பொன்னியின் செல்வன் – 2

பொன்னியின் செல்வன் – 2

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1 – முந்தைய பகுதியைத் தவறவிட்டவர்கள் இந்த இணைப்பில் வாசித்துவிட்டுத் தொடரலாம். பொன்னியின் செல்வன் – 2 பழுவேட்டரையரின் பரிவாரங்கள் ராஜபோகமாக ஆர்ப்பாட்டத்துடன் செல்வதை வந்தியத்தேவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, அதிகார ஆக்கிரமிப்பில் பழுவேட்டரையரின் காவலாளிகள், தள்ளி நிறுத்தப்பட்டிருந்த அவன் குதிரையுடன் வம்புக்குச் சென்றார்கள். அவர்களால் சீண்டப்பட்ட குதிரை கூட்டத்தில் குழப்பம் விளைவித்தபடியே தப்பித்து ஓடியது. அதனைத் தடுக்க முடியாமல் வாடி நின்ற வந்தியத்தேவனைக் கண்ட ஆழ்வார்க்கடியான் அவனிடம், ‘என்னிடம் காட்டிய வீரத்தை அவர்களிடம் காட்டக்கூடாதா?’ என்று வேறு  குத்திக் காட்டினான். உள்ளூரக் கோபத்திலிருந்த வந்தியத்தேவன், பழுவேட்டரையருடைய வீரர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சண்டைக்குப் போகாமல், தள்ளிப் போய் பாவமாக நின்று கொண்டிருந்த குதிரையைத் தட்டிக் கொடுத்துக் கூட்டி வந்தான். ‘இந்த வீரர்களுக்கு என்றேனும் நல்ல பாடம் புகட்ட வேண்டும்’ என்றும் எண்ணிக் கொண்டான். ஆழ்வார்க்கடியான் காத்திருந்ததைக் கண்டபோது இன்னும் எரிச்சலாயிருந்தது. போதாதற்கு  ஆழ்வார்க்கடியானும் நோட்டம் பார்ப்பது போல், ‘எங்கு தங்குகிறாய்?’ எனக் கேட்டதும் இடக்காகப் பதில் சொன்னான். ஆழ்வார்க்கடியான் விடாமல், ‘நீ கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்குவதாயிருந்தால் எனக்கு உன்னிடம் ஒரு உதவி தேவைப்படுகிறது’ எனக் கூறினான். தான் செல்லப் போகுமிடம் அவனுக்குத் தெரிந்திருந்தது வந்தியத்தேவனுக்குத் திகைப்பாக இருந்தது. அதைக் குறித்து அவன் எப்படி எனக் கேட்க,  ‘பழுவேட்டரையரின் பரிவாரங்கள் சம்புவரையரின் மரியாதை வழங்கப்பட்டு  அங்குதான் செல்கின்றன;  மேலும், நாடெங்கிலும் இருந்து விருந்தாளிகள் இன்று இங்கு வரப்போகிறார்கள்’ என்று ஆழ்வார்க்கடியான் கூறவும், பழுவேட்டரையர் போன்ற மாவீரரை இன்று அந்த மாளிகையில்  சந்தித்துப் பழக வேண்டும் என்ற ஆவல் வந்தியத்தேவனுக்கு ஏற்பட்டாலும், அவருடைய படைவீரர்களின் அதிகார அலட்சியம் அவனுக்குக் கசந்தது. ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம், அன்றிரவு சம்புவரையர் மாளிகையில் நடக்கும் குரவைக்கூத்து, களியாட்டம் போன்றவற்றைப் பார்க்க வேண்டுமென்றும், தன்னை ஒரு பணியாள் போலப் பொய் சொல்லி அவனுடன் அங்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றும் கேட்டான். வந்தியத்தேவன் அவ்வாறெல்லாம் மோசடிக் காரியத்துக்கு உடன்பட மறுத்து, தான் தன்னுடன் படித்த சம்புவரையர் மகனான கந்தமாறவேளின் நண்பன் என்ற உரிமையில் போவதாகக் கூறினான். அப்படியென்றால் அவனுக்கே இன்றைக்கு அங்கு தங்குவது சிரமம்தான் எனக் கூறினான், ஆழ்வார்க்கடியான். பேசிக்கொண்டே தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான், வீர நாராயண ஏரியை ஒட்டியிருந்த வீர நாராயணப் பெருமாள் கோயிலுக்கு வந்தியத்தேவனை அழைக்க, அவனும் உடன் சென்றான். வீர நாராயணர் கோவிலைப் பற்றிய ஒரு அறிமுகம்: முதலாம் பராந்தகச் சோழன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில், இராஷ்டிரகூட மன்னர்கள் படையெடுத்து வருவார்கள் என எதிர்பார்த்து, பாதுகாப்புக்காகத் தன் மகன் இராஜாதித்தன் தலைமையில் ஒரு பெரிய சைன்யத்தைத் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். படைவீரர்கள் வேலையின்றி இருப்பதைக் கண்ட இராஜாதித்தன், குடிமக்களுக்கு உதவும் வகையில் கொள்ளிடத்திலிருந்து வீணாகும் வெள்ள நீரின் ஒரு பகுதியைச் சேமிக்க ஒரு ஏரியை உருவாக்கி, அதற்கு தன் தந்தையின் இன்னொரு விருதுப் பெயரான வீர நாராயணன் ஏரி எனப் பெயரிட்டான். ஏரிக் கரைகளைக் காக்க அந்நாளில் பெருமாளுக்குக் கோயில் கட்டுவது வழக்கம். அந்தக் கோவிலுக்குத்தான் இப்பொழுது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் வந்திருக்கிறார்கள். ஆழ்வார்க்கடியான் பக்திப் பரவசத்தில் கண்ணீர் வழிய உருகி, பாசுரங்களைப் பாடுவதைக் கண்ட வந்தியத்தேவனுக்கு ஆழ்வார்க்கடியான் மீது மதிப்பு உண்டாகியது.  அர்ச்சகர் ஈசுவர பட்டரிடம் தீர்த்தம் பெற்றுக்கொண்டு வெளியில் வந்தவுடன் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானிடம் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டான். பதிலுக்கு ஆழ்வார்க்கடியான் கேட்ட உதவி வந்தியத்தேவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பழுவேட்டரையருடன் மூடுபல்லக்கில் சென்ற பெண்ணுக்கு ஒரு சீட்டு தருவதாகவும், அதை சம்புவரையர் மாளிகையில் தங்க நேர்ந்தால் அந்தப் பெண்ணிடம் சேர்த்து விடுமாறும் ஆழ்வார்க்கடியான் கூறியதைக் கேட்ட வந்தியத்தேவன், படபடப்படைந்து கோபப்பட்டான். ஆழ்வார்க்கடியான் அதைப் பொருட்படுத்தாமல், ‘முடியாது என்றால் பரவாயில்லை; நீ இந்த உதவியை எனக்குச் செய்திருந்தால், பின்னால் நானும் உனக்கு உதவ வசதியாய் இருக்கும்’ எனக் கூற, வந்தியத்தேவன் எரிச்சலில் உடனே அங்கிருந்து குதிரையிலேறிக் கிளம்பி விட்டான். சம்புவரையரின் மாளிகையை வேகமாய் நெருங்கியவன், பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கவனித்தான். தயங்கி நின்றால் விசாரிப்பார்கள் என்று எண்ணி, குதிரையைத் திறந்திருந்த பெரிய கோட்டையின்  வாசலுக்குள்  வேகமாக இட்டுச் சென்றான். ஆனால் படைவீரர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி அவன் துடுக்குத்தனத்தை விசாரிக்க ஆரம்பித்தனர். அவன் யார் என விசாரித்ததற்கு, ‘என் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன்; என் நாடு திருவல்லம்; என் குலத்து முன்னோர்களின் பெயர்களை உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக் கொண்டு பெருமையடைந்தார்கள், தெரிந்ததா?’ என வீரமாகக் கூறினான். அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் ஏற்கனவே சீண்டிய குதிரையையும் அவர்கள் ஏளனமாய்ப் பேசுவதைக் கண்ட வந்தியத்தேவன் சட்டென ஒரு யுக்தியைச் செயல்படுத்தினான்.   குதிரையை விட்டால் திரும்பிப் போவதாக அமைதியாக வந்தியத்தேவன் கூறினான். கயிற்றை வீரர்கள் விட்டவுடன், உடைவாளை உருவிக் கொண்டு பெரும் வேகத்துடன் கோட்டைக்குள்ளே சென்றான். தடுத்த வேல்கள் விழுந்தன. சுற்றியும் வந்த வீரர்கள் சிதறினர். கோட்டைக்கதவு சாத்தப்பட்டது. வீரர்கள் ‘பிடி.. பிடி..’ என சுற்றி வளைத்தனர். எல்லோரும் சுற்றி வளைத்ததும், வந்தியத்தேவன் குதிரையிலிருந்து தாவிக் குதித்தான். ‘கந்தமாறா.. கந்தமாறா.. என்னைக் கொல்கிறார்கள்’ என சத்தம் போட, நெருங்கி வந்த வீரர்கள் அவன் தங்கள் எஜமானனின் மகன் பெயரைக் கூறவும் தயங்கி நின்றனர். மேல் மாடத்திலிருந்து செங்கண்ணன் சம்புவரையர், தன் மகன் கந்தமாறனை அழைத்து ‘என்ன கலகம்?’ என்று பார்த்து வரச் சொன்னார். கந்தமாறன் வரும்வரை அனைவரும் அப்படியே நின்றிருந்தனர். பிடித்த கத்தியுடன் தனியொரு வீரனாக நின்றிருந்த வந்தியத்தேவனைப் பார்த்ததும், “வல்லவா.. நண்பா.. நீதானா?” என வியந்து கட்டிக் கொண்டான் கந்தமாறன். “இதுதான் நீ எனக்களித்த வரவேற்பா?’ என வந்தியத்தேவன் கூறவும், சுற்றி இருந்த வீரர்களைக் கடிந்துகொண்டு, வந்தியத்தேவனை அணைத்தபடி வெகு உற்சாகமாக உள்ளே கூட்டிச் சென்றான் கந்தமாறன். (கல்கியின் வார்த்தைகளில்: இளம்பிராயத்தில் நட்பும் காதலும்தான் பரவசப் படுத்தக் கூடியவை. காதலுக்காவது சில துன்பங்கள் உண்டு; நட்புக்கு அதுவும் கிடையாது) கந்தமாறன் வந்தியத்தேவனை, தன் தந்தை சம்புவரையரிடம், உற்சாகமும் பெருமையுமாகத் ‘தன் நண்பன்’ என அறிமுகப்படுத்த, அவர் அத்தனை மகிழ்ச்சியாகப் பேசவில்லை. ‘கலவரத்திற்கு காரணம் இவன்தானா?’ என்றும், இருட்டியதற்குப் பிறகு இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வந்ததையும் அவர் குறை கூறியது கந்தமாறனுக்கு வருத்தமாய் இருந்தது. அடுத்து வந்தியத்தேவனைப் பழுவேட்டரையரிடம் கூட்டிச் சென்றான். பழுவேட்டரையரின்பால் வந்தியத்தேவன் கொண்டிருந்த ஈடுபாட்டைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டு, ‘மாமா. இவன் என் நெருங்கிய நண்பன். வாணர் குலத்தவன். நாங்கள் எல்லைக்காவல் புரிந்தபோது உங்களைப் பார்க்க வேண்டும் என கூறிக்கொண்டே இருப்பான். தங்கள் உடம்பில் போரினால் ஏற்பட்ட அறுபத்து நான்கு காயங்கள் இருப்பது உண்மைதானா என எண்ணிப் பார்க்க வேண்டுமென்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான்’ எனப் பெருமையாகக் கூறினான். பழுவேட்டரையர் குதர்க்கமாக, ‘எண்ணிப் பார்க்கவில்லையென்றால் நம்ப மாட்டாயா? வாணர் குலத்துக்கு மட்டும்தான் வீரம் சொந்தமா?’ என்று கேட்கவும், இருவரும் எரிச்சலும் வருத்தமும் அடைந்தார்கள். வந்தியத்தேவன் சுதாரித்தபடி, ‘ஐயா, பழுவேட்டரையரின் புகழ் குமரி முதல் இமயம் வரை பரவியிருக்கிறது. சந்தேகிப்பதற்கு நான் யார்?’ எனப் பொறுமையாகக் கூறவும், ‘நல்ல மறுமொழி’ என பழுவேட்டரையர் அமைதியாகி விட்டார். சம்புவரையர் வந்தியத்தேவனுக்கு உணவளித்துவிட்டு சீக்கிரம் படுக்க வைத்துவிட்டுத் திரும்புமாறு கந்தமாறனுக்குக் கட்டளையிட்டார். அந்தப்புரத்துக்கு வந்தியத்தேவனைக் கூட்டிச் சென்ற கந்தமாறன், தன் அன்னையை அவனுக்கு அறிமுகப் படுத்தினான். அன்னையை வணங்கிய வந்தியத்தேவன் அவருக்குப் பின்னால் ஒளிந்ததுதான் கந்தமாறன் முன்பு தன்னிடம் சொல்லியிருந்த அவனது தங்கை மணிமேகலையாக இருக்கும் என நினைத்துக் கொண்டான். பின், அங்கிருந்த பெண்களின் கூட்டத்தில், ‘பல்லக்கில் வந்த பெண் இருக்கிறாளா?’ என்று கண்களால் தேடினான். தொடரும். சவிதா

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1

சோழர் பரம்பரை – ஒரு எளிய அறிமுகம் பொன்னியின் செல்வன் கதைக்குள் நுழையும் முன்பு கதை நிகழும் காலத்தோடு பயணம் செல்ல இந்த பரம்பரை வரலாறு உதவியாக இருக்கும்.விஜயாலய சோழன், ஆதித்ய சோழன் என சிற்றரசாக இருந்த சோழர்கள் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் தங்கள் எல்லையை விரிவடையச் செய்து பேரரசாக உருவெடுத்தனர். பராந்தக சோழனின் மூத்த மகனான இராஜாதித்ய சோழன் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். எனவே இரண்டாவது மகனாகிய கண்டராதித்ய சோழன் அரசராகப் பதவி ஏற்றார். அவர் ஒரு சிவபக்தர். வெகுகாலம் திருமணத்தை வெறுத்த அவர், தன்னைப் போலவே சிவபக்தியில் தேர்ந்த செம்பியன் மாதேவி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வெகுகாலம் குழந்தைப் பேறு இல்லாததால், இளையவரான அரிஞ்சய சோழருக்கு பட்டத்து இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. பின்னர், கண்டராதித்ய சோழனுக்கும் செம்பியன் மாதேவிக்கும் குழந்தை பிறந்த சிறிது காலத்திலேயே கண்டராதித்ய சோழன் காலமானார். எனவே, அரிஞ்சய சோழர் அரசராக முடிசூடினார். அவரும் குறைந்த காலத்திலேயே இறந்துவிட, அவரின் மகனான சுந்தர சோழன் பதவி ஏற்றார். அவருடைய காலத்தில் நடைபெற்ற கதையைத்தான் நாம் பார்க்க இருக்கிறோம். சுந்தர சோழனின் முதல் மகனான ஆதித்த கரிகாலனுக்கு மதுரையை ஆண்ட வீரபாண்டியனை வென்றதால் இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. இதற்கிடையில் கண்டராதித்தனின் மகன் மதுராந்தகனும் வயதை அடைந்து வாரிசாக இருக்கிறார். இந்த வாரிசுரிமை, அரசியல் களத்திலும் சோழமன்னர் குடும்பத்திலும் எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதுதான் இக்கதையின் சாரம். இனி.. புதுவெள்ளம்சற்றேறக்குறைய சுமார் 1070 ஆண்டுகளுக்கு முன், இதே ஆடி பதினெட்டாம் நாளன்று கதை தொடங்குகிறது. இப்பொழுது வீராணம் ஏரி என்று அழைக்கப்படும் வீர நாராயண ஏரிக்கு அன்றுதான் வந்தியத்தேவன் வந்திருக்கிறான். இந்த ஏரி எழுபத்து நான்கு கணவாய்களை உடையது. அது உண்மைதானா என்று எண்ணிப் பார்த்துக் கொண்டே வந்தியத்தேவன் தன் குதிரையுடன் வந்தடைந்த நாளில், பதினெட்டாம் பெருக்குக்காக ஏரிக்கரை களைக்கட்டியிருந்தது. இரு கரைகளும் பொங்கிப் பாய்ந்த அந்த வெள்ளத்தில் மக்களின் வெள்ளமும் சேர்ந்துகொள்ள, வந்தியத்தேவனுக்கு உற்சாகம் பொங்கியது. கண்ணுக்கினிய பெண்கள் கூட்டம் பாடிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தது. சில உபசரிப்புகளையும் அவன் ஏற்றுக் கொண்டான். சோழர்கள் உண்டாக்கி வைத்திருந்த நீர் மேலாண்மையையும் மக்கள் கூட்டம் அவர்களைப் போற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்ததையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தபோது சலசலப்பும் பரபரப்பும் உற்சாகமும் பதட்டமும் நிறைந்த கூச்சல்கள் எழத் தொடங்கின. எல்லோரும் பார்த்த திசையைப் பார்த்தபோது, ஏழெட்டு பெரிய ஓடங்கள் வெள்ளைப் பாய்கள் விரிக்கப்பட்டு ஏரிக்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. முதலில் வந்த படகில் வீரர்கள் ஆயுதங்களுடன் இறங்கி கூட்டத்தை ஆயுத பலத்துடனும் உரத்த குரல்களுடனும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட இன்றையக் காலகட்டத்தில் பிரதமர் வருகையின்போது நடக்கக்கூடிய கெடுபிடிகள் போன்று அது இருந்தது. வருபவர் யாரென விசாரித்தபோது பனைமரக் கொடியைச் சுட்டிக் காட்டினர். வந்தியத்தேவன் புரியாமல் பார்க்க, அது பழுவேட்டரையருடையது என்று அவனுக்கு ஒருவர் புரிய வைத்தார். அவர் வருவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்த பொழுது அவரின் அரசியல் பலம் புரிந்தது. வந்தியத்தேவனால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பழுவேட்டரையர் சிறந்த வீரர். சோழப் பேரரசின் நிதி அமைச்சரான அவர், நிர்வாகத்திலும் மிகுந்த செல்வாக்கு கொண்டிருந்தார். கருவூலம், நிதி மேலாண்மை, கூல விநியோகம் போன்ற முக்கியப் பொறுப்புகள் அவர் வசமும் தலைநகர் தஞ்சாவூர் கோட்டைக் காவல் அவரின் தம்பியான சின்னப் பழுவேட்டரையரின் வசமும் இருந்தன. சுற்றியிருக்கும் அரசுகளுக்கு வரி, தண்டம் விதிக்கக்கூடிய அளவுக்கு உரிமை கொண்டவர் என்றெல்லாம் ஏற்கனவே அவரைப்பற்றி வந்தியத்தேவனுக்குத் தெரிந்திருந்தது. ஒரு வீர இளைஞனான அவனுக்கு, அந்த மாபெரும் வீரரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது உவகையாக இருந்தது. ஆனால் அவன் வந்த வேலையை நினைத்துக் கொண்டான். காஞ்சி நகரில் சோழ அரசின் பட்டத்து இளவரசரும், தன்னுடைய தலைவனுமான ஆதித்த கரிகாலன் எச்சரித்திருந்ததையும் நினைவில் கொண்டு வந்தான். ஆதித்த கரிகாலன் இரு ஓலைகளை, தன் தந்தையான சுந்தர சோழரிடமும், தமக்கையான குந்தவை தேவியிடமும் ரகசியமாக ஒப்படைக்க வேண்டுமெனக் கட்டளையிட்டிருந்தார். முக்கியமாக, பழுவேட்டரையர்களுக்குத் தெரியவே கூடாது என்றும் சொல்லியிருந்தார். வந்தியத்தேவன் குறும்பான வாலிபன் என்பதால், அடக்கமாக, யாருக்கும் தெரியாமல், எந்த வம்புச் சண்டையிலும் நுழையாமல், பத்திரமாகச் செல்லுமாறு கண்டித்திருந்தார். (ஆனால், அவன் அப்படி இருந்திருந்தால் இந்தக் கதை உருவாகியே இருந்திருக்காது) அதை நினைத்துக்கொண்ட வந்தியத்தேவன் பழுவேட்டரையரைப் பார்க்கும் ஆவலை அடக்கிக் கொண்டு, கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் இரவு தங்கும் நோக்கத்துடன் குதிரையைச் செலுத்திக்கொண்டு கிளம்பி விட்டான். இயல்பிலேயே துடிப்பான வந்தியத்தேவனுக்கு, தன் வால்தனங்களை அடக்கிக்கொண்டு பயணம் செய்யக் கடினமாக இருந்தது. ஆனாலும், பழையாறை போன்ற முக்கியமான நகரங்களைப் பார்ப்பது குறித்தும், குந்தைவை தேவியைச் சந்திக்கப்போகும் பெருமையை நினைத்தும், தன் ஆவலை அடக்கிக் கொண்டான். வீரநாராயண விண்ணகரக் கோவிலுக்குச் செல்லும் வழியில், கடைத்தெரு கோலாகலமாய் நிறைந்திருந்தது. அதை ரசித்துக் கொண்டே சென்றவனை அங்கு நடந்துகொண்டிருந்த சைவ வைணவச் சண்டை ஈர்த்தது. ஒரு சைவர், ஒரு வைணவர் மற்றும் ஒரு அத்வைதி ஆகியோர் தங்கள் கொள்கையே சிறந்தது என வாதிட்டுக் கொண்டிருந்தனர். இருபக்கமும் மனிதர்கள் நின்றுகொண்டு தத்தம் கொள்கைகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தனர். சண்டையிட்டுக் கொண்டிருப்பவர்களில் வைணவத்துக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தவர்தான் ஆழ்வார்க்கடியான் நம்பி. அவர் ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார். சைவ- வைணவச் சண்டைகள் அப்பொழுது வெகு பிரசித்தம். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத வந்தியத்தேவன் நடுவில் புகுந்து, சண்டை போடுவதை நிறுத்துமாறும், அப்படிப் போட வேண்டிய அவசியம் இருந்தால், போருக்குச் செல்லும்படியும் கூறினான். மக்களில் சிலருக்கு அவன் சொன்னது பிடித்திருந்தது. ஆழ்வார்க்கடியானின் மொத்த ஆவேசமும் இவன் பக்கம் திரும்பிவிட்டது. விளையாட்டாய் சண்டையை நிறுத்த வந்தியத்தேவன் முயல, கூட்டமும் அதில் சேர்ந்து கொண்டது. அப்போது மறுபடியும் சலசலப்பு ஏற்பட்டது. பழுவேட்டரையர் யானையின் மீது அமர்ந்து, தன் கூட்டங்களுடன் அதிகாரம் பொருந்திய மிளிர்வுடன் வந்து கொண்டிருந்தார். பின்னால் ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்கின் உள்ளே யார் இருப்பாரோ என்ற எதிர்பார்ப்புடன், வந்தியத்தேவன் பல்லக்கை நோக்கினான். பல்லக்கு வந்தியத்தேவனைக் கடக்கும் போது திரை விலகியது. அழகு பொங்கும் சுந்தர முகம் தோன்றியது. ஆனாலும் மனத்தில் காரணம் தெரியாத ரசிப்பின்மை தோன்றியது. இவனைப் பார்த்தவுடன் சட்டெனத் திரை மூடிக் கொண்டது. யாரைப் பார்த்து பயந்து திரை மூடிக் கொண்டது என்று வந்தியத்தேவன் தேடும்போது, ஆழ்வார்க்கடியான் விசித்திரமான முகபாவத்துடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். அவனுக்கு அது மர்மமாகத் தோன்றியது. அந்தக் கணத்தில் அவனுக்கு ஆழ்வார்க்கடியான் மீது ஒரு வித வெறுப்பும் அருவருப்பும் தோன்றியது. தொடரும் சவிதா

பொன்னியின் செல்வன் – முன்னுரை

பொன்னியின் செல்வன் – முன்னுரை

பொன்னியின் செல்வன் – என்றைக்குமே சுவையூட்டும் ஒரு புதினம்தான். பல நடிகர்களும் இயக்குனர்களும் திரைப்படமாக எடுக்க விரும்பிய ஒரு கலைப் படைப்பு. எத்தனை விமர்சனங்கள் இருந்தபோதும், ‘படிக்க முடியவில்லை’ எனப் புலம்புவர்கள் அதிகம். வாசிப்புப் பழக்கமில்லாதவர்கள், நீண்ட நெடிய நாவலைச் சுவைக்க முடியாமல், அலமாரியில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வெளியாகிப் பல பத்தாண்டுகள் கடந்தும், இன்னமும் அதிகமான அளவில் விற்பனை ஆவது பொன்னியின் செல்வன்தான் என்பது வெளிப்படை. பொன்னியின் செல்வனை வாசிக்கவும், ஒலி வடிவில் கேட்கவும் நிறைய செயலிகளும் ஒலிப் புத்தகங்களும் இருக்கின்றன. ஆனபோதும் பலருக்கு இது அடைய முடியாத ஆடம்பரம். படிக்க முயல்பவர்களில் சிலர், நீண்ட வர்ணனைகள், கிளைக்கதைகள், நாவலின் நீளம் போன்றவற்றால் அயர்ச்சியுற்று, பாதியில் விட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் பொன்னியின் செல்வனை முப்பது முறைக்கு மேல் படித்திருக்கிறேன். எல்லாக் கதாபாத்திரங்களும் என் மனதில் அழுந்தப் பதிந்தவை. என் குழந்தைகளுக்கு, அவர்களுக்கு ஏற்றவாறு அவர்களுடைய மொழியில் தினமுமே படுக்கப் போகும் முன் கதையாகச் சொல்லியிருக்கிறேன். இருவரும் அதை ஒரு வரிகூடப் படித்ததில்லை என்றபின்னும், இன்னமும் கதாபாத்திரங்களை மேற்கொண்டு ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த முயற்சியைத் தொடங்கி இருக்கிறேன். திரைப்படமாகப் பார்த்தால் இன்னமும் நன்றாகப் புரியக்கூடும்தான். ஆனால், எழுத்துலகத்துக்கே சம்பந்தப்பட்ட சில விவரணைகளைக் காட்சிப் படுத்துதல் மிகக் கடினம் அல்லது முடியாது. எனவே, வாசிக்க ஆசைப்பட்டும், நேரமோ பொறுமையோ வாய்க்காதவர்களுக்காக சுருக்கப்பட்ட வடிவில் பொன்னியின் செல்வன் புதினத்தைத் தருகிறேன். இயன்றவரை எல்லா நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கிறேன். சில சுவையான கட்டங்களைத் தற்காலத்துடன் பொருத்திச் சொல்லியிருக்கிறேன். கல்கியின் நகைச்சுவை உணர்வை அங்கங்கு சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. சுவை கெடாத வண்ணம் எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அறிமுகமாகக்கூட இதைக் கருதலாம்.  இதைப் படித்துவிட்டு மூலத்தைத் தேடிப் படிக்கும் எண்ணம் வர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.   பொன்னியின் செல்வன், கல்கி இதழில் தொடராகத்தான் வெளிவந்தது. போலவே, இந்தச் சுருக்கப்பட்ட வடிவமும் சுவடு இதழில் தொடராகவே வெளியாகவுள்ளது. இந்தத் தொடர் குறித்தான அறிவிப்பு வெளியான உடனே, சுவடு வாசகர்கள் காட்டிய ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது. கதையைத் தொடங்குவதற்கு முன் சில வரிகள்: பெரும்பாலானவருக்கு இந்தத் தலைப்பு, மன்னன் இராஜராஜ சோழனைக் குறிக்கிறது என்பதுகூடத் தெரியாது. இந்தக் கதை ஒரு மனிதனின் – மன்னனின் முழுமையான வாழ்நாள் வரலாறு அல்ல. மிக முக்கியமான அரசனாக வரலாற்றில் பதியப்பட்டவரின் வாழ்க்கைத் தொகுப்பு அல்ல. அவன் அரசனாவதற்கு முன்பான ஒரு சிறிய காலகட்டத்தை மட்டுமே இது விவரிக்கிறது. அதில் நடந்த துரோகங்கள், நம்பிக்கை, போர், இயற்கைச் சீற்றம், சோழ மண்ணின் பெருந்தன்மை, ராஜாங்க அலசல்கள், அரசியல், உயர்ந்த மனிதர்களின் அறம் என எல்லாவற்றையும் தொட்டுப் போகிறது. காலமும் இடமும் இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. என்னதான் தலைப்பு இராஜராஜசோழனைச் சொல்லியிருந்தாலும், இந்தப் புதினத்தின் முக்கிய நாயகன் வந்தியத்தேவன்தான். அவனைச் சுற்றித்தான் கதைக்களம் நகரும். தஞ்சையையும் சுற்றுப்புறத்தையும் தெரிந்தவர்களுக்கு, இதில் இடம்பெறும் இடங்களும், நடந்த விஷயங்களையும்  தொடர்புபடுத்திப் பார்த்துக் கொள்வது எளிது. மற்றவர்கள் வரைபடத்தின் உதவியோடு அந்த ஊர்களைப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் இணையும் இடம், கதாபாத்திரங்கள் சந்திக்கும் நிகழ்வு, அனைத்தும் ஒரு நேர்கோடாய், தொய்வில்லாமல் போகக்கூடிய நாவல் இது. கல்கியின் வர்ணனைகள், விவரணைகள் நம்மை அந்தக் காலத்திற்கே கொண்டு போய் விடக்கூடியன. அந்த வசனங்களும், நகைச்சுவையும், நடையும் வெகு சுவாரசியம்தான். ஆனாலும் அவசர உலகமாகிவிட்ட காலத்தில், ஆர்வம் உள்ளவர்கள் சுருக்கமாகவேணும் வாசிக்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, சுவை கெடாமல் சுருக்க முயன்றிருக்கிறேன். மீண்டும் நினைவூட்டுகிறேன், வர்ணனைகளோ, மேலதிகமான விவரங்களோ, கல்கியின் பகடியும் எள்ளலுமான நடையோ இதில் வாய்க்காது. சுமார் பத்து அத்தியாயங்களோ அதற்கும் மேலோ  ஒரே அமர்வில் படிக்கும் வண்ணம் சுருக்கி எழுதப்பட்டது. புது வெள்ளம், சுழல் காற்று கொலைவாள் மணிமகுடம் தியாக சிகரம். என ஐந்து பாகங்கள் கொண்ட புதினத்தை, கிட்டதட்ட ஒரு பாக அளவில் சுருக்கப்பட்டுள்ளது. ஆடி 18 முதல் புதுவெள்ளம் பொங்கிப் பெருக்கெடுக்க உள்ளது. வாசிக்கத் தயாராகுங்கள் – பொன்னியின் செல்வன் – சுருங்கிய வடிவில் – சுவடு இணைய இதழில். சவிதா  

