பொன்னியின் செல்வன் – 23

பொன்னியின் செல்வன் – 23

வெகுநேரம் கழித்து கண்விழித்த பழுவேட்டரையர் சோழ நாட்டை எத்தகைய ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று சிந்திக்க முயன்றார்.  பெரும்பிரயாசைப்பட்டு தன்னை அந்த மண்டபக் கல்லிலிருந்து  விடுவித்துக் கொண்டவர், வெகுவாக அடிப்பட்டிருந்த போதும் தான் செய்ய வேண்டிய செயல்களை எண்ணி மனதிடத்துடன் எழுந்து நின்றார். அப்போது வானில் பிரகாசித்துக் கொண்டிருந்த தூமகேது பிரகாசித்து வானிலிருந்து பெரும் வெளிச்சத்துடன் ஒளிர்ந்து வீழ்ந்தது. துர்ச்சகுனமாக அதைக் கருதியவர்,  முதலில் நாகைக்கும், தஞ்சைக்கும் செய்தியை அனுப்பிவிட்டு ஆதித்த கரிகாலனை காப்பாற்ற தானே முயல வேண்டுமென நினைத்த அந்த வீரக்கிழவர் தன் காயங்களை பொருட்படுத்தாது வேகமாக விரைந்தார். அந்த இடம் குடந்தைக்கருகில் இருக்கிறதென்பதையும் அங்கே பக்கத்தில்தான் குடந்தை ஜோதிடர் வீடு இருக்கிறதென்பதை யோசித்து அவர் மூலம் செய்தி அனுப்பலாம் என்று குடந்தை ஜோதிடர் வீட்டுக்கு வேகமாக விரைந்தார். அப்போது வீட்டின் வாசலில் ரதங்கள் நிற்பதையும், வானதி, குந்தவையின் பேச்சு சப்தம் கேட்பதையும் உணர்ந்தவர் சீடனின் எச்சரிக்கையை தன் ஹூங்காரம் மூலம் அலட்சியம் செய்துவிட்டு உள்ளே நுழைந்தார். குந்தவை, மந்தாகினி காணாமல் போனதையும், தூமகேது மறைந்ததையும் வைத்து வருந்தி நாகையிலிருந்து வந்துகொண்டிருக்கும் அருள்மொழியை பழையாறையில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அதிகாலையிலேயே புறப்பட்டவள், வழியில் குடந்தை ஜோதிடரிடம் ஏதாவது கேட்டுச் செல்லலாமென வந்திருந்தாள். பழுவேட்டரையரின் ஹூங்காரத்தை அடையாளம் கண்டு கொண்டு ஜோதிடரிடம் ஜாடை காட்டிவிட்டு அங்கிருந்த திரைச்சீலையின் பின் இருவரும் ஒளிந்து கொண்டார்கள். ஜோதிடரிடம் பதட்டமாக பேசிய பழுவேட்டரையர், அவரது சீடனிடம் முத்திரை மோதிரத்தை தருவதாகவும், அதை எடுத்துக் கொண்டு தஞ்சை எடுத்துச் சென்று சின்னப் பழுவேட்டரையரிடம் சொல்லிபொக்கிஷ நிலவறையில் காத்திருக்கும் யமனிடமிருந்து சக்ரவர்த்தியை காக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அப்போது உள்ளிருந்து வெளிப்பட்ட குந்தவை மறைந்திருந்து அவரது பேச்சை கேட்க நேர்ந்ததற்கு மன்னிப்பு கேட்க, குந்தவையிடம் பழுவேட்டரையரும் நந்தினியின் போதனைகளால் இத்தனை நாள் தான் நடந்து கொண்டற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு உடனே தஞ்சைக்கு திரும்பி சக்ரவர்த்தியை காப்பாற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.  மேலும் தான் கடம்பூர் திரும்பி தன் கையாலேயே நந்தினிக்கு முடிவு கட்டுவதாக சூளுரைக்க, குந்தவை அவரின் தாள் பணிந்து நந்தினியை அவர் எதுவும் செய்துவிடக்கூடாது, ஏனெனில் அவள் தங்களுடைய சகோதரி என்று வேண்டினாள். திகைத்து நின்ற ப்ழுவேட்டரையருக்கு பழைய சம்பவங்கள் எல்லாம் கண்ணுக்குள் வந்து போக ஆதித்த கரிகாலனுக்கு இது தெரியுமா எனக் கேட்க, வந்தியத்தேவன் மூலமாக சொல்லி அனுப்பியிருப்பதாக குந்தவை கூறினாள். ஆதித்த கரிகாலன் அதை நம்பியிருக்கமாட்டான் எனக் கூறிய பழுவேட்டரையர் தான் இளவரசி வந்த ரதத்தை எடுத்துக் கொண்டு கடம்பூர் சென்று கரிகாலனை காப்பாற்றுவதாகவும், பொன்னியின் செல்வனையும் சக்ரவர்த்தியையும் காப்பது குந்தவையின் பொறுப்பு என்று கூறி விடை பெற்றார். சில நிமிடத்தில் ஆழ்வார்க்கடியான் வந்து கொடும்பாளூர் படைகள் தஞ்சையை முற்றுகையிட நெருங்கி கொண்டிருப்பதாக கூறினான். கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரி மாபெரும் சைன்யத்தைக் கூட்டிக் கொண்டு பழுவேட்டரையர்கள் சின்ன இளவரசரையும், சக்ரவர்த்தியை எங்கேயோ சிறைவைத்திருப்பதாக சந்தேகப் பட்டு கோட்டைப்பொறுப்பையும், தனாதிகாரி பொறுப்பையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் நிபந்தனை வகுத்துள்ளதாக கூறினான். மேலும் அருள்மொழி வர்மருக்கு வானதியை திருமணம் செய்து, அடுத்த பட்டத்துக்கு உரியவராக அவருக்கே  பட்டாபிஷேகம் நடத்துமாறும் இதற்கெல்லாம் சம்மதிக்காவிட்டால் தஞ்சைக் கோட்டையை மூன்று நாட்களுக்குள் தரைமட்டமாக்கிவிடுவேன் எனவும் செய்தி அனுப்பியிருப்பதாக கூறினான். ஆழ்வார்க்கடியானின் செய்தியைக் கண்டு குந்தவை சகோதர யுத்தம் மூண்டு விடப் போகிறதே எனக் கலங்க, வானதி தன் பெயரை இந்த கலகத்தில் இழுத்து வைத்து தன் பெரிய தகப்பனார் பேசுவதில் விருப்பமில்லை என புலம்பினாள். நேரே சென்றாவது தன் பெரிய தகப்பனாரிடம் இதை வலியுறுத்தப் போவதாக வானதி சொல்ல, அப்போது உள்ளே நுழைந்த பூங்குழலி இடக்காக, சோழ சிங்காதனத்தில் பட்டத்தரசியாக அமர யாருக்குதான் ஆசை இல்லை என்பது போல் பேச வானதி சினந்தாள். இருவரையும் அமைதி படுத்திய குந்தவை, பூங்குழலி அங்கு எப்படி வந்தாள் என விசாரிக்க, தன் அத்தை பொக்கிஷ நிலவறையில் ஒளிந்து கொண்டு சக்கரவர்த்தியைக் கொல்ல ஆயுதத்துடன் மறைந்து இருக்கும் கொலைகாரன் ஒருவனைப் பின்தொடர்வதாகவும், அவனிடமிருந்து சக்கரவர்த்தியை காப்பாற்ற முயல்வதாகவும், பொன்னியின் செல்வனுக்கு ஏதோ ஆபத்து இருப்பதாக அவர் உணர்ந்து அதனால் பொன்னியின் செல்வரைக் காப்பாற்ற தன்னை அனுப்பியதாகவும் கூறினாள். மேலும் மற்றவர்கள் போல் தனக்கு அரண்மனை வாழ்வு பிடிப்பதில்லை எனவும் வானதியை இடித்துரைத்தவாறே கூறினாள். வானதி மேலும் சினந்து ஒருவேளை பொன்னியின் செல்வரை மணக்கும் நற்பேறு தனக்குக் கிடைத்தால் கூட சிங்காதனத்தில் தான் உட்காரப் போவதில்லை என ஆவேசமாக சபதமிட்டாள். அனைவரும் திகைக்க, பூங்குழலி, சிரிப்பும் அழுகையுமாய் பாட வேறு தொடங்கினாள். பைத்தியங்கள் போல் இரு பெண்களும் நடந்து கொள்வதைக் கண்ட குந்தவை, ஆழ்வார்க்கடியானை வினவ, அவன் இளவரசியின் ரதத்தில் இணைந்திருந்த படகைப் பெற்றுச் செல்லவே இங்கு வந்ததாகவும், பழுவேட்டரையர் அதையும் எடுத்துச் சென்றுவிட்டதால் என்ன செய்வதென புரியவில்லை எனவும் கூறினான். ஜோதிடரின் சீடனை வேறொரு படகைச் சம்பாதித்துக் கொண்டுவர அனுப்பியிருப்பதாகவும், அதில் குந்தவையும் வானதியும் அரண்மனைக்குச் சென்று சக்ரவர்த்தியை ஆபத்திலிருந்து காப்பாற்றுமாறு கூறினான். வானதி அதை அடியோடு மறுத்து தான் பொன்னியின் செல்வனிடம் செல்லப் போவதாக கூறினாள். அதற்குள் அரசலாறு உடைந்து வெள்ளம் வருவதாக ஜோசியர் கூறி படபடப்புடன் அம்மன் கோவிலின் கூரை மீது ஏறிக் கொள்ளச் சொல்ல அனைவரும் ஓடினர். பூங்குழலி விரைவாக மேலே ஏறி குந்தவைக்கு கைகொடுத்து ஏற்றிவிட்டாள். பின்னால் வந்த வானதி பூங்குழலியின் கையை பற்ற விரும்பாமல் தண்ணீருக்குள் வீழ்ந்தாள். நீரின் போக்கில் சென்று ஜோதிடர் குடிசையின் கூரை மீது ஏறிக்கொள்ள அனைவரும் நிம்மதியுற்றனர். ஆனால் அவ்வீட்டின் சுவர்கள் வெள்ளத்தினால் கரைய கூரை மட்டும் மிதந்து வெள்ளத்தினூடே சென்றது. வானதி அங்கிருந்து ‘ தான் மிதந்து பொன்னியின் செல்வரை சந்திக்கப் போவதாக பூங்குழலிக்கு கேட்குமாறு கத்திக் கொண்டே மிதந்து போய்க் கொண்டிருந்தாள். குந்தவை வானதியைக் குறித்து பெரிதும் கலங்க, சீடனின் படகு மெதுவாக வந்து கொண்டிருந்தது. வானதி இருந்த கூரையோ  வெகுவாக அவர்களை விட்டு விலகிப் போய்க்கொண்டிருந்தது. படகு இவர்கள் அருகே வந்து ஏற்றிக்கொண்டு வானதியை நோக்கி செல்வதற்குள் வானதி வெகுதூரம் அடித்துச் செல்லப்படுவாள். இதையெல்லாம் நினைத்து குந்தவை கவலைப்பட்டாள். பூங்குழலி தன் அஜாக்கிரதையால்தான் வானதி கீழே விழ நேர்ந்தது என்றும், தான் எப்படியாவது அவரைக் காப்பாற்றிக் கூட்டி வருவதாகவும் குந்தவையிடம் உறுதி கூறிவிட்டு வெள்ளத்தில் குதித்து படகை நோக்கி வேகமாக நீந்திச் சென்றாள். இந்த வெள்ளம் இப்படியிருக்க மக்கள் வெள்ளம் சூழ, பொன்னியின் செல்வர் திருவாரூருக்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து மக்களால் தன் பிரயாணம் ஆங்காங்கே தடை படுவதும், நதிகளில் மழைவெள்ளம் அதிகரித்து வருவதால் திருவாரூரிலேயே தங்கிச் செல்லுமாறு ஊர்மக்கள் சொன்ன அறிவுரைகளும் அவரை வெகுவாக சங்கடப் படுத்தின. யானை மூலமாகத் தான் தனியே கிளம்புவதுதான் உசிதம் என முடிவு கட்டி யானைப்பாகனை அழைத்துவரச் சொன்னபோது, முருகைய்யன் இளவரசரைப் பார்ப்பதற்கு அழுதுகொண்டே வந்து சேர்ந்தான். தான் இங்கு வந்த பொழுது, அவன் மனைவி ராக்கம்மாள் யானைப்பாகனை மயானத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்து பின் தொடர்ந்து போனபொழுது, மந்திரவாதி போன்ற ஒருவன், ‘நாளைக் காலை இளவரசர் ஏறும் யானைக்கும் மதம் பிடிக்கப் போகிறது. நீ தப்பி ஓடி விடு’ என்று யானைப்பாகனிடம் கூறியதைப் பார்த்ததாக வந்து கூறினான். இளவரசர் அன்றுவரை நடந்ததை நினைத்துப் பார்த்த பின் தனக்குள் ஒரு முடிவு செய்து கொண்டு அன்றிரவு உறங்கினார். அதிகாலையிலேயெ எழுந்து பிரயாணத்துக்கு தயாராக, யானைப்பாகனை  பலமுறை அழைத்தபின் முகமெல்லாம் மாறிப்போனவனாக யானைப்பாகன் வந்து சேர்ந்தான். அவன் மேலே ஏறி உட்கார முயல யானை அவனை துதிக்கையால் தூக்கி எறிந்தது. ஜனங்கள் நாலாபக்கமும் யானைக்கு மதம் பிடித்து விட்டது என பயந்து சிதறி ஓடினர். அந்த கலவரத்தை சரியாகப் பயன் படுத்திக் கொண்ட இளவரசர் சடுதியில் முருகைய்யன் காதோடு ஏதோ சொல்லிவிட்டு யானையின் மேலேறி அம்பாரியை தள்ளிவிட்டு விட்டு அதன் காதில் ஆணையிட யானை வெகுவேகமாக அங்கிருந்து ஓட தொடங்கியது. யானைக்கு மதம் பிடிக்கவில்லை, வந்த போலி யானைப்பாகனின் தீய நோக்கத்தால்தான் யானை அவனை தூக்கி எறிந்தது என்பதைப் புரிந்து கொண்ட இளவரசர் சரியாக அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டார். இளவரசர் சொன்னதைப் புரிந்து கொண்ட முருகைய்யன் தூக்கிவீசப்பட்ட யானைப்பாகனிடம் போக அவன் தான் யானைப்பாகனில்லை என்று நடித்தான். நேற்றிரவு மந்திரவாதியாக நடித்தது நீதானே என்று கேட்கவும் போலி யானைப்பாகனாக வந்திருந்த பாண்டிய ஆபத்துதவி ரேவதாஸ கிரமவித்தன் அங்கிருந்து ஓடிவிட்டான். வீசியெறிந்த அங்குசத்தை எடுத்துக்கொண்டு ஊரில் ஒரு வீட்டில் கட்டி வைக்கப் பட்டிருந்த உண்மையான யானைப்பாகனை விடுவித்தான். மயானத்தில் யானைக்கு மதம்பிடிக்காமலிருக்க சில மருந்துகளைத் தருவதாகக் கூறி தன்னை இந்த வீட்டில் கட்டிவைத்து விட்டதாக யானைப்பாகன் அழுதான். இளவரசரின் நலம் குறித்து விசாரித்த அவனை ஊர்மக்களிடம் முருகைய்யன் கூட்டிச் செல்ல, அனைவரும் உண்மை அறிந்து தஞ்சைச் சாலையில் சிலரும் மந்திரவாதியைத் தேடிக்கொண்டு சிலரும் ஆவேசத்துடன் புறப்பட்டனர். நதி வெள்ளத்தில் வானதி சென்று கொண்டிருந்த கூரை ஆங்காங்கே வேகமாகவும் மெதுவாகவும் சென்றது. பயமாக இருந்த போதும் இளவரசரிடம் தன்னைக் கொண்டுபோகிறது என்ற நம்பிக்கையில் சென்று கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் ஒரு நதியின் கரை தெரியவும், அது திருவல்லம் தலம் என்பதும் மழவரையர் மகளான செம்பியன் மாதேவி அங்கு திருப்பணி செய்திருந்ததும் அவள் ஞாபகத்துக்கு வந்தன. அங்கு முன்பு ஒருநாள் தங்கியிருந்த பொழுது மரத்திலிருந்த பறவைக்குஞ்சுகள் கீழே விழுந்து விடாமல் தான் பதட்டமுற்றதும், அவற்றைக் காப்பாற்ற பெயர் தெரியாத ஒரு இளைஞன் யானையின் மீது அமர்ந்து வந்து காப்பாற்றியதும் நினைவுக்கு வந்தது. யாரென்றே தெரியாமல் அந்த இளைஞனை ‘யானைப்பாகா’ என்று மிரட்டியதும் பின் இலங்கைக்கு பொன்னியின் செல்வன் கிளம்புகையில் அந்த யானைப்பாகன்தான் அவர் என்று தெரிந்தவுடன் தான் மயங்கிவிழுந்ததையும் எண்ணிக் கொண்டு சிலிர்ப்படைந்தாள். தன்னை பட்டத்தரசியாக்கும் பொருட்டு தன் பெரிய தகப்பனார் இளவரசரின் கழுத்தில் தன்னைக் கட்டுவதில் தனக்கு விருப்பமில்லை எனவும் ஒரு யானைப்பாகனாக அவர் இருந்தாலும் அவரையே 

பொன்னியின் செல்வன். 20

பொன்னியின் செல்வன். 20

நான்காம் பாகம் தொடர்ச்சி.. நாகப்பட்டினத்திலிருந்து பூங்குழலியும் சேந்தன் அமுதனும் கோடியக்கரைக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். தன் அத்தைக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்காகவும் பொன்னியின் செல்வன் மீதான தன் அன்பிற்கு ஏற்பட்டிருக்கும் தடைகளாலும் பூங்குழலி அரச குடும்பத்தினர் மீது பெருங்கோபம் கொண்டிருந்தாள்.சேந்தன் அமுதன் அவளை மணக்கும் ஆசையை வெளியிட்டதற்கும் சரியாக பதில் கூறவில்லை. அப்போது ஊமைராணி மந்தாகினி எதிர்ப்பட்டாள்.. சேந்தன் அமுதனைக் கண்டு சிறிது கலவரப்பட்டாலும் பூங்குழலி எடுத்துச் சொன்னவுடன் ஊமைராணி அவர்களிடம் நெருங்கி வந்தாள். பின், சேந்தன் அமுதனை அழைத்துக் கொண்டு, வீட்டுக்கு சென்று ஊமைராணிக்கு உணவெடுத்துக் கொண்டு வரலாம் என்று கிளம்பினாள். வழி நடுவில் அண்ணி ராக்கம்மாளும் இன்னொரு ஆணும் புதர் மறைவில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தார்கள். பூங்குழலியைப் பார்த்ததும் ராக்கம்மாள் மட்டும் வெளிப்பட்டு ஊமை ராணி பற்றி அறிந்து கொள்ள கேள்விகளால் துளைத்ததற்குச் சமாளித்துப் பூங்குழலி பதில் கூறினாள். பிறகு சேந்தன் அமுதனைத் தஞ்சைக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தாள். உணவெடுத்துக் கொண்டு கிளம்புகையில், அவள் தந்தை தியாகவிடங்கர், தன்னை அரசாங்க காரியங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியது மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. ஊமை ராணி மந்தாகினியுடன் படகில் செல்லும்போது திடீரென சிலர் வந்து பூங்குழலியை கட்டிப் போட்டுவிட்டு ஊமைராணியை பலவந்தமாகக் கூட்டிச் சென்றனர். கடத்தியவர்களில் தலைவனாக இருந்தவன் முன்பு வந்தியத் தேவனுடன் வந்திருந்த பழையாறை வைத்தியர் மகனாகிய பினாகபாணி. சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சேந்தன் அமுதன் பூங்குழலியை அவிழ்த்து விட்டுவிட்டு தான் அங்கு திரும்பி வந்த கதையைக் கூறினான். அவளின் அண்ணியை கட்டிப் போட்டு இருந்ததைப் தஞ்சை செல்லும் வழியில் பார்த்ததாகக் கூறி, சந்தேகப்பட்டு பின் தொடர்ந்து வந்ததாகவும், ஊமைராணியைத் தஞ்சை செல்லும் வழியில் காவலர்கள் அழைத்துச் செல்வதாகவும் கூறினான். இருவரும் தஞ்சை போகும் சாலையில் ஊமைராணியைத் தேடிச் சென்றனர்.மன்னரின் முன்னிலையில் தன் அத்தைக்கு நியாயம் கேட்கப் போவதாக பூங்குழலி புலம்பிக் கொண்டே வந்தாள். இருட்டும் நேரத்தில் தஞ்சைக்கு அருகே மழைவரத் தொடங்கியதும் இருவரும் ஒரு மண்டபத்தில் ஒதுங்கினர். அருகே மரம் ஒன்று விழுந்து கிடந்தது. பல்லக்கு ஒன்று மண்டபத்தின் முன்பு இறக்கி வைக்கப் பட்டிருந்ததையும். அந்தப் பல்லக்குத் தூக்கி வந்தவர்கள் மேல்தான் மரம் விழுந்திருக்கிறது என்றும் அதனால் பல்லக்கு தூக்கி வந்தவர்கள் கூட்டத்தில் குழப்பம் நிலவியதையும் தூர இருந்தே மின்னல் வெளிச்சத்தில் பார்த்தனர். அங்கிருந்து பல்லக்கை இவர்கள் இருந்த இட த்திற்கே கொண்டு வந்து இறக்கி வைத்தனர். சிறிது நேரம் கழித்து பல்லக்கிலிருந்து ஊமைராணி இறங்கி பூங்குழலியை தனியாக அழைத்து ஏதோ ஊமைபாஷையில் பேசினாள். அந்த இருட்டிலும் அதைப் புரிந்து கொண்ட பூங்குழலி சேந்தன் அமுதனை அழைத்து ஊமைராணி அவளுக்கு பதிலாக பல்லக்கில் தன்னைப் போகச் சொன்னதாகவும், சேந்தன் அமுதன் வீட்டுக்கு ஊமைராணியைக் கூட்டிப் போகச் சொல்லிவிட்டதாகவும் சமிக்ஞையில் சொன்னதாகக் கூறினாள். பயந்து போன சேந்தன் அமுதனை, ஊமைராணியின் ஏற்பாடு சரியாகத்தான் இருக்கும் என்றும் சமாதானப் படுத்திவிட்டு பல்லக்கில் ஏறி அமர்ந்தாள். இந்த நாடகத்தை எல்லாம் இன்னொரு நபரும் மண்டபத்து இருள் மூலையில் இருந்து பார்த்து கொண்டிருந்தது இவர்களுக்கு தெரியாது. ஆழ்வார்க்கடியான் முதன்மந்திரியை மறுநாள் காலையில் சந்தித்து அவரின் கட்டளைப்படி ஆதித்த கரிகாலனை சந்தித்தும் அவனது கடம்பூர் பயணத்தை தடுக்க முடியவில்லை என்பதைத் தெரிவித்தான். அப்போது முதன் மந்திரி, திருமலையால் முடியாது என்று கைவிட்ட காரியமான ஊமைராணியை வைத்தியர் மகன் மூலம் தான் கொண்டு வந்து அந்தப்புரத்தில் தங்க வைத்திருப்பதாகக் கூறி தன்னுடன் வந்து அவருடன் பேச உதவுமாறு ஆழ்வார்க்கடியானைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்தப்புரத்தில் ஊமைராணிக்கு பதிலாக பூங்குழலியைக் கண்டு அதிர்ந்தவர், பூங்குழலியின் துடுக்குப் பேச்சால் கோபமுற்றார். ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதனுடன் ஊமைராணி சென்றதை மண்டபத்தில் தான் மறைந்திருந்து பார்த்ததாகவும், பழுவூர் ஆட்களின் பல்லக்கு என்பதால் தான் தடுக்க முயலாமல் அமைதியாக இருந்து விட்டதாகவும் கூறினான். சேந்தன் அமுதன் குடிசையில்தான் மந்தாகினி இருப்பார் என்றும் திருமலை கூறினான். அப்போது குந்தவையும், வானதியும் வந்தனர். பூங்குழலியைக் கண்டு குந்தவை வெகுவாக ஆச்சரியப்பட்டாள். அநிருத்தர் நடந்ததைக் கூற, ஊமைராணி தஞ்சைக்கு வந்துவிட்டதை அறிந்த குந்தவை உடனே இங்கு அவளைக் கூட்டி வருமாறு பரபரப்புற்றாள். அப்போது ஆழ்வார்க்கடியான் பூங்குழலியால் மட்டுமே அது இயலும் எனச் சொல்ல, ஆழ்வார்க்கடியானையும் பூங்குழலியையும் மந்தாகினியை கூட்டிவர அனுப்பினார் அநிருத்தர். வானதியை தனியே அனுப்பிவிட்டு குந்தவை முதன்மந்திரியிடம் தன் தகப்பனாரைப் பற்றிச் சொல்லி வருந்தினாள். தன் பெரியன்னையைப் பற்றிய உண்மையை தன்னிடம் சொல்லிவிட்டு, அவள் இறந்து விட்டதாக எண்ணி அவர் துயருறுவதைக் கூறி குந்தவை அழுதாள். இதைக் கேட்டு வேதனையுற்ற அநிருத்தர், தன் மீதே குற்றமென்றும், தாம்தான் ஊமைராணியாகிய மந்தாகினி தேவி இறந்து போனார் என்று அரசரிடம் பொய் சொன்னேன் என்றும் கூறி வருந்தினார். மேலும், செம்பியன் மாதேவியின் பாதுகாப்பில், மந்தாகினி சிலநாட்கள் இருந்தபோது அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததையும் கூறினார். பேச்சுவாக்கில் அருள்மொழி உயிரோடு இருக்கும் விஷயத்தை குந்தவை சொல்லிவிட அது அனைவருக்கும் தெரியாமல் இருப்பதே நல்லது என்றும் அநிருத்தர் கூறினார்.குந்தவை மதுராந்தகனுக்கு பட்டம் சூட்ட தந்தை விரும்புகிறார் என்பதையும், தனக்கும் அதில் ஆட்சேபணை இல்லை என்பதையும் கூற,செம்பியன் மாதேவி அதற்கு பெரும் தடையாக இருப்பார் என முதன் மந்திரி கூறினார். ஆழ்வார்க்கடியானும் பூங்குழலியும் ஊமைராணியை கூட்டிக்கொண்டு வரும் வழியில் கோட்டைக்குள் நுழைந்த போது மந்தாகினியை கூட்டத்தில் தவற விட்டு விட்டோம் என்ற செய்தியோடு திரும்பி வந்தனர். பதைபதைத்த குந்தவையிடம், கோட்டைக்குள் வந்த பிறகே காணாமல் போயிருக்கிறார் என்பதால் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டு முதன்மந்திரி கிளம்பினார். மந்தாகினி தேவி பூங்குழலியுடன் வந்து கொண்டிருந்தபொழுது, கூட்டத்தில் ரவிதாஸனைப் பார்த்துவிட்டு, அவனைப் பின்தொடர ஆரம்பித்து விட்டார்.. ரவிதாஸனுடன் சோமன்சாம்பவனும் இணைந்து பழுவூர் அரண்மனையை அடைந்தனர். அங்கிருந்த பணிப்பெண்ணிடம் ஆந்தைக் குரல் கொடுத்து வரவழைத்து இளையராணியின் உத்தரவைச் சொல்லி பொக்கிஷ நிலவறையின் சாவியைப் பெற்றுக் கொண்டு உள்நுழைந்தனர். அவர்களுக்குத் தெரியாமலேயே மந்தாகினி தேவியும் உள்ளே நுழைந்து மறைந்து நின்று கொண்டார். பணிப்பெண் கொடுத்த சோற்று மூட்டையை எடுத்துக்கொண்டு எடுத்த காரியம் நிறைவேற மூன்று நாட்கள் ஆகுமென்பதால் இங்கேயே மறைந்திருக்க வேண்டும் என பேசிக்கொண்டார்கள். தீவர்த்தி கொண்டு வந்து கொடுத்த தாதியை ஒரு நாழிகை கழித்து வந்து கதவு திறக்குமாறு ரவிதாஸன் சொல்லிவிட்டு சோமன் சாம்பவனை அழைத்துக் கொண்டு படிகள் வழியாக கீழிறங்கி நிலவறைக்கு கூட்டிச் சென்றான். போகும் வழியில் ஒரு சுவரின் மீது ஏறினால் அங்கிருந்து அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் என சோமன் சாம்பவனிடம் விவரித்தான். ரவிதாஸன் சோமன் சாம்பவனிடம் இன்று செவ்வாய். இன்னும் இரு நாட்கள்மறைந்து இருந்துவிட்டு, வெள்ளியன்றுதான், சுந்தரசோழரின் பட்டமகிஷி கோயிலுக்கு செல்லும்போது உன் காரியத்தை முடிக்க வேண்டும். சோழன் குலம் நிர்மூலமாகும் நாள் வெள்ளிக்கிழமைதான்.அதுவரை கவனமாக இரு’ என எச்சரித்து விட்டு ஒரு பாதாள அறையை திறந்து அதனுள் கூட்டிப் போனான். நடுவில் ஒரு இடத்தில் ரவிதாஸன் ஏறிப்பார்த்த இடத்தில் ஊமைராணி ஏறிப்பார்த்தார்.அப்போது பாதாளத் துளையில் இறங்கிய ரவிதாஸனும் சோமன் சாம்பவனும் எதிர்பக்கத்தில் ஒரு மூலையில் வந்து நின்றிருப்பது தெரிந்தது. பின்னர் அவர்கள் இருவரும் திரும்பி வந்த போது மறைந்து கொண்டார். ரவிதாஸன் அங்கிருந்து சென்றதும் சோமன் சாம்பவன் திரும்பி வந்து அமர்ந்து கொண்டான். இருட்டும்போது தனியே இருப்பதால் லேசாய் பயந்திருந்தவன் மந்தாகினி ஓ’ வென எழுப்பிய ஓலத்தைக் கண்டு மேலும் பயந்து எதிர்திசையில் ஓடினான். அந்தத் தருணத்தில் அந்த பாதாள திறப்பில் இறங்கிய மந்தாகினி ஒரு சிற்பக் கூடத்தை அடைந்தார். அங்கே பகீரதன் சிலை, பத்துத்தலை ராவணன்சிலை போன்ற சிலைகளெல்லாம் கலையம்சத்துடன் அமைக்கப் பட்டிருந்தது. ராவணன் கைகளுக்கு இடையே இருந்த வழியின் வழியாகத் தான் வந்திருப்பது விலாசமான தோட்டம் என்று அறிந்து கொண்டாள். தோட்டத்தை ஒட்டி தாழவாரங்கள் தெரிந்தன. தாழ்வாரங்களைக் கடந்து செல்கையில் தீப ஒளி ஓரிடத்தில் தெரிய அங்கிருந்து பார்க்கையில் சுந்தரசோழரின் படுக்கையறை தெரிந்தது. எத்தனையோ காலங்களுக்கு பிறகு அவரைக் கண்டதும் மந்தாகினியின் உள்ளம் விம்மியது. முன்பு ரவிதாஸன் இங்கு நின்றுதான் சோமன் சாம்பவனிடம் திட்டத்தை விளக்கியதை நினைத்து ஒரு நிமிடம் மருண்டார். சின்னப் பழுவேட்டரையர் சற்றுமுன் முதன் மந்திரியைப் பற்றி சொல்லிப் போயிருந்த குற்றச்சாட்டுகளை சிந்தித்தவாறு படுத்திருந்தார் சுந்தர சோழர். கூடவே, வேளக்காரப் படையினருக்கும், பழுவூர் படையினருக்கும் ஏற்படும் சச்சரவுகளைப் பற்றியும் யோசித்து குழப்பமான மனநிலையிலிருந்தார்.அநிருத்தர் கோடியக்கரையிலிருந்து ஒரு பெண்ணை கடத்தி வந்ததாகவும் அதற்கு பழுவூர் அரண்மனைப் பல்லக்கை கேட்டதாகவும், குற்றங்களை அடுக்கியிருந்தார் சின்னப் பழுவேட்டரையர். தான் விசாரிப்பதாகக் கூறவும், சின்னப் பழுவேட்டரையர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். அநிருத்தர் ஆழ்வார்க்கடியானுடனும் பூங்குழலியுடனும் சக்ரவர்த்தியை சந்திக்க வந்திருந்தார்.. மந்தாகினி தேவியை நழுவ விட்டது பற்றி அநிருத்தர் பெரிதும் கலக்கமுற்றிருந்தார். அநிருத்தரைக் கண்டவுடன் சக்ரவர்த்தியின் கோபமும் குமுறலாய் வெடித்தது. அனைவரும் தன்னிடமிருந்து எல்லாவற்றையும் மறைப்பதாக மருகினார். அனைவரையும் சந்தேகப்பட்டார். அநிருத்தர் தடுத்து அத்தனை உண்மைகளையும் கூறுவதாகக் கூறினார். முதலில், அருள்மொழியைக் காப்பாற்றிய பூங்குழலியை அழைத்து உண்மையைச் சொல்லும்படி கூறினார். பூங்குழலி தியாகவிடங்கரின் மகள் என்று தெரிந்துகொண்டு அவள் பயபக்தியுடன் அருள்மொழி வர்மர் பத்திரமாக இருக்கும்செந்தியைக் கூற சந்தரச் சோழர் சிறிது அமைதியுற்றார். ஆனால் தஞ்சையில் வீசிய காற்றும் மழையும் நாகப்பட்டினத்திலும் புயலாக வீசியதாய் கேள்விப்பட்டதில் இளவரசரின் நிலை குறித்து சுந்தரச் சோழர் அச்சமும் வருத்தமும் தெரிவித்தார். அநிருத்தர் ஆழ்வார்க்கடியானையும், பூங்குழலியையும் அனுப்பி இளவரசரை வரவழைக்க அனுமதி வழங்குமாறு வேண்டினார். பிறகு ஆழ்வார்க்கடியானும் பூங்குழலியும் பாசுரங்களையும், தேவாரத்தையும் பாட சுந்தரசோழர் ஒருவாறு அமைதியுற்றார். அவரை உறங்க வைத்துவிட்டு அனைவரும் அகன்றனர். சுந்தரசோழருக்கு பூங்குழலியின் முகச் சாயல் எதைஎதையோ நினைவுபடுத்த அவருக்கு பழைய நினைவுகள் உறக்கத்தில் கனவுகளாய் வரத் தொடங்கின. உறக்கமும் விழிப்புமான நிலையில் நிஜமாகவே தன் முன் யாரோ நிற்பதாக உணர்ந்தார். கூர்ந்து பார்க்கையில் அது மந்தாகினி தேவியின் ஆவிதான், வழக்கம் போல வந்து விட்டாள் என்றெண்ணி அலறிக் கொண்டே, பக்கத்திலிருந்த விளக்கை அவர் மேல் எறிந்தார். நிஜத்தில் அங்கே நின்றிருந்த மந்தாகினி மேல் அது

