். அவனுக்கு சுந்தரியும் சுந்தரிக்கு சித்தாவும்தான் எல்லாமுமே. அண்ணி அவனுக்குப் பெண் பார்க்க முனைகிறாள். பிடி கொடுக்காத ஈஸ்வரன், அதே நகராட்சியில் பணியில் சேரும் தன்னுடன் பள்ளியில் படித்த சக்தியை நேசிக்கிறான். இந்நிலையில், சுந்தரியுடன் படிக்கும் பொன்னியின் வேறுபாடான நடவடிக்கையைக் கவனித்த ஈஸ்வரன், அவளைத் தனியாக அழைத்துச் சென்று விசாரிக்க முயல, அவள் பித்துப் பிடித்தவள் போல பயத்தால் நடுங்கி, அவனிடமிருந்து விலகிச் செல்கிறாள்.  மருத்துவப் பரிசோதனையில் பொன்னி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைகிறான். மேலும் அந்தப் பழி அவன் மீது விழ, இது இரட்டிப்பாகி அவனை நிலைகுலையச் செய்கிறது. அதிர்ச்சியிலிருந்து மீண்ட பொன்னி சொன்ன உண்மை அவன் மீதான பழியைத் துடைக்க, நிம்மதி அடைந்த வேளையில் சுந்தரி காணாமல் போக, பேரதிர்ச்சி அடைகிறான் ஈஸ்வரன். சுந்தரி எப்படிக் காணாமல் போனாள், அவள் கடத்தப்பட்டாளா, அவள் என்ன ஆனாள், மீட்கப்பட்டாளா என்பதுதான் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘சித்தா’ தமிழ்த் திரைப்படத்தின் மீதிக் கதை. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது போக, ஒவ்வொரு நாள் விடியும்போதும் இந்தக் கொடூரங்கள் நாடெங்கும் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலத்திற்கிடையே ‘சித்தா’ கவனம் பெறுகிறது. இந்தக் கதையை அருண்குமார் எழுதி இயக்கியதும் நடிகர் சித்தார்த் தயாரித்ததும் அவர்களுக்குக் குழந்தைகள் மீதுள்ள அக்கறையையே காட்டுகிறது. சித்தார்த் (ஈஸ்வரன்), சகஸ்ர ஸ்ரீ (சுந்தரி), நிமிஷா சஜயன் (வள்ளி), அஞ்சலி நாயர் (அண்ணி) முக்கியப் பாத்திரங்களாக இருந்தாலும் சித்தார்த்  ‘சேட்டை’ என சுந்தரி மீது கட்டற்ற பாசத்தைப் பொழிவதிலாகட்டும் பெண்ணுக்கு நேர்ந்ததை அறிந்து உடைந்து போவதிலாகட்டும் பழி தம்மீதே பேரடியாக இறங்கும்போதிலாகட்டும் “சித்தப்பாவாக இருந்தாலும்..” என்று அண்ணி சொல்வதைக் கேட்டு வேதனையான சிரிப்பை உதிர்ப்பதிலாகட்டும் சேட்டை காணாமல் போனதை அறிந்து துடித்துப் போவதிலாகட்டும் வள்ளி தனக்கு நேர்ந்ததைச் சொன்னதைக் கேட்டு நொந்து போவதாகட்டும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க இயலாத கையறு நிலையில் கதறுவதாகட்டும் திறம்பட்ட உணர்வுப்பூர்வமான நடிப்பால் படம் முழுவதும் மட்டுமல்ல, நம் மனத்திலும் வியாபித்து நிற்கிறார் சித்தார்த். காதல், வலி, வேதனையைத் துல்லியமாக நிமிஷா சஜயன் வெளிப்படுத்துகிறார். சுந்தரியாக சகஸ்ர ஸ்ரீயின் பங்களிப்பும் பொன்னியாக நடித்த சிறுமியின் நடிப்பும் அருமை. அண்ணியாகவும் ஓர் அம்மாவாகவும் அழுத்தமான நடிப்பைப் பதிவு செய்கிறார் அஞ்சலி நாயர். வடிவேலு பாத்திரத்தை ஏற்றவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார். வசனங்கள் கூர்மையானவை; சிந்திக்கத் தக்கவை. கதைக் கருவுக்கு இணக்கமாக பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவும் விஷால் சந்திரசேகரின் விறுவிறுப்பைக் கூட்டும் பின்னணி இசையும் சுரேஷ் ஏ.பிரசாந்தின் படத்தொகுப்பும் படத்தின் சிறப்பு. கொஞ்சம் பிசகினாலும் பிரச்சாரமாகப் போய்விடக்கூடிய நிலையில், கத்தி மேல் நடப்பதான சவாலாக நடந்து,  உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், பார்ப்போர் மனத்தில் குழந்தைகள் மீதான பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை உணர்வு, இயல்பாகப் பதியும் வகையில் நேர்த்தியான திரைப்படமாக ‘சித்தா’வைத் தந்து, சவாலில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குநர் அருண்குமார். மதிப்பெண்: 8.5/10

லொகி ஷெல்லே (ஒரு தேவதையின் முத்தம்)

லொகி ஷெல்லே (ஒரு தேவதையின் முத்தம்)

வங்க மொழித் திரைப்பட அறிமுகம் மேற்கு வங்கத்தில் இச்சான் கஞ் என்கிற கிராமத்தில் நிலவும், மனிதத்தை வதைக்கும் வகையிலான சமூக, மதக் கோட்பாடுகள் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து நின்று, அவர்களுக்குள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும், மூன்று இளம் மருத்துவ மாணவர்களைச் சுற்றிச் சுழலும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்த வங்க மொழித் திரைப்படம்தான், கௌஷிக் கங்குலி துணிச்சலுடன் எழுதி இயக்கி, சோனி லைவ் தளத்தில் தமிழ் உட்பட ஆறு மொழிகளில் வெளியாகியுள்ள ‘லொகி ஷெல்லே.’ “லட்சுமி, மாதாவோட மறுபிறப்பு! நாலு கை இருந்துச்சாம்…” இந்தச் செய்தியும் சாரை சாரையாக மக்கள் செல்வதும் அந்தக் கிராமமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதும், ஒரு திருமணத்திற்குச் சென்று கொல்கத்தா திரும்பும் வழியில் கார் பழுதானதையடுத்து, அதில் வந்த இளம் மருத்துவர்களான அமீர் உசேன் (உஜ்ஜ்ன் கங்குலி), காயத்ரி சட்டர்ஜி (ரித்விகா பால்) ஹிப்நாத் தாத்தா (புரப் சீல் ஆச்சார்யா) ஆகியோரை அங்கேயே தங்கவைத்துவிட்டது. பத்திரிகையாளர் ஜாய் மித்ரா (அம்ரிஷ் பட்டாச்சாரியா) தந்த கூடுதல் தகவல்கள், குழந்தை லட்சுமியைப் பார்க்கத் தூண்டியது. குழந்தையைப் பார்த்துக்  குழப்பம் அடைந்து, தொடர்பு கொண்ட மூத்த மருத்துவர் டாக்டர் மிதாலி சென் (சுர்னி கங்குலி), அந்தக் குழந்தை ‘பாராசிட்டிக் ட்வின்ஸ்’ என்றும் கூடுதலான கைகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றாது விட்டால், அக்குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றும் தெரிவிக்க, அதிர்ச்சி அடைகின்றனர். தீண்டத்தகாதவர்களாக அதுவரை ஒதுக்கி வைக்கப்பட்ட அந்தக் கிராமத்தில், கடவுளே வந்து பிறந்துள்ளதாக நம்பி, அம்மக்களும் சுற்றியுள்ள கிராம மக்களும் குழந்தை லட்சுமியைத் தரிசிக்கவும் காணிக்கை செலுத்தவும் குவியத் தொடங்குகின்றனர். இதனை அறிந்த ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த ஒரு குடும்பம், அந்த மக்களின் அறியாமையைப் பணமாக்கவும் அந்தக் குழந்தையை வணிகப் பொருளாகக் காட்டித் தங்களுக்கான நிரந்தர வருமானமாக மாற்றவும் திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறது. “எல்லாம் மூட நம்பிக்கை… இதே மாதிரிதான் சில வருஷத்துக்கு முன்ன, பிள்ளையார் பால் குடிச்சதா சொன்னாங்க” என்று சொன்ன அமீர், எப்படியாவது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்று முனைகிறான். நண்பர்களுடனும் பத்திரிகையாளர் ஜாய் மித்ராவுடனும் சேர்ந்து, அதற்கான திட்டத்தை வகுக்கிறான். குழந்தையின் தன்மையை உணராத, அதன் உருவத்தை வைத்துக் கடவுளின் அவதாரமாக நம்புகிற,  அறியாமையில் உழலும் மக்கள் ஒருபுறம். அவர்களின் அறியாமையையும் அந்தக் குழந்தையையும் வைத்து வருமானம் பார்க்க விழையும் ஆதிக்க சாதிக் குடும்ப வாரிசான ரஜத் நாராயன் ராய் (இந்ராசிஷ் ராய்) அடியாட்களுடன் மறுபுறம். இவர்களிடமிருந்து அந்தக் குழந்தையை மீட்டு, உரிய அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற வேண்டும் என்று அமீர் உசேன்  வகுத்த திட்டம் வெற்றி பெற்றதா என்பதுதான் ‘லொகி ஷெல்லே’ படத்தின் மீதிக் கதை. கௌஷிக் கங்குலி செதுக்கிய பாத்திரப் படைப்புகளும் அப்படைப்புகளை உணர்ந்து உயிர் கொடுத்துள்ள கலைஞர்களும் திரைப்படத்தை இறுதிவரை விறுவிறுப்பாகவும் உணர்வுப்பூர்வமாக நெகிழச் செய்வதாகவும் சில காட்சிகளில் மனதை உலுக்கிவிடுவதாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் ஆக்கிவிடுகின்றனர். உஜ்ஜன் கங்குலி, ரித்விகா பால், புரப் சீல் ஆச்சார்யா, சுர்னி கங்குலி, இந்ராசிஷ் ராய், அம்ரிஷ் பட்டாச்சார்யா, ரிவிடொபிரிடோ சென், பிரிதீப் பட்டாச்சாரியா போன்ற முதன்மைப் பாத்திரங்களின் அட்டகாசமான நடிப்பிற்குக் குறையில்லாமல், குழந்தையின் அம்மா உட்பட துணைப் பாத்திரங்களும் தத்தம் பங்களிப்பை வழங்கியுள்ளது சிறப்பு. இப்படி, சிந்தனையைத் தூண்டும் வசனங்களாலேயே கட்டமைக்கப்பட்ட அற்புதமான திரைக்கதை. கோபி பகத்தின் ஈர்ப்பான ஒளிப்பதிவும் பிரபுதா பானர்ஜியின் பின்னணி இசையும் பாடலிசையும் சுபஜித் சின்காவின் கச்சிதமான படத்தொகுப்பும் கௌஷிக் கங்கோலியின் இயக்கத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டி, வலு சேர்க்கின்றன. இந்தியாவில் இரண்டொரு மாநிலங்களைத் தவிர்த்து, இதர மாநிலங்களில் பெருவாரியான கிராமங்களில், ஏன் நகரங்களில் ‘படித்த’ மாந்தர்கள் உட்பட, மதரீதியாகக் கட்டமைக்கப்பட்ட புராண, இதிகாசக் கதைகளில் மாற்றுச் சிந்தனையின்றி ‘நம்பிக்கை’ கொண்டு வாழும் அப்பாவி மக்களும் அறியாமையில் உழலும் அம்மக்களைச் சுரண்டும் சாதி அடுக்கில் மேலோங்கி நிற்கும் ஆதிக்க, ஆன்மிகவாதிகளின் கட்டுக்கடங்காத சுரண்டல் அராஜகங்களும் அவற்றுக்குமிடையே அரிதாக உயிரைப் பணயம் வைத்தும் மனிதத்தை உயர்த்திப் பிடித்து உணர்த்தும் சில மனிதர்களும் உள்ள நடப்பை, படம்பிடித்துக் காட்டும் சீரிய படைப்புதான் ‘லொகி ஷெல்லே’   “சிட்டியோ கிராமமோ, அங்கு லட்சுமி மாதிரி யாரையாவது ஒரு குழந்தையப் பார்த்தீங்கன்னா, அமீர் வர்ற வரையில வெயிட் பண்ணாதீங்க. அதுக்குப் பதிலா, நீங்களே அமீர் ஹுசைன் மாதிரி களத்துல இறங்குங்க!” பத்திரிகையாளர்  ஜாய் மித்ராவின் இறுதியான இந்த வார்த்தைகள்தான், நெடுநாட்களுக்குக் காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கும்.   மதிப்பெண்: 8/10