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

விரைவில் – சுருக்கமான வடிவில் வெளியாகிப் பல பத்தாண்டுகள் கடந்தும் இன்றளவும் பொன்னியின் செல்வன் புதினத்திற்கு வாசிப்பாளர்களிடம் வரவேற்பு குன்றாமல் இருப்பதே, இலக்கிய உலகில் கல்கி பதித்துள்ள அழிக்க இயலாத முத்திரைக்குச் சான்று. மொத்தம் 5 பாகங்களில் 2000-க்கும் கூடுதலான பக்கங்களைக் கொண்ட இந்நாவலை இன்றைய அவசரகால உலகில் வாசிக்க இயலவில்லை என்ற குரல்களை ஆங்காங்கே கேட்க முடிகிறது. இந்தக் குறையை நீக்கும்வண்ணம், இதுவரை வாசிக்காதவர்களுக்கு ஒரு அறிமுகமாகவும், மீள் வாசிப்பு செய்ய விரும்புவோருக்கு ஒரு துரித வாசிப்புக்கான வழிவகையாகவும், பொன்னியின் செல்வனின் சாரத்தை மட்டும் எடுதது, சுவை குன்றாது சுவடு வாசகர்களுக்காக சுருங்கத் தரவுள்ளார் எழுத்தாளர் சவிதா. காத்திருங்கள், அடுத்த அறிவிப்பு விரைவில்…

கரைசேராப் படகுகள்

கரைசேராப் படகுகள்

தொடர்கதை – பகுதி 1 ‘ஜல் ஜல்’ என்ற சலங்கை ஒலி வானில் எதிரொலிக்க, புழுதிப் படலமொன்று மேகத்தினைத் திரையிட, அதற்குள் சூரியன் ஒளிந்து கொள்ள, சூரியனைத் தேடி நிலாமகள் வரும் மந்தகாசமான மாலைப் பொழுது. அருங்குணம் என்னும் கிராமத்து நாற்சந்தியில், வயல் வேலை முடித்து வரும் மக்கள், மந்தை மாடு ஓட்டிவரும் மக்கள், இரவு உணவுக்குக் கடைகளில் பொருள் வாங்கும் மக்கள், தெரு விட்டு தெரு சென்று கதை பேசும் மக்களென, அந்த இடமே வெங்கலப் பானையில் இரும்புக் குண்டை உருட்டியது போன்று கலகலப்பாக இருந்தது. தென்னன்ட தெருவில் ஒரு வீட்டின் நடுக்கூடத்தில், சாய்வு நாற்காலியில் சாய மனமில்லாமல் நிமிர்ந்து உட்கார்ந்து இருந்தது ஒரு உருவம். கிட்டத்தட்ட சினிமா நடிகர் செந்தாமரை மாதிரி அதே உருவம், அதே குரல், அதே நடை, அட! பெயர் கூட அதேதான். ஆனால் இவர் அவரல்ல. விசு படத்தின் கதாநாயகி கமலா காமேஷ் மாதிரி ஒரு உருவம். அதே உயரம், அதே ஒல்லி, ஆனால் பெயர் மட்டும் மரகதம். கூடத்தின் ஒரு முனையில் இருந்து ‘டொக்.. டொக்.. டொக்..’ என்று தாள லயத்துடன் ஒரு ஓசை. தவில் வித்துவான் வீட்டிற்கு வந்தால் இருவரும் கச்சேரி வாசிப்பார்கள். சில நேரங்களில் தவில் தாளம் தப்புமே தவிர, பட்டம்மா பாட்டியின் வெற்றிலை இடிக்கும் ஓசை தாளம் தப்பாது. ஒரு அறையின் கதவைத் திறந்து கொண்டு மரகதம்மா அவரசமாக வெளியே ஓடிவந்து சமையலறைக்குள் நுழைந்தார்கள். மரகதம்மா கதவைத் திறந்த அந்த இடைவெளியில் அறைக்குள் இருந்து ஒரு பெண் அலறும் ஓசையும் கதறி அழும் ஓசையும் கலவையாகக் கேட்டது. மரகதம்மா செந்தாமரையைத் தாண்டிப் போகும்போது, “மரகதம் இப்ப எப்படி இருக்கு?” என்று பதற்றத்துடன் கேட்டார் செந்தாமரை. “பயமாதாங்க இருக்கு” என்று பாத்திரத்தில் ஏதோ எடுத்துப் போகும் மரகதம் அழுதபடியே சொல்லிவிட்டுப் போனாள். வெளியில் திண்ணையில் அமர்ந்திருந்த பெரிசுகள், “என்னப்பா செந்தாமரை, என்னாச்சு?” என்று குழுவாகக் குரல் கொடுத்தனர். ஒலிபெருக்கி இல்லாமலே பெரிசுகளின் குரல் தெருவெல்லாம் எதிரொலித்தது. “ஏம்பா உன் மருமவனுக்கு தகவல் சொல்லி விட்டயா?” என்று ஒரு பெரிசு ஏதோ மாபெரும் யோசனை சொன்னமாதிரி சபையைப் பார்த்தார். “ம்..ம்.. மதியமே சொல்லிவிட்டுட்டேன். ஆனா பதில் தகவல்தான் வரல” என்று விரக்தியுடன் சொன்னார் செந்தாமரை. “சீராட்டி, பாராட்டி, தங்கப் பாலாடையில் பாலூட்டி வளர்த்த தங்க மயிலை, மலைக் குரங்கு கையில் பிடிச்சுக் கொடுத்துட்டானே.. இந்த அக்கிரமம் எங்க நடக்கும்?” என்று புலம்பினாள் பட்டம்மா பாட்டி. “ஏய் கிழவி, அனத்தாம சும்மா இரு. இங்க அவனவன் உயிரைக் கையில பிடிச்சிட்டு நிற்கிறான். நீ வேற எசப்பாட்டு பாடிக்கிட்டு..” என்று அதட்டினார் செந்தாமரை. தெருவில் உள்ள பெண்களில் பாதிப்பேர் வெண்கலக் குடத்தை வைத்துக் கொண்டும், பானையை வைத்துக்கொண்டும் தண்ணீர் மோந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் ஓடிவந்து, “நம்ம மரகதம்மா பொண்ணு வலியில் துடிக்குதாமே” என்று தகவல் சொல்ல, பெண்கள் அனைவரும் சிட்டாய்ப் பறந்தனர். செந்தாமரை வீட்டு வாசலில் ஒரு பெரிய கூட்டமே கூடியிருந்தது. உள்ளேயிருந்து புனிதா அலறுவது கல்லிலும் நார்வரும் போல், அனைவர் மனதையும் உருக வைத்தது. கூடியிருந்த பெண்கள், “கன்னியம்மா தாயே! புனிதாவ காப்பாத்து” என வேண்டினர். தொடரும்.. சாம்பவி சங்கர்

அம்மாவுக்குக் கல்யாணம்

அம்மாவுக்குக் கல்யாணம்

வேர்களாகும் விழுதுகள் – 3 “அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில குடை பிடிப்பானாம். ஆனாலும் ரெண்டாங் கல்யாணத்துக்கு இம்புட்டு ஆடம்பரம் ஆகாது”. கெட்டி மேளச் சத்தத்தை மீறி, பின்னாலிருந்து குரல் வந்தது. திரும்பிப் பார்த்தேன். மெல்லிய குரலென  நினைத்துப் பேசிக்கொண்டிருந்த பெண்கள்  அசடு வழிய சிரித்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தனர். அது ஒரு திருமண வீடு. மணப்பெண்ணின்  முதல் திருமணம் தோல்வியுற்றதால் நடைபெறும்  மறுமணம், அப்பெண்களின் வாயில் அவலாகிக் கொண்டிருந்தது. கணவனை இழந்தவர்கள், பிரிந்து வாழ்பவர்கள், மணமுறிவு பெற்று வாழ்பவர்கள், திருமணமாகாதவர்கள் என, தனித்து வாழும் கணிசமான  பெண்களால் நிரம்பிக் கிடக்கிறது  இந்தச் சமூகம். ஆனாலும்கூட, ஒரு  பெண்ணிற்கு  மறுமணம் என்பதை இன்னும்  இங்கு இயல்பாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பெண்களின்  சிறகுகளை முறிப்பதில் இதுபோன்ற  பெண்களுக்கும் பங்குண்டு. ஐ.நா.வின் ‘உலகப் பெண்களின் முன்னேற்றம் 2019 – 2020; மாறும் உலகில் குடும்பங்கள்’  என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ள அறிக்கையில், உலகிலேயே கணவனை இழந்த பெண்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. அதே நேரத்தில் இந்தியாவில்தான் மிகக்  குறைந்த அளவில் 1.3 சதவீத  விவாகரத்துகள் (1000 திருமணங்களில் 13 திருமணமே மணமுறிவு)  நடைபெறுவதாகவும் குறிப்பாக  நகர்ப்புறங்களில் மட்டுமே நிகழ்வதாகவும்  கூறுகிறது. இந்த இரண்டு முரண்களுக்குமான காரணத்தை ஆராய்ந்தால் மீண்டும் பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்ற சக்கரங்களுக்குள்ளேயே சுழல வேண்டியிருக்கும்.  இந்தியாவின் இந்த மிகக் குறைவான மணமுறிவுகளுக்கு பின்னால் இருப்பது மகிழ்வான, புரிதலான திருமண உறவா? அல்லது சமுதாய அழுத்தமா? என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியே. பில்கேட்ஸ் – மெலிண்டா இணையரின் திருமண முறிவு அறிக்கையைக்கூட  ஏற்றுக்கொள்ள முடியாமல் பொங்கும் கூட்டத்தை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. ஏனெனில், இன்றும் இங்கு விவாகரத்து  என்பது, தனி மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல் எனப் புரிந்து கொள்ளப்படாமல், வெட்கத்திற்குரியதாகவும் அவமானத்திற்குரியதாகவும், குடும்ப கௌரவமாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறது.  இந்தியாவின் முதல் (கணவனை இழந்த) பெண் மறுமணம் 1856 டிசம்பர் 7 ஆம் தேதி ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் முயற்சியால்  வங்கத்தில் நடைபெற்றதாக  வரலாறு கூறுகிறது. ஆனால் இன்றும்கூட கணவனை இழந்த பின்போ அல்லது மணமுறிவுக்குப் பின்போ மறுமணம்  செய்யத் தயங்கி, துவண்டு நிற்கும் பெண்களே இங்கு அதிகம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மறுமணங்கள் இன்று பரவலாக மனதளவில்  ஏற்றுக் கொள்ளப்பட்டாலும்கூட, ஆணின் மறுமணம் போல பெண்ணின் மறுமணம் எளிதாகக் கை கூடுவதில்லை. குறிப்பாக குழந்தையுடைய  பெண்கள்  மறுமணம் செய்யக்கூடாது என்றே உலகம் எதிர்பார்க்கின்றது. பெண் என்பவள் ஆணைச் சார்ந்தே வாழவேண்டும் என நிர்பந்திக்கும் இதே சமூகம், இணையர் இறந்து விட்டாலோ, பிரிந்து விட்டாலோ பெண் தனியாகவே வாழ்ந்து முடிக்க  வேண்டும்  என்றும் எதிர்பார்க்கிறது. குழந்தையுடன் மறுமணம் நோக்கிச் சிந்திக்கும் பெண்ணைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி, அவளை வாழ்நாளெல்லாம் காயப்படுத்திக் கொண்டேயிருக்கிறது, இன்றும்.  ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே  பெண்களின் மறுமணம் குறித்து சிந்தித்திருக்கிறார் எழுத்தாளர் சூடாமணி. இவரது ‘இரண்டாவது அப்பா’  என்ற சிறுகதை, ஏழு வயதுக் குழந்தையுடன் கணவனை இழந்த கதைநாயகி, துணிவுடன் இரண்டாம் திருமணம் முடித்து அதனை எதிர்க்கும் தன் தாயையும் ஏற்கத் தயங்கும் மகனையும் அழகாக சமாளித்து, தன்னம்பிக்கையுடன்  புது வாழ்வைத் தொடர்வதை விவரிக்கிறது. சூடாமணியின் ‘இரண்டாம் அப்பா’  காலத்திற்கும்  முன்பே  ஒலித்த  குரலாய், பெண்கள் மறுமணத்தை ஓங்கிச் சொல்கிறது. இன்றும்  பெண்ணின் மறுமணத்தை கள்ளத்திருமணம் போல் நடத்தும் பெற்றோர்களுக்கிடையே தன் மகள்   சௌந்தர்யாவின் மறுமணத்தை  ஊரறிய  நடத்தி, பொருள் பொதிந்ததாக மாற்றி,  வாழும்  உதாரணத் தந்தையாகத் திகழ்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.  இந்த சமூகத்தில் அப்பாவாக இருப்பதற்கும் அம்மாவாக இருப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. அப்பா மறுமணம் முடித்தால் ஏற்றுக் கொள்ளும் குழந்தைகளால்  அம்மாவுக்கு மறுமணம் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை. காரணம், நாம் உருவாக்கி வைத்திருக்கும்  அம்மா என்ற புனித பிம்பம்.  தன் உணர்வுகளை அழித்து, குழந்தைகளுக்காகவே தங்கள் வாழ்வை  ஒப்புக் கொடுத்துவிடுபவள்தான்  தியாகத்தாய் என  செல்களில் உறைந்து கிடக்கும் அழுக்கை அகற்றினாலன்றி  பெண்ணிற்கான மறுமணங்கள் சாத்தியப்படாது. இப்படிப்பட்ட சூழலில்தான் அம்மாவிற்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு  என்பதைப் புரிந்து, தங்கள் தாய்க்கு திருமணம் முடித்து வைத்து நம்பிக்கை வெளிச்சம் தந்திருக்கின்றனர் இரண்டு  இளைஞர்கள் தமிழகத்திலும் கேரளாவிலும். அவர் பெயர் மினி. கேரளாவில் கொல்லம் அருகில் பள்ளிமோன் என்னுமிடம். திறமையான, அன்பான ஆசிரியை. மகன் கோகுல் ஸ்ரீதர். கணவரின் கட்டளைக்கிணங்க, குழந்தைக்காக பணியை உதறிய உதாரண மங்கை.    திருமண பந்தம் சுகப்படவில்லை. தினந்தோறும் வாக்குவாதம், பிரச்சினை, சண்டை. குழந்தைக்காக கசப்பான திருமண வாழ்வை சகித்துக்கொண்டு, பூட்டிய கதவுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கானோரில் ஒருத்தியாக  வாழ்ந்தார். அப்படியான ஒரு நாளில்  தலையில் விழுந்த அடியால் இரத்தம் சொட்டச்சொட்ட நின்ற அம்மாவைப் பார்த்து பதறிய மகனிடம், “ஒண்ணுமில்லடா, அம்மா உனக்காக என்ன வேணா தாங்கிக்குவேன்” என்று சொன்ன அம்மாவின் வார்த்தைகள் தன்னைத் தூங்க விடவில்லை எனக் கூறுகிறார்  கோகுல் ஸ்ரீதர். ஏனெனில், இது போன்ற வன்முறைகள் அம்மாவின் மீது ஏவப்படுவது  முதன்முறையல்ல.  ‘உனக்காகத் தாங்குவேன்’ என்பது மினியின் வார்த்தைகள் மட்டுமல்ல. இந்தியாவின் பெரும்பான்மை அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்காகவே  எந்தத் துன்பத்தையும்  தாங்கிக் கொண்டு, திருமண பந்தத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சண்டை, சச்சரவு, பிரச்சினைகள் சூழ்ந்த சூழலில் வாழும், வளரும் குழந்தைகள் நம்பிக்கையின்மை, மன அழுத்தம், தனிமை உணர்வுடனே வாழ்வதாகக் கூறுகிறது சைல்ட் ட்ரெண்ட்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு.  கோகுலும் அப்படியே வளர்ந்தான், வாழ்ந்தான்.  தொடர்ந்த பிரச்சினைகளுக்குப் பிறகு, தன்  அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அப்பாவின் வீட்டை விட்டு வெளியேறிய அந்தக் கணத்தில் அவருக்கென ஒரு வாழ்வை அமைத்துத் தரவேண்டும் என, தான் முடிவெடுத்ததாக கோகுல் கூறுகிறார். தனக்காக தன் தாய் இதுவரை அனுபவித்த கொடுமைகளின் முற்றுப் புள்ளியாக  மறுமணத்தை யோசித்திருக்கிறார் இந்த இளைஞர்.  “எனக்காக இவ்வளவு காலம் எல்லாவற்றையும் எதிர்த்து வாழ்ந்த அம்மா கொஞ்சம் தனக்காகவும் வாழட்டும்” என விரும்பினேன் எனக் கூறும் கோகுல், மறுமண முடிவுக்கு தன் தாயை சம்மதிக்க வைக்க, பெருமுயற்சி எடுக்க வேண்டி இருந்திருக்கிறது. தன் தாயின் பள்ளிப் பருவ நண்பன் வேணு என்பவரே வரனாக வந்தபோது இந்த மறுமணம் கைகூடியிருக்கிறது. தன் அம்மாவின் மறுமண முடிவை மற்றவர்கள் தவறாக சித்தரித்து விடக் கூடாது என்பதே கோகுலின்   கவலையாக இருந்தது. அதனால் அவரே இந்த நிகழ்வை முகநூலில் பகிர்ந்து  “அம்மாவின் இரண்டாவது திருமண முடிவை ஏற்றுக்கொண்டு, அவருக்கான மரியாதையை அளியுங்கள்” என்று கூறிய இந்த முற்போக்கு இளைஞனை சமூக வலைத்தளங்கள் கொண்டாடித் தீர்க்கின்றன. “அப்பாக்கள் மறுமணம் செய்தால் ஏற்றுக்கொள்ளும் குழந்தைகள், அதையே அம்மாக்கள்  செய்தால் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?” என்று முடித்த  கோகுலின் நியாயமான கேள்விக்கு  இளைஞர்களே பதிலாக வேண்டும்.   தமிழ்நாட்டின் சித்தார்த்தன் கருணாநிதி எழுதியுள்ள, Right to Marry  என்ற நூலை வாசித்துவிட்டு, அவரைத் தொடர்புகொண்டு I’m proud of you என்று கூறிய என் வார்த்தைகளுக்கு கேள்விகளாலேயே சாட்டை வீசுகிறார் அவர். “இதில்  பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது? இன்றும்  இதைப் பெருமையாகப் பேசுகிறோம் என்பதே வேதனைக்குரிய விஷயமல்லவா? இது சாதாரணமான, இயல்பான ஒரு நிகழ்வாக மாற இந்தச் சமூகத்திற்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்கும்?” என்று கேள்வியால் அசரடிக்கும்  சித்தார்த், தந்தை இறந்து  பத்தாண்டுகள் கழித்து தன் அம்மா செல்விக்கு, 47 வயதில்  மறுமணம் செய்து வைத்திருக்கிறார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம், வலையாம்பட்டு என்ற கிராமத்தில் வறுமையில் சுழன்ற குடும்பம் அது. 2009-ல் கணவர் இறந்துவிட,  கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த சித்தார்த் கருணாநிதி, பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மகிழ்னன்  என்ற இரு மகன்களோடு, வறுமையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் செல்வி அம்மாள்.  இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள் படும் அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தார்.   வழக்கமான தமிழ் அம்மாவாக தன் ஆசாபாசங்களைத் தள்ளிவைத்து, தன் பிள்ளைகளின் படிப்பிற்காக உழைத்துத்  தேய்ந்தார். மகன்கள் இருவரும் படித்து, வேலை தேடி, நகரம் நோக்கி நகர்ந்துவிட தனிமை அவரைத் தின்றது.  நல்லகாலம்,  சராசரி மகன்களாய் இல்லாமல், இருவரும் தாயின் வலியை உணர்ந்து கொண்டனர். சித்தார்த், தன் தம்பியோடு கலந்தாலோசித்து அம்மாவுக்கு மறுமணம் செய்யும் முடிவைக் கையிலெடுத்தார். ஆனால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சமூகத்தின் கட்டமைப்பு குறித்தும் கவலைப்பட்ட செல்வி அம்மாள் மறுத்து ஒதுங்கினார். மனம் தளரவில்லை சித்தார்த்தன். 2017 ல் ஆரம்பித்த பேச்சுவார்த்தை, நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்தது. இறுதியில் பிள்ளைகளே வென்றனர்.  அருகிலுள்ள சூலாங்குறிச்சியில் மறுமணம் முடிய, இன்று குடும்பமுமே உற்சாகத்தில். “பத்தாண்டுகளுக்கு முன்பே எனது ஆசிரியர் ஒருவர் அம்மாவின் மறுமணம் குறித்து என்னிடம் பேசியபோது அருவெறுப்பாக இருந்தது. ஆனால் நானும் காதலித்து,  பிரிவு நேரிட்டபோதுதான், அம்மாவிற்கு மறுமணம் தேவை என்பதை உணர்ந்தேன்” என்கிறார்  கோவையில் ஆங்கில மொழிப் பயிற்றுனராக இருக்கும் சித்தார்த் கருணாநிதி.  “ஆணோ, பெண்ணோ இணையரில் ஒருவர்  இறந்து விட்டால் சிறிது காலம் எடுத்துக் கொண்டு மீண்டும் மணம் புரிவதில் என்ன தவறு?”  என்று அவர் கேட்கும் கேள்வியின் நியாயத்தை ஆண்கள், பெண்கள் அத்தனை பேரும் உணர வேண்டிய தருணமிது. “நான் கணவரை இழந்து தனியாக இருந்தபோது உதவி கேட்டு எந்த ஆண்களிடமாவது பேசினால் கூட, என்னைத் தவறாகப் பேசியவர்கள், நான் மறுமணம் முடித்த பிறகு என்னை அவ்வாறு பேசுவதில்லை. என் மீதான அவர்கள் பார்வை மாறியிருக்கிறது” என மகிழ்ச்சியோடு கூறும் செல்வி அம்மாளின் வார்த்தைகளிலுள்ள மற்றொரு கோணம் பெண்கள் மறுமணத்திற்கு வலுசேர்க்கிறது. இந்தியாவில் 1.36 மில்லியன் பேர்   விவாகரத்தானவர்கள் என்றும், 40 மில்லியன் பெண்கள் கணவரை இழந்தவர்கள் என்றும் 2016-ல் வெளியான BBC  அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, தனித்து வாழும் ஆண்களை விட, தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம்.  முறிந்து  போகும் திருமண பந்தங்களிலும், முடிந்துபோன திருமண வாழ்க்கையிலும் தோற்றுப் போய்விட்டோம் என்று எண்ணாமல் மீண்டும் ஒரு வாழ்வை ஏற்றுக்கொள்ள பெண்கள் முன்வர வேண்டும். புராதனச் சிந்தனைகளைத் தூக்கிக்கொண்டு, தனிமையில்  உழலாமல், விருப்பமான வாழ்வை அமைத்துக் கொள்வதில் தவறேதுமில்லை.   ஊர்