பொன்னியின் செல்வன் – 19

பொன்னியின் செல்வன் – 19

நான்காம் பாகம் – மணிமகுடம் நந்தினியின் முடங்கலைக் காட்டி, கந்தன்மாறன் ஆதித்த கரிகாலனை பார்த்திபேந்திரன் தூண்டுதலோடு கடம்பூருக்கு விருந்தாளியாக அழைத்து வந்துகொண்டிருந்தான்.நந்தினியை ஒரு தடவை சந்தித்துவிடுவது அவளைப் பற்றிய பல புதிர்களுக்குப் பதில்கள் தேட உதவலாம் என்பதால் ஆதித்த கரிகாலனும் சம்மதித்து இந்தப் பயணத்திற்கு உடன்பட்டான். கெடில நதியின் துறையில் கரிகாலனின் பாட்டனாரான மிலாடுடையார் அவனைத் தனியே அழைத்து இந்தப் பயணத்தை நிறுத்த இறுதியாக ஒரு முயற்சி செய்தார். கரிகாலன் உடன்படாததால், ‘வள்ளுவர் கூற்றின்படி தொழுத கையிலும் அழுத கண்ணீரிலும் ஆயுதம் மறைந்திருக்கும். நண்பர்கள் போலச் சூழ்ந்திருக்கும் எதிரிகளிடம் மிகுந்த எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்’ என்று அறிவுரைகள் கூறிவிட்டு, தான் திருக்கோவலூர் சென்று வெண்ணாற்றங்கரைக்குப் படையுடன் திரும்பிவருவதாகச் சொல்லி வருத்தமுடன் விடைபெற்றார். வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் அந்த மழைக்கால கொள்ளிட நீர்ப்பெருக்கில் தங்கள் உடைமைகள் அனைத்தையும் தவறவிட்டுவிட்டார்கள். மேற்கொண்டு செல்லக் குதிரையில்லாமல் கடம்பூருக்கு அருகில் நடந்தே வந்து சேர்ந்தனர். ஆதித்த கரிகாலர் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை எனத் தெரிந்துகொண்டார்கள். கோட்டையின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஐயனார் கோவில் ஒன்றைக் கண்டதும் இரவை அங்கேயே தங்கிக் கழித்துவிடலாம் என்று கோவிலை நெருங்கினார்கள். அப்போது அங்கிருந்த மண் குதிரைகளில் ஒன்று நகர்ந்தது. அதன் பிலத்தில் இருந்து, கடம்பூர் மாளிகையின் சேவகனும் ஆபத்துதவிக் கூட்டத்தைச் சேர்ந்தவனுமான இடும்பன் காரி எழுந்து வருவதைப் பார்த்து இருவரும் ஒருபுறம் மறைந்துகொண்டனர்.அவன் கோவிலுக்குள் விளக்கேற்றி வைத்ததைப் பார்த்ததும் இங்கே யாரேனும் வருவார்கள் என ஆழ்வார்க்கடியான் கூறினான். வந்தியத்தேவன் வழக்கம்போல ஆர்வம் உந்த, அந்தப் பிலத் துவாரத்தில் இறங்கிப் பார்ப்பதாகக் கூறி அந்தத் துவாரத்துக்குள் சட்டெனப் புகுந்துவிட்டான். புகுந்த சற்று நேரத்தில் அந்தச் சுரங்க வழியை வெளியிலிருந்து இடும்பன் அடைத்துவிடவே சுரங்க வழி இருள் வழியாக மாறிவிட்டது. வெகுதூரம் சென்றபிறகு அந்த வழி சம்புவரையரின் அரண்மனையில் உள்ள ஒரு மண்டபத்தில் முடிந்தது. சுற்றிலும் காட்டு மிருகங்களின் பாடம் செய்யப்பட்ட உருவங்கள் அந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு வல்லவரையன் முதலில் மிரண்டாலும் அது வேட்டை மிருகங்களின் பாடம் செய்யப்பட்ட உருவங்களையும் ஆயுதங்களையும் சேர்த்து வைக்கும் மண்டபம் என்பதை அறிந்துகொண்டான். அங்கிருந்த யானை உருவம் ஒன்றின் தந்தத்தைத் தன்போக்கில் திருகியதும் சுவரில் ஒரு துவாரம் தெரிந்தது. அதில் எட்டிப்பார்க்க, ஒரு அழகிய பெண்ணின் முகத்தோடு முத்தமிடுவது போன்ற தோற்றத்தில் தன் முகமும் தெரிய, வந்தியத்தேவன் அதிர்ந்து போய்ச் சிலையாய் நின்றான். அந்தப் பெண் சிறிதாய் ‘கூ’வெனக் கூவினாள். இவன் பயந்து யானை மீதிருந்து கையை எடுக்க, துவாரம் பழையபடி மூடிக்கொண்டது. கந்தன்மாறனின் தங்கையான மணிமேகலைதான் அந்தப் பெண் என்று வந்தியத் தேவனுக்குத் தெரிந்துவிட்டது. மணிமேகலை கள்ளம் கபடு தெரியாமல் வளர்ந்த பெண். வந்தியத்தேவனைப் பற்றி அவளிடம் பெரிதாகப் பேசி அவன் மீது ஆசையை வளர்த்துவிட்டவன் கந்தமாறனே. பிறகு அவனே அரசியல் அழுத்தங்களில் சிக்கி வந்தியத்தேவன் நாடோடி என்றும் தன்னை முதுகில் குத்திய துரோகி என்றும் கூறி அவனை மறந்துவிடுமாறு கூறி வந்தான். பின்பு மதுராந்தகருக்கு அவளை மணம் செய்து வைப்பதாகப் பேசினார்கள். இப்போதோ விருந்தாளியாக வரப்போகும் இளவரசர் ஆதித்த கரிகாலனுக்கு மணிமேகலையை மணமுடிக்கப் போவதாக கூறத் தொடங்கினார்கள் இந்தப் பேச்சுகளெல்லாம் முன்பொருமுறை கந்தன் மாறன் அந்தப்புரத்திற்கு அழைத்துவந்து அறிமுகப்படுத்திய வாலிபனின் உருவத்தைத் தன் நெஞ்சில் பதிந்து வைத்துக்கொண்ட மணிமேகலைக்குப் பிடிக்கவில்லை. அவள் இந்தத் திட்டங்களை மறுத்து வந்தாள். பழுவேட்டரையரும் இளையராணியும் வரப்போவதாகவும் சிற்றரசர்கள் அனைவரும் சேர்ந்து, வரவிருக்கும் ஆதித்த கரிகாலனிடம் சமரசப் பேச்சு நடத்தப் போவதாகவும் அரண்மனையில் பேசிக்கொண்டார்கள். நந்தினி தங்குவதற்காக வேட்டை மண்டபத்தை அடுத்த அறையைத் தயார் செய்துகொண்டிருந்தபோதுதான் யானைமுகக் கதவைத் திறந்துகொண்டு அந்த அறைக்குள் தலைகாட்டிய வந்தியத் தேவனின் முகத்தை ஆடியில் பிம்பமாகத் தெரிந்த தன் முகத்தை முத்தமிடுவது போலான நெருக்கத்தில் பார்த்துக் கூவிவிட்டாள் மணிமேகலை. உடனே அந்த முகமும் மறைந்துபோய்விட்டது. தொடர்ந்து வேட்டை மண்டபத்தில் சந்தடிகள் கேட்டன. தன் தோழி சந்திரமதியை அழைத்து விளக்கு எடுத்துவருமாறு மணிமேகலை பணித்துவிட்டு உள்ளே நுழைய முயன்றாள். வந்தியத்தேவன் வேட்டை மண்டபத்தில் இருந்து வெளிவர யோசித்துக்கொண்டிருக்கும் போது, இடும்பன் காரி ஒரு முதலையை வைத்து மூடியிருந்த ரகசிய வழியைத் திறந்துகொண்டு மேலே வருவதைப் பார்த்தான். உடனே வந்தியத்தேவன் ஒரு குரங்கின் பின் ஒளிந்துகொண்டான். மணிமேகலை உள்ளே வருவதைப் பார்த்தவுடன் இடும்பன் காரி விலங்குகளைத் துடைப்பதுபோல நடித்தான். மணிமேகலை விசாரித்ததற்கு, தான் இங்கு வெகுநேரமாக இருப்பதாக இடும்பன்காரி கூற மணிமேகலை கதவைத் திறந்தபடி வெளியே சென்றுவிட்டாள். அப்போது இடும்பன்காரியைத் தொடர்ந்து பின்னே வருபவர்களின் பேச்சுச் சத்தமும் கேட்க, வந்தியத்தேவன் அந்தக் குரங்கு பொம்மையை இடும்பன்காரியின் மேல் தள்ளி அந்தத் துவாரத்தில் விழுமாறு செய்துவிட்டு யானையின் தந்தத்தைத் திருகி அந்தச் சிறிய துவாரத்தின் வழியே வெளியேற முயன்றான். இடுப்பு வரை வந்தாலும் பாதிக்குமேல் வெளியே போக முடியாமல் தவித்தவனுக்கு மணிமேகலை கை கொடுத்து அறைக்குள் இறக்கிவிட்டாள். வந்தியத்தேவனிடம், ‘தன்னை முதுகில் குத்திய சிநேகத் துரோகி’ என்ற கந்தமாறனின் குற்றச்சாட்டை மணிமேகலை விசாரித்தாள். வந்தியத்தேவன் அதை மறுத்து, கந்தமாறனின் முன்னிலையில் இதைக் கேட்குமாறு கூறினான். கந்தமாறன் ஆதித்த கரிகாலனை அழைத்துவரப் போயிருப்பதாகவும் அவர்கள் வரும்வரை ஆயுத சாலையில் மறைந்திருக்குமாறும் மணிமேகலை கூறினாள். இதற்குள் வேட்டை மண்டபத்தில் நடமாட்டம் அதிகமாகக் கேட்க, அங்கிருந்த வாத்தியக் கருவிகள் வைத்திருக்கும் யாழ் களஞ்சியத்தில் மறைந்திருக்குமாறு சொல்லிவிட்டு மணிமேகலை வேட்டை மண்டபத்துக்குள் சென்றாள். அதற்குள் மணிமேகலையின் தோழி அறைக்குள் வந்து விடவே, வந்தியத்தேவன் யாழ் களஞ்சியப் படிகளில் ஏறத்தொடங்கினான். முடிவில் மேன்மாடத்திற்கு வந்துவிட்டான். முந்தைய முறை வந்தியத்தேவன் வந்தபோது, தான் படுத்திருந்த மேல் மச்சு அதுதான் என்று அறிந்துகொண்டு நிம்மதி அடைந்தான். அங்கிருந்த நிலா மாடத்திலிருந்து பார்க்கையில் கடம்பூர் அரண்மனை வாசலில் பெரிய பழுவேட்டரையரை ராஜோபசாரத்துடன் வரவேற்பது தெரிந்தது. மதிலைத் தாண்டிவிடுவோம் என்றெண்ணி ஒரு மூங்கில் கழியைப் பிடித்து ஏறி கோட்டை மதிலை விட்டு இறங்கியபோது தேவராளன் தன் நாயுடன் அவனைத் தாக்கத் தயாராய் இருக்க, வந்தியத்தேவன் அவன் மீதே குதிக்க, ஆழ்வார்க்கடியானும் உதவிக்கு வர, இருவரும் சேர்ந்து நாயையும் அவனையும் காட்டுக் கொடிகளால் கட்டிப்போட்டனர். மதிலின் ஓரமாகவே இருவரும் வெளியேறினார்கள். அச்சமயம் அங்கு வந்த கடம்பூர் வீரர்களின் குதிரைகளைப் பறித்துக்கொண்டு விரைந்தனர். ஆதித்த கரிகாலர் கோட்டையை நெருங்குவதற்கு முன்னமே அந்த வழியில் சென்று அவரைச் சந்தித்தார்கள். ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனைக் கண்டதும் மகிழ்ந்ததைக் கண்டு பார்த்திபேந்திரனும் கந்தமாறனும் அசூயை அடைந்தார்கள். கந்தமாறன் தன் முதுகில் குத்தியவன் எனக் குற்றம் சாட்ட, வந்தியத்தேவன் தானே அவனைக் காப்பாற்றியதாகவும் அவன் முதலில் எதற்காக பொக்கிஷ அறைச் சுரங்கத்தின் வழியே வந்தான் எனவும் யாரைக்கூட்டி வந்தான் என்பதையும் சொல்லுமாறு கேட்க கந்தமாறன் மெளனம் சாதித்தான். உடனே பார்த்திபேந்திரன், வந்தியத்தேவனுக்காகத்தான் இளவரசர் அருள்மொழி கடலில் குதித்ததாகவும் இப்பொழுது இவன் மட்டும் தப்பி வந்தது எப்படி என்று கேட்குமாறு குற்றஞ்சாட்டினான். வந்தியத்தேவன் அவனை முந்திக்கொண்டு, பார்த்திபேந்திரன் எப்படித் தனியாகக் கடலில் குதிக்க இளவரசரை அனுமதிக்கலாம் என்று திருப்பிக் கேட்க, ஆதித்த கரிகாலர் பெரிதாகச் சிரித்தார். ஒரு தருணத்தில் தன் கையிலிருந்த வேலால் கந்தமாறன் வந்தியத்தேவனைத் தாக்க முயல அந்த வேலைக் கரிகாலர் பிடுங்கித் தன் இரும்பையொத்த கரங்களால் முறித்துப் போட்டார். வியப்பாகப் பார்த்த அனைவரிடமும், தன் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளக் காரணம் இளையராணியின் மோகன சக்திதான் எனவும் தனக்கு அதைப் பற்றித் தெரியும் என்பதால் இத்துடன் இந்தப் பேச்சை நிறுத்துமாறும் கூறினார். ஆழ்வார்க்கடியானை முன்பே பார்த்திருப்பதாகக் கூறி விசாரிக்க, வீரபாண்டியன் இருக்கும் இடத்தைத் தேடி அலைந்துகொண்டிருந்தபோது மறைவிடத்திலிருந்து ஆதித்த கரிகாலருக்கு அந்த இடத்தைச் சொன்னது தானே எனக் கூறினான் திருமலை.ஆவேசமடைந்த ஆதித்த கரிகாலர் அவனை வெட்ட வர, வந்தியத் தேவன் குறுக்கிட்டு, அவன் முதன்மந்திரியின் தூதன் எனவும் அவருக்கு சேதி கொண்டுவந்திருப்பதாகவும் கூறினான். அமைதியடைந்த கரிகாலன் அவர்களைக் குதிரையில் தன்னுடன் இருபக்கமும் வருமாறு கூறி அவர்களுடன், நடந்த செய்திகளை எல்லாம் கேட்டவாறே பயணத்தைத் தொடர்ந்தார். பழுவூர் இளையராணியைச் சந்தித்த மணிமேகலைக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது. நந்தினியும் பாசத்தை அவள்மீது சொரிந்து, தன்னை அக்காவென அழைக்கும்படிக் கூறினாள். அவளை முழுமையாக நம்பிய மணிமேகலை அவளிடம் மனதைத் திறந்தாள். வந்தியத்தேவனே அவள் மனதில் குடிகொண்டுள்ளவன் என்பதைக் கூறினாள். மேலும் வந்தியத்தேவனை இந்த அறையில் பார்த்ததையும் இடும்பன் காரியை விசாரிக்க உள்ளே செல்கையில் அவன் காணாமல் போய்விட்டதையும் சொல்லி, தனது காதல் வெற்றி பெற அவளுக்கு உதவியாய் இருக்கவேண்டுமென நந்தினியைக் கேட்டுக்கொண்டாள். ஆதித்த கரிகாலர் தன் பரிவாரங்களுடன் வர சம்புவரையரும் பழுவேட்டரையரும் மாளிகை வாசலில் அவர்களை எதிர்கொண்டழைத்து வரவேற்றார்கள். சுற்றியுள்ள ஊர்களில் இருந்தெல்லாம் மக்களின் கூட்டம் குவிந்திருந்தது. ஆதித்த கரிகாலன் அவர்களிடம் இளவரசனாகப் பேசினான். ஆதித்த கரிகாலன் மாளிகைக்குள் வந்ததிலிருந்தே ஒருவாறு நிலையழிந்ததாகக் காணப்பட்டான். பழுவேட்டரையரையும் சம்புவரையரையும் சொற்களால் குத்திக்காட்டிப் பேசினான். அனைவரும் அவனை சமாதானப் படுத்தும் வழிதெரியாது நிற்கையில், பார்த்திபேந்திரன் தான் பார்த்துக் கொள்வதாகக் கூற, அவனையும் சதியில் கூட்டு சேர்ந்து விட்டாயா எனக்கேட்டு அதிர வைத்தான் கரிகாலன். நந்தினியைக் கண்டு வணங்கி பழுவூர் பெரிய பாட்டிக்கு வணக்கமெனச் சொல்ல, அவளின் கூரிய பார்வையைத் தாங்காமல் தாண்டிச் சென்றான். சம்புவரையரிடம் தன் தாத்தா இரவில் தூங்கினால் பகைவர்கள் சூழ்வர் என்று சொல்லி எச்சரித்து அனுப்பியிருப்பதைச் சொல்லி சிரித்தான். பழுவேட்டரையரிடம், அவர் மூடுபல்லக்கில் மதுராந்தகனைக் கூட்டி வந்ததைச் சொல்லி எள்ளி நகையாடியதைப் பார்த்தவர்கள் அனைவரும் அவனது நடவடிக்கையைக் கண்டு நடுங்கினர். அவனை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். சம்புவரையரையும், பழுவேட்டரையரையும் தன் சொற்களால் வதைத்தான். பின் சிற்றரசர்கள் கூட்டம் நடக்கப் போவதை அறிந்துகொண்டு எல்லோரிடமும் ஆலோசனை செய்து விடலாம் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

பொன்னியின் செல்வன் – 18

பொன்னியின் செல்வன் – 18

குழந்தைச் சக்கரவர்த்தியை சிம்மாசனம் போல ஒன்றில் அமரச் செய்து நந்தினி நடத்திய நாடகம் முடிந்தது.‘ஆதித்த கரிகாலனை பழி முடிக்க வேண்டுமெனில் அவனது கடம்பூர் வருகையைத் தடுக்கச் செல்லும் வந்தியத்தேவனை தடுக்க வேண்டும்..அவனை நாங்கள் பிடித்து வைத்திருக்கிறோம்’ என்று ரவிதாசன் நந்தினியிடம் சொல்லி வந்தியத் தேவனை அவள் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.நந்தினியும் அவன் தங்களோடு சேர்ந்து விடும்படி மீண்டும் கூறினாள்..வந்தியத் தேவன் மறுக்கவே ரவிதாசன் அவனை கொன்று விடலாம் என்றான்..நந்தினியோ அவனைக் கட்டிப் போட்டுவிட்டு போய் விடலாம் என்று கண்டிப்பாக கூறி விட்டாள்..அதன் படி வந்தியத் தேவனை கட்டிப் போட்டுவிட்டு நந்தினியும் அந்த கூட்டத்தாரும் போய் விட்டார்கள். அப்போது அங்கு வந்த ஆழ்வார்க்கடியான் வந்தியத் தேவனை கட்டவிழ்த்த பின்னர் அவனும் வந்தியத் தேவனும் காஞ்சிப் பயணத்தைத் தொடங்கினர்.ஆழ்வார்க்கடியான், காளாமுகர்கள் சங்கமக் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்து வருமாறு தன்னை அநிருத்தர் அனுப்பியதாகக் கூறினான்.நாட்டில் சில முக்கிய குடும்பங்கள் காளாமுகத்தை சேர்ந்திருந்தபடியால் அவர்களின் ஆதரவு மதுராந்தகனுக்கு கிடைத்தால் நல்லது என்பதற்காக, பெரிய பழுவேட்டரையர் மதுராந்தகரை அங்கு வரச் சொல்லியிருந்தார்.அவரை அங்கு போக விடாமல் தடுப்பதற்காக ஒரு வீரனைக் கொண்டு குதிரையை மிரளச் செய்து மதுராந்தகரை கீழே விழ வைத்தது அநிருத்தரின் வேலையாய்த் தான் இருக்கும் என்று ஆழ்வார்க்கடியான் கூறினான்.வானதியை காப்பாற்றவும் அநிருத்தர் தக்க ஏற்பாடு செய்திருப்பார் எனவும் ஆழ்வார்க்கடியான் வந்தியத் தேவனை சமாதானப் படுத்தி, நாம் காஞ்சியை நோக்கி செல்வோமென அறிவுரை கூறினான். ஆழ்வார்க்கடியான் சொன்னது போல்தான் நடந்தது.வானதியை கட த்தியவர்கள் அநிருத்தரிடம் கொண்டு வந்துதான் சேர்த்தார்கள்.அநிருத்தர், பொன்னியின் செல்வரைப் பற்றிய உண்மையை கூறச் சொல்லி வானதியை மிரட்டத் தொடங்கினார்.உறுதியுடனும், அச்சம் இல்லாமலும் கேள்விகளை எதிர்கொண்ட வானதி என்ன கேட்டாலும் தான் உண்மையை சொல்லப் போவதில்லை என்று மறுத்தாள். அப்போது வந்த யானையைக் காட்டி உண்மையைச் சொல்லாவிடில் இந்த யானை உன்னை தூக்கி எறிந்து விடும் என்று முதன்மந்திரி மிரட்டிய பின்னரும் வானதி சொல்லவில்லை.வானதியை தன் தும்பிக்கையால் தூக்கி தனது மேலுள்ள அம்பாரியில் விட்டது அந்த யானை.அம்பாரியில் தயாராக இருந்த குந்தவை அவளைத் தாங்கிக் கொண்டு, நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள ஆனைமங்கலத்திற்குத்தான் நாமிருவரும் செல்லப் போவதாகக் கூற வானதி சமாதானமுற்றாள். வானதியை அனுப்பிவிட்டு அநிருத்தர் திரும்பும் வழியில் மதுராந்தகர் அடிபட்டு கிடப்பதைப் பார்த்து பக்கத்திலிருக்கும் கிராமத்துக்கு எடுத்து சென்று மருத்துவ உதவி செய்தார்.மதுராந்தகரிடம் இதுவரை நடந்ததெல்லாம் தமக்குத் தெரியும் என்று முதன்மந்திரி கூறினார்..கடம்பூருக்கு இளைய ராணியின் மூடுபல்லக்கில் மதுராந்தகன் சென்றதையும் அதன் பேரிலான அதிருப்தியையும் தெரிவித்துக் கொண்ட அவர்,ராஜ்யத்தின் மீதான உரிமை மதுராந்தகருக்கு இருக்கிறது எனவும் அதை நேரில் சக்ரவர்த்தியிடமே தெரிவித்து உரிமை கோரலாம்.அதற்கு சதிக் கூட்டம் எல்லாம் தேவையே இல்லை என்றார். மதுராந்தகரின் ஆற்றாமை சினமாய் தலைக்கேறியது. ‘என்னை பற்றிய ரகசியங்கள் அறிந்தவர் நீர்தான் என எண்ண வேண்டாம். எனக்கும் தெரியும்.என் தாயாரின் வயிற்றில் இருக்கும்போதே எனக்கு எதிராக சதி செய்தவர் நீங்கள்.நான் பிறந்த பிறகும் என்னை கொன்றுவிடுவதற்கு ஏற்பாடு செய்தீர்கள்.குழந்தை பிறந்ததும் அது பெண் குழந்தையென நினைத்து கோவில் பட்டரிடம் கொடுத்து வளர்க்க ஏற்பாடு செய்தீர்கள்.ஆனால் அரைநாழிகை கழித்து நான் பிறந்தேன். என்னைக் கொல்ல நீங்கள் செய்த ஏற்பாடுகள் தவறிப் போனது.என் ஜாதக பலத்தால் நான் இதுவரை பிழைத்திருக்கிறேன். இதையெல்லாம் பொய் என்று உங்களால் முடிந்தால் மறுத்து பாருங்கள் ‘ என ஆவேசமாக முழங்கினான். அநிருத்தர் நிஜமாகவே ஸ்தம்பித்து போனது போலானார்.இளவரசருக்கு இத்தனை விவரங்கள் தெரிந்திருக்கும் போது தான் சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று கூறி அத்துடன் முடித்துக் கொண்டார். நாகப்பட்டினத்தில் சூடாமணி விஹாரத்தில் சுரத்துடன் அடைக்கலமடைந்திருந்த பொன்னியின் செல்வனுக்கு ஆச்சாரிய பிஷுவின் பக்கத்து அறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.சுர வேகம் காரணமாக பெரும்பாலும் இளவரசர் பிரக்ஞையற்றே இருந்தார்.கனவிலும் நனவிலும் திடமாக இருக்க இயலாமல் அலைக்கழிந்தார். மூன்று நாட்களுக்குப் பின் நினைவுக்கு வந்து ஆச்சார்ய பிட்ஷூவிடம் தன்னைக் கூட்டி வந்தவர்கள் யார்? எப்படி வந்தேன் என்றெல்லாம் கேட்டு அறிந்தார்.அச்சமயத்தில் பூங்குழலியும் சேந்தன் அமுதனும் இளவரசரைக் கூட்டிச் செல்ல ஓடத்தில் காத்திருப்பதாக செய்தி கிடைத்ததும்ஆச்சாரிய பிஷுவிடம் தன் நன்றியையும், அன்பையும் தெரிவித்து பின்னொரு நாளில் திரும்ப சந்திப்பதாகக் கூறி விடைப்பெற்றார். ஓடத்தில் காத்திருந்தவர்கள் மூலம் குந்தவையும், வானதியும் நந்தி மண்டபத்தில் காத்திருப்பதாக அறிந்து கொண்டார்.நந்தி மண்டபத்தில் காத்திருந்த வானதி பூங்குழலியும் ஓடத்தில் வருவதைக்கண்டு ஒதுங்க முயல குந்தவை அவளை அங்கேயே இருக்குமாறு பணித்தாள். நலம்பெற்று வந்த இளவரசரை உச்சி முகர்ந்த குந்தவையின் பாதத்தை பணிந்து எழுந்தான் பொன்னியின் செல்வன்.இருவரும் பாசத்தில் கண்ணீர் உகுத்தனர். இலங்கையில் நடந்த சம்பவங்களையும் ஊமைராணியைப் பற்றியும் தெரிந்து கொண்ட குந்தவை,பழுவூர் இளையராணி நந்தினி அவர்களின் தமக்கையாகவே இருக்க முடியும் என்பதையும்,அது பற்றி உண்மை தெரிந்தவர்கள் செம்பியன் மாதேவியும், முதன்மந்திரி அநிருத்தரும்தான்.ஆனால் இருவரும் வாயைத் திறக்கவே மாட்டார்கள் என்றும்,நந்தினியையும் ஊமைராணியும் பார்த்த ஒருவன் வந்தியத்தேவன் மட்டுமே என்றும் கூறினாள். வந்தியத்தேவனை வெகுவாகப் பாராட்டிய இளவரசரிடம் அவனை ஆதித்த கரிகாலனிடம் கடம்பூருக்கு வரவேண்டாமென தடுக்கத் தூது அனுப்பியிருப்பதாக குந்தவை கூறினாள்.சுந்தர சோழரை அரண்மனையில் நந்தினி ஆவி போல வந்து பயமுறுத்துவதை வானதி நேரில் கண்டதை இளவரசரிடம் சொல்லச் சொல்லி,நந்தினி தங்கள் சகோதரி என்னும் உண்மையை அவளுக்குத் தெரிவித்து சோழ குலத்தை பழி வாங்க எண்ணும் அவள் முயற்சியைத் தடுக்கும் வரையிலும்நாட்டில் நடக்கும் அரசியல் தீவிரங்கள் குறையும் வரையிலும் இன்னும் கொஞ்ச நாள் இளவரசர் சூடாமணி விஹாரத்தில் இருப்பதே நல்லது என எடுத்துரைத்தாள். ஒரு நல்ல தருணத்தில் தான் பரிந்துரைக்கும் பெண்ணையே இளவரசர் மணக்க வேண்டுமென வானதியை மனதில் கொண்டு, தமக்கையாக ஆணையிட்டாள்.இதற்குள் வானதியைப் பார்த்ததால் எரிச்சலுற்ற பூங்குழலி, தன் பெரிய அத்தையான ஊமை ராணியின் வாழ்வு அரச குலத்தாராலேயே நலிவடைந்தது எனவும்,அவர்களை நம்பவே கூடாது என வெறுப்பை சேந்தன் அமுதனிடம் உமிழ்ந்தாள். சேந்தன் அமுதன் அவளை மணக்க விரும்புவதை வந்தியத்தேவன் சொன்னதாக பூங்குழலி கூறியதும்தான் எந்த சந்தர்ப்பதிலும் அவளுடன் நிற்பேன் என உணர்ச்சி மிகுந்து கூறினான். ஆத்திரம் அடங்காத பூங்குழலி சிறுகல்லை எடுத்து அங்கு உலாவிக் கொண்டிருந்த காளை மாடு ஒன்றின் மீது எறியஅது மிரண்டு வானதியை துரத்த, அவள் கால்வாயில் விழுகையில் இளவரசர் அவளைக் கையில் ஏந்திக் காப்பாற்றினார். குந்தவையிடம், ‘ வானதி இப்போது மயங்கியிருப்பாள் அல்லவா ‘ என இளவரசர் கூறி முடிக்கவும் வானதி சிரித்தபடி அவன் கைகளிலிருந்து எழுந்து அவர்களைத் தாண்டி ஓடினாள். மூன்றாம் பாகம் முற்றிற்று..அடுத்த பகுதியில் நான்காம் பாகம் துவங்கும்..

எப்போதும் தேவைப்படும்  பெரியார்

எப்போதும் தேவைப்படும் பெரியார்

பெரியார் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை 1931ஆம் ஆண்டில் பெரியார் ஈ.வெ.ரா. தோழர் ம.வெ. சிங்காரவேலுவை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். அவர்களுக்கிடையே 1919 முதலே தொடர்பு இருந்தாலும் குறிப்பாக பின்னாளில் ஏற்பட்ட தொடர்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மூடநம்பிக்கைகள், அதை ஒட்டிய சடங்கு சம்பிரதாயங்கள் ஆகியவற்றை வேரறுக்க விரும்பிய ஈ.வெ.ரா. அதற்கான சரியான மனிதர் சிங்காரவேலு என்பதைக் கண்டறிந்தார். ஒரு துறையில் மட்டுமல்ல, பல துறைகளிலும் அறிஞராகத் திகழ்ந்த சிங்காரவேலுவே அதற்குச் சரியானவர் என நினைத்தார்; மதித்தார். அறிவியல் அறிவு பெரிதும் இல்லாத அந்தக் காலத்தில் விஞ்ஞானம் தொடர்பான புத்தகங்களைப் படித்ததுடன் கட்டுரையும் எழுதி மக்களுக்கு அறிவுறுத்தி வந்த சிங்காரவேலுவைப் பெரியார் பயன்படுத்திக்கொண்டார். ஆங்கிலம், ரஷ்யன், ஜெர்மன், பிரெஞ்சு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்ற பன்மொழி அறிஞரான சிங்காரவேலுவின் பன்மொழி அறிவைத் தமது பணிக்குப் பயன்படுத்திக்கொண்டார் பெரியார்.பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க கடவுளைப்பற்றியும் சாதி மதங்களைச் சாடியும் அறிவியல் ரீதியான கட்டுரைகளை பெரியாரின் குடியரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். பெரியாருக்கு உவப்பான இப்பணி 1931 முதல் 1935 வரை சிறப்பாக நடைபெற்றது. சிங்காரவேலின் தொடர்பால் பெரியார் முழுக்க முழுக்கப் பொதுவுடமைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். இதற்கு முழு முதல் காரணம் தோழர் சிங்காரவேலு. தந்தை பெரியார் ரஷ்யாவுக்குப் போய்விட்டு இந்தியா திரும்பிய பிறகு சுயமரியாதை சமதர்ம இயக்கத்தைத் தொடங்கினார். கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். செல்லுமிடமெல்லாம் குழந்தைகளுக்கு லெனின், ஸ்டாலின், மார்க்ஸ், மாஸ்கோ, ரஷ்யா எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார. இவருடன் சேர்ந்து தோழர்கள் ஜீவா, கிசன் போன்றவர்கள் இயங்கி வந்தனர். ஈ. வெ. ராமசாமி நாயக்கர் என்று அறியப்பட்டவர் 1927ஆம் ஆண்டிலேயே நாயக்கர் என்ற சாதிப் பெயரைப் புறக்கணித்துப் புறம் தள்ளினார். இவரைப் பெரியார் என்று முதலில் அழைத்தவர் சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமானவர்களின் ஒருவரான வழக்கறிஞர் நாகர்கோயில் பி. சி. சிதம்பரம் பிள்ளை ஆவார். அவர் தென்னிந்திய திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஐந்தாவது நிர்வாகியாவார். 1930களில் அவர் எழுதிய ஆலயப் பிரவேசம் என்ற ஆங்கில நூல் பின்னால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலுக்கு அணிந்துரை எழுதியவர் பெரியார். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் பெண்கள் உரிமைகள் பற்றி மிக விரிவாகப் பேசியது. மதம் எவ்வாறு பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகிறது, மதச் சடங்குகள் ஏன் பெண்கள் மீது வலிந்து திணிக்கப்படுகின்றன, சாதியின் கூறுகளும் அதில் எவ்வாறு சேர்ந்தே பங்களிக்கின்றன என்பதையெல்லாம் விளக்கி 1929இல் செங்கல்பட்டில் நடந்த இயக்கத்தின் முதல் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களில் முக்கியமான ஒன்று பெண்களுக்குச் சமமான சொத்துரிமை அளிக்கவேண்டும் என்பதாகும். எலியின் விடுதலைக்குப் பூனைகள் எங்காவது முயற்சி செய்யுமா? என்று வேடிக்கையாகப் பெரியார் குறிப்பிட்டு, பெண்களின் விடுதலைக்காக ஆண்கள் பேசுவதைவிடத் தங்கள் விடுதலைக்காக, சுயமரியாதைக்காக பெண்களே முன் நின்று உழைப்பதே சிறந்தது என்பார். 1938 நவம்பர் 13 அன்று சென்னையில் முற்போக்குப் பெண்கள் சங்க மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டை மீனாம்பாள் சிவராஜ் கொடியேற்றித் தொடங்கி வைக்க, நீலாம்பிகை அம்மையார் தலைமை உரை நிகழ்த்தினார். அந்த நிகழ்வின்போது ஈ.வெ.ரா.வுக்கு வழங்கப்பட்ட பட்டம்தான் பெரியார். அந்தப் பட்டத்தை அவர் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். தம் வாழ்நாளில் தாம் எப்போதாவது அமைச்சராக நேர்ந்தால் பெண்களின் கல்விக்காக மட்டுமே பணத்தைச் செலவழிப்பேன் என்று பேசியுள்ளார். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் தன் வாழ்நாளில் அவர் பங்கேற்கவில்லை. பெண் ஏன் அடிமையானாள் ? என்ற புரட்சிகரமான நூலில் பெரியார் கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும், கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாற வேண்டும். கற்புக்காக மனதில் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்ற சமூகக் கொடுமை அழிய வேண்டும் என்று தெளிவாகவும் அழுத்தமாகவும் வலியுறுத்துகிறார். தமிழ்மீது தீராக் காதல் கொண்ட பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறியதை நாம் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றுமில்லை; மிகப் பழைய பாஷை, சிவபெருமான் பேசிய பாஷை என்பதற்காகவோ அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ எனக்கு அதில் பற்று இல்லை. நான் எதிர்பார்க்கும் நன்மையும் அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்டம் ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழிடம் அன்பு செலுத்துகிறேன் என்கிறார். விஞ்ஞானப் பெருவெளியில் உலகம் விரிந்து விரைந்து கொண்டிருக்க தமிழைப் பிற்போக்குப் பெட்டிக்குள் பூட்டி வைத்துக்கொள்ள பெரியார் விரும்பவில்லை. துருப்பிடித்த கருத்துக்களைத் துடைத்து வைத்துக் கொண்டிருப்பதா தமிழ்? எல்லாவற்றையும் சொல்லி முடித்தாகிவிட்டது என்று முற்றுப்புள்ளி வைப்பதற்கா தமிழ்? பக்தியைக் கழித்துவிட்டால் தமிழில் என்ன இருக்கிறது? இந்தப் பழஞ்சரக்கை வைத்துக்கொண்டு உலகச் சந்தையில் எப்படி நிற்பது, விற்பது என்ற அறிவுத் துயரத்தால்தான் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறினார். ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக, தமிழ்ப் புலவராக இருக்க நேர்ந்துவிட்டால் அவர்கள் உலகம் அறியாப் பாமரர்களாகவே இருப்பார்கள். தமிழ் மொழி மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி என்பதைத் தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாக கூறுகிறேன் என்றார். எழுத்து, சொல், கருத்து, அறிவு, பயன்பாடு, படைப்பிலக்கியம் போன்றவற்றைக் காலந்தோறும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அப்படி புதுப்பித்துக்கொள்ளாத மொழி காட்டுமிராண்டி மொழிப் பட்டியலில் சேர்ந்து விடுமே என்று கவலை கொண்டார். தமிழ் எழுத்துக்கள் ஒலி வடிவம் சார்ந்தவை. 247 ஒலி வடிவங்களோடு வழங்கி வரும் தமிழ், எழுத்துக்கள் மிகுதியான ஒரு மொழி என்பதால் கற்பதற்குக் கடினம். அறிவியல் கருவிகளில் ஏறுவதற்கு இடர்ப்படுகிறது. சுமைகள் குறைந்த பயணம் எளிதாக இருப்பது போல எழுத்துக்கள் குறைந்த மொழி, பறவைப் பாய்ச்சலில் பயணம் ஆகலாம். தமிழில் 247 ஒலி வடிவங்களை 131ஆகக் குறைத்த பெருமைக்குரிய பெரியார் குடியரசு, பகுத்தறிவு, விடுதலை, உண்மை ஆகிய தமது பத்திரிகைகளில் சீர்திருத்த எழுத்துக்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தார். பண்டிதர்களோ பல்கலைக்கழகமோ செய்யத் துணியாத இந்தச் சீர்திருத்தத்தைச் செய்தவர் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத பாமர மேதை பெரியார். பல துறைகளில் தடம் பதித்த பெரியார் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் மூன்று மாதங்கள் 7 நாட்கள். 8200 நாட்களை சுற்றுப்பயணத்திற்குச் செலவிட்டார். அது 8 லட்சத்து 20ஆயிரம் மைல்கள் பயணத்திற்குச் சமமாகும். அதாவது பூமியின் சுற்றளவைப் போல 33 மடங்கு சுற்றி வந்ததற்கு ஈடாகும். 21,400 மணி நேரம் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளை ஒலிப்பதிவு செய்து ஓட விட்டால் இரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் பதினோரு நாட்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இயற்கை நமக்குத் தேவைப்படுவதுபோல எப்போதும் நமக்குத் தேவைப்படுபவர் பெரியார். தமிழ்வெளியில் பெரியார் என்ற பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.