பவால்

பவால்

திரை விமர்சனம் அஜய் தீட்சித்தின் பிரச்சனை, அவன் லக்னோ பள்ளி ஒன்றின் வரலாற்று ஆசிரியராக இருப்பதோ, தனக்குத் தானேயும் மற்றவர்களிடத்திலும் தன்னைப் பற்றிய போலியான ஒரு பெரிய பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டதோ,  அறிவும் அழகும் கொண்ட நிஷா மனைவியாக வாய்த்ததோ அல்ல. அவளுக்கு வலிப்புக் குறைபாடு இருப்பதை அறிந்து அவளை ஒதுக்க – அது அவர்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தியதும்  மனக் குழப்பத்தில் எம்.எல்.ஏ. விஷ்வாஷ் ரகுவன்சியின் மகன் அதுல் ரகுவன்சியை வகுப்பில் ‘பளா’ரென்று அறைந்ததும்தான்.   அவை, அவன் போலியாகக்  கட்டமைத்துக்கொண்ட பிம்பத்தைச் சடுதியில் நொறுங்கச் செய்து, அவனது வேலைக்கே உலை வைக்கும் நிலைக்குக் கொண்டுசெல்கின்றன. அவற்றை அவன் எவ்விதம் எதிர்கொண்டான், மண உறவும் வேலையும் மீண்டும் அவனுக்கு வாய்த்ததா என்பதுதான், நிதிஷ் திவாரி இயக்கி, ஹிந்தியில் அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் வசனங்களுடன்  வெளியாகி உள்ள ‘பவால்’ திரைப்படத்தின் மொத்தக் கதை. வலிப்புக் குறைபாடு இருப்பதைத்  திருமணத்திற்கு முன்பே நிஷா தெளிவாக அவனிடம் கூறியும் சம்மதித்து ஏற்றுக்கொண்ட பின்னர் அதையே காரணம் காட்டி அவளைத் தவிர்க்கும் அஜய், தனக்குள் வியாபித்திருக்கும் ஆளுமைச்  சிதைவை அறியாதது சோகம்.   இரண்டாவது உலகப் போரில் தொடர்புடைய நாடுகளுக்கு, தவிர்க்க இயலாத நிலையில் மனைவியுடன் பயணித்துப்  பார்வையிடுவதும் அப்போது நாஜிக்களால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரோடு இருக்கும் ஒருவரது அனுபவத்தை அறிய நேரிட்டதால் அவனுக்குள் வரும் மாற்றத்தையும் அந்த மாற்றம் அவளுக்குள் ஏற்படுத்தும் நம்பிக்கையையும் அஜய் தீட்சித்தாக வரும் வருண் தாவணும் நிஷாவாக ஜான்வி கபூரும்  வெளிப்படுத்துவதில், தாங்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை முழுவதும் உள்வாங்கி, நிறைவான நடிப்பைத் தந்துள்ளனர். அஜயின் தந்தை மனோஜ் பாவா, தாய் அஞ்சுமன் சக்சேனா, எம்.எல்.ஏ. ரகுவன்ஷி முகேஷ் திவாரி, அவரது மகன் அதுல் நிகில் சாவ்லா, நண்பன் பிரதீக் பச்சோரி (பிபின்) போன்ற துணைப் பாத்திரங்களும் நடிப்பில் சோடை போகவில்லை. மித்தேஷ் மிர்ச்சந்தானியின் காமிரா, இந்தியாவில் லக்னோ, கான்பூர்,  மும்பை என்றும் பாரிஸ், பெர்லின், ஆம்ஸ்டர்டாம், கிரக்கோவ் வார்ஸா, போலந்து ஆகிய அயல்நாடுகளிலும் சுற்றிச் சுழல்வதுடன், இரண்டாம் உலகப்போர் காலத்திலான உருவகப்படுத்தப்பட்ட நிகழ்வுகளைக் கருப்பு வெள்ளையில் வழங்கி, மனதில் ஆழமாகப் பதிய வைப்பது சிறப்பு. டேனியல் பி ஜார்ஜ்ஜின் பின்னணி இசையும் சாரு ஸ்ரீ ராயின் படத்தொகுப்பும் நேர்த்தியாக அமைந்துள்ளன. இனிமையான பாடல்களுக்கு நால்வர் இசை அமைத்துள்ளனர். “எக்ஸாம் வருது பேப்பர் செட் பண்ணனும்” (அஜய்) “முதல்ல உன் லைஃப்ப செட் பண்ணு” (அம்மா) “பிரச்சனைகளைச் சமாளிக்கக் கத்துக்க. இப்படி ஓடாத” (அப்பா) “எப்போ உனக்கு இந்த உறவைச் சமாளிக்க முடியாதுன்னு தோனுதோ, அப்போ எங்ககிட்ட வந்துரும்மா.. யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. டைவர்ஸ் வாங்கறது கேவலம் இல்ல” (நிஷாவின் அம்மா) “தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டா எல்லாம் தெரியும்; இடத்தப் பத்தியும் மனுஷங்களப் பத்தியும்” (நிஷா) “நமக்குள்ள எதுவுமே காமனா இல்ல” (அஜய்) “காமனா இருக்கணும்னு அவசியமா?” (நிஷா) “ஹிட்லரோட லைஃப்ல இருந்து முக்கியமா ஒன்னு கத்துக்லாம்னா, அது பொய், பித்தலாட்டம். இதனால உருவாகற இமேஜ் ரொம்ப நாள் நீடிக்காது. அதனாலதான் இந்த நிலம,  எங்க இட்லர் செத்தானோ அங்க ஒரு கார் பார்க்தான் இருக்கு, ஒரு மெமோரியலும் இல்ல.  சரிதான், கடைசியில உண்மைதான் வெல்லும். பொய்மை இல்ல” (அஜய்) “பத்து மாசமா நெனச்சிகிட்டு இருந்தது, நீ எனக்கு லாயக்கில்லன்னு. ஆனா, இந்தப் பத்து நாள்ல புரிஞ்சுகிட்டேன் நான் உனக்கு லாயக்கில்லன்னு” (அஜய்) “நம்ம வாழ்நாள்ல ஏற்படற துக்கம் அவங்களோட ஒருநாள் வாழ்க்கைக்கு முன்ன ஒன்னுமே இல்ல” “வரலாறு இருக்கறதுக்குக் காரணம், நம்ம தப்ப திருத்திக்கத்தான்” (ரகுவன்ஷி) “மத்தவங்ககிட்ட இருக்கிறதப் பார்த்து அதையே நினைச்சுகிட்டு வருத்தமா இருந்தா, நாம என்னைக்குமே சந்தோஷமா இருக்க முடியாது. ஆனா, கிடைச்சதுல சந்தோஷத்தைத் தேடினா அப்போ முகத்தில் தெரிகிற உண்மையான சந்தோஷம், அந்தச் சந்தோஷத்தைவிடச் சிறந்த இமேஜ் எதுவுமே இல்லை” இவை, அர்த்தபூர்வமான, நினைவை வருடிக்கொண்டே இருக்கும் வசனங்கள். ஹிட்லரின் கொடிய ஆஸ்விட்ச் கான்சன்ட்ரேஷன் கேம்ப்பிலான அனுபவத்தைப் பெரியவர் ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல, அதை மொழிபெயர்த்து உணர்வுப்பூர்வமாக அஜய்யிடம் சொல்லும் நிஷாவும் கேட்கும் அஜய்யும் அவை தங்களுடைய வாழ்வின் நிகழ்வுகளோடு ஒத்துப்போகும் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு உள்ளான லேசான விரிசல் மறையவும் அவனுக்குள் அவன் திருத்தம் பெறவும் வாய்ப்பாக அமைத்திருக்கும் பாங்கு, இயக்குநரின் முத்திரை. காதல், பாசம், குடும்பம், மனிதம், பிம்பம், ஆளுமை போன்றவற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணரவும் நாயகன் அஜய் தீட்சித் போன்ற மனப்பான்மை கொண்ட எவரும் தங்களைச் சுயபரிசோதனை செய்து தெளிவு பெறவும் நித்தீஷ் திவாரி அற்புதமாக இயக்கி வழங்கி உள்ள ‘பவால்’ வாய்ப்பளிப்பது நிச்சயம். மதிப்பெண் : 7/10

அணுகுண்டின் தந்தையும் பகவத்கீதையும்

அணுகுண்டின் தந்தையும் பகவத்கீதையும்

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது இரண்டு அணுகுண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டன. 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டன. 60க்கும் மேற்பட்ட நகரங்கள் ஒரு நொடியில் பஸ்பமாக்கப்பட்டு 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களும் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது. லிட்டில் பாய் (Little Boy) மற்றும் ஃபேட் மேன் (Fat Man) என்று பெயரிடப்பட்ட அந்த அணுகுண்டுகள்தான் உலக வரலாற்றில், மனித வரலாற்றில் முதல்முறையாக, போரில் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டுகள் (Atomic Bombs). இந்த அணுகுண்டுகளைத் தயாரிக்க, அமெரிக்க அரசால் உருவாக்கப்பட்டிருந்த மன்ஹாட்டன் புராஜெக்ட் (Manhattan Project) குழுவினர்தான் இதைச் செயல்படுத்தினார்கள். மன்ஹாட்டன் புராஜெக்டின் ஒரு அங்கமாக நியூ மெக்ஸிகோவில் உள்ள லாஸ் அலமாஸ் என்ற இடத்தில் மிக ரகசியமாக உருவாக்கப்பட்டிருந்த ஆய்வுக்கூடத்தில்தான் இந்த அணுகுண்டுகள் உருவாக்கப்பட்டன. அங்குதான் உலகத்தின் முதல் அணுகுண்டு பரிசோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அந்த அணுகுண்டுகளை உருவாக்கும் ஆய்வின் தலைமை சயிண்டிஸ்டாக – மாஸ்டர் மைண்டாகச் செயல்பட்டவர்தான் ஓப்பன்ஹெய்மர் என்கிற இயற்பியல் அறிவியலாளன். குவான்டம் பிஸிக்ஸ் மீது ஓப்பன்ஹெய்மருக்கு இருந்த தீவிரமான காதல்தான் அணுகுண்டின் தந்தை என்ற நிலையை நோக்கி அவரை இழுத்துச் சென்றது. 1945 ஜூலை 16ஆம் நாள், நியூ மெக்ஸிகோ நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு, ட்ரினிட்டி (Trinity) என்று ஓப்பன்ஹெய்மரால் பெயர் சூட்டப்பட்டிருந்த அந்த உலகத்தின் முதல் அணுகுண்டு பரிசோதனை நடத்தப்பட்டு வெற்றி பெறுகிறது. அந்த வெற்றிதான் Father of Atomic Bomb என்ற வரலாற்றுப் பெயரை ஓப்பன்ஹெய்மருக்குத் தருகிறது. அணுகுண்டு பரிசோதனை வெற்றியடைந்த பின் அமெரிக்கா நீண்ட காலம் எல்லாம் காத்திருக்கவில்லை. வெறும் 20 நாட்களில் அமெரிக்கா ஜப்பான்மீது அணுகுண்டுகளை வீசுகிறது. “இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் கை ஓங்கி இருக்கிறது. ஜெர்மனியில் அணுகுண்டு ஆராய்ச்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு அது சாத்தியமாகும் எனில், உலகம் பேரழிவைச் சந்திக்கும். அதைப்போல ரஷ்யாவும் இந்த அணுகுண்டு ஆராய்ச்சியில் மிகவும் மும்முரமாக இருப்பதாக அறிகிறோம். உலகத்தின் பேரழிவைத் தடுக்க, இதை நாம் செய்தாக வேண்டியிருக்கிறது” என்று சொல்லித்தான் ஓப்பன்ஹெய்மர் இதைச் செய்யச் சம்மதிக்க வைக்கிறார்கள். ஏனெனில், ஓப்பன்ஹெய்மர் கம்யூனிஸ ஆதரவாளராக இருக்கிறார். கூடவே, ‘தியரட்டிக்கல்தான் என் விருப்பம்; எக்ஸிகியூஸன் அல்ல’ என்றும் கூறுகிறார். ஆனால் ஜெர்மனியையும் ரஷ்யாவையும் ஹிட்லரையும் காரணம் காட்டித்தான் லாஸ் அலமாஸில் அந்த ரகசிய ஆய்வுக்கூடத்தை, ஓப்பன்ஹெய்மரை வைத்து உருவாக்குகிறார்கள். இதுதான் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஓப்பன்ஹெய்மர் படத்தின் கதை சாராம்சம். இது தவிர ஹெய்மரின் காதல்கள், அவரின் கம்யூனிஸ ஆதரவு மற்றும் அணு ஆயுதங்கள் (Nuclear Weapons) குறித்த அவரது நிலைப்பாட்டால் அவருக்கு ஏற்பட்ட அரசாங்க ரீதியான பிரச்சினைகள், நெருக்கடிகள், சக விஞ்ஞானிகளின் பொறாமைகள் என, கொஞ்சம் எமோஷனல் ஏரியாவும் உண்டு. ஓப்பன் ஹெய்மருக்கு, அணுகுண்டு சோதனை வெற்றிபெற்று விடும்; உலகத்தின் முதல் அணுகுண்டு லாஸ் அலமாஸில் உருவாக்கப்பட்டு விடும் என்று, தன் ஆய்வின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வருகிறது. அப்போது அதன் கூடவே அவருக்கு மிகப்பெரிய அவநம்பிக்கையும் சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால், இந்த அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக முடிந்தால் உலகம் இதை வைத்து எவ்வளவு மோசமான கொடுரங்களைச் செய்யும், எவ்வளவு மக்கள் கொல்லப்படுவார்கள், இதைக் கண்டிப்பாக நாம் செய்தே ஆக வேண்டுமா என்றெல்லாம் ஓப்பன்ஹெய்மர் குழம்புகிறார். அங்கேதான் ஓப்பன் ஹெய்மரின் தோளில் தட்டி, ‘அதெல்லாம் தப்பில்லை, கண்டிப்பாக இதை நீ செய்ய வேண்டும்’ என்று நம்ம ஊரிலிருந்து ஒருவர் ஆறுதல் கூறி, ஆதரவுக் கரம் நீட்டுகிறார். அவர் வேறு யாருமல்ல. ‘தி கிரேட் லார்ட் கிருஷ்ணா அலைஸ் கண்ணன்’தான். ஆம். ஓப்பன்ஹெய்மர் பகவத் கீதாவை வாசித்தபோது, அதில் அர்ஜூனன், போரில் தன் சொந்தபந்தங்களை நானே கொல்வதா என தவித்துக் கலங்கி நின்றபோது, கண்ணன் கீதாசாரத்தைக் கூறுகிறார். அதாவது, “மரணம் என்பது நான்தான். மக்கள், மரம், செடி, கொடி எல்லாம் நான்தான். கொல்பவனாகிய நீயும் நான்தான். கொல்லப்படுபவர்களாகிய மக்களும் நான்தான். கொல்லச் சொல்பவனும் நான்தான். நீ எதையும் செய்யவில்லை. நான்தான் அனைத்தையும் செய்கிறேன். நீ இதைச் செய்வதனால் போற்றப்பட்டாலும் தூற்றப்பட்டாலும் அது என்னையே சேரும்; உன்னைச் சேராது. நீ இதைச் செய்யவில்லை என்றாலும் இன்னொருவன் செய்யத்தான் போகிறான். எனவே, உன் கடமையை நீ செய்; பலனைப் பற்றி நீ யோசிக்காதே” என்கிறான். அதில் தெளிவு?! பெற்ற அர்ஜூனன் போல, ஓப்பன்ஹெய்மரும் தெளிவு பெற்று அணுகுண்டைத் தயாரிக்கிறார். கிறிஸ்டோபர் நோலன் இந்த உரையாடலையே படத்தின் ஒரு காட்சியாகவும் வைத்திருப்பார். கண்ணனாக அப்போதைய அமெரிக்க பிரசிடென்ட் ரூஸ்வெல்ட்டும் அர்ஜூனனாக ஓப்பன்ஹெய்மரும் பேசிக்கொள்வதுபோல அச்சு அசலாக அந்த உரையாடலைக் காட்சிப்படுத்தியிருப்பார் நோலன். ஒரே ஒரு வித்தியாசம், பாரதப் போரில் மக்களைக் கொல்வதற்கு முன் நடக்கும் உரையாடல், இங்கே ஜப்பான்மீது குண்டு வீசிக் கொன்றபின் நடக்கும். இப்படியாக அவர்கள் இயற்பியல், அறிவியல், குவான்டம் பிஸிக்ஸ் என்று அறிவியல் சார்ந்த படங்கள், அறிவியலாளர்கள் சார்ந்த படங்கள், வரலாற்றுப் படங்கள் என எடுத்துக்கொண்டிருக்க, நாம் கேரளக் கதைகள் கஸ்மீர்க் கதைகள் என்று புளுகிக் கொண்டிருக்கிறோம். கில்லியன் மர்பி, ஓப்பன்ஹெய்மராகவே வாழ்ந்திருக்கிறார். என்ன ஒரு ஸ்டைல், ஆட்டிட்யூட்! கூடவே ராபர்ட் டௌனி ஜுனியர், அட நம்ம அயர்ன்மேனா இது ஆச்சர்யப்பட வைக்கும் தோற்றத்தில் கேரக்டரில் வந்து அசத்துகிறார். மார்ஷியன் மேட் டேமென் அட்டகாசமான கதாபாத்திரத்தில் வருகிறார். மொத்தத்தில், ஓப்பன்ஹெய்மர் படமாகவும் மிகச்சிறப்பான அனுபவமாக இருக்கும்.