சமத்துவத் தலைவர்

சமத்துவத் தலைவர்

பெரியார் பக்கம் 21 புரட்சியாளர் பெரியார் (3) எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி துல்லியமான கருத்து கொண்டிருந்தார் பெரியார். ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சியே நடத்தியிருப்பதற்கான சான்றுகள் அவர் தரும் முறைகளில் பரவலாகக் காணப்படுகின்றன. தமிழில் எழுத்துகள் அதிகம். ஞாபகத்தில் இருத்தவேண்டிய தனி உருவ எழுத்துகள் அதிகம். தமிழ் உயிர் எழுத்துகளில் ஐ, ஒள ஆகிய இரண்டு எழுத்துகளைக் குறைத்துவிடலாம். இவை இரண்டும் தேவையில்லாதவை. மேலும் இவை கூட்டெழுத்துகளே ஒழிய, தனி எழுத்துகள் அல்ல. அவற்றுக்கு மாற்றாக ஐ=அய், ஒள=அவ் என எழுதலாம். இப்படிக் குறைப்பதால் மொத்தத்தில் 38 எழுத்துகள், அதாவது உயிரெழுத்து ஐ, ஔ ஆகிய இரண்டும் அவை ஏறும் மெய்யெழுத்துகள் 2×18=36, ஆக மொத்தம் 38 எழுத்துகள் ஞாபகத்திற்கும் பழக்கத்துக்கும் தேவையில்லாதவை ஆகிவிடும்.  மற்றும் மெய்யெழுத்துகளில் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய நான்கு குறில் நெடில் எழுத்துகள் கொண்ட 18×4=72 தனி உருவ எழுத்துகளை நீக்கிவிட்டு, தனிச் சிறப்புக் குறிப்பை உண்டாக்கி உயிர்மெய் 10, மெய் 18, குறில் நெடில் குறிகள் 9, ஆய்தம் 1 ஆகிய 38 தமிழ் எழுத்துகளாகச் சுருக்கிவிடலாம். அடுத்தபடியாக, மெய்யெழுத்துகளில், ந, நு, ஞ ஆகிய மூன்றையும் எடுத்துவிடலாம். ன்+த=ந, ன்+க=நு, ன்+ச=ஞ என்று ஆக்கிவிடலாம். இப்படிச் செய்தால் உயிர் 5, மெய் 15, சிறப்புப் பகுதி 8, ஆய்தம் 1 மொத்தம் 29 உருவ எழுத்துகளிலேயே கூடத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைச் சுருக்கிவிடலாம். எப்படியும் தமிழ் எழுத்துகள் குறைக்கப்படவேண்டும். கற்கும் குழந்தைகள் மூன்று மாதங்களில் படிக்கத் துவக்கலாம் என்பதுதான் என் ஆசை என்று தன் உள்ளக்கிடக்கையை வெளியிட்ட பெரியார், இந்த எழுத்துச் சீர்திருத்தம் செய்வதால் தமிழ் மொழிக்கோ, இலக்கணத்திற்கோ எவ்விதக் குறைபாடோ கேடோ விளையாது என்று உறுதி கூறினார். எனினும் நினைத்தோம், சொன்னோம், செய்தோம் என்று மின்னல் போக்கில் பெரியார் செயல்படவில்லை. உரியவர்களின் உளப்போக்கை மாற்றி ஒப்புதல் பெறவே முனைந்தார். பெரியாரின் முதல் தளபதிகளில் ஒருவராகிய திரு.குருசாமி 1932இல் துறையூரில் நடந்த தமிழர் மாநாட்டின் முன் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் ஒன்றை வைத்தார். அதை ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளாமல் மாநாட்டுத் தலைவர் தள்ளிவிட்டார். 1933 ஆம் ஆண்டின் கடைசியில் சென்னையில் நடந்த தமிழன்பர் மாநாட்டிற்கு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானத்தை, திருவாளர்கள் கே.எம்.பாலசுப்ரமணியம், சேலம் ஆர்.நடேசன், சாத்தான்குளம் அ.இராகவன் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்கள். மாநாட்டில் அத்தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதைப்பற்றி, நுணுக்கமாக ஆய்ந்து கருத்து சொல்ல, பதினோரு பேர்கள் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது. ஆனால் அக்குழு கூடவேயில்லை. பெரியார் ஓராண்டு காலம் பொறுத்திருந்துவிட்டு, 1.1.1935 முதல் தமிழ் நெடுங்கணக்கில் பலவற்றைப் புதிய முறையில் அமைக்கத் தலைப்பட்டார். ணா, னா, றா, ணொ, னொ, றொ, ணை, னை, லை, ளை போன்ற எழுத்துகளின் படத்தில் உள்ளபடியான பழைய வரி வடிவத்தை மாற்றி தற்போதைய நடைமுறை வரிவடிவில் எழுதுதல் ஆகும். பெரியாரின் ‘குடி-அரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’ இதழ்கள் இம் முறையைப் பின்பற்றின. ‘குடி-அரசு’ வெளியீடுகள் மேற்கூறிய எழுத்து மாற்றங்களைக் கையாண்டன. திரு.ஓமாந்தூர் இராமசாமி முதலமைச்சராகவும், திரு.டி.எஸ்.அவினாசிலிங்கம் கல்வியமைச்சராகவும் இருந்தபோது தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஆய்ந்து ஆலோசனை கூற, பல தரப்பினர்களையும் கொண்ட குழுவொன்று நிறுவப்பட்டது. அதில் பன்மொழிப் புலவர் டாக்டர் மீனாட்சி சுந்தரனார், டாக்டர் மு.வரதராசனார், கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியோர் இடம் பெற்றிருந்தனர். அக்குழு, பெரியார் கையாண்ட எழுத்துச் சீர்திருத்தங்களை ஆதரித்துப் பரிந்துரைத்தது. அரசு அப் பரிந்துரைகளைப் பார்த்து ஆணையிடுவதற்கு முன், அமைச்சரவையில் மாறுதல் ஏற்பட்டது. புதிய அமைச்சரவை, இதைப்பற்றி முடிவெடுக்காமல், காலங் கடத்திவிட்டது. இப்படி இருபத்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. இதற்கிடையே தமிழகப் புலவர் குழு, பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்தது. பின்னர், தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவதென்று மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் பாராட்டுதலைப் பெற்றது. விழாக்களைத் திட்டமிட ஓர் உயர்மட்டக் குழுவொன்று டாக்டர் நெடுஞ்செழியன் தலைமையில் நியமிக்கப்பட்டது. அக்குழு, விழாக் கொண்டாட்டங்களுக்கு அப்பால், நிலையாக நிற்கக்கூடிய, பெரியாருக்கு உடன்பாடான, சில ஆலோசனைகளைக் கூறிற்று. அதில் ஒன்று, பெரியார் கையாண்ட தமிழ் எழுத்து முறையைப் பின்பற்றுவது என்பதாகும். ஒருமனதாகக் கூறப்பட்ட இப்பரிந்துரையைத் தமிழகஅரசு உடனடியாகக் கவனித்து, ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பித்தது, போற்றத்தக்கதாகும். பெரியார் கையாண்ட எழுத்து முறைகளில் ‘ஐ’ என்பதை ‘அய்’ என்றும், ‘ஔ’ என்பதை ‘அவ்’ என்றும் எழுதுவதும் அடங்கும். மேற்படி அரசு ஆணைக்குப் பிறகு இதைப்பற்றிச் சிலர் சலசலப்பை எழுப்பினார்கள். அரசின் சார்பில் மறுபரிசீலனை செய்வதாக அறிவிக்கப்பட்டது. ‘ஐ’, ‘ஔ’ என்பவை ஓரொலி எழுத்துகள் அல்ல, ஈரொலிகள் சேர்ந்தவை. அவற்றைப் பெரியார் கையாண்டபடியே இனிக் கையாளுவதில் குறையேதும் வந்துவிடாது. முதலில் அரசு இட்ட ஆணைப்படியே செயல்படலாம்.  பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அவருடைய புரட்சிகரமான சிந்தனையின் வெற்றிக்குச் சான்றாக விளங்குவதோடு, தமிழ் அச்சுக்கும், தட்டச்சுக்கும் உதவியாக அமையும் என்பது உறுதி. பெண்களின் திருமண வயது பெண்களின் திருமண வயது 16-க்கு மேற்பட்டிருக்க வேண்டுமென்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் முடிவு செய்தபோது, புருவங்களை நெறித்தார்கள்; வசைமாரி பொழிந்தார்கள். இன்று இது சட்டமாகிவிட்டது. நடை முறையில், எண்ணற்ற பெண்கள், பதினெட்டு இருபது வயது வரை திருமணம் செய்து கொள்ளாதிருக்கிறார்கள். பழைய காலத்தில், இது ஓயாத பேச்சுக்கு இடமாகும். இப்போது அப்படியில்லை. ஒவ்வொரு சுயமரியாதை மாநாட்டிலும் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. அதுவும் பலித்துவிட்டது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான சொத்துரிமை என்னும் கொள்கை சட்டமாகிவிட்டது. பழையகாலம் போல், மூன்றுநாள் திருமணம் தேடினாலும் கிடைக்காது. பெரும்பாலான திருமணங்கள் ஒன்றரை நாள் திருமணங்களாகி உள்ளன. புரோகிதம் நீங்கிய திருமணங்கள் ஒரு வேளைத் திருமணங்களாகி உள்ளன. இதில் மேலும் செலவுக் குறைப்புக்கும் காலச் சிக்கனத்திற்கும் இடம் இருக்கிறது. இத்தகைய சீர்திருத்தங்களை இளைஞர்கள் போதிய துணிவோடு முன்னிலும் அதிகமாக நடைமுறைப்படுத்துவார்களாக. குடும்பக் கட்டுப்பாடும் கடவுள் மறுப்பும் ‘அளவான குடும்பம் வளமான வாழ்வு’ என்னும் கொள்கையைத் தென்னகத்துப் பொது மக்களிடையே பரப்பிய முன்னோடி தந்தை பெரியார் ஆவார். அப்போது கிண்டல் செய்தவர்களே ஆட்சியாளராக மாறியபோது, அதைத் தீவிரமாகச் செயல்படுத்த முனைந்தது பெரியாரின் மற்றோர் கொள்கைக்கு வெற்றியாகும். வெவ்வேறு சமய நம்பிக்கை உடையவர்கள், நம்பிக்கையில்லாதவர்கள் ஆகிய அனைவருக்கும் பொதுவான அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றில் கடவுள் படங்கள் இருத்தலாகாது, பூசைகள் நிகழ்த்தலாகாது என்று பேரறிஞர் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது ஆணையிட்டார். பல பொது இடங்களில் இவ்வாணை செயல்படுத்தப்படவில்லை என்பது வருத்தமூட்டுவதாகும். பொதுக்கூட்டங்களின் தொடக்கத்திலாவது முடிவிலாவது அரசு வாழ்த்து, கடவுள் வணக்கம், தலைவர் வணக்கம் பாடக்கூடாதென்ற தன்மான இயக்க முடிவு, அவ்வியக்கத்திற்கு அப்பால் செயற்படவில்லை.  எத்தனையோ சிலை திருட்டுகள் வாரந்தோறும் வெளியாகின்றன. தமிழ்நாட்டு நாத்திகர் எவரும் எந்தச் சிலைத் திருட்டுக் குற்றத்திற்கும் ஆளாகவில்லை என்பது பெரியாருக்குப் பெருமை; பகுத்தறிவு இயக்கத்திற்குச் சிறப்பு; நாத்திகர்கள் மற்றவர்களைவிட ஒழுக்கச்சீலர்களாக, உண்மையாளர்களாக, நேர்மையாளர்களாக இருக்க வேண்டுமென்று, தந்தை பெரியார் கற்றுக்கொடுத்த பாடத்தைத் தன்மான இயக்கத்தவர்கள், கசடறக் கற்றுக்கொண்டார்கள்; கற்றபடி நிற்கிறார்கள் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. கடவுள் நம்பிக்கை கோயில் வழிபாடு, இவைகளைப் பொறுத்தமட்டில் இலட்சக்கணக்கானவர்கள் இந்நம்பிக்கையிலிருந்து விடுபட்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆயினும் கோடிக்கணக்கானவர்கள் சமயநம்பிக்கையை விட்டபாடில்லை. சிலை வணக்கத்தை ஒதுக்கியபாடில்லை. இவற்றிற்காக, பொருளையும் நேரத்தையும் சிந்தனையையும் பழையபடியே பாழாக்கி வருகிறார்கள். தாமே, நேரே, பொருள் படாடோபமின்றி, வழிபடும் அளவுக்குக்கூடப் பெரும்பாலான ஆத்திகர்கள், தெளிவோ, துணிவோ பெறவில்லை. ‘ஏட்டிக்குப் போட்டி’ மக்கள் பிரிவில் எங்கும் உள்ள மனநோயாகும். தமிழர்களுக்கோ இந்நோய் அளவுக்குமீறி செறிந்துள்ளது. எனவே, பலவேளை, தங்கக்கூரை, வெள்ளித்தேர் போன்ற தேவையற்ற ஆடம்பரங்களில், வழிபாட்டின் பேரால், திளைக்கிறார்கள். இது பெரியாருக்கோ அவரது கொள்கைக்கோ இழுக்கல்ல. தமிழர்களுடைய சிந்தனைப் போக்கிலுள்ள குறைபாடுதான். வெளிச்சத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக  சமுதாயத்திற்குத் தவறான வழிகாட்டும் ‘பெரியவர்களின்’ கோணல் புத்தி. சமதர்மத் திட்டம் 1932 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 28, 29 தேதிகளில் ஈரோட்டில் சுயமரியாதைத் தொண்டர்கள் கூட்டத்தைக் கூட்டி அதில் சமதர்மத் திட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றியதை முன்னரே கண்டோம். பொருளியல் அமைப்பை மாற்றும் கொள்கையைப் பெரியார் வீரமாகப் பரப்பி வந்தார். இரயில்வே துறை நாட்டுடைமையாக வேண்டுமென்பது பெரியார் தீட்டிய சமதர்மத் திட்டத்தின் ஓர் பகுதியாகும். அது பலித்துவிட்டது. சாலைப் போக்குவரத்துகள், நாட்டுடைமை ஆகவேண்டுமென்பது அத்திட்டத்தின் மற்றோர் கிளை. அதுவும் பெருமளவு பலித்துவிட்டது. கப்பல் போக்குவரத்து இனி நாட்டுடைமை ஆகவேண்டும். விமானப் போக்குவரத்து நாட்டுடைமையாகிவிட்டது எல்லோரும் அறிந்ததே. தொழில் துறைகள் போன்ற உற்பத்திச் சாதனங்களின் நிர்வாகத்தையும் அதன் இலாபத்தையும் தனிப்பட்ட மனிதர்கள் அடையாமலிருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசியல் அமைப்புகளின் வழியாகச் செய்ய வேண்டுமென்னும் பெரியாரின் சமதர்மத் திட்டத்தை நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டது. ஆனால், அதற்குப் பிறகு அக்கட்சிக்கு ஆளும் வாய்ப்பே கிட்டவில்லை. அறிஞர் அண்ணாவின் பாராட்டு ஈராண்டு காலம் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக விளங்கிய பேரறிஞர் அண்ணா, பெரியார் எனும் பகுத்தறிவுப் பல்கலைக்கழகத்தின் தலை மாணாக்கர் ஆவார். அவர் ‘விடுதலை வரலாறு’ என்ற நூலில் பெரியாரைப் படம் படித்துக் காட்டுகிறார். அது இதோ: ‘கல்லூரி காணாத கிழவர். காளைப் பருவம் முதல் கட்டுக்கடங்காத முரடர். அரசியல் நோக்கத்துக்கான முறையிலே, கட்சி அமைப்பு இருக்கவேண்டுமென்று அறியாத கிளர்ச்சிக்காரர். பொதுமக்கள் மனம் புண்படுமே; புண்பட்டவர்கள் கோபத்தால் பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டுமென்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர். அவர், யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுவர். யாரைக் காண வேண்டுமோ அதற்கேற்ற கோலம் வேண்டாமா என்ற யோசனை அற்றவர். தமிழ் ஆங்கிலத் தினசரிகளின் ஆதரவு இல்லாதவர். ஆரிய மதம், கடவுள் எனும் மூடமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடு வருமென்று எச்சரிக்கும் போக்கினரின் இசைக்குக் கட்டப்பட மறுப்பவர்…’ மேற்கூறியபடி பெரியாரின் ஆளுமையைக் காட்டிய அண்ணா , அவருடைய சாதனைகளைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘பெரியார், எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய செயல்களை இருபதே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார். “அய்ரோப்பா கண்டத்தை எடுத்துக்கொண்டால், நாட்டினுடைய விழிப்பினுக்கு

கம்பெனி டைரக்டரா? டிரில் மாஸ்டரா?

கம்பெனி டைரக்டரா? டிரில் மாஸ்டரா?

நடக்கலாம் வாங்க – பகுதி 5 ஒருவர் நடக்க ஆரம்பிக்கும்பொழுது நிறைய சுவாரஸ்யங்களை அடுக்கிக்கொண்டே போனால், அவர்களது கண்களுக்கு நாம் மை டியர் மார்த்தாண்டன் ஐடியா மணி, கவுண்டமணி போல் தெரிவோம். இங்கு சில பிரச்சினைகள் உள்ளன. அது போல் சில புரிதல்களும் தேவைப்படுகின்றன.  ஒரு பிரச்சினை குறித்து ஒரு அனுபவசாலியிடம் போய்க் கேட்கும்பொழுது, அவர் தன் அனுபவத்தின் வாயிலாகப் பாடம் நடத்துவார். அது பிரச்சினையோடு இருப்பவனுக்கு எட்டாத தூரம் ஆகிவிடும். அவரிடம் கேட்டதன் நோக்கம் என்ன? பிரச்சினை தீரவேண்டும் என்பதுதான். அப்படியென்றால் பிரச்சினை இருப்பவரின் பார்வையில் இருந்து பார்க்கவேண்டும்.  புதிதாக நடக்க இருப்பவர்களுக்கு எங்கெல்லாம் அலுப்பு ஏற்படலாம்? அதை எப்படிக் களையலாம்? என்று விவாதிப்பதே சுவாரஸ்யங்களை ஏற்படுத்த முதல் படி. காலையில் எழுவது சிலருக்கு முடியாத காரியமாக இருக்கலாம்.  உழைப்பாளி படத்தில் ரஜினி, “எனக்கு என் ட்ரஸ் வேணும்” என்று கடைக்காரரை பாடாய்ப் படுத்துவார். அதுபோல், காலையில் வேகமாக எழும்பினால்தான் நடப்பேன். இல்லாவிட்டால் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா” என்று கன்னம் தெறிக்க பக்கோடா சாப்பிடும் மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். நடப்பது என்று முடிவாகிவிட்டால் காலை, மாலை, மதியம், இரவு என்று எந்த நேரத்திலும் நடக்கலாம்.  எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் இருக்கிறார். இரவு நோயாளிகளைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப்போக இரவு 12 ஆகிறதாம். காலை எழ எட்டு ஆகிறதாம். ஒன்பது மணிக்கு மறுபடியும் நோயாளிகளைப் பார்க்க வருகிறார். கையில் ஸ்மார்ட் வாட்ச்சை அவரது மருமகள் கட்டிவிட்டிருக்கிறார். ஸ்டெப்ஸ் கவனிக்க ஆரம்பித்த பிறகு, அவர் சொல்கிறார், ” பழனிக்குமார், நடக்குறதுக்குனு எனக்கு தனி டைம் இல்ல. ஸோ, நோயாளிகளைப் பார்க்குற நேரத்துல நான் உட்காருறதே இல்ல. தூரமா நோயாளிகளை உட்காரவச்சுட்டு நானே போய்ப் பாக்குறேன். எனக்கு அது வசதியா இருக்கு. மதியம் 2 மணிக்குள்ள 2000 ஸ்டெப்ஸை முடிச்சிடறேன்” என்றார்.  எனக்குத் தெரிந்த ஒரு பிசினஸ் மேன் இருக்கிறார். காலை ஏழு மணிக்கெல்லாம் கல்லாவில் உட்கார்ந்துவிடுவார். மதியம் மூன்று மணிக்கு, கடையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து வருகிறார். வண்டி இல்லாமல் இல்லை, நடப்பதற்காக. 15000 ஸ்டெப்ஸ் எட்டவில்லை என்று இரவு பதினோரு மணிக்கு தோழர் கிருத்திகா தரன் இலக்கை எட்டும் நோக்கில்  நடந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார். “மனசு இருந்தால் மார்க்கபந்து” என்று சொல்லிச் சென்றிருக்கிறார் தோழர் க்ரேஸி மோகனார்.  * கூட நடப்பவர் வேகமாக/ மெதுவாக நடக்கிறார். இது ஒரு தனிப் பிரச்சினை. குழுவாய் சேர்ந்து நடக்க ஆரம்பிப்பார்கள். அது ஒருவகையில் புது வகையான ஊக்கத்தைத் தரலாம். ஆனால், சமயத்தில் அதுவே கூட்டத்தில் ஒருவருக்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். ‘நம்மால் வேகமாக நடக்க முடியவில்லை, நம்மால் இவர்களது வேகம் தடைபடுகிறதே, நம்மால் அவர்களுக்கு இவ்வளவு சுமை வேண்டுமா?’ என்று விக்கிரமன் படத்து ஹீரோ போல் ஏகப்பட்ட சென்டிமெண்ட் மூளைகளை வைத்துக்கொண்டு இருப்பதால் இப்படிலாம் யோசிப்பார்கள். நடைப் பயிற்சியில் ஒத்த சிந்தனையோடு நடக்கக்கூட ஆள் கிடைப்பார்கள், ஒத்த வேகத்தில் நடக்கும் ஆள் கிடைக்கமாட்டார்கள்.  எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. வெளிநாட்டுக்காரன் சேர்ந்தே இருந்தா உருப்புடுவான். ஆனா பாரு டூர் ங்குற பேர்ல தனித்தனியா சுத்துவான். இந்தியாக்காரன் தனியா இருந்தாத்தான் உருப்புடுவான். ஆனா பாரு, உச்சா போகக் கூட ஆள் கூப்ட்டு திரியுறான்” என்பார்கள். அது தான் உண்மை. நடக்க ஆசைப்படுபவர்கள் உடன் நடந்து வருபவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாவிட்டால் உங்கள் பயிற்சியை நிறுத்த முயலாதீர்கள். அவரவர்களின் வேகம், அவர்வர்களின் உடல் நிலையைப் பொறுத்தது. நீங்கள் உங்கள் உடல்நிலைக்கேற்றபடி வேகத்தை நிகழ்த்தலாம்.  * நடப்பதற்குத் தோதான இடம் இல்லை சின்னக் குழந்தைகளை முதல் நாள் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச்செல்லும் சில காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவர்களில் தர தரவென்று குழந்தைகளை இழுத்துச்செல்லும் பெற்றோர்களும் உண்டு. அப்படி மனதை நீங்கள் தயார்படுத்தி இழுத்துச்சென்றால் ஒழிய, இப்படி யோசிப்பவர்களால் நடக்க இயலாது.  ஒரு விசயம் தானாய் நடக்காது. நடத்தித்தான் ஆக வேண்டும் என்று எங்கள் துறையில் சொல்வார்கள். அதைத்தான் நடப்பதற்கும் சொல்கிறேன்.  இவை எல்லாம் பொதுப்புத்தியில் உள்ளுக்குள் இருக்கும் தடைகளாகச் சொல்கிறேன். இவற்றிலிருந்து வெளியே வந்தால்தான் நடப்பதில் சுவாரஸ்யங்களைக் கூட்டமுடியும். ‘முதலில் படுக்கையிலிருந்து வெளியே வா நண்பா, பிறகு நடக்க பாதை பிறக்கும்’ என்பது தான் ஸ்கெட்ச்சே. இப்பொழுது ஒரு வகையில் நடக்க சாலைக்கு வந்துவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இனி சுவாரஸ்யங்களை நீங்களே ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.  என்னுடைய அனுபவத்திலிருந்து அதைத் தொடர்கிறேன்.  11 வருடங்களுக்கு முன் என் கம்பெனியின் இயக்குனரிடம் முக்கியமான விசயங்கள் பேச அனுமதி கேட்டால், வேலை நேரத்தில் தொந்தரவு வேண்டாம் என்று காலையில் அவர் நடைப்பயிற்சி நேரத்தில் அழைப்பார். அவர் நடப்பார்.பல ஆண்டுகளாக வாக்கிங் செல்பவரின் வேகத்திற்கு என்னால் நடக்க முடியாது. கிட்டத்தட்ட அவருடன் நான் ஓடியிருக்கிறேன்.   “என்னங்க, நடக்க முடியலையா உங்க வயசுக்கு?” என்பார். ‘என்னடா, இந்த மனுஷன் இப்படி நடக்குறாரு!’ என்று வியந்திருக்கிறேன் . நான் ஆலோசனை செய்யப்போகும் விசயத்தைவிட அவருடன் ஓடுவதே எனக்குப் பெரும் சாதனையாய் இருந்தது. காலையில் மீட்டிங் என்ற பெயரில் டிஷ்கஷனா? இல்லை உடற்பயிற்சி ஆசிரியரின் ட்ரில்லா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் நான் நடைப் பயிற்சி செய்ய ஆசைப்பட்டபோது அதே இடத்தில் நடக்கச்செல்ல மனதில் ஒரு சங்கடம். ‘என் கூட நடக்க வா’ என்று அவர் அழைத்துவிட்டால், எப்படி அவர் வேகத்திற்கு ஈடுகொடுப்பது? என்று. அதற்காக சுவாரஸ்யமான ஒன்றைச் செய்தேன்.  சுவாரஸ்யங்களுக்காகக் காத்திருங்கள். இவை என் நடைக்குறிப்புகள். கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து