பொன்னியின் செல்வன் 17

பொன்னியின் செல்வன் 17

வானதியை அனுப்பிவிட்டு பழையாறை சிறைச்சாலைக்குச் சென்று வந்தியத்தேவனைச் சந்தித்தாள் குந்தவை. சற்றும் தயங்காமல் தன் மனதை அவனிடம் திறந்து காட்டினாள். அந்தஸ்து பேதத்தைச் சொல்லித் தயங்கிய வந்தியத்தேவனிடம் தன் கரங்களை நீட்டினாள். உணர்ச்சி மேலிட  அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு தன் கண்களில் ஒற்றிக்கொண்டான் வந்தியத்தேவன். எதிர்ப்பேதும் இல்லாமல் அவனது கரங்களோடு தன் கரங்களைப்  பிணைத்துக்கொண்டவள்,  “உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒருநாளும் பற்றாது” என உறுதிமொழி கூறியதில் அவன் தன்னைமறந்து நின்றான். அவன்மீதான முதன்மந்திரியின் குற்றச்சாட்டைக் கூறியவள், ஆதித்த கரிகாலனைக் காத்து நிற்க வேண்டுமென வந்தியத்தேவனிடம் கேட்டுக்கொண்டாள். பழுவூர் இளையராணியைப்பற்றி ஆதித்த கரிகாலனிடம் எடுத்துச் சொல்லி, உடன்நின்று நிழல்போலக் காக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்ட குந்தவையிடம் கரிகாலர் அவ்வளவு சீக்கிரம் அதை நம்பக்கூடியவர் அல்ல என்றும் தன்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்றும் ஆறுதல் கூறினான். அங்கிருந்து கிளம்பிய வந்தியத்தேவன் வழியில் ஆழ்வார்க்கடியானைச் சந்தித்தான். கொள்ளிடத்தில் அவனுடன் வந்து சேர்ந்துகொள்வதாக அவன் கூறிவிட்டுப் போய்விட்டான். போனமுறை இதே வழியில் பயணித்ததற்கும் இப்போது பயணிப்பதற்கும் உண்டான வேறுபாட்டை அசைபோட்டபடிச் செல்ல ஆரம்பித்தான். வழியில் வானதி பல்லக்கில் போவதைப் பார்த்தவன் அவளுடன் நின்று பேச விரும்பாமல் குடந்தை ஜோதிடரின் வீட்டுக்குச் சென்றான். முதன்முதலாக இளைய பிராட்டியைப் பார்த்ததைக் காதலுடன் நினைவுகூர்ந்தவன், சோதிடரிடம் தூமகேதுவைப்பற்றியும் இளவரசரைப் பற்றியும் ஆருடம் கேட்டுக்கொண்டிருக்கையில் வானதி அங்கு வந்துசேர்ந்தாள். தன்னைப் பார்த்துவிட்டு நின்று பேசாமல் வந்ததைச் சொல்லிக்காட்டியவள், தான் புத்த பிட்சுணி ஆகப்போவதாகவும் தன்னோடு சூடாமணி விஹாரம்வரை துணைக்கு வந்து விட்டுவிடும்படியும் வந்தியத்தேவனிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். வந்தியத்தேவன்,  இளவரசரின் பேரில் பூங்குழலிக்கு இருந்த அப்பழுக்கற்ற காதலையும் இளவரசருக்கும் அவள்மேல் உள்ள பிரியத்தையும் தெரிந்துவைத்திருந்ததால் ஒருவகையில் வானதியின்மேல் இருந்த லேசான வெறுப்பு அவள் பேசப்பேசக் குறைந்து இல்லாமல் போய்விட்டது. அவள்பால் உள்ளம் கனிந்திருந்தது. முதன்மந்திரியின் ஓலையை எடுத்துக்கொண்டு காஞ்சி செல்வதால் தன்னால் வர இயலாது என்பதைச் சொல்லித் தன்மையாகவே மறுத்தான். வானதி சற்று வருந்தியபோதும் துணிச்சலுடன் தனியாகவே செல்வது என முடிவெடுத்து உடனே கிளம்பிவிட்டாள். அத்தனைக்காலம் பயந்தாங்கொள்ளியாகவே இருந்த பெண் இவ்வாறு மாறியிருந்ததைக்கண்டு வந்தியத்தேவனும் சோதிடரும் வியந்துபோனார்கள். சோதிடர் கொள்ளிடக் கரையில் காளாமுகர்களின் சங்கமம் நடந்துகொண்டிருக்கும் தகவலை அவனிடம் கூறினார். பின் அங்கிருந்து கிளம்பிய வந்தியத்தேவன், வழியில் ஏதோ அபயக்குரலைக் கேட்டுத் திரும்பினான். வானதியின் தோழியைக் கட்டிப்போட்டுவிட்டு வானதியின் பல்லக்கைச் சிலபேர் கடத்திச் செல்வதைக்கண்டு தொடர்ந்தான். இருட்டில் அவர்கள் செல்லும் பாதை தெரியாமல் மறைந்துபோக திகைத்து நின்றுவிட்டான். அப்போது மின்னல் ஒளியில் களத்து மேட்டில் குதிரை ஒன்று ஏறுவது தெரிந்தது. அதன்மேல் இருந்தவர் மதுராந்தகர் என்றும் தெரிந்தது. அங்கிருந்த வீரன் தீவட்டியை உயர்த்தவே, மதுராந்தகரின் குதிரை   மிரண்டு தறிகெட்டு ஓடியதையும் அடுத்த மின்னல் வெளிச்சத்தில் கண்டான். காப்பாற்ற நினைத்துத் தொடர்ந்து போக இருளில் பாதை தட்டுப்படவில்லை. மழை வேறு வலுக்க ஆரம்பிக்க, அங்கிருந்த ஒரு மண்டபத்தில் ஒதுங்கினான். அப்போது நான்கு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று தனியே நிற்பதைக்கண்டு பேச்சுக் கொடுத்தான். அந்த குழந்தை குதிரை வேண்டுமென அம்மாவிடம் கேட்டதாகவும் அம்மா தர மறுத்ததால் ஓடி வந்துவிட்டதாகவும் கூறியது. மேலும் மண்டபத்திற்கு வெளியில் வந்தால் புலி கடித்து விடுமென அம்மா கூறியதாகவும் காஞ்சியில் தன் முக்கிய எதிரி இருப்பதாகவும் தான் புலியை விழுங்கும் மகர மீன் எனவும் கூற வந்தியத்தேவன் குழப்பமடைந்தான். அப்போது ஒரு சிறு கூட்டம், ‘சக்ரவர்த்தி’ என அழைத்தபடி அந்தக் குழந்தையைத் தேடி வந்தது. அவர்களில் தேவராளன், ரவிதாசன், இடும்பன் காரி என அனைவரும் இருந்தனர். அவர்கள் வந்தியத்தேவனை அங்கிருந்து திருப்புறம்பியம் பள்ளிப்படைக்கு நந்தினி வர இருப்பதாகச் சொல்லிக் கூட்டிச் சென்றனர். அங்கு சென்று சிலமணி நேரம் காத்திருந்தபொழுது நந்தினி தன் வழக்கமான ஆடை அணிகலன்களைத் துறந்து தலைவிரிகோலமாய் துர்க்காதேவிபோல் பல்லக்கில் வந்து இறங்கினாள். அங்கு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த குழந்தை அவளை ‘அம்மா’வெனக் கட்டிக்கொண்டது. எல்லோரையும் முன்வரச் சொன்ன நந்தினி, அந்த வாளை எடுத்துக் குழந்தையின் கையில் கொடுத்தாள். பின் அனைவரிடமும் ‘நான் நாடகம் ஆடுகிறேன் என்றும் அரண்மனை சுகங்களில் செய்துகொடுத்த சபதத்தை மறந்துவிட்டேன் என்றும் சொன்னீர்கள். சபதம் தீர்க்கும் வேளை வந்துவிட்டது. சம்புவரையர் மாளிகையில் சமரசப் பேச்சு நடைபெற அத்தனைத் திட்டங்களும் தீட்டிவிட்டேன். சிற்றரசர்கள் இனிமேல் எப்போதும் ஒன்றுகூடாவண்ணம் அது நிகழ்ந்தேறும். நம் சபதத்தை யார் முடிக்கப் போகிறார்களோ அவரைச் சக்ரவர்த்தியே வாளெடுத்துக் கொடுத்துத் தீர்மானிக்கட்டும். மிச்சமிருப்பவர்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்’ எனக் கூறி அந்தக் குழந்தையிடம் ‘சபதத்தை முடிக்க யார் தைரியசாலி எனத் தோன்றுகிறதோ அவரிடம் இந்த வாளைக் கொடு’ என்று கேட்டுக் கொண்டாள். குழந்தை அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு வாளை நந்தினியிடமே கொடுத்தது. அனைவரும் திகைத்தபோதும் வாளை நெஞ்சோடு அணைத்துக்கொண்ட நந்தினி, வீரபாண்டியனின் படுகொலைக்குப் பழிவாங்கும் பாக்கியம் தனக்கே கிடைத்ததாக மகிழ்ந்து கண்ணீர்விட்டாள். தொடரும்

பொன்னியின் செல்வன் 16

பொன்னியின் செல்வன் 16

பழையாறையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வந்தியத்தேவன் தனது குதிரையின் காலில் அடிப்பட்டிருந்ததை அறிந்தான். அராபியர்கள்போல் அதன் குளம்புகளில் லாடம் அடிக்கலாம் என்று கருதி ஒரு கொல்லுப்பட்டறையை அணுகினான். அந்தக் கொல்லன் மீன் முத்திரை பதிக்கப்பட்ட அபூர்வமான வாள் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தான். அந்த மீன் முத்திரையை அழிக்கும் வேலை அதுவென்று வந்தியத்தேவன் புரிந்துகொண்டான். கொல்லன் தான் செய்துகொண்டிருக்கும் பணியை முடித்துவிட்டு லாடம் செய்துதருவதாகக் கூறினான். வந்தியத்தேவன் பெரிதும் களைத்திருந்தபடியால் ஓரமாய்ப் படுத்து உறங்கலானான். உறக்கத்தில் பல்வேறு கனவுகளால் அலைக்கழிக்கப்பட்டு உளறினான். விழித்து எழுந்ததும் கொல்லன் அவன் உறக்கத்தில் உளறியதைச் சொல்லி எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினான். மேலும் இளவரசரைக் கடல் கொண்டுவிட்ட செய்தி அங்குவரை பரவியிருப்பதையும் சற்றுமுன் இவ்வழியே சென்ற பழுவேட்டரையரின் பரிவாரங்கள்மூலம் அந்தச் செய்தி வந்துசேர்ந்திருந்தது என்பதையும் கொல்லன்மூலம் அறிந்தான். குளம்புகளில் லாடம் அடித்துக்கொடுத்த கொல்லனுக்கு நன்றி கூறிவிட்டுப் பழையாறை வழியில் செல்ல ஆரம்பித்தான். வழியில் ஆபத்துதவி தேவராளன் குறுக்கிட்டு, ரவிதாஸனைப்பற்றியும் இளவரசரைப்பற்றியும் கேட்க, வந்தியத்தேவன் கவனமாகப் பதிலளித்தான். ஒரு மூடுபல்லக்கைச் சுட்டிக்காட்டி அதில் இருக்கும் நந்தினி வந்தியத் தேவனிடம் பேசவிரும்புவதாகக் கூறி அழைத்தான் தேவராளன். இவனும் பல்லக்கின் அருகே செல்ல, சுற்றி மறைந்திருந்த வீரர்கள் அவனைத் தாக்கிப் பல்லக்கிற்குள் கட்டிப்போட்டுப் பல்லக்கைத் தூக்கிச்சென்றனர். சுதாரித்துக்கொண்ட வந்தியத்தேவன் பல்லக்குப் பயணத்தின் நோக்கத்தையும் முடிவையும் அறியும்பொருட்டு அமைதியானான். அப்போது பல்லக்கில் ஏதோ மயக்கும் புகை எழவும் அதில் நினைவிழந்தான். கண் விழித்தபோது ஒரு அறையில் இருந்தான். திறந்த கதவின் வழியாக நந்தினி வரவும் இலங்கையில் கண்ட ஊமை ராணியின் தோற்றத்தை ஒப்பிட்டு அவள்தான் ஆடை, ஆபரணங்கள் அணிந்து வந்துவிட்டாளா என்று அதிசயித்தான். பொக்கிஷ நிலவறையில் இருந்து அவள்தான் அவனைத் தப்பிக்கவிட்டதாகவும் அவன் ஒரு நன்றிகெட்டவன் எனவும் பல்வேறு வார்த்தைகளால் அவனை வெறுப்பேற்றினாள் நந்தினி. பிறகு  அருள்மொழிவர்மரைப்பற்றிக் கேட்டாள். குந்தவையையும் பூங்குழலியையும் எள்ளி நகையாடினாள். வந்தியத்தேவன் அத்தனைக்கும் அசைந்துகொடுக்காது அவளை அமைதியுறுமாறு வேண்டினான். அப்போது வந்தியத்தேவன் முன்பு கொல்லுப்பட்டறையில் கண்ட வாளைக் கைகளில் எடுத்து ஆசையுடன் தன் மார்போடு அணைத்துக்கொண்டாள் நந்தினி.  ’ஆடை, ஆபரணங்களால் அலங்கரிந்த என்னுடைய உடம்பிலோ நெஞ்சத்தில் வஞ்சம்கொண்ட கொடியவன் ஒருவனின் விஷநெஞ்சத்திலோ இந்த வாளைச்செலுத்திக் குபுகுபுவெனப் பெருகும் இரத்தத்தைப் பூசிக்கொண்டு சாகவேண்டுமென்பது தெய்வத்தின் ஆக்ஞை’ என்றெல்லாம் ஆவேசம் வந்தவள்போலப் பேசிக்கொண்டுபோனாள். அவளை அமைதிபடுத்தும் வழி தெரியாது, ‘பழுவேட்டரையர் எங்கே?’ என வந்தியத்தேவன் பேச்சைத் திருப்பினான். அவரும் பார்த்திபேந்திரனும் வெறியாட்டக்காரனிடம் இளவரசர்பற்றிக் குறிகேட்கப் போயிருப்பதாகச் சொல்லி, அதற்கும் பெரிதாய்ச் சிரித்து, பெரிய பழுவேட்டரையர், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், ஏன் ஆதித்த கரிகாலனும்கூடத் தன்முன் வர அஞ்சுவதைக் கூறினாள்.. ஆதித்த கரிகாலனை கண்டு தன்னைப்பற்றி  அஞ்சவேண்டாம் என்ற செய்தியைச் சொல்லுமாறு நந்தினி கேட்க வந்தியத்தேவன் மறுத்தான். இளவரசரைப்பற்றிக் கேட்க, அதுவும் தனக்குத் தெரியாது என்று கூறி அவளின் முத்திரை மோதிரத்தைத் திருப்பியளித்தான். அதை அவனையே வைத்துக்கொள்ளச்சொன்னவளிடம் ஊமை ராணி அவள்தானா என்ற சந்தேகத்தை வந்தியத்தேவன் கேட்டான். நந்தினி இல்லையென மறுத்துவிட்டு மறுமுறை அவளைக்கண்டால் தன்னிடம் கொண்டுவந்து சேர்க்குமாறும் இல்லையெனில் தன்னையாவது அவளிடம் கூட்டிச்செல்லுமாறும் கேட்டு அவனைத் தன் ஆட்களிடமிருந்து விடுவித்தாள். தன்னைக் கடத்திப்போன இடத்திலிருந்து பழையாறைக்குப் பயணம் செல்லும் வழியில் சென்றவன் இருளடையவும் சிறிதுநேரம் உறங்கிக்கொண்டிருந்தபொழுது இரண்டு காளாமுக வீரசைவர்கள் அவனைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் பேசிக்கொண்டு கடந்துசென்றனர். ஆதித்த கரிகாலனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பேசிக்கொண்டதை மறைந்திருந்து வந்தியத்தேவன் கேட்டபொழுது, விரைவில் தன் எஜமானருடன் சென்றுசேர்ந்துவிடவேண்டுமென நினைத்துக்கொண்டு பழையாறையை நெருங்கினான். எப்படி பாதுகாப்பைத் தாண்டி உள்ளே நுழைவது என்று கவலைப்பட்ட பொழுது, மதுராந்தகர் தன் பரிவாரங்களுடன் வருவது தெரிந்தது. செம்பியன் மாதேவி முக்கியமான விஷயம் பேசவருமாறு அனுப்பிய அழைப்பை ஏற்று மதுராந்தகர் கிளம்பியபொழுது அவர் மாமனாரான சின்ன பழுவேட்டரையர் அன்னையிடம் பட்டம் குறித்தும் பேசுமாறு அறிவுறுத்தியிருந்தார்.  வந்தியத்தேவன் வேண்டுமென்றே பரிவாரங்கள் நடுவே நுழைந்து  நிமித்தம் கூறுவோன்போல, கடம்பூரில் மூடு பல்லக்கில் வந்த நிகழ்ச்சியைக்கூறி நடிக்க, மதுராந்தகன் அவனையும் தம்முடன் அழைத்துக்கொண்டு பழையாறை கோட்டைக்குள் நுழைந்தார். சிவ சீல சிரோன்மணியான செம்பியன் மாதேவி திருநாரையூர் நம்பி எனும் சிவக்கொழுந்தை மரியாதையுடன் வரவேற்று சபையில் பாடச்செய்து சிறப்பு செய்துகொண்டிருந்தார். மதுராந்தகருக்கு அதையெல்லாம் காணக்காண எரிச்சலாய் இருந்தது.  தனியிடத்தில் வந்து வந்தியத்தேவனை நிமித்தம் சொல்லுமாறு கேட்க, அவன் ஆ..ஊ எனக் கத்திக்கொண்டு நடித்தான். பின் அவர் பட்டம்சூட்ட ஒரு பெண் தலைவிரிக்கோலத்தில் தடையாக இருப்பதாக இட்டுக் கட்டினான். பின் தலைவலியால் துடிப்பதாகக் கூறி நகர்வலம் போய்விட்டு வருவதாகச் சொல்லி மாளிகையிலிருந்து வெளியேறினான். மதுராந்தகரை அவரது அன்னை அழைப்பதாகச் செய்தி வரவும் ஆத்திரத்துடன் கிளம்பிச்சென்றார். கோடியக்கரையில் வந்தியத்தேவனுடன் மூலிகை பறிக்க வந்துவிட்டு, பின்பு பழுவேட்டயர்களிடம் காட்டிக்கொடுத்த வைத்தியர் மகன் பினாகபாணியிடம், வந்தியத்தேவன் பழையாறைக்கு வந்தால் தன்னிடம் தகவல் சொல்லுமாறு நந்தினி சொல்லியிருந்தாள். அதனை ஏற்றுக் காத்திருந்தவன் வெளியேவந்த வந்தியத்தேவனைக் கண்டான். அப்போது மக்களிடம் குற்றவாளி, ஒற்றன் என்றெல்லாம் கூறி வந்தியத்தேவனை மாட்டிவிட, அங்குவந்த ஆழ்வார்க்கடியான் அவனை சாமர்த்தியமாகத் தப்பிக்கவைத்தான். பின்பு குந்தவையைச் சந்திக்க அனுப்பிவைத்தான். இளவரசரைக் கடல்கொண்ட துக்கச் செய்தியை அப்போது தூதர்கள் கொண்டுவந்திருந்தனர். செம்பியன் மாதேவி மதுராந்தகரிடம், தன் கணவர் கண்டராதித்தருக்கு மண்ணாளும் ஆசை இல்லாததோடு, சுந்தரசோழரின் பரம்பரையே தனக்குப்பின் ஆளவேண்டுமென்றும், அதற்குத் தன் வாரிசு தடையாக இருக்கக்கூடாது என்றும் வாக்குப் பெற்றுக்கொண்டு சிவபதம் அடைந்ததாகக்கூறி, மதுராந்தகர் தந்தையின் விருப்பம்போலவே நடக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். மதுராந்தகர் பொறுமை இழந்து செம்பியன் மாதேவியைக் கண்டபடி ஏசினார். ஆத்திரத்தில் கழுத்திலிருக்கும் உருத்திராட்ச மாலையைக் கழற்றியெறிய முயல, கழுத்தைவிட்டு அது நகரவில்லை. தன் மகன் பட்டத்தை அடையத் தடையாக இருக்கும் நீயெல்லாம் ஒரு தாயா?  என்றெல்லாம் கேட்க, தன் மகன் உயிருடன் இருப்பதும் தனக்கு முக்கியம் என செம்பியன் மாதேவி விளக்க, அவன் கோபம் சற்றுத் தணிந்தது. தனக்குப் பல சிற்றரசர்கள் உதவுவார்கள் என்றெல்லாம் சொல்லி தாயைச் சமாதானப்படுத்த தொடங்கினான். அவர்களையெல்லாம் நம்புவதில் பயனில்லை என்று பெரிய பிராட்டி அறிவுரை சொல்லத்தொடங்கியபொழுது அரண்மனை வாசலில் பெரும் ஓலமும் சாபக்குரல்களும் கேள்விக் குரல்களும் பயங்கரப் பேரொலியாக கேட்டன. மதுராந்தகரை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு செம்பியன் மாதேவி மாடத்தைநோக்கி விரைந்தார். வந்தியத்தேவன் ஓடத்தில் குந்தவையைச் சந்தித்தான். சில நொடிகள் பேச்சிழந்து நின்றபிறகு நடந்தவை அனைத்தும் சொல்லும்படி குந்தவை கேட்க, எல்லாவற்றையும் சொல்லலானான். இளவரசருக்குக் கடும் சுரம் ஏற்பட்டதையும் சேந்தன் அமுதனும், பூங்குழலியும் சூடாமணி விஹாரத்துக்கு அழைத்து சென்றதையும் கூறிக்கொண்டிருந்தபொழுது வானதி தோட்டத்திலிருந்து ஓடிவந்து தண்ணீருக்குள் விழுந்தாள். இளவரசர் இறந்துவிட்டதாக நினைத்து வானதி தன் உயிரையும் விட்டுவிட வேண்டுமென நீரில் பாய்ந்திருந்தாள். அவளைக் காப்பாற்றி, குந்தவை தன் மடியில் வைத்து மயக்கத்தைத் தெளியவைத்துக் கொண்டிருந்தபொழுது வந்தியத்தேவன் பூங்குழலியின் மீதான இளவரசரின் எண்ணம் குறித்தும் பூங்குழலி இளவரசருக்காகத் தன்னுயிரையும் பணயம் வைப்பாள் என்பதையும் கூற, குந்தவை ஆத்திரமுற்றாள். மயக்கம் தெளிந்துவிட்ட வானதியும் இந்தச் செய்தியைக்கேட்டு, ‘இளவரசர் உயிருடன் இருக்கிறார்’ என்ற ஆறுதலையும் ‘பூங்குழலியை விரும்புகிறார்’ என்ற துயரத்தையும் ஒருசேர அடைந்தாள். வந்தியத்தேவன் ஊமை ராணியைப்பற்றிக்கூற குந்தவை பரபரப்படைந்தாள். நந்தினிக்கும் அவருக்கும் இருக்கும் உருவ ஒற்றுமையைப்பற்றிக் கூறவும் நந்தினி தன் தமக்கையென்று முன்னமே தனக்குச் சந்தேகம் இருந்ததையும் கூறி வருந்தினாள். ஓடக்காரப் பெண்ணான பூங்குழலியை இளவரசர் மணக்கமுடியாது என குந்தவையும் குலம், கோத்திரமெல்லாம் அந்தப் பெண்ணின் அன்புக்கு முன்னால் ஒன்றுமில்லை என வந்தியத்தேவனும் நடத்திய வாக்குவாதத்தில் வானதி மயக்கம் பூரணமாகத் தெளிந்து எழுந்தாள். ஆழ்வார்க்கடியான் விரைந்து வந்து, ‘இளவரசர் கடலில் மூழ்கிவிட்டதுபற்றி ஆத்திரமாயிருப்பதாகவும் வந்து சமாதானம் செய்யும்படியும் குந்தவையை அழைத்தான். குந்தவையும் செம்பியன் மாதேவியும் மாடத்தில் வந்து நின்றவுடன் கூட்டத்தில் அனைவரும் அவர்களை நோக்கி முறையிட்டனர். பழுவேட்டரையர் சூழ்ச்சியால்தான் ஏதோ நடந்துவிட்டது என ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, குழப்பமும் ஆத்திரமும் மிகுந்து அந்த இடம் களேபரமாகக் காணப்பட்டது. அப்போது குந்தவை குறிப்புணர்த்த, ஆழ்வார்க்கடியான் பெரிய குரலில், இளவரசருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று நிமித்தக்காரன் சொல்வதாகக் கூற, நிமித்தக்காரனாக வேடம் பூண்டிருந்த வந்தியத்தேவனும் அதை  ஆமோதித்தான். வைத்தியர் மகன் அவனைப் பார்த்து ஒற்றன் எனக் கத்த, ஆத்திரமுற்று மேலிருந்து குதித்து வந்தியத்தேவன் அவனோடு சண்டையிடத் தொடங்கினான். அதற்குள் அநிருத்த பிரும்மராயர் அங்கே வருகைதந்து அவர்கள் இருவரையும் கைதுசெய்யுமாறு ஆணையிட்டுவிட்டு கூட்டத்தையும் அமைதியாக இருக்குமாறு சொல்லிவிட்டு செம்பியன் மாதேவியைத் தனியே சந்தித்தார். சுந்தர சோழச் சக்கரவர்த்தி மதுராந்தகருக்குப் பட்டம் சூட்ட இருப்பதாகவும் அதற்குச் சம்மதம் தருமாறும் கேட்க, செம்பியன் மாதேவி தன் கணவரின் ஆணையை மீறமாட்டேன் என்று மறுத்தார்.  அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருப்பதாக முதன்மந்திரி சொல்ல வர, மதுராந்தகர் உள்ளே வரவே அதைச் சொல்லாமலேயே விடைபெற்றார். மதுராந்தகர் அநிருத்தரை தன் முக்கிய எதிரியாக கருதுவதாகத் தன் தாயாரிடம் கூறினான். குந்தவையைச் சந்தித்த அநிருத்தர், நாட்டின் நிலைமையை எடுத்துக்கூறினார். அவர் அனைத்தையும் அறிந்து வைத்திருந்ததைத் தெரிந்துகொண்டு வியந்துவிட்டு வந்தியத்தேவனை விடுவிக்கும்படி கோரினாள். ஆனால், வந்தியத்தேவன் நந்தினியைச் சந்தித்ததை அநிருத்தர் சொல்லி அவன் நந்தினியின் ஒற்றனாய் இருக்கலாம் எனச் சந்தேகப்பட, குந்தவை மறுத்தாலும் அவன் மறைத்ததை நினைத்துக் குழம்பினாள். இளையராணியின் சூழ்ச்சிக்குப் பழுவேட்டரையர்கள் மட்டுமல்லாது, மதுராந்தகர், கந்தன்மாறன் மற்றும் பார்த்திபேந்திரன் அனைவரும் மயங்கி அவள் பேச்சுக்கு ஆடுவதையும் ஆதித்த கரிகாலனைக் கடம்பூருக்கு வரவழைத்து சம்புவரையர் மகள் மணிமேகலையை திருமணம் செய்து கொடுக்கத் திட்டம் தீட்டியுள்ளதையும் கூறினார். ஆனால் அது வெளிப்பேச்சுதான் எனவும், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடன் அவளுக்குத் தொடர்பிருப்பதால் இதன் பின்னால் வேறு சூழ்ச்சி இருக்கலாம் என்று கூற, குந்தவை பயந்தாள். அநிருத்தர் வந்தியத்தேவனைத் தான் விடுவிப்பதாகவும், அவன் உடனே காஞ்சிக்கு சென்று ஆதித்த கரிகாலனை கடம்பூருக்கு வரவிடாமல் தடுக்குமாறும், தடுக்க முடியாது போனால் நிழல்போல ஆதித்தரைப் பிரியாமல் காக்குமாறும் ஆணையிடச் சொல்லி குந்தவையிடம் சொல்லி முடித்தார். வந்தியத்தேவன் பக்குவமற்று நடந்து கொள்வதால் ஆழ்வார்க்கடியானையும் உடன் அனுப்புவதாக முடிவெடுத்தனர். நடுவே வந்த வானதி பிடிவாதமாகக் கொடும்பாளூர் போவதாகக் கூற தடுக்க முயன்று முடியாமல் போக, குந்தவை அவளுக்கு விடை கொடுத்தாள். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 15

பொன்னியின் செல்வன் – 15

மூன்றாம் பாகம் – கொலை வாள் நாகப்பட்டின புத்த பிட்சுகள் சுந்தர சோழரைச் சந்திக்க வந்தபொழுது, ‘இலங்கை அரசுரிமையை அத்தீவின் புத்த சங்கம் ஒன்று இளவரசர் அருள்மொழி வர்மருக்குக் கொடுக்க விரும்புகிறது’ எனக் கூறியதைச் சாதகமாக்கி, பெரிய பழுவேட்டரையர் இளவரசரைக் கைது செய்யும் ஆணையை வாங்கியிருந்தார். அரசரும் அருள்மொழியிடம், ‘மதுராந்தகருக்கே பட்டத்தைக் கொடுத்து விடலாம்’ என்ற தன் விருப்பத்தை நேரில் சொல்லி ஏற்கச் செய்யலாம் என்ற காரணத்தினால்தான் அதற்குச் சம்மதித்தார். அருள்மொழிக்கு மக்களின் ஆதரவு அதிகமாய் இருந்ததால் அவரைக் கைது செய்து கொண்டுவரும்பொழுது, அது தனக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற அச்சம் பெரிய பழுவேட்டரையருக்கு இருந்தது. மேலும், வந்தியத்தேவன் மூலம் குந்தவை ஓலை அனுப்பியதும் அவன் யார் கையிலும் சிக்காமல் இலங்கைக்கு சென்றுவிட்டதும் அதை அதிகப் படுத்தியிருந்தன. எனவே, இலங்கையிலிருந்து இளவரசர் வரும்போதே யாரும் அணுகாவண்ணம் தஞ்சைக்குக் கூட்டி வந்துவிட வேண்டும் என்று யோசித்து கோடியக்கரைக்குக் கிளம்பினார். நந்தினியும் உடன்வருவதாகச் சொல்லவும் அவளுடன் சேர்ந்து பிரயாணம் செய்யும் ஆசையுடன் சம்மதித்தார். இருவரும் பரிவாரங்களுடன் கிளம்பினார்கள். நந்தினிக்கு ‘ரவிதாஸன் இலங்கை சென்ற காரியத்தை வெற்றியுடன் முடித்தானா?’ என்று தெரிந்து கொள்வதும் வந்தியத்தேவன் மூலம் குந்தவை இளவரசருக்கு அனுப்பிய செய்தியைத் தெரிந்துகொள்வதும் நோக்கமாய் இருந்தன. நாகப்பட்டினத்தில் தனாதிகாரியாக தன் கடமைகளை முடித்துவிட்டு கோடியக்கரை வந்து, அவருக்காகக் கடற்கரையில் அமைக்கப்பட்ட  கூடாரத்தில் பெரிய பழுவேட்டரையர் நந்தினியுடனும் தன் பரிவாரங்களுடனும் தங்கினார். அப்போதுதான் சுழற்காற்று அடித்து ஓய்ந்திருந்தது. அச்சமயத்தில் பார்த்திபேந்திரனுடைய மரக்கலம் வந்து சேர்ந்தது. ஒரு படகில் பார்த்திபேந்திரன் கூடாரத்துக்கு வந்தான். பெரிய பழுவேட்டரையர் விசாரிக்குமுன் நந்தினி  முன்வந்து பேசினாள். பார்த்திபேந்திரன் அந்தக் கணத்தில் அவளின் செளந்தர்யத்தில் மதிமயங்கிப் போனான். அதைக்கண்டு பெரிய பழுவேட்டரையர் எரிச்சலடைய, நந்தினி இளவரசரைப் பற்றிக் கேட்க, சுய நினைவடைந்த பார்த்திபேந்திரன் வந்தியத்தேவனைக் காப்பாற்ற இளவரசர் கடலில் குதித்ததையும்,  காப்பாற்றியபின் அந்தப் படகு உடைந்து அனைவரும் மூழ்கிவிட்டதையும் பாதி உயிராய் தான் ஒருவன் மட்டுமே திரும்பியதாகவும் கூறினான்.  இளவரசர் மூழ்கிவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதுமே பெரிய பழுவேட்டரையர் வேரற்ற மரம் போலத் தரையில் வீழ்ந்தார். நந்தினி நீர்கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்த, தன் கையால் இளவரசரைத் தூக்கி  வளர்த்ததை நினைவுபடுத்திக்கொண்டு கலங்கியபடி பார்த்திபேந்திரனை வெகுவாகக் கோபித்துக் கொண்டார். இளவரசர் கோடிக்கரையில் கரையொதுங்க வாய்ப்பிருப்பதாக பார்த்திபேந்திரன் கூறவும், காஞ்சியிலிருந்து கிளம்பியது முதல் நடந்தது வரை அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். நந்தினி வேண்டுமென்றே, ‘ஒருவேளை அவன் வந்த மரக்கலத்தில் இளவரசரை மறைத்து வைத்திருக்கலாம்’ என ரகசியமாகக் கூற, பழுவேட்டரையர் அவனை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு மரக்கலத்தை சோதனை செய்ய ஆட்களுடன் விரைந்தார். அவனுடன் தனியே பேச வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட நந்தினி, தன் சாகசத்தை பார்த்திபேந்திரனிடம் தொடங்கினாள். ஆதித்த கரிகாலனிடம் நந்தினி பற்றி அறிந்திருந்த பார்த்திபேந்திரன், அவளிடம் தாங்க முடியாத வெறுப்பை உமிழ்வதற்குக் காத்திருந்தவன், அவளைப் பார்த்த்தும் தன்வயம் இழந்து மகுடிமுன் ஆடும் பாம்பைப் போல் ஆகியிருந்தான். நந்தினி பல்வேறு சொற்களால் அவன் இதயத்தில் தன் மீதான பரிதாபத்தை வளர்த்தெடுத்தாள். பார்த்திபேந்திரன் அவளை பழுவேட்டரையரிடமிருந்து விடுவித்து, தன்னுடன் கூட்டிச் சென்றுவிடலாம் என்று நினைக்குமளவுக்கு அவனை மயக்கமூட்டியும் பரிதாபத்துகுரியவளாகத் தன்னைக் காட்டிக்கொண்டும் பேசினாள். அவன் அப்படி மயங்கியிருந்த சந்தர்ப்பத்தில் ஆதித்த கரிகாலனை சம்புவரையர் மாளிகைக்கு அழைத்து வர வேண்டுமென நந்தினி கேட்டுக் கொண்டாள். ‘ஆதித்த கரிகாலனுக்கு சம்புவரையர் மகளான மணிமேகலையை மணம் செய்து வைத்துவிட்டால் தான் நிம்மதி அடைந்துவிடுவேன்’ எனவும் பார்த்திபேந்திரனிடம் பசப்பினாள். கலத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பெரிய பழுவேட்டரையர் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து முறைத்தார். பார்த்திபேந்திரனைக் கைது செய்ய ஆணையிட்டார். ஆனால், கைது செய்ய வந்தவரகளைத் தாக்கிவிட்டு பழுவேட்டரையர் என்ன சொன்னாலும் தான் கேட்பதாகப் பணியவும், பார்த்திபேந்திரன் மேல் அவருக்கு நல்ல எண்ணம் வந்தது. ‘அரசரிடம் இளவரசரைப் பற்றிச் சொல்லும்போது, கூடவே பார்த்திபேந்திரன் இருந்தால் நம்பகத்தன்மை அதிகரிக்கும்’ என நந்தினி எடுத்துச் சொல்ல, பழுவேட்டரையர் அதற்குச் சம்மதித்தார். அதற்குள் மந்திரவாதியின் ஆந்தைக் குரல் கேட்டதால், ‘ஒருநாள் இருந்து இளவரசர் கரையொதுங்குகிறாரா என்பதைத் தெரிந்து கொண்டு போகலாம் எனக் கூறினாள் நந்தினி. கரையோரமாய் ஆட்களை நிறுத்தி தேடிப் பார்க்கவும் தனாதிகாரி ஆணையிட்டார். பூங்குழலி படகை வலிக்க, வந்தியத்தேவன் இளவரசரிடம், ‘கோடியக்கரை போனால் பழுவேட்டரையர்கள் கைது செய்யும் அபாயம் இருப்பதால், குந்தவையின் ஆணைப்படி பழையாறைக்கு செல்ல வேண்டு’மென வலியுறுத்தினான். ஆனால், இளவரசருக்குக் குளிர்க்காய்ச்சல் அதிகமாக, தூரத்திலிருந்து கலங்கரை விளக்கின் மேலே ஆட்கள் நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் பூங்குழலி சொல்ல, கோடியக்கரையில் இருந்து நாகை செல்லும் ஒரு வாய்க்காலில் ஓடத்தை மறைத்து நிறுத்திவிட்டு ஊருக்குள் சென்று விஷயங்களை அறிந்து வந்தபின் பயணத்தை முடிவு செய்யலாம் என இருவரும் திட்டமிட்டனர். அதன்படி, பூங்குழலி அங்கிருந்த குழகரின் கோவிலை அடைந்தாள். கோவிலில் பட்டரைச் சந்தித்து பிரசாதங்களையும் பாலையும் பெற்றுக்கொண்டு, பழுவேட்டரையரும் நந்தினியும் வந்திருப்பதை அறிந்து கொண்டு திரும்பினாள். நந்தினியை, பூங்குழலின் அண்ணியான ராக்கம்மாள் சந்தித்து பாண்டியர் ரகசிய முத்திரையைக் காண்பித்து தானும் ஆபத்துதவி என்று தெரிவித்துக் கொண்டாள். மந்திரவாதியுடன் பேச குழகர் கோயிலுக்குக் கூட்டிச் செல்வது போல் கூட்டிச் சென்றாள்.  அப்போது சேந்தன் அமுதன் இங்கு வந்திருப்பதையும் இருவரும் கலங்கரை விளக்கின் மேல் இருந்தபொழுது ஒரு படகு வந்து பின் கண்ணுக்கு மறைந்து விட்டதையும் கூறினாள். பின்னர் நந்தினியின் உருவம் ஊமைராணியை ஒத்திருப்பதாகக் கூற, இனி ஊமைராணியை கண்டால் தன்னிடம் கூட்டி வருமாறு நந்தினி கேட்டுக் கொண்டாள். அவளை அவ்வளவு சீக்கிரம் யாரும் சந்திக்க முடியாதெனவும் பூங்குழலிக்கு அவளை நன்கு தெரியுமெனவும் இராக்கம்மாள் கூறினாள். இருவரும் மந்திரவாதியிடம் வந்து சேர்ந்தனர். மந்திரவாதியும் நந்தினியும் பேசுவதை பூங்குழலி திரும்பிப்போகும் வழியில் கேட்க நேரிட்டது. இளவரசர் இறந்துவிட்தாக வந்த செய்தியை நந்தினி நம்பவில்லை. பூங்குழலியைப் பற்றிச் சொல்லி மண்டபத்தில் ஒளித்து வைத்திருக்கலாம் என ராக்கம்மாள் மந்திரவாதியிடம் சொல்ல, பூங்குழலிக்கு அச்சம் பரவியது. இளவரசரைச் சுற்றி நாலாபக்கமும் சூழ்ந்திருந்த ஆபத்தை உணர்ந்து கொண்டாள். எப்பாடுபட்டாவது அவரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் தனக்கு இருப்பதை உணர்ந்து மறைவிடம் நோக்கி விரைந்தாள். ஆனால், விட்டுவிட்டு வந்த இடத்தில் ஓடமும் இளவரசரும் இல்லாதிருப்பதைக் கண்டு மேலும் கலவரமடைந்தாள். மண்டபத்தில் ஒளிந்து இருக்கலாம் என்று நினைத்தால் மந்திரவாதி அங்கு வருவதாகச் சொன்னது நினைவுக்கு வர, எச்சரிப்பதற்காக காட்டு வழியில் வேகமாக ஓடினாள். நடுவில் சேந்தன் அமுதன் பாடுவது போல் நடித்து, மந்திரவாதி அங்கிருப்பதை உணர்த்த, இருவரையும் மந்திரவாதி ரவிதாசன் ‘இளவரசர் எங்கே?’ எனக் கேட்டு மிரட்டினான்.  பூங்குழலி இளவரசர் இறந்து விட்டதாகக் கூற ரவிதாசன் அதை நம்பவில்லை. பூங்குழலி கடற்கரைப் பக்கம் ஓடுவது போல போக்குக்காட்டி ரவிதாசனைப் புதைமணலில் விழுமாறு செய்தாள். ரவிதாசன் காப்பாற்றுமாறு கதற, சேந்தன் அமுதனின் துண்டை வாங்கி அவனைக் கட்டிவிட்டு, ‘காலையில் யாரேனும் வந்தால் அவிழ்த்து விடுவார்கள்’ எனக் கூறி இருவரும் மண்டபத்துக்கு விரைந்தனர். இளவரசரை நாகப்பட்டினத்திலுள்ள சூடாமணி விஹாரத்திற்கு கூட்டிச் செல்லுமாறு குந்தவை சொல்லி அனுப்பியதாக சேந்தன் அமுதன் கூற, வந்தியத்தேவன் பழையாறைக்குச் செல்வதாக ஏற்பாடாயிற்று. சுரவேகத்தில் மயக்கமடைந்திருந்த அருள்மொழிவர்மரைப் படகில் ஏற்றினர். அப்போது நரிகளின் ஊளைக் குரல் கேட்டது. இளவரசர் அபாயத்திலிருக்கும் மனிதனைக் காப்பாற்ற வேண்டும் எனக் கூறிக்கொண்டே மறுபடியும் மயங்கி விழ, பூங்குழலி ரவிதாசனைக் காப்பாற்ற புதைகுழிக்கு விரைந்தாள். வந்தியத்தேவனும் உடன் சென்றான். அதற்குள் ராக்கம்மாள் ரவிதாசனை விடுவித்து விட்டிருந்தாள். இவர்கள் கால்வாய்க் கரையை நோக்கி வரும் வழியில் ரவிதாசனும் ராக்கம்மாளும் மறைந்திருப்பதைப் பார்த்து விட்டார்கள். அவர்களும் இவர்களைக் கவனித்து விட்டார்கள். வந்தியத்தேவன் வேண்டுமென்றே அவர்கள் காதில் விழும்படி, ‘ஆதித்த கரிகாலன் அரசாள்வதற்காக பொன்னியின் செல்வரை, தான் கடலில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டதாகவும் பூங்குழலி அதைப்பற்றி வாய்திறந்தால் ரவிதாசனைப் புதைசேற்றில் தள்ளிக் கொன்றதை நந்தினியிடம் சொல்லி விடுவேன்’ என்றும் மிரட்டி நடித்தான். அவளுடைய மாமன் மகன் கொண்டுவரும் ஓடத்தில் ஏறி இலங்கை போய்விடுமாறும் பூங்குழலியை மிரட்டினான். அதன்படியே பூங்குழலி ஓடத்தில் ஏறிக்கொள்ள, படகை நாகப்பட்டினம் நோக்கி செலுத்தினார்கள். மந்திரவாதியும் ராக்கம்மாளும் இதைத் தொடர்ந்து மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பின் மந்திரவாதி வெளிப்பட, வந்தியத்தேவன் ‘பிசாசு, பிசாசு’ எனக் கத்திக்கொண்டே ஓடி மந்திரவாதி பார்வையில் இருந்து மறைந்தான். சேந்தன் அமுதன் சொன்ன இடத்தில் தன் குதிரையைக் கண்டுகொண்டான். பழையாறை பாதையில் குதிரையை நடத்தினான். சுரத்தில் பாதிக்கப்பட்டிருந்த இளவரசரைக் கனிவுடன் கவனித்துக் கொண்டும் இடைப்பட்ட கிராமங்களில் சேந்தன் அமுதன் கொண்டுவந்த  உணவைப் பகிர்ந்துண்டும் மூவருமாக நாகப்பட்டின சூடாமணி விஹாரத்தை அடைந்தனர். பூங்குழலி இளவரசருக்கு சேவை செய்வதில் தனி உவகை கொண்டிருந்தாள். இவர்கள் சூடாமணி விஹாரத்தை அடைந்தபொழுது அங்கே இளவரசரைக் கடல் கொண்டுவிட்ட செய்தி கிடைத்து அல்லோல கல்லோலமாயிருந்தது. சேந்தன் அமுதன் தலைமைப் பிட்சுவிடம் சென்று விஷயங்களைச் சொல்லி விஹாரத்தின் பின்பகுதியில் நிறுத்தியிருந்த படகிடம் அழைத்து வந்தான். அவரும், குந்தவை தேவி ஏற்கனவே அவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டதை மனதில் வைத்துக்கொண்டு, ரகசியமாகவே இளவரசரை உள்ளே அழைத்துச் சென்றார்.  ‘மறுபிறவியிலேனும் அருள்மொழி வர்மரை மறுபடி சந்திக்க முடியுமா?!” என்ற ஏக்கத்துடன் பூங்குழலி கதவு மூடும்வரை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 14