ஹலோ மீரா

ஹலோ மீரா

திரை விமர்சனம் நாளை மறுநாள் காதலித்தவனுடன் மணவிழாவைக் காண உள்ள, ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் விஜயவாடாவைச் சேர்ந்த இளம்பெண் மீரா, தையற்காரரிடமிருந்து தனது திருமண உடைகளைப் பெற்றுக்கொண்டு, காரில் அமர்ந்து அம்மாவுடனும் கல்யாணுடனும் கிண்டலும் கேலியுமாகப் பேசி முடிக்கிறாள்.  அப்போது, தோழி சாக்‌ஷி குறிப்பிடும் இன்ஸ்டாகிராம் பதிவும் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் விக்ரம் தெரிவிக்கும் தகவலும் அதிர்ச்சியைத் தர, மறுநாள் சங்கீத் உள்ள நிலையில் வீட்டிற்குக்கூடச் செல்லாமல்,  அந்த இரவில் அவள் விஜயவாடாவிலிருந்து, நிர்ப்பந்தத்தில் ஹைதராபாத்திற்குச் செல்லும்போது, வரும் அடுத்தடுத்த அழைப்புகளால், அவை தரும் செய்திகளால் பதற்றம், குழப்பம், அச்சம், வெறுப்பு, கோபம் என, பெரும் மன உளைச்சலில் உழல, அதிலிருந்து மீரா மீண்டாளா, திட்டமிட்டபடி அவளது திருமணம் நடைபெற்றதா என்பதுதான், ‘ஹலோ மீரா’ தெலுங்குப் படத்தின் மொத்தக் கதை.  வழக்கமான திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ‘ஹலோ மீரா’ படம்,  ஸ்ரீநிவாசு கக்கர்லா திரைக்கதையை அழகாக எழுதி, விறுவிறுப்பாக இயக்கியிருக்க, அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் வசனங்களுடன் வெளியாகி உள்ளது.  அழகான இளம் பெண் மீராவாக வரும் கர்கேயி எல்லபிரகடா, இக்கதைக்குப் பொருத்தமான நாயகி. பதற்றத்திலும் மன உளைச்சலிலும் மன உறுதியை இழக்காமல், உடைந்துவிடாமல், துணிச்சலுடன் பிரச்சனைகளைத் தெளிவாக எதிர்கொள்வதுமாக, யார் ஒருவருடனும் திரையைப் பகிர்ந்து கொள்ளாமல், முழுத்திரையையும் படம் முழுவதும் வியாபித்து,  உணர்வுபூர்வமான பாவங்களை வெளிப்படுத்தி, தனியாளாகவே நடிப்பில் முத்திரை பதிக்கிறார். படம் முழுவதும் அப்படி இப்படிக் கவனம் சிதறாமல், அவருடனேயே  நம்மையும் ஒன்றிடச் செய்திருப்பது வெகு சிறப்பு.  நாயகி மீரா  தவிர, அவளது அம்மா, அப்பா, தம்பி, மணமகன் கல்யாண், அவனின் அம்மா, சகோதரி திவ்யா, மீராவின் தோழிகள் சாக்‌ஷி, பூஜா, புவி, நண்பன் கிரண், ஏசிபி ராகவ ராவ், சப்-இன்ஸ்பெக்டர் விக்ரம், பெண் காவலர், சுதிர், அவனின் அப்பா, அம்மா, டைலர், டிஜே, பியூட்டிஷியன் சாந்தி என, எல்லாரும் திரைமறைவுப் பாத்திரங்களாக இருந்தாலும் குரல் வழியில் உயிர்ப்புடன் வழங்கியிருக்கும் நடிப்பு பாராட்டுக்குரியது.  ‘சாரி பேபி.. சாரி, நீ பேசும்போது அந்த இன்சூரன்ஸ் கம்பெனி ‘ஹட்’ல ஒரு பையன் பேசுவானே, அந்த மாதிரி இருந்தது’  ‘இதே மாதிரி பத்து வருஷத்துக்கு அப்றமும் பேசு, அப்ப நான் ஒத்துக்கறேன்’  ‘பேரு எழுதினதுக்கெல்லாமா அரெஸ்ட் பண்ணுவீங்க? அநியாயமா இருக்கு சார்!’ ‘இந்தச் சின்ன விஷயத்துக்கு இவ்வளவு டிஸ்கஷன் அவசியமா?’  ‘போறவன் போகாம, சூசைட் நோட்ல என் பேரையும் ஏன் எழுதணும்?’  ‘இந்தப் பசங்களே இப்படித்தான், லவ் பண்றப்போ  பொண்ணுங்க சொல்றபடி கேட்கறது; மேரேஜ்னா அம்மா சொல்றபடி கேட்கறது.’  ‘சந்தோஷமா இருக்கும்போது நாம தைரியமாக இருக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா கஷ்டம் வரும்போதுதான் நம்ம தைரியம் என்னன்னு நமக்குத் தெரியும்’  ‘லவ் பண்றதுன்னா, தெனமும் பத்து தடவ போன் பண்ணி, ஐ லவ் யூ’ன்னு சொல்றதில்ல. இந்த மாதிரியான நெலயில உன்னைப் புரிஞ்சுகிட்டு உனக்கு சப்போர்ட் பண்றது’  ஒரு நாள் கல்யாண கூட்டிட்டு வந்து, ‘ரெண்டு பேரும் லவ் பண்றோம்; இவனைத்தான் கட்டிப்பேன்’னு சொன்னே. ஆனா,  நீ மட்டும்தான் லவ் பண்ணி இருக்கேன்னு இப்ப தெரியுதுமா’  இவை  ‘நச்’ சென்று ஈர்க்கின்ற வசனங்களில் சில.  வேறுபட்ட களங்களுக்கு வாய்ப்பே இல்லாத நிலையிலும் காரில் அமர்ந்திருக்கும் நாயகியின் முகத்தைப் பல்வேறு கோணங்களிலும் வேறுபட்ட முக பாவங்களையும் கிடைத்த கொஞ்சமான வாய்ப்பில் ‘ட்ரோன் ஷாட்’டில் சாலைப் போக்குவரத்தை இரவு ஒளியில் அழகாகப் படமாக்கி, சலிப்புத் தட்டாமல் செய்த கொப்பிலிடி பிரசாந்தின் ஒளிப்பதிவும், விறுவிறுப்பைக் கூட்டும் எஸ்.சின்னாவின் இசையும், மெடிகொண்டா ராம்பாபுவின் படத்தொகுப்பும் இயக்கத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளன.  காதல், சண்டை, பாடல், நகைச்சுவைக் காட்சிகள் என எதுவும் இல்லாமல், ஒரே காட்சி, ஒரே நடிகை என்று வைத்து, விறுவிறுப்புடன் கூடிய தெளிவான திரைக்கதை, வசனங்களால் 90 நிமிடங்கள் அப்படியே இருக்கையில் கட்டிப் போட்டுவிட்ட இயக்குநர் ஸ்ரீநிவாசு கக்கர்லாவின்  ‘ஹலோ மீரா’, வித்தியாசமான அனுபவமாக அமையும் என்பதுடன், ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள், இம்மாதிரியான பிரச்சினைகளைத் தவிர்க்க, எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டுவதை வலியுறுத்தும் என்பதும் நிச்சயம்.  மதிப்பெண்: 7.5/10

ஆயிஷா

ஆயிஷா

திரை விமர்சனம் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள மாசூம் எனும் செல்வந்தர் வீட்டிற்கு, ஒரு பணிப் பெண்ணாகக் கேரளாவில் இருந்து செல்லும் ஆயிஷா, சில சிரமங்களைத் தாண்டி, அரண்மனை போன்ற அந்த வீட்டின் நடைமுறைகளை அறிந்துகொண்டு, நாளடைவில் குடும்பத்தின் தலைவி மமாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார். விளைவு, சக பணியாளர்களின் மகிழ்ச்சிக்கு உகந்தவராகவும் அதுவரை மமாவின் முதன்மைப் பணியாளர்களாக இருந்த பெண்களுக்கு எதிரியாகவும் ஆகிவிடுகிறார். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த வாழ்வில், ஆயிஷா குறித்த ஒரு உண்மை வெளிப்பட, நிலைமை தலைகீழாகிறது. மமாவுடனான ஆயிஷாவின் பிணைப்பு இளக, அவள் கேரளா திரும்புகிறாள். அடுத்து, ஆயிஷாவின் வாழ்க்கைப் பயணம் எப்படிச் செல்கிறது என்பதுதான், ஆஷிப் கக்கோடி அழகான திரைக்கதை எழுதி, அமீர் பள்ளிக்கல் அருமையாக இயக்கி, அரபிக் மற்றும் மலையாள மொழிகளில் தயாரிக்கப்பட்டு, அமேசான் பிரைம் வீடியோவில், ஆங்கிலத் திரை வசனங்களுடன் வெளியாகி உள்ள ‘ஆயிஷா’ திரைப்படத்தின் மீதிக் கதை. ஆயிஷாவாக மஞ்சு வாரியார், உழைப்பாளர்களைச் சுரண்டும் இடங்களில் எல்லாம் சீற்றம் கொள்ளும்போதும், “நான் எவ்வளவு அதிகாரம் மிக்கவன்னு உனக்குத் தெரியாது” என்று சொல்லும் சாராவிடம், “சாரா, என்னைப் பத்தி உனக்குத் தெரியாது. என்னோட விளையாடாத; உன்னோட விளையாட்டை நீயே நிறுத்திக்கோ. அதுதான் உனக்கு நல்லது” என்று புன்முறுவலுடன் சொல்லும்போதும், மமாவின் முதல் சந்திப்பில் நிகழும் சிறுசிறு தவறுகளை அதற்கடுத்த முறை சரி செய்துகொள்வதும் அவர்களுக்கு இணைப்பு இறுகவும் விலகவுமான நிகழ்வுகளின்போதும் முந்தைய வாழ்க்கை நினைவுகளில் லயிக்கும்போதும் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். நடனக் காட்சிகளிலும் கவர்கிறார். ஆயிஷா பாத்திரத்திற்கு இணையான மமா பாத்திரத்தில் மோனா டவில், அதியற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளார். செல்வந்தர் வீட்டில், குடும்பத் தலைவியாகக் காட்டும் கண்டிப்பும் பணக்கார மிடுக்கும் தோரணையும் ஆயிஷாவிடம் காட்டும் அன்பும் அவளிடம் தன் சொந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளும் பாங்கும் அவளைச் சொந்த ஊருக்கு அனுப்பச் செய்யும் நாடகமும் பிரிவை ஜீரணிக்க முடியாத தவிப்பும் திரும்பப் பார்த்ததும் பெறும் உற்சாகமும் மன வலியும் உடல் வலியும் ஒரு சேர அழுத்த அவற்றின் வெளிப்பாடாய் முகப் பிரதிபலிப்பும் காதல் கணவர் நாசருடன் சென்ற அனுபவங்களை, அந்த இடங்களுக்கெல்லாம் விரும்பியவாறு பயணிக்க அவரது உடல்நிலை இடம் தராத நிலையில், அந்த நினைவுகளை ஆயிஷா நாடக வடிவில் உருவகித்ததைக் காணும்போதான நெகிழ்வும் என நடிப்பில் அற்புதங்கள் செய்கிறார். நிஷா (ராதிகா), அபித் (எஸ் வி கிருஷ்ண சங்கர்), சாரா (லத்தீஃபா), ஹார்வா (சல்மா), அப்துல்லா (இஸ்லாம் அப்துல் கவாத்), அகீஃப் (பாரா அல் நிஜாமீ), ஹம்சா (சம்சுதீன்), நர்ஸ் மெரினா குரியன் (மினி அல்போன்ஸ்) போன்ற துணைப் பாத்திரங்களும் சோடை போகவில்லை. அரபு நாடுகளுக்கு வீட்டு வேலைக்குச்  செல்லும் பெண்கள் பல விதங்களில் அவமரியாதையும் கொடுமையும் படுத்தப்படுவதாகத்தான் செய்திகளும் ஏன், படங்களும்கூட வந்திருக்கின்றன. இந்தப் படம் அவற்றையெல்லாம் மறுதலிக்கும் விதத்தில் உள்ளதே என்கிற சிந்தனைக்கு, “எந்த வீட்டுக்கு நாம அனுப்பப்படறோமோ அதப் பொருத்து நம்ம நெலம அமையும்” என்று வீட்டு வேலைக்கு ரியாத்திற்கு வரும் பெண்மணிகளில் ஒருவர் ஆயிஷாவிடம் சொல்வதில் விடை கிடைத்துவிடுகிறது. “பெண்கள மதிக்கறவங்கதான் அரேபியர்கள்”“வீட்டுக்கு வந்த விருந்தினர்ங்க மூனு நாள் தங்க இடமும் விருந்தும் கொடுத்ததுக்கு அப்புறம்கூட, எதுக்கு வந்தீங்கன்னு கேட்காததுதான் அரேபியாவோட பாரம்பரியம்” என்று நிமிஷா, ஆயிஷாவிடம் சொல்வதும் அதற்கு வலு சேர்க்கிறது. “மமாவோட நினைவு மங்கி வருது. பழசுதான் ஞாபகம் இருக்கு. ஆனா அவங்க மறந்துபோன பட்டியல்ல ஆயிஷா பேர் இல்ல” (சாரா)“எவரெஸ்ட் மலைய தாண்டறதவிடக் கஷ்டம்  மனுஷங்களோட மனச ஜெயிக்கிறது, இல்ல?” (நிமிஷா)போன்ற வசனங்களும் ஆயிஷா மமா இடையிலான உரையாடல்களும் நயம். இயற்கை அழகு கொஞ்சும் கேரளாவையும் பரந்த பாலைவனத்தில் ஆங்காங்கே பிரமிக்க வைக்கும் அரண்மனை வீடுகளையும் ஒருங்கே அழகுற வழங்கிய ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மாவின் திறன் பாராட்டுக்குரியது. கதைக் களத்தோடு இயைந்த பின்னணி இசையையும் பாடல்களுக்கான துள்ளலான இசையையும் அற்புதமாக வழங்கி உள்ளார், எம் ஜெயச்சந்திரன். படத்தொகுப்பைப் பழுதில்லாமல் செய்துள்ளார், அப்பு என் பட்டாத்திரி. இடதுசாரி இயக்கங்களோடு பணியாற்றி, இஸ்லாமியப் பெண்ணாக இருந்தாலும் சமூகத் தடைகளைத் தாண்டி, கருத்தியலைப் பிரதிபலிக்கும் நாடகங்களில்  நடித்ததால், எதிர்ப்புகளையும் கல்லடிகளையும் ஏன், துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொண்டு துணிவுடன் நடித்து, ஒரு கட்டத்தில் அரபு நாட்டிற்குப் பணிப் பெண்ணாகச் சென்று திரும்பிய நிலாம்பூர் ஆயிஷாவின் சுய வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் ‘ஆயிஷா’. திரைப்படத்தில், அவர் நாடகக் கலைஞராக இருந்த வாழ்க்கை சுருங்கிப் போயிருந்தாலும்,  சவுதி அரேபியாவில் பணிப் பெண்ணாக வாழ்ந்த காலம் விரிவாகவும் அவருக்கும் மமாவுக்கு இடையிலான பாசத்தின் பரிமாணத்தை மிகவும் அழகாகவும் நயமாகவும் சொல்லப்பட்டதற்காகவும் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கத்தக்க வகையில் ‘ஆயிஷா’ திரைப்படத்தை வழங்கியதற்காகவும் இயக்குநர் ஆமீர் பள்ளிக்கல் பாராட்டுக்குரியவர். மதிப்பெண் : 7/10