அழகு எங்கள் அடையளமல்ல

அழகு எங்கள் அடையளமல்ல

வேர்களாகும் விழுதுகள் 2 “டீச்சர்… டீச்சர்… இனிமேல் இவ  வீட்டுக்கு  ஓடி வந்தா மூஞ்சிலேயே ஆசிட்ட ஊத்துங்க” என்ற குரல் கேட்டு, குனிந்து எழுதிக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். ஐந்து வயதுப் பெண்ணைப் பிடித்து தர தரவென இழுத்து வந்த அந்த இளம் தாய்க்கு மிஞ்சிப் போனால் இருபத்தைந்து  வயதுக்குள்  தானிருக்கும். அந்தத் துறு துறு குட்டிப்பெண் என் வகுப்பு இல்லையென்றாலும், அரசுப் பள்ளிகளில் ஒரு வசதி உண்டு. பள்ளிக்கு ‘செட்’ ஆகும் வரை பிடிச்ச டீச்சர்களிடம் இருக்க ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதுண்டு. அப்படி என்னிடம் வந்த வாண்டு  அது. கிடைக்கும் இடைவேளைகளிலெல்லாம் வீட்டுக்கு ஓடி ஓடிப் போவதால், தன் தீப்பெட்டி ஒட்டும்  வேலை கெடுகிறதே என்ற கவலை தாய்க்கு. அது மட்டுமல்ல, “தலைச்சான் ஆம்பளப்புள்ள பொறந்தா நீ அமோகமா வருவ” என்று குறி கேட்டு வந்ததற்கு மாறாக, பெண்குழந்தை பிறந்ததால், தாய்க்கும் தகப்பனுக்கும் அந்தக் குழந்தை மேல் கோபம். அதை அவ்வப்போது வெளிப்படையாய்க் காட்டுவதுண்டு. ‘அதற்காக இப்படியெல்லாமா ஐந்து வயதுக் குழந்தையைத் திட்டுவார்கள்?’ ஆச்சர்யமாக இருந்தது.   உடலையும் மனதையும் சிதைக்கும் ஆசிட் கொடூரம் பற்றி இந்தப் பெண்ணுக்கு என்ன தெரியும்? திருமணமான இரண்டு வாரத்தில் ஓடும் இரயிலில் ஆசிட் அடிக்கப்பட்ட பிரயாக் சிங், சொந்த சகோதிரியால் ஆசிட் வீசப்பட்ட தௌலத்,வேலூர் குரிசிலாபட்டி பெண் காவலர் லட்சுமி அகர்வால், பெங்களூர் ஹசீனா இவர்களெல்லாம் ஆசிட்டின் தழும்புகளைத் தாங்கி துயரம் சுமப்பவர்கள். உயிரிழந்தவர்கள் பட்டியல் தனி. அவ்வளவு ஏன்? அரசியல் காரணங்களுக்காக பெண் ஐ.ஏ.எஸ். ஆட்சியர் மீதே ஆசிட் அடித்து  சாதனை படைத்ததுதானே தமிழகம்? அந்தக் கொடூரத்தை அனுபவித்தவர்கள் சொல்வார்கள், ஆசிட் தங்கள் கனவுகளை, தங்கள் மகிழ்ச்சியை எப்படி சிதைத்ததென்று?  இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 250 முதல் 300 அமில வீச்சுகள் என்ற பதிவு செய்யப்பட்ட  தரவுகளோடு, உலகின் முதலிடத்தில் நிற்கிறது இந்தியா. ஆனால் உண்மையில் நிகழ்வுகள் ஆயிரத்துக்கும் அதிகமாகவே இருக்கும் என்கிறது ஆசிட் சர்வைவர்ஸ் ட்ரஸ்ட் இன்டர்நேசனல் எனும் அமைப்பு. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட அமில வீச்சுகளுக்கான காரணம் காதலும் குடும்ப வன்முறையாகவுமே இருக்கும் அதே சமயத்தில், உலகெங்கிலும் ஆசிட் வீச்சால் பாதிக்கப் படுவோரில் 80 சதவீதம் பெண்களே என்பதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. இரு ஆண்களுக்கிடையே பிரச்சினை என்றாலும்கூட எங்கும்  அந்த வீட்டுப்  பெண்தானே  பழிவாங்கப்படுகிறாள்? ஆசிட் வீச்சுக்கு 10 வருடங்கள் வரை  சிறைத்தண்டனை உண்டு என்பதெல்லாம் இவர்களுக்கு பயத்தைத் தருவதில்லை. “எனக்கு கிடைக்கலேன்னா யாருக்கும் கிடைக்கக் கூடாது’   என்ற ஆணாதிக்க சிந்தனையின் பொருட்டே, தன் காதல் மறுக்கப்படும்போது, எந்த அழகால் ஈர்க்கப்பட்டானோ அந்த  அழகை அழிப்பதன் மூலம் தன் ஆண்மையை நிறுவ முயற்சிக்கிறான் ஆண்.   பெண்களைச்சிதைக்கும் குற்றவாளிகளின்  வாழ்க்கை சில வருட  சிறைத்தண்டனைக்குப் பிறகு இயல்பு வாழ்விற்கு திரும்பிவிட, அமில வீச்சுகளுக்கு ஆளாகும் பெண்கள்,  வாழ்க்கை முழுவதும் வலிகளுடன்   வடுக்களையும் அவமானங்களையும் சுமந்து கொண்டே வாழ்வை நகர்த்த வேண்டியுள்ளது.   தமிழில் வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற திரைப்படம் ஆசிட் வீச்சால் ஒரு பெண் படும் துயரை, வலியை மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருந்தது. வழக்கம்போல பணக்காரக் குற்றவாளியை மறைக்க, ஒரு ஏழைப் பையனை பகடைக்காயாக்கி செய்யும் சித்தரவதையையும்  பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான நீதி மறுக்கப்படுவதையும் அழுத்தமாகக் காட்டியது. இறுதிக்காட்சியில் அதுவரை  தழும்புகளை மறைத்து வந்த பெண்,  தன் முகம் காட்டி தனக்கு அநீதி இழைத்த காவலர் மீது அதே ஆசிட் ஊற்றுவதாக முடிவடையும். ஆனால் ஆசிட்டுக்கு ஆசிட் தீர்வல்ல என்பதுதான் நியதியென்றாலும் கூட அந்தப் பெண்ணின் வலியை நமக்கு உணர்த்துவதற்காக இந்த முடிவை இயக்குநர் பாலாஜி சக்திவேல் அமைத்திருக்கலாம்.  இதுபோன்று, தன் மீது விழுந்த ஆசிட் அபிசேகத்தால் சாவின் விளிம்பு தொட்டுத் திரும்பியவள், சற்றும் துவண்டுவிடாமல் தன் போன்ற பெண்களுக்கான விடியலுக்கு துவக்கவுரை எழுதியிருக்கிறாள் ஒரு பெண். இல்லையில்லை, ஒரு குழந்தை. 17.11.1994 அரபிக் கடலோரம் மும்பையில் அந்த அழகுப்  பிஞ்சு இப்பூமிக்கு வந்தநாள். அன்மோல் ரோட்ரிக்ஸ் என்ற பெயருடன். இந்தக் கொடூர உலகையும், மனிதர்களையும் அறியாத, பிறந்து 60 நாட்களேயான அக் குழந்தை பெருஞ்சிரிப்புடன் தாயின் மார்புகளில் புதைந்து தன் பசி தீர்த்துக் பொண்டிருந்தது. பெற்ற தகப்பனே தன்னை கொல்லத் துணிவான்  என அந்த குழந்தைக்குத்  தெரியவில்லை பாவம். தன் குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறப்பதற்கு தன்னுடைய குரோமோசோம்களே காரணம் என்பதை அறியாது மனைவிகளைக் குற்றவாளியாக்கும்  இலட்சக்கணக்கானோரில் ஒருவன் அக் குழந்தையின் தகப்பன். தான் விரும்பாத  பெண்குழந்தையை, தாயுடன் சேர்த்துக் கொன்றுவிடும் நோக்கில், ஒரு கேன் ஆசிட்டுடன் வந்தான். வந்த வேலையை முடித்தான். சலனமின்றித் திரும்பி நடந்தான்.  பச்சிளம் குழந்தை துடியாய்த் துடித்தது. தாய்க்கு முகம், உடலெங்கும் எரிந்து, சிதைந்தது. அன்மோலின் ஒரு கண் சிதைய முகம், உடலைங்கும் கொடூரக் காயங்கள். முழுவதும் சிதைந்த தாய் மரணிக்க, தந்தை சிறைக்குச் செல்ல குழந்தை உடல் முழுக்கக் காயங்களுடன், ஒரு கண்ணை இழந்து உயிர்பிழைத்தது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா தெரியவில்லை.  அடுத்த ஐந்து வருடங்கள் மருத்துவர்களும், செவிலியர்களும்  அக் குழந்தையைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டனர். பற்பல அறுவை சிகிச்சைகள், பராமரிப்பு என அத்தனை செலவுகளையும் ஏற்று அந்தப் பூவைத் தாங்கிக் கொண்டனர். தன் கோர முகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாததால்  அன்மோல் இயல்பாகவே வளர்ந்தாள். சிகிச்சைகளின் வலியைத் தாங்கிக் கொண்டாள். ஐந்து வயதான அன்மோலை ஸ்ரீ மானவ் சேவா சங் என்ற ஆதரவற்றோர் மையத்தில்  சேர்ப்பித்தனர்.  அங்கும் அன்பும், கவனிப்பும் அதிகமாகவே கிடைத்தது. ஆனால், இவரது தழும்பேறிய முகம் கண்டு பயந்த  பிற குழந்தைகள் மற்றும் மும்பை SNDT பல்கலைக் கழகத்தில் சந்தித்த விரும்பத்தகாத பார்வைகளைப் புன்னகையுடன் எதிர்கொண்டே, கடினமான பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களைக் கடக்க நேரிட்டது. சாப்ட்வேர் டெவலப்பராக முதன் முதலில் பணியேற்றபோது, வாழ்வை வென்றுவிட்டதாகவே அவருக்குத் தோன்றியது. ஆனால் அழகை முகத்திலும் நிறத்திலும் உடல் அளவுகளிலும் தேடிக் கொண்டிருக்கும் சமூகம்,   அவரின்  சிதைந்த முகத்துடன் தினம் தினம் பயணிக்க விரும்பாததை உணர்ந்து பணியை உதறினார்.  வேலை தேடிச் செல்லுமிடமெங்கும்  நிராகரிப்பே பரிசாகக் கிடைத்தது.  ஆனாலும் சோர்ந்து அமர்ந்துவிடவில்லை. சக ஊழியர்கள் வெறுத்த, அருவெறுத்த தன் முகத்தை உலகுக்குக் காட்ட விரும்பியவர், நிதானமாக யோசித்தார். இந்த முகம்தான் என் அடையாளம், இந்தச் சிதைந்த முகத்துடன் உலகை எதிர்கொள்வேன் என உறுதி எடுத்தார். அவரது தன்னம்பிக்கை   தனக்கான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவியது. இயல்பிலேயே அழகாக உடுத்துவதும் புதுப்புது நாகரிக அணிகலன்கள் அணிவதும் அன்மோலுக்கு  விருப்பமான ஒன்று. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இவரது ஸ்டைலும்  தன்னை நேர்த்தியாகக் காட்டிக் கொள்வதில் காட்டிய அக்கறையும் பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்திருந்தது.  எனவே ஃபேஸ்புக்கில் தன்னுடைய படங்களைத் தொடர்ந்து  பதிவிட, அவருடைய நேர்மறையான  குணங்களும் தன்னம்பிக்கையும் நேர்த்தியான உடையலங்காரமும் நவீன பேஷன்  குறித்த ஆர்வமும் அனைவரையும் கவர்ந்தது. அவரை நோக்கி புகைப்படக்காரர்கள் படையெடுக்க, மிக உற்சாகமாக இன்ஸ்டாகிராம் நோக்கி நகர்ந்தார். இப்போது பாராட்டுகளுடன் ஆடையலங்கார வல்லுநர்களும் பெரிய பெரிய கம்பெனிகளும் இவரைக் கவனிக்கத் துவங்கினர்.  கோடக் மகேந்திரா ஈவன்ட்டில் ரன்வீர் சிங்குடனான ஓர் உரையாடலுக்குப் பிறகு,  நூற்றுக்கணக்கான மாடலிங் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  இன்ஸ்டாகிராமில் 232000 பேர் இவரைப் பின் தொடர, சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிகுந்தவராகத் திகழ்கிறார்.  நூற்றுக்கணக்கான பேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறார்.  ஷப்னா ஆஸ்மியுடன் இணைந்து ஆன்டி ஜி என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலமாக, நடிகையாகப் புதுப் பரிமாணம் எடுத்துள்ளதோடு அப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் கேஸ்ட்ரி திரைப்பட விழாவில் 2018-ல்  பெற்றுள்ளார். தன்னை வெறுத்தவர்களை, ஒதுக்கியவர்களைக் கண்டு மூலையில் அமர்ந்து விடாமல், தனக்குப் பிடித்த துறையில் புயலாய் நுழைந்து, தனக்கென ஒரு அடையாளத்தைப்  பதிவு செய்துள்ள அன்மோல், பொது வாழ்க்கையிலிருந்து தன்னை மறைத்து வாழும், ஆசிட்டால் முகம் சிதைந்த பெண்களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையோடு தலை நிமிர்ந்து நிற்கிறார்.   தான் உயர்ந்ததோடு மட்டுமல்ல, தன்னைப்போன்ற பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு ‘ஆசிட் சர்வைவர் சகாஸ் பவுண்டேசன்’ என்ற தொண்டு நிறுவனம் வாயிலாக,  உளவியல் ஆலோசனைகளும் வாழ்வியலுக்கான உதவிகளும் செய்து  வருகிறார். அவர்களை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வதையே  இந்நிறுவனம்  நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை 20 பெண்களுக்குப் புது வாழ்வை அளித்திருக்கிறார். தூக்கியெறியப்படும் தருணங்களில்தான் பெண்கள் தங்கள் சிறகுகளை விரிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆம், பெண் குழந்தை வேண்டாம் என  பெற்ற தகப்பனால் சாவின் விளிம்பைத் தொட்டு மீண்ட அன்மோல், வெளித்தோற்றம் கண்டு சமூகத்தால் வெறுத்து  ஒதுக்கப்பட்ட அன்மோல் இன்று பேஷனுக்கான  குறியீடாகத் தன்னைச் செதுக்கிக் கொண்டுள்ளார்.  “வாழ்க்கை என்பது ஆசிட்டுடன் முடிந்து விடுவதில்லை. அமிலம் எங்களின் முகத்தை மாற்றலாம். ஆனால் எங்களது  ஆன்மாவை அழிக்க முடியாது. உங்களது அநுதாபமும் பச்சாதாபமும் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே எங்களை எங்களை ஏற்றுக்கொள்வது மட்டுமே நீங்கள் எங்களுக்குச் செய்யும் உதவி” எனக் கூறும் அன்மோல், இன்று உலகெங்கும்  வாழும் பெண்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பலருக்கும் மீட்பராக இருக்கிறார். பெண்ணை அழகுசார் அடையாளமாகவே பார்க்கிறது இச்சமூகம். அழகியல் சார்ந்த விஷயங்களால் அவளை ஆராதித்து, அழகு நோக்கியே வழிநடத்தி, வேறு எச்சிந்தனையுமின்றி பெண்ணை எளிதாய் வீழ்த்த  எத்தனிக்கிறது. நீண்ட முடியழகு, சிவந்த நிறமழகு, வடுக்களில்லா முகமழகு, எல்லாவற்றிற்கும் மேலாக மென்மையே பெண்மைக்கழகு என்று நம்ப வைக்கிறது.     அழகோடிருந்தால் மட்டுமே நீ ஜெயிக்க முடியும், முகத்தில் பருக்களுடைய பெண்ணோ, கருமை நிறமுடைய பெண்ணோ தங்கள் நிறுவன முகப் பூச்சுகளின்றி வாழ்வில் வெற்றி கொள்ள முடியாது என்று விளம்பரங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்களும் மூளைச் சலவை செய்துகொண்டிருக்க, உடல் முழுக்க வடுக்களுடன் ஒரு கண் பார்வையின்றி தன் தன்னம்பிக்கையின் மூலம்  வாழ்வை வென்றிருக்கும் அன்மோல், பெரும் சமுதாய மாற்றத்திற்கான முதல் விடியல். பார்வையைச் செலுத்துவோம் வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து 

புரட்சியாளர் பெரியார் (2)

புரட்சியாளர் பெரியார் (2)

பெரியார் பக்கம் 20 இக்கட்டுரையின் முந்தைய பகுதியை இங்கே வாசிக்கலாம். https://naarkaram.com/pp3301/ தாழ்த்தப்பட்டவர் வாழ்வில் மறுவாழ்வு கீழ்வெண்மணி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர் ஆகிய ஊர்கள் ஆதிதிராவிடர்களுக்கு இழைத்த கொடுமைகள் வேதனையின் நினைவாலயங்களாகக் காட்சியளித்தாலும் இன்று ஆதிதிராவிடர்களைக் கட்டிவைத்து, அடித்து, சாணிப்பால் ஊற்றமுடியாது. பேருந்துகளில், இரயில்வண்டிகளில், எட்டி உட்காரு என்று எவரையும் நாட்டுப்புறங்களில்கூடச் சொல்லமுடியாது. சிற்றூர்களிலும் உள்ளூர்களிலேயே ஆதிதிராவிட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மேட்டுக்குடி மாணவர்கள், அவர்களைக் கண்டால், எழுந்து நின்று, ‘வணக்கம் அய்யா’ என்று கும்பிடும் நிலை பெரும்பாலான ஊர்களில் உருவாகிவிட்டது.  நீதியரசர் அ. வரதராஜன், உச்சநீதிமன்றத்தின் முதல் பட்டியல் இன நீதிபதி நீதிமன்றங்களில் உயர்நீதிமன்றம் உட்பட ஆதிதிராவிட நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர்; பெரியாரின் தொண்டு அந்த அளவுக்கு வெற்றி கண்டுள்ளது. அந்த நீதிபதிகளை உயர் சாதி இந்துக்கள் பார்ப்பனர்கள் உள்பட ‘மை லார்ட்’ (My Lord) அல்லது ‘யுவர் ஆனர்’ (Your Honour) என்று அழைப்பதைப் பார்க்கின்றோம். எத்தனையோ ஊர்களில், ஊராட்சித் தலைவர்களாக ஆதிதிராவிடர்கள் இருக்கிறார்கள். ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை ஆதிதிராவிடர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது.  சாதிப் பெயர் மறைவு சாதிக் குறிகளைப் போட்டுக்கொள்ளக்கூடாதென்று முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு தொடக்கத்தில் கிண்டலும் ஏளனச் சிரிப்பும் பரிசாகக் கிடைத்தன. ஆனால் கால ஓட்டத்தில் அம்முடிவு நடைமுறையாகி விட்டது. வெறும் சந்தானமாக, ஈசுவரனாக, சிவச்சைலமாக, பக்தவத்சலமாக, நடராசனாக, சாமிநாதனாக, மகாராசமாக, சோமசுந்தரமாகப் பெயரை மடக்கிக் கொள்வதே இக்கால நாகரீகம். துண்டு போட்டுக்கொண்டு நாயனம் வாசிக்கக்கூடாதென்று சிவக்கொழுந்துவுக்கு கானாக்காத்தான் ஆணையிட, அதை எதிர்த்துத் தன்மான இயக்கத்தின் பீரங்கி அஞ்சாநெஞ்சம் அழகிரிசாமி போராடிய நிலையிலிருந்து எவ்வளவு தொலைவுக்கு முன்னேறி விட்டோம்! 1971 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் சென்னையில் நடந்த தமிழ் இசை விழாவில், தொடக்க நாளன்று, மேடையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த அய்வரில் செட்டிநாட்டு அரசர், ஆளுனர் K.K.ஷா தவிர, மற்ற மூவரும் கலைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நாயனக் கலைஞர் வீராசாமி, நட்டுவக் கலைஞர் வழுவூர் ராமையா, இசைக் கலைஞர் மதுரை சோமு ஆவார்கள். அம்மூவரும் பளபளக்கும் சொக்காய் போட்டிருந்தார்கள்; அழகிய நீண்ட மேல் துண்டு அணிந்திருந்தார்கள். இவற்றையெல்லாம்விட மேலான பெருமை ஒன்றை உணர்ந்தேன். இம்மூவரில் எவரும் நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு அரசருக்கு, ஆளுனருக்குச் சமமாக உட்காரலாமா என்று சங்கடப்படவில்லை. அத்தகைய சிறப்புக்கே பிறந்தவர்கள்போல், தன்னம்பிக்கையோடு, அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். இதுதானே பெரியாரின் வெற்றி?!  நட்டுவக் கலைஞர் வழுவூர் ராமையா, இசைக் கலைஞர் மதுரை சோமு எதிர்க்கருத்து கொண்டோரும் புறந்தள்ள முடியாதது சுயமரியாதை இயக்கம். இயக்கத்தைச் சாடிக்கொண்டிருந்த ஒருவரின் வாயால் சுயமரியாதை இயக்கத்தின் சாதனை உளமாரப் பாராட்டப்பட்டதை நான் நேரில் கேட்டு மகிழும் பேறுபெற்றேன். பெரியார் ஆதரித்த நீதிக்கட்சியைச் சாடுவதையே காங்கிரசுத் தொண்டாகக் கொண்டிருந்த மூத்த தியாகி ஒருவரின் படப்பிடிப்பு இப்போது நினைவிற்கு வருகிறது. திரு.மீ.பக்தவத்சலம் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இருந்த காலம். நான், தமிழ்நாட்டின் பொதுக்கல்வி இயக்குநராக இருந்தேன். அலுவல் பற்றி, கல்வி அமைச்சரைக் காண, அவர் இல்லத்திற்குச் சென்றேன். வரவேற்பு அறையில் பலர் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னிலும் மூத்தவர். தமிழ்நாட்டு காங்கிரசு வட்டாரத்தில் பெரிய புள்ளி. நான் உள்ளே வருவதைக் கண்டதும் அவர் எழுந்து, முன்னே வந்து, என் கையைப் பிடித்துக் குலுக்கினார்.  ‘நன்றாக இருக்கிறீர்களா?’ என்று நான் அவரைக் கேட்டேன். பொங்கும் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல், ‘மிக நன்றாயிருக்கிறேன். ஒரு குறையும் இல்லை. மகாத்மா காந்தி புண்ணியத்தில், நாட்டுக்கிருந்த இழிவு போயிற்று. பெரியார் எங்கள் கோவை செங்குந்தர் (இசை வேளாளர்) சாதிக்கு இருந்த இழிவைப் போக்கிவிட்டார். அதில் உங்களுக்கும் பங்கு உண்டு அது பற்றித்தான் உங்களிடம் எனக்குப் பற்று. இரண்டு இழிவுகளும் துடைக்கப்பட்டுவிட்டதை எண்ணி மகிழ்ச்சியோடு வாழ்கிறேன் என்றார். இருவர் கண்களிலும் மகிழ்ச்சிக் கண்ணீர் துளிகள் கரைகட்டின. கோவை சி.பி.சுப்பய்யா இப்படிப் பாரட்டியபோது, நான் பெரியார் கொள்கையாளனாக வாழ்வதைப் பற்றிப் பரவசமானேன்.  அரசியல் சூழலில் மாற்றம் பெரியாரின் வாழ்நாள் போராட்டம் சமுதாய மாற்றத்தோடு நிற்கவில்லை; அரசியல் சூழ்நிலையையே மாற்றிவிட்டது. ஏழைப் பங்காளர் காமராசரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழ்நாட்டில் முதல் அமைச்சர்களாக விளங்கிய சமுதாய நிலையை உருவாக்கியது, பெரியாரின் சமுதாயப் புரட்சி வெற்றி பெற்றதற்கு அடையாளம். திராவிடப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களும் அதை மதிக்கிறவர்களும்தான் தமிழ்நாட்டை ஆளமுடியும் என்னும் நிலை உருவாகியுள்ளது. இது பெரியார் அளித்த கொடையாகும்.  1925இல் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் காஞ்சி மாநில மாநாட்டில் வாதிப்பதற்கும் விடவில்லை. ஆனால் அதே காங்கிரசின் சார்பில் காமராசர் அமைச்சரவை அவ்வகுப்புரிமையைக் கருத்திற்கொண்டு செயல்பட்டது. எல்லாப் பகுதியினருக்கும் கல்வி நிலையங்களில், அரசுப் பதவிகளில் உரிய பங்கு கிடைக்கும்படி பார்த்துக்கொண்டது. ஆகவே, வகுப்புரிமை பற்றிய பெரியாரின் கொள்கை வென்றது, பெரியார் வென்றார். இலவசக் கல்வி பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் அவர்களுக்குச் சமமாகக் கல்வி அறிவு பெறவேண்டுமென்று கனவிலும் நனவிலும் பெரியார் நினைத்து வந்தார். அக்கொள்கையும் வெற்றி பெற்றதைக் கண்டோம். நம் மக்கள் உள்ளங்களையும் சமுதாயச் சூழ்நிலையையும் ‘எல்லார்க்கும் கல்வி’ என்னும் கொள்கைக்கேற்பப் பண்படுத்தி வந்தார், தந்தை பெரியார். உழுது பரம்படித்து வைத்திருந்த தமிழ்நாட்டு வயல்களில், கல்விப் பயிரைச் செழிக்க வைத்தார், கர்மவீரர் காமராசர். பகல் உணவு என்னும் நீரைப் பாய்ச்சினார்; இலவசக் கல்வி என்னும் உரத்தையிட்டார்; சீருடை என்னும் களையெடுப்பைச் செய்தார். எல்லாச் சாதிப் பையன்களும் பெண்களும் படிக்கப்போனார்கள்; முன்னர்க் காணாத அக்கறையோடு படித்தார்கள். நன்றாகத் தேர்ச்சி பெறவும் தலைப்பட்டார்கள். இவ்வளர்ச்சி பொதுக் கல்வியோடு, பள்ளிக் கல்வியோடு நிற்கவில்லை. கல்லூரிக் கல்விக்கும் தொழில் கல்விக்கும் பரவிற்று.  பள்ளி இறுதிவரை இருந்துவந்த இலவசக்கல்வி முறையை 1969இல் புகுமுக வகுப்பிற்கும் விரிவுபடுத்தி அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆணையிட்டார். இது ஏழைகளின் மேல்படிப்பிற்குத் தூண்டுகோலாயிற்று. முன்னர், மேல்சாதிக்காரர்களே அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அலுவல் பற்றி போவார்கள். இப்போது பல சாதிக்காரர்களும் பிற நாடுகளில் பணிபுரிகிறார்கள். இன்று தமிழ்நாட்டில் வடமொழி கற்பிக்கும் பள்ளிகள் கல்லூரிகள் நீங்கிய மற்ற எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஒடுக்கப்பட்டவர்கள் படிப்பதைக் காணலாம். வடநாட்டில் எதிரொலி இன்றைக்கும் பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பின்தங்கிய வகுப்பாருக்கு நூற்றுக்கு இருபது இடங்களைக் கல்லூரிப் படிப்பிலும் வேலை வாய்ப்புகளிலும் ஒதுக்க முனையும்போது சொல்லி முடியாத கலவரங்கள் நடக்கக் காண்கிறோம். இங்கோ அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பே, வகுப்புரிமை விரிந்த அளவில் செயல்பட்டது. புதிய அரசியல் சட்டம் அதை ஓரளவு முடமாக்கியது. இருப்பினும் பெரியார் கிளர்ச்சி செய்து, பின்தங்கியவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யலாம் என்னும் திருத்தத்தைக் கொண்டுவரச் செய்து வெற்றி கண்டார். உயர் கல்வியில் முன்னேற்றம் அதன் விளைவாக, தொழிற் கல்வியிலும் வேலைகளிலும் பின் தங்கியவர்களுக்கும் பெருமளவு நீதி வழங்க முடிந்தது. 1975ஆம் ஆண்டு எம்.ஏ., எம்.எஸ்ஸி., எம்.காம். சேர்க்கைகளில், தாழ்த்தப் பட்டவர்களும் பின்தங்கியவர்களும் சேர்ந்து மொத்தத்தில் நூற்றுக்கு எழுபது இடங்கள் போல் பிடிக்க முடிந்தது. பார்ப்பனர்களுக்குப் பத்துப்பதினைந்து விழுக்காடு கிடைத்திருக்கலாம். இந்தச் சமவாய்ப்புப் பெருக்கு பெரியாரின் இயக்கத்தின் பெரும்பயனாகும். ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் படிக்கவேண்டும் என்பது பெரியாரின் சூடுதணியாத கொள்கை. இன்னும் அந்நிலை கைகூடாவிட்டாலும் அதை நோக்கித் தமிழ்நாடு விரைகிறது. 1978ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளுக்காக 1055 பேர்களைப் பொறுக்கியெடுத்தார்கள். அந்தப் பட்டியலில் 196 பெண்கள் இருந்தார்கள். இன்னும் அய்ந்தாண்டுகளில் பெண்கள் எண்ணிக்கை உயர்ந்து மாணவர்களும் மாணவியர்களும் சமமாகி விடுவார்களென்று எதிர்பார்க்கலாம். பெண்களை ஆசிரியர் தொழிலுக்கும் மருத்துவத் தொழிலுக்கும் மட்டும் எடுப்பது போதாது. காவல்துறையிலும் இராணுவத்திலும் சேர்க்க வேண்டுமென்று 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த இரண்டாவது சுயமரியாதை பெண்கள் மாநாட்டில் முடிவு செய்தார்கள். தற்போது காவல்துறையில் பெண்களும் ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றுகின்றனர்.  கல்விமுறை, மாணாக்கரின் சிந்தனையைத் தூண்டுவதாக அமையவேண்டும் என்னும் திட்டம் இன்றும் இலட்சியமாகவே இருக்கிறது. இலக்கியப் பகுதி என்னும் பேரால், நாம் தலைமுறை தோறும் மூடநம்பிக்கைப் பகுதிகளை நுழைத்துக்கொண்டும் சொல்லிக் கொடுத்துக் கொண்டும் வருகிறோம். இம்முறையை மாற்றுவது வருங்காலத் தலைமுறையின் பொறுப்பாகும். இந்தி எதிர்ப்புக் கொள்கையில் பெரியார் இன்றுவரை வெற்றி பெற்று வந்துள்ளார். பள்ளிகளில் இந்திப் பாடம் எடுக்கப்பட்டுவிட்டது. நாளை என்ன ஆகும்? சமூகவியல், பொருளியல் முறைகளைப் புதிய கண்ணோட்டத்தோடு கண்டு, அவற்றை அடியோடு மாற்றி அமைக்க அரும்பாடுபட்ட பெரியார், மொழிபற்றியும் புதிய, புரட்சிகரமான கண்ணோட்டம் உடையவராக விளங்கினார். தமிழ் மொழி பற்றிய ஆய்வு கடவுள், சமயம் ஆகியவற்றிற்குப் புனிதத்தன்மை கற்பித்து வந்ததை வன்மையாகத் தாக்கிய பெரியார், நம் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு மரபுவழி கூறப்படும் புனிதத்தன்மையை எள்ளி நகையாடினார். அதே சமயம் தமிழ்மொழியின் சிறப்பையும் எடுத்துக்காட்டத் தவறியதில்லை. அவரது கூற்றுப்படி தமிழ், நம் நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டின் வேறெந்த மொழியையும்விடத் தமிழ் நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூயதமிழ் பேசுவதால் – மற்ற வேற்றுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்கவழக்கங்களுக்கேற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன்மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடு பயக்கும் கருத்துகள், நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன. தென்னாட்டு மொழிகளை ஒப்பிட்டுக் கூறும்போது, அவர் ‘என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நான்கு இடங்களில் நான்குவிதமாகப் பேசப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். தமிழ் மொழி வளர்ச்சிக்காக அதில் செய்யப்பட வேண்டிய சில சீர்திருத்தங்களைப்பற்றி நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தினார். ‘தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் கற்க மேலும் இலகுவாக்கப்பட வேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்கப்பட வேண்டும்.’ ஆகவே, பிறர் எளிதாகத் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளவும், எளிதாக அச்சுக்கோக்கவும், தட்டச்சு அடிக்கவும், தமிழ் எழுத்துகளை மாற்றவேண்டும் எனக் குறிப்பிட்டு, அதற்கு அடிப்படைக் காரணத்தையும் தெளிவுபடுத்தினார். ‘மொழி என்பது உலகப்போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக்