பொன்னியின் செல்வன் – 14

மண்டபத்திலிருந்து அருள்மொழி வர்மன் குழுவினர் வெளியேறி நடந்தனர். வழியிலேயே பார்த்திபேந்திரனும் கொடும்பாளூர் பெரிய வேளாரும் சைன்யத்துடன் வந்து கொண்டிருந்தனர். பூங்குழலியும் அவர்களுடன் வந்திருந்தாள். அனைவரும் சாலையோரமிருந்த மண்டபத்திற்குச் சென்று பேசலாமென முடிவெடுத்தனர். போகும் வழியில், பூங்குழலி உதவி கேட்டது வந்தியத்தேவனுக்கு ஞாபகம் வர இளவரசரிடம், “சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?” எனக் கேட்க, அவர் “சரிவர நினைவில்லை” என பதிலளித்தார். வந்தியத்தேவன் பூங்குழலியைத் திரும்பி பார்க்க, அவள் தன் வழக்கத்திற்கு மாறாக நாணத்துடன் கடைக்கண்களால் இளவரசரையே பார்த்துக்கொண்டு நிற்பதைக்கண்டு சிரித்துக் கொண்டான். திருக்கோவலூர் சிற்றரசரும் இளவரசரின் பாட்டனாருமான மலையமானும் ஆதித்த கரிகாலனும் இளவரசன் அருள்மொழி காஞ்சிக்கு வந்து பழுவேட்டரையரின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பார்த்திபன். இளவரசர் கொடும்பாளுர் வேளாளரிடம், குந்தவை பழையாறைக்கு அழைப்பதையும், முதன்மந்திரி அநிருத்தர்தான் இலங்கையிலேயே இருக்கச் சொல்லி இருப்பதையும் கூறி ஆலோசனை கேட்டார். அவரோ பூங்குழலி கொண்டு வந்திருக்கும் சேதியைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கும்படி கூறினார். சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரில் இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டுவருவதற்காக பழுவேட்டரையர்கள் இரண்டு மரக்கலங்கள் நிறைய போர்வீரர்களை அனுப்பியிருப்பதாக பூங்குழலி கூறினாள். அனைவரும் அதைக் கேட்டு கோபப்பட, இளவரசர் அருள்மொழிவர்மரோ தன்னுடைய தந்தையின் ஆணைக்கு கீழ்ப்பட்டு கலபதியிடம் தம்மை ஒப்புக்கொடுப்பதே முறை எனக் கூறினார். பூங்குழலியிடம் தன்னை அங்கே சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார். கொடும்பாளூர் வேளார், பழுவேட்டரையர்களின் சூழ்ச்சியையும் நந்தினி யார் என்பதையும் பார்த்திபேந்திரன் மூலம் அறிந்து கொண்டதை எடுத்துக் கூறி, போகவேண்டாமெனத் தடுத்தார். இளவரசர் அதையும் மறுத்துக் கிளம்ப, தானும் தொடர்ந்து வருவேன் என சைன்யத்துடன் கிளம்பினார். ஆனால், சைன்யத்துடன் கிளம்பிச் சென்றால் தாமதத்தை ஏற்படுத்தி, தன்னை பார்திபேந்திரனுடன் அனுப்பி விடலாம் என்ற சேநாதிபதியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டார் அருள்மொழிவர்மர். யானையின் காதில் ஏதோ ஓதி அதை வெகுவேகமாக ஓடச்செய்தார். யானையின் மேல் இளவரசருடன் அமர்ந்திருந்த பூங்குழலி, நடப்பது கனவா நனவா எனத் திகைத்து மகிழ்ந்திருந்தாள். நடுவில் அருள்மொழிவர்மர் ஊமை ராணியைப் பற்றி விசாரிக்க, பூங்குழலி அவள் தன் குருவெனக் கூறினாள். ஊமைராணியே தன் பெரிய தாயார் என்றும், அவர் இறந்துவிட்டதாகத் தன் தகப்பனார் நினைத்துக்கொண்டு வருந்தியிருப்பதாகவும், ஒருவேளை தான் சொல்ல முடியாமல் போனால் பூங்குழலி அதைச் சொல்லவேண்டுமென்ற உறுதிமொழியை இளவரசர் அவளிடமிருந்து பெற்றுக்கொண்டார். படைக்கலங்கள் இறங்கியிருந்த துறையை அவர்கள் அடைந்தபோது ஒரு மரக்கலம் தரை தட்டிக் கிடந்ததை கண்டார்கள். என்ன நடந்ததென்றே தெரியாமல் குழப்பமாய் இருந்தது. பூங்குழலி உணவு அருந்தாமல் சோர்வுற்றிருந்தாள். அப்போது அந்தக் கலத்தருகே ஊமைராணி அவர்களுக்காக சமைத்து உணவிட்டாள். இருவரையும் உறங்கச் சொல்லிவிட்டு ஊமைராணி காவல் இருந்தார். உறக்கத்தில் பூங்குழலி ‘அலைகடல்தான் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்’ என்று முணுமுணுக்க, இளவரசர் அவள் மீது பரிவு கொண்டார். விடிந்தவுடன் ஒரு ஓடத்தில் சேநாதிபதியும் ஆழ்வார்க்கடியானும் வந்து சேர்ந்தனர். வரும் வழியில் ஒரு பெரிய மரக்கலம் செல்வதைக் கண்டு அதில் இளவரசர் சென்றிருக்கலாம் என்று கருதி நீரில் குதித்து நீந்தி அந்தக் கலம் நோக்கிச் சென்ற படகொன்றில் ஏறி வந்தியத்தேவன்  சென்றுவிட்டதாகக் கூற இளவரசர் பெரிதும் வருந்தினார். அப்போது ஊமைராணி குதிரையில் வந்து அவர்களை ஒரு இடத்திற்கு வருமாறு சைகை செய்தாள். அங்கு சென்றபோது, இளவரசரைக் கைது செய்ய வந்த மாலுமிகளும் வீரர்களும் இறந்து கிடந்ததைக் கண்டனர். அப்போது கலபதி மட்டும் குற்றுயிரோடு இருக்க, இளவரசர் அவரை மடியில் ஏந்தினார். இளவரசரைக் கைது செய்யும் விவரம், கூட வந்த வீரர்களுக்கு தெரிந்தவுடன் அதற்கு அவர்கள் உடன்பட மறுத்தனர் என்றும், அப்போது வந்த அரபுநாட்டு வீர்கள் தங்களைத் தாக்கிக் கொன்றுவிட்டு மரக் கலத்தையும்  ஓட்டிக்கொண்டு போய்விட்டதாகவும் வருந்திய கலபதி, ‘இளவரசரைக் கைது செய்ய வந்த துரோகத்தினாலேயே இவ்வாறு நிகழ்ந்தது, மன்னிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டு உயிர் விட்டார். பின் இளவரசர் அங்கிருந்த சோழ வீரர்களின் உடல்களை எல்லாம் தக்க மரியாதையுடன் தகனம் செய்தார். சேநாதிபதியிடம் மிகவும் வருந்திய இளவரசர், தன் பொருட்டு வந்தியத்தேவன் அரேபியக் கப்பல் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொண்டதால் அவனைக்  காப்பாற்ற என்ன செய்வதென்று யோசித்தார். அப்போது பூங்குழலியும் ஊமைராணியும் பூங்குழலியின் தமயனைக் கூட்டிக் கொண்டு வந்தனர். அவள் தமயன், அவர்கள் இளவரசரைக் கொல்ல வந்த பாவிகள் என்பது தெரியாமல் அவர்களை இலங்கைக்குக் கூட்டி வந்ததாகவும், இப்போது அரபுக்கப்பலில் அவர்களுடன் வந்தியத்தேவனையும் கூட்டிப் போய் விட்டதாகவும் மன்னிப்புக் கோரி நின்றான். அப்போது பார்த்திபேந்திரனின் கப்பலைக் கண்ட இளவரசர் சற்றும் தாமதியாமல் படகில் ஏறிக் கப்பலை அடைந்து வந்தியத்தேவனைக் காப்பாற்ற கப்பலைத் திசை திருப்புமாறு கட்டளையிட்டார். பார்த்திபேந்திரனும் கப்பலை விரைந்து செலுத்துமாறு கலபதிக்கு ஆணையிட்டான். கடலில் கொந்தளிப்பு எழுந்தது. ஒரு பெரும்புயல் தோன்றத் தொடங்கியிருந்தது. எனவே கப்பல் நகரவேயில்லை. இளவரசர் வந்தியத்தேவனை எண்ணிக் கவலையுற்றார்.  வந்தியத்தேவன் குந்தவையின் ஆணையின் பேரில், ‘இளவரசர் இல்லாமல் நாம் திரும்பக்கூடாது’ என்று உறுதி பூண்டுதான் கடலில் குதித்துப் படகை அடைந்து கப்பலுக்குச் சென்றான். ஆனால் அங்கு இளவரசர் இல்லை என்பதும், படகில் கூட வந்தவர்கள் அபாயகரமானவர்கள் என்பதையும் கப்பலுக்குச் சென்ற பிறகே புரிந்து கொண்டான். அவனை கப்பலின் அடிப்பகுதியில் கட்டிப் போட்டிருந்தார்கள். கடம்பூரில் தேவராட்டம் ஆடிய தேவராளனும் மந்திரவாதி ரவிதாசனும் கப்பலில் வந்தனர். அவர்கள் பேசிக்கொண்டதில், அவர்களின் தலைவி இளையராணி நந்தினி என்பதைத் தெரிந்து கொண்டான். மேலே சத்தம் கேட்க, தன் கட்டுகளை விடுவித்துக்கொண்டு வந்தபோது, அராபியர்களை ரவிதாசனும் தேவராளனும் தாக்கிக் கடலில் எறிவதைக் கண்டு தானும் அவர்களைத் தாக்கலானான். அரேபியர்கள் அனைவரையும் மூவரும் தீர்த்து முடித்தனர். ரவிதாசன் அவனை, தன் கூட்டத்தில் சேரவேண்டும், இல்லையானால் கடலில் தூக்கிப் போட்டுவிடுவேன் என மிரட்ட, வந்தியத்தேவன் அவர்களை யார் எனக் கேட்டான். தாங்கள் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் எனவும், சோழர் குலத்தைப் பூண்டோடு அழிக்க சபதம் எடுத்துச் செயல்படுபவர்கள் எனவும் அவனை தங்களோடு சேர்ந்துவிடும்படியும் கூறினர். வந்தியத்தேவன் மறுக்க, அவனைக் கொன்றுவிட முடிவெடுத்தனர். ஆனால் அவன் அவர்களைத் தாக்கத் தயாராய் இருக்க, அவனைத் தந்திரமாக ஏமாற்றிவிட்டு கப்பலோடு இருந்த படகை எடுத்துக் கொண்டு தப்பித்தனர். நடுக்கடலில் தன்னந்தனியாக மரக்கலத்தில் வந்தியத்தேவன் மாட்டிக் கொண்டான். புயலும் மழையும் ஆரம்பித்தது. சுற்றிலும் இருட்டு பரவியது. கல் மழை, அதைத் தொடர்ந்து பேய் மழை, இடி, மின்னல் என எல்லாம் சேர்ந்து வந்தது. வந்தியத்தேவன், தன் ஆயுள் இங்கேயே முடிந்து போகுமோ, தாம் இறந்ததை குந்தவைக்கு யார் சொல்லுவார்கள் என்றெல்லாம் பரிதவித்தான். அப்போது ஒரு பெரும் இடி அவன் கப்பலில் இருந்த பாய்மரத்தில் விழுந்து பாய்மரத்தில் தீப்பற்றிக் கொண்டது. தன் விதி அத்துடன் முடிந்து விட்டதென வந்தியத்தேவன் நினைத்துக் கொண்டான்.  அதே சமயத்தில் பார்த்திபேந்திரனின் கலத்தில் இருந்து வந்தியத்தேவனைக் கண்டுவிட்ட இளவரசர் இரண்டு வீரர்களை அழைத்துக்கொண்டு அவனைக் காப்பாற்றப் படகில் கிளம்பினார். பார்த்திபேந்திரன் தடுத்தும் கேட்கவில்லை. புயல் மழையில் கொந்தளிக்கும் அலைகளின் நடுவே மிகுந்த சிரமத்திற்கிடையில் கலத்தின் அருகில் படகை எடுத்துச்சென்று வந்தியத் தேவனிடம் ‘குதி குதி’ எனக் கத்தினார். வந்தியத்தேவன் இளவரசரைக் கண்டவுடன் கடலில் குதிக்க, அலையால் உந்தப்பட்ட படகு, கப்பலிருக்கும் திசையை விட்டு விலகிச் சென்றது. இளவரசர் நீரில் குதித்து வந்தியத்தேவனைப் பற்றிக்கொண்டு படகில் சிரமப்பட்டு ஏற்றினார். தீப்பற்றிய கப்பல் பெரிதாய் எரிய ஆரம்பித்து மூழ்கத் தொடங்கியது. வேகவேகமாய்ப் படகை செலுத்திய பின்னும் உடைந்த பெரிய பாய்மரத் துண்டு ஒன்று படகில் மோத, படகு இரண்டாய் உடைந்தது. உடைந்த பாய்மரத்துண்டை இளவரசரும் வந்தியத்தேவனும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். மழையும் இடியும் புயலும் நின்று அமைதி சூழ்ந்தது. ஆனால், இருளில் படகோ, கப்பலோ சென்ற திசை தெரியவில்லை. கரையில், இளவரசர் சென்ற பின் ஆழ்வார்க்கடியானிடம் சேநாதிபதி, ‘நடந்தது கூட நல்லதற்குத்தான். இளவரசர் பார்த்திபேந்திரனின் கலத்தில் ஏறி காஞ்சிக்குச் சென்றுவிட்டால் தானும் கிளம்பித் தஞ்சைக்குச் செல்வதாகக் கூறினார். ஆழ்வார்க்கடியான், ஊமை ராணியைப் பார்த்தால் கையோடு அழைத்து வரும்படி அநிருத்தர் ஆணையிட்டிருப்பதாகக் கூறிவிட்டு ஊமை ராணியை நோக்கிச் சென்றான். பூங்குழலியை அருகில் அழைத்த சேநாதிபதி அவளிடம், ‘இளவரசர் பற்றிப் பகல்கனவு காணாதே; அவருக்கு என் மகள் வானதிதான் மணப்பெண்’ எனக் கூறி எச்சரிக்க, பூங்குழலி சினமுற்று அங்கிருந்து வேகமாக அகன்றாள். தன் படகை எடுத்துக்கொண்டு புயலின் அல்லோலகங்களுக்கு நடுவே பூதத்தீவில் ஒதுங்கி, புயலின் ஆவேசத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது கடலின் ஓரத்தில் பாய்மரத்தில் ஒருவனைக் கண்டு அவனை கரையேற்றினாள். அவன் முதல்நாள் இடிவீழ்ந்ததில் ஒரு மரக்கலம் எரிந்ததைச் சொல்லி, அதில் பலர் காயப்பட்டிருக்கலாம் எனக் கூறினான். சேநாதிபதியின் வார்த்தையால் பெரிதும் வருந்தியிருந்த பூங்குழலி, தன் ஓடத்தை வைத்துக்கொண்டு ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றவாவது செய்யலாம் என நினைத்து கடலுக்குள் இறங்கினாள். இளவரசர் அவளை சமுத்திரகுமாரி என்று அழைத்ததை நினைத்துக் கொண்டாள். இன்னேரம் அவர் கோடியக்கரை சென்றிருப்பார், அரச குடும்பங்கள் அனைத்தும் இப்படித்தான் என்று நினைத்துக்கொண்டு  பாட ஆரம்பித்தாள். ‘இடி இடித்து எண்திசையும்வெடிபடும் அவ்வேளையிலேநடனக் கலை வல்லவர் போல்நாட்டியந்தான் ஆடுவதேன்?’ ஒரு இரவு முழுவதும் கடலில் பாய்மரத்தைப் பற்றி மிதந்து கொண்டிருந்த வந்தியத்தேவன், முழுவதுமாய் நம்பிக்கை இழந்திருந்தான். இளவரசர் நான்கு நாட்கள் வரை மிதந்து  உயிர் பிழைத்தவரகள்கூட உண்டு என அவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தன்னால் அல்லவா இளவரசருக்கு இவ்வாறு ஆனது என வந்தியத்தேவன் வருந்திக் கொண்டிருந்தான். அப்போது பூங்குழலியின் பாட்டு இனிமையாக அவர்கள் காதில் விழுந்தது. பூங்குழலி  இவர்களைக் கண்டு அதிசயித்து நின்றாள். இளவரசர் வந்தியத்தேவனைப் படகில் ஏற்றி, தானும் ஏறினார். இரண்டாம் பாகம் முற்றிற்று.

பொன்னியின் செல்வன் – 13

பொன்னியின் செல்வன் – 13

சின்ன பழுவேட்டரையரிடம் பாதாளச் சிறையின் சாவியைப் பெற்றுக்கொண்ட குந்தவை, வானதியை அழைத்துக்கொண்டு வைத்தியர் மகனைக் காணச் சென்றாள். பொற்காசுகள் வார்ப்படம் செய்யும் தங்கச்சாலையின் பின்புறமாகப் பாதாளச் சிறைச்சாலை இருந்ததால் அதற்கான கட்டுக்காவலும் அதிகமாக இருந்தது. அங்கு சென்றபோது சேந்தன் அமுதன் தேவாரப் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தான். அவன் யார் என்பதையும், அவன் வந்தியத்தேவனுக்குச் செய்த உதவியையும் பற்றி குந்தவை தெரிந்து கொண்டாள். வைத்தியர் மகனைப் பழுவூர் இளையராணியின் ஆட்கள் அழைத்துப் போனதையும், வந்தியத்தேவன் காவலர்களிடம் இருந்து தப்பி இலங்கைக்குச் சென்றுவிட்டான் என்பதையும் தெரிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். சேந்தன் அமுதன் விடுதலை செய்யப்பட்டான். பல்வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், முக்கியமான நிருபம் (கடிதம்) ஒன்றை ஆதித்த கரிகாலனுக்கு எழுதி முடித்தாள் நந்தினி. அதில், ‘அரசிளங்குமரா! தயங்கி, பயந்து இந்த நிருபம் எழுதத் துணிந்தேன். இராஜ்யத்தின் நிலைமையைப் பற்றிப் பலவிதமான செய்திகள் காதில் விழுகின்றன. தாங்கள் எதையும் கவனிப்பதில்லை. நோயினால் மெலிந்திருக்கும் தங்கள் தந்தை பலமுறை சொல்லி அனுப்பியும், தாங்கள் தஞ்சைக்கு வரவில்லை. இதற்குக் காரணம் நான்தானோ என்ற எண்ணம் என்னை வதைக்கிறது. தங்களை ஒருமுறை சந்தித்தால் எல்லாச் சந்தேகங்களையும் போக்கி விடுவேன். அதற்குத் திருவுளம் இரங்குவீர்களா? தஞ்சைக்கு வர விருப்பமில்லாவிட்டால், கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சந்திக்கலாம். நான் இன்று தங்கள் பாட்டியின் ஸ்தானத்தில் இருக்கிறேன். நாம் சந்தித்துப் பேசுவதில் என்ன ஆட்சேபம் இருக்க முடியும்? இதைக் கொண்டுவரும் வீர இளைஞர், சம்புவரையர் குமாரரைத் தாங்கள் பூரணமாக நம்பி அவரிடம் எந்தச் செய்தியும் சொல்லி அனுப்பலாம் – இங்ஙனம், துரதிர்ஷ்டத்தின் கூடப் பிறந்த அபாக்கியவதி நந்தினி’ என்று எழுதி இருந்தது. அந்த நிருபத்தை, அவளது கவர்ச்சியில் ஏற்கெனவே மயங்கிப் போயிருந்த கந்தமாறனிடம் கொடுத்து, அதைக் கரிகாலரிடம் சேர்ப்பிக்கும்படியும், எப்படியும்  அவரைக் கடம்பூருக்கு அழைத்து வரும்படியும் வேண்டிக் கொண்டாள். வந்தியத்தேவன் கந்தமாறனை முதுகில் குத்தியிருக்கமாட்டான் என்றும் அன்று நிலவறைச் சந்திப்பின்போது தன்னை பழுவேட்டரையர் மகளாக அழைத்ததையும் நினைவுபடுத்தினாள். கந்தமாறன் யோசித்து முடிக்குமுன் பெரிய பழுவேட்டரையர் ஆங்காரத்துடன் வந்து சேர்ந்து கந்தமாறனை கேள்விகளால் துளைத்தார். நந்தினி பொறுமையாக அதற்கெல்லாம் பதில்சொல்லி அவரை சமாளித்து, கந்தமாறன் ஆதித்த கரிகாலனுக்கு ஓலை கொண்டுசெல்வதைப் பற்றிக் கூற, பழுவேட்டரையாரால் நந்தினியை எதிர்த்து எதுவும் சொல்ல முடியவில்லை. கந்தமாறன் சென்றபிறகு, தன்னை அவன் எதிரில் சந்தேகப்பட்டுப் பேசியதற்காகப் பழுவேட்டரையரிடம் பெரிதாய் வருந்தி, தன்மேல் சந்தேகம் உள்ளதானால் வாளெடுத்துக் கொன்றுவிடுங்கள் என்றெல்லாம் கூறி இளக வைத்தாள். பின் பழுவேட்டரையர் அவளை சமாதானப்படுத்தத் தொடங்கினார். அங்கே இலங்கையில்.. வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் இளவரசரைத் தேடிச் சென்றுகொண்டிருந்தபோது வழியில், பார்த்திபேந்திரப் பல்லவனைச் சந்திக்க நேர்ந்தது. வந்தியத்தேவன், தான் வந்த காரணத்தைத் தெரிவிக்காமல் பேச்சை முடித்துக்கொண்டான். ஆழ்வார்க்கடியான் பார்த்திபேந்திரனுடன் வந்திருந்த ஆட்களைக் கூர்ந்து பார்த்தான். பார்த்திபேந்திரன் சென்றவுடன், அந்த ஆட்கள் திருப்பியம்புறம் பள்ளிப்படையில் சோழர் குலத்தை அழிக்க சபதம் எடுத்துக் கொண்டவர்கள் என்று வந்தியத்தேவனிடம் கூறினான். வந்தியத்தேவன் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு பூங்குழலியின் தமையன் இலங்கைக்குச் சென்றதைப்பற்றி அவள் தந்தை குறிப்பிட்டதை  நினைத்துக்கொண்டான். இலங்கையின் சில பகுதிகள் சிங்கள மன்னன் மகிந்தனிடம் இருப்பதாகவும், சோழப் படை கைப்பற்றிய பகுதிகளில் இளவரசர் அருள்மொழி வர்மர் கருணையுடன் இலங்கை மக்களிடம் நடந்து கொள்வதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறினான். அப்போது வீதியில் பெரிய யானை மீதான அம்பாரியில் சீன யாத்ரிகர்கள் அமர்ந்திருக்க, அதன் மீதிருந்த பாகனை ஆழ்வார்க்கடியான் கூர்ந்து கவனித்து அது இளவரசர் அருள்மொழிவர்மர்தான் என்பதைப் புரிந்து கொண்டான். ஆனால் வந்தியத்தேவன் அதைக் கவனித்திருக்கவில்லை. ஒரு காவலாளி கொடும்பாளூர் முத்திரை மோதிரத்தைச் சரிபார்த்து அவர்களை அழைத்துச் சென்றான். காவலாளியும் ஆழ்வார்க்கடியானும் இரு குதிரைகளில் ஏறிக்கொள்ள, வந்தியத்தேவனுக்குக் குதிரை வழங்கப்படவில்லை. கோபமடைந்த வந்தியத்தேவன் காவலாளியைத் தள்ளிவிட்டு, தாண்டிப்போன குதிரைகளைப் பின் தொடர ஆரம்பித்தான். வெகுதூரம் சென்றபிறகு சோழர் சைன்யத்துடன் தாவடிகள் காணப்பட்டது. அப்போது முன்சென்ற குதிரைகளிலிருந்து ஒருவர் மட்டும் வேகமாக வந்து வந்தியத்தேவனின் முகத்தில் குத்திக் கீழே தள்ளி அவன் இடுப்பிலிருந்த ஓலையை எடுத்துப் படிக்கத் தொடங்கினார். வந்தியத்தேவனால் அசையவே முடியவில்லை. அப்போது சுற்றியிருந்த அனைவரும் அந்த வீரனின் முகத்தைக் கண்டு ‘பொன்னியின் செல்வர் வாழ்க’ எனக் கோஷமிட, வந்தியத்தேவன் திகைத்தான். பின் அனைவரும் விலகிச் செல்ல, அருள்மொழிவர்மர் விஷயங்களைக் கேட்டறிந்தார். ‘பார்த்திபேந்திரன் ஆதித்த கரிகாலனைக் காஞ்சிக்கு அழைத்து வரும் தூதனாக வந்திருப்பதை அறிந்தே, உங்களைச் சந்திக்கும் முன்பு அவரைச் சந்திப்பதைத் தவிர்த்தேன்’ என இளவரசர் கூறினார். ஆழ்வார்க்கடியான் தன்னை இலங்கையிலேயே இருக்கும்படி அநிருத்த பிரம்மராயர் சொல்லி அனுப்பியதாகக் கூறினான். மூன்று பேரிடமும் இருந்து வெவ்வேறு விதமான செய்திகளை அடைந்த இளவரசர் அமைதி காத்தார். பின்னர் பார்த்திபேந்திரனைச் சந்திப்பதற்காக அநுராதபுரம் கிளம்பிய அருள்மொழிவர்மருக்கு, செல்லும் வழியில் புத்தரின் பாதங்களில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு செய்தி கிடைத்தது. அன்று இரவில் ஒரு படித்துறை தடாகத்தின் அருகே மூவரும் சென்றனர். அங்கு ஒரு பிட்சு வந்து அவர்களை ரகசிய வழியொன்றில் நிலவறை விகாரம் ஒன்றின் உள்ளே அழைத்து சென்றார். அங்கு ஒரு கருங்கல் மண்டபத்தில் தங்க சிங்காதனம், மணிமகுடம், உடைவாள், செங்கோல் அனைத்தும் இருந்தன. அங்கிருந்த தலைமைப் பிட்சு இளவரசரை அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து இலங்கை அரசுரிமையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அருள்மொழி வர்மர், தான் அவருடைய வேண்டுகோளுக்காகப் பெருமைப்படுவதாகவும் தன் தந்தையும் அரசருமான சுந்தர சோழருக்கு, தான் கீழ்ப்பட்டவன் என்பதால் அவரின் சொல்லின்றி எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி மறுத்தார். வந்தியத்தேவன் இளவரசரின் பெருந்தன்மையை எண்ணிப் பெருமிதப்பட்டவாறே இருக்க, மூவரும் வெளிவந்தனர். அதைப்பற்றிப் பேசிக்கொண்டே வீதியில் நடந்தபொழுது கைதட்டும் ஓசை கேட்க, திரும்பிப் பார்க்கையில் ஓர் உருவம் நின்றிருந்தது. அதை நோக்கி இருவரையும் அழைத்துக் கொண்டு இளவரசர் நகர, அவர்கள் இருந்த இடத்தில் இருந்து மேல் மாட முகப்பு இடிந்து வீழ்ந்தது. ஒரு நிமிடம் தாமதித்திருந்தால்கூட மூவரும் இறந்திருக்கக் கூடும். காப்பாற்றிய அந்த உருவத்தைக் கண்ட வந்தியத்தேவன் திகைத்தான். ஏனெனில் அந்தப் பெண் பழுவூர் இளையராணி நந்தினியின் உருவ அமைப்பில் இருந்தார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த உருவம் மறைந்து விட, சித்தப் பிரமையோ எனக் குழம்பினான். ஒரு மண்டபத்தை அடைந்து அங்கு இரவைக் கழிப்பதற்காக மூவரும் தங்கினர். அப்போது வந்தியத்தேவன் அந்தப் பெண்மணியைப் பற்றிக் கேட்க, அருள்மொழி வர்மர் அவளைப்பற்றிச் சொல்லலானார். ‘சிறு வயதில் என்னைப் பொன்னி நதியில் இருந்து காப்பாற்றிய பெண்மணி இவர்தான். நான் இலங்கைக்கு வந்தபிறகு, ஒரு சமயம் இரவில் எழும் விசித்திரமான குரலைக் கேட்டு என் வீரர்கள் அச்சப்பட, அது இந்தப் பெண்மணியின் குரல்தான் என்பதை நான் கண்டுகொண்டேன். அவரால் பேச முடியாது என்றும், அவர் என்மீது அளப்பரிய பாசம் கொண்டவர் என்பதையும் அறிந்து கொண்டேன். அப்போது அங்கு குளிர்காய்ச்சல் பரவி இருந்ததால், உடனே அங்கிருந்து நாங்கள் கிளம்பி விட வேண்டும் என அந்த மாதரசி கேட்டுக்கொள்ள நாங்கள் அங்கிருந்து கிளம்பி விட்டோம். அது மட்டுமல்லாமல் என்னைத் தொடரும் மறைமுக எதிரிகள், வனவிலங்குகள், மலைப்பாம்புகள் போன்ற பல அபாயங்களிலிருந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறார்’ என்று கூறியவர், அவர்களை படுத்துக்கொள்ளும்படி கூறினார். அப்பொழுது அந்த மூதாட்டி அங்கு வந்து, அவர்களைப் பின் தொடருமாறு சைகை செய்ய மூவரும் அங்கிருந்து கிளம்பினர். அவர்களை ஒரு ரகசிய  குகைக்கு அழைத்துச்சென்று, குகையின் சுவர்களில் தான் வரைந்திருந்த  சித்திரங்களைக் காட்டினாள். அந்தச் சித்திரங்களில் இருந்து,  ஒரு பெண்ணைப் பார்த்து ஒரு வாலிபன் காதல் கொள்வதும், அவர்கள் மகிழ்ந்திருப்பதும், ஒரு தருணத்தில் அந்த வாலிபன் பிரிந்து செல்ல, இந்தப் பெண் தொடர்ந்து சென்று அவனை ஒரு நகரத்தில் பார்த்தபோது, அவ்வாலிபன் அரசனாகப் பட்டம் சூடி நிற்பதைக் கண்டு அந்தப் பெண் மனமுடைந்து கலங்கரை விளக்கில் இருந்து விழுவதையும், அவளை ஒருவர் காப்பாற்றியதையும் அறிந்து கொண்டார்கள். பின் அந்தப் பெண் மனநிலை சரியில்லாத வெறியளாகவும் கர்ப்பமுற்றும் இருப்பதையும், அங்கிருந்த ராணி ஒருத்தியும் அப்போது கர்ப்பமாக இருப்பதையும்,  அந்தப் பெண்ணுக்கு இரு குழந்தைகள் பிறப்பதையும், ராணி அந்தக் குழந்தைகளில் ஒன்றை வளர்க்கக் கேட்பதையும், இந்தப் பெண் இரண்டு குழந்தைகளையுமே விட்டுவிட்டு ஓடிவந்து விட்டதையும், தூரமாய் இருந்து இரு குழந்தைகளையும் அவ்வப்போது பார்ப்பதுவுமான பல செய்திகளை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். பின்பொரு நாள் காவிரியில் விழுந்த குழந்தையை அப்பெண் காப்பாற்றுவது  போன்ற சித்திரத்தைப் பார்த்ததும்,  ‘அந்தப் பெண் நீங்கள்தான்’ என அருள்மொழி வர்மர் சுட்டிக்காட்ட, அந்த மூதாட்டி இளவரசரை அணைத்துக்கொண்டு கண்ணீர் பெருக்கினாள். பின் இன்னொரு சுவரில் வரவிருக்கும் அபாயங்களை சித்திரத்தில் எழுதி அருள்மொழிவர்மரிடம் காட்டினாள். குகையின் மேல் நின்று பார்த்தபொழுது இவர்கள் படுத்திருந்த இடம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தொடரும்.