மாமன்னன்

மாமன்னன்

திரை விமர்சனம் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட, ஒடுக்குமுறைக்குப் பழகிய சமூகத்தைச் சார்ந்த, தன் இயற்பெயரே மறந்த, மறக்கடிக்கப்பட்ட மண்ணு, தனது அடுத்த தலைமுறையான மகன் அதிவீரனால் ஆதிக்கச் சமூகத்தின் அடக்குமுறைகளையும் தாண்டி, மாமன்னனாக நிமிர்ந்த கதைதான், மாரி செல்வராஜ் எழுதி இயக்கி, வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீரத்தி சுரேஷ், ஃபகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘மாமன்னன்’ படத்தின் கதைச்சுருக்கம். “பன்னி மேய்க்கிற பசங்க கோவில் குளத்துல குளிக்கிறாங்களாம்… அவன்கள இன்னிக்கு விடக்கூடாது” என்று அந்த கிராமத்துப் பெரியவர்கள்(!) செய்யும் செயலிலேயே தெறிக்கிறது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நேரும் கொடூரம். அடுத்து, நல்லிணக்கத்தைப் ‘பாதுகாக்கும்’ பொருட்டு, ‘கோவில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து நான்கு சிறுவர்கள் மரணம்’ என்கிற பத்திரிகைச் செய்தியோடு முடித்துக்கொள்வது, உச்சபட்சக் கொடூரம். நியாயம் கேட்கும் மண்ணுவை அப்போதைய எம்.எல்.ஏ சுந்தரம் மன்னித்துவிட நிர்ப்பந்திக்கிறான். இதிலிருந்து தப்பிப் பிழைத்தும், அப்பாவின் மௌனத்தைச் சகியாமலும் அந்த ஊரைவிட்டு ஓடிய அதிவீரன், ஊருக்குத் திரும்பியபின் தன் ஆசானிடம் கற்றுக்கொண்ட ‘அடிமுறை’ தற்காப்புக் கலையைக் கற்பிக்கும் பயிற்சிப் பள்ளி நடத்துகிறான். ஒரு கட்டத்தில், அதே ஊரைச் சேர்ந்த லீலா நடத்தும் இலவசப் பயிற்சி வகுப்புக்கும் அங்கு இடம் அளிக்கிறான். இதனால் பாதிக்கப்படும் சுந்தரம் கல்விக் குழுமம், ஆட்களை அனுப்பி அந்தப் பயிற்சி வகுப்பை அடித்து நொறுக்குகிறது. கொதித்தெழுந்த அதிவீரன், இளைஞர்களோடு சென்று அக்கல்விக் குழுமத்தை நாசம் செய்கிறான். தற்போதைய மாவட்டச் செயலாளரான சுந்தரத்தின் மகன் ரத்தினவேலு, இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, எம்.எல்.ஏ. மண்ணுவையும் அதிவீரனையும் அழைக்கிறான். கட்சித் தொண்டனாக அன்று சுந்தரத்தின் எதிரில் நின்ற மண்ணு, அவன் மகன் ரத்தினவேல் தற்போது உட்கார்ந்திருக்க, எம்.எல்.ஏ. மாமன்னனாக இன்றும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துப் பொங்குகிற அதிவீரன், அவரை உட்காரச் சொல்கிறான். திடுக்கிட்ட ரத்தினவேலு, “யார் சொன்னாலும் அப்பா உட்கார மாட்டாருப்பா..” என்று சொல்ல, ‘நீ உட்காரச் சொன்னியா?’ என்று ரத்தினவேலுவிடம் கேட்பதோடு, மாமன்னனை நிர்பந்தப்படுத்தி உட்கார வைத்துவிடுகிறான் அதிவீரன். சகிக்க முடியாத ரத்தினவேலு அதிவீரனைத் தாக்க, அவன் திருப்பித் தாக்க, மிகப்பெரிய கைகலப்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் முதல்வர் இதில் தலையிட, அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை, தேர்தலின் வெற்றி தோல்வி தீர்மானிக்கட்டும் என்று முடிவாகிறது. “நாம கேள்வி கேட்கவே ஒரு பதவிக்கு, ஒரு இடத்துக்கு வர வேண்டி இருக்கு” என்கிற அதிவீரன், அதை அடைந்தாரா என்பதுதான் ‘மாமன்னன்’ படத்தின் மீதிக் கதை. பார்த்ததும் சிரித்தே பழக்கப்பட்ட நம்மைக் கண்கலங்க வைக்கிறார் வடிவேலு. “இனிமேலாவது யாருக்கும் எங்கயும் இது நடக்கக் கூடாது” என்று முதல்வரிடம் நா தழுதழுக்கக் கோரும் மாமன்னனாக, ஒவ்வொரு ஃபிரேமிலும் வடிவேலுவின் மாறுபட்ட அசத்தலான நடிப்பு, “அவங்கள நிக்க வைக்கிறது என்னோட அடையாளம். இவன உட்கார வைக்கிறது என்னோட அரசியல்” என்று, கழுத்து நரம்பு புடைக்க, சாதிய ஆதிக்கமும் அரசியல் அதிகார வெறியும் கொப்பளிக்கும் இரத்தினவேலுவாக ஃபகத் பாசிலின் மிரட்டலான பங்களிப்பு,  “என்னடா பண்ணுவீங்க? உங்க ஊருக்குள்ள வந்தா கொன்றுவீங்களா? கொன்றுவீங்களாடா..?” என்று கொந்தளிக்கும் அதிவீரனாக உதயநிதி ஸ்டாலினின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டதான நடிப்பு, “இங்கு மதம் அடிக்குதா, ஜாதி அடிக்குதா, பணம் அடிக்குதான்னு யோசிச்சோம்னா நமக்குப் பைத்தியமே பிடிச்சுடும்…” என்று பொருமும் நீலாவாக, கிடைத்த வாய்ப்பில் பழுதில்லாமல் செய்த கீர்த்தி சுரேஷ்,  பாடல்களிலும் பின்னணியிலும் கதைக்கருவுக்கு நெருக்கமாக, இசையில் புதிய பரிமாணத்தைக் காட்டியுள்ள ஏ.ஆர்.ரகுமான், வேட்டை நாய்கள், குதிரை, புத்தர்,  அம்பேத்கார், பெரியார் போன்ற வழக்கமான குறியீடுகள் இருந்தாலும் பிரச்சார நெடி வீசாமல், இன்னும் பரவலாக நிலவும் சாதிக் கொடுமையை, அது ஏற்படுத்தும் வலியை, செதுக்கியது போன்ற அழுத்தமான பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள மாரி செல்வராஜ் என, ‘மாமன்னன்’ பலவகையில் ஒரு மாறுபட்ட படம். அழகம்பெருமாள் (சுந்தரம்), கீதா கைலாசம் (மாமன்னனின் மனைவி வீராயி), லால் (முதல்வர் சிந்தனை ராஜன்), சுனில் ரெட்டி (ரத்தினவேலுவின் சகோதரன்), ரவீனா ரவி (ரத்னவேலுவின் மனைவி) போன்ற துணைப் பாத்திரங்களும் தத்தம் பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். இசை போன்று, கதைக்கருவுக்கு நெருக்கமாகவே வண்ணத்திலும் கருப்பு வெள்ளையிலும் காட்சிகளைத் தத்ரூபமாகப் பதிவு செய்துள்ள தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்பும் கவனம் பெறுகின்றன.  யுகபாரதியும் அறிவும்  எழுதியுள்ள பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றன. வடிவேலு பாடிய ‘ராசாக் கண்ணு’ அருமை. எம்.எல்.ஏ.வைச் சுற்றி, ஒரு பத்து பேராவது எப்போதும் இருப்பது எங்கும் நடப்பதுதான். எப்போதும் மாமன்னன் ஒத்தையாகவே நிற்பதும் அந்தத் தொகுதி மக்களுக்கு சாதி வித்தியாசமின்றி நேர்மையாக உழைத்த, அவர்களது சுகதுக்கங்களில் பங்கெடுத்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை, ஒட்டுமொத்த கிராமங்களும் உள்ளே வரக்கூடாது என்று கூறுவதும்,  திடகாத்திரமான சங்க நிர்வாகிகளில் ஒருவரை, ரத்னவேலு  நாயைக் கொன்றதுபோல அடித்துக் கொன்றது குறித்து எவருமே கேள்வி எழுப்பாததும் நம்பக் கூடியவையாக இல்லை. இறுதிக் காட்சியில், வடிவேலு உள்ளே நுழைய, முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நிற்பதில், ரத்தினவேலுவின் மனைவியைக் குறிப்பிட்டு காட்டுவது, நயம். இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், அவர் சார்ந்துள்ள கட்சி, தலித் சமூகம், சமூக நீதி, வேங்கை வயல், முன்னாள் சபாநாயகர் தனபால் போன்றவற்றையெல்லாம் மறந்து, மறைத்து, ‘இப்படி எல்லாம் இப்போது எங்கு நடக்கும்? யார் சாதி பார்க்கிறார்கள்?’ என்று கேட்கிற, சுயசாதிப் பெருமை பேசுகிற மனநிலை கொண்டவர்கள், மாமன்னன் படத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடலாம். இல்லையெனில், மனத்தளவில் அதற்கான பொறுப்புத் துறப்புடனும் திறந்த மனத்துடனும் படத்திற்கு வரலாம். அப்படி வந்தால் மட்டுமே, யாதொரு மனப்புழுக்கமும் இல்லாமல் திரைப்படத்தில் லயிக்கவும் முடியும். சாதிய இழிவுகள், ஏற்றத்தாழ்வுக் கொடுமைகள் முற்றிலுமாக ஒழிய, முன்னெடுத்துச் செல்லும் தொடர்ப் பயணத்தில் ‘மாமன்னன்’ ஒரு சிறு பங்களிப்பு. மதிப்பெண்: 7.5/10

தீராக் காதல்

தீராக் காதல்

திரை விமர்சனம் நிறைவேறாத காதலின் நாயகன் கௌதமுக்கு வந்தனாவுடன் திருமணமாகி, ஐந்து வயதில் ஆர்த்தி என்கிற மகள் இருக்கிறாள். நாயகி ஆரண்யா, பிரகாஷ் என்பவனுக்கு மனைவியாக இருக்கிறாள். எதிர்பாராதவிதமாக, கௌதம் – ஆரண்யா சந்திப்பு பாலக்காடு சந்திப்பில் நிகழ்கிறது. நீருபூத்த நெருப்பாக இருந்த பழைய காதல் நினைவுகளை அச்சந்திப்பு விசிறிவிட, மீண்டும் காதல் உணர்வு தீப்பற்றிக்கொள்கிறது. விளைவு என்ன ஆனது என்பதுதான், ஜி.ஆர்.சுரேந்திரநாத்துடன் இணைந்து ரோகின் வெங்கடேசன் எழுதி இயக்கி, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள  ‘தீராக் காதல்’ தமிழ்த் திரைப்படத்தின் மொத்தக் கதை. கதை பழையது. என்ன.. அமைந்த அமைதியான வாழ்க்கையில், நிறைவேறாத காதலை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்ணை, காதலன் துரத்துவதாக இல்லாமல்,  உல்டாவாக அப்படியான ஒரு ஆணை, காதலி துரத்துவதான ‘புதுமை’.   ஆரண்யாவுக்கு வாழ்க்கை என்று இல்லாமல் போனதற்குக் காரணம், சாடிஸ்ட் கணவன் பிரகாஷ். ஆனால் அமைதியான வாழ்க்கைக்குச் சொந்தக்காரன் கௌதம். இந்நிலையில், ‘வந்தனாவை விட்டுவிட்டு வந்துவிடு’ என்று ஆரண்யா அவனைக் கேட்பதில் என்ன நியாயமோ?! “ஆரண்யா இப்ப பிரச்சனயில இருக்கா. அவ சாயறத்துக்கு ஒரு தோள் வேணும். தேவையே இல்லாம நீ பிரச்சனயில மாட்டிக்காத” என்று நண்பன் அருண் அறிவுறுத்தியும், “இங்க நடந்தத இங்கேயே மறந்துடுங்க. அதுதான் நம்ம ரெண்டுபேருக்கும் நல்லது” என்று கௌதமே ஒரு கட்டத்தில் ஆரண்யாவிடம் கூறும் தெளிவிருந்தும், அவளது பேச்சிலும் செயலிலும் அவ்வப்போது சரிந்துபோகும் பரிதாப நிலையையும் வந்தனா மற்றும் குழந்தை ஆர்த்தி மீதான பாசத்தால் குமைந்துபோவதையும் கௌதமாக வரும் ஜெய்,  தன் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். ஒருபக்கம் வாழ்ந்தும் வாழாத வாழ்க்கை, மறுபக்கம் எதிர்பாராத சந்திப்பால் அடிமனத்தில் அமிழ்ந்துபோய் மீண்டும் துளிர்த்த காதல் நினைவுகள் ஊடே சிக்கித் தவிக்கும் ஆரண்யா பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மாறுபட்ட நடிப்பை வழங்கி, அப்பாத்திரத்தையே மெருகூட்டியுள்ளது சிறப்பு. மேம்போக்கில் ‘வொர்க்காலிக்’காகத் தெரியும் வந்தனா, கணவன் கௌதம் மீதும் மகள் ஆர்த்தி மீதும் அளவில்லாத அன்பைக் கொண்டுள்ள நிலையில், அவன் வெளிப்பட்டு நிற்கும்போது, “நீங்க எல்லா பொறுக்கித்தனமும் பண்ணுவீங்க. அப்புறம் வந்து ‘சாரி’ கேட்ட உடனே, நாங்க எல்லாத்தையும் தொடச்சி எறிஞ்சிட்டு, ‘ஈ’ன்னு இளிச்சுட்டு வந்துடணும்… இதே தப்ப நான் பண்ணி இருந்தா?” என்று கொதித்து வெடிப்பதும் குழந்தை காணாமல் போகும்போது பதைத்துப் போவதுமாக, வந்தனவாக வரும் ஷிவதா நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். கௌதமின் நண்பன் அருணாக வரும் அப்துல் லீ,  “என்னடா, எரியற பல்ப முழுசா முழுங்குன மாதிரி முகம் எல்லாம் பிரகாசமா இருக்கே!” என்று சூழலைக் கலகலப்பாக வைத்திருப்பதுடன், “ஒரே வழிதான் இருக்கு. வந்தனாகிட்ட போய் உண்மையைச் சொல்லி, அவ கால்ல விழுந்துரு” என்று இடையிடையே கருத்துள்ள ஆலோசனையும் வழங்கி, மிகையில்லாத நடிப்பைத் தந்திருப்பது அருமை. ஆரண்யாவின் கணவன் பிரகாஷை, ஒரு கட்டத்தில் ஆரண்யா அறையும்போதுதான், ஓரளவுக்கு ரசிகர்கள் ஆறுதல் அடைகிற வகையில், சேடிசத்தை வெளிப்படுத்தும் கணவன் பாத்திரத்தில் அம்ஜத்கான் சோபித்துள்ளார். குழந்தை ஆர்த்தியும் (வ்ருத்தி விஷால்) இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். “என்னடா.. இந்தக் காலத்துல ஹஸ்பண்ட் வைஃப்புங்கள்லாம் நல்லவங்களா மாறிட்டாங்களோன்னு பார்த்தேன்..” (கௌதம்) “புடிச்சவங்களோட ஒரு இடத்துல இருக்கும்போது அந்த இடம் இன்னும் ரொம்ப அழகா ஆயிடுது இல்ல..?!” (கௌதம்) “என்ன மோசமான உலகம் இது கௌதம்?! சேந்து வாழ வேண்டியவங்கள எல்லாம் பிரிச்சு வெக்கறாங்க; பிரிஞ்சி வாழ விரும்பறவங்கள எல்லாம் சேத்து வெக்றாங்க” (ஆரண்யா) “என்ன பண்றது.. வேலை நடக்கணும்னா பிளைட், வேலை முடிஞ்சுச்சுடுச்சுனா ட்ரெய்ன்னு..” (கௌதம்) “எல்லாக் கம்பெனியும் ஒரே மாதிரியாதான் இருக்காங்க” (ஆரண்யா) “இங்க வந்தா ஒன்னரை மணி நேரம் முன்னாடியே உன்ன பாக்கலாமில்ல..” (ஆரண்யா) போன்ற ஜி.ஆர்.சுரேந்திரநாத்தின் வசனங்கள் அருமை. மங்களூர், மும்பை, சென்னை நகரங்களில் இரவு பகலாக வலம்வந்து அழகை வாரி இறைத்த ரவிவர்மன் நீலமேகனின் ஒளிப்பதிவு, கண்களுக்கு விருந்து. சித்து குமாரின் பின்னணி இசை அருமை. ஜி.கே.பிரசன்னாவின் படத்தொகுப்பு நிறைவு. கதையில் புதுமை இல்லை என்றாலும் கத்தி முனையில் நடக்கும் கதைக் கருவை, கீறல் இல்லாமல்  வழங்கிய விதமும் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் அர்ப்பணிப்பான பங்களிப்பும்  ரோகின் வெங்கடேசன் இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன. மதிப்பெண் : 6.5/10