அற்புத விளக்கே கிடைத்தாலும்…

அற்புத விளக்கே கிடைத்தாலும்…

நடக்கலாம் வாங்க – பகுதி 4 சுவாரஸ்யங்களுடன்தான் நடக்கிறீர்களா?  நீங்கள் செய்யும் நடைப்பயிற்சி அலுக்கும்படி இருக்குமேயானால் உங்களால் அதைத் தொடர்ந்து செய்யமுடியாது. எந்த வேலையையும் ஆர்வம் இல்லாமல் செய்தீர்கள் என்றால் அதில் ஒன்ற முடியாது. நீங்கள் ஒரு வேலையில் ஒன்ற வேண்டும் என்றால் அதில் பல புதுமைகள் புகுத்தப்படவேண்டும். அதன் மூலம் நீங்களே சுவாரஸ்யங்களை ஏற்படுத்துவீர்கள். சுவாரஸ்யங்கள் இருக்குமேயானால் அங்கு ஆர்வம் ஏற்படும். உங்களது ஆரவம் உங்கள் நடைப்பயிற்சியில் இருக்க வேண்டுமேயானால், நீங்கள் மேற்கொள்ளும்  நடைப்பயிற்சியில் சுவாரஸ்யங்களைப் புகுத்துங்கள். சுவாரஸ்யங்களை எப்படியெல்லாம் புகுத்தலாம் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். சுவாரஸ்யங்களுக்கு  நீங்களே சில கேள்விகளைக் கேட்கலாம். உதாரணத்திற்கு,  * நடப்பதற்காக ஒதுக்கும் நேரத்தில் நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா? * வாக்கிங் நேரத்திற்கு என்று உங்களது தனிமையையோ அல்லது உடன் நடப்பதற்கென்று சில நடக்கும் நண்பர்களையோ வைத்திருக்கிறீர்களா? * நீங்கள் நடப்பதன் காரணத்தை அறிந்திருக்கிறீர்களா? * அப்படி அறிந்திருந்தால் அந்தக் காரணத்தை நோக்கி நீங்கள் எவ்வளவு நகர்ந்திருக்கிறீர்கள் என்று கவனிக்கிறீர்களா? *உங்களுடைய நடையின் வேகம், நடக்கும் தூரம் இவற்றைக் கணித்து வாரத்திற்கு ஒரு முறை உங்களுடைய உச்சபட்ச வேகம் எது, அதிகபட்ச தூரம் எது  என்று கணக்கிட்டிருக்கிறீர்களா? * நீங்கள் நடக்கும் வேகம், தூரம் இவற்றிற்கும் உங்கள் உடல் நலத்திற்கும் நேரடித்தொடர்பு உள்ளதா என்று கவனித்திருக்கிறீர்களா? அதாவது, உங்கள் உடல் நலனுக்குத் தேவையான அளவு கலோரிகள் சரியான முறையில் எரிக்கப்படுகிறதா? அல்லது அது உங்களது comfort zone க்கு வெளியே இருக்கிறதா? *நீங்கள் நடக்க ஆரம்பிக்கும் நேரம் மற்றும் நடையை முடிக்கும் நேரம் இவற்றுடன் உங்களது வேகத்தை ஒப்பிட்டு எத்தனை அடிகள் நடந்திருப்பீர்கள் என்று கணிக்க முடிகிறதா? * ஒவ்வொருநாளும் நடைப்பயிற்சி முடிவில் உங்கள் உடலில் ஏற்படும் புத்துணர்வுகளையோ அல்லது அயற்சிகளையோ பிரித்தறிய முடிகிறதா? * நீங்கள் புதிதாக நடக்க ஆரம்பித்த நேரத்தில் இருந்த தூர – நேர விகிதத்திற்கும் ,நடக்க ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இருக்கும் தூர நேர விகிதத்திற்கும் வேறுபாடு உள்ளதா?  * நீங்கள் நடந்த தூரத்தையும் வேகத்தையும் உங்களுடன் நடப்பவர்களுடனோ, நடைப்பயிற்சி செய்யும் மற்றவர்களுடனோ கலந்துரையாடி அவர்களது தூரத்தையும் வேகத்தையும் ஒப்பிட்டு அறிந்திருக்கிறீர்களா?  * உங்கள் உடல் எடையை எவ்வளவு குறைக்கவேண்டும் என்ற இலக்கோடு, நீங்கள் நடக்கும் வேகம் ஒத்துப்போகிறதா? இது போன்ற கேள்விகள் மட்டுமல்லாது, உங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகளும் உங்களுக்குள் எழலாம்.  நான் நடக்கும் வாக்கர்ஸ் க்ளப்பில் நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளான ஒரு பெண் வந்துகொண்டிருந்தார். அவரால் ஒரு அடியை எடுத்து வைக்கவே அவரது கணவரோ அல்லது அவரது மகனோ உடன் இருக்க வேண்டும். ஒரு கிலோமீட்டர் சுற்றி வர அவருக்கு ஒரு மணி நேரம்கூட ஆகும். ஆனால், அவர் தளராமல் தினம் நடந்தார். ஒரு மாதத்தில் தனியாக நடந்தார். அடுத்த மாதத்தில் அவரது வேகம் கூடியது. ஒரு வருடத்தில் அவர் தனியாக இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார். அவரது உடல்நிலையால் எவ்வளவு முடியும் என்று அவரோ அவரது மருத்துவரோ கணித்து அதை நோக்கி நகர்கிறார். ‘நடந்தாக வேண்டும்’ என்ற கட்டாயம் வரும்பொழுது அவர் அதைச் செய்கிறார்.  இங்கு யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், இலக்கு உங்களைக் கட்டாயப்படுத்த வேண்டும்.  இத்தனைக் கேள்விகள் கேட்கவேண்டுமா? இப்படித்தான் சுவாரஸ்யங்கள் பிறக்குமா என்று யோசிப்பீர்கள்தானே? எனக்குத் தெரிந்த ஓர் உறவினர் சங்கரன் கோவிலில் உண்டு. வயிறு பெரிதாகிக்கொண்டே போனது. “எடை கூடுது மாப்ள. வயிறு எனக்கு முன்னாடி போய்க்கிட்டு இருக்கு. என்ன பண்ணலாம்?” என்று கேட்டார். அவரது மன நிலைக்கு, நேரடியாக டயட் என்றால் தெறித்துவிடுவார் என்பதால் மெதுவாக “வாக்கிங் போறீங்களா?” என்றேன்.  “எப்பவாவது போவேன்” என்றார். “தினமும் போங்க” என்றேன்.  அதற்குச் சொன்னார், “மாப்ள, சங்கரன் கோயில்ல தண்ணி எப்ப விடுறான்னே தெரியாது. சமயத்துல பத்து நாளைக்கு ஒருவாட்டிதான் தண்ணி விடுவான். அப்ப ஆபிஸ்க்கு லீவு போட்டுலாம் தண்ணி எடுப்பாய்ங்க. வீட்ல தண்ணி வரப்ப லீவு போடலாட்டி டைவர்ஸ் வரக்கூட போயிரும் தம்பி. அப்ப எப்டி வாக்கிங் போறது?” என்றார்.  உங்களுக்கு உங்கள் comfort zone க்கு உள்ளேயே இருக்க வேண்டும். ஆனால் உடல்நிலையும் நன்றாக இருக்க வேண்டும். ஊதவும் கூடாது. சிக்ஸ் பேக் வச்ச  சல்மான் கான் மாதிரி இருக்க வேண்டும் போன்ற மந்திரத்தில் மாங்காய் விழ வைக்கும் ஆசைகள் எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அற்புத விளக்கே கிடைத்தாலும் நீங்கள் அதைத் தேய்க்க வேண்டும்.  அது சரி, இத்தனை சுவாரஸ்யங்களைச் சொன்னால், ‘எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?’ என்று புதிதாய் நடக்க இருப்பவர்கள் யோசிக்க மாட்டார்களா? யோசித்தபடியே நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை படங்கள்: இணையத்திலிருந்து

வேர்களாகும் விழுதுகள்

வேர்களாகும் விழுதுகள்

டிங்டிங் டிங்டிங் டிங்டிங் மதிய உணவுக்கு மணியடித்த இரண்டாம் நிமிடம் பள்ளிக்கு வெகு அருகில் இருந்த ஆலமர விழுதில் தூரி ஆடிக்கொண்டிருந்தாள் என் மாணவி போதும் பொண்ணு. பெயரே அதுதான். நான்கு பெண் குழந்தைகளுக்குப்பின் ஐந்தாவதும் பெண்ணாக இவள் பிறக்க, அடுத்ததாவது ஆண் குழந்தை பிறக்கட்டும் என வைக்கப்பட்ட பெயர் ‘ போதும் பொண்ணு’. உலகை வென்ற மகிழ்ச்சியுடன் வேகவேகமாக சிரித்த முகத்துடன் அவள் தூரி ஆடுவதைப் பார்த்தபோது வறுமையால் குழந்தைத் தொழிலாளியான  கிராமத்து சிறுமி ஒருத்தி    “ஆலமர விழுதில நான்  தூளி கட்டி ஆடனும்” என  அவளது கனவுகளை வரிசைப்படுத்தும் பாடலொன்று நினைவிற்கு வந்தது. எனக்கும் அது போல விழுதைப் பிடித்துத் தொங்கவேண்டுமென்ற  நிறைவேறாத ஆசையொன்று இருக்கிறது. என் வகுப்பறையிலிருந்து பார்த்தால் ஐம்பதடி தூரத்தில் இருக்கிறது பரந்து விரிந்து இளம் மங்கைபோல் மலர்ந்திருக்கும் அந்த  ஆலமரம்.  மரங்களில் ஆலமரம் எப்போதுமே வசீகரிக்கும் தன்மை கொண்டது. வேர் போலவே தொங்கும் விழுதுகள் கொள்ளை அழகு. விழுதுகள் தாங்கிய ஆலமரத்தை எத்தனை பெரிய புயலும் எளிதாகச் சாய்த்து விட முடியாது என்பதால்தான்  இதில் பல  இனப் பறவைகளும் தஞ்சம் புக விரும்புகின்றன. இந்த மரத்தைப் பார்க்கும் போதெல்லாம், தமிழ்ப்பட நாட்டாமைக் காட்சிகள் நினைவில் வந்து போகும்.  ஆலமர நிழலில் அமரும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்று கூறப்படுவதால் பஞ்சாயத்துகளின் மேடையாக ஆலமரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.  குருசேத்திரம் சென்ற போது கண்ணன் இந்த மரத்தடியில்தான் பகவத் கீதை உபதேசம் செய்ததாகக் கூறி ஒரு ஆலமரத்தைக் காட்டினர். புனிதம் கருதி மர இலைகள் கூட கீழே விழாதவாறு வலை கட்டி வைத்திருந்ததைப் பார்த்து, “இந்த மரத்திற்கு வயது 5000 ஆண்டுகளா?” என வாய் பிளந்தேன். மகாபாரதம் உண்மையா? புனைவா? உண்மையில் மகாபாரதப் போர் நடந்திருக்குமா?  கிருஷ்ணனும் அர்ஜூனனும் இங்கே நின்றிருந்தார்களா? ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான போர்வீர்ர்கள் பாதம் பதிந்த மண்ணா இது? அன்று எப்படி இருந்திருக்கும் இந்த இடம்? அடர்வனமாகத்தானே இருந்திருக்கும்! அம்மக்கள் என்ன மொழி பேசியிருப்பார்கள்? என்ன சாப்பிட்டிருப்பார்கள்? தனிப்பட்ட மனிதர்களுக்காகத் துவங்கிய போர், எத்தனை அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியிருக்கும்? இந்த மண்ணில் எத்தனை இரத்தம் ஓடியிருக்கும்? கற்பனையில் குருசேத்திரப் போர் நிகழ்வு ஓடியது. பலரது நம்பிக்கையின்  சான்றாய் நிற்கும் அம்மரம் கொள்ளுப் பெயர்த்திகள், எள்ளுப் பெயரன்கள்  கண்டு கனிந்து நிற்கும் கிழத்தியாய்த் தோன்றியது.     தனிமரம் தோப்பாகிய அதிசயத்தை  அடையாரில் பார்த்து வியந்திருக்கிறேன். தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாய், சற்றே ஞானச் செருக்குடன் நிமிர்ந்து நிற்கும் பெண்ணாய்த் தோன்றியது. அன்னிபெசன்ட் அம்மையார் சுதந்திரத்திற்கு முன் இங்கு அமர்ந்து வீர உரையாற்ற, தமிழ்த்தென்றல் திரு.வி.க அமர்ந்து ஆர்வமாய்க் கேட்டிருக்கிறார். 450 வருடங்கள் பழமையான இந்த மரம்  59500 சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இம் மாபெரும் மரத்தின் முதல் முதலில் கால் ஊன்றிய விழுது (வேர்) எது?  இதுவோ! அதுவோ! என ஒவ்வொரு விழுதாய் தடவிப் பார்த்திருக்கிறேன்.  ஆதி  கால விழுதுகள், தலைமுறை தாண்டிய விழுதுகளைத் தேடி, இதுதான் முதல் விழுதாய் இருக்கக் கூடும் என நானாகவே யூகித்து  வேரான ஓர் விழுதை அடையாளம் கண்டு அணைத்திருக்கிறேன்.  இது போன்றே,   ஆலமரங்களை எங்கு கண்டாலும் ஒரு பெண்ணாகவே உருவகப்படுத்த முடிகிறது என்னால். உயர்ந்து வளரும் ஆலமரத்தின் விழுதுகள் பூமிக்குள் நுழைந்து வேர்களாக மாறுவதால், அடிமரம் அரிக்கப் பட்டாலும் விழுதுகள் கிளைகளைத் தாங்கிக் கொள்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போது, விழுதுகள்  மரத்திற்கு பாரமாய் தொங்குவது போலத் தோன்றினாலும், உண்மையில் கிளைகளைத் தாங்கி நிற்கும் விழுதுகள்தான்   பின்னர் மரத்திற்கே வேர்களாய் மாறுகின்றன இதே நிலைதான் பெண்ணிற்கும். குடும்பத்திற்கு பாரமாய் இருப்பது போல இச்சமூகத்தால் கட்டமைக்கப்பட்டாலும்கூட, குடும்பத்தின் வேர்களாய் மாறி, முழு குடும்பத்தையும் தாங்கி நிற்கும் பெண்களை எங்கும் காணமுடிகிறது.  “துரங்குகிற வாவலுறை தொன்மரங்கள் என்ன ஓங்குகுலம் வையவதன் உட்பிறந்த வீரர் தாங்கல் கடனாகும்” எனக் கூறும் சீவக சிந்தாமணியும் கூட, ‘வௌவால்கள் தொங்கி வாழ்கின்ற முதிய ஆலமரங்களை விழுதுகள் காப்பதுபோல குலம் நையுமாயின் அக்குலத்தில் பிறந்த மற மைந்தர்கள் தங்குலத்தை தாங்கிக்காத்தல் கடமையாகும்’ என்று ஆண்களையே குடும்பத்தைத் தாங்கும் விழுதுகளாகச் சித்தரிக்கிறது. ஆனால் உண்மையில் எத்தனையோ குடும்பங்களை பெண்கள் விழுதுகளாய், வேர்களாய்த் தாங்குவதை வரலாறு  பதிவு செய்ததேயில்லை.   ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவும், ‘மனதில் உறுதி வேண்டும்’ நந்தினியும் இது போன்ற பெண்களுக்கான செல்லுலாயிட் உதாரணங்கள். பிரச்சினையால் மூழ்கிக் கிடக்கும் குடும்பத்தின் மொத்த வடத்தையும் தனிஒருத்தியாய் இழுத்துப் பிடித்து, குடும்பத்தேரை நிலைநிறுத்தப் போராடுவாள் அவள் ஒரு தொடர்கதை நாயகி. தமிழ் சினிமாவில் காட்டப்படும் பெண் சுதந்திரம், முன்னேற்றம், சிந்தனைப் புரட்சி அனைத்திற்கும் கவிதா (சுஜாதா)தான் ஆரம்பப் புள்ளி.  அதனைத் தொடர்ந்து அதே இயக்குநர் பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ நாயகி நந்தினி, போராட்டங்களே வாழ்க்கையாகிப் போக, மாறாப் புன்னகையுடன்  வாழ்வை எதிர்கொள்வாள். இவர்கள் இருவரும்தான்  சுயசிந்தனை கொண்ட பெண் கதாபாத்திரங்களுக்கு முதன்முதலில் திரையில் இராஜபாட்டை அமைத்துக் கொடுத்தனர்.   ஆனால் இலக்கிய உலகில்  ஆண் சாதனையாளர்களின்  புத்தகங்களும், ஆண்களின்  சுயசரிதைகளும் நிரம்பிக்கிடக்க, பெண்களின் சரிதைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தான் இருக்கின்றன.      ஆணின் நிழலிலேயே பெண் இருக்க வைக்கப்பட்டதால், அவளுக்கென்று தனி வரலாறு தேவை இல்லை என்றே சமூகம் முடிவு செய்தது.  உலக வரலாறோ, உள்ளூர் வரலாறோ,  பெண்கள் பற்றிய செய்திகள் எடிட்டிங்கில்  தூர வீசப்பட்டன. வீட்டிற்குள் அடைக்கப்பட்டவளின் வாழ்க்கை, வரலாறாவதற்கு ஒன்றுமில்லை என நினைத்திருக்கலாம்.  ஆனால் பெண் சாதுர்யமானவள். இந்த உலகம் தன்னை நிராகரிப்பதை உணரும்போதெல்லாம், தன்னுடைய வரலாற்றையும் தன்னை பாதித்த வரலாற்றையும்  கதைகளாக மாற்றி உலவவிட்டாள். இயல்பாய் அவளுக்குள்ளிருக்கும் மொழியாற்றலால், செவிவழிக் கதைகளும், நாட்டுப்புறக் கதைகளும், பாரம்பரியக் கதைகளும், கட்டுக்கதைகளும் அவளால்  கட்டப்பட்டன.  பாட்டிகள்மூலம் வழிவழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன. சோகக் கதைகளும்  நாட்டார் கதைகளும், சாமி கதைகளும், வீரப் பெண்கள் கதைகளும் பரப்பப்பட்டன. இப்படித்தான் புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியும், வறுமையில் உழன்ற நல்லதங்காளும் பரப்பப்பட்டனர்.  குலதெய்வமாகிய முன்னோர்களின் கதைகள் விவரிக்கப்பட்டன. என் சிறு வயதில் குலதெய்வ வழிபாடன்று 10, 12 வயது பெண் குழந்தைகளை இருட்டறையில் வைத்து ஒரு பாட்டி,   குலதெய்வமாய் வழிபடப்படும்  பெண் குறித்த கதைகளைக் கூறுவது ஒரு சடங்காகவே பின்பற்றப் பட்டது. கன்னி தெய்வங்களாய் அவர்கள் மாறிய வரலாறு, அவர்களின் வாழ்வியல் போராட்டங்களாகவோ, குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றக் காவு கொடுக்கப்பட்ட நிகழ்வுகளாகவோ இருக்கும்.     .      ஆனால் கடுமையான எதிர்வினையுடன் கையில் பிரம்பேந்தி, சட்டாம்பிள்ளையாய்க் காத்திருக்கும் வாழ்வை இலாவகமாகக் கையாளத் தெரிந்தவள் பெண். எந்தத் துயரையும் தின்று செரித்து மீண்டெழக் கற்றவள் பெண். வேர்கள் இடையறாது தன் தேவைக்கான தேடலைத் தொடர்வதால், வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரம் போல, பெண்ணும் நம்பிக்கையையும்  துணிவையும் ஆணிவேராகக்  கொண்டு ஒடிக்க ஒடிக்க துளிர்க்கிறாள்; வெட்ட வெட்ட வளர்கிறாள். நொறுக்க நொறுக்கப் படர்கிறாள். வேரோடு பிடுங்கி நட்டாலும் புதுமண் பற்றி உயர்ந்து செழிக்கிறாள். பரந்து விரிந்து  நிற்கும் கிளைகளின் உயரத்தை உலகமே வியந்து பார்க்க முடியும். ஆனால் மண்ணுக்குள் அடக்கமாய்ப் புதையுண்டிருக்கும், கண்களுக்குப் புலப்படாத வேர்களின் ஆழத்தை எவரும் அறிந்ததில்லை.   சமூகத்தால், குடும்பத்தால் அடித்து வீழ்த்தப்படும் பெண்கள், தங்கள் வாழ்வின் கடைசி நம்பிக்கையும் அற்றுப்போய் வீழ்ந்த பெண்கள், சாம்பலிலிருந்து மீண்டெழுந்த  பீனிக்ஸ் பறவைகளாய் தங்கள் துயரிலிருந்து மீண்டு,  குடும்ப வேர்களாய், சமுதாய வேர்களாய்  மாறிய நிகழ்வுகள்  குறித்தே பேசப் போகிறோம்.  ‘போதும்   பொண்ணு’ என பெண்ணை வெறுத்த இச்சமூகத்தில் வரலாறாய் மாறிய பெண்களைப் பற்றிப் பேசப் போகிறோம்.  வாழ்க்கை அவ்வளவுதான் என்றெண்ணிய பெண்களும், வாழ்வில் எதையேனும் சாதித்தே ஆக வேண்டும் என்றென்னும் பெண்களுமாய், என்னைச் சுற்றியுள்ள இவர்களிடமிருந்து நான் கவனித்ததையும் கற்றதையும் எழுத்துக்களாக்கியுள்ளேன்.  பெண் என்பவள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள் என்கிறது பிரெஞ்சுப் பழமொழி. ஆம், சமூகத்தின் சாட்டையடிகள் அவள் மன உறுதியை மேலும்   இறுக்குகின்றன. உளிகளின் வலிகள் அவளை சிற்பமாக்குகிறது. நெருப்பின் வெப்பம் தங்கமாய் ஜொலிக்க வைக்கிறது. தீட்டத் தீட்ட வைரமாய் மின்னுகிறாள். அவளைப் புனிதப்படுத்தியதிலும், அந்நியப்படுத்தியதிலும் எவ்வாறு சமூகம் முக்கியப் பங்கு வகித்ததோ, அதேபோல் அவள்  வீறு கொண்டெழவும் சமூகமே முக்கியக் காரணியாகிறது. சமூகம் தனக்குக் கொடுத்ததை, தன் எழுச்சியின் மூலம் மௌனமாய் திருப்பித் தருகிறாள். வலி நிரம்பிய பக்கங்களால் நிரப்பப்பட்ட தன் வாழ்வை, வரலாற்றுப் பக்கங்களாய் மாற்றுவதற்குப் போராடிய பெண்கள் இவர்கள். ஏற்கனவே சமகாலத்தில்  ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு விட்ட சாதனைப் பெண்களை விடுத்து, எந்தவிதப் பின்புலமும் இல்லாமல், தன்னுடைய முயற்சியினாலும், தன்னம்பிக்கையினாலும் தடைகளை உடைத்து வாழ்வை வென்ற, மாறுபட்டு சிந்தித்த,  மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்த, சாமான்யப் பெண்களைக் குறித்தே பேசப்போகிறோம். இந்த சாமான்யப் பெண்கள் நம்மை தினமும் கடந்து செல்பவர்களாக இருக்கலாம். நீங்களும் நானும் பார்த்து வியக்கும் அக்காக்களாக,  அம்மாக்களாக, அத்தைகளாக இருக்கலாம். வாழ்க்கை சேற்றில் உழன்று கடும் முயற்சிக்குப்பின் காலூன்றி நிற்கும் தங்கைகளாக, பிள்ளைகளாக  இருக்கலாம். அகவாழ்க்கைக் கனவுகள் கசந்து போக, சாவின் விளிம்பை ருசித்து மீண்ட உங்கள் வீட்டு, நம்வீட்டுப் பெண்களாக இருக்கலாம். பார்வையைத் திருப்புவோம், வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து

முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள்

முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள்

நடக்கலாம் வாங்க : பகுதி 2 ஒருவர் உடல் எடையைக் குறைக்க கண்டிப்பாக நடக்கவேண்டுமா? அல்லது நடந்தால் உடல் எடை குறையுமா? என்று நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு. உடல் எடை குறைப்பு என்பது மிகவும் கடினமான காரியம் அல்ல. அதே நேரத்தில், நாம் நினைக்கும் அளவிற்கு மிக மிக எளிதானதும் அல்ல. கமலஹாசன் ட்வீட் போல் இருக்கிறது என்று யாரும் எண்ண வேண்டாம்.  இரண்டு நாட்கள் கூட போதும் ஒரு கிலோ எடை கூட. ஆனால் ஏறும் எடையைக் குறைக்க கண்டிப்பாக மெனக்கெடவேண்டும். இந்தச் சொற்றொடரை நம்மில் பலரும் சொல்லியிருப்போம் அல்லது யாராவது சொல்லிக் கேட்டிருப்போம். அது உண்மையும் கூட.  உடல் எடைக் குறைப்பிற்கு நடைப்பயிற்சி உதவி செய்யுமா என்றால் உதவி செய்யும். ஆனால் உடல் எடை குறைப்பிற்கு நீ என்ன செய்கிறாய் என்று யாரேனும் கேட்டால் வெறுமனே நடக்கிறேன் என்று நீங்கள் முடிவு எடுத்திருந்தால் உடல் எடை குறையாது. மறுபடியும் கமலஹாசனின் ட்வீட்டை ஞாபகப்படுத்த விரும்பவில்லை. நேராக விசயத்திற்கு வருவோம். நடைப்பயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்று. ஆனால் அதற்கான சில முக்கிய முயற்சிகள் உண்டு.  உதாரணத்திற்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதிக்குள் நுழைய பெரிய வரிசை காத்திருக்கும். சன்னதிக்குள் இருந்து நீளும் அந்த வரிசை இட வசதிக்காக சன்னதியைச் சுற்றிச் சுற்றியே இரண்டு மூன்று வரிசைகள் செல்லும். வரிசை மெதுவாக நகரும்படி மேலாண்மை செய்வார்கள். இந்த இடத்தில் திருப்பதி கோயிலை நான் மேற்கோள் காட்டவில்லை. ஏனெனில், அங்கு சில சமயம் ரஜினி படத்திற்குத் திறந்துவிட்டது போல் எல்லோரும் ஓடுவதைக் கண்டிருக்கிறேன். மீனாட்சியம்மன் கோயிலில் அப்படி அல்ல. ஊர்ந்து ஊர்ந்து செல்வார்கள். அதைப்போலவே சிலர் வாக்கிங் வருவார்கள். அதற்குப் பெயர் நடைப்பயிற்சி அல்ல, ‘உல்லாச உலா’.  எந்த வேலையும் இல்லாத போது உங்கள் வீட்டின் சமையலறையிலிருந்து படுக்கை அறைக்குச் செல்லும் தொனியில் செல்வது எல்லாம் நடைப்பயிற்சியில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. வேகமாக நடப்பது என்பது வேறு, நடப்பது என்பது வேறு. ஊர்வது என்பது வேறு. எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதற்கேற்ற பலன்தான் கிடைக்கும்.  அப்படி நடப்பவர்கள், ஊரும் வேகத்தில்  ஒரு இருபது நிமிடம் நடப்பார்கள். இப்படி ஒரு வாரம் நடந்துவிட்டு, உடல் எடையைச் சோதிப்பார்கள். “ஒரு வாரம் நடந்திருக்கேன். எடை குறையவில்லை. நடந்தா எடை குறையாது போல” என நடப்பதை நிறுத்திவிடும் ஆட்களும் உண்டு.  எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். உடல் எடை கூடிவிட்டதென நடக்க ஆரம்பித்தார். முதல் நாளே என்னைப் பார்த்து அதைச் சொன்னார். அவரது நடையின் வேகத்தைக் கணித்து அவரிடம் நான் எதுவும் சொல்லவில்லை. சரியாக 2 கிமீ நடப்பார். முடிந்ததும் அமர்ந்துவிடுவார். நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். நடந்த நேரத்தை விட அரட்டையின் நேரம் கூடுதலாக இருக்கும். சரியாக ஐந்து நாட்கள் கழித்து உடல் எடையைச் சோதித்திருக்கிறார். அன்றைய தினம் அவரது விதி என்னுடன் நடக்க விதித்திருந்தது. உடல் எடை குறையவில்லை. “நடந்தாலும் என் உடம்பு குறையாதாம்” என்றார். “ஏன்?” என்றேன். “என் உடம்பில் கொழுப்பு எல்லாம் கெட்டியாய் மாறிவிட்டதாம். அது இனி குறையாதாம். நடப்பது வீணாம்” என்றார். “உங்களுக்கு இதை யார் சொன்னா?” என்று கேட்டேன். இவருடைய நண்பர், இவரை விட எடை கூடுதலான ஒருவர். அவர் இவருடன் நடக்க துணைக்கு இவர் அழைத்து வந்தவர். இவர் 2 கி மீ நடப்பவர். அவர் ஒரு கி.மீ மட்டுமே நடப்பவர். இவர் நடந்து முடிக்கும் வரை காத்திருந்து இவருடன் வீடு திரும்புபவர். இது தான் சேதி. நடக்க விருப்பம் இல்லாத ஒருவர் நடப்பவருடன் இருந்தால் இது தான் கதி. இதில் ட்விஸ்ட்டே, ‘உடம்பில் கொழுப்பு எல்லாம் கட்டியாகி விட்டது. இனி கரையாது. நடக்குறது வேஸ்ட்டு” என அள்ளிப்போட்டதுதான்.  அந்த ஐந்து நாட்களில் ஒரு நாள் கூட வியர்த்தது இல்லை என்று என்னுடன் 1.7 கிமீ நடந்து முடித்ததும் கூறியவருக்கு உடல் முழுக்க வியர்வை. நீங்க வந்தது உலா இல்லண்ணே. நடக்கனும்னா இப்படி நடங்க, இல்லாட்டி கொழுப்பு குறையாது என்றேன்.  உண்மையில், நீங்கள் நடக்க வேண்டும் அதன் மூலம் நல்ல உடல் நிலையைப் பெறவேண்டும் என்று தீர்மானித்தீர்கள் என்றால் முதலில் நீங்கள் தூக்கி எறியவேண்டியது உங்கள் பழைய டீ ஷர்ட், ஷூ, பிஞ்ச செருப்பு இவையெல்லாம் இல்லை. உங்களை நடக்க விடாமல் தடுக்கும் எதிர்மறை எண்ணங்களையும் நண்பர்களையும்தான்.  உடல் வியர்க்கும் அளவிற்கு நடக்க வேண்டும், உடலுக்கு உடல் வியர்க்கும் அளவு மாறுபடும். அறிவியல் ரீதியாகச் சொல்லவேண்டுமானால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராகும் வண்ணம், உங்கள் உடல் தசைகள் அனைத்தும் செயல்படும் விதம் நீங்கள் நடக்கலாம். வேகமாக, வேகமாக என்று நினைத்தபடி நடக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேகம் வேண்டும். சிலரது உடல் நிலையை மனதில் வைத்து அதற்கேற்றபடி உங்கள் வேகத்தை டிசைன் செய்துகொள்ளலாம்.  உடல் எடையைக் குறைக்க விரும்பி நடக்கிறீர்கள் என்றால் முதல் பத்து நாட்களில் நீங்கள் கவனிக்க வேண்டியவை.    * உங்கள் நடக்கும் தூரம் எவ்வளவு?   * உங்கள் நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு எவ்வளவு?   * உங்கள் நடக்கும் அளவில் உங்கள் உடல் அளவில் ஏற்படும் மாற்றம் என்னென்ன?   * உங்கள் நடக்கும் தூரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் காலடிகள் (ஸ்டெப்ஸ்) எவ்வளவு? இது தவிர அவரவர் தங்களது குடும்ப மருத்துவர்களிடம் ஓர் ஆலோசனை, முடிந்தால் இரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு போன்ற சோதனைகள் செய்து பார்த்தீர்கள் என்றால் அதற்கேற்றபடி வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டுமா என்றால் தேவையில்லைதான். ஆனால், ஆரோக்கியம் என்று கருத்தில் கொண்டால் அதையும் செய்து பார்ப்பதுதான் நல்லது.  இதை எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். புதிதாய் நடக்க ஆரம்பித்தவர்களுக்கு உடல் அசதியும், சோம்பேறித்தனமும், நடக்க விரும்பாத நண்பர்களின் ஏளனமும், தூக்கச் சுகமும் உங்களை நடக்க விடாமல் தடுக்க முற்படும். அவர்கள் எல்லாம் மேற்சொன்ன விசயங்களில் கவனம் செலுத்தும்பொழுது உங்களை அறியாமலேயே உங்கள் நடையில் நீங்கள் கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள்.  சரி, இதை எல்லாம் கணக்கு செய்துதான் நடக்க வேண்டுமா என்று ஏளனம் செய்வீர்கள்தானே? என்னையும் பார்த்து ஏளனம் செய்திருக்கிறார்கள்.  ஒரு விசயம் தான். முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள். நடக்க வந்தால் நடந்து காட்டுங்கள்.  வாங்க நடக்கலாம்.  கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து 