பொன்னியின் செல்வன் – 12

பொன்னியின் செல்வன் – 12

இலங்கையில் நிலைமை அவ்வாறிருக்க, பழையாறையிலிருந்து குந்தவையும் வானதியும் தஞ்சைக்குக் கிளம்பினார்கள்.  நாட்டில் அரசியல் சூழ்ச்சி நடைபெறுவதை வந்தியத்தேவன் மூலம் கேட்டதிலிருந்து, உடல்நலம் சரியில்லாத தன் தந்தையுடன், சகோதரர்களும் அருகே இல்லாத சூழ்நிலையில், தான் அங்கே இருப்பதுதான் நியாயம் என குந்தவைக்குத் தோன்றிவிட்டது. செல்லும் வழியில் வானதி, அருள்மொழிக்கு ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயர் வந்த காரணத்தைக் குந்தவையிடம் கேட்க, அவள் சொல்லலானாள். ‘”ருள்மொழிவர்மன் குழந்தையாக இருக்கையில் படகில் குடும்பத்துடன் பொன்னி நதியில் செல்கையில், தவறி நதியில் விழுந்து விட்டான். அனைவரும் பதற, வீரர்கள் நதியில் குதித்துத் தேட, குழந்தை கிடைக்காமல் எல்லோரும் பயந்து விட்டனர். அப்போது படகிலிருந்து சற்று தூரத்தில் ஒரு பெண்ணுருவம் குழந்தையை ஏந்தியபடி தோன்றியது. உடனே சுந்தரசோழர் குதித்து குழந்தையைப் பெற்றுக்கொண்ட வினாடியில் அந்தப் பெண்ணுருவம் சடாரென்று மறைந்து விட்டது. குழந்தையைப் படகில் கொண்டு வந்து சேர்த்த சுந்தரசோழரோ மூர்ச்சையுற்றுப் போனார். பின் அந்தப் பெண் யாரெனத் தெரிந்து கொள்ள முடியாததால் சோழநாட்டின் தெய்வமான பொன்னித் தாயே காப்பாற்றிக் கொடுத்தாள் என்ற பொருளில் ‘பொன்னியின் செல்வன்’ என அருள்மொழிவர்மனை அழைக்கத் தொடங்கினர்” என குந்தவை சொல்லி  முடித்தாள். இருவரும் தஞ்சையை அடைந்தார்கள். வரவேற்ற நந்தினியிடமும் பழுவேட்டரையர்களிடமும் குந்தவை பூடகமாக வார்த்தைப் போர் நிகழ்த்த ஆரம்பித்தாள். நந்தினியும் அதைப் புரிந்து கொண்டு திருப்பி அடிக்க, அந்தச் சொற்போரில் கலந்துகொள்ள முடியாமலும் புரியாமலும் வானதி தவித்தாள். அன்றைய முன்னிரவில் வானதி தவிர, அனைத்துப் பெண்களும் நவராத்திரி விசேஷ பூஜைக்காக துர்க்கை கோவிலுக்குச் சென்று விட, வானதி தனித்து மாடத்தில் நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு அழுகுரலும் புலம்பலும் கேட்க, கேட்ட இடத்தை நோக்கி நடந்தாள். “என்னை ஏன் உயிருடன் சித்ரவதை செய்கிறாய்? உன்னைத் தெரியாமல் கொன்று விட்டதற்கு ஏன் இப்படிப் பழிவாங்குகிறாய்?” என்றெல்லாம் சொல்லிப் புலம்பியும் அழுதும் கொண்டிருந்தது சுந்தர சோழர்தான் என்று தெரிந்து வானதி திகைத்துப் போனாள். அப்படி அவர் பார்த்து புலம்பிக் கொண்டிருந்த உருவம் எதுவென எட்டிப் பார்த்தபொழுது, பழுவூர் இளையராணியின் உருவம் போல மங்கலாகத் தெரியவும் வானதி அங்கிருந்து நகர்ந்து செல்ல முயற்சித்து மூர்ச்சையடைந்தாள். அடுத்த நாள் காலையில் சுந்தர சோழர் குந்தவையை அழைத்து வானதியைப் பற்றி விசாரித்துவிட்டு,  தஞ்சை அரண்மனை இளம்பெண்களுக்கு ஏற்றதல்ல. இங்கு பேய் நடமாடுகிறது என்றெல்லாம் சொல்ல, குந்தவை  அவரின் உடல் தேறும் வரை இங்குதான் இருப்பேன் என மறுமொழி கூறினாள். பெருமூச்செறிந்த சுந்தரசோழர், இனி தான் உடல்நிலை தேற வாய்ப்பில்லை என்றும் அதற்கு தன் மனக்கவலை மட்டுமே காரணம் எனவும் கூறினார். நடக்கும் சதிகளைப் பற்றி குந்தவை லேசாக எடுத்துரைத்து, மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன என்று கூற, சுந்தரசோழர் மகிழ்ந்து செம்பியன் மாதேவியை அழைத்து முதலில் அவர் சம்மதம் கேட்டு மதுராந்தகனுக்கே பட்டம் கட்டி விடலாம் எனக் கூறினார். குந்தவை துணுக்குற்று, “இது உங்கள் வாரிசுக்கு நீங்கள் செய்யும் துரோகமில்லையா?” என்று கேட்க, “இல்லை, என் சாபக்கேட்டை என் புதல்வர்களுக்குக் கடத்த விரும்பவில்லை” என்று சுந்தரசோழர் சொல்லவும் குந்தவை அதிர்ந்தாள். மேலும் சொல்லும்படி அவள் வற்புறுத்த, சுந்தரசோழர் அவளிடம் பின்வரும் கதையைக் கூறினார். “என் வாலிப பிராயத்தில், இலங்கையில் போருக்குச் சென்றிருந்தேன். போர் தோல்வியில் முடியவே, மனம் குமைந்து யாரும் அறியாமல் கடலில் குதித்து ஒரு தீவில் கரை ஒதுங்கினேன். எதிர்பாராத ஒரு தருணத்தில் என்னைக் கொல்ல வந்த கரடி ஒன்றிடமிருந்து என்னைக் காப்பாற்றினாள் கரையர் குலப் பெண்ணொருத்தி. அவள் வாய் பேச முடியாத ஊமைப் பெண். நான் அவளுடன் அந்தத் தீவில் சில நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தேன். ஒருநாள் என்னைத் தேடிக் கொண்டு நம் நாட்டினர் கப்பல்களில் வந்து இறங்கினர். அந்தப் பெண்ணிடம் கண்டிப்பாகத் திரும்பி வருவதாக வாக்களித்துவிட்டு நான் நம் நாட்டுக்குத் திரும்பினேன். உடனே நான் ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்பொழுது என் பாட்டனார் பராந்தக சோழன் சாகும் தருவாயில் இருந்தார். சோழநாட்டின் மேன்மையை நிலை நாட்ட வேண்டும் என்று என்னிடம் உறுதி வாங்கிக் கொண்டார். அவருக்குப் பின் என் பெரியப்பா கண்டராதித்தர் சக்ரவர்த்தியானார். அப்போதுதான் அவர் மழவரையர் மகளான செம்பியன் மாதேவியை மணந்திருந்தார். ஆனபோதும் அவர் என்னையே யுவராஜனாக பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். இருவரும் பட்டாபிஷேகம் முடித்து மக்களுக்கு அரண்மனை மேன்மாடத்தின் முன்றிலில் காட்சிதர நின்றிருந்தோம். வாழ்த்துத் தெரிவித்த மக்களுக்கிடையே கண்ணீருடன் அந்த ஊமைப் பெண்ணின் முகம் தெரிய, நான் திகைத்து மயங்கி விழுந்தேன். மயக்கம் நீங்கி எழுந்தவுடன் என் நண்பன் அநிருத்தனை அழைத்து அந்தப் பெண்ணின் அடையாளங்களைச் சொல்லி, கண்டுபிடிக்க வேண்டுமெனக் கண்டிப்புடன் கேட்டிருந்தேன். கோடியக்கரையில் நான் சொன்ன அடையாளங்களுடன் ஒரு பெண் இருப்பதாகவும் அழைத்தால் வர மறுத்துவிட்டதாகவும் அநிருத்தன் கூற, நான் நேரடியாகவே சென்றேன். ஆனால், அங்கு சென்று விசாரித்தபொழுது அவள் கலங்கரை விளக்குத் தூணின் மீது ஏறி விழுந்து விட்டதாகவும் பொங்கி வந்த கடலின் சீற்றத்தில் மூழ்கிவிட்டிருக்கலாம் எனவும் கூறினார்கள். நான் அளவுகடந்த துன்பம் அடைந்தாலும், தஞ்சைக்கு அவளை அழைத்து வந்தால் நேரும் சங்கடங்கள் இல்லாமல் போனதை எண்ணி ஒருவகையில் அமைதியும் அடைந்து தஞ்சைக்குத் திரும்பி ராஜ்யப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்தேன். ஆனால், அவளின் உருவம் என் கனவுகளில் வந்து அலைக்கழிக்கும்.  நாளடைவில் அதையெல்லாம் மறந்துவிட்டிருந்தாலும் பின்பொருநாள் அருள்மொழிவர்மன் காவிரியில் விழுந்த நாளன்று காவிரியம்மனே வந்து காத்து நின்றதாக  நீங்கள் கருதினீர்கள். ஆனால், வந்தது அவள்தான்.  அதேபோல, ஆதித்த கரிகாலன் இளவரசப் பட்டம் ஏற்றதும் தாய்மார்களின் ஆசி பெற அந்தப்புரம் சென்ற அவனுடன் நான் சென்றபோது, தாய்மார்களுடன் அவளது ஆவியும் நின்றிருந்ததிகைக்க கண்டு அன்றும் நான் மூர்ச்சையுற்றேன். அப்போதெல்லாம்கூட என் குற்றவுணர்வும் சித்தப்பிரமை காரணமாகவும் இப்படி எண்ணிக் கொள்கிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போது நள்ளிரவில் நாலைந்து முறையாக வந்து இம்சை செய்கிறாள். அதைப் பார்த்துதான் வானதி மயங்கி வீழ்ந்திருக்க வேண்டும். அதனால்தான் சொல்கிறேன், இந்த சாபமுள்ள சோழ சாம்ராஜ்யம் என் பிள்ளைகளுக்கு வேண்டாம். மதுராந்தகனுக்குக் கொடுத்து விடலாம்” என சுந்தர சோழர் சொல்லவும், குந்தவை குறுக்கிட்டு “இதற்கு செம்பியன் மாதேவி பாட்டி ஒத்துக்கொள்வாரா? உலகம் என்ன சொல்லும்? அரசாள்வதற்கென எந்தத் தகுதியும் வேண்டாமா?” என்றெல்லாம் கேட்டாள். சுந்தரசோழர் அனைத்தையும் மறுத்து வாதிட்டு, உடனடியாக செம்பியன் மாதேவியை அழைத்து வருமாறு குந்தவையிடம் வலியுறுத்தினார். அப்போதைக்கு சுந்தரசோழரை சமாதானம் செய்து, தன் அன்னையைத் தனியே அழைத்து, “ஒரு கணமும் அரசரைத் தனிமையில் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று குந்தவை எச்சரித்தாள். ஆதுர சாலை எனப்படும் தர்ம வைத்தியசாலை ஒன்றைத் தஞ்சையில் துவக்கி வைத்தாள் குந்தவை. தனக்குரிய சர்வமானிய நிலங்களை அந்த ஊர் விவசாயிகளே சகல உரிமைகளுடன் அனுபவித்துக்கொண்டு, ஆதுரசாலை வைத்தியருக்கு ஆண்டு தோறும் நெல்லும், தினமும் பசும்பாலும்,  ஆட்டுப்பாலும்,  இளநீரும் அனுப்ப வேண்டியது என தான சிலா சாஸனம் செய்து கொடுத்தாள் குந்தவை. அந்த விழாவில் சுந்தர சோழர் பிள்ளைகளுக்கு மக்கள் கொடுத்த ஆசி முழக்கங்கள் பெரிய பழுவேட்டரையருக்கு எரிச்சலை அளித்தன. காயமுற்று சிகிச்சை பெற்றுக் கொண்டு, நந்தினி அரண்மனையில் இருந்து வந்த கந்தன்மாறனைப் பார்க்கக் குந்தவை சென்றாள். குந்தவை வந்த குதூகலத்தில், கந்தன்மாறன் இன்னும் அதிகமான குற்றச்சாட்டுகளை வந்தியத்தேவன் மீது  புனைந்தான். அப்போது வைத்தியர் மகனை கோடிக்கரையில் இருந்து ஒற்றனென்று பிடித்துக் கொண்டு வந்ததை மூவரும் பார்த்தனர். நந்தினி சூழ்ச்சியாகப் பேசி, வந்தியத்தேவனை இலங்கைக்கு அனுப்பிய விஷயத்தைக் குந்தவையிடமிருந்து வரவழைத்தாள். வந்தியத்தேவனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லி குந்தவையை வருத்தினாள் நந்தினியிடம் சொற்போரில் தோற்றுப்போன குந்தவை, சினத்துடன் சின்ன பழுவேட்டரயரைச் சந்தித்தாள். தான் சக்கரவர்த்திக்கு மூலிகை தேடி வர அனுப்பித்த வைத்தியர் மகனை ஒற்றனென்று சிறைப் பிடித்தது தவறென்று கூறி விடுதலை செய்ய வேண்டினாள். சின்ன பழுவேட்டரையர் பாதாளச் சிறையின் சாவியைக் குந்தவையிடம் கொடுத்து, “நீங்களே விடுதலை செய்து அதற்குப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். குந்தவை அதை ஏற்றுக்கொண்டு சாவியுடன் சிறைச்சாலையை நோக்கி நடந்தாள்.  சின்ன பழுவேட்டரையர் அதிருப்தியுடன் விலகி நடக்கலானார்.

பொன்னியின் செல்வன் – 11

பொன்னியின் செல்வன் – 11

முடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே நூறு அக்கினிக் குண்டங்கள் தோன்றி அணைந்தன. புகையோ விறகோ எதுவுமில்லாது ஒளிர்ந்து பின் அணைந்து பின் புதிதாகத் தோன்றின. ஆனால் வெகுசீக்கிரத்தில் அவன் புத்தி வேலை செய்து, கந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் அந்த வாயு வெளிவரும்போது ஏற்படும் தோற்றம் என்று உணர்தியது. பின் வந்தியத்தேவன் பூங்குழலியை வீடு திரும்பும்படி அழைத்துக்கொண்டு, திரும்பும் வழியில் இலங்கைக்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு பூங்குழலியை வந்தியத்தேவன் கேட்க, அவள் பதிலேதும் அளிக்கவில்லை.மறுநாள், தியாகவிடங்கக் கரையரை கோவிலில் சந்தித்தபொழுது அவரும் பூங்குழலியை அழைத்துச் செல்லும்படி கேட்குமாறும், ஆனால் அவளிடம் எந்த ஆசை வார்த்தைகளைப் பேசியும் கோபப்படுத்திவிட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார். அங்கிருந்து கடலுக்குச் சென்று குளிக்கலாம் என்று கடலுக்குள் இறங்கியவன், தான் கழற்றி வைத்திருந்த தன் துணிகளில் இருந்து ஓலையை எடுத்துக்கொண்டு பூங்குழலி ஓடுவதைப் பார்த்து அதிர்ந்துபோய் ஓடி வந்தான். பூங்குழலி வெகு வேகமாக விரைந்து காட்டுப் பகுதியில் மறைந்து கொள்ள, வெகுதூரம் அவளைத் தேடி காட்டுக்குள் வந்தியத்தேவன் அலைந்தான். ஒரு இடத்தில் பூங்குழலி ஓலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, வந்தியத்தேவனைச் சிறைப்பிடிக்க வைத்தியர் மகன் பழுவேட்டரையரின் ஆட்களைக் கூட்டி வந்திருப்பதாகக் கூறி, அதில் இருந்து தப்புவிப்பதற்காகவே திசைதிருப்பி வேகமாகக் காட்டுப்பகுதிக்குக் கூட்டி வந்ததாகக் கூறினாள். பூங்குழலியின் புத்திசாலித்தனத்தை நினைத்து ஆச்சரியப்பட்டு நன்றி சொல்லிவிட்டு, இலங்கைக்கு கூட்டிச் செல்லும்படி மறுபடியும் வேண்ட, பதிலாக பூங்குழலி, தான் கேட்கும் உதவியைச் செய்ய வேண்டும் என்ற சத்தியத்தை வாங்கிக்கொண்டாள். அவனை அங்கேயே மறைந்து இருக்குமாறும் இரவு வரும் வரை வெளியே வரவேண்டாமெனவும் சொல்லி ஒரு மண்டபத்தில் மறைந்து இருக்கச் சொன்ன பூங்குழலியிடம் ஆபத்தான மிருகங்கள் வருமே என வந்தியத்தேவன் தன் பயத்தை வெளிப்படுத்தினான். வஜ்ராயுதம் போன்ற ஒரு ஆயுதத்தை எடுத்துக் கொடுத்து ஒரு சிறுத்தையை அதில்தான் கொன்றேன் எனக் கூறிக் கிளம்பிய பூங்குழலியை வந்தியத்தேவன் பிரமிப்புடன் பார்த்தான். காரணம், அது திருக்கை மீனின் எலும்பு. இரவில் முன்னேற்பாடுடன் வந்து பூங்குழலி கொடுத்த சமிக்ஞையின் பேரில் வெளிவந்து இருவரும் ஓசைப்படாமல் படகைத் தள்ளிக் கிளம்பினர். அவள் படகைக் கையாளும் லாவகம் குறித்துப் பாராட்டி அவளின் தந்தை அவளை அழைத்துச் செல்லச் சொன்னதைக் கூறிய வந்தியத்தேவனிடம், கடலுக்கு வந்துவிட்டால் சமுத்திர ராஜனே அவளது தந்தை எனவும் அவள் சமுத்திரகுமாரி எனவும் பூங்குழலி கூறினாள். வந்தியத்தேவன் அவளிடம் பேசித் தெரிந்து கொண்டதில் அவள் சாதாரண பெண்களைப் போல அல்ல என்றும் பொன்னியின் செல்வனான அருள்மொழிவர்மரின் பெயரைச் சொன்னால் அவளின் முகத்தில் நாணமும் உடலில் குழைவும் ஏற்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டான். கடலில் ஏற்படும் ஆபத்துகளைப் பூங்குழலி சொல்லச்சொல்ல, வந்தியத்தேவன் அதைக் கேட்டுக் குழம்பி கடலில் குதித்து விட, பூங்குழலி பெரும்பாடுபட்டு அவனைக் காப்பாற்றிப் படகில் ஏற்றினாள். மறுபடியும் கண்விழித்த போது அவள் பாடிக் கொண்டிருந்தாள். ‘வாரிதியும் அடங்கி நிற்கமாருதமும் தவழ்ந்து வரகாரிகையென் உள்ளந்தனிலேகாற்று சுழன்றடிப்பதேன்?அலை கடலும் ஓய்ந்திருக்கஅகக்கடல்தான் பொங்குவதேன்?வந்தியத்தேவன் அவள் மனதில் ஏதோ சோகமும் ஏமாற்றமும் சஞ்சலப் படுத்திக் கொண்டிருக்கின்றன என்று எண்ணினான். அவளை சந்தேகப்பட்டது மிகவும் தவறெனவும் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டான். பூங்குழலி அதை ஒன்றும் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் இலங்கையில் நாகத்தீவில் இறக்கிவிடுவதாகக் கூறவும், இளவரசர் எங்கு தங்கியிருக்கிறார் என்று கண்டுபிடிப்பதைப் பற்றிய பேச்சு வந்தது. பூங்குழலி நாகத்தீவுக்கு முன் பூதத்தீவு என்று ஒன்று உள்ளதாகவும் இவன் படகிலேயே இருந்தால் அவள் போய் விஷயம் சேகரித்து வருவதாகவும் சொல்ல, வந்தியத்தேவன் அதற்குச் சம்மதித்தான். பூதத்தீவில் இறங்கி சொன்ன மாதிரியே ஒரு நாழிகைக்குள் விஷயத்தைத் தெரிந்து கொண்டு வந்தவள் முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயரை மாதோட்டத்தில் சந்திக்க இளவரசர் சென்றிருப்பார் எனக் கூறினாள். கரை நெருங்க பூங்குழலி கேட்ட சத்தியத்தை நினைவுபடுத்தி என்ன உதவி வேண்டும் என வந்தியத்தேவன் கேட்க, சில நிமிடங்கள் சிந்தித்தவள், பொன்னியின் செல்வனைச் சந்தித்து ஓலையெல்லாம் கொடுத்தான பிறகு ‘சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?’ என்று கேட்க வேண்டுமென்றும், அதற்கு அவர் சொல்லும் பதிலை மாறாமல் தன்னிடம் சொல்ல வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டாள். பூங்குழலியின் மனதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன் திகைத்து, ‘அவ்வளவு உயரத்தில் பறக்கவா இந்த ஓடக்காரப் பெண்ணுக்கு ஆசையிருக்கிறது!’ என்று மனதோடு எண்ணிக்கொண்டு, உன் உதவிக்காகவே இதைக் கண்டிப்பாகச் செய்வேன் என உறுதி பூண்டு அவளிடமிருந்து விடைபெற்றான். பூங்குழலி ஓடத்தில் சாய்ந்து அவளுலகில் சஞ்சாரிக்க ஆரம்பித்தாள். கடற்கரையோரமாக நடந்து சென்று இலங்கையின் மாதோட்டத்தில் சோழ சைன்யம் தங்கியிருந்த இடத்துக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கும் கடம்பூரைப் போலக் கெடுபிடிகள் நடக்கவும், வந்தியத்தேவனைச் சிறைப்பிடித்தனர். அவன் சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாளரைச் சந்திக்க வேண்டுமெனச் சொல்லவும் அவனிடமிருந்த முத்திரை மோதிரம், ஓலை எல்லாவற்றையும் பரிசோதித்து எடுத்துக் கொண்டார்கள். அப்போது சேனாதிபதி, முதன்மந்திரி அநிருத்த ப்ரும்மராயரை ராமேசுவரம் வரை வழியனுப்பச் சென்றிருந்ததனால் அவர் வரும் வரை அவனைக் காவலில் வைத்திருந்தனர். பிரயாணத்தில் களைத்திருந்த வந்தியத்தேவன் முதல்நாள் முழுக்க நன்கு தூங்கி ஓய்வெடுத்தான். இரண்டாம் நாளின் இறுதியில் பக்கத்து அறையிலிருந்து ஆழ்வார்க்கடியானின் குரல் கேட்கவே ஆச்சர்யமடைந்தான். பிறகு விசாரித்ததில் அவன் சேனாதிபதியுடன் இங்கு வந்ததாகக் கூறினான். குந்தவையும் வந்தியத்தேவனும் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டிருந்த ஆழ்வார்க்கடியான், அங்கிருந்து மதுரை சென்று சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு இராமேசுவரத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு முதன்மந்திரி அநிருத்த பிரும்மராயர் இலங்கையில் அருள்மொழிவர்மரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்த வணிகர்களைச் சந்தித்து நடப்பு நிலவரங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அங்குதான் இதுவரை தெரிந்துகொண்ட விஷயங்களைத் தன் எஜமானனான அநிருத்த பிரும்மராயரிடம் ஆழ்வார்க்கடியான் முழுவதுமாகக் கூறினான். அநிருத்த பிருமராயர் சேனாதிபதியுடன் இருந்தபோது வந்தியத்தேவனைப் பற்றிச் செய்தி வந்ததால் ஆழ்வார்க்கடியான் விரைந்து இலங்கைக்குச் சென்று வந்தியத்தேவனைப் பற்றி எடுத்துச் சொல்லி இளவரசரிடம் தன் ஓலையைக் கொடுக்குமாறு ஆணையிட்டார். அவரின் ஆணையைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்குப் பயணம் செய்து சேனாதிபதியுடன் திரும்பியிருந்தான். வந்தியத்தேவனிடமிருந்து எடுக்கப்பட்ட ஓலை, மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இளவரசர் அநுராதபுரம் சென்றுவிட்டதாகவும், இருவரும் சேர்ந்து அவரைத் தேடிக் கண்டுபிடித்து ஓலையைச் சேர்க்கும்படி சேனாதிபதி சொன்னதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறினான். இருவரும் இணைந்து சேனாதிபதியைச் சந்தித்தார்கள். முதல் சந்திப்பிலேயே அவருக்கு வந்தியத்தேவனை மிகவும் பிடித்து விட்டது. வந்தியத்தேவன் புத்திசாலித்தனமாக, அவரது அண்ணன் மகளான வானதியைப் பற்றியும் குந்தவை அவள் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றியும் பேச சேனாதிபதி மகிழ்வுற்றார். இருவரும் ஒருவரையொருவர் பிரியக்கூடாதெனவும் ஒற்றுமையுடன் சென்று இளவரசரைச் சந்திக்கும்வரை சண்டையிடாமல் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்த, அவரை வணங்கி விடைபெற்று இருவரும் இளவரசரைத் தேடித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். தொடரும்.

பொன்னியின் செல்வன் 10 – பாகம் 2 – சுழல்காற்று

பொன்னியின் செல்வன் 10 – பாகம் 2 – சுழல்காற்று

இரண்டாம் பாகத்திற்குள் நுழையும் முன்பு முதற் பாகத்தின் சுருக்கம்:இராஜராஜன் என்று பிற்காலத்தில் பட்டமேற்ற சோழ இளவரசன் அருள்மொழி வர்மன் இலங்கையில் போர் நடத்திக் கொண்டிருந்தான். அவனது அண்ணன் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன். இவர்கள் இருவருக்கும் நடுவில் பிறந்த குந்தவை அப்போது பழையாறையில் இருந்தாள். ஆதித்த கரிகாலன் காஞ்சியில் பொன் மாளிகை ஒன்றைக் கட்டி, தன் தந்தையும் சோழ அரசருமான சுந்தர சோழரை அங்கு வந்து தங்கியிருக்க வேண்டி, வாணர் குலத்தில் வந்த தனது நண்பன் வந்தியத்தேவனிடம் ஓலை கொடுத்து அனுப்பினான். வழியில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நடந்த சிற்றரசர்களின் ரகசியக் கூட்டத்தில், சுந்தர சோழரின் பெரிய தந்தை கண்டராதித்த சோழரின் புதல்வனான மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட அவர்கள் முடிவு செய்ததை வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.கண்டராதித்தர் இறந்தபோது மதுராந்தகன் சிறுவனாக இருந்தபடியால் சுந்தர சோழர் அரசராகி இருந்தார். மதுராந்தகனை ஆதரித்த சோழ நாட்டு சிற்றரசர்களுக்குத் தலைமை வகித்தவர் சோழ நாட்டு நிதியமைச்சர் பெரிய பழுவேட்டரையர். இவரது தம்பி சின்ன பழுவேட்டரையர்தான் தஞ்சைக் கோட்டையின் காவலர். பெரிய பழுவேட்டரையர் தனது முதிர்ந்த வயதில் நந்தினி என்ற பெண்ணை மணந்து கொண்டிருந்தார். நந்தினியின் மீதான மோகத்தில் கட்டுண்டு கிடந்த பெரிய பழுவேட்டரையரை நந்தினி ஆட்டி வைத்துக் கொண்டிருந்தாள். நந்தினியும் ஆதித்த கரிகாலனும் இளமையில் காதலர்கள். இவர்கள் காதலை குந்தவையும் கண்டராதித்தர் மனைவி செம்பியன் மாதேவியும் விரும்பவில்லை. பாண்டியருடன் நடந்த இறுதிப் போரின்போது நந்தினியின் வேண்டுகோளைப் புறம்தள்ளி, வீரபாண்டியன் தலையைக் கொய்தான் ஆதித்தன். வீரபாண்டியன் கொலைக்குப் பழிவாங்க சபதம் பூண்ட நந்தினி, பழுவூர் இளைய ராணியாகி பாண்டி நாட்டு ஆபத்துதவிகளுக்கு உதவி செய்து வந்தாள்.வந்தியத்தேவன் வழியில் நந்தினியைச் சந்தித்து அவள் தந்த முத்திரை மோதிரத்தைக் காட்டி அரசரைச் சந்தித்து ஆதித்தன் ஓலையைக் கொடுக்கிறான். தன்மீது ஐயம் கொண்ட சின்னப் பழுவேட்டரையரை ஏமாற்றி கோட்டையை விட்டு வெளியேறுகிறான். தஞ்சையில் அவன் சந்தித்த சேந்தன் அமுதன், வந்தியத்தேவனுக்கு உதவுகிறான். அவன் கோடிக்கரையில் இருக்கும் தன் மாமன் மகள் பூங்குழலியை ஒருதலையாகக் காதலிக்கிறான் என்பது தெரிய வருகிறது. வந்தியத்தேவனை ஒற்றன் என்று கருதி பழுவேட்டரையர் ஆணை ஒருபுறம் துரத்த, ஆபத்துதவிகள் கூட்டத்தைச் சேர்ந்த மந்திரவாதி ரவிதாசன் ஒருபுறம் துரத்த, அனைத்தும் கடந்து, பழையாறை வந்து ரகசியமாக இளவரசி குந்தவையைச் சந்தித்து விவரங்களைக் கூறுகிறான் வந்தியத்தேவன். இலங்கையில் உள்ள அருள்மொழி வர்மனைப் பழையாறைக்கு வரும்படி அழைத்து ஒரு ஓலை எழுதி, வந்தியத்தேவன் மூலம் அதை அனுப்பி வைக்கிறாள் குந்தவை. காஞ்சியில் இருந்தே வந்தியத் தேவனைத் தொடர்கிறான் ஆழ்வார்க்கடியான் என்ற திருமலை. பாண்டி நாட்டு ஆபத்துதவிகளின் ரகசியமும் அவன் தெரிந்திருக்கிறான். அவன் முதன்மந்திரி அநிருத்த பிரமராயரின் ஆள் என்பதை வந்தியத்தேவன் அறியவில்லை. வானத்தில் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றியிருந்தது பற்றிப் பலரும் பலவாறு பேசிக் கொண்டிருந்தனர். இனி இரண்டாம் பாகம்.. பொன்னியின் செல்வன் – 10இரண்டாம் பாகம் – சுழல்காற்று கோடியக்கரையின் கடலோரத்தில் மிதந்த சிறிய படகிலிருந்து நெஞ்சை உருகச் செய்யும் ஒரு பாடல் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருந்த இளம்பெண், நீண்ட கருங்குழலில் தாழம்பூவின் ஒரு மடலைச் சூடிக்கொண்டு தன்னில் ஆழ்ந்துகொண்டு அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள்.‘அலைகடலும் ஓய்ந்திருக்கஅகக்கடல்தான் பொங்குவதேன்?நிலமகளும் துயிலுகையில்நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்? அவளின் மனதில் இருந்த சோகத்தையெல்லாம் வெளிப்படுத்திய அந்தப் பாடல், கேட்பவரின் நெஞ்சம் விம்மி வெடித்து விடுவது போன்ற உணர்ச்சியோடிருந்தது.ஆழம் அதிகமில்லாத அந்தக் கடற்கரையோரம் தன் ஓடத்தை நிறுத்திக் கரையிறங்கிய அந்தப் பெண், சேந்தன் அமுதன் மணக்க விரும்பும் முறைப்பெண்ணான பூங்குழலிதான். கலங்கரை விளக்கின் தீபம் ஏற்றப்பட்டிருந்ததைப் பார்த்த பூங்குழலி கோடியக்கரை குழகர் கோவிலில் சேமங்கலம் அடிக்கும் ஒலி கேட்கவே கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்தாள். கோடியக்கரை கடற்கரையை ஒட்டி அடர்ந்த காடு. முழுவதும் மணற்பரப்பும் மணல்மேடுகளின் மீது செடிகளும் மரங்களூம் முளைத்ததினால் கெட்டிப்பட்ட குன்றுகளும் பள்ளங்களும் நிறைந்த அந்தக் காட்டில் வழிகண்டுபிடித்துப் போவது கடினம். திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருப்பதைப் போல பிரமை தோன்றக்கூடிய அபாயமான காட்டுவழி. பூங்குழலி அந்த வழியாகச் சென்று கோவிலில் தரிசித்துவிட்டு, பட்டர் அளித்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு மதில் மேல் அமர்ந்து உண்ணலானாள். அப்பொழுது வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும் இரு குதிரைகளில் வருவதைப் பார்த்தவள், என்னவென்று விவரிக்க முடியாத உணர்ச்சியினால் கடல் பக்கமாக ஓடலானாள். அந்தக் காட்டில் வழி கண்டுபிடித்துப் போக முடியாமல் பூங்குழலியைப் பார்த்ததும் வழிகேட்கலாம் எனக் குதிரையிலிருந்து இறங்கிய வந்தியத்தேவன், அவள் ஓடுவதைக் கண்டு திகைத்து பின் அவனும் துரத்த, பாதி வழியிலேயே சேந்தன் அமுதன் குறிப்பிட்ட பெண் இவள்தான் எனப் புரிந்து கொண்டு மேலும் துரத்தலானான். அந்தக் கடற்கரை மணற்வெளியைப் பற்றி அறிந்திராத வந்தியத்தேவன் ஓடுகிற வேகத்தில் அதிலிருந்த புதைகுழியில் மாட்டிக்கொண்டு, தன்னைக் காப்பாற்றுமாறு கத்த, பூங்குழலி விரைந்து செயல்பட்டாள். அங்கு தேங்கிப்போயிருந்த சேற்றில் ஓடத்தை ஓட்டிக் கொண்டு வந்து தன் வலிய கரங்களை வந்தியத்தேவனுக்குக் கொடுத்து மேலிழுத்தாள். பின் சேற்றைக் கடலில் கழுவிக்கொண்ட வந்தியத்தேவன் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, ‘சேந்தன் அமுதனின் காதலிதானே நீ?’ எனக் கேட்க, பூங்குழலி மறுத்தாள். பேசிக்கொண்டே இருவரும் நடந்தபோது முதல்நாள் இருவர் தன் அண்ணனுக்கு நிறைய காசு கொடுத்து இலங்கைக்குச் சென்றதைப் பூங்குழலி சொல்ல, அவள் சொன்ன அடையாளத்தை வைத்து அது மந்திரவாதி ரவிதாஸனாக இருக்கும் என வந்தியத்தேவன் எண்ணிக் கொண்டான். வழக்கமாக தான் பெண்களிடம் கடைபிடிக்கும் வழக்கப்படி பூங்குழலியிடம் வந்தியத்தேவன் பேச, அவள் தனக்கு நிறைய காதலர்கள் இருப்பதாகவும் சந்தேகமாய் இருந்தால் நள்ளிரவில் அவர்களைச் சந்திக்கச் செல்லும்போது பின் தொடர்ந்து வந்து பார்த்துக் கொள்ளுமாறும் சொல்லிச் சிரிக்க, பூங்குழலிக்கு சித்தப் பிரமையோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. பேசிக்கொண்டே வைத்தியர் மகனையும் அழைத்துக் கொண்டு பூங்குழலியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். கோடியக்கரை கலங்கரை விளக்கக் காவலரும் பூங்குழலியின் அப்பாவுமான தியாகவிடங்கக் கரையரிடம் தாங்கள் வந்த சேதியைச் சொல்லி, தான் மட்டும் இலங்கை செல்ல ஏற்பாடு செய்யுமாறு வந்தியத்தேவன் கேட்டான். அவர் தன் மருமகளின் பணத்தாசை காரணமாக தன் மகன் யாரோ இருவரை இலங்கைக்கு ஏற்கெனவே ஒரு படகில் அழைத்துச் சென்றதைக் கூறி வருத்தப்பட்டுவிட்டு, உணவு உண்டு அங்கேயே தங்குமாறும், தான் வேறு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.வந்தியத்தேவன் நன்கு உண்டுவிட்டு உறங்கிக்கொண்டிருந்தபோது திடீரென விழிப்பு தட்டி தன்னைத் தாண்டிச் சென்ற பூங்குழலியைத் தொடர்ந்து சென்றான். அடர்ந்த இருளில் பயந்துகொண்டே வந்தியத்தேவன் செல்ல, பூங்குழலி அழுகையுடன் அந்தப் பாடலை மறுபடி கடற்கரையில் பாடலானாள். வந்தியத்தேவனைப் பார்த்தவள், சிரித்தபடி அவனைத் திரும்பி பார்க்கச் சொல்ல, அங்கு பார்த்தவன் நடுநடுங்கிப் போனான். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 9