சுலைகா மன்சில்

சுலைகா மன்சில்

திரை விமர்சனம் ஒருவரது இதயத்திலிருந்து  வரும் ஒரு சில வார்த்தைகளும்கூட,  இன்னொருவரது வாழ்க்கையின் பிடிமானமாகி, சடுதியில் தெளிவை ஏற்படுத்தும் என்பதன் அழகான திரை வடிவம்தான், அஷ்ரப் ஹம்சா எழுதி இயக்கி, மலையாளத்தில் உருவாகி, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் தமிழ் வசனங்களுடன் வெளியாகியுள்ள ‘சுலைகா மன்சில்’. சுலைகாவின் ஒரே மகள் ஹாலா. அவள் விரும்பும் ஆஷிக்கிடம் தான் எதிர்பார்க்கும் தகுதியில்லை என்று மூத்த சகோதரன் சமீர் மறுக்க, எதிர்பாராமல் விபத்தில் அவன் உயிர் இழக்கிறான்.  பிறகு சகோதரன் பார்க்கும் வரன்களையெல்லாம் ஏதோ ஒரு காரணம் கூறி, ஐந்தாண்டுகளாக மறுத்துவரும் ஹாலா, ஒரு கட்டத்தில் அமீனை மணக்கச் சம்மதம் தெரிவிக்கிறாள். நிச்சயதார்த்த நிகழ்வுக்கு முன்னதாக, வளைகுடா நாட்டிலிருந்து வந்திருக்கும் அமீன், ஹாலாவைத் தொடர்புகொண்டு பேச முயல்கிறான். விருப்பம் இருந்தும் வீட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளால் அவளால் பேச இயலாத நிலை. அதைப் புரிந்து கொள்ளாத அமீன் அவளிடம் கடுமையாகப் பேசிவிடுகிறான். நண்பன் அன்வர் எடுத்துக் கூற, அவளிடம் மன்னிப்புக் கோருகிறான். அன்றிரவு அவளது வீட்டின் பின்புறம் சந்திக்கிறான். பேச்சு வாக்குவாதமாகிவிட, திருமணத்தை நிறுத்திவிடுவதாக அவன் முடிவு செய்கிறான். திருமணம் பிரச்சனையில் முடிந்ததா, பிரச்சனை தீர்ந்து திருமணம் முடிந்ததா என்பதுதான் ‘சுலைக்கா மன்சில்’ படத்தின் மீதிக் கதை. ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் நிகழும் எளிமையான சம்பவங்களின் தொகுப்பாக, படம் முழுவதும் ஒரே சீராக, கலகலப்பாகச் செல்ல மாப்பிள்ளை, மணப்பெண் உள்ளங்களில் மட்டும் ஏற்றமும் இறக்கமுமான உணர்ச்சி அலைகள். இரு வேறு நிலைகளையும் அழகியலுடன் வழங்கியிருக்கிறார் இயக்குநர் அஷ்ரப் ஹம்சா. ஹாலாவாக அனார்கலி மரிக்கர், குதூகலக் காதலையும் கொஞ்சம் வெறுமையையும் வரப்போகும் புதிய உறவில் தெளிவையும் உறுதியையும் அவற்றுக்கு ஏற்ற முகபாவங்களுடன், அழகுற வெளிப்படுத்தும் பாங்கு பாராட்டுக்குரியது. லக்மேன் அவரன் அமீன் பாத்திரத்தின் அவசரத்தன்மை கொண்ட, உணர்ச்சிவயப்பட்ட, சற்றுக் குழப்பமான தன்மையை நடிப்பில் குழப்பம் இல்லாமல் செய்துள்ளது சிறப்பு. செம்பொன் வினோத் ஜோஸ் (சமீர்), ஆமல்டா லிஸ் (பத்துல்), சபரீஷ் வர்மா (ரம்ஜான்), தீபா தாமஸ் (டாக்டர் அமீனா), நவ்ஷத் அலி (அன்வர்), அர்ச்சனா பத்மினி (ஹவ்வா), மம்மு கோயா (அப்துல் ரகுமான்),  சுபா ஸ்ரீதரன் (சுலைகா), ஷெபின் பென்சன் (ஆஷிக் மலியெக்கல்) உட்பட துணைப் பாத்திரங்களை ஏற்ற அனைவரும் தத்தம் பங்களிப்பை  நிறைவாகவே வழங்கியுள்ளனர். “ஜென்னத்துக்கே வந்துட்ட மாதிரி இருக்கு…”“ஜென்னத்துன்னா… சொர்க்கம்னு அர்த்தம்”“அப்பா.. சொர்க்கத்துல இப்படியெல்லாம்தான் லைட் போட்டுருப்பாங்களா?” “முறையா என்ன கூப்பிடல.. எனக்குத் தன்மானம்தான் முக்கியம்”“என்னால நடக்கிற கல்யாணத்துக்கு என்னையே கூப்பிட வருவியா? நாங்க அங்க வர்றதுக்குத்தான் கிளம்பிட்டு இருக்கோம்” “என்னடா தலை மட்டும் தனியா வருது?”“உடம்பும் இருக்கு” “செருப்பு இல்லாம கபரஸ்தான் வழியா போனா, கல்லு இல்ல, பாம்புகூட குத்தும். எப்பவும் ‘சென்டிமென்ட்ஸ்’சோட சுத்தனா இப்படித்தான் நடக்கும்” “படா பையாவா இருக்கறது ரொம்பக் காம்ப்ளிகேட்டட் பொசிஷன் இல்ல?” “பார்லர்க்கா? ஏற்கனவே அங்க இருந்து வந்த மாதிரிதான் இருக்கீங்க. திரும்ப பெயிண்ட் அடிக்கப் போறீங்களா?” “கொஞ்ச நேரத்துல அப்படி என்ன பேச முடியும்?”“காலைல எழுந்து சுலைமானி டீ குடிப்பியா? இல்ல.. பிளாக் காபி குடிப்பியான்னு கூடத் தெரியாதே!” “இது நல்லா இருக்காதுன்னு எனக்குத் தெரியும். இத போட்டுக்க வேண்டாம், போட்டுக்கறேன்னு அவர்கிட்ட ஒரு வார்த்த மட்டும் சொன்னா போதும், மத்தத நான் பாத்துக்கறேன்” “உங்களுக்கிருக்கற சாய்சும் பெர்சனாலிட்டியும் எனக்கும் இருக்குமில்ல?”“நீங்க ஹேப்பியா இல்லன்னா எங்க பைய்யாகிட்ட வந்து பேசுங்க, பொறுமையா டைம் எடுத்துட்டு லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கலாம்” “நான் வீட்டுக்குப் போய் சொல்லட்டுமா, ஹாலா?”“அப்போ அவங்க சந்தோஷம் முடிஞ்சு போயிடும்”“உங்களுக்கு இத்தனை பேரோட சந்தோஷத்தக் கெடுக்கணும்னு தோணல இல்ல.. இதவிடப் பெரிய குவாலிட்டி உள்ள லைஃப் பார்ட்னர் எனக்கு வேணும்னு நான் ஆசைப்பட்டதில்ல” ~இவை ரசிக்கத்தக்க, அர்த்தபூர்வமான வசனங்களில் சில. “நாளைக்குதானே உங்க அண்ணனோட கல்யாணம்?” என்று இளநீர்க் கடைக்காரர் அமீனிடம் கேட்பதும் அதற்கு அமீன் மறுப்பேதும் சொல்லாததும் நம்மைக் குழம்பச் செய்கிறது.   கண்ணன் பட்டேரியின் ஒளிப்பதிவு, கண்களுக்குக் குளுமை. பாடல் காட்சிகளைப் படமாக்கிய விதமும் அருமை. பாடல்களுக்கான விஷ்ணு விஜயின் துள்ளலான இசை தாளம் போட வைக்கின்றது. பின்னணி இசையும் அருமை. நவ்புல் அப்துல்லாவின் படத்தொகுப்பு கச்சிதம். வெறும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை கலந்து கலகலப்பாகவும் இளைய தலைமுறைக்கு ஒரு ‘பிரீ வெட்டிங் கவுன்சிலிங்’ போலவும் ‘சுலைகா மன்சில்’ படத்தை வழங்கியுள்ள இயக்குநர் அஷ்ரப் ஹம்சாவுக்கு ஒரு சபாஷ் போடலாம். மதிப்பெண் : 7.5/10