நடக்கலாம் வாங்க

நடக்கலாம் வாங்க

ஏன் நடக்க வேண்டும்? க்ளப் ஹவுஸ் செயலியின் ‘உணவும் உள்ளமும்’ ஹவுசில் கொரோனா தொற்று சமயத்தில் நோய்த்தொற்று சம்பந்தமாக சில சாமான்யர்கள் மருத்துவர்களிடம் நேரடியாக சந்தேகங்களைக் கேட்டனர். பிறகு தடுப்பூசி பற்றி கேட்டனர். நாளடைவில் உடல்நிலை சம்பந்தமாகவும் ஆரோக்கியமாகவும் பேச குழு உறுப்பினர்கள் சேர்ந்தனர். இதில் பலர் ‘நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது’ என்றும், சிலர் ‘நடைப்பயிற்சியை முறையாகத் தொடர முடியவில்லை’ என்றும் சிலர் ‘நடப்பதற்கு முன் என்ன செய்யவேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார்கள். இவற்றை எல்லாம் முன்வைத்து, எப்பொழுது எனக்கு வாக்கிங் போகும் பழக்கம் வந்தது என்பதை ஞாபகப்படுத்தவே ஐந்து ஆறு வருடங்களுக்கு முன் யோசிக்க வேண்டியதாயிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நடைப்பயிற்சி என்பது ஒரு கட்டத்தில் போதையாயிருந்தது. நடப்பது என்பது போதையாகவே தொடரவும் செய்கிறது. “உனக்கு மோசமான மன நிலை இருந்தால் ஒரு முறை நடந்து செல். இன்னும் மோசமான மனநிலை தொடர்கிறதா மறுபடியும் நடந்து கொண்டே இரு” என்பது ஹிப்போக்ரேட்ஸ் சொன்ன ஞாபகம். நான் வாக்கிங் செல்ல ஆரம்பித்த நான் எதிர்கொண்ட சவால்கள் என்று சில இருந்தன. அவை பொத்தாம் பொதுவாய் பலருக்கும் இருந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் நடைப்பயிற்சியைத் தொடரும்பொழுது ஏற்படும் அல்லது உணரும் உணர்வுகளையும் பல இடங்களில் எழுதியிருக்கிறேன். அவற்றை ஒரு சேர மறுபடியும் எழுதிப்பார்க்க ஆசை. பொதுவாய் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் தங்களுக்கு நேரும் தடைகள் எனப் பட்டியலிடுபவை: என்னால் தினமும் எழ முடியவில்லை. என்னால் தினமும் நடக்க முடியவில்லை. அலுவலகத்திற்குக் கிளம்பவேண்டிய நேரம். அதனால் வாக்கிங் செல்ல நேரம் இல்லை. ஒரு நாள் நடந்தபின் அடுத்த நாள் கால் வலி. எழவே முடியவில்லை. எவ்வளவு தூரம் நடந்தாலும் உடல் எடை குறையவில்லை. பிறகு எதற்கு நடக்கவேண்டும்? அலுவலகத்தில் ஒரு இருக்கைக்கும் இன்னொரு இருக்கைக்கும் நடந்தே போகிறேன். (பிறகு ஹெலிகாப்டரிலா போவாங்க என்ற மைண்ட் வாய்சை கவுண்டமணி குரலில் படிக்கவும்) அலுவலகத்தில் ஃபோன் வந்தால் நடந்துகொண்டே பேசுவேன். இது தவிர எதற்காகத் தனியாக நடக்கவேண்டும்? என்ற எண்ணம். உலகில் நடப்பவர்கள் எல்லாம் சுகர் வந்தவர்கள் அல்லது ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் என்ற பார்வை. காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள். அவர்களுக்கு வேலை இல்லை. வேலை செய்வதற்கு ஆட்கள் இருப்பார்கள், இப்படியான கண்ணோட்டம். எனக்கு சுகர் இன்னும் வரவில்லை. நன்றாக இருக்கிறேன். எனக்கு டாக்டரிடம் போவதற்கு எந்த அவசியமும் இல்லை என்ற மனநிலை. என்னை வாக்கிங் போகச்சொல்லி எந்த மருத்துவரும் சொல்லவில்லை. பிறகு எதற்காகப் போகவேண்டும்? என்ற கேள்வி. ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் இருக்க இத்தனைக் காரணங்கள் இருக்கலாம். இதை விடக் கூடுதலாகவும் இருக்கலாம். ஜனவரி ஒன்றாம் தேதி பார்த்தால் புது வருட சபதம் எடுத்து நடக்க வருபவர்கள் வருவார்கள். மூன்றே நாளில் பாதி பேர் காணாமல் போவார்கள். மீதிக் கூட்டமும் பொங்கல் விடுமுறையில் காணாமல் போவார்கள். எங்கள் வாக்கர்ஸ் க்ளப்பில் ஜனவரி 1ம் தேதி இந்தச் சபத க்ரூப்களைத் தனியாக அடையாளம் காணுவோம். முதல் நாளே ஐந்து கி.மீ. பத்து கி.மீ. என நடந்து உடல் எடையைக் குறைத்துவிடுவோம் என்ற வெறியுடன் நடப்பார்கள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் பூமியை நிறுத்தி பிறகு எதிர்திசையில் சுற்றிவிடும் வெறி இருக்கும் அவர்களிடம். ஆனால் அவர்கள் தலை கீழாக நின்றாலும் வெறுமனே நடப்பதன் மூலமாக மட்டும் உடல் எடையைக் குறைக்கமுடியாது என்பது அவர்களுக்கு தாமதமாகத்தான் புரியும். இந்த யோசனைகள் எல்லாவற்றையும் தாண்டி, ‘ஏன் ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்? நடப்பதனால் ஆய பயன் என்ன?’ என்று பலர் கூகுளாண்டவரைத் துழாவி பார்த்திருப்பார்கள். அது போக, க்ளப் ஹவுஸ் போன்ற சமூக வலைதளங்களில் வெல்னெஸ் கோச், டாக்டர்கள் என எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்தும் நல்ல அறிவியல் பூர்வமான விசயங்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். எனக்கும் உங்களுக்கும் தெரிந்ததுதான் மறுபடியும் மீள் பார்வையாக இங்கே. *நடப்பதனால் உங்களுக்கு உடல் எடை குறைய சில வாய்ப்புகள் உண்டு. ஆனால் முறையான பயிற்சியில் நீங்கள் உங்கள் எடை கூடுவதைத் தவிர்க்க நடக்கலாம். *தூக்கமின்மைக்குச் சில மருத்துவர்கள் நடக்கப் பரிந்துரை செய்கிறார்கள். உடனே ‘நடந்தால் தூக்கம் வருமா?’ என்று நீங்கள் வாங்கும் மிக்ஸி க்ரைண்டருக்கு கேரண்டி, வாரண்டி கார்ட் கேட்பது போலக் கேட்கக்கூடாது. உடல் தசைகள் முறையான இரத்தம் ஓட்டம் பெறும்பொழுது, மூளையும் முறையான இரத்த ஓட்டம் பெற்று தசைகள் சுருங்கி விரிந்து உங்களது உடல் ஓர் இறுக்கமற்ற சூழலை உணரும். அது பல வகைகளில் உங்களுக்கு உதவலாம். இரவு படுத்தால் அயர்ச்சியின் காரணமாகச் சிலர் உடனே உறங்கிவிடுவார்கள். அப்படியான அயர்ச்சியை நீங்கள் நடந்தே பெற்றுக்கொள்ளலாம். *காலையில் நடப்பது, சுத்தமான காற்றை சுவாசிப்பது போன்ற காரணங்கள் தவிர்த்து, PRE OCCUPIED மன நிலையில் இருப்பவர்கள், தொடர் வேலை அழுத்தங்கள் இருப்பவர்கள், காலை எழுந்தால் ஏகப்பட்ட வேலைகள், எந்த வேலையை முதலில் செய்வது? என்று குழம்புவோர் இப்படியானவர்கள் அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு இருக்கும் அழுத்தச் சூழலிலிருந்து விடுபட வாய்ப்பு இருக்கிறது. தங்களின் வேலைகளை அதனதன் முக்கியத்துவம் கருதி நிரல்படுத்தி (PRIORITY) எதை முதலில் முடிக்கலாம் என்ற முடிவு எட்டுவது எளிதாக இருக்கலாம். நிதானமான முடிவுகளை எட்டுவதற்கு மூளை பழக்கப்படலாம். எனக்குத் தெரிந்த சில தொழில் முனைவர்கள் பல முக்கியமான முடிவுகளை எடுக்க யோசிப்பதற்காகவே காலையில் வாக்கிங் வருகிறார்கள். *உடல் தசைகளுக்கு முறையான இரத்தம் ஓட்டம் செல்லும்பொழுது அன்றைய நாள் முழுதும் புத்துணர்வோடு உடல் இயங்கவும் வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து அதிகாலை எழுவது பழக்கம் ஆவதால் மூளையும் புத்துணர்வு பெறுவதை காலப்போக்கில் உணரலாம். நண்பர்களில் சிலர் ஏன் நடக்கவில்லை என்பதற்கான காரணங்களும், நடப்பதனால் ஏற்படும் பயன்களில் சிலவற்றையும் பார்த்தோம். ‘ஒருவர் உடல் எடையைக் குறைக்க கண்டிப்பாக நடக்கவேண்டுமா? அல்லது நடந்தால் உடல் எடை குறையுமா?’ என்பது போன்ற கேள்விகளை என் நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு. ஒரு கட்டுரையாக எழுத எத்தனித்த இந்த விசயம், சற்றே நீளலாம். இந்தகே கட்டுரையைப் படித்தவர்கள், தங்களது நடைப்பயிற்சி பற்றிய அனுபவங்களையோ யோசனைகளையோ சொன்னால் கம்பெனி அப்படி அப்படியே ஏற்றுக்கொள்ளும் என்று நடை பணிந்து சொல்லிக்கொள்கிறேன். தொடர்ந்து ‘நடைக் குறிப்புகளோடு’ நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை படங்கள்: இணையத்திலிருந்து

புரட்சியாளர் பெரியார்

புரட்சியாளர் பெரியார்

பெரியார் பக்கம் -19 பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் கல்வித் துறையின் பொது இயக்குநர் பொறுப்பில் இருந்த பெருமைக்குரியவர் நெ.து.சுந்தரவடிவேல் அவர்கள். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்து, அந்தப் பொறுப்புக்குப் பெருமை சேர்த்தவர். இராஜாஜி முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் குலக்கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு சுமார் 3000 ஓராசிரியர் பள்ளிகள் மூடப்பட்டன.  இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து தந்தை பெரியார் போராட்டங்களை நடத்தினார். இதன் விளைவாக, இராஜாஜி முதல்-அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு காமராசர் முதல்-அமைச்சர் பொறுப்புக்கு வந்தார். அப்போது நெ.து.சுந்தரவடிவேல் அவர்களைப் பயன்படுத்தி காமராசர் வழியாக மூடப்பட்ட பள்ளிகளைத் திறக்கச் செய்தார் பெரியார்.  தொடர்ந்து பெரியார் கல்வியில் பெரும் புரட்சிகளைச் செய்தார். நெ.து.சுந்தரவடிவேல் தன்னைப் பெரியாரின் தொண்டராகவே நினைத்து வாழ்ந்து கல்வித் துறையில் சாதனைகள் பல செய்தவர். தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, நெ.து.சுந்தரவடிவேலு புரட்சியாளர் பெரியார் என்னும் ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அதன் சிற்றாவணக் கோப்பு (PDF) அண்மையில் எனக்குக் கிடைத்து. அதை முழுமையாகவும் படித்தேன்.  அந்த நூலின் இறுதிப் பகுதியில், தந்தை பெரியார் அவர்களால் இந்த சமுதாயம் எப்படி மாற்றங்களைப் பெற்றது என்பதைத் தக்க சான்றுகளுடன் விவரித்திருந்தார். அந்த விவரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு கல்வியாளர் பார்வையில் பெரியாரின் சமூகப் பணிகள் மிக அருமையாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தன. நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் நூலிலிருந்த சில பிழைகளை நீக்கியிருக்கிறேன், தற்காலத்திற்கான சொற்களையும் நான் பயன்படுத்தி இருக்கிறேன். இனி பெரியார் பற்றி நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் பார்வையை அப்படியே தந்துள்ளேன்.  ‘உயர்வு தாழ்வு என்னும் உணர்ச்சியே, நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச் சண்டை நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்து உயிர்களும் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வரவேண்டும்’ என்னும் தனது குறிக்கோளை அடைய வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார். அவர் எங்கோ ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு, தம்மை நாடி வந்தவர்களுக்கு மட்டும் புரட்சிக் கருத்துகளை எடுத்துரைப்பதோடு நின்றாரில்லை.  மனதில் பட்டதை எழுத்தில் வடித்து, அச்சாக்கி, வெளியிட்டதோடு அமைதி கொள்ளவில்லை. தற்குறிகள் நிறைந்த நாட்டில் எழுத்தில் வருவதைப் படிக்கும் ஆட்கள் சிலரே. மாறாக, சிங்கத்தின் குகைக்குள்ளே புகுந்து போராடுவதைப்போல், காலமெல்லாம் செயல்பட்டார் பெரியார். தமிழ்நாட்டில் அவர் கால்படாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு சூறாவளிப் பயணம் செய்துகொண்டு இருந்தார். புரட்சிக் கருத்துகளை, மணிக்கணக்கில் விதைத்தார். கேள்விக் கணைகளை வரவேற்பதில், அவற்றைக் கொள்கை விளக்கத்திற்கான நல் வாய்ப்புகளாகப் பயன்படுத்தி, பதில் சொல்வதில், பெரியார் இணையற்று விளங்கினார். இச்செயல்கள் பேரலைகளை எழுப்பின. ஏமாந்த காலத்தே ஏற்றங்கொண்டோர், வேங்கையெனப் பாய்ந்தனர்; நரிகளென ஊளையிட்டனர்; ஆதிக்கப்புரிகள் ஆட்டங் காண்பதைக் கண்டு அஞ்சி அப்பாவி மக்களை, ஏவிவிட்டனர். அவர்கள் தன்னலக் கோட்டையைக் காக்க, எத்தனையோ சாகசங்களைக் கையாண்டார்கள். திண்ணைக்குத் திண்ணை தூற்றல்கள். மேடைகளில் அவதூறுகள். ஆசிரியர் கடிதங்களின் வழியாகத் தூண்டுதல்கள். ஆட்சியாளரை நெருக்கி வழக்கு போடுதல். இத்தனைக்கிடையிலும் தெளிந்த அறிவுடையோர், முற்போக்குக் கருத்துடையோர், தந்தை பெரியாரையும் அவருடைய இயக்கத்தின் அடிப்படைச் சிறப்புகளையும் அப்போதைக்கப்போது சுட்டிக்காட்டி வந்துள்ளனர். அவற்றில் சிலவற்றைக் கவனிப்போம்.  ஆக்ஸ்போர்டு அறிஞர் பாராட்டு ஈரோட்டில் பெரியாரைக் கண்டு உரையாடிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு. பெசில் மாத்யூஸ் என்பவர், ‘புறத் தோற்றத்தில் மட்டும் அல்ல, உள்ளுணர்ச்சியிலும் தோழர் ஈ.வே. ராமசாமி வில்லியம் மாரிஸ் போன்றவரே’ என்பதை அவருடன் நான் பேசிக் கொண்டிருந்த 2,3 மணி நேரத்திற்குள் கண்டுகொண்டேன். பொருளற்ற எந்தப் பழைய சமுதாயக் கட்டுப்பாடுகளையும் அடியோடு தகர்த்து எறியவேண்டும் என்னும் அந்தத் துடிதுடிப்பு, காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களையும் பழமைப் பாசி படர்ந்துவிட்ட கருத்துகளையும் உடைத்தெறிய வேண்டும் என்னும் அந்த நெஞ்சழுத்தம், ‘புதியதோர் உலகு செய்வோம்’ என்னும் அந்த உறுதிப்பாடு, இவை அத்தனையிலும் தோழர் ஈ.வே.ரா. வில்லியம் மாரிஸ் அவர்களைப் போலவே செயல்படுகிறார்.  மாரிசைப் போலவே ஈ.வே.ராவும் மிக எளிய வாழ்க்கையே வாழ்கின்றார். ‘சொந்த அச்சகத்தின் வாயிலாகவே, சொந்தக் கருத்துகளைப் பொதுமக்களுக்கு உரைப்பது வில்லியம் மாரிசுக்கும் ராமசாமிக்கும் உள்ள வியக்கத்தக்க இன்னொரு ஒற்றுமை என்பதையும் கண்டேன். தோழர் ஈ.வே.ரா. நடத்துகின்ற ஆங்கில வார இதழ் இருக்கிறதே, அதன் பெயராகிய புரட்சி (Revolt) என்பதை அவருடைய வாழ்க்கை வரலாற்றிற்கே பெயராய்ச் சூட்டிவிடலாம். அது மிகப் பொருத்தமாகவும் இருக்கும்’ என்று பெரியாரின் உண்மையான உருவத்தைக் காட்டினார். பனகல் அரசர் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக விளங்கிய, பனகல் அரசர் சர்.பி.ராமராய நிங்கவாரு, 1928இல் ஈ.வே.ராமசாமியைப் பற்றி ‘மதிப்பு வாய்ந்த எனது நண்பர் தோழர் ஈ.வே.ராமசாமி தற்காலத்தில் பெரிய சமூகச் சீர்திருத்தக்காரர் ஆவார். அவர் சமூகச் சீர்திருத்தத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறார். தம் கருத்தை நிறைவேற்றுவதில் அவர் எத்தகைய தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார். எந்த ஒரு கொள்கையைத் தாம் நேர்மையானதாக எண்ணினாரோ, அதற்காக அவர் பலதடவை சிறை சென்றதும் உங்களுக்குத் தெரியும். சமூகச் சீர்திருத்தக் கொள்கை முன்னேற இன்னும் எத்தனை தரம் வேண்டுமானாலும் சிறைக்குப் போகவும் மற்றும் தமது உயிரையே கொடுக்கவும் தயாராயிருக்கிறார். ‘சமூகச் சீர்திருத்தத் துறையில் பலர் பல ஆண்டுகள் பாடுபட்டுப் பயன் பெறாமல்போன வேலையைச் சில ஆண்டுகளில் இவர் பயனளிக்குமாறு செய்து விட்டார்’ என்று உரைத்தார்.  சென்னை மாகாண ஆளுநர் பிற்காலத்தில், சென்னை மாகாணத்தில் ஆளுநராக இருந்த சர்.கே.வி.ரெட்டி நாயுடு 1928இல் பெரியாரை எப்படி மதிப்பிடுகிறார் என்று பார்ப்போம். ‘தனக்கு ஒன்றை உரியதாக்கிக் கொண்டு, அதையே தம் முழுவேலையாகவும் கொண்டு, பல்லாண்டுகளாக வேலை செய்கிற ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று சிறப்பான குணங்கள் அமைய வேண்டும். அவ்விதக் குணங்கள் அமைந்தவர்கள் இத்தென்னிந்தியா முழுவதும் தேடினாலும் நமது நாயக்கரைத் தவிர, வேறு யாரையும் கண்டுபிடிக்க முடியாது. அத்தகைய குணங்கள் எவையெனில், முதலாவது தைரியம்; இரண்டாவது தியாகம்; மூன்றாவது தம்முடைய வேலையை எவ்வாறு நடத்தி அனுபவத்திற்குக் கொண்டுவருவது என்பது. ‘தோழர் ராமசாமி உண்மையான சிங்கம்! சிங்கத்தின் இருதயத்தைப் பெற்றிருக்கிறார். வாழ்க்கையில் அச்சமென்பது அவருக்கு இன்னதென்றே தெரியாது. அத்தகைய அச்சமின்மை இருந்தாலொழிய இத்தகைய செயல்களில் யாரும் வேலை செய்யமுடியாது. ‘அவர் எவ்விதத் தியாகமும் செய்யத் தாயாராயிருக்கிறவர். ‘பழைய காலத்து வீரர்கள் தங்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தியதுபோல, தோழர் ராமசாமி தமது பேனாவை அச்சமின்றி எங்கும் செலுத்துகிறார்’ என்று புகழ்ந்துரைத்துள்ளார். எஸ்.குமாரசாமி ரெட்டியார் தன்மான இயக்கத்தின் பகுத்தறிவு ஒளி தமிழ்நாட்டோடு நிற்கவில்லை. அது பிற மாநிலங்களிலும் தொலைத்தொடர்புகள் அற்ற காலத்திலேயே பரவிற்று. ‘இந்த இயக்கமானது மக்களின் பேதத்தையும் அறியாமையையும் உயர்வு தாழ்வையும் ஒழிப்பதற்கு ஏற்பட்டதாகும். இவைகள் ஒழிந்தால் தானாகவே சுயமரியாதை உதயமாகிவிடும். இவ்வியக்கம் நாட்டில் எவ்வளவு பரவியிருக்கிறதென்பதற்குப் பம்பாய் முதலிய வெளி மாநிலங்களில் சுயமரியாதை மாநாடுகள் கூடுவதும் அவைகளில் செய்யப்படும் தீர்மானங்களும் போதிய சான்றாகும்’ என்று 20.7.1929இல் திருநெல்வேலியில் நடந்த, மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில், அம் மாநாட்டைத் திறந்துவைத்த எஸ்.குமாரசாமி ரெட்டியார் விளக்கினார். எஸ். இராமநாதன் பெரியாரோடு சேர்ந்து காங்கிரசு தொண்டாற்றி, கதரைப் பரப்புவதில் துணை நின்று, பின்னர், வகுப்புரிமைக்குப் போராடும் பொருட்டு, காங்கிரசை விட்டுப் பெரியாரோடு வெளியேறியவர், எஸ். இராமநாதன், எம்.ஏ.,பி.எல். ஆவார். அவர் தன்மான இயக்கத்தில் பல்லாண்டு, பெரியாருக்குத் துணையாக விளங்கியவர். அவர் பெரியாரைப்பற்றிக் கூறும்போது, ‘வைக்கம் வீரர் என்பவர் ஒரு மனிதரல்லர். அவர் எனக்கு ஒரு மனிதராகத் தோன்றவில்லை. ஒரு கொள்கையாகவே தோன்றுகிறார். அந்தந்த நாடுகளில் இவரது கொள்கை நிலைக்கக் காணலாம். மற்றும் தீவிரமாக எந்த மக்கள் உரிமைப் போராட்டம் புரிகின்றாரோ அந்த மக்கள் இந்தக் கொள்கையையே கொண்டிருப்பதையும் காணலாம்’ எனக் குறிப்பிடுகிறார். கலப்புத் திருமணம்  பகுத்தறிவுப் பகலவன், தன்மான இயக்கத் தந்தை, பெரியார் ஈ.வே.ராமசாமி அரை நூற்றாண்டுக்கு மேலாக அயராது பாடுபட்டதன் விளைவாகக் கலப்புத் திருமணங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன. இயக்கத்தின் ஒத்துழைப்பிலும் இயக்கத்திற்கு அப்பாலும் எண்ணற்ற கலப்புத் திருமணங்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. எல்லாச் சாதிகளிலும் எல்லாப் பெரிய குடும்பங்களிலும் பிற சாதிக் கலப்பு மணம் நடைமுறை வாழ்க்கையாகிவிட்டதைக் காண்கிறோம். சாதிக்குள்ளேயே திருமணம் என்பதை அநேகமாக, சமுதாய ஏணியின் கீழ்படிக்கட்டுகளிலும், பொருளியலில் அடிமட்டத்திலும் இருப்போர் மட்டுமே பின்பற்றி வருகிறார்கள். புரோகிதமற்ற திருமணங்கள், அய்ம்பதாண்டு காலத்தில், இலட்சக்கணக்கில் நடந்துள்ளன. ‘இராகு கால’ திருமணங்களும் எண்ணற்றன.  1967ஆம் ஆண்டு சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி சட்டத்தை முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணா நிறைவேற்றி வைத்தது, தன்மான இயக்கத்திற்குப் பெரும் வெற்றியாகும். புரோகிதர்களை, சடங்குகளை, நீக்கிவிட்டுத் திருமணம் செய்துகொண்டோர், வைதீக முறையிலேயே திருமணம் செய்து கொண்டவர்களைவிட அதிக சிறப்போடு வாழ்வதைக் காணும் இளைஞர் உலகம், அடுத்தபடிக்கு முன்னேறுவதாக; பதிவுத் திருமணங்களைச் சிக்கனமாகச் செய்து கொள்ளும் பழக்கத்திற்கு வருவதாக செய்திகள் கூறுகின்றன. கோயில் நுழைவு தீண்டாமை குற்றம் என்று அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள் ளது. இது பெரியாரின் கொள்கைக்கு வெற்றியாகும். வழக்காடத் துணிவிருந்தால் எவ்வகையில் எவ்வுருவில் தீண்டாமையைக் காட்டினாலும் அவர் தண்டிக்கப்படுவார். அண்மையில் தமிழ்நாட்டில் ஓர் ஊரில், ஆதி திராவிடர் ஒருவருக்குக் கொட்டாங்குச்சியில் தேனீர் ஊற்றியதற்காக, ஓட்டல்காரர் தண்டிக்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்பதற்காகப் போராடிய பெரியார், வைக்கத்தில் வெற்றி கண்டார். கல்பாத்தியில், சுசீந்திரத்தில் அதன்பின் விளைவைக் கண்டார். தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோயில்களிலும் எல்லாச் சாதியாரும் போகலாம் என்னும் சட்டம் நடைமுறையில் இருப்பதை, பெரியார் தம் வாழ்நாளிலேயே கண்டார். சமுதாயத்தின் கீழ்ப் படிக்கட்டுகளில் உள்ள பல சாதியார் சமைப்பதை மற்ற சாதியார் ஒன்றாய் இருந்து உண்பதை நடைமுறையாக்கிவிட்டார். சாதி ஏற்றத்தாழ்வைக் காட்டும் அடையாளமாக, ஓட்டல்களில், ‘பிராமணாள்’ என்னும் அறிவிப்பு அநேகமாகப் பறந்து போய்விட்டது. பொதுக் குளங்கள், கிணறுகள், வீதிகள் ஆகியவற்றை எல்லோரும் பயன்படுத்தும் நிலை உருவாகி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சிற்சில சிற்றூர்களில், விட்டகுறை தொட்டகுறையாக, சாதி வேற்றுமை பாராட்டப்படுகிறது. அவ்விடங்களிலும் எல்லா வகையிலும் வேற்றுமை அடியோடு தொலைவதற்காகப் பாடுபடவேண்டியது நம் கடமையாகும்.  இன்றைய நடைமுறைப்படி பார்ப்பனர்கள் மட்டுமே தமிழ்நாட்டு கோயில்களில் கருவறைக்குள் செல்லலாம். இம்முறை பார்ப்பனர் அல்லாதாரை இழிவுபடுத்துதலாகும். எனவே கோயில் கருவறைக்குள் எல்லோரும் நுழைவதற்காகக் கிளர்ச்சி செய்யப் பெரியார் திட்டமிட்டிருந்தார். அதை நடத்தி வெற்றி பெறுவதற்குள் மறைந்துவிட்டார். பின்தலைமுறைக்கு அத்தொண்டை விட்டுவிட்டுப் போயிருக்கிறார். யாவர்க்கும் ‘அர்ச்சகர்’ தொழில் உரிமை சாதி வேற்றுமையின்