பொன்னியின் செல்வன் – 9

பழையாறையிலிருந்து சற்று மாமல்லபுரம் வருவோம். மாமல்லபுரத்தின் பிரதான வீதியில் ஒரு விமான ரதத்தில் வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பர கேசரி என்று பட்டப்பெயர் கொண்ட, அடுத்த பட்டத்துக்குரியவனாக இளவரசர் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மூத்த இளவரசனான ஆதித்த கரிகாலனும், மிலாடுடையார் என்ற பட்டத்தைப் பெற்றவரும் சுந்தரசோழரின் இரண்டாவது மனைவி வானமாதேவியின் தந்தையுமான – ஆதித்த கரிகாலனின் பாட்டனார் திருக்கோவிலூர் மலையமானும்,  பல்லவ குலத்தின் தோன்றலான பார்த்திபேந்திர பல்லவனும் அமர்ந்திருந்தனர். தஞ்சாவூரிலிருந்து வந்த செய்திகளைப் பற்றி மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.  பீஷ்மரை ஒத்தவராக இருந்த மலையமான் மிலாடுடையாரின் பேச்சை, ஆதித்த கரிகாலன் மறுத்துப் பேசாதவனாயிருந்தான். பார்த்திபேந்திரன் வீரபாண்டியனை எதிர்த்த போரின் போது துணைசெய்தவனாய் இருந்ததால் ஆதித்த கரிகாலனுடன் இணைபிரியாதிருந்தான். அவனுக்கு, வந்தியத்தேவனும் கரிகாலனும் பாராட்டிய நட்பால் வந்தியத்தேவன் மேல் பொறாமை இருந்து வந்தது. பழுவேட்டரையர்களின் அதிகாரத்தைப் பற்றி அதிருப்தி தெரிவித்த ஆதித்த கரிகாலனிடம், ஏற்கனவே வந்தியத்தேவனின் மீதிருந்த பொறாமையால், அவன்தான் போன காரியத்தை உத்தேசித்துப் பொறுமையாக இருந்திருக்க வேண்டுமென பார்த்திபேந்திரன்  குறை கூறினான்.  மிலாடுடையார்  பொறுமையாக சூழ்நிலையை இருவருக்கும் விளக்கத் தொடங்கினார். கடம்பூரில் நடந்த சதியாலோசனை பற்றிக் குறிப்பிட்டவர், பழுவேட்டரையர்கள் நாட்டுக்கு எதிரான முன்னெடுப்புகளை திட்டமிடுவதாகவும், மதுராந்தகனுக்கு அரசாட்சியை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்ததையும், அந்தக் கூட்டத்தில் மதுராந்தகன் கலந்து கொண்டதையும் கூறி வருந்தினார்.  “மதுராந்தகன் கையில் வாளெடுத்து அறியாதவன்; பெண்ணாய்ப் பிறப்பதற்கு பதில் ஆணாய்ப் பிறந்தவன். மேலும், எனக்கு அரசுரிமைப் பட்டம் கட்டிவிட்டு, இப்போது எப்படி மாற்றலாம்?” என்று ஆதித்த கரிகாலன் கேட்க, மதுராந்தகனுக்கும் உரிமை உண்டு என்று சொல்லி மலையமான் அவனை சமாதானப்படுத்தினார். அதற்கு பார்த்திபேந்திரன் வெகுண்டு எழ, அவனை அடக்கியவர், “என் பேரனுக்கு சோழ அரசு இல்லையெனில்  படையெடுத்தாவது பெற்றுத் தருவேன்” என்று கூறி அவனையும் சமாதானப்படுத்தினார். கடம்பூர் மாளிகைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பானோ என்று வந்தியத்தேவன் மீது தனக்குச் சந்தேகம் ஏற்பட்டதாகவும், சின்னப் பழுவேட்டரையர் அவனை ஒற்றன் என்று குற்றம் சாட்டியதால் . பின்னர் தெளிந்ததாகவும் மிலாடுடையார் சொல்லவும், தான் அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருப்பதாகக் கூறிய ஆதித்த கரிகாலன், குறுக்கே வந்தியத்தேவனை பழித்துக் கூறிய பார்த்திபேந்திரனையும் அடக்கினான். மிலாடுடையார் இப்போது சோழ ராஜ்யத்திற்கு பெரிய அபாயம் சூழ்ந்துள்ளதாகவும், இலங்கையில் உள்ள அருள்மொழிவர்மனை உடனே இங்கு வருவிக்குமாறும், பின் அனைவரும் சென்று சக்ரவர்த்தியைப் பழுவேட்டரையரின் பிடிகளில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றும் கூறினார்.  வந்தியத்தேவனை குந்தவையிடம் அனுப்பியிருப்பதாக ஆதித்த கரிகாலன் கூற, மிலாடுடையார் குந்தவையின் மீதான நம்பிக்கை தனக்குப் பெரிதாக உள்ளதாகவும், அவளைப் போன்ற அறிவுடையவர்கள் இதுவரை சோழர் குலத்தில் பிறந்ததில்லை எனவும், முதன்மந்திரியான அநிருத்தர் கூட குந்தவையின் கருத்தைப் பெரிதும் மதிப்பவர் எனவும் பெருமையாகக் கூறினார். அப்பொழுது பார்த்திபேந்திரன், ‘வந்தியத்தேவன் குந்தவையைப் பார்ப்பதற்கு முன் நந்தினியைப் பார்த்து மயங்கியிருந்தால் என்ன செய்வது?’ என்று கூற, ஆதித்த கரிகாலன் உறுத்து பார்த்திபேந்திரனைச் சுட்டு விடுவது போலப் பார்க்கவும், பார்த்திபேந்திரன் நடுங்கி விட்டான்.  மிலாடுடையார் பார்த்திபேந்திரனை மறுநாளே  இலங்கைக்குச் சென்று அருள்மொழிவர்மனை அழைத்து வரக் கிளம்புமாறு கூறினார். பார்த்திபேந்திரன் அலைக்கழிப்புடன் நின்றிருக்கும் ஆதித்த கரிகாலனை நெருங்கினான். என்னவென்று கேட்க, ஆதித்த கரிகாலன் நெடிய பெருமூச்சை விட்டு நீங்காத வேதனையில் துடிப்பதை எவ்வாறு சொல்ல முடியும் என்று வருந்தியபடி இருக்க, அனைவரும்  அரண்மனைக்குத் திரும்பினர். பார்த்திபேந்திரன் எப்படியும் இதைக் கேட்டறிவது என்று உறுதி பூண்டான்.  அரண்மனை திரும்பியதும் அரவான் கதை கேட்க பெரியவர் கிளம்பியவுடன், பார்த்திபேந்திரன் ஆதித்த கரிகாலனை அணுகினான். ஆதித்த கரிகாலன், மனம் நிலையற்று தவிப்புற்றிருந்தான். பார்த்திபேந்திரன் போரைப் பற்றிப் பேச்செடுக்கையில் ஆதித்த கரிகாலன் வேதனையுடன் போரையும் தன் சாதனைகளையும் வெறுத்து விரக்தியுடன் பேச, வேதனைகளைச் சொல்லுமாறு பார்த்திபேந்திரன் வற்புறுத்தினான். பெருமூச்செறிந்த ஆதித்த கரிகாலன், தூரத்தே வெறித்துப் பார்த்தபடி, ‘என் மனதைத் திறந்தால் இருப்பது என் தாயும் தந்தையும் அல்ல; குடும்பத்தினர் அல்ல; இந்த தேசம் அல்ல. அங்கு இருப்பது பழுவூர் இளையராணி நந்தினி மட்டும்தான்’ என்று கூற, பார்த்திபேந்திரன் திடுக்கிட்டான். தங்களுக்கு அவளை எப்படித் தெரியும் என்று கேட்க, ஆதித்த கரிகாலன் நந்தினியைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். ‘நந்தினியை என்னுடைய பன்னிரண்டாம் பிராயத்தில் சிறு பெண்ணாக சந்தித்தேன்.  நானும் என் தம்பி, தங்கையும் விளையாடி முடித்துவிட்டு என் பாட்டி செம்பியன்மாதேவியைச் சந்தித்தபொழுது, அங்கு உதவி கேட்டு வந்தவர்களுடன் நின்றிருந்தாள். பார்த்த மாத்திரத்தில் அவள் என்னைக் கவர்ந்து கொண்டாள். அவளை எங்கள் தோழியாக ஏற்றுக் கொள்ளச் சொல்லி என் பாட்டி சொல்ல, குந்தவைக்கு அவளை ஏனோ பிடிக்காமல் போயிற்று. அழகின் மீதான பொறாமையில் சொல்கிறாள் என எண்ணி, அவளைச் சீண்டுவதற்காகவே நான் நந்தினியுடன் தொடர்ந்து பழகி குந்தவையுடன் சண்டை போட்டுக் களித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாண்டிய நாட்டு யுத்தத்துக்குப் படையெடுத்துச் சென்ற என் தந்தைக்கு உதவியாக நானும் சென்றுவிட்டேன். அந்த யுத்தத்தில் தோற்று வீரபாண்டியன் எங்கோ மறைந்துகொள்ள, இலங்கைக்கும் நம் படைகள் செல்ல, நாங்கள் அதற்கெல்லாம் உதவி செய்துவிட்டுத் திரும்ப இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.   நான் திரும்பி வருகையில் குந்தவையும் நந்தினியும் வெகு அழகாகப் பரிமளித்ததுடன் தோழிகளாகவும் ஆகியிருந்தனர். எனக்கு நந்தினியுடன் பேசுவதானால் அத்தனை இன்பமாய் இருந்தது. ஆனால், என் பாட்டி செம்பியன் மாதேவிக்கோ குந்தவைக்கோ நான் அவளுடன் பேசுவது பிடிக்கவில்லை. பாட்டி என்னைக் கூப்பிட்டு, “அவள் சாதாரண அர்ச்சகருடைய பெண். அவளுடன் இவ்வளவு நெருக்கமாகப் பழகக்கூடாது” என்று கூறினாலும் நான் கேட்பதாயில்லை. திடீரென ஒருநாள், அவளை அவளுடைய உறவினர்களுடன் பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டதாகத் தகவல் வந்தது. அதனால் நான், என் கோபத்தைக் குந்தவையிடம் காட்டிக் கொண்டிருந்தேன். பிறகு, இராஷ்டிரகூடப் படைகளை விரட்டுவதற்காக சோழப் படைகளுடன் நான் தொண்டை நாட்டுக்கு வந்தபோதுதான் நீயும் நானும் நண்பர்களானோம்.  இலங்கையில்  நமது படை முறியடிக்கப்பட்டு கொடும்பாளூர் சிறிய வேளார் இறந்துவிட்டார் என்ற பின்னடைவு நமக்கு ஏற்பட்டதும் ஒளிந்திருந்த வீரபாண்டியன் தன் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து மதுரையைக் கைப்பற்றினான். அப்போது என் தந்தைக்கு உடல்நலம் குன்றத் தொடங்கியிருந்தும்கூட, அவர் மதுரைக்குப் படையெடுக்கச் சித்தமானார். அவரைத் தடுத்து, மதுரையை மீண்டும் கைப்பற்றி வீரபாண்டியனுடைய தலையைக் கொண்டுவராமல் சோழ நாட்டுக்குத் திரும்பமாட்டேன் என சூளுரைத்துவிட்டு நாம் சென்றோம்.  வரிசையாய் வெற்றிகளைக் குவித்து, தப்பியோடிய வீரபாண்டியனைத் துரத்திக்கொண்டு சென்றோம். அப்போது வைகை நதியின் நடுவில் ஒரு சோலையில், ஆண்டாளை ஒத்த தோற்றத்தில் நந்தினியைக் கண்டேன். அவள் கண்ணனுக்கே தன்னை அர்ப்பணித்து விட்டதாகக் கூறி, தன் தாய் தந்தை மற்றும் தமயனுடன் வசிப்பதாகவும் தமயன் காசிக்குப் போயிருப்பதாகவும் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டாள். அவளின் மீதான மோகம் கொழுந்துவிட்டு எரிந்தபோதும், வந்த காரியம் முடியட்டும் என்று பொறுமை காத்து , அவள் இருந்த பக்கம் படைகள் போகாதவாறு பார்த்துக் கொண்டேன். வீரபாண்டியனுடைய தலையுடன் தந்தையிடம் சென்று, அந்த வெற்றிக்குப் பரிசாக நந்தினியை மணக்கக் கேட்க வேண்டுமென முடிவு செய்திருந்தேன்.  ஆனால், தப்பி ஓடிய வீரபாண்டியன் அவள் வீட்டிலேயே கட்டிலில் படுத்திருந்ததையும் இவள் அவனுக்குப் பணிவிடை செய்ததையும் கண்டவுடன் என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. நந்தினி என் காலில் விழுந்து, “நீங்கள் என்மீது ஒருகாலத்தில் கொண்டிருந்த அன்பின் பெயரால் கேட்டுக் கொள்கிறேன். அவரை ஒன்றும் செய்யாதீர்கள்” என்றாள்.  “பாண்டியனுக்கும் உனக்கும் என்ன உறவு?” என்று அவளிடம் கேட்டேன். நந்தினி, “அவர் எனது காதலர். என் தெய்வம். என்னை மணம் புரிந்து கொள்ளப் போவதாக உறுதி அளித்திருக்கிறார்” என்று சொல்லவும், என் கோபம் கட்டுக்கடங்காமல் சென்று அவளை உதைத்துத் தள்ளிவிட்டு ஒரே வீச்சில் வீரபாண்டியனின் தலையை வெட்டி வீழ்த்தினேன்.  உலகத்தின் மொத்த வெறுப்பு, குரோதம் எல்லாவற்றையும் அடக்கிய பார்வையில் நந்தினி என்னைப் பார்த்தாள். அச்சமயத்தில் நீங்களெல்லாம் வந்துவிடவும் குடிலில் இருக்கும் பெண்களைத் தொந்தரவு செய்யாதீர்கள் என உத்தரவு இட்டுவிட்டு பாசறைக்குத் திரும்பிய என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவள் கேட்டதைக் கொடுக்க முடியவில்லை என்றும் என் பிரியத்துக்குரிய நந்தினி வேறொரு ஆடவனின் உயிருக்காய் மன்றாடினாள் என்பதையும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.  மறுபடி அவளைத் தேடிக்கொண்டு சென்றபோது அவளின் பெற்றோர் என நான் பழையாறையில் முதன்முதல் கண்டவர்கள் அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தனர். விசாரித்தபொழுது நந்தினியைத் தனியே விட்டுவிட்டு அவர்கள் மூத்த மகளின் வீட்டுக்குப் போயிருந்ததும் திரும்பி வரும்பொழுது ஒரு பெண்ணின் கை, காலைக் கட்டிச் சிதையில் போட சிலபேர் முயன்றதைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தால் அவளைக் காணவில்லை என்றும் அழுதனர். நான், அந்தச் சிதையில் எரிந்த பெண் நந்தினியாகத்தான் இருக்கும் என முடிவு செய்து வருந்தி எரிச்சலடைந்து திரும்பிவிட்டேன்.  பின்னர் நாம் பழுவேட்டரையரின் திருமணம் பற்றி அறிந்துகொண்டு ஏளனமாகப் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு என்னை அழைத்து இளவரசப் பட்டாபிஷேகம், மேலும் பரகேசரி என்னும் பட்டம் அளித்து இனி சோழராஜ்யத்தை ஆளும் பொறுப்பு முழுவதும் உனக்கே என என் தந்தை ஆசிர்வதித்து, அதற்குப் பாட்டியும் பெரியோர்களும் ஆசி கூறும் வைபவம் நடைபெற்றது. அந்த மணிமகுடத்துடன் அன்னை, பாட்டி என அனைத்து மாதரசிகளிடமும் ஆசி பெற அந்தப்புரத்துக்குத் தந்தை என்னை  அழைத்து சென்றார். அங்கே நடுநாயகமாக நந்தினி நின்றாள். ராணிக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்து முன்னைக் காட்டிலும் அழகாக, சர்வாலங்கார ரூபிணியாக நின்ற அவளைக் கண்டதும் அவளை மீண்டும் பட்டமகிஷியாக அடையப் போகிறேனா என்றெல்லாம் ஒரு கணம் என் மனம் மனக்கோட்டை கட்டியது.  ஆனால், அப்பொழுது என் தந்தை ‘ஆ’ வெனக் கூச்சலிட்டபடி மூர்ச்சையடைந்து விட்டார். அவரைத் தூக்கி வந்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். அவர் நந்தினியைப் பார்த்துதான் மூர்ச்சை அடைந்திருப்பாரோ என்ற ஐயம் எனக்கிருந்தது. நான் குந்தவையைத் தனியே அழைத்து நந்தினியைப் பற்றிக் கேட்க, “இப்போது நந்தினிதான் பழுவூர் இளைய ராணி. பெரிய பழுவேட்டரையரை மணந்து கொண்டு வந்திருக்கிறாள்” என அவள் கூறினாள். அதைக் கேட்டபோது நான் அடைந்த வலியைப் போல் இதுவரை எந்த வலியையும் நான் உணர்ந்ததில்லை. அன்று மயங்கிய என் தந்தையும் இன்றுவரை பூரண குணம் அடையவேயில்லை.  நந்தினி ஒருநாள் என்னை அவள் அரண்மனைக்கு வரச் சொல்லி செய்தி அனுப்ப, நான் அங்கு சென்று அவளை லதா

பொன்னியின் செல்வன் – 8

பொன்னியின் செல்வன் – 8

ஆழ்வார்க்கடியான் என்னும் திருமலை நம்பியை அழைத்து எப்பொழுதும் உலகநடப்புகளை அறிந்து கொள்ளுதல் குந்தவையின் வழக்கமாயிருந்தாலும் பறையறிவிப்பின் மூல காரணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமே மேலோங்கியிருந்தது.  ஆழ்வார்க்கடியான் வரும்பொழுது வீதியில் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் கம்சன் போல் முகமூடி தரித்து வேடம் பூண்டு ஆடிக் கொண்டிருந்தவனின் குரலை எங்கோ கேட்டது போலவே இருக்கிறதே என்று யோசித்தபடியே வந்து இளவரசிக்காகக் காத்திருந்தான். குந்தவை நடைமுறை விஷயங்களைக் கேட்டபின், நந்தினியைப் பற்றி காழ்ப்புடன் பேசி நலம் விசாரிக்க, ஆழ்வார்க்கடியான் பொறுமையாகவே தகுந்த பதிலைக் கூறினான். சற்று முன் பறையறிந்து சென்றதைப் பற்றி குந்தவை கேட்கவும், அது ஒரு ஒற்றனைப் பற்றி என்று ஆழ்வார்க்கடியான் கூறவும் குந்தவை ஆர்வமாய்க் கேட்கலானாள். அவன் ஒரு முரட்டு வாலிபனென்றும் சக்ரவர்த்தியின் உடல்நிலையைப் பற்றியும் அடுத்து பட்டத்துக்கு வரப்போகிறவர்களைப் பற்றியும் தன்னிடமும் குடந்தை ஜோசியரிடமும் விசாரித்ததைக் கூற, தான் அங்கு அவனை சந்தித்ததாகக் குந்தவை கூறினாள். மேலும், எங்கு அவனைக் கண்டாலும் தன்னிடம் கொண்டு வந்து சேர்க்குமாறு குந்தவை கூற, ஆழ்வார்க்கடியான் விஷமப் புன்னகை செய்தபடி ‘அவனே உங்களைத் தேடி வருவான்’ என்று கூறினான். செம்பியன் மாதேவியைச் சந்தித்ததையும் குந்தவையைப் பார்க்க வருமாறு அவர் சொல்லச் சொன்னதையும் கூறி ஆழ்வார்க்கடியான் விடை பெற்றான். ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து தனது தமையனாரான ஈசான பட்டரைப் பார்க்க சிவன் கோவிலுக்குச் சென்றான். ஈசான பட்டர் சிவனைப் பழித்துப் பேசியதற்காக ஆழ்வார்க்கடியானை வெகுவாகக் கோபித்துக் கொண்டதைப்போல பாவனை செய்தார். அவரின் நடவடிக்கைகளும் விசித்திரமாக இருக்கவே ஆழ்வார்க்கடியான் அவரை விடாமல் பின் தொடர்ந்தான்.  கம்சன் வேடம் பூண்டவனுக்கு ஈசான பட்டர் உதவி செய்வதைப் புரிந்து கொண்டான். காலையில் அந்த மர்ம மனிதனும் ஈசானபட்டரும் மறைந்து செல்வதைக் கவனித்து அவர்களின் பின்னாலேயே சென்றான். இருவரும் ஓடையில் படகில் ஏறியபோது திரும்பிப் பார்த்தவனின் முகத்தைக் கண்டபோது, தன் சந்தேகத்தின்படி அது வந்தியத்தேவன்தான் என்று தெளிந்தான். முதன் மந்திரி அநிருத்த பிரும்மராயரின் அரண்மனைக்குச் சென்று அதன் நந்தவனத்தில் புகுந்து வந்தியத்தேவன் இறங்கப் போகும் இடத்தை நோட்டமிட ஆரம்பித்தான்.  நீரோடைக் கரையில் இருந்து ஈசானபட்டரும் வந்தியத்தேவனும் இறங்கி படிக்கட்டுகளின் வழியாக மேற்புறத்துக்கு வந்ததும் வந்தியத்தேவன் சிலையெனச் சமைந்து நின்றான்.  தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பளிங்குக்கல் மேடையில் அமர்ந்திருந்த குந்தவை எழுந்து நின்று வந்தியத்தேவனை கண்ணோடு கண் நோக்கினாள். உலகமெலாம் ஒருமுறை நின்றுவிட்டதைப் போலவும், அந்த நொடியில் பல யுகங்கள் பயணம் செய்து திரும்பியது போலவும் தாங்கள் யாரென மறந்து ஆதி ஆணும் ஆதிப் பெண்ணுமாய் முதன்முதலாய் கண்டு இச்சை கொண்டது போலவும் இருவரின் மனங்களும் சஞ்சாரம் செய்தன. வெளியில் இதைக் காட்டிக்கொள்ள முடியாமல் இருவரும் தவிக்க, ஈசான பட்டர் தொண்டையைக் கனைக்க, நிஜவுலகை அடைந்த குந்தவை வலிந்து வருவித்துக் கொண்ட கடினக் குரலில், ‘என்னைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என பட்டரிடம் தெரிவித்தது உண்மையா?’ எனக் கேட்க, சீண்டப்பட்டது போல, நீங்கள் யாரெனத் தெரிந்தால்தான் அதைச் சொல்ல முடியும்’ எனத் துடுக்காக வந்தியத்தேவன் கூறினான்.  ‘யாரைப் பார்க்க நினைத்தீர்கள்?’ என்று குந்தவை வினவ, சோழர் தொல் குலத்தின் மங்கா மணிவிளக்கை, சுந்தரச் சோழரின் செல்வத் திருமகளை, ஆதித்த கரிகாலனின் தங்கையும் அருள்மொழிவர்மரின் தமக்கையுமான இளைய பிராட்டி குந்தவை தேவியைப் பார்க்க வேண்டுமென நீட்டி முழக்கி நிமிர்வுடன் வந்தியத்தேவன் கூறினான். ‘தானே குந்தவை’ என்று  அவள் கூறவும் குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் பார்த்ததும் அவரைத்தான் எனக் கேட்டுத் தெளிந்து கொண்டான். அதற்குமேல் அங்கு ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக அவர்களின் பேச்சு தொடர்ந்தது. எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொண்டிருந்த அதே வேளையில், தங்கள் மனதையும் இருவரும் சொற்களில் மறைத்து வைத்து பரிமாறிக் கொண்டிருந்தனர். வந்தியத்தேவன் கொடுத்த ஓலையைப் படித்த குந்தவை மேலும் மலர்ந்து அடுத்து என்னவென்று கேட்க, ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான் என்று அவன் கூற, அதற்கு முன் முக்கியமானதொரு வேலையை ஒப்படைக்கப் போவதாகக் குந்தவை சொல்ல, வந்தியத்தேவன் மறுத்தான்.  இளவரசர் தன்னை குந்தவையின் அந்தரங்கக் காவலனாக எதை ஏவினாலும் செய்வதற்காகவே அனுப்பினார் எனவும், ஆனால் தான் பழுவேட்டரையர்களைப் பகைத்துக் கொண்டு அவர்களால் தேடப்படுபவனாகவும், நெருங்கிய நண்பனான கந்தமாறானாலேயே துரோகி என்று குற்றம் சாட்டப்படுபவனாகவும் இருக்கிறேன். வீர வைஷ்ணவனான ஆழ்வார்க்கடியான் என்பவன் தன்னை ஒற்று பார்ப்பதாகவும் கூறினான். நந்தினி தன்மேல் ஒரு மந்திரவாதியை ஏவி விட்டிருக்கிறாள் எனவும் இத்தனை இக்கட்டில் தன்னை முக்கியமான காரியத்துக்கு உபயோகப்படுத்துவது குந்தவைக்கு சிக்கலில்தான் முடியும் என்று கூறி வருந்தினான். ஓடையில் படகில் ஏறி அவன் வந்ததிலிருந்து நடந்த கதையை ஒன்றுவிடாமல்  குந்தவை கேட்டுக் கொண்டாள். வந்தியத்தேவனும் வந்து சேர்ந்த கதையைச் சொல்லி, அந்த சந்திப்பு சீக்கிரம் முடிந்து விடாதபடி நீட்டிக் கொண்டே போனான். பழுவேட்டரையர்களின் படைவீரர்களால் துரத்தப்பட்ட வந்தியத்தேவன், சேந்தன் அமுதன் காட்டிய வழியில் சென்றுகொண்டிருந்தபொழுது பின்னால் படைவீரர்கள் நெருங்க, சேந்தன் அமுதனிடம் குதிரையை ஓட்டிக்கொண்டு முன்னால் செல்லும்படியும் என்னைக் கேட்டால் ஆற்றில் மூழ்கிவிட்டான் என்று கூறுமாறும் சொல்லித் தப்பிக்க யத்தனித்தான். சேந்தன் அமுதன் பொய் கூறமாட்டேன் எனச் சொல்லவும், வந்தியத் தேவன் நிஜமாகவே நீரில் மூழ்க, தொடர்ந்து வந்த படைவீரர்கள் சேந்தன் அமுதனைத் துரத்திச் சென்ற வேளையில் அவர்களிடமிருந்து தப்பித்து இரவில் அடர்ந்திருந்த தோப்புகளில் மறைந்து பழையாறைக்குச் சென்று கொண்டிருந்தான். இரவில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் உறங்கியபோது நந்தினியின் அரண்மனையில் கேட்ட அதே ஆந்தைக்குரல் கேட்க, தூணில் ஒளிந்து கொண்டு பார்த்தபொழுது அந்த மந்திரவாதி ரவிதாஸன் வந்துகொண்டிருந்தான். பார்க்கவே அச்சமூட்டும்படி இருந்த ரவிதாஸன், இருளில் தன்னைக் கவனித்திருக்க மாட்டான் என்று நினைத்திருந்த பொழுது, அவன் வந்தியத்தேவன் கழுத்தை நெறித்து  நந்தினியின் முத்திரை மோதிரத்தைத் தருமாறு கேட்க சமாளித்து தூணைப் பிடித்து காலால் தாக்கிவிட்டுத் தப்பித்தான். பழையாறை நகரில் நுழைய தக்க தருணம் பார்த்துக் காத்திருந்த பொழுது, நாடகக் கோஷ்டியுடன் இணைந்து கம்ஸ வேஷம் தரித்து ஊருக்குள் புகுந்து சிறிது நேரம் தெருக்களில் ஆடிக் களித்தபின் ஆதித்த கரிகாலன் சொன்னபடி ஈசான பட்டரைச் சந்தித்தான். சமணர் முழையில் அவனை ஒளித்து வைத்த ஈசான பட்டர், தக்க நேரம் பார்த்து இளவரசியைச் சந்திக்க அழைத்துச் சென்றார்.  விவரங்களை எல்லாம் கேட்டுக்கொண்ட குந்தவை, இதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறும்படியான அபாயமானதொரு வேலையைத் தரப்போவதாகக் கூற, வானிலேறி விண்ணையே சாடும் வேலையாக இருப்பினும் செய்யக் கூடியவனாக வந்தியத்தேவன் சித்தமானான். திரும்பவும் மண்டபத்திற்கு வந்து  பனை ஓலைத்துணுக்கில் தங்கப் பிடி இட்ட எழுத்தாணியில் குந்தவை எழுதினாள். ‘பொன்னியின் செல்வ! இந்த ஓலை கண்டதும் உடனே புறப்பட்டு வரவும். விவரங்கள் இது கொண்டு வருகிறவர் சொல்லுவார். இவரைப் பூரணமாக நம்பலாம்’ என்று எழுதி அடியில் ஆத்தி இலை போன்ற சித்திரம் ஒன்றை வரைந்து, “உடனே இந்த ஓலையை எடுத்துக்கொண்டு ஈழ நாட்டுக்குச் சென்று அருள்மொழிவர்மரிடம் கொடுத்து, அவரைக் கையோடு கூட்டிவர வேண்டும்” எனக் கட்டளையிட்டாள்.  ஆதித்த கரிகாலரிடம் பணிபுரிந்த வந்தியத்தேவன், சுந்தர சோழரையும் சோழர் குலவிளக்கான குந்தவையையும் சந்தித்த பிறகு, இளவரசர் அருள்மொழிவர்மரையும் சந்திக்கப் போகும் பேறை நினைத்துப் பெருமிதம் கொண்டான். “இப்போதே கிளம்புகிறேன்” என்று ஓலையை வாங்கும்பொழுது குந்தவையின் காந்தள் விரல்களைத் தீண்டியபொழுது மறுபடியும் அவன் உலகம் சுழல மறுத்து நின்றது. ஈசான பட்டரின் குரலைக்கேட்டு நடைமுறைக்குத் திரும்பினான்.  மறுநாள், படைவீட்டு சாலையின் வழியே யானையில் அமர்ந்தபடி குந்தவையும் வானதியும் பராந்தகர் ஆதுரசாலைக்கு வந்து சேர்ந்தார்கள். அந்த வீதியில் ஈழநாட்டுக்குச் சென்றிருந்த வீரர்களின் பெண்டு பிள்ளைகள் குடியிருந்தார்கள். அங்கிருந்தவர்களின் நலத்தை விசாரித்து அவர்களுக்குத் தேவையானதை வழங்க உத்தரவு இடுவது குந்தவையின் வழக்கம். இன்றும் அதுபோல வானதியைப் பரிகசித்தபடி உத்தரவை வழங்கிக் கொண்டிருந்தவளை, தலைமை வைத்தியர் அணுகி வணங்கினார். தான் சொன்ன இளைஞனை இலங்கைக்கு அனுப்பி மூலிகைகள் தருவித்துக் கொள்வதாகச் சொன்ன ஏற்பாட்டை உறுதி செய்துகொண்ட குந்தவை, அவனைப் பற்றிக் கேட்க, வைத்தியர் அந்த இளைஞனுடன் கோடியக்கரை வரை என் மகனும் துணைக்குச் செல்வதாகக் கூறி அவர்களை அறிமுகப் படுத்தினார்.  வானதி வைத்தியர் போல் வேடம் பூண்டிருந்த வந்தியத்தேவனை அடையாளம் கண்டுகொண்டு குந்தவையிடம் கூற, அவள் ஏதும் தெரியாதது போல இருக்கலாம் என்று சமாதானப் படுத்தினாள். குந்தவை வைத்தியரிடம், சக்கரவர்த்திக்கு  வைத்தியம் செய்ய மூலிகை எடுக்கப் போகவேண்டியிருப்பதால் வழியிலுள்ள அரசு அதிகாரிகள் இவர்கள் கோரும் உதவியைச் செய்ய வேண்டும் என்ற திருமந்திர ஓலையையும், கலங்கரை விளக்குக் காவலருக்கு ஒரு ஓலையும் வழங்கப்பட்டதை உறுதி செய்து கொண்டாள். கிளம்பும் அனைத்து ஏற்பாடுகளும் நடந்தபின்னும் ஏதோவொரு சாக்கை வைத்துக்கொண்டு குந்தவையும் வந்தியத்தேவனும் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒருவழியாக குந்தவை குறிப்புணர்த்த, வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும் குதிரையில் கிளம்பினர். குந்தவை தன் மனம் வந்தியத்தேவனின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டை எண்ணி அதிசயப்பட்டபடி இருக்க, வானதி அதைக் கண்டுபிடித்தாற்போல் ஏதோ கேட்க, யோசனையுடன் மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். தொடரும் சவிதா