ஒரு சாமானியன் போதும்

ஒரு சாமானியன் போதும்

திரை விமர்சனம் சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை  பாமரத்தனமான கடவுள் பக்தியும் தங்களையே கடவுளாக வரித்துக்கொள்ளும் சாமியார்கள் மீதான கண்மூடித்தனமான பக்தியும் அந்தச் சமூகத்தை, அதன் அங்கமாக உள்ள  மக்களை, குறிப்பாகப் பெண்களை எப்படியெல்லாம் சீரழித்து வருகிறது என்பதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டேதான் வருகிறோம். அதிலிருந்து நாம் கற்ற பாடம் என்ன என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.   இப்படியான உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், தீபக் கிங்கிரணியின் விறுவிறுப்பான கதை திரைக்கதை வசனத்தில், அபூர்வ் சிங் கார்க்கியின் நேர்த்தியான இயக்கத்தில், மனோஜ் பாஜ்பேயின் அழுத்தமான நடிப்பில் உருவாகி, ஜீ5 தளத்தில் தமிழ் வசனங்களுடன் வெளியாகியுள்ள ஹிந்தித் திரைப்படம்தான் ‘ சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ (ஒரு சாமானியன் போதும்). வாய்ப்புக்கு ஏதுவான இந்தப் ‘புண்ணிய’ பூமியில் வறுமை, நோய், அறியாமை, பேதமை, கல்வி அறிவின்மை தாண்டி, பகுத்தறிவின்மை, அச்சம் காரணமாக எதையும் நம்பும் மனோநிலையில் மக்கள். தீர்வு தேடி உழன்றுகொண்டிருக்கும் அவர்களிடையே ‘கடவுள் அவதார’மாக முளைத்துச் செழிக்கும் சாமியார்களில் ஒருவன்தான் பாபாஜி. அவனின் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் இளவயதுப் பெண்ணுக்காக நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தைத் தனிமனிதனாக நடத்துகிறார், குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர் சோலங்கி. பாபாஜிக்குப் பண பலம், ஆள் பலம் தாண்டி மக்களின் கண்மூடித்தனமான ஆதரவும் இருக்கிறது. மிகமிகப் பிரபல வக்கீல்கள்,  அவர் பொருட்டுப் பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜர் ஆகிறார்கள். சாட்சிகள் விலை பேசப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். கொடிய குற்றத்தைப் பின்னுக்குத் தள்ளி, அந்தக் கார்ப்பரேட் சாமியாரின் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆசிரமங்கள் ஆகியவற்றால் மக்களின் ‘சேவை’ தடைபடுவதாக மட்டுமே, நீதிமன்றங்களில், மக்கள் மன்றங்களில், ஊடகங்களில் முன்னிறுத்தப்படுகின்றது. ஐந்து ஆண்டுகளாக நீளும் சட்டப் போராட்டத்தில்,  அப்பெண்ணின் வலி உணர்ந்த, உண்மைக்காகப் போராடும் வழக்குரைஞர் சோலங்கி, அந்த இளவயதுப் பெண்ணுக்கு நீதியைப் பெற்றுத் தந்தாரா என்பதுதான், ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ படத்தின் மொத்தக் கதை. “எப்படியாவது அவர் மேல இருக்கிற போக்சோ கேச டிரா பண்ணு, இல்லன்னா பிரச்சனை பெருசா போய்டும்.” இப்படி பாபாஜி தரப்பு அலறுவதிலிருந்தே, போக்சோ  சட்டத்தின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம். அதீத நம்பிக்கை கொண்ட அந்தக் குடும்பம் பாபாஜியின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைகிறது. உதவ நினைக்கும் காவல்துறை பெண் அதிகாரி, போக்சோ சட்டத்தின் நுணுக்கங்களை அறிந்த வழக்குரைஞர் சோலங்கியை அவர்களுக்குப்  பரிந்துரைக்கிறார். அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்து கலங்கிப் போகும் சோலங்கி, தீவிர சிவ பக்தனாக இருந்தும், பாபாஜியின் கேடுகெட்டச் செயலை ஜீரணிக்க இயலாமல், வழக்கை எடுத்துக் கொள்கிறார். அவரிடம், “சார்.. உங்களோட பீஸ்?” தயங்கித் தயங்கிக் கேட்ட பாதிக்கப்பட்ட பெண் நூவின் தந்தையிடம், சோலங்கி  புன்முறுவலுடன் சொல்கிறார், “அந்தப் பொண்ணோட சிரிப்பு..” ” கோர்ட்ல கீழ்த்தரமான கேள்வி எல்லாம் கேப்பாங்க. எப்படியாவது உன் மனசை உடைக்க நெனப்பாங்க. நீ எதுக்கும் பயப்படக் கூடாது” என்று விசாரணைக்கு நூவைத் தயார் செய்யும்போதும், நூவின் பெற்றோர்களிடம் ஒரு கதையைச் சொல்லி, அவர்களது ஒத்துழைப்பைக் கோரும்போதும்,  போக்சோ சட்டத்தின் கூறுகளை, அவற்றின் நுணுக்கங்களை எடுத்துரைத்து, அழுத்தமான வாதங்களை முன்வைக்கும்போதும், சூழ்ந்துள்ள ஆபத்தில் தனது மகன் காணாமல் போனதை அறிந்து பதைபதைக்கும்போதும், “தற்கொலை செஞ்சுக்கலாம்னு தோனுது” என்று சொல்லும் நூவிடம், “நடக்கிற இந்தப் போருக்கான முழக்கத்தை அவங்க எழுப்பிட்டாங்க கண்ணா” என்று தைரியம் சொல்லி, சங்கநாதம் முழங்கும்போதும், பிரிய விரும்பாத தன் ஜூனியரிடம், அவரின் பாதுகாப்பு நிலைமையை எடுத்துச் சொல்லி, அக்கறையும் கண்டிப்புமாக வலியுறுத்தும் பொருட்டு அவரது காலில்விழ முயலும்போதும், ஐந்தாவது முறை ஷூவைப் பாலிஷ் செய்வதைப் பையன் கிண்டல் செய்வதை ரசிக்கும்போதும், “ஸ்கூல், ஹாஸ்பிடல் கட்டுறதுனால, அவர் ரேப் பண்ணலாம்னு ஒன்னும் அர்த்தம் கிடையாது…. இல்லையா?” என்று பாபாஜி தரப்பில் வந்த அட்வகேட்டிடம் செவுளில் அறைந்ததுபோல் கேட்கும்போதும், “இந்த நாட்ல ஒரு பெண்மணியோட வாழ்க்கையில ஏகப்பட்ட கஷ்டங்க ஏற்படுது. அந்தக் கஷ்டங்களோட ஒரு பிரதி பிம்பமா பாதிக்கப்பட்ட இந்தப் பெண் இருக்கா. இப்படிச் சொல்வதற்கு எனக்கு உண்மையிலேயே அவமானமா இருக்குது, யுவர் ஹானர்” என்று வாதத்தினிடையே தெரிவிக்கும்போதும், “மொத்த ‘ப்ரோசிடிங்ஸ்’லயும், ஒரு சில பேர் அவள பாதிக்கப்பட்ட பொண்ணா பாத்தாங்க, இல்ல பணமா பாத்தாங்க, சில பேர் அவங்க காமப் பசிக்குப் போகப் பொருளாப் பாத்தாங்க, இன்னும் சில பேர் ‘டி.ஆர்.பி’ யா பாத்தாங்க… நான் அந்தப் பொண்ணுக்குள்ள காளிய பார்த்தேன்..” என்று உணர்ச்சிவயப்பட்டுக் கூறும்போதும், வழக்குரைஞர் சோலங்கியாக மனோஜ் பாஜ்பேயி, மாறுபட்ட நடிப்புத் திறமையால் நம்மைப் படம் முழுவதும் அத்துடனேயே கட்டிப்போட்டுவிடுகிறார். நேர்மையான வழக்கறிஞர்கள் மீதான மதிப்பைப் பல மடங்கு கூட்டியும் விடுகிறார். பெரும்பாலான நீதிமன்றக் காட்சிகளில் முகத்திரை இட்டிருந்தும், கண்களிலேயே நுட்பமான பாவங்களை வெளிப்படுத்தி நடிப்பில் அசத்திய அட்ரிஜா சின்ஹா (நூ) சபாஷ் போட வைக்கிறார். பசுத்தோல் போர்த்திய புலியாக வரும் பாபாஜி (சூரிய மோகன் குல்ஸ்ரேஷ்தா), பாபாஜி தரப்பு அட்வகேட் சர்மா (விபின் ஷர்மா), சோலங்கியின் ஜூனியர், அவரது அம்மா, மகன், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள்,  நூவின் பெற்றோர்கள்,  உட்பட ஏனைய துணைப் பாத்திரங்கள் அனைவரும் அவர்களுக்குரிய நேர்மையான பங்களிப்பைத் தந்துள்ளது சிறப்புக்குரியது. பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றங்களில் அமைந்திருந்தாலும் கொஞ்சமும் சலிப்புத் தட்டாத வகையில் படமாக்கியதில், அர்ஜுன் குக்ரேட்டியின் ஒளிப்பதிவுக்குப் பெரும்பங்கு உண்டு. படத்தை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதைக்கேற்ற கொதிநிலையில் வைத்திருந்தமைக்கு சங்கீத் சித்தார்த்தின் இசை ஒரு காரணம். இன்னொரு காரணம், ‘சிக்’கென இருந்த சுமித் கோட்டியனின் படத்தொகுப்பு. ஒட்டுமொத்தமாக அல்லாது அவ்வப்போது ஃப்ளாஷ் பேக் உத்தியைப் பயன்படுத்திப் படக்கதை நகர்வது அழகு. அன்று, காவல்துறை அதிகாரிகளிடம் நேர்மை, நீதித்துறையில் தலையீடின்மை, பாதிக்கப்பட்ட பெண்ணின் மனோவலிமை, பெற்றோர்களின் உறுதி, உயிர் அச்சத்தையும் பொருட்படுத்தாமல் கயவர்களுக்கு எதிராக போராடும் சில மனிதர்களின் துணிச்சல், எல்லாவற்றுக்கும் மேலாக, சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்று ஒதுங்கி நின்ற ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு என்ற சூழல்தான், பெண்ணின் பார்வையில் வலி உணர்ந்து, சூழ்ந்துள்ள ஆபத்தை அறிந்தும் வழக்கை அணுகிய வழக்குரைஞர் சோலங்கியால் உண்மையை நிலை நாட்டிடச் செய்தது. எந்தப் புராண இதிகாசங்களைக் கைக்கொண்டு, இத்தகைய கார்ப்பரேட் சாமியார்கள் மக்களின் பாமரத்தனத்தின் மீது, தத்தம் மோசடிகளைக் கட்டமைத்து முறையற்ற சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்களோ, குற்றம் என்னவென்று கருதாமல் குற்றவாளிகள் யார் என்று கருதக்கூடிய ‘செலெக்ட்டிவ் அப்ளிகேஷ’னுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய, அதே புராண இதிகாசங்களை நீதிமன்றங்களிலேயே மேற்கோள் காட்டி, அவர்களுக்கு எதிரான நீதியைப் பெற முயல்வது,  நகை முரண். என்றாலும், நீதிமன்றம் இந்தியக் குற்றவியல் சட்டம் மற்றும் போக்சோ சட்டங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பை வழங்குவதாக அமைத்ததற்கும் காலத்தின் கட்டாயமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழியைத் தோலுரித்துக் காட்டும் ஒரு நேர்த்தியான திரைப்படத்தை  வழங்கியதற்கும் இயக்குநர் அபூர்வ் சிங் கார்க்கி, வெகுவான பாராட்டுக்கு உரியவராகிறார். மதிப்பெண் : 8/10

வில்லிசை நாயகன்

வில்லிசை நாயகன்

பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 94. சுப்பு ஆறுமுகம், வில்லிசைக் கச்சேரிகள் மூலம் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறியவர். 1928 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் சுப்பு ஆறுமுகம் பிறந்தார். தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார். கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டுக் கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் வில்லுப்பாட்டினால் மக்களைப் பெரிதும் கவர்ந்தவர். வில்லுப் பாட்டுக் கலை தமிழ் நாட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் பிரபலம் அடைந்தது. அவருக்குப் பிறகு கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களால் உலகளவில் பரவியது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவரின் குரு, வித்துவான் ஆ.க.நவநீத கிருஷ்ணன் பிள்ளை என்பவர் ஆவார். இவர் திருநெல்வேலி மந்திர மூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் பள்ளியிலும் படித்தார். அதன்பிறகு ‘மதுரை தமிழ்ச் சங்கம்’ என்ற அமைப்பில் மூன்று ஆண்டுகள் படித்துத் தமிழ் மொழியில் புலமை பெற்று விளங்கினார். சுப்பு ஆறுமுகம் தனது பதினாறாம் வயதில் ‘குமரன் பாட்டு’ என்ற நூலை எழுதியிருக்கிறார். திரைப்பட நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் கவிஞரை வில்லிசை, திரைப்படங்கள், திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத சென்னைக்கு அழைத்து வந்தார். காந்தி மகான் கதையை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1948-ல் கவிஞர் சுப்பு அவர்களைக் கொண்டு எழுதச் சொல்லி சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். திரையுலகில் கலைவாணர் மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்த பல படங்களுக்கான நகைச்சுவைக் காட்சிகளையும் எழுதியுள்ளார். 1960ஆம் வருடம் இவரின் வில்லிசை நிகழ்ச்சி ‘கருணைக்கடல் காஞ்சி காமாட்சி’ என்ற தலைப்பில் அரங்கேறியது. ‘காந்தி வந்தார்’ என்ற வில்லிசையை சென்னை வானொலியில் பாடினார். காந்திமகான் கதை கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களைப் புகழ் ஏணியின் உயரத்துக்குக் கொண்டு சென்றது. கலைவாணர் அவர்களின் மறைவிற்குப் பின்னர், கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களே நாடெங்கும் முதல் பணியாக, வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து நடத்தி வந்தார். சுமார் 1000க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை ஆலயங்களில், வானொலியில், தொலைக்காட்சிகளில் ஆசுகவியாக அவ்வப்போது இயற்றி அவற்றைத் தன் வில்லிசையின் மூலம் தமிழக மக்களின் ரசனையை நேரிடையாகப் பெற்றார். கவிஞர் என்று எல்லோராலும் புகழப்பட்ட சுப்பு ஆறுமுகம் தமிழக அரசால் ‘கலைமாமணி’ என்ற கௌரவத்தையும், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் விருதையும் பெற்றார். கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதினையும் சுப்பு ஆறுமுகம் பெற்றுள்ளார். இந்திய அரசின் தேசிய நலத்திட்டங்கள், தேச பக்தி, தெய்வ பக்தி, தொழிற் சாலைகளில் தற்காப்பு முறைகளைக் கையாள்வது போன்ற சமுதாய நிகழ்ச்சிகள், வாக்காளர்களின் உரிமை போன்ற விழிப்புணர்வு தலைப்புகளில் பல்லாயிரக் கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அழிந்துவரும் கலைகளில் ஒன்றான வில்லிசையின் நாயகராகத் திகழ்ந்த சுப்பு ஆறுமுகம் அவர்களின் மறைவு தமிழ் இசை உலகிற்கு மாபெரும் இழப்பாகும். தாணப்பன் கதிர்