இன்றைய சூழலில் கல்வி – 2

இன்றைய சூழலில் கல்வி – 2

ஆசிரியர்களே தேவையில்லை என்கிறார் ரூசோ, பள்ளிக்கூடமே அவசியமில்லை என்கிறார் ஜான்ஹோல்ட். நோய்த்தொற்றின் அச்சுறுத்தலும் ஊரடங்குச் சூழலும் இவர்கள் கூற்றை உண்மையாக்கியிருப்பது யதார்த்தம். குழந்தைகளுக்கான மூன்றாவது இடத்தைச் சிந்திப்பது குறித்து  சென்ற இதழில் பேசினோம். ஆனால் இன்று வேறொரு பிரச்சனை நம்மைத் திசை திருப்பி யுள்ளது. ஆம், நமது கல்வி முறையில் பள்ளிக் கல்வியின் இறுதி வகுப்புகளாக  அமைந்துள்ள 11 , 12 ஆம் வகுப்புகளின் சேர்க்கையில் இந்தக் கல்வியாண்டு முதல் கொண்டு வந்துள்ள மாற்றம்தான் அந்தப் பிரச்சனை. மேல்நிலைக் கல்விப் பிரிவுகள்குழப்பத்திற்கு வழி வகுக்கின்றனவா? தற்போதைய மேல்நிலைக் கல்விப் பாட அமைப்புகள் புதியதாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. இவை உயர் கல்வி வாய்ப்புகளில் சிக்கல்களை விளைவிக்கும் வகையில் உள்ளன. கோத்தாரி கல்விக் குழுவின் பரிந்துரையின் பேரில் நம் தமிழகப் பள்ளிக் கல்வியில் 1977- 1978 கல்வியாண்டு முதல் 10+2 என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மேல்நிலைக் கல்வியில் பகுதி ஒன்று மற்றும் இரண்டில் மொழிப் பாடங்கள் தரப்பட்டிருக்கும். இவை தவிர பகுதி மூன்றில் சிறப்புப் பாடங் களாக கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், கணக்குப் பதிவியல், விவசாயம், மனையியல், பொருளியல், வணிகவியல், அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல்… இப்படி ஏறத்தாழ  30 பாடங்கள் உருவாக்கப்பட்டன.  பகுதி மூன்றில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் நான்கு பாடங்களை மாணவர்கள் படிக்க வேண்டும். மொழிப் பாடங்களுடன் சேர்த்து அவர்கள் படிக்க வேண்டியது மொத்தம் 6 பாடங்கள், 1200 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களின் சுமையைக் குறைக்க கடந்த 2017-18 கல்வியாண்டு முதல் ஒவ்வொரு பாடத்துக்கும் நூறு மதிப்பெண் களுக்கு மட்டுமே தேர்வு என்ற அடிப்படையில் மொத்த மதிப்பெண் கள் 600 ஆகக் குறைக்கப் பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டே கல்லூரி களில் உயர்கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் பெறும் நடைமுறை இருந்து வருகிறது. தமிழகத்தின் இந்த மேல்நிலைக் கல்வி முறை இந்திய மாநிலங்களிலேயே தனித்தன்மையுடன் திகழ்ந்து வருவதாகவும் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. ஏனெனில் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்த பாடப் பிரிவுகள் உயர்கல்வியில் வழங்கி வந்தன. புதிய அரசாணை 166 கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு புதிதாக அரசாணை ஒன்றை வெளி யிட்டது. பள்ளிக் கல்வித் துறை அரசாணை 166, 18.09.2019-ன் படி பகுதி 3 -இல் புதிய முறையை அறிமுகம்செய்தது. அதன்படி ஏற்கனவே ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஃபர்ஸ்ட் குரூப், செகன்ட் குரூப் என்ற வகையில்  நான்கு பாடங்களைப் படிக்கும் மாணவன் இந்தப் புதிய முறையில் மூன்று பாடங்களை மட்டும் படித்தால் போதுமானது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பொருட்டும், உயர் கல்வி வேலை வாய்ப்புகளை அதிகமாக்கும் வகையிலும் இந்தப் புதிய முறை மேம்படுத்தப் பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மாணவர்  விருப்பப்பட்டால் மூன்று பாடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது பழைய முறையான நான்கு பாடங் களுக்கான முறையையும் தேர்வு செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை நடப்புக் கல்வியாண்டி லிருந்து பின்பற்ற வழிகாட்டப் பட்டுள்ளது. இதன்படி 3 பாடங்களைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டிய மொத்தப் பாடங்கள் 5 மட்டுமே. இதில் 500 மதிப்பெண் களுக்கு தேர்வுகள் நடைபெறும். அல்லது மாணவன் 4 பாட முறையைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டியது 6 பாடங்கள், மொத்த மதிப்பெண்கள் 600. உண்மையில் என்ன நடக்கிறது? இந்தக் கல்வி ஆண்டில் கோவிட் 19 பொது முடக்கத்தால் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்தாகி விட்டது என்பதை நாம் அறிவோம். தேர்ச்சி முடிவுகள் அரசின் வழிகாட்டலால் கிரேடு முறையில் தரப்படும் என்பதை விரைவில் எதிர் பார்க்கலாம். ஏற்கனவே தனியார் பள்ளிகள் + 1 சேர்க்கையைத் தங்கள் வழியில் துவங்கிவிட்டன. அரசுப் பள்ளிகளில் அரசின் முறையான வழிகாட்டலுக்காகத் தலைமை ஆசிரியர்கள் காத்துக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து விபரம் கேட்டு வரும் பெற்றோர்களுக்கு இந்தப் புதிய முறை குறித்த விளக்கங்களையும் அளித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர்களிடம் பேசும்போது, பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் புதிய 5 பாட முறைகளைக் குறித்தே விளக்கி வருவதாகவும், அதை அடிப்படை யாகக் கொண்டு தான் சேர்க்கை நடை பெறும் என்றும் பரவலாகக் கூறுகின்றனர். அதற்கு நியாயமான காரணங்களையும்  அவர்கள் முன் வைக்கின்றனர். அருகாமைப் பள்ளிகளில் ஒரு பள்ளியில் 5 பாடங்கள் இருந்து மற்றொரு பள்ளியில் 6 பாடங்கள் இருந்தால் குறைவாகப் படிக்க வேண்டும் என்று மாணவர்கள் 5 பாடமுறை உள்ள பள்ளிக்கே செல்கின்றனர். ஆகவே மாணவர் சேர்க்கை குறைவதால் நாங்களும் 5 பாடங்களைக் கொண்ட பாடப் பிரிவையே அறிமுகப்படுத்துகிறோம் என்கின்றனர். அதே போல 6 பாடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் இருந்தாலும் குறைந்த அளவில் மட்டுமே மாணவர் இருந்தால் அந்தப் பாடப் பிரிவை நடத்த பள்ளிகளால் இயலாது. எனவே நம் கண் முன்னாலேயே பாடப்பிரிவுகளும் பள்ளிகளும் காலாவதி யாவதை விரைவில் காணப்போகிறோம். உயர்கல்வி வாய்ப்பின் பல வழிகளை அடைக்கும் புதிய முறை நான்கு பாடங்களை உள்ளடக்கிய  முறையில் உதாரணமாக கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல் எனப் படிக்கும் போது ஒரு மாணவனுக்கு பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர் கல்வியில்  வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தற்போது உயிரியல் பாடத்தை நீக்கி அது மூன்று பாடமாகக் குறையும் போது பொறியியல் துறை மட்டுமே படிக்க இயலும். மருத்துவம் சார்ந்த உயிரியல் பாடப் பிரிவை நீக்கி, வழிகளை அடைத்து ஒரு வழிப் பாதையாக மாற்றும்போது அங்கும் மாணவர்கள் தன் வாய்ப்புகளை இழக்கிறார்கள். நீட் தேர்வில்  CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே வினாக்கள் இடம்பெறுகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் பாடங்கள் கொண்ட முழு அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்புக்குப் பிறகு கணிதத்தோடு தொடர்பே இல்லாததால் இயற்பியல், வேதியியல் பாடங்களில் இடம்பெறும் கணக்குகளைத் தீர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. அதற்கே இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், மேலும் ஒரு பாடத்தைக் குறைப்பது என்பது, நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களை மேலும் பின்தங்கிவிடச் செய்யும். எனவே, தனியார் பள்ளி மாணவர்களுக்காகவே இந்தப் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. போலவே, புதிய முறையில், கணக்கு, இயற்பியல் பாடத்துடன் மட்டுமே கணினி அறிவியல் பாடம் இடம்பெறுகிறது. இந்தப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே இனி கணினி சார் கல்லூரிப் படிப்புக்குச் செல்ல முடியும். கலைப்பிரிவில் (ஆர்ட்ஸ் குரூப் ) Typography and Computer Application என்றொரு பாடத்தை ஒப்புக்காக இடம்பெறச் செய்கிறார்கள். கணினி அறிவியல் பாடம் இல்லை எனில் ஆர்ட்ஸ் குரூப் தேர்வு செய்யும் மாணவர்கள் கணினி சார்ந்த உயர் கல்வியைப் பெற முடியாமல் போய்விடும். அதேபோல, கணினி அறிவியலுடன் கணக்கு, இயற்பியல் மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வியில் பொறியியல், கணினித் துறைகள் மட்டுமே படிப்பதற்கு வாய்ப்பு உண்டு. வேதியியல் தொடர்பான எந்த மேற்படிப்பையும் இவர்கள் படிக்க முடியாது. இவ்வாறு பல குழப்பங்களை இப்புதிய முறை விளைவிப்பதோடு உயர்கல்வியில் மாணவர்களுக்கான எல்லா வழிகளையும் அடைப்பதற்கான ஆபத்துகளைத் தருகிறது. தொடர்ந்து உரையாடுவோம்!

இசையோடு சில இனிய நினைவுகள்

இசையோடு சில இனிய நினைவுகள்

அன்பிற்கினிய சுவடு மின்னிதழ் வாசகப் பெருமக்களே வணக்கம்! ஒரு படைப்பாளி வெகுஜன ஊடகங்களில் எழுதுவதே பெருமையென நினைத்து வாய்ப்புத்தேடி எழுதிய காலமொன்றிருந்தது. அவ்வகையான ஊடகங்கள் இலக்கியத்திற்கென் இணை ஏடுகள் நடத்தத் தொடங்கியதும் அதில் எழுதுவதை பெருமை யாகப் பார்க்கப்பட்டது. அதன் பின் வந்த கால மாற்றத்தில் எல்லாம் வணிக மயம் என்றான பின் படைப்பாளிகள் சிற்றிதழ்கள் பக்கம் திரும்பினர். தொடங்கிய திலிருந்தே வியாபார நோக்கமின்றி தரமானதைத் தேடி அச்சிட்டுத் தந்து கொண்டிருக்கும் சில பல சிற்றிதழ்களுக்கு மாற்ற மில்லாத மரியாதை இருந்து கொண் டேதான் இருக்கிறது. ஊடகத் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் அச்சிதழ்கள் மின்னிதழ்களாக மாறிவிட்டது. அதனோடு ஏற்பட் டுள்ள அசாதாரணச் சூழலில் இதைத்தான் செய்யமுடியுமென்ற நிலைக்கு இன்று எல்லாத் துறையும் வந்துவிட்ட நிலையில் ஒரு தரமான நடுத்தர நடுநிலை இதழாக சுவடு மின்னிதழ் வருகிறது. வாழ்த்துக்கள். இதில் எனது படைப்புகளையும் வழங்கி பங்கேற்பு செய்வதில் மகிழ்கிறேன். “இசையோடு சில இனிய நினைவுகள்” என்ற தலைப்பில் இவ்விதழில் மாதம் இருமுறை உங்களைச் சந்திக்க வருகிறேன். வாஞ்சையுடன் உங்கள் வளநாடன் அன்று அந்தக் கல்லூரியில் கலைவிழா நாள். மாலையில் மேடை நிகழ்வுகளும் காலையில் கலகலப்பான உள்ளரங்கு கேளிக்கை களும் நடந்து கொண்டிருந்தது. மாணவர்களின் கலை ஆர்வத்தை அறிந்து கொள்ளூம் விதமாக பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக மாணவர் களிடம் தங்களுக்குப்பிடித்த கவிஞர்கள், அவர்களைன் படைப்புகளைப் பற்றி ஒரு ஆசிரியர் மாணவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு மாணவன் எழுந்து பா.விஜய் என்றான். அவரின் பாடல் வரிகளில் உள்ள கவித்துவமான வரிகளை மேற்கோள் காட்டினான். ஒரு மாணவி எழுந்து நா.முத்துக்குமார் என்றவள் அதைப்போல ஒரு பாடலில் உள்ள ஒரு வரியை சற்று ராகத்தோடு பாடலாகவே பாடிக் காட்டினாள். அதற்குப் பின் மாணவர்களிடையே உற்சாகம் வந்து ஒட்டிக்கொள்ள கீழிலிருந்து மேல் வரிசையில் வைரமுத்து, வாலி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமென அவரவர்களுக்குப் பிடித்த கவிஞர்களையும், அவர்கள் எழுதிய பாடல்களில் அவர்களுக்குப் பிடித்த வரிகளையும் மேற்கோள் கட்டி சிலர் வாசித்துக் காட்டியும், சிலர் பாடிக்காட்டியும் அந்நிகழ்வை கலகலப்பாக்கிக் கொண்டிருந்த போது ஒரு மாணவி எழுந்து தனக்குப் பிடித்த கவிஞர் அவரென்றும், அவரடு கவிதையில் இந்தந்த வரிகளால் எனக்கு அவரைப் பிடிக்கும் என்றும் கூறினார். ஆட்டமும், பாட்டமும் கொஞ்சம் அடங்கி அறை சற்று அமைதியானது. அதற்குப் பின் சில முணுமுணுப்புகள் எழத்தொடங்கியது. இவரை யாரென்று தெரியாது. அவர் எழுதியதாகச் சொன்ன கவிதையும் எங்களுக்குத் தெரியாதே என்று சொல்ல, சிலர் முணுமுணுப்பைக் கடந்து சற்று கேலியாகவும், கிண்டலாகவும் சிரிக்கவும், பேசவும் தொடங்கியதும் அந்த மாணவி மீண்டும் எழுந்து ”சார்… தங்களுக்குப் பிடித்த கவிஞர்கள், அவர்களின் கவிதை களையும் சொல்லவேண்டும் என்றுதானே நீங்கள் கேட்டீர்கள்? அதில் பிரபலமானவரின் பெயரைச் சொல்லுங்கள் என்று நீங்கள் கேட்க வில்லையே” பிரபலமாவது என்பது படைப்பின், கவிதையின் அடிப்படையில் மட்டும் எல்லாருக்கும் அமைந்து விடுவதில்லை. அவரவர்களின் சந்தர்ப்பம், சூழல், அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு, அதைச் சரியாய் பயன்படுத்தி அவர்கள் அடைந்த வெற்றி அதனால் கிடைப்பதுதான் பிரபலம் என்பதே. இங்கே நான் குறிப்பிட்டுச் சொன்ன கவிஞரும் நல்ல கவிஞர்தான். இவரது கவிதைகளும் படைப்பும் சிறந்ததுதான். அவருக்கு அந்த பிரபலமாகும் வாய்ப்பு அமையவில்லையே தவிர அவரது எந்தக் கவிதையையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. மேலே இவர்களெல்லாம் குறிப்பிட்ட அந்தக் கவிஞர்களெல்லாம் சிறந்த கவிஞர்கள்தான். அதை நான் மறுக்கவில்லை, நானும் அவர்களத் விருப்பத்தை ஏற்று அவர்களின் பெயர்களைச் சொல்லும்போதெல்லாம் கைதட்டி வரவேற்றேன். அவர்களுக்கு விருப்பமான பிடித்த கவிஞர்கள் இருக்கும்போது எனக்குப் பிடித்த ஒரு கவிஞர் பெயரைச் சொன்னபோது ஏன் இவர்கள் கேலி பேசி கிண்டல் செய்கிறார்கள்? என்ற அந்த மாணவி இறுதியாய் அங்கே இன்னொன்றையும் சொன்னாள். ”சார் இங்குளோர் குறிப்பிட்ட அந்தப் பெயர்கள் அனைவருமே பாடலாசிரியர்கள், இசைகோர்த்து இன்னொருவர் பாடி, திரைப்படத்தில் காட்சியாகி பட்டிதொட்டியெங்கும் பார்க்கப்பட்டுபேசப்பட்டு, ஒலிக்கப்பட்ட திரைப்படம் சார்ந்து எழுதியர்கள். நான் சொன்னவர் கவிதை மட்டுமே எழுதிய ஒரு கவிஞர்” என்றதும் மீண்டும் அந்த அறை அமைதியால் நிறைந்தது. ஆசிரியர் அந்த மாணவி சொல்வதும் சரிதானே? பிடித்த கவிஞர்கள் பெயரைத்தான் நான் கேட்டேனே தவிர பிரபலமான கவிஞர்கள் பெயரைச் சொல்லுங்கள் என்று எனது கேள்வியில் இல்லையே” என்றதும் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு கைதட்டு எழும்ப அனைத்து மாணவர்களும் கை தட்டிட மீண்டும் மாணவர்களிடையே உற்சாகம் ஓடிவந்து ஒட்டிக் கொண்டது. ஆசிரியர் அந்த மாணவியின் பக்கம் திரும்பி அவள் சொன்ன கவிஞரைப் பற்றிய மேலும் விவரம் கேட்டதும், அவள் சொன்னாள் ”சார்…. நான் குறிப்பிட்டுச் சொன்ன அந்தக் கவிஞர் வேறு யாருமில்லை எனது அப்பாதான். அவரும் நல்ல கவிஞர்தான். அவரது எளிமையான இனிய கவிதைகள் பல எனக்குப் பிடிக்கும். இது என் அப்பா எழுதிய கவிதையென நான் சொல்லி விட்டுத் தொடங்கி யிருந்தால் அந்தக் கவிதை கூட இந்த அறைக்குள் இருக்கும் இந்த மாணவ, மாணவி களிடம் சென்று சேர்ந்திருக்காது. அதனால் பிடித்தவர் என பெயர் சொல்லிவிட்டு அவரதுஒரு கவிதை யையும், இங்கு வாசித்துவிட்டு, அதற்கு இத்தனை விளக்கமும் சொல்ல வேண்டிய தாயிற்று. இதற்குப் பெயர் வாய்ப்பும், சூழலும் என்பது” என்றாள். மேலே நான் குறிப்பிட்டுள்ள நிகழ்வு கற்பனையல்ல. ஒரு கல்லூரியில் கலைவிழா அன்று நடந்த உண்மை நிகழ்வுதான். அந்த மாணவி எனது மகள். அவள் குறிப்பிட்ட கவிஞர் நானேதான். என்னைப்பற்றி நானே சொல்லிக்கொள்ள வேண்டுமென இந்நிகழ்வை இங்கே குறிப்பிடவில்லை. ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் இணைத்துச் சொல்ல ஒருவாய்ப்புதான் அது. ஒரு இசைக்குழு ஒன்றில் நான் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது மேடையில் நாமும் ஒரு பாடலைப் பாடிவிட வேண்டுமென ஆசைப்பட்டு இசைக்குழு ஒருங்கிணைப் பாளரிடம் வாய்ப்புக் கேட்டேன். யாருடைய குரல் உனக்கு ஒத்துவருமோ அவரோட குரலில் பிரபலமான ஒரு பாடலைத் தேர்வு செய்து நல்ல பயிற்சி எடுத்துக்கொண்டு வா என ஒப்புதல் அளித் தார். அப்போது எனக்கு ஏகப்பட்ட பாடகர்களை எனக்குப் பிடிக்கும். அதில் டி.எம்.எஸின் கம்பீரமான குரலில் மயங்கிப்போனேன். ஆனால் அவரது எந்தப்பாடலும் எனக்கு அதாவது எனது குரலுக்கு ஒத்துவராதபோது, பல்கலை வித்தகர் சந்திரபாபுவின் குரல்தான் அவர் பாடிய பாடல்தான் சரியாக இருக்குமென நாம் பாடிடக் கேட்ட நண்பர்கள் சொன்னதால் அவருடைய பாடலொன்றைத் தேர்வு செய்து பாடிப்பாடி பயிற்சி செய்துகொண்டு இரு நிகழ்ச்சியில் ஒரு வாய்ப்பு பாடுவதற்கு எனக்கு வந்தது. அப்போதும் டி.எம்.எஸ்.குரல்மீது உள்ள ஈர்ப்புக் குறையாத காரணத்தால் ரொம்ப மென்மையாய் அவர் பாடிய பாடலொன்றைத் தேடிப்பிடித்து தேர்வு செய்தேன். பயிற்சியெடுத்து குழுவினர் முன் பாடிக்காட்டி அடுத்த நிகழ்ச்சியொன்றில் பாடுவதென முடிவானபின் பாடலின் வரிகளைப் பாடப்பாட எளிமையும் அந்தப் பாடலில் தன் காதலையை வர்ணிக்க கவிஞர் எடுத்தாளும் உவமை மேற்கோளும் அந்தப் பாடலை எழுதியவர் மேல் எனக்கொரு அன்பும், மரியாதையும் என்னையுறியாமல் வந்துவிட்டது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, உடுமலைப் பேட்டையார், ஆலங்குடி சோமு, வாலி, இவர்கள் வரிசையில் இன்னொரு கவிஞரே அவர். (கண்ணதாசனை ஏன் இவர்களில் சேர்க்கவில்லை என ஒரு கேள்வி எழலாம். அவர் எங்க ஊர்க்காரர் என்பதோடு எல்லாருக்கும் மேல் என் இதயத்தில் இடம்பிடித்தமர்ந்தவர். ஏன் என்பதற்கு என்னிடம் நிறையப்பதில் உள்ளது) கண்ணதாசனை விடுத்த கவிஞர்கள் பட்டியலில் இன்னொருவர் இருந்தார் என்றேனே அந்தக் கவிஞர் எழுதி, டி.எம்.எஸ் அவர்கள் மிக மென்மையாகப் பாடிய அந்தக் காதல் பாடலைத்தான் நான் இசைக்குழுவில் பாடுவதற்காக நான் தேர்வு செய்திருதேன். அந்தக் கவிஞர்தான் கவிஞர் கா.மு.ஷெரிப். அவர் எழுதிய அற்புதமான மேற்கோளுடன் தன் காதலியை வர்ணித்துப்பாடும் மிக எளிமையான அதே நேரம் மிக இனிமையான பாடல்தான் நான் பாடிக் கைதட்டல்கள் வாங்கினேன். அது என்ன பாடலாக இருக்குமென யோசித்துக் கொண்டிருங்கள். அடுத்த இதழில் அதைப்பற்றிச் சொல்கிறேன்.

முகிலோடும் முகடோடு…

முகிலோடும் முகடோடு…

இந்தப் புவியின் ஒட்டுமொத்த இயற்கை அழகையும் ரசித்து முடிக்க ஒரு பிறவி போதாது. உலகம் முழுக்க புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் பல இருந்தாலும் இந்தியாவுக்குள்ளேயே நாம் இதுவரை கண்டிராத பேரழகு கொட்டிக் கிடக்கிறது. அதிலும், ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் உலகிலேயே வேறெங்கும் காணக்கிடைக்காத  அற்புதங்கள் ஏராளம்… ஏராளம்…! அந்த அற்புதக் காட்சிகளைக் கண்கள் குளிரக் கண்டு, உள்ளம் குளிர உலா வந்தது எங்களுக்கு அமைந்த நல்வாய்ப்பு. ஏழு சகோதரிகள் (Seven Sisters) என அழைக்கப்படும் மாநிலங்கள் அசாம், அருணாச் சலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகியவை. 2016 நவம்பர் 10ஆம் தேதி முதல் 17 நாட்கள், என் இரு மகன்களுடன், என் தங்கையும் நானும் சென்று வந்த மறக்க முடியாத பயண அனுபவங்களைச் சுவடு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. மகன்களின் புவியியல் அறிவும், இயற்கையின் மேல் அவர்கள் கொண்ட காதலும், என் கணவர் வர இயலாத சூழலிலும் எங்கள் பயணத்தை மிக அழகாக்கியது. நவம்பர் 10 அன்று காலை சென்னையிலிருந்து எங்கள் பயணம் துவங்கவிருந்த நிலையில் எட்டாம் தேதி இரவு அறிவிக்கப்பட்ட திடீர் பண மதிப்பிழப்பையும் மகன்களின் திறமையால் சமாளித்து, திட்டமிட்டபடி பயணத்தைத் துவக்கினோம். அசாம் மாநிலம் பர்மா மற்றும் பூட்டானுடனும்,  திரிபுரா, நாகலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்கள் பர்மாவுடனும், மேகாலயா பங்காளாதேசுடனும், அருணாச்சலப் பிரதேசம் சீனாவுடனும் தங்கள் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. மிக அதிக அளவு மழை, மிதமான குளிர், கோடையில் வெப்பம், சில இடங்களில் கடும் பனி என அனைத்து வகையான தட்பவெப்ப நிலை, ஆணிவேரிலிருந்து பிரியும் கிளை வேர்களைப்போல பிரம்மபுத்திரா  நதியிலிருந்து பிரிந்து மலைகளினூடே வளைந்து நெளிந்து ஓடும் கிளை நதிகள் என, ஓடி ஓடி உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை வழங்கவும், இயந்திர வாழ்விலிருந்து விடுபட்டு சற்றே இளைப்பாறவும் இங்கே இயற்கை அன்னை தன் மடியில் நமக்கு இடமளிக்கிறாள். அசாமின் பெரிய நகரமான கவுஹாத்தியில் செல்ப் டிரைவிங் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, திகட்ட திகட்ட காரிலேயே மலையெங்கும் சுற்றியது, அருணாச்சல பிரதேசத்தில் 13,700 அடி உயரத்தில் சீன எல்லையில் இருக்கும் ‘தவாங்’ என்னும் கடுங்குளிர் இடத்துக்கு சென்றது, மலையெல்லாம் மஞ்சள் மலராய் எங்களை வரவேற்ற கோஹிமா – இம்பால் மலைப்பகுதியில் உலவியது, இம்பாலில் முழுப் புல்வெளியும் தண்ணீரில் மிதக்கும் அதிசயத்தைக் கண்டது, அங்கே பெண்களே நடத்தும் உலகில் பெரிய ‘இம்மா’ மார்க்கெட்டில் வலம் வந்தது, க்ரங்சூரி, தவ்கி ஆறு, சிரபுஞ்சி, உலகின் சுத்தமான கிராமம், வேர்ப் பாலம் என மேகாலயாவின் அழகை அத்தனை எளிதாக எழுத்தில் வடித்துவிட முடியாது. திரிபுராவுக்கு 12 மணி நேரம் இயற்கையோடு இணைந்த ரயில் பயணமும், உன்னக்கோட்டியின் மலை சிற்பமும், காசிரங்காவின் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களும் தவாங் போகும் போது கடந்த “செலா பாஸும்” என காணுமிடமெல்லாம் பரந்துகிடக்கும் பேரழகில் எதைச் சொல்ல? எதை விட? பயணத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், பாஸ்போர்ட் விசா தேவையின்றி உலகின் பேரழகைத் தரிசிக்க விரும்புவோருக்கும், இயற்கையோடு சில நாட்கள் இன்புற்று வாழ நினைப்போருக்கும் எங்கள் பயண அனுபவம் சிறிதேனும் பயன்படக்கூடும். வாருங்கள், ஏழு சகோதரிகளை இனி வரும் ஏடுகளில் சந்திப்போம். தொடரும்…

கொரோனா அயலகத் தமிழர்கள்  எதிர்கொண்டது எப்படி?