பொன்னியின் செல்வன் – 7

பொன்னியின் செல்வன் – 7

வந்தியத்தேவன் தனக்குள் வலிந்து ஏற்றிக் கொண்ட திடசித்தத்தால் நந்தினியின் மோகன சக்தியையும்  அவளின் தேர்ந்த மயக்கும் சொற்களையும் சமாளித்து, அவனுடைய எஜமான விசுவாசம் என்ற கவசத்தால் தகுந்த மறுமொழிகளைத் தந்தான். ‘முற்பிறவியில் நாம் சந்தித்தவர்களாக இருந்திருப்போம்’ என்று நந்தினி கூறியபோதுகூட, மனதில் குடந்தை ஜோதிடர் வீட்டில் சந்தித்த பெண்ணை நினைத்தபடி நந்தினியை ஒட்டியே பேசினான்.  ஆழ்வார்க்கடியான் தன்னிடம் நந்தினியைத் தன் தங்கையெனக் கூறியதாகவும் மறுபடியும் பழைய வாழ்க்கைக்குத் தங்களை அழைத்துப் போக விருப்பமாக இருப்பதையும் நந்தினியிடம் கூறச் சொல்லியதாகக் கூறினான். ‘அது தன்னால் முடியாது’ என்று கூறிய நந்தினியிடம், அவளைப் பாராட்டி புகழ்ந்தே வந்தியத்தேவன் பேசியதை அவள் ஒருவாறு ஏற்றுக் கொண்டாள். முத்திரை மோதிரத்தை பழுவேட்டரையர் தன்னிடம் கொடுத்ததாக சின்னப் பழுவேட்டரையரிடம் பொய் சொன்னதாகச் சொல்லிக் கொண்டிருந்தபோது எக்காளங்களும் முரசுகளும் ஒலிக்கக் கேட்டு பெரிய பழுவேட்டரையர் வந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டார்கள்.  பேச்சுவாக்கில் குந்தவையைப் பற்றிப் பேசும்போது நந்தினியின் கண்ணில் தெரிந்த குரோதத்தைக் கண்ட வந்தியத்தேவன் உள்ளூர அதிர்ந்தான். தனக்கான அந்தரங்க ஊழியனாக இருக்கச் சொல்லி நந்தினி கேட்டபொழுது, அந்தப் பணிக்காகவே தன் தலைவன் கரிகாலன் குந்தவையிடம் தன்னை அனுப்பி வைத்திருப்பதாக வந்தியத்தேவன் கூறியதைக் கேட்டு எரிச்சலடைந்தாள். குந்தவைக்கு எடுத்துச் செல்லும் ஓலையைப் படித்துவிட்டு, இதற்கு மறுமொழியை என்னிடம் காட்டுவதாயிருந்தால் இந்தக் கோட்டையை விட்டு உங்களைத் தப்பி செல்ல உதவி செய்வதோடு  வேறு சில உதவிகளும் என்னால் செய்ய முடியும் என நந்தினி கூறியபோது ஆந்தையின் குரல் கேட்டது. நிஜ மந்திரவாதியே வந்து விட்டான் என்றாள் நந்தினி; வந்தியத்தேவன் மறைந்து கொண்டான்.  ஆழ்வார்க்கடியான் திருப்புறம்பியம் பள்ளிப்படையில் பார்த்த அந்த ரவிதாசன்தான் மந்திரவாதியாக வந்திருந்தான். நந்தினியிடம் அவளின் பழைய கதையை நினைவூட்டிய ரவிதாசன்,  வீரபாண்டியன் சிதையோடு கட்டாய உடன்கட்டை ஏற்றப்பட இருந்த அவள், தங்களுடன் இணைந்து பழிவாங்கும் நடவடிக்கையில் உதவுவேன் என்று சொன்னதை நினைவூட்டினான். தங்கள் கூட்டத்தில் யாரும் நம்பவில்லையாயினும், தான் மட்டும் அவளை நம்பிக் காப்பாற்றியதாகவும், நந்தினி பழுவேட்டரையரை மணந்து கொண்டதால் ஆத்திரமுற்றுக் கொல்ல வந்த பொழுது, பழைய சம்பவங்களுக்குப் பழிவாங்குவதற்கே இந்த அரண்மனையில் இருப்பதாக நந்தினி கூறியதையும் அவளுக்கு நினைவுபடுத்தி,  இப்பொழுது சுகபோகத்தில் அதை மறந்து விட்டதாகக் குற்றம் சாட்டினான். மேலும் வந்தியத்தேவனின் அழகில் அவள் மயங்கியிருக்கலாம் என்றும் சொல்ல, நந்தினி கோபமுற்று தான் செய்யும் திட்டங்கள் குந்தவைக்கு எதிரானவை என்றும் அங்கிருந்தும் சோழ அரசை அழிக்கும் செயலைத் தொடங்க வேண்டும் என்றும் கூறினாள். அதை நம்பாமல் பார்த்த ரவிதாசனிடம், வந்தியத்தேவனை அவனிடம் ஒப்படைப்பதாகவும் அவனுடன் சென்று குந்தவையிடம் பதில் ஓலை வாங்கியதும் தன்னிடம் அழைத்து வருமாறும் கூறிவிட்டு வந்தியத்தேவனைத் தேடியபோது அவன் அங்கிருந்து காணாமல் போயிருந்தான்.  பெரிய பழுவேட்டரையர் திரும்பி வந்தபொழுது எப்பொழுதும் எதிர்கொள்ளும் சின்ன பழுவேட்டரையர் சிறிது நேரம் கழித்தே வந்தார். போன காரியம் வெற்றியடைந்ததைப் பற்றிச் சொன்ன பெரிய பழுவேட்டரையரிடம், குந்தவையிடமும் செம்பியன் மாதேவியிடமும் கவனத்துடன் இருக்க வேண்டுமென சின்ன பழுவேட்டரையர் கேட்டுக் கொண்டார்.  பின்னர் பெரியவர் பெயரைச் சொல்லிக் கொண்டு முத்திரை மோதிரத்துடன் வந்திருந்த வந்தியத்தேவன் பற்றிய நிகழ்ச்சிகளைச் சின்னவர் சொல்ல, இருவரையும் வந்தியத்தேவன் ஏமாற்றி விட்டதை உணர்ந்து கோபமடைந்தனர். அப்படியானால் அந்த முத்திரை மோதிரம் இளையராணிதான்  தந்திருக்க முடியும் எனவும், நந்தினி மேல் தனக்கிருக்கும் சந்தேகங்களையும் சின்ன பழுவேட்டரையர் கூற, பெரியவர் சின்னப் பையனிடம் ஏமாந்துவிட்டதற்காகவும் நந்தினி மேல் சந்தேகப்பட்டதற்காகவும் சினந்து, தம்பியை வார்த்தைகளில் வறுத்தெடுத்துவிட்டு நந்தினியைப் பார்க்கச் சென்றார். செல்லும் வழியில் நந்தினியைப் பற்றி யோசித்துக் கொண்டே சென்ற பெரியவர், மந்திரவாதியை அடிக்கடி அழைத்துப் பேசுவது, தன்னைத் தொட விடாமல் விரதம் என்று சொல்வது பற்றியெல்லாம் கேட்டே ஆகவேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டார். பழுவேட்டரையர் லதாமண்டபத்தை அடையும்பொழுது நந்தினி அழுதுகொண்டே, தான் அவரை விட்டுப் பிரிந்து இருப்பது கடினமாக இருந்தது என்றும், தன்னை அனைவரும் பழிசுமத்துகிறார்கள் எனவும் நாடகமாடினாள். நந்தினியின் நடிப்புக்குக் கைப்பாவையாகிவிட்ட பழுவேட்டரையர், அவளை சமாதானப் படுத்தினார். மதுராந்தகனை நந்தினி அரச பதவிக்காக மனம் மாற்றியதையும், சுரங்க வழியில் சென்று பல்லக்கில் மறைத்து சென்றதையும் அவளின் புத்திசாலித்தனமான யோசனை எனக் கூறிப் பாராட்டி சமாதானப்படுத்த முயன்றார். நந்தினி மேலும் மேலுமாக நடித்து, ‘ஒரு கிழ எருமை மாட்டை இந்த இளம்வயதில் மணந்திருக்கிறாயே’ என்று சொல்லி குந்தவை அவளை ஏற்கனவே அவமானப்படுத்தியதை எல்லாம் சொல்லி அழத் தொடங்க, குந்தவை மீதான பழுவேட்டரையரின் சினம் மேலும் அதிகமானது. போர்க்களத்தில் தன்னந்தனியான வழியில் அபயம் என நந்தினி வந்தபோதே அவர் உள்ளம் அவள்பால் விழுந்து விட்டது என்றும் முன் பிறவிகளாய் நாம் இணைந்திருந்தோம் என்றும் பழைய கதைகளைக் கூறக்கூற நந்தினி பின்பக்கமாய்த் திரும்பி எரிச்சலை அடக்கிக்கொண்டு அவர் பேசுவதைக் கண்டு மகிழ்வதைப் போல நடித்தாள்.  மேலும், வீரராகிய அவர் பெண்ணான குந்தவையின் மந்திரசக்தியை எதிர்ப்பது அவரின் வீரத்துக்கே இழுக்கு என்பதால்தான், மந்திரவாதியின் உதவியைத் தான் நாடுவதாக நந்தினி கூறியதும் பழுவேட்டரையர் உருகிவிட்டார். அந்தப் பொழுதிலேயே நந்தினி, சுந்தர சோழரை அரச பதவியிலிருந்து இறக்கிவிட்டு பழுவேட்டரையரை சோழ சிம்மாசனத்தில் அமர வைப்பதுதான் தன் திட்டம் எனக் கூறவும் அவர் மேலும் நிலைகுலைந்தார்.  மந்திரவாதியும் நந்தினியும் பேசிக்கொண்டிருந்த போதே, அங்கிருந்து மறைவில் சென்ற வந்தியத்தேவன் தட்டுத்தடுமாறியபடி ஒரு இருண்ட சுரங்கப்பாதையை அடைந்தான். இருட்டில் துழாவியபடி வழியைத்தேடிக் கொண்டிருந்தபோது காலடிச் சத்தம் கேட்டு அத்திசையில் பார்க்கையில் மதுராந்தகனை வேல் தாங்கிய காவலன் ஒருவனும், அவனுடைய நண்பனான கந்தமாறனும் அழைத்து வருவதைக் கண்டான். பல்லக்கில் நந்தினியை அனுப்பிவிட்டு கோட்டைக்குள் சுரங்க வழியாக மதுராந்தகனை ரகசியமாக அழைத்து வருவதைப் புரிந்து மறைந்து கொண்டான். அவர்கள் வந்த வழியே தப்பிச் சென்றுவிடலாம் என்று கருதி அவ்வழியே சென்றவன் ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ள, அந்த இடம் பொக்கிஷ நிலவறை என்பதை உணர்ந்துகொண்டான். மறுபடியும் ஏதோ ஒலி கேட்க வந்தியத்தேவன் ஒளிந்து நின்று கவனித்தான். மதுராந்தகனை விட்டுவிட்டு வந்த கந்தமாறன், காவலனுடன்  ஒருபுறம் வர, பெரிய பழுவேட்டரையர் நந்தினியுடன் இன்னொரு புறத்திலிருந்து வந்து சந்தித்து ஏதோ பேசிக்கொண்டார்கள்.  பிறகு கந்தமாறன் விடைபெற்று முந்திச் செல்ல பெரிய பழுவேட்டரையர் பின்செல்லும் வீரனுக்கு ஏதோ சமிக்ஞை செய்தார். இருண்ட அந்தப் பாதையில் கந்தமாறனைப் பின் தொடர்ந்தால் கோட்டைக்கு வெளியே சென்றுவிடலாம் என்று புரிந்து கொண்ட வந்தியத்தேவன் சற்றுத்தொலைவில் அவர்களைப் பின் தொடர்ந்தான்.  ரகசியமான இடத்தில் சுவர் திறக்கப்பட, முதலில் வெளியேறிய கந்தமாறனைப் பின்னாலிருந்து காவலன் கத்தியால் குத்தினான். வந்தியத்தேவன் துரிதமாகச் செயல்பட்டு, அந்தக் காவலன் மேலும் கந்தமாறனைத் தாக்காதவாறு அவனை உதைக்க, அவன் சுவரில் மோதி கீழே சரிந்தான். அந்த நேரத்தில்  விளக்கு வெளிச்சம் வந்தியத்தேவன் மீது விழுந்தது. முதலில் கந்தமாறனைக் காப்பாற்றுவதுதான் முக்கியம் என்று உணர்ந்து கொண்ட வந்தியத்தேவன், அந்தக் காவலனை அவனது அங்கவஸ்திரத்தைக் கொண்டேக் கட்டிப் போட்டுவிட்டு, மயங்கிச் சரிந்திருந்த கந்தமாறனைத்  தூக்கிக்கொண்டு சுரங்கப் பாதையிலிருந்து வெளியே வந்தான். அது கோட்டைக்கு வெளியே வடவாறு ஒட்டிச்செல்லும் இடம் என்பதைக் கவனித்து கந்தமாறனைத் தோளில் சுமந்து நீரில் மூழ்கிவிடாதவாறு ஓரமாகவே சென்று ஆழம் குறைவாக இருந்த இடத்தில் சிரமப்பட்டு ஆற்றைக் கடந்து சென்றான். மரநிழலில் அவனைக் கீழே இறக்கி இன்னும் உயிர் இருக்கிறதா என்று பார்க்க, சற்றே கண்விழித்த  கந்தமாறன், வந்தியத்தேவன்தான் தன்னைப் பின்னாலிருந்து  கத்தியால் குத்திவிட்டதாகக் குற்றம் சாட்டடிவிட்டு மீண்டும் மயங்கிவிட்டான். வந்தியத்தேவன் உள்ளம் சோர்ந்து போனான்.  மறுபடியும் கந்தன்மாறனைத் தூக்கிக் கொண்டு பக்கத்திலிருந்த சேந்தன் அமுதன் வீட்டிற்குச் சென்றான். தோட்டத்தை நெருங்கியபோதே அது முற்றிலுமாக நாசமாக்கப்பட்டு இருந்ததைக் கண்டு கலங்கிப் போனான். சின்ன பழுவேட்டரையரின் ஆட்கள், தான் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து வந்து நாசமாக்கியிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டவன், திண்ணையில் படுத்திருந்த சேந்தன் அமுதனை மெல்ல எழுப்பி கந்தமாறனைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தைக் கூறினான். சேந்தன் அமுதன், படைகள் வந்து அவனை விசாரித்து  நந்தவனத்தை அழித்துவிட்டுப் போனதாகவும் நல்லவேளையாகக் குதிரையை ஒன்றும் செய்யவில்லை என்றும் சொல்லிவிட்டு முதலில் இங்கிருந்து தப்பித்துப் போகும்படி வந்தியத்தேவனிடம் கூறினான். தன்னுடைய அன்னை வைத்தியத்தில் தேர்ந்தவள் என்று கூறிய சேந்தன் அமுதன் அன்னையை எழுப்பினான். பச்சிலைகள் கட்டி கந்தமாறனுக்கு மருத்துவம் செய்யத் தொடங்கியபோது படைவீரர்கள் வரும் சத்தம் கேட்கவே, சேந்தன் அமுதனை பழையாறைக்குச் செல்ல சிறிது தூரம் வழிகாட்ட வருமாறு அழைத்துக் கொண்டு வந்தியத்தேவன் குதிரையில் ஏறிக் கிளம்பினான். வந்த படைவீரர்கள் வாய்பேசமுடியாத முதியவளிடமிருந்து எதையும் தெரிந்துகொள்ள முடியாமல் வெளியேறினர். அதில் பாதிப்பேர் குதிரைச் சத்தத்தைக் கேட்டு வந்தியத்தேவனை துரத்திக்கொண்டு சென்றனர். மறைந்த கண்டராதித்தரின் மனைவியான செம்பியன் மாதேவியும், குந்தவையும், வானதியும், பழையாறையில் கிருஷ்ணனின் பிறந்தநாளான அன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டுத் திரும்புகையில் ஆழ்வார்க்கடியானைக் கண்டார்கள். சிறு சமிக்ஞையின் மூலம் அவனை அரண்மனைக்கு வருமாறு சைகை செய்தனர். ஆழ்வார்க்கடியான் முதலில் செம்பியன் மாதேவியைச் சந்தித்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைப் பற்றி விவரமாகக் கூறலானான். ‘ஆதித்த கரிகாலன், பார்த்திபேந்திர பல்லவன் மற்றும் ஆதித்த கரிகாலனுடைய பாட்டனாராகிய திருக்கோவலூர் மலையமான் ஆகியோர் காஞ்சிபுரத்தில் பேசிக்கொண்டனர். இரண்டு பழுவேட்டரையர்களும் மதுராந்தகனும் சேர்ந்து சதி செய்து, சக்ரவர்த்தியைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதாகவும் அதற்கு செம்பியன் மாதேவியின் ஆதரவும் உள்ளது என்று சந்தேகப் படுகிறார்கள். எனவே அந்தரங்கமான தூதுவன் ஒருவனை ஓலை கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அவன் சக்ரவர்த்தியைச் சந்தித்து ஓலையைக் கொடுத்து விட்டான். பதில் அளிப்பதற்கு ஒரு நாள் காத்திருக்குமாறு சக்ரவர்த்தி கூற, அதற்குள் அவன் சின்ன பழுவேட்டரையனின் கட்டுக்காவலை மீறித் தப்பித்துவிட்டான். அவன் அசகாய சூரன். மேலும்…’ என ஆழ்வார்க்கடியான் தயங்கியபோது, எதுவானாலும் சொல்லுமாறு செம்பியன் மாதேவி கூறினார். மதுராந்தகன் பல்லக்கில் கடம்பூரில் நடந்த ரகசியக் கூட்டத்துக்கு வந்ததையும், அங்கு நடந்த ஆலோசனைகளைப் பற்றியும் கூறினான். மிகவும் வருந்திய செம்பியன் மாதேவி குந்தவை தேவியைக் கலந்துகொண்டு மறுபடியும் ஆழ்வார்க்கடியானைச் சந்திப்பதாகக் கூறி அவனை அனுப்பி வைத்தார். பழையாறை நகரில் சோழ அரண்மனையை ஒட்டி ஓடை ஒன்றை அரசர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். குந்தவையின் மாளிகையில் உத்தியானவனத்தில்  குந்தவையும் வானதியும் பேசிக்கொண்டிருந்தனர். ஈழத்துக்கு

பொன்னியின் செல்வன் – 6

பொன்னியின் செல்வன் – 6

கோட்டைக்குள் நுழைந்த வந்தியத்தேவனுக்கு, ஒரு நகரத்துக்கு வந்த புதிதான அனுபவம் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளித்தது. பழுவூர் இளையராணியின் முத்திரை மோதிரம், காட்டிய மாத்திரத்தில் ஒரு கேள்விகூட இல்லாமல் அனைத்துக் கதவுகளையும் திறக்கக்கூடிய வல்லமை படைத்ததாக இருந்தது. நகருக்குப் புதியவன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தாமல் புலிக்கொடி பறந்து கொண்டிருந்த அரண்மனையை நோக்கி அரசரைக் காண வந்தியத்தேவன் சென்று கொண்டிருந்தான். சின்ன பழுவேட்டரையரைத் தாண்டி அரசரை யாரும் சந்திக்க முடியாது என்று தெரிந்து கொண்ட வந்தியத்தேவன், பெரிய பழுவேட்டரையர் இன்னும் கடம்பூரிலிருந்து திரும்பவில்லை என்பதையும் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டான். அரண்மனையினுள் நுழைந்தவன் சின்னப் பழுவேட்டரையரைச் சந்திக்க எங்கு செல்வது என்று குழம்பிக் கொண்டிருந்தபொழுது, ஒரு புலவர் கூட்டம் அரசரைச் சந்திக்க அவரின் அனுமதி வாங்கச் சென்று கொண்டிருந்ததைக் கண்டு அவர்களுடன் இணைந்து கொண்டான். தமையனாரை விட ஆஜானுபாகுவாய் வீற்றிருந்த சின்ன பழுவேட்டரையரை நெருங்கி அறிமுகப்படுத்திக் கொண்டான். வீர இளைஞர்களைக் கண்டால் தன் காவல்படையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளும் ஆவலில் ஆர்வமாகக் கவனித்த சின்ன பழுவேட்டரையர் ஆதித்த கரிகாலனின் தூதுவன் என்றதும் முகம் கடுத்தார். ஓலையை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு புதிதாக ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு, அரசரிடம் தானே ஓலையைச் சேர்த்து விடுவதாகக் கூறினார். இதை எதிர்பார்த்திருந்தபடியால் வந்தியத்தேவன் கடம்பூரில் பெரிய பழுவேட்டரையரைப் பார்த்ததாகவும் அவர்தான் இந்த ஓலையை அரசரிடம் தன்னையே கொடுக்கச் சொன்னதாகவும் இட்டுக் கட்டிக்கூற, அரசரைப் பார்க்க உள்ளே அனுப்பினார். அரசரைக் கண்டதும் பரவசமும், அவர் நோயில் நலிந்து காணப்பட்டதால் வருத்தமும் அடைந்த வந்தியத்தேவனுக்குப் பேச்சே வரவில்லை. மகனிடமிருந்து வந்த ஓலை என்றது அரசரும், அரசியுமான வானமாதேவியும் மிகவும் மகிழ்ந்தனர். தான் கட்டிக்கொண்டிருக்கும் பொன்மாளிகைக்கு வருகை தருமாறு ஓலையில் ஆதித்த கரிகாலன் எழுதியிருந்ததைப் படித்த அரசர், ‘தெய்வங்களுக்கு மட்டுமே பொன்மாளிகை ஏற்படுத்த வேண்டும்; மனிதர்களுக்குத் தேவையா?’ என்று வருந்த, தாயும் தகப்பனுமாயும், நாட்டுக்கான அரசனுமாயும் விளங்கும் சுந்தரசோழர்-வானமாதேவிக்குப் பொன்மாளிகை கட்டியது தவறில்லை என வந்தியத்தேவன் இனிய சொற்களைக் கூற, இருவருக்கும் வந்தியத்தேவனை மிகவும் பிடித்து விட்டது. தூரத்தில் சின்ன பழுவேட்டரையர் வருவதைக் கண்டவன், தான் சொல்ல நினைத்ததை அவசர அவசரமாகக் கூறினான். ‘தாங்கள் தஞ்சையிலிருந்து கிளம்ப வேண்டும். இங்கு அபாயம் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அபாயம்.. அபாயம்’ .. எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சின்ன பழுவேட்டரையர் உள்ளே நுழைய, அவர் கடைசி வார்த்தையைக் கேட்டு விட்டார். அப்போது புலவர்கள் உள்ளே வர, வந்தியத்தேவன் அவர்களுடனேயே போய் நின்றுகொண்டான். வந்த புலவர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாட, அரசர் அதில் லயித்து மகிழ்ந்தார். பாடல்கள் வழி ஒரு குறிப்பு இருந்தது. அது இலங்கையில் நடக்கும் போருக்கு இங்கிருந்து உணவுப் பொருட்கள் அனுப்ப வேண்டாம் என்பதாகும். நடுவில் குந்தவை தேவியைப் பற்றி அரசர் பேசியபோது, அவரின் முகம் நெகிழ்ந்ததைக் கண்ட வந்தியத்தேவன், அவரைச் சந்தித்து அடுத்த ஓலையைக் கொடுக்க வேண்டும் என்று இடுப்பைத் தொட்டு பார்த்தான். ஓலையைக் காணவில்லை. எங்கோ தொலைந்து போய்விட்டது என்று தெரிந்துகொண்டவன், இருப்பில் நிற்காமல் பதட்டமுற்று கிளம்பிக் கொண்டிருக்கும் அந்த புலவர்களுடனேயே திரும்ப முனைந்தான். ஆனால் சின்ன பழுவேட்டரையர் அவனைப் போகவிடாமல் இறுகக் கைப்பற்றி அரசரிடம் கூட்டிச்சென்று அபாயம் என அவர் காதில் விழுந்ததைப் பற்றி விசாரித்தார். சுதாரித்துக்கொண்ட வந்தியத்தேவன், தான் அபயம் எனக் கேட்டதாகவும், தனக்கு ஒரு பத்து கிராமங்களாவது தங்களுடைய முன்னோர் பூமியில் அளிக்குமாறு வேண்டிக் கொண்டதாகவும் முறையிட்டான். அதையும் ரசித்த அரசரிடம், சின்ன பழுவேட்டரையர் ஓலைக்கு என்ன பதில் அனுப்புவது என்று கேட்க, அரசர் தஞ்சையை விட்டு வெளியே போவதில் அதுவும் பெண் பிள்ளைகள் போகும் பல்லக்கில் கால் செயலிழந்த நிலையில் போவது விருப்பமில்லை என்று கூறினார். அதற்குத் தகுந்த பதில் பெரிய பழுவேட்டரையர் திரும்பி வந்ததும் கலந்துகொண்டு அனுப்பலாம் எனவும், தன் பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் போல் இருப்பதாகவும், எனவே ஆதித்த கரிகாலனையும், ஈழம் சென்றிருக்கும் அருள்மொழி வர்மனையும் வரச் சொல்லி ஓலை எழுதவேண்டும் எனவும் கூறினார். அதுவரை வந்தியத்தேவனை இங்கேயே தங்க ஏற்பாடு செய்யுமாறும் கூறினார். ஈழத்திற்கு உணவுப் பொருட்கள் அனுப்புவதற்கான சின்ன பழுவேட்டரையரின் ஆட்சேபனையைப் புலவர்களின் பாட்டால் குறிப்புணர்த்தியதைப் புரிந்துகொண்ட அரசர், அதற்கும் ஏற்பாடு செய்யலாம் எனக் கூறினார். யமனிடமிருந்து கூட மீட்டு வருபவர் என்னும் அளவுக்கு அரசர் சின்ன பழுவேட்டரையரின்பால் நம்பிக்கை வைத்திருந்தது அவர் பேச்சிலேயே தெரிந்தது. ஓலையைத் தொலைத்திருந்த வந்தியத்தேவனுக்கு மனம் தடுமாறிக் கொண்டே இருந்தது. அவன் நினைத்தாற்போலவே அந்த ஓலை சின்ன பழுவேட்டரையரிடம் ஒரு காவலன் மூலமாக அடைந்திருந்தது. ‘அந்தரங்கமான காரியங்களுக்கு உண்மையான தீரன் வேண்டும் எனக் கேட்டிருந்தாய் அல்லவா? ஓலையைக் கொண்டு வருபவனே அந்த வீரன்’ என்றும், ‘வந்தியத்தேவனைப் பூரணமாக நம்பலாம்’ என்றும் ஆதித்த கரிகாலன் அந்த ஓலையில் எழுதியிருந்ததைக் கண்ட சின்ன பழுவேட்டரையர், இதில் ஏதோ சூது இருக்கிறது என்று புரிந்து கொண்டே வேகமாக அங்கு வந்திருந்தார்.  அரசரிடம் விடைபெற்றுக்கொண்டு, வந்தியத்தேவனைக் காவலாளிகளிடம் ஒப்படைத்து நன்கு உபசரிக்கும்படி ஆணையிட்டார். வெகுதூரம் வந்த களைப்பு போக அந்த மாளிகையில் தனக்கு அளிக்கப்பட்ட சுகபோக உபசரிப்பில் வந்த விஷயத்தையே மறந்து போகும் வண்ணம் மகிழ்ந்திருந்தான் வந்தியத்தேவன். புதிய உடைகள், உணவு எல்லாவற்றையும் ருசித்தவன், அங்கிருந்த சிற்பக் கூடத்தைச் சுற்றிப் பார்த்து சோழர்குல வரிசை, பராக்கிரமம், போர்கள், போரில் வீர மரணம் அடைந்தவர்கள், அதில் பழுவேட்டரையர் பரம்பரை செய்த தியாகங்கள், உதவிகள் எல்லாவற்றையும் பார்வையிட்டுப் புரிந்து கொண்டான்.  தன்னைக் கண்காணிப்பதற்கே இந்த உபசரிப்பு என்று புரிந்து கொண்ட வந்தியத்தேவன், சடுதியில் ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு அங்கிருந்த காவலாளிகளிடம் தன் பொருட்களைத் திருப்பித் தருமாறு சண்டையிட ஆரம்பித்தான். முன்வாசலில் குதிரையில் வந்த சின்ன பழுவேட்டரையரை ஓரக்கண்ணில் கவனித்தவன் தன்னை நெருங்கியவர்களை எல்லாம் ஒரே சுற்றில் வீழ்த்தினான். என்ன கலாட்டா என்று நெருங்கியவர், அவனின் வீரத்தை மனதுக்குள் மெச்சி, தமையனாரிடம் கலந்து கொண்டு  அவனைத் தன் காவற்படையில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணிக்கொண்டார். தன் பொருட்களெல்லாம் காணவில்லை, திரும்ப வேண்டும் என்று கேட்ட வந்தியத்தேவனிடம் என்ன பொருட்கள் எனக் கேட்க, அவன் வேறுவழியில்லாமல் குந்தவை தேவியின் ஓலையும் அதில் இருப்பதாகக் கூறி அனைத்துப் பொருட்களும் எனக்குத் திரும்ப வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தான்.  அவர் ஆணையின்படி எடுத்து வந்த பொருட்களில், தவறவிடப்பட்டிருந்த ஓலையும் அவன் வைத்திருந்ததை விட அதிகப் பொற்காசுகளும் இருந்தன. இதிலிருந்தே தன்னை உளவு பார்த்ததைப் புரிந்து கொண்டவன், அதிகப்படியாக இருந்த காசுகளை மறுத்தான். அதை வைத்துக்கொள்ளுமாறு கூறிய சின்ன பழுவேட்டரையர், அவன் அன்று அங்கேயே தங்கி, பெரிய பழுவேட்டரையரைப் பார்த்துவிட்டுப் போகிறானா என அவன் திட்டத்தை விசாரித்தார். இருந்துவிட்டுப் போவதாகவே கூறியவன், தஞ்சைக் கோட்டையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென அனுமதி கேட்டான். அவனுடன் இரு காவலாளிகளைத் துணைக்கு அனுப்பி, சுற்றிப் பார்க்கச் சொல்லிவிட்டு சின்ன பழுவேட்டரையர் கிளம்பினார்.  தான் தப்பிப் போகாமல் இருப்பதற்குத்தான் காவலாளிகள் இருவரும் வருகிறார்கள் என்று புரிந்துகொண்ட வந்தியத்தேவன், வேடிக்கை பார்ப்பது போல் போக்கு காட்டிக்கொண்டே, அங்கிருந்து எப்படித் தப்புவது என்று யோசித்துக்கொண்டு வந்தான். திடீரென அவனுக்கு நந்தினியின் ஞாபகம் வந்து, இந்தக் கோட்டையில் உதவி செய்வதானால் அவள்தான் செய்ய முடியும் என்று தோன்ற, காவலாளிகளிடம் இருந்து தப்ப சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியில் வேளக்காரப் படை வந்து கொண்டிருந்தது. திடீரென வேளக்காரப் படை வரிசையில் சிறிது குழப்பம் ஏற்பட, அதைப் பிடித்துக் கொண்ட வந்தியத்தேவன் அங்கிருந்து ஓடிய வீரர்களுடன், தானும் ‘பிடி.. பிடி’ என்று சத்தம் போட்டுக்கொண்டே எதிர்ப்பட்ட சந்தின் வழியே தப்பி ஓடினான்.  அவர்களுடனே சிறிது தூரம் ஓடியவன், பின் வழி மாறி சிறிய சந்துகளிலெல்லாம் மாறி மாறிச் சென்று, ஒரு பெரிய மதில் சுவரின் ஓரத்தில்  அமர்ந்து கொண்டான். இந்நேரம் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் தன்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள், எப்படியேனும் தப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டவன் அப்படியே சுவரின் மீது சாய்ந்து தூங்கி விட்டான். சிறிது நேரத்தில் யாரோ அழைப்பது கேட்டு விழித்தவன் மேலிருந்து ஒரு பெண் உருவம் பேசுவதைக் கண்டு அதிர்ச்சியுற்றான்.  அந்த உருவம் ‘என்ன தூக்கமா? இரு ஏணி வைக்கிறேன். ஏறி வா’ எனக் கூறிவிட்டு மூங்கில் ஏணி ஒன்றை இறக்க, வந்தியத்தேவனால் நம்பவே முடியவில்லை. சரி ஆனது ஆகட்டும். போய்ப் பார்க்கலாம் என ஏறத் தொடங்கினான். ‘ம். அங்கே இளையராணி காத்துக் கொண்டிருக்கிறார்கள். உனக்குத் தூக்கம் கேட்கிறதா’ என்று அந்தப் பெண் கேட்க, வந்தியத்தேவனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. இளையராணி என்றால் நந்தினியின் மாளிகைக்கா நாம் வந்திருக்கிறோம் என்று எண்ணியவன், மேலும் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வோம் என வேகமாக ஏறினான். மதிலின் உச்சியில் ஏறிக் கீழே பார்த்தபோது, அது ஒரு அரண்மனையின் விஸ்தாரமான தோட்டம் எனத் தெரிந்தது.  யாருடையது எனக் கேட்கத் தொடங்கிய வந்தியத்தேவனை ‘உஷ்.. என அடக்கியபடி அந்தப் பெண் முன்னால் நடந்தாள். வந்தியத்தேவனும் தொடர்ந்தான்.  நடுவில் காவலாளிகளின் சத்தத்திற்கு மறைந்து கொண்டபோது நிலவின் வெளிச்சத்தில் அந்தப் பெண் வந்தியத்தேவன் முகத்தை உற்றுப்பார்த்து, ‘நீ போனமுறை வந்த அதே மந்திரவாதிதானா?’ என்று சந்தேகத்துடன் கேட்க, இவன் சமாளித்துக் கொண்டு அடிக்கடி மாறுவேடம் பூண்டாக வேண்டிய அவசியத்தைக் கூறினான். பின் ஒரு லதா மண்டபத்தை அடைந்தார்கள். அந்த இரவில் அங்கிருந்த விளக்குகளின் ஒளியில் அலங்கரிக்கப்பட்ட அந்த மண்டபம் ஒரு விதத்தில் தேவலோகமென வந்தியத்தேவனுக்குத் தோன்றியது. உள்ளே சென்ற பெண்ணிடம் பேசிய குரலை வைத்து, அது நந்தினிதான் எனப் புரிந்து கொண்டான்.  உள்ளே வந்தியத்தேவன் நுழைந்தபோது ஒயிலாய் சப்பர மஞ்சத்தில் நந்தினி சாய்ந்திருந்தாள். அவனைக் கண்டு வியந்தபோதும், பணிப்பெண்ணின் முன் இருவரும் சமாளித்துக் கொண்டனர். அழகெனும் தெய்வமே உருக்கொண்டாற்போல் நந்தினியின் மோகன உருவத்தைக் கண்டு மயங்கிய வந்தியத்தேவன், முன்னொருமுறை மதுவால் ஏற்பட்ட மயக்கத்தையும், சித்தம் கலங்குவதால் இனிமேல் மது அருந்தக்கூடாது என்று தான் உறுதி எடுத்துக் கொண்டதையும் நினைத்து, இதுவும் அதுபோலத்தான் என்று எண்ணிக் கொண்டு திடமாய் தன்னை