இரவின் நிழல்

இரவின் நிழல்

திரை விமர்சனம்‘பசியும் பணம் சார்ந்த பிரச்சனையும்தான் என்னை எல்லா வயசிலேயும் விரட்டிக்கிட்டே இருந்தது ; சிலர் செய்யற பாவம் கங்கைக்குப் போனால் தீரும், சில பாவங்கள், செய்யறவா கங்கையோடு போனாலும் தீராது; வெதச்சுது எல்லாம் முளைக்கும்டா, பாவம் உட்பட’ – சுருக்கமாகச் சொன்னால் இதுதான், ‘இரவின் நிழல்’. நந்து (பார்த்திபன்) – காட்டமாகச் சொன்னால், கந்து வட்டிக்காரன்; கண்ணியமாகக் கூறினால், பைனான்சியர். குழந்தைப் பருவம் முதல் நடுத்தர வயது வரையிலான, கரடுமுரடான அவனது வாழ்க்கையை, வேதனையை, சுரண்டலை, பஞ்சமா பாதகங்களை, ஆஷாடபூதித்தனம் இல்லாமல், அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டுவதுதான், பார்த்திபன் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கி, நடித்துள்ள ‘இரவின் நிழல்’ எனும் உலகின் முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் படத்தின் கதை. இதனை ‘டார்க் ஸ்டோரி’ என்றால் அது நகைமுரண். நந்துவின் வாழ்க்கைப் பாதையில் இடையிடையே பயணிக்கும் அம்மா ராணி (ரேகா நாயர்), சந்துரு (நந்து), ஆனந்த கிருஷ்ணன் (நந்து), காதலி லட்சுமி (சினேகா), மனைவி சிலக்கம்மா (பிரீகிடா சகா), பார்வதி (சாய் பிரியங்கா ரூத்), பிரேம குமாரி (வரலட்சுமி சரத்குமார்), சாமியார் பிரேமானந்தா (ரோபோ சங்கர்) ஆகியோர் துணைப் பாத்திரங்களாக மட்டுமல்லாது, நந்துவின் பாத்திரப் படைப்புக்கு உறுதுணையாகவும் நிற்பது சிறப்பு. சிலக்கம்மா (பிரீகிடா சகா) கலக்கலம்மா ! பொதுவாக, விருப்பப்பட்ட வாழ்க்கை எவருக்கும் அமைவதில்லை என்பதுதான் உண்மை. அமைந்த வாழ்க்கையை, கிடைத்த வாய்ப்புக்கேற்ப செப்பனிட்டுக்கொண்டு, அடுத்தடுத்தக் கட்டங்களை நோக்கி நகர்வதுதான், எல்லோருக்குமான வாழ்க்கையாக இருக்கின்றது.  நந்துவின் வாழ்க்கையும் அப்படித்தான். கொஞ்சம் கூர்ந்து நோக்கினால், அவன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை ; அப்படியான வாழ்க்கைக்குத்தான்,  நந்து தேர்வானான். பசியும் பணம் சார்ந்த பிரச்சனையும் விரட்ட முடியாத இடத்தை அவன் அடைந்து, மனதில் குற்ற உணர்வும் அன்பு மயமான வாழ்க்கையும் ஒருங்கே முகிழ்த்து, நடக்கும் போராட்டத்தில் பலியாவது நந்து, பிழைத்து நிற்பது மனிதம். இவற்றை ‘செல்லுலாய்ட்’டில், நான்-லீனியர் சிங்கிள் ஷாட் மூலம், தொய்வில்லாமல் வழங்க பார்த்திபன் மிகவும் மெனக்கெட்டு இருப்பதை உணர முடிகிறது. வெற்றியும் பெற்றுள்ளார். நான்-லீனியர் சிங்கிள் ஷாட் குறித்த புரிதலை ஏற்படுத்த, படத்தின் முதல் அரை மணி நேரம் செலவிடப்பட்டுள்ளது. அதிலும் படத்திற்கான வாய்ஸ் ஓவர் தவிர்த்து, அந்தத் தொழில்நுட்பத்தை விளக்குவதற்கான வாய்ஸ் ஓவராக அமைந்திருந்தால், இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும். படத்திலும்கூட வாய்ஸ் – ஓவர்தான்; என்றாலும், இதில் காட்சிகளின் நீள அகலங்களுக்கு வாய்ப்பில்லாததைக் கணக்கில் கொண்டால்,  இதைத் தவிர்க்க முடியாதுதான் என்பதையும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். பாவம் என்கிற ஒரு வட்டத்துக்குள்தான்  நந்துவின் வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டது போல, மீண்டும் மீண்டும் அவனது காரியம் ஒவ்வொன்றையும் பாவமாகவே வரித்துக் கொண்டு வருகிறது, கதை. நாய் விற்ற காசு குறைக்காது என்பது போல, அவன் விற்கும் கஞ்சா காசுதான், அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை சுகபோக வாழ்க்கை வாழ வழி வகுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தம். ஏசியா புக் ஆப் ரிகார்ட்ஸ், இண்டியா புக் ஆப் ரிகார்ட்ஸ் இரண்டிலும், ‘இரவின் நிழல்’ ‘முதல் ஏசியன் நான்-லீனியர் சிங்கிள் ஷாட்’ படமாக முத்திரை பதித்த பார்த்திபனின் இந்தச் சாதனைக்கான கடும் உழைப்புக்கு,  ஏ ஆர் ரகுமானின் அட்டகாசமான இசையும், ஆர்தர் வில்சனின் பிரமிப்பான ஒளிப்பதிவும் பக்கா பலம். கலை இயக்குநர் விஜய் முருகனின் உழைப்பும் வீண் போகவில்லை. ‘நான்-லீனியர் சிங்கிள் ஷாட்’ குறித்த புரிதலுடனான அனுபவத்திற்கும்,  வாலிபக் கவிஞர் வாலி போன்று, பார்த்திபனின் வார்த்தை ஜாலத்தைச் சுகிக்கவும், பொதுவாக எலைட் சமூகம் முகம் சுளிக்கும் ஒரு வாழ்க்கையைப் பற்றிய ஆபாசம் உட்பட ஆசாபாசங்களை, வலிகளை உணரவும், தூக்கம் தொலைத்த ஓர் இரவு வாய்க்கவும் வாய்ப்பளிக்கிறது, பார்த்திபன் இராதாகிருஷ்ணனின்  ‘இரவின் நிழல்’. மதிப்பெண் : 8.5/10 மது ராஜேந்திரன்

வாழும் கவிஞன் வாலி

வாழும் கவிஞன் வாலி

கவிஞர் வாலியின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவர் பாடல்களோடு சிறு பயணம்: “நன்றி சொல்லவே உனக்குஎன் மன்னவா வார்த்தை இல்லையேதெய்வம் என்பதே எனக்குநீயல்லவா வேறு இல்லையே” இன்று அதிகாலை காரில் உட்கார்ந்தபோது, பனிக்குளிரைக் கிழித்துக்கொண்டு எழுமாற்றாக வந்து குதித்தது இந்தப் பாட்டு. சிலரை நினைக்கும்போதோ அல்லது அவர்களை நினைப்பூட்டவோ பாடல்களும் தூண்டுகோலாகின்றன. இன்று கவிஞர் வாலியின் நினைவு நாள்; அவர் எழுதிய பாடல் முக விசேடம். கவிஞர் வாலியை ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,தான் ஒரு படைப்பாளி, என்னுடைய நிலையில் இறங்கி வரமாட்டேன் என்று வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்துக் கொண்டு இலக்கிய கர்த்தாவாக மட்டுமே தன்னை அவர் நிலை நிறுத்திக் கொள்ளவே இல்லை. ஒரு படத்தின் காட்சிச் சூழலுக்கான பாடல் எவ்வளவு பாமரத்தனமாக இருக்குமோ அவ்வளவுக்குக் கீழிறங்கி அடித்து ஆடுவார். அதே சமயம், கருத்தாழம் என்றால் கண்ணும் கருத்துமாக வரிகளைப் பூட்டுவார். அதனால்தான், சாஸ்திர சம்பிரதாயங்களால் மூடிக் கட்டப்பட்டவளுக்கு வாழ்வு கொடுக்கும் சூழலில் எழும் “நன்றி சொல்லவே உனக்கு, என் மன்னவா வார்த்தை இல்லையே” பாடலும் பிடிக்கும்; அதே சமயம் பிரபல பாட்டுக்காரி ரோட்டோர ரோமியோக்களுடன் பாடும், “சின்ன ராசாவே…..சித்தெறும்பு என்னைக் கடிக்குது” பாட்டும் பிடிக்கும். இரண்டுமே வாலியின் பாடல்கள்தான். இந்த இரண்டிலுமே மெட்டுக்குக் கட்டினாலும் தாளம் தப்பாத வரிகளைப் பொருத்தமாக இட்டுக் கட்டியிருப்பார். “அந்த நாள் ஞாபகம்நெஞ்சிலே வந்ததே வந்ததேநண்பனே…..” என்று 68 இல் “உயர்ந்த மனிதன்” படத்தில் மெல்லிசை மன்னர்எம்.எஸ்.விஸ்வநாதனுக்குக் கொடுத்தவர்தான், “நிலவிடம் வாடகை வாங்கிவிழி வீட்டினில் குடி வைக்கலாமா…நாம் வாழும் வீட்டுக்குள்வேறாரும் வந்தாலே தகுமா…..” என்று 38 வருடங்கள் கழித்து “சில்லுனு ஒரு காதல்” படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கொடுக்க முடிந்தது. மற்றைய இசையமைப்பாளர்களையும் மனுஷர் விட்டு வைத்தாரா என்ன?!! “பதினெட்டு வயசு இளமொட்டு மனசு ஏங்குது பாய் போட”, “எப்படி எப்படி? சமைஞ்சது எப்படி?” என்று விரகதாபப் பாடல்களையே துள்ளிசையிலும் தன் வரிகளால் இனம் பிரித்தார்.“டாலாக்கு டோல் டப்பிமா” என்று புதுப் புதுச் சொற்களை ஜில்பான்சி மொழியில் போடுவது வாலியின் பண்பு. ஒரு மனிதன் காலா காலாத்துக்கும் தன் மனசை இளமையாக வைத்துக் கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும்.எப்படி, அழுத்தமான சூழல் ஒன்றில் ரஜினியின் படமொன்றைத் தேடி எடுத்துப் பார்க்கத் தோன்றுகிறதோ, அது போலவே எண்ணற்ற ஜாலியான வாலியின் பாடல்களும். “ஜானகி அம்மா பாடுறதைப் பார்” என்று எப்படி அவரை ஒரு முன்னுதாரணமாகச் சித்ராவுக்கு இளையராஜாவால் அடையாளப்படுத்த முடிந்ததோ, அது போலவே ஆர்.வி.உதயகுமார் எழுதிய பாடல்களைப் பட்டி டிங்கரிங் செய்ய வாலியே தேவைப்பட்டார். இயக்குநர் கதிர் – இளையராஜா கூட்டணியில் இருந்து இயக்குநர் கதிர் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி வந்த போதும் வாலியே தொடர்ந்தார். அதனால்தான் நமக்கும் “யாப்போடு சேராதோபாட்டு தமிழ்ப் பாட்டுதோப்போடு சேராதோகாற்று பனிக்காற்று….” என்று இதயத்திலும் “ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்அன்பே உன் பேரைச் சிந்தித்தால்தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்கண்ணே நம் கண்கள் சந்தித்தால்நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீ தான்உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..” என்று காதல் தேசத்திலுமாகக் கிட்டியது. “அன்னமிடும் கைகளிலேஆடிவரும் பிள்ளை இதுஉன்னருகில் நானிருந்தால்ஆனந்தத்தின் எல்லையதுகாயத்ரி மந்திரத்தைஉச்சரிக்கும் பக்தனம்மாகேட்கும் வரம் கிடைக்கும் வரைகண்ணுறக்கம் மறந்ததம்மா” தாம்பத்திய பந்தத்தை அழகு மொழியில் வடித்தெடுத்த “கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை” ஆக்கித் தொடர்ந்த கவிஞர் வாலி – இசைஞானி இளையராஜா எனும் பந்தம், முரண்பட்ட மனங்களின் மணமேடையை “தாமரை மேலே நீர்த்துளி போல்தலைவனும் தலைவியும் வாழ்வதென்னநண்பர்கள் போலே வாழ்வதற்குமாலையும் மேளமும் தேவையென்ன?” என்று மெளன ராகத்தில் கேள்வி எழுப்புகிறது. அதுவே இன்னும் கடந்த நிலையில் “நிலவினை நம்பி இரவுகள் இல்லைவிளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லைஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்…” எனத் தத்துவ விசாரம் கற்பிக்கிறது. அபூர்வ சகோதரர்கள், தளபதி, மீரா, கிளிப்பேச்சு கேட்கவா, வருஷம் 16, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, மகுடம், அக்னி நட்சத்திரம், மெளன ராகம், தாலாட்டுக் கேட்குதம்மா, ராசா மகன், மாமியார் வீடு என்று இளையராஜா இசையில் முழுப் பாடல்களையும் ஒரே படத்தில் எழுத வைத்த சிறப்பை வைத்தே தனி ஆவர்த்தனம் வைக்கலாம். “மல்லிகை முல்லைப் பூப்பந்தல்” என்று “அன்பே ஆருயிரே” (1975) க்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக எழுதி, அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் சுவீகரித்துக் கொண்டவர், 30 வருடங்கள் கழித்து மூன்றாம் தலைமுறை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் “மயிலிறகே மயிலிறகே” என வருடும் வரிகளோடு அதே “அன்பே ஆருயிரே” தலைப்பில் வெளிவந்த இன்னொரு படத்திலும் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். இவையெல்லாம் தன்னைப் பிரச்சாரப்படுத்திக் கவர்ந்து கொண்ட வாய்ப்புகள் அல்ல. அவர் மீதான ஈர்ப்பால் தானாகத் தேடி வந்தவை. கவிஞர் வாலியின் வரிகளை நுனிப் புல் மேய்ந்து இலக்கியத் தராதரம் பேசும் அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளின் திரைத்துறையைப் பங்கு போட்ட வாலியாரின் அர்த்தம் நிறைந்த வரிகளைத் தேடுவதில்லை; அல்லது கண்ணதாசன் கணக்கில் போட்டு விடுவார்கள்.இன்னொரு பரிமாணமும் இருக்கிறது, அது எளிமையான சொற்களின் கட்டு. இதைக்கூட விமர்சன நோக்கில் எடுத்து ஆய்வார்கள். ஆனால் ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்லும் திறன் கூடப் படைபிலக்கியத்தின் சிறப்பு அல்லது படைப்பவனின் வல்லமை என்றே கொள்ள வேண்டும். தாம் படைத்த இலக்கியங்களிலே தம் வாழ்வையும் காட்டியவர்கள் உண்டு. கவிஞர் வாலியின் பாடல்களில் அப்படியே நம்முடைய வாழ்க்கையிலும் பங்கு போட்டு வைத்திருக்கிறது. நம் காலத்து இசையமைப்பாளர்களோடு வாழ்ந்த வரிகள் ஒரு பக்கமிருக்க, கொண்டாடி மகிழத்தான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்லிப் போகின்றன அவை. அப்படியே வாழ்ந்து விட்டும் போனார் நம் கவிஞர் வாலி. கானா பிரபா