கொரோனா அயலகத் தமிழர்கள் எதிர்கொண்டது எப்படி?

தமிழகத்தில் இருந்து சென்று பல்வேறு உலக நாடுகளிலும் பணியில் இருப்பவர்கள் அந்தந்த நாடுகளில் அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ள கருத்துகளின் தொடர்ச்சி…  ஸ்பெயின்:  சீனாவுக்கு அடுத்ததாக, மார்ச் மாதத்தில் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்த நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள். கோபிசெட்டிப்பாளையம் அருகில் உள்ள கோபிப்பாளையத்தைச் சேர்ந்த முனைவர் குமார் பழனிசாமி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையின் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். அங்கிருந்து அவர் ஸ்பெயின் நாட்டின் கொரோனா தொற்று நிலைமையை நம்மோடு பகிர்ந்துகொண்டார். ஸ்பெயினில் முதல் கொரோனோ தொற்று ஜனவரி 29-ல் கண்டறியப்பட்டது. 60 வயதிற்கு மேற்பட்டோர் அதிகமான நோய்த் தாக்குதலுக்கும் இறப்பிற்கும் ஆளாகியுள்ளனர். மார்ச் துவக்கத்தில் 7000க்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டதை அடுத் அரசு அவசர நிலையை அறிவித்து நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பு, பொருட்களை வாங்கிக் குவிப்பதைத் தடுப்பது, உணவுப் பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள், வாகன எரி பொருள்கள் போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு வராமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. பல லட்சம் சோதனைக் கருவிகளைக் கொள்முதல், தானியங்கிக் கருவிகள் (Robots), மாபெரும் தற்காலிக மருத்துவமனை, மற்றும் அவசரநிலையைக் கண்டிப்புடன் செயல்படுத்தி யதால் தற்போது வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. விரைவில் இயல்பு நிலை திரும்பிவிடும் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது. அவசரநிலை பிறப்பித்த முதல் சில நாட்களுக்கு மக்கள் பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. தற்போது விளைவுகளை உணர்ந்து, பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்கிறார்கள். பொருளாதார பாதிப்பினைச் சமாளிக்க, உடனடி யாக 200  பில்லியன் யூரோவை சிறப்பு நிவாரணத் தொகுப்பாக அரசு அறிவித்தது. முக்கியமாக, கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிக்காக 30 மில்லியன் யூரோ ஒதுக்கப் பட்டுள்ளது. துவக்கத்தில் முகக்கவசம், கையுறை, சோதனைக் கருவிகள், சுவாசக்கருவிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் 420 மில்லியன் யூரோ மதிப்பில் (சுமார் 3500 கோடி ரூபாய்)  மருத்துவக் கருவிகள் வாங்க அரசு ஏற்பாடு செய்தது. இங்கும் ரேப்பிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை செய்யாததால் திருப்பி அனுப்பப்பட்டன. எனவே PCR சோதனை முறையே தொடர்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் இயக்குனர் ஆகியோர் நோய்த்தொற்று அடைந்தோர், இறந்த வர்கள், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, அரசின் நடவடிக்கைகளைப்பற்றி விளக்கினர். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே, அதிக அழுத்தத்துடன் நீண்டநேரம் வேலை செய்தனர். முதல் இரு வாரங்கள் எவ்வித பாதுகாப்புக் கேடயங்களும் இன்றி மக்கள் நலனுக்காக சேவை செய்தனர். அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நாட்டின் மதிப்புமிக்க “ஆஸ்டூரியாஸ் இளவரசி-2020” எனும் விருதினை அறிவித்து கவுரவப்படுத்தி யுள்ளனர். கொரோனாவால் ஸ்பெயின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சி கண்டு வருகிறது. சுற்றுலாத்துறையின் வருவாய் இழப்பு மட்டும் சுமார் 92.5 பில்லியன் யூரோ. பொதுமுடக்கக் காலத்தில் வேலை பறிபோவதைத் தடுக்க, தற்காலிக வேலைவாய்ப்பு ஒழுங்குமுறைத் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. வேலை இழந்தவர்களுக்கு 4 மாதம் முதல் 2  ஆண்டுகள் வரை சம்பளத்தில் 70-50% வரை வழங்கப்படும். சிறு மற்றும் நடுத்தர நிறுவன ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புத் தொகையினை அரசே செலுத்துகிறது. மேலும் மானியத்துடன் கூடிய பொருளாதார உதவிகளையும் அரசு வழங்குகிறது. நோய்த்தாக்குதல் மற்றும் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை எங்களுக்கு அச்சமூட்டியது. பெற்றோர்கள் எங்களின் நிலை குறித்து மிகுந்த கவலை கொண்டனர். அரசின் நடவடிக்கைகள், பணிபுரியும் நிறுவனத்தின் ஒத்துழைப்பு, பெற்றோர், உறவினர்களின் புரிதல், நண்பர்களின் ஆறுதல்கள் போன்றவற்றால் மனஇறுக்கம் குறைந்தது. தற்போது அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. மேலும் சில மாதங்களுக்கு முககவசம் அணிவது, சமூக விலகலைக் கடைபிடிப்பது போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொரடப்படும். சமூகப் பொறுப்புடன் அலட்சியம் தவிர்த்து, அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கி இந்தக் கொரோனா நோய்ப் பரவலைத் தடுத்து, மானுட வாழ்வியலைப் புதியபாதையில் கொண்டு செல்வது நம் அனைவரின் தலையாய கடமை” என முடிக்கிறார் குமார்.  இங்கிலாந்து:  கோயம்புத்தூரைச் சேர்ந்த கஸ்தூரி ராஜி சுப்பிரமணியம். இங்கிலாந்தில் பெர்க் ஷயர் நகரில் வசிக்கும் அவர் டேட்டா சயின்டிஸ்டாகப் பணிபுரிகிறார். “இங்கிலாந்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனா நுழைந்தது. விடுமுறைக்கு இத்தாலிக்குச் சென்றவர்கள் திரும்பி வந்த இருவாரத்தில், நூற்றுக்கும் மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அப்போது விமான நிலையங்களில் எவ்வித பரிசோதனையும் இல்லை. கொரோனாவை எதிர்க்க ‘Herd Immunity’ வழிமுறையைப் பின்பற்றி, வயதான வர்கள் மற்றும் பிற நோயாளிகளைப் பாதுகாத்துக்கொண்டு, ஏனையோர் வியாதிக்கு உள்ளாகும் பட்சத்தில் சிகிச்சை அளிக்க முடிவானது. அத்தியாவசியப் பணியில் உள்ள KEY WORKERS தவிர மற்றவர்கள் வீட்டிலிருந்து பணி செய்ய அறிவுறுத்தப்பட்டது. இங்கு 95% அரசு மருத்துவமனைகள்தான். அனைத்து சிகிச்சையும் இலவசம். 17000 படுக்கைகள் கொண்ட அவசரகால ICU மருத்துவமனை ஒன்றை உருவாக்கினார்கள். அவசரத்தேவையற்ற மற்ற சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அறுபது வயதிற்கும் மூத்தவர்களின் இறப்பு விகிதம் அதிகம். இப்பொழுது இறப்புகள்  41,000-ஐக் கடந்து விட்டது. மே இரண்டாம் வாரத்திலிருந்து தொற்று குறைந்து வருகிறது. ஜூன்-1 முதல் லாக்-டவுனில் சிறு தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆண்டின் மொத்த பட்ஜெட்டையும் கோவிட்-19க்காக நிதியமைச்சர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். பணி நீக்கத் தடை, 80% சம்பளத்தை (£2500 வரை)  அரசே வழங்குவது, வரிகள் நிறுத்தி வைப்பு, தொழில் முனைவோர் உதவித்தொகை, வீட்டு வாடகை, வீட்டுக்கடன் கட்ட மூன்று மாதம் அவகாசம் போன்ற பயன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் இயல்பு வாழ்வில் இடர்ப்பாடுகள் அதிகம் இல்லை. ஒன்றிரண்டு விதிமீறல்கள் இருந்தன. அவற்றைக் காவல்துறையினர் கண்காணித்து அபராதம் விதித்தனர். பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்கள்  தொலைக்காட்சி மூலம், புள்ளி விவரங்களுடன் உரையாற்றிவிட்டு, பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்களின் கேள்விகளுக்கு விடையளிப்பார்கள். எங்களின் நிலையை எண்ணி  இந்தியாவில் சொந்தங்கள் கவலை கொண்டனர். ஆனால், இங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளால் அவர்கள் ஆறுதலடைந் தார்கள். ஆனால், அங்கு லாக்-டவுன் முதல் துறைகளை ஒழுங்குபடுத்துவது வரை பல வேறுபாடுகளைப் பார்த்தபோது மனம் சஞ்சலமானது. மக்கள் சாரை சாரையாக சாலைகளில் நடப்பதும், சிறு குறு தொழில்களுக்கு அரசு உதவிகள் எதுவும் வழங்காதததும், பிரதமர் இந்தப் பேரிடரில்கூட பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து மக்களுக்கு விளக்கமளிக்காததும் ஏமாற்றம் அளித்தது. ஒரு நாட்டின் தலைமையால் அந்த நாட்டு மக்களைக் காக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அனைவரும் கவனமாக இருப்போம், நம்மை நாமே காத்துக்கொள்ள உரிய முயற்சிகளை மேற்கொள்வோம்” என்கிறார் கஸ்தூரி.  ஆஸ்திரேலியா:  தீவுக் கண்டமான ஆஸ்திரேலியா, துவக்கம் முதலே கொரோனா தொற்று அதிகம் இல்லாமல் ஓரளவு பாது காப்பாகவே இருந்துவருகிறது. இது எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து, ஆஸ்திரேலி யாவின் டார்வின் நகரில், ராயல் டார்வின் மருத்துவமனையில் நிர்வாக அலுவலராகப் பணிபுரியும், குமரி மாவட்டம் திருஞானபுரத்தைச் சேர்ந்த மோசஸ் மனோகர் பல செய்திகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார். ஆஸ்திரேலியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஜனவரி 22 முதலே வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவித்து விட்டது. தொற்று எண்ணிக்கை 200-ஐ எட்டிய போது பேரங்காடிகள், திரையரங்குகள், மதுக்கடைகள், பார்கள், தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பேருந்து, தொடரி, விமானம், லிப்ட் அனைத்திலும்  சமுதாய இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. உணவுப் பொருட்கள் உட்பட எல்லா அத்தியாவசியப் பொருட்களும் தங்கு தடை யில்லாமல் மக்களுக்கு கிடைக்க அரசு ஆவன செய்தது. சிறு அறிகுறி என்றாலும் மக்கள் பரிசோதனை மையங்களுக்குச் சென்று தங்களை பரிசோதித்துக் கொண்டார்கள். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்த போது வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்படாமல் இராணுவப் பாதுகாப்போடு நட்சத்திர விடுதிகளில் தனிமைப் படுத்தப்பட்டார்கள். மருத்துவர்களும் செவிலியர் களும் அவர்களை விடுதி களுக்கே சென்று பரிசோதித் தார்கள். தற்போது ஐந்து மாநிலங்கள் கோரோனா இல்லாத மாநிலங்களாகி விட்டன. சுமார் 400 பேர் மட்டுமே பாதிப்பில் உள்ளார்கள். தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கம் தாண்டுவதில்லை. விரைவில் இதையும் தடுக்க மருத்துவத் துறை கடுமையாய்ப் போராடுகிறது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 102 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந் திருக்கிறார்கள். இப்போது இயல்பு வாழ்க்கை ஓரளவிற்குத் திரும்பி விட்டது. திரையரங்குகள் மட்டுமே இன்னும் திறக்கப்பட வில்லை. எப்போதும்போல் மக்கள் இப்போதும் அரசு விதிகளை மதித்து நடந்து கொண்டார்கள். ‘பிரதமர் அல்லது முதல்வர் சொல்லி நான் ஏன் கேட்க வேண்டும்?’ என யாரும் நினைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் தரப்பிற்குத் துணை நிற்கிறார்கள். விரைவில் கொரோனா இல்லாத நாடாக ஆஸ்திரேலியா மாறிவிடும் என்கிறார் மோசஸ்.  கனடா:  கனடாவின் வான் கூவர் நகரில் Supply Chain Analyst ஆகப் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த அஸ்வின் குமார் ராமசுப்பு கனடா நாட்டின் கொரோனா சூழலை விவரிக்கிறார். மார்ச் மாத முதற்பாதி வரை கனடாவில் கொரோனா பரவல் துவங்காததால், அதுவரை வெளிநாட்டுப் பயணிகளை பரிசோதனையின்றி அனுமதித்து வந்தது. தொற்றுப் பரவல் அதிகாரத்த முதல் இரு மாதங்கள் நிலைமீறி சென்றுகொண்டிருந்த நிலையில், பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது மெதுவாகப் பலனளிக்கத் துவங்கிவிட்டது. முடக்கம் அறிவித்த முதல் வாரமே, வேலை இழந்த அனைவருக்கும் மாதம் 2000$ (ரூ.1,10,000) என நான்கு மாதங்களுக்கு நிவாரண தொகை அறிவித்தார் பிரதமர். விண்ணப்பித்த அனைவருக்கும் மறுவாரமே உதவித்தொகை அவரவர் வாங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டது. பாதிப்புக்குள்ளான தொழில்களுக்குப் பல்வேறு உதவிகள் அறிவிக்கப்பட்டது. ஊதியம் வழங்கமுடியாத நிறுவனங்களுக்கு ஊதிய தொகையில் 75% அரசு ஏற்பதாக அறிவித்தது. முதற்கட்ட உதவித்தொகைக்கு உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5% ஐ அரசு ஒதுக்கியது. மருத்துவ முறை, பரவல் தடுப்பு விதிகள், மருத்துவ வசதிகளுக்கான ஒதுக்கீடு, கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மாகாணங்களே தீர்மானித்தன. பொருளாதார உதவிகள், வழிகாட்டுதல், கொள்கை முடிவு, மற்றும் வெளியுறவுத் தொடர்புகளில் மட்டுமே மத்திய அரசு முடிவெடுத்தது. பிரதமர் மனைவியும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால் பிரதமர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். எனினும் தினமும் வீட்டுக்கு வெளியே வந்து அறிவிப்புகளை வெளியிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தார். கனடாவில் ஒவ்வொரு மாகாணமும் குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்குகின்றன. பெரும்பாலும் காப்பீடு இலவசம் அல்லது மிகக் குறைந்த மாதத்தொகை கட்டினால் போதும். அதன்கீழ்

கொரோனா அயலகத் தமிழர்கள்  எதிர்கொண்டது எப்படி?

கொரோனா அயலகத் தமிழர்கள் எதிர்கொண்டது எப்படி?

எங்கள் நாட்டில் சூரியனே மறைவதில்லை” என்ற ஆங்கிலேய ஒற்றை ஆட்சித் தலைமையின் ஆணவச் சொற்றொடர் உலகப் புகழ்பெற்றது. இன்றும்கூட ஒட்டுமொத்த உலகத்தையும் ஒற்றைக் குடையின் கீழ் கொண்டுவந்து ஆட்டிப் படைத்துக்கொண்டுள்ளது கண்ணுக்குத் தெரியாத நுண்ணி ஒன்று. ஆம், கொரோனா என்னும் பிணி இன்று உலக நாடுகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மனித குலத்துக்கே சவாலாக விளங்கிவருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னதாகவே உலகம் முழுக்கப் பரந்து கிடந்த இனம்தான் தமிழினம். அத்தகைய பழம்பெருமைக்குச் சொந்தக்காரர்களான நம் தமிழர்கள் இன்றளவும் உலகின் பல்வேறு நாடுகளில் வசித்துவருகிறார்கள். தமிழ்நாட்டில் தினந்தோறும் ஆயிரக்கணக் கானவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருவது உறுதி செய்யப்பட்டுவரும் இந்தச் சூழலில் அயலகத் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள சூழலையும், கொரோனாவை அந்த நாடுகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் முறைகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.  சீனா: கொரோனாவின் வருகை சீனாவிலிருந்து துவங்கியது என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்தக் கொரோனா வைரஸ் பல பத்தாண்டுகள் முன்பே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுதான். அந்த வைரசின் பல்வேறு பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றே வந்துள்ளன. 2019 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட, தற்போதைய வீரியத்தோடு தாக்கும் வைரசுக்கு கோவிட்-19 என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வைரசின் தோற்றுவாயான சீனாவிலிருந்து தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார், அங்குள்ள பன்னாட்டுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை வகுப்புக் கணித ஆசிரியையாகப் பணியாற்றும் உஷா கிரிதரன். சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த இவர் சீனாவில், கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய வூகான் நகரத்திலிருந்து சிலமணிநேரப் பயணத் தொலைவில் உள்ள ஜெஜியாங் மாநிலம், ஹேங்ஜோ நகரில் வசிக்கிறார். “2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் சீனாவில் இந்த வைரஸ் பரவத் துவங்கி உலகமெங்கும் இந்த வைரஸ் பரவியிருந்தாலும், சீனா மீது உலக நாடுகள் பலவும் பலவாறு குற்றம் சாட்டினாலும், வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சீனா அதிக முனைப்புடன் செயலாற்றி, தற்போது ஏறத்தாழ 80% இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது.. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனா, கொரானாவின் பிறப்பிடமாக இருந்தும் ஒரு இலட்சம் என்ற எண்ணிக்கைக்கும் குறைவாகவே பரவலைக் கட்டுப்படுத்திவிட்டது. தொழில்நுட்ப வசதிகளில் பன்மடங்கு முன்னேற்றம் கண்டுள்ள இந்நாடு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு வடிவங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. சட்டங்கள் கடுமையானவை என்பது ஒருபுறம் இருந்தாலும், விதிமுறைகளைப் பின்பற்றுவதில் சீனர்கள் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்கள். அலைபேசி கையில் இல்லாமல் யாரும் வெளியே செல்ல முடியாது. நம் ஊரில், சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என்று மண்டலங்களைப் பிரித்ததுபோல் இங்கும் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் QR Code அலைபேசி வழியே கொடுத்துள்ளார்கள். மண்டல விதிகளுக்கும் ஏற்ப அந்த கியூ ஆர் கோடு காட்டினால்தான் மக்கள் கடைகள், வணிக வளாகங்கள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட எந்த இடத்துக்கும் செல்ல முடியும். 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடல் வெப்பநிலையைக் கண்காணித்து, கொரோனா அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கிறார்கள். சமூக இடைவெளி மக்களால் பொறுப்புடன் கடைபிடிக்கப்படுகிறது. பெரும்பாலும் பணமில்லாப் பரிவர்த்தனைக்கு சீனா மாறிவிட்டதால், மக்களுக்கான உதவிகளை இ-வவுச்சர் (E Voucher) மூலம் வழங்கினார்கள். அதனைத் தேவையான பொருட்களை வாங்க மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்தாத வவுச்சர்கள் தானாகவே காலாவதியாகிவிடும். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா 100 யுவான்களை (ரூபாய் மதிப்பில் சுமார் 1000) அரசுக்கு நிதியாக வழங்கியுள்ளார்கள். யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், மொபைல் போனில் உள்ள அப்ளிகேசன் மூலம் அவர்கள் பயணம் செய்த விவரங்களைச் சேகரித்து அவர்கள் சென்ற இடங்கள், தொடர்புகொண்ட ஆட்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளார்கள். இதனால் தொற்றுப் பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டது. வெளிநாட்டினருக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் உண்டு. வெளிநாட்டிலிருந்து சீனா திரும்பியவர்களில், தங்கள் பயண வழித்தடத்தை மறைத்து, பொய்யான தகவல் தந்தவர்களைக் கண்டுபிடித்து சிறையில் அடைத்துள்ளார்கள். இங்கே வாழ்வதில் பாதுகாப்பு தொடர்பான எந்தச் சிக்கலும் இல்லை. குறைவான எண்ணிக்கையிலான நபர்கள் பாதிக்கப்பட்டபோதே, அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து பரவலைக் கட்டுப்படுத்திவிட்டதால் அச்சமின்றி இங்கே வாழ்கிறோம் என்கிறார் உஷா.  இங்கிலாந்து: இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஒரே நேரத்தில்தான் லாக்-டவுன் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த அந்த நேரத்தில், இங்கிலாந்தில் தொற்று எண்ணிக்கை ஏறத்தாழ 2000 ஆக இருந்தது, தற்போது மூன்று இலட்சத்தை எட்டியுள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40000ஐக் கடந்துவிட்டது. இங்கிலாந்தில் கொரோனா லாக் டவுன் மற்றும் பாதிப்புகள் குறித்து, மன்னார்குடி பெருகவாழ்ந்தானைச் சேர்ந்த, இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றும்  க.தமிழன் நம்மோடு செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். “லாக் டவுன் அறிவிப்பு மிகுந்த தாமதம், இத்தாலியில் கொரோனா   பரவல் தீவிரமாக இருந்ததை அறிந்தும் அரசு மெத்தனமாக இருந்தது,  வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள் மூலமாகக் கொரோனா இறக்குமதியாகிவிட்டது என்று பலவாறு இந்நாட்டின் எதிர்க்கட்சிகள் அரசைக் குற்றம் சாட்டுகின்றன. லாக் டவுன் அறிவிப்பு வெளியிட்டதும், பொருட்களை வாங்குவதில் மக்களிடையே பதற்றம் நிலவியது. அத்தியாவசியப் பொருட்கள் மொத்தமாக அள்ளிச் செல்லப்பட்டன. முதல் சில வாரங்கள் ஆன்லைன் டெலிவரி கிடைப்பது சிரமமாக இருந்தது. உணவகங்களில் Take Away இல்லை. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு டெலிவரியில் முன்னுரிமை வழங்கப்ப்பட்டது. முதல் சில வாரங்கள் மக்கள் பொதுமுடக்கத்தை ஓரளவு முழுமையாகவே பின்பற்றினார்கள். மிகச் சிலரே விதிகளை மீறினார்கள். ஆனால், தளர்வுக்குப் பின்பு மக்கள் வெளியில் நடமாடத் துவங்கிவிட்டார்கள். ஆனாலும் சுயகட்டுப்பாட்டுடன், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கிறார்கள். பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது நோயின் தீவிரம் மக்களுக்குப் புரிந்தது. இங்குள்ள பிரதமரும் அமைச்சர்களும் மக்களோடு நெருங்கிப் பழகுகிறார்கள். வேலையிழந்தோருக்கு 80% ஊதியத்தை அரசு வழங்குகிறது. சுயதொழில் செய்யும் நபர்களுக்கு £10000 வரையும், நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு £25000 வரை அரசு இலவச உதவித்தொகை வழங்கியது. பதிவு செய்த நிறுவனங்களுக்கு £50000 பவுண்டுகள் வரை 2.5% வட்டியில் கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு வங்கியில் நடப்புக்கணக்கு இருந்தாலே போதுமானது. கடனுக்கான செக்யூரிட்டியை அரசே வழங்குகிறது. முதல் 12 மாதங்கள் கடன் தவணை செலுத்த வேண்டியதில்லை. மருத்துவ வசதிகளைப் பொறுத்தவரை, படுக்கைகள் பற்றாக்குறை, மாஸ்க் மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்புக் கருவிகள் உள்ளிட்டவற்றுக்கான பற்றாக்குறை துவக்கத்தில் நிலவியது. சாதாரண அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டனர். அதிகம் பாதிப்புக்கு உள்ளானவர் களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப் படுகிறது. துவக்க்கத்தில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததால் மக்களிடம் அச்சம் இருந்தது. நாளடைவில் மக்கள் அச்சம் நீங்கி இயல்பு வாழ்வுக்குத் திரும்பி விட்டனர்” என்கிறார் தமிழன்.   சிங்கப்பூர்: சீனாவிற்கு நெருக்கமான, நம் சென்னயை விடச் சிறிய நாடான சிங்கப்பூர் கொரோனா தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை, சிங்கப்பூர் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பொறியியல் மேலாளராகப் பணிபுரியும் ராஜபாளையம், தொம்பக்குளதைச் சேர்ந்த ஜெயமோகன் விவரிக்கிறார். சீனாவில் கொரோனா தொற்று பரவத் துவங்கியதிலிருந்து சிங்கப்பூர் அரசு அதை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கி ஜனவரி முதல் வாரத்திலிருந்தே அனைத்து விமானப் பயணிகளைக் கண்காணிக்கத் துவங்கியது. அனைத்து மருத்துவநிலையங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டது. சார்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டபோது அதற்கென்று உருவாக்கப்பட்ட National Centre for Infectious Diseases (NCID) மிகத் திறம்பட செயலாற்றியது. அனைத்து நிறுவனங்கள், பள்ளிகள், கடைகளில் சேனிடைசர் பயன்பாடும் உடல் வெப்பப் பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டது. அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் சேனிடைசர் இலவசமாக அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் அதிபர், அமைச்சர்கள் மக்களிடையே உரையாற்றினார்கள். வாய்ப்புள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அரசு கேட்டுக்கொண்டது. தனிமனித இடைவெளி கட்டாயம், அனைத்துக் கடைகள், வளாகங்கள்  மூடல், உணவகங்களில் டேக்அவே மட்டும், காய்கறிச் சந்தைகளில் அடையாள அட்டையுடன் வரிசைப்படி தான் காய்கறிகள் வாங்க முடியும் எனக் கடுமையான கட்டுபாடுகள் மூலம் நோய்த் தாக்கம் குறைக்கப்பட்டது. இடைகால பட்ஜெட் தாக்கல் செய்து பொதுமக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் $650,உணவகங்களுக்கு வாடகை ரத்து, சிறு குறு பெரு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் என 20 மில்லியன் டாலர் மதிப்பில் பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டன. அதிமான பரிசோதனைகள் மூலம் நோய்த்தொற்று கண்டறியப்பட்டு அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை 20 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு இணையாக இலவச சிகிச்சை, சத்தான உணவுகள், நோய்எதிர்ப்பு மருந்துகள்,  வீட்டில் உள்ளவர்களுடன் பேச இலவச இணைய சேவை 50 GB, $750 உதவித் தொகை என அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டன. மனநலம் சார்ந்த ஆலோசனைகள் பல்வேறு குழுக்கள் மூலம் வழங்கப்பட்டது. ஊழியர்கள் சொகுசு கப்பல்கள் மற்றும் ஆடம்பர விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு தேவையான பராமரிப்பினை அரசு வழங்கியது. மூன்று கட்டங்களாக $500 மில்லியன் வரையில் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பல்வேறு வரிச்சலுகைகளையும் நிதி ஆதாரங்களையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. மக்களின் துயர் நீங்குவது போலவே கிருமித் தொற்றும் படிப்படியாகக் குறைந்து சிங்கப்பூர் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. அடுத்த இதழில் இன்னும்சில நாடுகளிலிருந்து… +++++++++++++