பொன்னியின் செல்வன் – 5

பொன்னியின் செல்வன் – 5

சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நடந்த யுத்தத்தில் அவ்வப்போது சிங்கள மன்னர்கள் பாண்டியர்களுக்கு உதவி செய்வது வழக்கமாய் இருந்தது. பாண்டிய மன்னனான வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் வென்றதைத் தொடர்ந்து, ஈழமன்னனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என சோழநாடு விரும்பியது. போர் புரிவதை விரும்பும் சோழத் தளபதிகள்,  மாவீரர்கள் அங்கு செல்வதற்குப் போட்டி போட்டனர். அப்பொழுது இளவலான அருள்மொழிவர்மன், தன்னை அனுப்பும்படி அனைவரிடமும் வலியுறுத்தினார். குந்தவை தேவிக்குத் தன் தம்பியாகிய அருள்மொழிவர்மன் மீது தனிப்பிரியம். அவரும் தமக்கை குந்தவை இட்ட கட்டளைகளை மீறியதே கிடையாது. தன் தம்பியை வீரனாகவே வரித்திருந்த குந்தவைக்கு ஈழம் செல்லத் தகுதியானவன் அருள்மொழிவர்மர்தான் என்று தோன்றியது. ஈழத்துக்கு வழியனுப்புகையில், தன் தோழியான வானதியை ஆரத்தி எடுக்கப் பணித்தபொழுது, வானதி தனக்கேற்பட்ட மனக்கிளர்ச்சியால் தட்டைத் தவறவிட்டு மயக்கமடைந்தாள். இளவரசரும் பதற, குந்தவை வானதியைத் தாங்கிப் பிடித்து உள்ளே அழைத்து சென்றார். இளவரசர் வந்து வானதியைசி சற்றே சமாதானப் படுத்திவிட்டு விடைபெற்றுச் சென்றார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் வானதிக்கு அடிக்கடி மயக்கம் வந்தது. குந்தவையும் அவளைக் கண்போலப் பார்த்துக் கொண்டிருந்தாள். இது, உடனிருந்த தோழிகளிடையே வானதியின் மேல் பொறாமையைச் வளரச் செய்தது. வானதியின் பயத்தைப் போக்க, தாங்கள் ஜோதிடர் வீட்டுக்குச் சென்று திரும்புவதற்குள் ஒரு பொம்மை முதலையைத் தயார் செய்து வைக்கச் சொல்லியிருந்தாள் குந்தவை. அவர்கள் இருவரும் திரும்பி வந்தபோது, அனைவரும் ‘முதலை முதலை’ எனக் கத்திக்கொண்டு பயந்தது போல நடித்தனர். வானதி பயப்படவில்லை. ஆனால், இந்த சத்தத்தைக் கேட்டு அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்த வந்தியத்தேவன், பெண்களைக் காப்பாற்றுவதாக எண்ணி ஈட்டியால் முதலையைத் தாக்கினான். அதிலிருந்து பஞ்சும், வாழைநாரும் வெளிவந்தன. சுற்றியுள்ள பெண்களெல்லாம் சிரிக்க, வந்தியத்தேவன் குழம்ப, குந்தவை ஜோதிடர் வீட்டில் பதில் சொல்லாமல் வந்ததற்கும், இங்கு பொம்மை முதலையுடன் விளையாடிக் கொண்டிருந்ததையும் சொல்லி வருத்தம் தெரிவிக்க, வந்தியத்தேவன் அடைந்த ஏமாற்றத்தைச் சொல்லி மாளாது. இத்தனையும் பெண்களுக்கு நடுவில் நடக்கவும், அசூயை அடைந்த வந்தியத்தேவன் குதிரையை விரட்டிக்கொண்டு வேகமாகக் கிளம்பி விட்டான். அதைக் கண்டு குந்தவை வருந்தியதோடு, தோழிகளையும் கடிந்து கொண்டாள். குந்தவையைச் சந்தித்தபிறகு அங்கேயே நின்றுவிட்ட மனதைத் திருப்ப முடியாமல் வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். குந்தவையின் நினைவால் இயற்கை எழிலை ரசிக்க முடியாமல் புதுவித உணர்வில் தவித்துக்கொண்டே தஞ்சையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். திருவையாறு திரும்பும் வழியில் கடம்பூர் மாளிகையில் பார்த்திருந்த மூடுபல்லக்கு வருவதைக் கவனித்தவன், அதில் இருப்பவர் மதுராந்தகன் என்பதை எப்படியாவது அம்பலப்படுத்திவிட வேண்டும் என முடிவு செய்துகொண்டு பல்லக்கைத் தொடர்ந்தான். பழுவேட்டரையரும் அவரின் பரிவாரங்களும் உடன் வராததால் இன்னும் துணிவு பிறந்தது. பழுவூர் ஆட்கள் இவன் பின்தொடர்வதைக் கவனித்து விசாரிக்க முயல்கையில், வேண்டுமென்றே பல்லக்கை இடிப்பதுபோல் சென்று காப்பாற்ற வேண்டும் என பல்லக்கில் இருப்பவரிடம் முறையிட்டான். காவலர்கள் பிடிக்க வந்த நேரம் பல்லக்கின் மூடுதிரை விலகியபோது உள்ளே தெரிந்த உருவத்தைக் கண்டு அதிர்ந்தான். மதுராந்தகனை எதிர்பார்த்த வந்தியத் தேவனுக்கு அழகிய மோகினியைப் போன்ற பெண்ணைக் கண்டு பேரதிர்ச்சி. முதலில் பேச்சு வராமல் திகைத்தவன், அவள் நந்தினிதான் என்று யூகித்த கணத்தில், ஆழ்வார்க்கடியானின் பெயரை உபயோகித்து, தங்களிடம் பேச வேண்டும் என்றான். பழுவூர் இளைய ராணியான நந்தினி, ஒரு கணம் வியந்தவள் அரண்மனையில் வந்து சந்திக்குமாறு கூற, ‘காவலர்கள் விடமாட்டார்களே’ என வந்தியத்தேவன் நயந்தான். உடனே நந்தினி, ஒரு தந்த மோதிரத்தைக் கொடுத்து, பின் தொடர்ந்து வரவேண்டாம் என எச்சரித்துவிட்டே அந்தப் பல்லக்கை நகரச் சொன்னாள். வந்தியத்தேவன் அவள் அழகில் கிறுகிறுத்துப் போயிருந்தான். பழுவேட்டரையர் இவள் பேச்சைக் கேட்கிறார் என்பது உண்மையானால் அது தவறில்லை என்று நினைத்துக் கொண்டான். பல்லக்கு வெகுதூரம் சென்றபிறகே கிளம்பிய வந்தியத்தேவன், தஞ்சையை அடைந்தான். நகரத்தை ரசிக்க ஆவலிருந்தாலும் முதலில் வந்த வேலையைப் பார்க்க வேண்டும் என்ற கடமையினால், கோட்டை பிரதான வாயிலுக்குச் செல்ல, அங்கு யாரும் உள்ளே சொல்லாமல் ஒதுங்கி நின்றிருந்தனர். காவலர் கவனத்தைக் கவராது உள்ளே செல்வது கடினம் என்று உணர்ந்து கொண்டு, அருகிலிருந்த ஒரு இளம் வாலிபனிடம் பேச்சுக் கொடுத்து, வேளக்காரப் படை வெளியில் வருவதற்காகத்தான் அனைவரும் ஒதுங்கி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டான். வேளக்காரப் படை பெரும் ஆர்ப்பாட்டத்துடன் வெளிவந்தது. அவர்கள் வெளியில் வந்த பிறகு முக்கியஸ்தர்களைத் தவிர உள்ளே செல்ல யாருக்கும் அனுமதியில்லை என்று தெரிந்து கொண்டவன், இரவைக் கோட்டைக்கு வெளியே கழித்து விடலாம் என்று முடிவு செய்தான். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சிவபக்தன் போலத் தோற்றமளித்த வாலிபனிடம் பேச்சுக் கொடுத்ததில், அவன் தஞ்சைத் தளிக்குளத்தார் ஆலயத்தில் மலர் கைங்கரியம் செய்து வருபவன் எனத் தெரிந்தது. தங்க இடமிருக்குமா என்று கேட்க, சேந்தன் அமுதன் என்ற அந்த வாலிபன் அவன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு கூறினான். அவனுடன் வீட்டுக்குச் சென்ற வந்தியத்தேவன் அவனுடைய தாயார் காது கேளாத, வாய்பேச முடியாத பெண்மணி என்று தெரிந்துகொண்டான். சேந்தன் அமுதனிடம் கோட்டையைப் பற்றிய விவரங்கள் கேட்டு அறிந்தான். கோட்டைக்குள்ளே சுந்தர சோழர், பழுவேட்டரையர்கள், முதன்மந்திரி அநிருத்தர், இளவரசர் மதுராந்தகர் அரண்மனைகளும் மற்றும் அதிகாரிகள் வசிப்பிடங்களும் துர்க்கைக் கோவிலும் கணிகையரும் இருப்பதாகக் கூறினான் சேந்தன் அமுதன். கோட்டைக் காவலர் சின்ன பழுவேட்டரையரின் மகளை மதுராந்தகர் மணந்திருப்பதாகவும் அதற்குப் பிறகு அவரின் குணம் சிறிது மாறிவிட்டதாகவும் கூறினான். வெகு சுவையான உணவை உண்ட வந்தியத்தேவன் அயர்ந்து உறங்கினான். இதற்கிடையில், வந்தியத்தேவன் கிளம்பிப்போன பிறகு திருமலையப்பன் என்னும் ஆழ்வார்க்கடியான், குதிரை வாங்கி வந்த பணியாளோடு பேச ஆரம்பித்தான். தன் பெயர் இடும்பன்காரி என்று அறிமுகப் படுத்திக்கொண்ட அந்தப் பணியாள் தன் கை விரல்களால் மீன் போன்ற முத்திரையைக் காட்ட, ஆழ்வார்க்கடியான் அதைப் புரிந்து கேள்வி கேட்டபோது ஒன்றுமில்லை என்று மறுத்துவிட்டான். ஆழ்வார்க்கடியானிடம் போக்குக் காட்டி அவன் விலகிச் சென்ற சமயத்தில் ஆழ்வார்க்கடியான் மரத்தின் மேல் ஏறிக்கொண்டு திரும்பவும் அவ்விடம் வந்த இடும்பன் காரியைக் கண்காணிக்க ஆரம்பித்தான். வெகுநேரம் கழிந்த பின்பு சோமன் சாம்பவன் என்னும் புதியவன் வந்து மீன் முத்திரையைக் காட்ட, இருவரும் கிளம்பித் திருபுறம்பியம் என்னும் பகைவனின் பள்ளிப்படைக்கு ரகசியமாகச் செல்லவேண்டுமெனப் பேசிக்கொண்டே கிளம்பினர். (பள்ளிப்படை என்பது பழந்தமிழகத்தில் போர்க்களத்தில் உயிர் துறந்த வீரர்களுக்கு எழுப்பப்படும் நடுகல்லும், தெய்வமும் இணைந்த கோயிலாகும்). பாண்டியருக்குப் பகை நிலையில் நின்று போரிட்ட பல்லவ மன்னனின் துணைவன் கங்க மன்னன் பிருதிவிபதி நினைவாக எழுப்பப்பட்ட திருபுறம்பியம் பள்ளிப்படைக்கு ஆழ்வார்க்கடியான் வந்து சேர்ந்து இருட்டும்வரை மறைந்து இருந்தான். பின் இருவர் இருவராக ஆறுபேர் வந்து கூடினர். பின்னர் சோமன் சாம்பவனும் இடும்பன்காரியும் வந்து இணைந்து கொண்டனர். ரவிதாஸன் என்பவன் இலங்கைக்கும் தொண்டை மண்டலத்துக்கும் இரு குழுவாகப் பிரிந்துச் சென்று பகைவர்களை ஒரே நேரத்தில் கொல்ல வேண்டுமென்றும், அதற்கான பொருளைச் சோழரின் கருவூலத்திலிருந்தே எடுத்து வந்ததாகக் கூறி பொன் நாணயங்களைக் காண்பித்தான். இடும்பன்காரி பணியாள் போல சம்புவரையர் மாளிகையில் நடித்து, முதல்நாள் நடந்த சம்பவங்களைத் தெரிந்து கொண்டதைக் கூறினான். ஆழ்வார்க்கடியான் மற்றும் வந்தியத்தேவனைப் பற்றிக் கூறியபோது ரவிதாஸன், ஆழ்வார்க்கடியான் செம்பியன் மாதேவியின் ஒற்றனாய் இருக்கலாம் எனக் கூறி அவனை எங்கு பார்த்தாலும் கொன்று விடுமாறு கூறினான். அப்போது ஆழ்வார்க்கடியான் இருந்த இடத்தில் சலசலப்புத் தோன்ற, நெருங்கி வந்தவர்கள் மீது வெளவாலை எறிந்துவிட்டு ஆழ்வார்க்கடியான் இருளில் மறைந்து தப்பினான். வந்தியத்தேவன் காலையில் புத்துணர்ச்சியுடன் நன்கு அலங்கரித்துக்கொண்டு, அரசரைத் தரிசிக்கக் கிளம்பினான். கோவிலுக்கு பூக்கூடையுடன் கிளம்பிய சேந்தன் அமுதனிடம் பேசிக்கொண்டே, குதிரையை அங்கேயே விட்டுவிட்டு கோட்டை வாசலுக்கு நடக்க ஆரம்பித்தனர். சேந்தன் அமுதனின் அன்னையின் தமக்கை இறந்து விட்டார் எனவும் தமையனார் ஒருவர் கோடியக்கரையில் குழகர் கோயிலில் கைங்கர்யம் செய்வதாகவும் கூறினான். சேந்தன் அமுதனின் மாமன் மகளான பூங்குழலி நன்கு பாடுவாளெனவும், அவள் பாடினால் சமுத்திரமும் காட்டு விலங்கும் கூட மெய்மறந்து போகுமெனவும் சிலாகித்தான். சேந்தன் அமுதனுக்கு பூங்குழலி மீது இருந்த ஆசையை உணர்ந்து கொண்ட வந்தியத்தேவன், “திருமணம் செய்து கொள்ளலாமே” என்று கிண்டல் செய்ய, சேந்தன் அமுதன் அதற்கு, பூங்குழலியின் சம்மதத்திற்குக் காத்திருப்பதாகக் கூறினான். பழுவேட்டரையரின் திருமணத்தைப் பற்றிப் பகடியாய் வந்தியத்தேவன் பேச, சேந்தன் அமுதன் அதைக் கண்டித்தான். கோட்டைக்குள் செல்லும்போது இத்தகைய பேச்சு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்தான். பழுவேட்டரையர்களை எக்காரணத்தைக் கொண்டும் பகைத்துக் கொள்ளக் கூடாது எனவும், அவர்கள்தான் இங்கு அதிகார மையம் என்பதையும் புரிய வைத்தான். பழையாறையிலிருந்த சுந்தர சோழரைக்கூட, வீரபாண்டியனின் மரணத்துக்குப் பிறகு பாண்டியர்களால் ஏதாவது ஆபத்து நேரலாம் என்பதால் தஞ்சையில் தங்கள் பாதுகாப்பில் பழுவேட்டரையர்கள் வைத்திருப்பதாகக் கூறினான். இரு கால்களும் உணர்ச்சியற்று இருப்பதால் சக்ரவர்த்தியான சுந்தரசோழர் எங்குமே செல்ல முடியாது என்றும் வருந்தினான். பழுவேட்டரையர்களின் அதிகாரத்தில் ஒட்டுமொத்த நாடும் இருப்பதால்தானே நாட்டுக்கு எதிரான சதியில் ஈடுபடுகிறார்கள் என உள்ளுக்குள் மருகிய வந்தியத்தேவன், சேந்தன் அமுதனிடம் விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய மனக்கோட்டைகளுடன் கோட்டை வாசலை நெருங்கினான். சவிதா

பொன்னியின் செல்வன் – 4

பொன்னியின் செல்வன் – 4

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் என நினைத்திருப்போம். ஆனால் சில சம்பவங்கள் நம் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றிருக்கும். வந்தியத்தேவனுக்கு அந்த இரவு அப்படித்தான் அமைந்திருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த அனைவரும் ஒரு இடத்தில் ஒன்று கூடியிருந்ததும், உற்ற நண்பனான கந்தமாறன் தன்னிடம்கூட ஏதும் கூறாமல் தன்னைத் தனியே படுக்க வைத்துவிட்டு வந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதும், தன்னைப் பற்றி எச்சரிக்கையாகப் பேசியதும் வந்தியத்தேவனை அங்கு நடப்பவற்றை உற்றுக் கவனிக்கத் தூண்டின. பழுவேட்டரையர், சாம்ராஜ்யத்தின் அரசுரிமையைப் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார். ஏற்கனவே இளவரசராக இருப்பவர் சுந்தரசோழரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனபோதும், பழுவேட்டரையர் தன்னுடன் குழுமியிருந்தவர்களிடம் அரசைக் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆதித்த கரிகாலன் காஞ்சியில் பொன்மாளிகை கட்டிவைத்துக் கொண்டு அதற்கு சுந்தரசோழரையும் தாயையும் அழைத்துக் கொண்டிருப்பது யாருக்கும் உவப்பில்லை எனக் கூறினார். மேலும் ஈழத்துக்குப் போர் புரியச் சென்றிருக்கும் அருள்மொழிவர்மன், படையெடுத்துச் சென்ற இடத்திலேயே உணவுக்கு ஏற்பாடு செய்யாமல் தஞ்சையிலிருந்து அனுப்பச் சொல்வது சரியில்லை என்றும், அவ்வாறு அவர் கட்டாயப்படுத்தப் படுவதால், நிதி நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பிலுள்ள அவரும் அவருடைய தம்பியான சின்ன பழுவேட்டரையரும் அதிகமான வரிகளை விதிப்பதற்குண்டான அவசியம் நேர்வதாகச் சொல்லிக் குறைப்பட்டார். இதற்கெல்லாம் மேல் சுந்தரசோழரின் உடல்நலம் கெட்டுக் கொண்டிருப்பதையும், அடுத்த வாரிசு யாரென முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அரசு நலனில் அக்கறையுள்ள நமக்கு உண்டென்றும் அவர் சொல்லும்போது கூட்டத்தில் உள்ள அனைவரும் அதிர்ந்தனர். ஏற்கனவே வாரிசாய் உள்ள ஆதித்த கரிகாலனைப் பற்றிக் கேட்க, அவர் முந்தைய நாட்களில் நடந்த பட்டத்திற்குண்டான உரிமைகளைப் பற்றி விரிவாக கூறினார். ஆதித்த கரிகாலனை விட சுந்தரசோழரின் பெரியதகப்பனான கண்டராதித்தர் – செம்பியன் மாதேவி தம்பதியருக்குப் பிறந்த மதுராந்தகனுக்கே அதிக உரிமை உண்டென அவர் அழுத்தந்திருத்தமாகச் சொன்னபோது, யாராலும் மறுத்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டது. சுந்தர சோழர் இதைப்பற்றி எதையும் பேசத் தெம்பிலாது அவர் மகள் குந்தவை தேவியினால்தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அதிருப்தியாகத் தெரிவித்தபொழுது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு, பழுவேட்டரையரை நோக்கி ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. பழுவேட்டரையர் அங்கு கொண்டு வந்து வைத்திருந்த மூடுபல்லக்கைப் பற்றியும், குந்தவை தேவியைப் பழி கூறும் பழுவேட்டரையர், தான் புதிதாக மணந்துகொண்ட மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பதும், இவ்வளவு முக்கியமான கூட்டத்தின்போதுகூட அவரை உடன் கூட்டி வந்திருப்பதையும் சுட்டிக் காட்டினர். பழுவேட்டரையர் சினம் காட்டாமல், முதலில் ராஜாங்க விஷயங்கள் முடிவானதும் அதைப்பற்றிப் பதில் கூறுவதாகக் கையமர்த்தினார். பிறகு மதுராந்தகன் முடிசூடுவதைப் பற்றியான பேச்சுகள் எழுந்தன. அதற்கு ஆதரவு தருபவர்கள் யார் யாரெனத் தெரிந்துகொள்ளப் பழுவேட்டரையர் முயன்றார். அப்போது சம்புவரையர் ஒரு சந்தேகத்தை முன் வைத்தார். மதுராந்தகனை செம்பியன் மாதேவி ஒரு சிவக்கொழுந்தாகவே சிறுவயது முதல் வளர்த்து வருகிறார். ராஜ்ய விவகாரங்களில் தலையிடாமல சிவ காரியங்களில் மட்டுமே நாட்டம் செலுத்துபவராகவே மதுராந்தகனை அனைவரும் இவ்வளவு நாள் பார்த்து வருகிறார்கள். இப்பொழுது வாரிசுப் போட்டிக்கு முதலில் செம்பியன் மாதேவி சம்மதிப்பாரா? மற்றும் மதுராந்தகனின் விருப்பம் என்னவென்று தெரியாமல் நாம் கூடி முடிவெடுத்துவிட்டு, பின்னர் அரசரிடம் அவப்பெயர் வாங்கிவிடக்கூடாதே என்றெல்லாம் தன் அச்சத்தைத் தெரிவித்தார். அப்பொழுது பழுவேட்டரையர், யாரும் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும், அதற்குரிய ஆதாரத்தைக் காண்பிப்பதாகவும் கூறி “மதுராந்தகரே! வெளியில் வாருங்கள்” என்று கூற, பல்லக்கைவிட்டு வெளியே வந்து அனைவரையும் வணங்கிய மதுராந்தகனைப் பார்த்து அனைவரும் திகைத்தனர். பின்னர் மதுராந்தகனை வாழ்த்தினர். இவற்றை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனும் அதிர்ந்து, ‘இதற்காகத்தான் ஆழ்வார்க்கடியான் ஒற்றறிய வந்தானா?’ என்று நினைத்தபடி ஆழ்வார்க்கடியான் இருந்த இடத்தைப் பார்க்க, அங்கு யாருமில்லை. இதற்குமேல் இங்கு நின்று கவனித்துப் பார்க்க ஏதுமில்லை என்று தெரிந்து கொண்டவன் அவனுடைய இடத்தில் போய்ப் படுத்து உறங்க முயற்சித்தான். ஒரு பெரும் அரசியல் சுழலில் தான் சிக்கிக்கொண்டதாய் உளைந்தவனால் அவ்வளவு சீக்கிரம் உறங்க முடியவில்லை. காலையில் கந்தமாறன் வந்து எழுப்பிய பிறகே வந்தியத்தேவனால் எழ முடிந்தது. எழுந்ததும், முதல்நாள் நடைபெற்ற சம்பவங்களை நினைத்துக் கொண்டவன் உடனே அங்கிருந்து கிளம்புவதாகக் கூறினான். கந்தமாறன் முதலில் வருந்தினாலும், பெரிதாக எதுவும் சொல்லவில்லை. கொள்ளிடக்கரை வரையிலும் அவனை வழியனுப்ப கூடவே வந்தான். வந்தியத்தேவன், கந்தமாறன் முன்பே அவன் தங்கை மணிமேகலையைப் பற்றிக் கூறியதை நினைவுபடுத்தி, அவளைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை என வருந்தினான். கந்தமாறன் தர்மசங்கடத்துடன், அவன் தங்கை மணிமேகலையை வந்தியத்தேவனுடன் முன்னம் இணைத்துப் பேசியதை மன்னித்துவிடுமாறு வேண்ட, வந்தியத்தேவன் தன்னைப் போன்ற ஓர் ஏழை இதை எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான் எனக் கூறினான். கந்தமாறன் எந்த உண்மையையும் அவனிடம் சொல்ல முடியாததற்கு வருந்தினான். அதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன், அவனை சமாதானப்படுத்தி விடைபெற்றான். அவன் குதிரையை ஒரு பணியாள் கொண்டுபோக, இன்னொரு குதிரையை அக்கரையில் வாங்கிக் கொடுக்க இன்னொரு பணியாள் உடன் வர, வந்தியத்தேவன் படகில் ஏறியபோது, இன்னொருவரும் அவசரமாக வந்து ஏறினார். அது ஆழ்வார்க்கடியான். படகில் ஒரு வீர சைவரும் இருக்க, வழக்கம்போல இருவரும் சண்டை போட்டுக்கொண்டே அக்கரையில் இறங்கினர். வந்தியத்தேவனுக்குக் குதிரை வாங்கிக்கொண்டு வருவதற்காக வந்த பணியாள் கிளம்பிவிட, ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் ஒருவரையொருவர் நேற்று நடந்த விஷயங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றார்கள். இருவருமே ஒருவரை ஒருவர் ஒற்றறிய முயன்றதால், அவர்கள் இருவரால் எதையும் அறிந்து கொள்ள முடியாமல் ஏமாற்றமே மிஞ்சியது. மூடுபல்லக்கில் வந்த பழுவேட்டரையரின் ராணியிடம் கடிதம் கொடுக்கச் சொன்ன ஆழ்வார்க்கடியானுடைய செயல் தவறானது என்று வந்தியத்தேவன் சொல்ல, அவன் மறுத்தான். ‘மதுரைக்குப் பக்கத்தில் என்னுடைய பெற்றோர் எடுத்து வளர்த்த குழந்தைதான் நந்தினி. ஆண்டாளைப் போன்று பக்தியில் சீலமாய்த் திகழ்ந்தவள். வடநாட்டுக்கு நான் யாத்திரை சென்றிருந்தபொழுது, சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் போர் நடைபெற்றது. அப்பொழுது தப்பித்து ஓடிவந்த அடைக்கலம் புகுந்த வீரபாண்டியனின் மரணத் தறுவாயில் நந்தினி உதவி செய்தபொழுது, படைவீரர்கள் உட்புகுந்து அவனைக் கொன்றுவிட்டார்கள். பழுவேட்டரையர் அவளைப் பிடித்து வந்து கட்டாயமாக மணம் புரிந்திருக்கிறார். அதற்குப் பிறகு நான் அவளைச் சந்திக்க முடியவில்லை. அவளைத் தனியே சந்தித்துப் பேசவும், அவள் விரும்பினால் விடுதலை செய்து போகவும் முயன்று கொண்டிருக்கிறேன்’ என ஆழ்வார்க்கடியான் முடித்தான். இதைக் கேட்டவுடனே வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப் பற்றிய தன் தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டான். எனினும், பல்லக்கிலிருந்தது மதுராந்தகன்தான் என்பதைச் சொல்லவில்லை. ஆனாலும் விளையாட்டுப் போல, ‘சுந்தரசோழருக்கு அடுத்து யார் பட்டத்துக்கு வருவார்?’ என்ற கேள்வியைக் கேட்டு ஆழம் பார்த்தான். ஆனால் ஆழ்வார்க்கடியான் அசராமல், இதெல்லாம் குடந்தை ஜோதிடர்தான் சொல்வார் எனக் கூறி, ஜோசியரின் பெருமைகளையும் கூறினார். குதிரை வந்தவுடன் வந்தியத்தேவன் ஜோசியர் இல்லத்துக்குச் சென்று ஆருடம் பார்த்துவிட்டே தன் பயணத்தைத் தொடர்வது என்று முடிவு செய்துவிட்டே கிளம்பினான். அதே சமயத்தில் அரிசிலாற்றின் கரையில் ஒரு படகு சில பெண்களைச் சுமந்துகொண்டு வந்தது. படகில் இருந்து இரு முக்கியப் பெண்மணிகள் இறங்கினர். கொடும்பாளூர் இளவரசி வானதியும், சோழவம்சக் குலக்கொடி குந்தவை தேவியும் படகிலிருந்து இறங்கினர். குடந்தையில் தங்களுக்கு முக்கியமான வேலை இருப்பதாகக் கூறி வானதியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவை கரையில் காத்துக் கொண்டிருந்த ரதத்தில் கிளம்பினாள். எங்கு செல்கிறோம் என்று கேட்ட வானதியிடம், குடந்தை ஜோதிடரின் வீட்டுக்குச் செல்லப் போவதாகக் குந்தவை கூறினாள். ரதத்தை ஒதுக்கி நிறுத்தச் சொல்லி சாரதிக்கு ஆணையிட்ட இளவரசியையும் வானதியையும் ஜோசியர் வரவேற்று அமர வைத்தார். வானதி சிறிது காலமாக அடிக்கடி மயக்கமடைவதையும், உற்சாகமற்று இருப்பதையும் பற்றித் தெரிந்துகொள்ள வந்திருப்பதாகக் குந்தவை கூறினாள். அக்காலத்தின் பழக்கமாக உயர்குடும்பங்களைச் சேர்ந்த ஜாதகங்களை ஜோசியர்கள் வைத்திருப்பது போன்று வானதியின் ஜாதகத்தையும் வைத்திருந்த குடந்தை ஜோதிடர், ஜாதகத்தை எடுத்துப் பார்த்து, நம்ப முடியாது திகைத்துப்போனார். குந்தவை என்னவென்று வினவ, ஜோதிடர் வானதியின் ஜாதகம் கொண்டிருந்த சிறப்புகளைப் பற்றிக் கூறலானார். வானதியை மணக்கப் போகிறவன் கடல் கடந்து போயிருக்கிறான். அவன் போர்களில் வென்று அரசனாக முடிசூடுவான். இந்தப் பெண்ணின் காலில் இருக்கும் தாமரையினால், பின்னால் ஒரு காலத்தில் பெரும் பட்டமகிஷிகள் கூட இவர் பாதம் பணியக் காத்திருப்பார்கள். இவரின் வயிற்றில் ஆலிலை ரேகை கொண்டுள்ளதால் இவருக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குத் தடங்கல் என்பதே கிடையாது. உலகை வெற்றி கொள்வான்’ என்று கூறிக் கொண்டிருந்தபோதே வானதி மயங்கி வீழ்ந்தாள். அவளின் மயக்கத்தைத் தெளிவித்தவாறே வானில் இருக்கும் வால்நட்சத்திரத்தைப் பற்றிய தன் சந்தேகத்தைக் குந்தவை கேட்டாள். ஆனால், ஜோசியர் அதற்கு சரியான மறுமொழி அளிக்காமல் மழுப்பி விட்டார். விழித்த வானதிக்கும் குந்தவைக்கும் அம்மன் பிரசாதத்தை அளித்த ஜோசியரிடம் வானதி, குந்தவை தேவிக்கு அமையப்போகும் கணவரைப் பற்றிக் கேட்டாள். ‘எங்கிருக்கிறார்? எப்படி வருவார்?’ என்று வானதி கேட்டபோது, ஜோசியர் சொல்வதற்கு முன் குறும்பாக, குதிரையில் ஏறி வருவார், அசகாய சூரர் என்றெல்லாம் குந்தவை பதில் அளித்துக் கொண்டிருக்க, நிஜமாகவே குதிரை வரும் சத்தம் கேட்டது. வாசலில் குழப்பமான ஒலிகள் கேட்டன. கதவைத் திறந்து கொண்டு வந்தியத்தேவன் உள் நுழைந்தான். குந்தவையின் கண்களும் வந்தியத்தேவனின் கண்களும் சந்தித்துக் கொண்டன. குந்தவையை ஏறிட்ட வந்தியத்தேவன், உடனே சமாளித்துக்கொண்டு சீடனை கடிந்தபடி வெளியே சென்றுவிட்டான். குந்தவையும் வானதியும் விடைபெற்று வெளியில் வந்தபொழுது மன்னிப்பும் கேட்டான். அவர்களின் ரதம் கிளம்பிய பிறகு ஜோதிடரிடம் அவர்கள் யாரெனத் தெரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. வந்தியத்தேவனின் ஜாதகத்தை வைத்திருந்த ஜோதிடர், அவனுக்குக் கடற்பயணம் வாய்க்குமெனினும், உயர்ந்த பதவிகள் அவனைத் தேடிவருமெனவும் ஆருடம் கூறினார். ஆழ்வார்க்கடியானைப் பற்றிக் குறிப்பிட்டபொழுது, அந்த அடையாளத்தில் திருமலையப்பனை மட்டுமே தெரியும் எனக் கூறினார். பொற்கழஞ்சுகளைச் சன்மானம் அளித்த பிறகு வந்தியத்தேவன் வழியெங்கும் இயற்கை எழிலை ரசித்தபடி தன் பிரயாணத்தைத் தொடங்கினான். தொடரும். சவிதா  

பொன்னியின் செல்வன் – 3

பொன்னியின் செல்வன் – 3

வந்தியத்தேவனும் கந்தமாறனும் வெளியே வந்த பிறகு, உள்ளிருந்து கந்தமாறனின் அன்னை அவனை மட்டும் அழைக்க, பின்னால் கேலிச் சிரிப்புகளுடன் கூடிய ஒலிகள் கேட்டன. தன்னைத்தான் கிண்டல் செய்வதாக எண்ணிக்கொண்ட வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். கந்தமாறன் வந்து அரண்மனையைச் சுற்றிக் காட்டியபோதும், மனம் அதில் லயிக்காமல், ‘தன்னைப் பற்றிப் பேசி அனைவரும் சிரித்தனரா?’ என சந்தேகமாய்க் கேட்டான்.  மறுத்த கந்தமாறன், ‘பழுவேட்டரையரைப் பற்றி’ என விரிவாகச் சொல்லத் தொடங்கினான். வந்தியத்தேவனும் கந்தமாறனும் வெளியே வந்த பிறகு, உள்ளிருந்து கந்தமாறனின் அன்னை அவனை மட்டும் அழைக்க, பின்னால் கேலிச் சிரிப்புகளுடன் கூடிய ஒலிகள் கேட்டன. தன்னைத்தான் கிண்டல் செய்வதாக எண்ணிக்கொண்ட வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். கந்தமாறன் வந்து அரண்மனையைச் சுற்றிக் காட்டியபோதும், மனம் அதில் லயிக்காமல், ‘தன்னைப் பற்றிப் பேசி அனைவரும் சிரித்தனரா?’ என சந்தேகமாய்க் கேட்டான்.  மறுத்த கந்தமாறன், ‘பழுவேட்டரையரைப் பற்றி’ என விரிவாகச் சொல்லத் தொடங்கினான். பழுவேட்டரையர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மர்மமான பெண்ணை மணந்து கொண்டதாகவும், எங்கு போனாலும் அவளை மூடு பல்லக்கில் வைத்துத் தன்னுடனேயே அழைத்துச் செல்வதாகவும் கூறினான். மேலும், அந்தப் பெண்ணை அந்தப்புரத்துக்குக்கூட அனுப்பாமல், தன்னுடனேயே தங்க வைத்திருப்பதையும், அதை ஒரு தாதிப்பெண் பார்த்துவிட்டு வந்து விவரித்ததை அன்னையும் மற்ற பெண்களும் சொல்லிச் சிரித்ததாகக் கூறினான். இந்த முதிய வயதில் இப்படி அவர் நடந்துகொள்வதே அனைவரின் சிரிப்புக்கும் காரணம் என விளக்க, வந்தியத்தேவன் மறுத்தான். ‘அது மட்டுமல்ல; அந்தப் பெண் அழகாக இருப்பதற்காகவும் உன் வீட்டுப் பெண்கள் சிரித்திருக்கலாம்’ என்றதும், ‘நீ எப்போது பார்த்தாய்?’ எனக் கேட்டான் கந்தமாறன். வரும் வழியில் பார்த்ததையும் இப்போதுதான் அது யாரெனத் தெரிந்து கொண்டதாகவும் வந்தியத்தேவன் கூறியபோது வாத்தியங்களின் முழக்கம் கேட்டது. அது குரவைக் கூத்துக்கான ஆரம்ப முழக்கம் எனக் கந்தமாறன் கூறியதும், ஆழ்வார்க்கடியான் நம்பி அதைக் குறிப்பிட்டது நினைவுக்கு வந்து, தனக்கும் அதைப் பார்க்க ஆவல் என வந்தியத்தேவன் சொல்ல, இருவரும் அங்கு சென்றனர். முற்றத்தில் மேடை அமைக்கப்பட்டு, மயில், அன்னம், கோழி போன்ற சித்திரங்களை வரைந்திருந்தனர். அகில் புகை, மலர் மணம், தீபங்களின் ஒளி எல்லாம் வந்தியத்தேவனின் மனதை மயக்கின. அந்தச் செந்நிறம் ஒருவிதமான உணர்வை எழுப்பியது. முக்கிய விருந்தாளிகள் வந்து அமர்ந்ததும் குரவைக் கூத்து ஆடும் பெண்கள் ஒன்பது பேர் மலர்மாலையுடன் பிணைத்துக் கொண்டு முருகன் பற்றிய பாடல்களைப் பாடிக்கொண்டே ஆடினார்கள். பின் வேலாட்டம் தொடங்கியது. தேவராளன், தேவராட்டி என ஆண், பெண் இருவரும் வந்து சிவப்பு வண்ண ஆடைகளையும் மலர்களையும் அணிந்து ஆடியது அச்சத்தை ஊட்டியது. பின் தேவராளன் வெறியாட்டம் ஆட, அனைவரும் சந்நதம் வந்துவிட்டதாகப் பதைத்தனர். மழை பொழியுமா, நாடு செழிக்குமா, என்றெல்லாம் ஒவ்வொருவராகக் கேட்க, தேவராளன் ஆடிக்கொண்டே, மன்னர் குலத்து, ஆயிரங்கால அரசர் குலத்து ரத்தம் வேண்டும், பலி வேண்டும்; கொடுப்பீர்களா? என உக்கிரமாகக்  கேட்டான். மேடைக்கு முன்னால் வீற்றிருந்த பழுவேட்டரையர், மழவரையர், சம்புவரையர் எல்லாரும் திகைத்தபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பூசாரியை நிறுத்தச் சொல்ல, தேவராளன் மயங்கி வீழ்ந்தான். சபை மெளனமாகக் கலைய, நரிகள் ஊளையிடும் சப்தம் கேட்டது. வந்தியத்தேவன் அந்தத் திசையில் திரும்பிப் பார்த்தான். மதில் சுவற்றின் மேல் ஆழ்வார்க்கடியானின் தலை மட்டும் வெட்டி வைத்திருந்ததைப் போலத் தெரிந்தது. அதிர்ந்துபோன வந்தியத்தேவன் மறுபடியும் பார்க்க, அங்கு எதுவுமே இல்லை. அவன் உள்ளம் எதையோ நினைத்துக் கலங்கிற்று. அதற்குப் பின் பிரம்மாண்டமான விருந்து தொடங்கியது, கந்தமாறன் அங்கு வந்திருந்த அனைவரையும் யார் யாரென எடுத்துக் கூறிக்கொண்டிருந்தான். அங்கு வந்திருந்த பெரியமனிதர்கள் அனைவரும் சாதாரணமானவர்கள் அல்லர். அனைவரும் குறுநில மன்னர்கள்; அல்லது தன் வீரத்தினால் குறுநில மன்னர்களுக்கு இணையான பட்டத்தைப் பெற்றிருந்தவர்கள். அதாவது இன்றைய அமைச்சர்கள், அதிகாரிகள், பெருங்குழும முதலாளிகள் போன்றவர்கள். கந்தமாறன் சொல்லச் சொல்ல, ‘இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அனைவரும் எதற்காக இங்கு இணைந்து வந்திருக்கிறார்கள்?’ என்ற சந்தேகம் வந்தியத்தேவனுக்குள் வளரலாயிற்று. விருந்து முடிந்து, அரண்மனையின் மேல் மாடத்தின் ஒரு மூலையில் அவனுக்கென ஒதுக்கப்பட்ட திறந்த மண்டபத்தில் கந்தமாறன் விட்டுச் சென்ற பிறகும் கூட, அந்த சந்தேகம் மறையாதிருந்தது. களைப்பினால் கண்ணயர்ந்த பின்னும் ஆழ்மனநிலையில் அந்த சந்தேகம் வலுத்தபடியே இருந்ததால், கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டுப் பாதியிலேயே விழித்துக் கொண்டான். கனவில் வெட்டுப்பட்ட ஆழ்வார்க்கடியான் தலையைக் கண்டிருந்த வந்தியத்தேவன், திடுக்கிட்டு விழித்தபோதும் அதையே பார்த்து வெருண்டான். ஆனால், இந்த முறை தலை மறையவில்லை. கடைசியில் உற்றுப் பார்த்தபொழுது, ஆழ்வார்க்கடியான் மாளிகையின் சுற்று மதிலுக்குப் பின்னாலிருந்து தலையை மட்டும் எட்டி உள்ளே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று துலங்கியது. ஏதோ ஓர் ஆபத்து என உள்மனம் சொல்ல, உடல் பதறி வாளுடன் அவனை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். ஆழ்வார்க்கடியான் தலை தெரிந்த இடத்திற்கும் இவன் படுத்திருந்த இடத்திற்கும் உண்டான தொலைவைக் கவனமாகக் கடந்தபோது பேச்சுக்குரல் கேட்கவே, வந்தியத்தேவன் குனிந்து பார்த்தான். கீழே குறுகலான முற்றத்தில் விருந்தில் பார்த்த அனைத்து முக்கியமானவர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த நள்ளிரவில் பேசிக் கொள்வதானால் ஏதோ ஒரு முக்கிய விஷயமாக இருக்க வேண்டும் என ஊகித்த வந்தியத்தேவன், அதைப் பார்க்கத்தான் ஆழ்வார்க்கடியான் மதிலில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொண்டான். இப்போது ஆழ்வார்க்கடியானைக் கையும் களவுமாகப் பிடிப்பதானாலும் கீழே அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாமல் முடியாது. அப்போதும் அவன் தப்பிவிட்டான் என்றால், தன்னை சந்தேகப்பட வாய்ப்பு இருக்கிறது. கந்தமாறனும் அந்தக் கூட்டத்தில் இருப்பதைக் கண்டவுடன் காலையில் அவனிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான். பக்கத்தில் இருந்த மூடு பல்லக்கைப் பார்த்ததும் ஆழ்வார்க்கடியான் அந்தப் பல்லக்கில் இருந்தவளைப் பார்க்கத்தான் வந்திருப்பான் எனப் புரிந்து கொண்டான். திரும்பி விடலாம் என யத்தனித்தபோது, தன் பெயர் அடிபடுவதைக் கண்டு உற்றுக் கேட்க ஆரம்பித்தான். ‘உங்கள் மகனின் நண்பன் என ஒருவன் வந்துள்ளானே.. அவன் ஆதித்த கரிகாலனின் கீழ் பணிபுரியும் ஆள். நாம் பேசும் விஷயம் எதுவும் அவனுக்குத் தெரிந்துவிடக் கூடாது. தெரிந்தால் இந்தக் கோட்டையை விட்டு அவன் உயிருடன் போகக் கூடாது’ என்று சொல்லக் கேட்டதும் வந்தியத்தேவனுக்குப் பொறி கலங்கியது. ஆனால், கந்தமாறன் தன் நண்பனுக்குப் பரிந்து பேசினான். அவன் நம்பிக்கைக்குரியவன் என்று கூறியதை ஏற்றுக்கொண்ட பழுவேட்டரையர், “இப்போது நாம் பேசப்போவது பெரிய சாம்ராஜ்யத்தைப் பற்றிய மிக முக்கியமான விஷயம். இது மட்டும் வெளியில் தெரிந்தால், பயங்கரமான பின்விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும்” என எச்சரித்துவிட்டு, மேலும் அதிர்ச்சி தரும் விஷயங்களைப் பேசத் தொடங்கினார். வந்தியத்தேவன் முதலில் பயந்தாலும், அவர்கள் பேசும் விஷயங்களை மறைந்திருந்து கேட்கலானான். அதைத் தொடர்ந்து நடக்கப்போகும் பல முக்கியமான திருப்பங்களுக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில், அடுத்தடுத்து நடந்த விஷயங்கள் வந்தியத்தேவனை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டே சென்றன. தொடரும். சவிதா