விராட பருவம்

விராட பருவம்

திரை விமர்சனம்வர்க்க பேதம், சாதி பேதம் இவற்றின் அடிப்படையில், ஆதிக்க வர்க்கமும் அதிகார வர்க்கமும் கைகோர்த்து, ஆண்டாண்டு காலமாக நடத்தி வரும் கொடுமைதான், அப்பாவி மக்களின் மீது பல்வேறு வகையில் தொடரும் தாக்குதல். சுதந்திரத்திற்குப் பின்பும், அதற்கான தீர்வு முழுமையாகக் கிடைத்திராத நிலையில், அவர்களின் இரட்சகர்களாக ஆங்காங்கே மக்களின் போர்க் குழுக்கள். அக்குழுக்களின் கொள்கை கோட்பாடுகள், செயல்முறைகள், எதிர்பார்க்கும் தீர்வுகள்,  நடைமுறைக்குச் சாத்தியமா என்பதெல்லாம், இன்னமும் விமர்சனத்துக்குரியவைதான். இது ஒருபுறம் இருக்க, இந்த யுத்தப் பின்னணியில் முகிழ்த்த அழகான காதல் கதைதான், வேணு உடுகுலா இயக்கத்தில்,  நெட்ப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் வெளியாகி உள்ள தெலுங்குத்  திரைப்படம்,  ‘விராட பருவம்’ . ஒரு கூத்துக் கலைஞனின் (சாய் சந்த்) மகள் வெண்ணிலா (சாய் பல்லவி). அப்பாவின் அன்பு மட்டுமல்ல, அவரது  பாடல்களும்கூட  அவளை வளர்த்தன.  சமூக அக்கறை கொண்ட கவிதைகளை எழுதிய ‘ஆரண்யன்’ மீது அவளுக்கு  ஈர்ப்பு. அப்பாவி கிராம மக்களின் மீது  அராஜகத்  தாக்குதலை ஏவிய காவலர்களைத் துவம்சம் செய்த ரவி தோழர்தான் (ரானா டகுபதி) ஆரண்யன் என்று அறிந்ததில், ஈர்ப்பு காதலாகக் கனிந்தது. அவளுக்கு அப்பாவும் அம்மாவும் (ஈஸ்வரி ராவ்) மணமுடிக்க முயற்சித்தபோது, அந்த உறவுக்கார மாப்பிள்ளையை (ராகுல் ராமகிருஷ்ணா) மறுதலித்து, வீட்டை விட்டு வெளியேறி,  ரவி குறித்த வெண்ணிலாவின் தேடல் துவங்குகிறது. அந்தப் பயணத்தின் இடையே சந்திக்கும் ரவியின் தாய் (ஜரினா வஹாப்), சமூகச் செயற்பாட்டாளர் சகுந்தலா டீச்சர் (நந்திதா தாஸ்), பின்னர் தோழர் பரதக்கா (பிரியாமணி), தோழர் ரகு (நவீன் சந்திரா), காவல்துறையின் அடக்குமுறை என இவை எல்லாவற்றையும் தாண்டி, வெண்ணிலாவின் தேடல் முற்றுப் பெற்றதா, முழுமையும் பெற்றதா என்பதுதான், இப்படத்தின் மொத்தக் கதை. மக்கள் போர்க் குழுவின் ஈடுபாட்டில், செயல்பாட்டிலான உறுதி, தீவிரத் தன்மை, ராணா டகுபதியின் நடிப்பில் தத்ரூபமாகப்  பிரதிபலிக்கின்றது. அதையும் தாண்டி மிளிருகிறது, சாய் பல்லவிக்குள் ஏற்படும் காதலின் பரிணாம மாற்றமும்,  அதன் வெளிப்பாடும்! ‘ஷாம் சிங்கா ராய்’ மைத்ரேயியைத் தொடர்ந்து, ‘ விராட பருவம்’ வெண்ணிலாவும், சாய் பல்லவியின் நடிப்புத் திறமைக்கு அணி சேர்ப்பாள். துணைப் பாத்திரங்களில் இடம்பெற்ற கலைஞர்கள், கிடைத்த வாய்ப்பில் பக்குவப்பட்ட நடிப்பை வழங்கியுள்ளதன் வாயிலாக, இணைப் பாத்திரங்களாகவே நிமிர்ந்து நிற்கின்றனர். ‘அம்மாவோட வார்த்தை எனக்குப் பிடிவாதத்த கத்து கொடுத்துச்சுன்னா, அப்பாவோட பாட்டு,  வாழ்க்கைப் பாடத்த கத்துக் கொடுத்துச்சு’; ‘ஒரு சில விஷயத்துக்குக் காரணம் இருக்காது மாமா, காரியம் மட்டும்தான்’; ‘காதலோட ஆழத்தைப் புரிஞ்சுக்க முடியாதவங்க, உயிரோடு இருந்தாலும் பொணத்துக்குதான்  சமம்’; ‘ஒரு மனுஷன காதலிக்கறதுக்குக்  காரணம் வேணுமா டீச்சர்? பசி, தூக்கம், தாகம், கண்ணீர் இதெல்லாம் எப்படி உள்ளுக்குள்ள இருந்து, தானா வெளியே வருதோ, அதே மாதிரிதான் காதலும் டீச்சர்’; ‘அப்போ, காதல்ங்கறது சீர்கேடா, அப்போ ஜெனிய காதலிச்ச காரல் மார்க்ஸ், ஜியாங்க காதலிச்ச மாவோ, க்ருப்பாஸ்கய காதலிச்ச லெனின்.. அவங்களோடதும் சீர்கேடுதானா?’ (வெண்ணிலா) ‘அதிகார வர்க்கத்த கேள்வி கேட்டா போதும், தடா சட்டத்தில போடுவாங்க, அப்பாவிகள என்கவுண்டர் செய்வாங்க, தேர்தலுக்காக வாக்குறுதிகள அள்ளி வீசி அடிமை ஆக்குவாங்க… ஞாபகம் வச்சுக்கோங்க, இந்த இயற்கையோட மண்ணின் வளம் ஒங்களோடது’; ‘எழுது, எந்தப் பெண்ணுக்கு அநியாயம் நடந்தாலும், எனக்குக் கிடைத்த தண்டனைதான்  கிடைக்கும்’ (தோழர் ரவி) ‘மனித உரிமை பற்றிப்  பேசினா போதும், கொன்ன பொணம்கூடக் கிடைக்காத மாதிரி பண்ணிடறாங்க..’ (சகுந்தலா டீச்சர்) ‘நாமகூட,  மக்களுக்காகத்தான் வேலை செய்றோம். நாம வாழ்வதற்காக வேலை செய்கிறோம், அவங்க சாகறதுக்கும் துணிஞ்சு  போராடிட்டு இருக்காங்க’ (காவல்துறை அதிகாரி) -ஆங்காங்கு நறுக்குத் தெறித்தது போலான,  சிந்தனைக்குரிய வசனங்கள் ! ஆந்திரா, தெலுங்கானா, கேரளா எனப் பல மாநிலங்களில் அலைந்து திரிந்து அசத்திய, டேனி சான்சேஸ் லோபஸ், திவாகர் மணி ஆகியோரின் கண்கவர் ஒளிப்பதிவும், சுரேஷ் பொப்லியின்  கதையோட்டத்திற்கு நெருக்கமான இசையும், பட இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன. குழந்தைக்குப் பெயர் வைத்து ‘லால் சலாம்’ சொன்ன நொடியில், துப்பாக்கி ரவையால் அந்தப் பெண் போராளியின் தலை சிதறிப் போவது, மயிர்க்  கூச்செறியும் காட்சி.  பாடல்கள் அத்தனையும் பொருள் பொதிந்தவை, இனிமையானவை ! ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. முற்றிலும் மாறுபட்டதொரு பின்னணியில், சாய் பல்லவியின் அழகும் நடிப்புத் திறமையிலுமான வண்ணத் தூரிகையால், இயக்குனர் வேணு உடுகுலா வரைந்த அழுத்தமான, அழகான ஒரு காதல் ஓவியம்தான், ‘விராட பருவம்’. மதிப்பெண் : 8/10 மது ராஜேந்திரன்

ஆனந்த யாழ் மீட்டியவன்

ஆனந்த யாழ் மீட்டியவன்

நா.முத்துக்குமார் தொண்ணூறுகளின் இறுதியிலேயே வந்து விட்டாலும் இரண்டாயிரத்தின் மத்தியப் பகுதியில் இருந்து 2015 வரை உச்சத்தில் இருந்த பாடலாசிரியர். பட்டுக்கோட்டை, கண்ணதாசன் ,வாலி, வைரமுத்து, பழனி பாரதி என்று தனி ஆளாகத் திரைத்துறையில் கோலோச்சிய பாடலாசிரியர் வரிசையின் கடைசிக் கண்ணி அவர்தான். இனி தனி ஒருவருக்கு அந்த இடம் சாத்தியமில்லை. இரண்டாயிரத்துக்குப் பிறகு அப்படி ஒரு நிலையில் அவரும் இருந்ததே பெரிய விஷயம். அந்த வகையில் அவர் முக்கியமானவர். அவருடைய வெற்றி என்பது யுவன் மற்றும் ஜி.வி யின் வெற்றியும்தான். நிறைய பேர் நா.முத்துக்குமார் குறித்துப் பேசுகிறபோது, யுவனைப் பேசுகிற அளவுக்கு ஜி.வி. குறித்துப் பேசுவதில்லை. ஆனால் வெயில், கிரீடம், அங்காடித் தெரு, மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் ஆகிய ஜி.வி.யின் முக்கியமான ஆல்பங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் நா.முத்துக்குமார்தான். ‘தலைவா’விலும் சில பாடல்கள் எழுதியிருக்கிறார். இன்னும் நிறைய பாடல்கள் உண்டு (பலர் ஜி.வி.இசையமைத்த பாடல்களையும் யுவன் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றனர்). இந்த இருவரைத் தவிர பிறருக்கும் எழுதியிருக்கிறார். அவ்வளவு எளிதில் யாரும் ஊடுருவி விட முடியாத ரஹ்மானின் கோட்டைக்குள்ளேயே ஊடுருவி, ஆறு படங்களில் பாட்டு எழுதி விட்டார் (பல்லேலக்கா – சிவாஜி, வளையபட்டித் தவிலு- அழகிய மகன், ராத்திரியின் சொந்தக்காரா- பார்த்தாலே பரவசம், டாக்ஸி டாக்ஸி- சக்கரக்கட்டி, ஜோதா அக்பர், சர்வம் தாளமயம்) பட்டுக்கோட்டையின் பலம் சமூகம். கண்ணதாசன் மரபு சார்ந்த தமிழ் வாழ்வியலையும் பக்தி மரபையும் எளிமைப்படுத்தித் திரையில் தந்தவர். வைரமுத்து மரபு இலக்கியத்தை நவீன சிந்தனைகளோடு இணைத்தவர்; கூடுதலாக கிராமிய வாழ்வியலையும் நவீன வாழ்வின் பல்வேறு கூறுகளையும் திரையில் வடித்தவர். அறிவுமதி தனக்கான தனித்துவத்துடன் கூடிய கவிஞர்; அப்துல் ரகுமானின் திரையுலக பிம்பம்‌. பழநி பாரதி நவீன மெட்டுகளுக்கேற்ப, தாளங்களுக்கேற்ப கவித்துவத்துடன் கூடிய புதுமையான வரிகளைக் கண்டறிந்தவர். தாமரை காதலின் பெண் மொழியை பாடல்கள் வழி பேசியவர். வாலி இந்தக் கணக்கில் வர மாட்டார். அவர் பாத்திரத்தின் வடிவத்தைத் தானும் அடைந்து விடும் நீர் போன்றவர். அவர் பலம், பலவீனம் இரண்டுமே இதுதான். ஆனால், இயற்கை சார்ந்த ஜென் மனநிலையையும் பித்தேறிய காதலின் உளறல்களையும் தனித்துவமாக பாடல்களில் வடித்தவர் நா.முத்துக்குமார்தான். ‘மின்சாரக் கம்பியின் மீதுமைனாக்கள் கூடு கட்டும்’என்பதெல்லாம் அழகிய படிமம். ‘காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்காற்றிடம் கோபம் கிடையாது’என்று கேட்பதற்கு மரங்களோடு உறவாடுகிற மனநிலை வாய்த்திருக்க வேண்டும். ‘தாராளமா மனசிருந்தாகேரளான்னு தெரிஞ்சுக்க’என்றெழுதிய ரசனை நிறைந்த குறும்புக்காரன். ‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்னோய்க்கு தானே மருந்து’என்றார் வள்ளுவர். பிற நோய்களுக்கு மருந்து வேறிடத்தில் இருக்கும்; காதல் நோய்க்கு அதுவே மருந்து என்கிற வள்ளுவரின் சிந்தனையை‘காதல் நோய்க்கு மருந்து தந்துநோயைக் கூட்டுமே’என்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றவர். பெண்ணின் கண்களைப் பார்த்து‘உன் கண்கள்வண்டை உண்ணும் பூக்களென்பேன்’என்று சொல்வதற்கெல்லாம் எப்படிப்பட்ட ரசனை இருக்க வேண்டும்..!! ஆழமாக மட்டுமல்ல, எளிமையான வரிகளிலும் காதலைச் சொல்லி விட முடியும் அவரால்.‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லைஅவளுக்கு யாரும் இணையில்லைஅவள் அப்படி ஓன்றும் கலரில்லைஆனால் அது ஒரு குறையில்லை’என்பதுதானே சாமானியக் காதலனின் குரலாக இருக்க முடியும்..! ‘கொடுத்ததை திருப்பி நா கேட்ககடனா கொடுக்கலையேஉனக்குள்ளதானே நா இருக்கேன்உனக்கது தெரியலயேபாக்காத பாக்காதகுத்தும் பார்வையால்என்ன பார்க்காதேபோகாத தள்ளிப் போகாதேஎன்ன விட்டு விட்டுதள்ளித் தள்ளிப் போகாத’எவ்வளவு எளிமையான சொற்களில் மிகப்பெரிய உணர்வு சொல்லப்பட்டிருக்கிறது..! ‘கதைகளைப் பேசும் விழியருகேஎதை நான் பேச என்னுயிரே’என்று சொற்கள் திகைத்து நிற்கிற இடத்தையும் எல்லா கவிஞர்களையும் போலவே இவரும் அடையாளம் காட்டியிருக்கிறார். ‘பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்‌‌காற்றுவெளியில் கலந்தே இருக்கும்சாம்பல் உதிரும்.. வார்த்தை உதிருமா?பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்உயிரும் போகும்.. உருவம் போகுமா?உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்‌விரல்கள் இன்று எங்கே?தோளில் சாய்ந்து கதைகள் பேசநமது விதியில் இல்லைமுதல் கனவு கண்டிடும் முன்னரேதூக்கம் கலைந்ததே’என்றெல்லாம் எழுத, காதலின் அமானுஷ்யத்தை உணர்கிற அரூப மொழியில் உழன்றவனாக இருக்க வேண்டும். பெண் குழந்தைகள் குறித்து அவர் எழுதிய பாடல்கள் ஊரறிந்தவை. பெண் குழந்தை பற்றிய திரைப்படப் பாடல்களில் ‘அபியும் நானும்’ படத்தில் வருகிற ‘வா வா என் தேவதையே’ பாடல்தான் எனக்குக் கொஞ்சம் கூடுதலாகப் பிடிக்கும் (வைரமுத்து).ஆனால், ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலில் கவித்துவமும் கற்பனையும் நன்றாக இருக்கும்.‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடிநெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்’என்பது அழகான தொடக்கம்; சந்தேகமே இல்லை. ‘இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்பாஷைகள் எதுவும் தேவையில்லைசிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்மலையின் அழகோ தாங்கவில்லைஉந்தன் கைகள் பிடித்து போகும் வழிஅது போதவில்லை இன்னும் வேண்டுமடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்பது அழகான ஏக்கம்; அதிலும் சந்தேகமே இல்லை. ‘தூரத்து மரங்கள் பார்க்குதடிதேவதை இவளா கேக்குதடிதன்னிலை மறந்து பூக்குதடிகாற்றினில் வாசம் தூக்குதடிஅடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?உனது புன்னகை போதுமடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்ற வரிகளிலும் அதே வாசம். ‘உன் முகம் பார்த்தால் தோணுதடிவானத்து நிலவு சின்னதடிமேகத்தில் மறைந்தே பார்க்குதடிஉன்னிடம் வெளிச்சம் கேட்குதடிஅதைக் கையில் பிடித்து ஆறுதல் உரைத்துவீட்டுக்கு அனுப்பு நல்லபடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்கிற இடத்தில் டோஸ் ரொம்ப கூடி, காதல் பாடலின் மிகை வந்து விடுகிறது. சினிமா பாடலாசிரியர்களில் வைரமுத்துக்குப் பிறகு, கவிதைத் தொகுப்புகளும் நன்றாக அமைந்தது பழநி பாரதி, யுகபாரதி, முத்துக்குமாருக்கு மட்டுமே. கதை வடிவில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் எனக்குப் பிடிக்கும். இந்த நாளில் பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்குப் பதிலாக, இன்னும் சில காலம் அவர் இருந்திருக்கலாம் என்று ஆதங்கப்படத்தான் தோன்றுகிறது. மானசீகன் ஓவியங்கள்: ரம்யா ரோஷன்